மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

மனசு பேசுகிறது : கிராமத்துக் காதல்


கரத்துக் காதலுக்கும் கிராமத்துக் காதலுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது அப்போது... இப்போதும் வித்தியாசங்கள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன என்றாலும் அன்றைய மண் வாசனைக் காதல் இன்று இல்லாமல் போய்விட்டது. இன்றைய கிராமத்துக் காதல்கள் பெரும்பாலும் சாதீய மோதல்களாலும் கௌரவக் கொலைகளாலும் முடிவு வந்துவிடுகின்றன. நகரத்தைப் போல் பூங்காக்கள் இல்லை என்றாலும் வயல்வெளிகளும் கோவில்களும் காதல் வளர்க்கும் இடங்களாக இருந்தன. பெரு நகரங்களில் குறிப்பாக கடல் சார்ந்த நகரங்களில் பீச்சுக்கள் கொடுத்த காதல் சுகத்தை கிராமங்களின் கண்மாய் கரைகளும் ஊரணிகளும் கொடுக்கத்தான் செய்தன. இன்று கிராமக் காதல்கள் அரிதாகிவிட்டன... காரணம் பிழைப்புத் தேடி நகரங்களை நாடி விட்ட குடும்பங்களில் வயதானவர்கள் மட்டுமே கிராமத்தின் சொத்தாக... ஒரு காலத்தில் பசுமை போர்த்திய வயல்வெளிகளும் பெரிய குடும்பங்களைத் தன்னுள்ளே இருத்தி, அந்த இருப்பின் மகிழ்ச்சியில் திளைத்த வீடுகளும் இப்போது வாழ்விழந்து... அன்று நிகழ்ந்த காதல்களில் சுவடுகளை மட்டுமே தாங்கி நிற்கின்றன.

பள்ளியில் படிக்கும் போது... அதாவது ரொம்பச் சின்னப்பிள்ளையாக இருக்கும் போது சினிமா மோகம்தான் நமக்குள் அதிகமாக இருக்கும்... (இப்பவும் அப்படித்தான் இருக்கு என்ன மாறியிருக்கு என்ற குரல்கள் சுற்றிலும் கேட்கத்தான் செய்கின்றன.) அதனால்தான் கீழே விழுந்து கை ஓடிந்து அழுது கொண்டு வீடு வந்து சேர்ந்த போது முதல்நாள் பார்த்த தூறல் நின்னு போச்சு படத்துல பாக்கியராஜ் சண்டை போட்ட மாதிரி போட்டிருப்பே... அதான் விழுந்து கையை ஒடிச்சிக்கிட்டே என அம்மா நங்கு நங்குன்னு நாலு போடு போட்டுச்சு... சிவனேன்னு தவட்டாங்கம்பு விளையாண்டவனுங்களைப் பார்த்துக்கிட்டு கொய்யாமர ஓரமா நின்னவன் மேல சவரிமுத்து மரத்துல இருந்து குதிச்சிட்டான்னு சொன்னா நம்பவே இல்லை... ஆவரஞ்செடி இலையை பிடிங்கி வந்து வதக்கி இளஞ்சூடாக வைத்துக் கட்டியும் வலி நிற்காததால் அடுத்த நாள் காலை அம்மாவிடம் திட்டு வாங்கியபடி குன்றக்குடிக்கு கட்டுக்கட்டச் சென்றதும்... அப்படிச் செல்லும் தினங்களில் எல்லாம் ஏஞ்சோகக் கதையைக் கேளு தாய்க்குலமேயோ அல்லது ஏரிக்கரைப் பூங்காற்றோ வானொலியில் ஒலித்தால் இரும்மா இந்தப் பாட்டு முடியட்டும் என நின்று திட்டு வாங்கி, அம்மாவை முன்னே நடக்கச் சொல்லி பாடல் முடிந்ததும் ஒடிப் போய் அம்மாவுடன் சேர்ந்து கொண்டதும் இந்தப் பகிர்வுக்கு தேவையில்லாததுதான் அது கை ஒடிந்த கதை... இது காதலில் விழுந்தவர்கள் கதை. மொட்டத் தலைக்கும் ழுழங்காலுக்கும் தரமணியில் ராம் போட்டது போல் முடிச்சு எதற்கு...?

