மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 7 ஜூலை, 2019

சிற்றிதழ்கள் உலகம் (காற்று வெளி கட்டுரை)

ஆடி மாத காற்று வெளி  - சிற்றிதழ் சிறப்பிதழாக வெளி வந்திருக்கிறது, அதில் சிற்றிதழ் குறித்த எனது கட்டுரை வந்திருக்கிறது. தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கும் காற்று வெளி ஆசிரியர் குழு மற்றும் திரு. முல்லை அமுதன் ஆகியோருக்கு நன்றி.

உங்கள் பார்வைக்காக கட்டுரை...
----------------

சிற்றிதழ்கள் உலகம்

ல்லூரியில் படித்த போது நண்பர்கள் அறுவர் இணைந்து விளையாட்டாய் ஆரம்பித்ததுதான் ‘மனசு’ கையெழுத்துப் பிரதி.

மனசு மாத இதழாக பயணித்த காலத்தில் எங்கள் கல்லூரியில் நீ, கவி'தா', ரோஜா, மருதம், காகிதம் என ஏகப்பட்ட கையெழுத்துப் பிரதிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமாய்... கவி’தா’ இதழை பரக்கத் அலி என்ற ஒருவர் மட்டுமே நடத்தினார். சிறுகதைப் போட்டி வைத்து பரிசு கொடுத்ததுடன் தேர்வான சிறுகதைகளைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்தார்.

கையெழுத்துப் பிரதிகளும் சிற்றிதழ்களுக்குள் அடக்கம்தானே.

கதை, கவிதைகள், கட்டுரைகள் என ஒரு வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருந்த கல்லூரி கையெழுத்துப் பிரதிகளுக்கு மத்தியில் 'மனசு' இதழையும் அந்த வட்டத்துக்குள் நிறுத்தி விடாமல் தனித்துவமாகத் தெரிய வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது எங்கள் ஆசிரியர் குழு. அதற்கென புதுப்புது முயற்சிகள் ஒவ்வொரு இதழிலும் தொடர்ந்தது.

அதன் தொடர்ச்சியாய் 'கருத்துக் கணிப்பு' என்பதை ஒரு கேள்வியை பல்வேறு தரப்பட்டவர்களிடம் கேட்டு அதற்கான பதிலைப் பெற்றுப் போட ஆரம்பித்தோம். இதற்கென நாலைந்து பக்கங்கள் ஒதுக்கினோம். ஒவ்வொரு மாதமும் கேட்கப்படும் கேள்வியும் அதற்கான பதிலும் பேராசிரியர்களிடம் எங்கள் மீதான நம்பிக்கையை விதைத்தது. பேராசிரியர்கள் விரும்பும் மாணவர்கள் ஆனோம்.

கல்லூரித் துறைகள், நூலகம், பெண்கள் ஓய்வு அறை, நகர பொது நூலகம், பள்ளி நூலகங்கள் என மாதம் 11 புத்தகம் போட்டோம். வெளியில் இருக்கும் நண்பர்களிடமும் படைப்புக்கள் வாங்கிப் போட ஆரம்பித்தோம். மனசுக்கு கல்லூரி தவிர்த்து வெளியிலும் நல்ல வரவேற்ப்பு இருந்தது.

என்னப்பா இன்னும் மனசு எங்க துறைக்கு வரலை என பேராசிரியர்களும் பொது நூலக, பள்ளி நூலக நண்பர்களும் கேட்ட நாட்களும் உண்டு. அதுவே எங்கள் புத்தகத்தின் வெற்றி எனலாம்.

ஆசிரியர் குழுவில் இருந்து சிலர் விலகினாலும் நான், முருகன், சுபஸ்ரீ என மூவருமாய் மனசு என்னும் கையெழுத்துப் பிரதியை அனைவரும் விரும்பும் ஒரு இதழாகத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடத்தி வந்தோம். எங்களுக்கு உறுதுணையாய் எங்கள் பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்கள் இருந்தார்கள். கடைசி இதழில் அவரின் போட்டோவுடன் சிறு பேட்டியும் இருந்தது. இதிலின் பிரதி ஊரில் வைத்திருந்தேன். இப்போது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.

எல்லா கையெழுத்துப் பிரதிகளுமே நடத்துபவர்கள் படிப்பை முடித்ததும் மறைந்துவிடும் அப்படித்தான் மனசும்.... எங்களுக்குப் பின்னர் சிலர் எடுத்து நடத்துகிறோம் என்றார்கள்... ஏனோ செய்யவில்லை.

நானும் முருகனும் அதே கல்லூரியில் வேலை பார்த்த போது (நண்பன் இப்போது பேராசிரியர்) எங்களுக்கு ஆசிரியர்களாய் இருந்த சிலர் உங்களுடைய துணையோடு மனசு இதழை மீண்டும் கொண்டு வரலாமே... நல்ல இதழாக நடத்துனீர்கள் என்றார்கள். ஏனோ மீண்டும் நடத்தும் எண்ணம் எழவில்லை.

