மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

சினிமா : நெடுநல்வாடை

Image result for nedunalvaadai hd images
நெடுநல்வாடை... பேரே நல்லாயிருக்குல்ல... படமும்தான்... கிராமத்துக்குள்ள ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வந்த மாதிரி இருந்துச்சு...

ஒரு கிராமத்துக் கிழவனின் வாழ்க்கைக் கதை என்பதாய்த்தான் எனக்குப்பட்டது. 

வீட்டை விட்டு ஒருவனுடன் ஓடிப்போன மகள், காதல் கசந்து இரண்டு குழந்தைகளுடன்  போக இடமின்றி அப்பனைத் தேடி வருகிறாள். அவள் ஓடிப்போன போது பட்ட துயரத்தைவிட 'அய்யா' என வயலில் விழுந்து கதறும் போது அதிகமாக வலிக்கிறது அந்தக் கிழவனுக்கு.

போக்கத்தவளை வீட்டுக்கு கூட்டி வர, மதினி ஏற்றுக் கொள்கிறாள்... அண்ணன்காரன் அடித்து விரட்ட நினைக்கிறான்... அவனின் பயமெல்லாம் சொத்தில் பாதியைக் கொடுத்துருவாரோங்கிறதுதான்... ஓடிப்போனவள் கொடுத்த வலியைத் தூக்கிக்கிட்டு அலைபவனாய் கொடூர வார்த்தைகளை வீசிக் கொண்டேயிருக்கிறான். அதனாலேயே அப்பனுக்கும் மகனுக்கும் பிரச்சினை துளிர் விட ஆரம்பிக்கிறது.

தனது பேரனை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வரணும் என்பதற்காகவே பாடுபடுகிறார்... அவன் பேரில் மகனுக்குத் தெரியாமல் பணம் போட்டு வைக்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டையும் மகள் பேரில் எழுத, மகனின் கோபம் இன்னும் அதிகமாகிறது. அப்பனுக்கும் மகனுக்கும் சண்டை வலுக்கிறது.

அப்பன் இல்லாதவன்... ஒரு வீடு வாசல் இல்லாதவன்... எனச் சொல்லும் மாமனுக்கு முன் படித்து, நல்ல வேலைக்குப் போய் வீடு வாசல்ன்னு பேரன் நல்ல நிலையை அடையணுங்கிற தாத்தாவின் கனவை நோக்கி ஓடுகிறான் பேரன் இளங்கோ... மாமா மீதான கோபமும் அவனுள் தகிக்கிறது. அதனாலேயே முகத்தில் சந்தோஷமின்றித் திரிகிறான்.

Related image

இதற்கிடையே உள்ளூரில் அவனுடன் படிக்கும், சிறுவயது முதல் நட்பாய் இருக்கும் அமுதாவுடன் மோதலில் ஆரம்பித்து காதலில் முடிகிறது... தாத்தாவின் காதுக்குச் செய்தி வர, பேரனுக்கு அவன் எப்படி இந்த ஊருக்கு வந்தான் என்பதை எடுத்துச் சொல்லி, வேலைக்குப் போய் சம்பாரித்து இருக்க ஒரு வீடு, தங்கச்சி கல்யாணம் என அவன் முன் நிற்கும் தேவைகளைச் சொல்லி காதலுக்கு கட்டை போடுகிறார்.

தாத்தாவின் கனவைச் சுமக்கும் இளங்கோ தன்னைச் சுமக்கும் அமுதாவையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தவிக்கிறான்... கோபமாய் அவளைத் திட்டுவிட்டு விலக் நினைப்பவன் ஒரு கட்டத்தில் மீண்டும் அணைத்துக் கொள்கிறான்... அவர்களின் காதலும் தொடர்கிறது... 

சென்னைக்கு சொற்பச் சம்பளத்தில் வேலைக்குச் செல்கிறான். அமுதாவின் அண்ணன் தங்கையின் காதல் விவரம் தெரிந்து திருமணம் நிச்சயம் பண்ணுகிறான்... பேரனுக்காய் அமுதாவின் அண்ணனிடம் பேசப்போய் அவமானப்பட்டுத் திரும்புகிறார் தாத்தா.

காதல் பிரச்சினைக்காகவே வயலில் பாதியை விற்றாவது பேரனை வெளிநாட்டுக்கு அனுப்ப நினைக்கிறார். அவனோ அமுதாவை எப்படியும் அடைந்தே தீருவேன் எனத் திரிகிறான். எங்கே மகன் சொல்வதைப் போல ஆத்தா மாதிரி இவனும் கூட்டிக்கிட்டு ஓடி தன்னைத் தலைகுனிய வச்சிருவானோன்னு பயப்படுகிறார்.

ஒரு கட்டத்தில் அமுதாவின் அண்ணன் இளங்கோவை அடித்துக் கொல்ல முயற்சிக்கிறான்.

அமுதாவின் அண்ணனிடம் இருந்து தப்பித்தானா..?

வெளிநாடு சென்றானா...?

தாத்தாவின் கனவை நிறைவேற்றினானா..? 

காதலியைக் கரம் பிடித்தானா...? 

தங்களை மதிக்காத தாய் மாமனுடன் கூடினானா..?

இப்படி பல கேள்விகளுக்கு விடை படத்தைப் பார்த்து முடிக்கும் போது தெரியும்.

ஒரு கிராமத்து வாழ்க்கையின் வலியைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் செல்வகண்ணன். கிராமத்து வாழ்க்கை எப்போதும் பட்டாடை கட்டி ஆடுவதில்லை... இதுதான் எதார்த்தம்... இந்த எதார்த்தம் எழுத்தாகவோ காட்சியாகவோ மாறும் போது அதில் ஆனந்தம் இருப்பதில்லை... அழுகையே அதிகமிருக்கும்... அதுதான் மன நிறைவைக் கொடுக்கும்... அதைக் கொடுத்திருக்கிறது நெடுநல்வாடை. 