கல்லூரி முடித்து பிறகு என் நண்பனின் காதலுக்காக காரைக்குடியில் காத்திருந்த நாட்களை... இரவில் காரைக்குடியில் இருந்து டிவிஎஸ்-50-யில் இருவரும் பிரச்சினைகளின் பின்னணி எப்படியிருக்கு என்று ஆராய உஞ்சனைப் பாதையாக தேவகோட்டைக்கு வந்த நாட்களை... இப்போது நினைத்தாலும் படபடப்புடன் ஆச்சர்யமாகவும் இருக்கும். அத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னர் இருவரும் குழந்தை குட்டி என சந்தோஷமாக வாழ்கிறார்கள் அவரவர் இணையுடன்... இதற்குத்தானா அத்தனை கஷ்டப்பட்டோமெனத் தோன்றினாலும் அன்றைய சூழல் ஒரு மோதலைத் தவிர்க்க உதவியது அந்தக் காதல் தவிர்க்கப்பட்டதால்... இப்போது அவர்களுக்குள் அந்த காதலின் துளி இருக்குமோ என்னவோ எனக்குத் தெரியாது ஆனால் அந்த அலைச்சல்... அவர்களுக்காக அலைந்த அந்த நாட்கள் எனக்குள் இன்னும் அப்படியே.. இதுவும் கதைக்கு சம்பந்தமில்லாமல் மொட்டத்தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சித்தான்.

சரி கிராமத்துக் காதலுக்குப் போவோம்... பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்க ஊரில் திருவிழா என்பது மகாமகம் போல்தான்... பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை அல்ல... எப்போதேனும் ஊர்க்கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் திருவிழா என்பது சிறகடிக்கும். அப்படியான ஒருமித்த முடிவு சண்டைகளின்றி எடுக்கப்பட வேண்டுமென மீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல வீட்டு வாசலில் அமர்ந்து அம்மன் கோவிலில் நடக்கும் கூட்டத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்படி ஒரு முறை சிறகடித்த திருவிழாவுக்கு மைக்செட் போட வந்தவர், முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ என்ற பாடலை அடிக்கடி போட்டார். அதுவும் பள்ளியில் இருந்து வரும் போது ரொம்பத் தூரத்திற்கு முன்னரே கேட்க ஆரம்பிக்கும் பாடல் மெல்ல மெல்ல சப்தம் கூடி வர, சனி மூலையில் ஒரு  மின்னல் அடிக்கும்... மேகம் கருகருவென மெல்லக் கூடுகட்டும்... கம்மாக்கரை வேப்ப மரம் காற்றில் தலை விரித்து ஆடும்... செம்மண் புழுதி மெல்லக் கிளம்பி மேலெழும்பும்... காற்றில் பறக்கும் முடியுடன்... காக்கி டவுசரை இழுத்துச் சொருகிக் கொண்டு ஊதாக்கலர் புத்தகப் பைக்குள் சத்துணவுக்கான தட்டு முட்டி நிற்க லேசான தூறலுக்கு ஓட ஆரம்பிக்கும் போது இந்தப் பாடல் காற்றில் மிதந்து வரும்... ஏதோ நாமே மழையில் நனைந்து கொண்டு பாடுவது போல் நம்மை மோகனாக சித்தரித்து ஒரு பிம்பம் மனசுக்குள் தோன்றும்.

அந்தப் பாட்டு அடிக்கடி ஓலித்தது... நாம சின்னப் பயலுகதானே... கூமுட்டைகளுக்கு பாட்டுப் போடுற அண்ணன் ரொம்ப நல்ல பாட்டாப் போடுறாருன்னு சந்தோஷம் வேற... பெண்கள் அடிபைப்பில் தண்ணி எடுக்க வரும்போது, கண்மாய்க்கு தண்ணீர் எடுக்கப் போகும் போது, சாமி கும்பிட வரும்போது என குறிப்பாக சில வேளைகளில் இந்தப் பாடல் ஒலிக்கும். இரவு சாமி கும்பிடும் முன்னர் அவர் பாடல் போடுமிடத்தில்தான் நாங்க தவமாய் தவம் கிடப்போம். அப்பத்தான் மோகன் பாட்டு புதுரூட்டுப் போடுவதை அறிந்தோம். பாட்டுப் போட வந்தவரு... எங்க ஊருக்கு விருந்தாளியா வந்திருந்த தாவணி போட்ட தேவதையை பூர்ணிமாவாப் பார்க்கிறதுக்காக அவரு மோகனா மாறுறாருன்னு... விவரமா இருந்து இதை யாருக்கிட்டயாச்சும் சொன்னா மோகனுக்கு கை கால் இருக்காது.... நாங்கதான் விவரமில்லாதவயிங்கதானே... சின்னப் பசங்க நாங்க... அவங்க ரூட்டுக்கு நாங்களும் உதவியா இருந்தோம். திருவிழா அன்னைக்கு காலையில ஐஸ் வாங்கி அந்தக்காக்கிட்ட கொடுடான்னு கொடுக்க, பத்திரமாக் கொண்டு போய்க் கொடுத்துட்டு வந்தான் ஒருவன். அவங்க சிரிக்க... இவங்க சிரிக்க... அவங்க கண்ணால பேச... இவங்க கண்ணால பேச... என ஒரு வாரம் நகர்ந்து திருவிழா காப்பு அவிழ்த்ததும் குழாய் ரேடியோவை அவிழ்த்து டிவிஎஸ் -50யில் கட்டிக்கிட்டு ராக தீபத்தை வேறொரு ஊரில் ஏற்ற மோகன் கிளம்பிப் பொயிட்டாரு... அந்த அக்காவை கூட்டிக்கிட்டு எல்லாம் போகலை.  அந்தக் காதல் கண் ஜாடையில் ஆரம்பித்து பால் ஐஸ்ஸோட பாழாப் போச்சு.