அபுதாபி வந்த பின் பொழுது போகாமல், கவலைகள் போக்க எழுத்தே பிரதானமாக இருந்தது. அப்போது நான் தினமணியில் பணி செய்தபோது என்னுடன் பணிபுரிந்த நண்பன் மோ.கணேசன் (இப்போது புதிய தலைமுறையில்) உதவியுடன் வலைப்பூ ஆரம்பித்த போது எனக்குத் தோன்றிய பெயர் 'மனசு'. ஆம் என் வலைப்பூ கல்லூரியில் நடத்திய கையெழுத்துப் பிரதியின் மீதான காதலால்தான் அதே பெயரில் இன்றும் தொடர்கிறது.

இங்கு நிறையச் சிற்றிதழ்களை வாசிக்க முடிந்தது. காராணம் இணையத்தில் நிறைய இதழ்கள் கிடைத்தன. நிறைய எழுதவும் முடிந்தது.

நாம் என்ன எழுதிக் கொடுத்தாலும் அதை அப்படியே பிரசுரித்தார்கள். அனுப்பிவிட்டு மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை... அனுப்பிய மறுமாதமே பிரசுரமாகும். அவற்றிற்கு எழுதுவது ஒரு போதை என்பதாய் ஆனது. சிற்றிதழ்கள் எல்லாம் மின்னிதழ் வடிவம் பெற ஆரம்பித்தது. எத்தனை மின்னிதழ்கள்... எவ்வளவு நேர்த்தியாய்... அழகாய்....

சிற்றிதழ்கள் மீது தீராத காதல் கொண்டவர் ஐயா. கிருஷ் ராமதாஸ் அவர்கள். சிற்றிதழ்கள் உலகம் என்ற சிற்றிதழை ஆரம்பித்து பல பழைய, புதிய சிற்றிதழ்கள் குறித்தெல்லாம் எழுதினார். ஹைக்கூ, அசோகமித்திரன் சிறப்பிதழ்கள் எல்லாம் கொண்டு வந்தார். சிற்றிதழ்களைக் கொண்டாடினார்.

அவர் அலைனில் இருந்தாலும் போனில் மட்டுமே தொடர்பில் இருந்தோம். பேசும் போதெல்லாம் சிற்றிதழ்கள் குறித்தே பேசுவார். அவரின் முதல் இதழுக்கு என்னிடம் வாழ்த்து செய்தி கொடுங்க எனக் கேட்டு வாங்கினார்.

சிறுகதைப் போட்டிகள் வைத்தார்... அதில் எனக்குப் பரிசும் கிடைத்தது.

அசோகமித்திரன் சிறப்பிதழுக்கு கட்டுரை கேட்டார். 

எழுதிக் கொடுத்தேன்... பிரசுரித்தார்.

சிற்றிதழ்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக ஊரில் அவர் மகள் மூலமாக சந்தா வசூலித்து இதழ்களை வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்தார்.

ஒரு நாள் உடல்நலமில்லாமல் துபை மருத்துவமனையில் இருக்கிறார் என்றார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு அவரின் மறைவு குறித்த செய்தி  முகநூல் வழி அறிய நேர்ந்தது.

அவரின் மறைவு சிற்றிதழ்களுக்கு மிகப்பெரிய இழப்பு...

சிற்றிதழ்களை பரவலாகக் கொண்டு செல்ல முயன்றவர் காலனிடம் தோற்க, சிற்றிதழ்களை பரவலாக்கும் முயற்சி தடைபட்டு நின்றது. வதிலை பிரபா போன்றோர்களால் சிற்றிதழ்கள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது மகிழ்ச்சி.

எனக்கும் ஒரு மின்னிதழ் ஆரம்பிக்கும் எண்ணம்... ஆசை... கனவு.... எல்லாம் உண்டு. இது குறித்து ஆல்ப்ஸ் தென்றல் நிஷா அக்காவிடமும் பேசினேன். அதன் பின்னான வாழ்க்கை நகர்த்தல்கள் என்னை வாட்டி எடுப்பதால் எண்ணம் எண்ணமாகவே இருக்கிறது. விரைவில் மனசு மின்னிதழாக மலரலாம்.

தற்போது நிறைய சிற்றிதழ்கள் வருகின்றன... தன் பாதையைத் தீர்மானித்து பயணிக்கும் பட்சத்தில் அவை வெற்றி பெறலாம்.... பெறுகின்றன.

நிறைய சிற்றிதழ்கள் வர வேண்டும்.... வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை... அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புவோமாக.
-------

குறிப்பு : இந்த மாத தேன்சிட்டு மின்னிதழில் 'அப்பத்தா' சிறுகதை வெளியாகி இருக்கிறது. அதிக பக்கங்கள் ஒதுக்கி வாய்ப்புக்கு கொடுத்த நண்பர் 'தளிர்' சுரேஷுக்கு நன்றி. 
-‘பரிவை’ சே.குமார்.

1 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

'மனசி'ன் பழமையும் வளமையும் தெரிந்தது.