எந்தச் ஜிகினாவும் சேர்க்காமல் இப்படி ஒரு அழகிய படத்தை எடுத்த இயக்குநருக்கும் , தோழனுக்குத் தோள் கொடுக்க ஒன்றாய் நின்று பணம் போட்ட அந்த 50 தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.

Related image

கிழவனாக வாழ்ந்திருக்கிறார் பூ ராம்...  என்ன ஒரு நடிப்பு... அப்படியே ஊரில் வயல்களில் மண்வெட்டியுடன் திரியும் கரிய உருவ மனிதர்களைக் கண் முன் நிறுத்தியிருக்கிறார். அறிமுக நாயகன் இளங்கோவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் அறிமுக நாயகி அஞ்சலி நாயரும் கிராமத்துத் துறுதுறு பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்... வந்து போகும் நடிகையாக இல்லாமல் அருமையாக நடிக்கவும் செய்திருக்கிறார்... தொன்னூறுகளின் கிராமத்து நாயகிகளை நினைவில் நிறுத்துகிறார். மாமனாக வரும் மீம்கோபி, ஊர்க்காரராக கிழவனுடனேயே திரியும் ஐந்து கோவிலான், அம்மாவாக வரும் செந்திகுமாரி, வில்லனாக... நாயகியின் அண்ணனாக வரும் அஜய் நடராஜ் என எல்லாப் பாத்திரங்களுமே மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

பூ ராமை தமிழ்ச் சினிமா இன்னும் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. நெடுநல்வாடை அவருக்குச் சிறந்த படமாக மட்டுமின்றி, விருதுகளை வென்று கொடுக்கும் படமாகவும் அமையும் என்பது உண்மை.

காட்சிகளில் அவ்வளவு எதார்த்தம்... அதேபோல் நடித்திருப்பவர்கள் பலர் அறிமுகம் என்றாலும் துளி கூட மிகையாக நடிக்காமல் எதார்த்தமாய் நடித்திருப்பது படத்தின் வெற்றி... இப்படி இவர்களைப் பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் பலமும்... வெற்றியும் எனலாம்.
இசை அறிமுகமாக ஜோஸ் பிராங்க்ளின்... பின்னணி இசை மட்டும் கொஞ்சம் சோர்வைத் தருகிறது எனலாம்... ஆனால் பாடல்களில் இசை அருமை. பாடல் வரிகள் வைரமுத்து... கருவாத்தேவா பாடலின் வரிகள் கதை சொல்கிறது. காசி விஸ்வநாத் தனது ஒளிப்பதிவில் நெல்லையின் சிங்கிலிப்பட்டி கிராமத்தையும் அழகிய, பசுமையான வயல்வெளிகளையும் மிகச் சிறப்பாக உள்வாங்கியிருக்கிறார்... கிராமத்து வீடுகளும்... தெருக்களும்... வயல்வெளியும்... வெல்லம் தயாரிக்கும் இடமும் நம்மோடு கதாபாத்திரமாகவே பயணிக்கின்றன.

இயக்குநரின் தாத்தாவின் கதைதான் என்பதாய் இறுதியில் முடித்திருக்கிறார். வாழ்க்கைக் கதை என்பது எப்போதுமே சற்று கூடுதல் சுவையைக் கொடுக்கும் என்பதை நெடுநல்வாடை நிரூபித்திருக்கிறது.

படத்தில் சொல்லப்படும் சமூகத்தில் ஓடிப்போன மகளை உடனே ஏற்றுக் கொள்வார்கள் என்பது சற்று யோசிக்கக் கூடியதே. முறுக்கிக் கொண்டு திரியும் மாமனை கதாபாத்திரம் இறுதிவரை வராதது ஏனோ..? ஒரே சாதி எனும் போது தன் தங்கையைக் கொடுக்க மறுத்து அண்ணன் சொல்லுக் காரணம் அரதப்பழசானது என சில விஷயங்கள் எதிராய்த் தோன்றினாலும் நெடுநல்வாடை சிறப்பாகவே வந்திருக்கிறது.

அருமையானதொரு படம்... வாய்ப்பிருப்பவர்கள், விருப்பம் உள்ளவர்கள் பாருங்கள்.
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

படத்தைக் காணத் தூண்டுகின்ற மதிப்புரை. அருமை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விமர்சனம் நன்று...

பார்க்க வேண்டும்...

Yarlpavanan சொன்னது…

அருமையான கண்ணோட்டம்.
பாராட்டுகள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நல்ல விமர்சனம். பார்க்க வேண்டும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விமர்சனம். பார்க்கத் தோன்றுகிறது.

இணைய வழி பார்க்க முடியுமா எனத் தேட வேண்டும். அறிமுகத்திற்கு நன்றி குமார்.

ஸ்ரீராம். சொன்னது…

வாய்ப்பு கிடைக்கும்போது தவறவிடாமல் பார்க்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி ஐயா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி கவிஞரே

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி ஐயா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா.

tamilyogi / tamilgun / tamilrasigan

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா.

அ.பாண்டியன் சொன்னது…

பார்க்கத் தூண்டுகிறது பதிவு

பெயரில்லா சொன்னது…

வாழ்க்கைத்தான் எவ்வளவு குரூரமானது ...இன்றுதான் இப்படத்தை காண நேர்ந்தது எவ்வளவு அழகான கதை அதை காட்சிபடுத்தியவிதம்..

இதை கதையாக மட்டும் இல்லை கதையாகவே என் வாழ்வில் கடந்து போனதை எண்ணி கண்ணீர் துளிகளை மட்டுமே உதிர்ந்து கொண்டு......