அப்புறம் இன்னொரு கதை... இது மாடு மேய்க்கும் போது உருவான காதல்... அப்ப நாங்க கொஞ்சம் விவரமான பசங்க... சைக்கிள் எல்லாம் ஓட்டத் தெரியும்... அதுவும் எங்க சரளை ரோட்டில்... இப்ப தார் ரோடு... கையை விட்டுட்டு ஓட்டிக்கிட்டு போற அளவுக்குத் தேறியிருந்தோம். மூணு ரப்பர் குடம் கேரியரில் கட்டி, மூணு கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிப் போய் தண்ணீர் எடுத்து வருமளவுக்கு சிறப்பாய் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தோம். விடுமுறை தினங்களில் மாடு மேய்க்கச் செல்வோம்... எங்க கண்மாய்க்கு உள்புறமாக பக்கத்து ஊர் வயல்வெளி, அதில் அப்போதே விவசாயம் அரிதாகிப் போயிருந்தது. ஒரு வயலின் வரப்பில் வரிசையாக உசிலை மரங்கள் நிற்கும். அதில் தவட்டாங்கம்பு விளையாட்டு அனல் பறக்கும். அப்போது பக்கத்து ஊர் கதாநாயகன் படிப்பது போல் கையில் புத்தகத்துடன் நாங்க மாடு மேய்க்கும் இடம் தேடி வருவார். நாங்க விளையாட்டில் கவனம் செலுத்த எங்க ஊர் நாயகியுடன் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்.  இது வாராவாரம் இரு தினம் தொடரும். 'டேய் நான் அவரோட பேசிக்கிட்டு இருந்தேன்னு ஊர்ல யார்க்கிட்டயும் சொல்லக்கூடாது' என்ற மிரட்டல் வரும். சில நேரம் சிரிப்பாய் பேச்சு இருக்கும்... சில நேரம் அழுகையாய் பேச்சு இருக்கும்.  மெகா தொடர் போல் ஒரே அழுகையாய் இல்லாமல் எல்லாம் கலந்த கலவையாய் இருக்கும். சில நாட்கள் வரும்போது எங்களுக்கு கடலை மிட்டாய் வாங்கி வருவார்... அது அவர் கடைலை போட நமக்கு லஞ்சம் எனத் தெரியாமல் கிடைத்த வரை லாபமெனத் தின்று தீர்ப்போம்.  அப்படி மணிக்கணக்கில் பேசியும் எங்க ஊரு நாயகிக்கும் அந்த நாயகனுக்கும் தீவிரக் காதல் மலரவில்லை போலும்... அது அத்துப் போய் எங்க சொந்தக்காரருடன் புதிய பூவிது பூத்தது எனத் தொடர்ந்து அடிதடி வரை போனது... காதல் காய்ந்து போனது.

கிராமத்துல ரெண்டு பேருக்குள்ள காதல் வந்துட்டாப் போதும்... அடிபைப்புக்கு தண்ணீர் எடுக்க வருவதும்... கோவிலுக்கு வருவதும்... வயலுக்கு எருக் கொண்டு போவதும்... புல்லறுக்கப் போவதும்... புத்தாடை போட்டதும் வீட்டுக்கே வந்து அயித்தை என்றோ அத்தாச்சி என்றோ முறை வைத்து 'நல்லாயிருக்கா' எனக்கேட்டு ஓரக்கண்ணால் மனசுக்குப் பிடித்தவனைப் பார்ப்பதும் அவன் கண்ணாலே சொல்லும் பதிலைக் கேட்டு சிரித்துக் கொண்டு ஓடுவதும் இப்போது சினிமாவில் கூட இல்லாமல் போய்விட்டது. சினிமாவில் கூட நகரத்துக் காதல்கள்தான் மலிந்து கிடக்கின்றன... கிராமத்துக் காதல்கள் பொய்த்துப் போன விவசாயம் போல்... மறைந்து விட்ட தாவணி போல்... காணாமலே போய்விட்டன.

என்ன இருந்தாலும் பீச்சுல உக்கார்ந்து இதழோடு இதழ் சேர்த்து மணிக்கணக்கில் காதல் செய்பவர்களை விட, வயல்வெளியிலும் கண்மாய்க்கரையிலும் கண்ணாலே பேசி காதல் செய்து, எப்போதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் முகத்தில் கொடுத்துவிட்டு ஓடும் முத்த ஈரத்தில் அதிக நேசம் இருக்கத்தான் செய்திருக்கும் போல... அனுபவஸ்தர்களைக் கேட்டால் தெரியும்.

டிஸ்கி : இது முழுக்க முழுக்க பதிவுக்காக எழுதியதுதான்... மேலே சொன்ன இரண்டு காதலும் உண்மையே.... அதிலும் கொஞ்சம் காரத்திற்காக பொடி தூவியிருக்கிறேன்... எனக்கு அனுபவமான்னு எல்லாம் கேட்டு வைக்க கூடாது. இந்த அனுபவமெல்லாம் எங்கூரு முனியய்யா மேல சத்தியமா எங்க பசங்க யாருக்குமே கிடைக்கலை... அவனவன் சொந்தத்திலயோ அல்லது அந்நியத்திலயோ பொண்ணு கட்டி குடும்பம் பிள்ளைங்கன்னு சந்தோஷமா இருக்கானுங்க... அதனால யாரும் தீபாவளி வெடி வைக்க வேண்டாம் என்று சொல்லி விடைபெறுகிறேன்.
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

ம்ம்..
உண்மையா இருந்தாக்கூட நாங்க பொறாமைப்பட(!?)மாட்டோம்!..
இங்ஙனம் - திருவாதிரைக் கூட்டம்..

ஸ்ரீராம். சொன்னது…

ரசித்தேன்.

யுவராணி தமிழரசன் சொன்னது…

ரசித்தேன் சார். அங்க மறைக்கப்பட்ட காதலும் உண்டு. மறுக்கப்பட்ட காதலும் உண்டு. பல s ஆன காதலும் உண்டு அதற்காக அவர்களை ஒதுக்கி வைத்தவர்களும் உண்டு.இப்பொழுதெல்லாம் இது காலத்தின் மாற்றத்திற்கு புளித்த மாவாகிவிட்டது.

Nagendra Bharathi சொன்னது…

அருமை

ஜோதிஜி சொன்னது…

ஏன் நீங்க வாழும் நாட்டில் பார்க்கும் காட்சிகள், மனிதர்கள், சமூகம், வித்தியாசமான பழக்கவழக்கங்கள் பற்றி எழுதலாமே?

ஸ்ரீராம். சொன்னது…

இன்றைய தினமணி கதிரில் உங்கள் சிறுகதை வெளியாகியிருக்கிறது. பாராட்டுகளும், வாழ்த்துகளும் குமார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ரசித்தோம்! சரி சரி நம்புறோம்...உங்க அனுபவம் இல்லைனு ஹாஹாஹா

தினமணிக்கதிரில் தங்கள் கதை வெளியானதற்கு மனமார்ந்த பாராட்டுகள் பொக்கே!!! வாழ்த்துகள்!

கீதா: ஸ்ரீராமுக்கு மிக்க நன்றி! அவர்தான் எங்களுக்குச் சொன்னதும் அதை ஃபோட்டோ எடுத்து வாட்சப்பில் அனுப்பியும் உள்ளார். வாசிக்கின்றோம்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ரசித்தேன் நண்பரே
தம +1

G.M Balasubramaniam சொன்னது…

இம்மாதிரிக் கிராமக் காதல்கள் எல்லாம் படித்துப்புரியக் கூடுமா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நல்ல ரசனை.