மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

மனசு பேசுகிறது :எது சுதந்திரம்?

Image result for எது சுதந்திரம்?


ம் 71வது சுதந்திர தினத்துக்கு எதிராக முகநூலிலும் வாட்ஸப்பிலும் டுவிட்டரிலும் பதிவுகள் வந்து குவிந்து கொண்டிருந்த தினத்திற்கு மறுநாள் எழுதிய பகிர்வு.. முழுமை பெறாமலும் மற்ற சில வேலைகளினாலும் பகிர முடியவில்லை. ரெண்டு நாள் சர்வே பணி நடக்கும் இடங்களுக்கு பார்வை இட சர்வே இஞ்சினியருடன் சென்று வெயிலில்... அந்த சுடு மணலில் வீதி வீதியாக சுற்றிவிட்டு வந்ததால் இன்று அலுவலகத்தில் ஓய்வாய்... லெபனானிகள் எல்லாம் புதிய புராஜெக்ட் மீட்டிங்கிற்குப் போய்விட, எது சுதந்திரத்தை சுதந்திரமாய் பட்டி பார்க்க முடிந்தது.

எதிர் பதிவுகள் என்பது அவரவர் விருப்பம் என்றாலும் நாம் இந்தியர்கள் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லேயே... ஆயிரம் வெறுப்புக்கள் இருந்தாலும் நம் நாட்டின் சுதந்திர தினம் என்பது கொண்டாடக் கூடியதே தவிர, கேவலமான பதிவுகள் இட்டு தரம் தாழ்த்த அல்ல... இது அஹிம்சையால் கிடைத்த சுதந்திரம் என்பதைச் சொல்லுவதில் எத்தனை சந்தோஷம் இருக்க வேண்டும்... இதில் எதற்கு வேதனைகளும்... வெட்கக்கேடுகளும்... எத்தனை நாடுகள் அஹிம்சை முறையில் சுதந்திரம் பெற்றிருக்கின்றன..? இன்னும் எத்தனையோ நாடுகள் அடிமைகளாய் அடிபட்டுக் கொண்டுதானே இருக்கின்றன..

உலகின் உயரமான கட்டிடமான துபை புர்ஜ் கலிபா நம் தேசியக் கொடி அலங்கார விளக்கை தன்மேல் போர்த்தி ஜொலித்தது... அழகாய்ச் சிரித்தது... நயகரா நீர் வீழ்ச்சியில் நம் தேசியக் கொடி விளக்கொளியில் ஜொலித்தது. சிங்கப்பூரில் மிகப்பெரிய சிசிடிவி திரையில் நம் கொடி பறந்தது. போர்ப்பதட்டம் நிறைந்த இந்திய சீன எல்லையில் சீன ராணுவ வீரர்களுக்கு இனிப்புக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் எல்லையிலும் அதுபோலவே... அப்படியிருக்க நாம் எத்தனை எத்தனை வன்மங்களை இணையத்தில் விதைத்துக் கொண்டிருந்தோம் அந்த நாளில் என்பதை இணையம் சொல்லுமே.

இன்று இணையவெளி என்பது நல்லதைவிட அதிகம் கெட்டதையே போதிக்கும் இடமாக இருக்கிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. சாதீய விஷங்களையும் மத ரீதியாக வன்மங்களையும் விதைக்கும் இடமாகவே இருக்கின்றது. முகநூலிலும் டுவிட்டரிலும் சாதிக் குழுக்களும் மதக் குழுக்களும் மலிந்து கிடக்கின்றன. பிக்பாஸ் ஜூலி நம்ம சாதி, அவரைச் ஜெயிக்க வைக்க நம்மவர்கள் எல்லாம் மறக்காமல் வாக்களியுங்கள் என எனக்குத் தெரிந்த பத்திரிக்கைத் துறையில் உள்ள நண்பர் பகிர்ந்திருந்தார். அதேபோல் அடுத்த மதத்தினர் குறித்து தரமற்ற வரிகளை வாந்தி எடுத்து வைப்பவர்களும் அதிகம்... சாதிகள் குறித்த பகடிகளுக்குப் பஞ்சம் இல்லை. இதில் என்ன சுதந்திரம் இருக்கிறது... எழுத்துச் சுதந்திரமா...? இல்லை கருத்துச் சுதந்திரமா..?

இந்தியா எனக்கு என்ன பண்ணுச்சு... பல் விளக்கி விட்டுச்சா.. பால் கொடுத்துச்சான்னு ஏகப்பட்ட வியாக்கியானப் பகிர்வுகள்... மோடி வந்தால் ஏதோ செய்வார் என்ற நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சாமரம் வீசுவதால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்களே... ஈபிஎஸ், ஓபிஎஸ்களை வாராவாரம் சந்திக்கும் பிரதமர் தில்லியில் போராடும் நம் விவசாயிகளைக் கண்டு கொள்ளவில்லையே... நெடுவாசல் போராட்டம் குறித்து யாரும்... எந்த ஊடகமும் பேசவில்லையே... மக்கள் நலனுக்காக எனச் சொல்லி தாங்கள் சம்பாதிக்க இணைப்பு நாடகம் நடத்தி வெற்றி பெற்றுவிட்டார்களே... ரேஷன் கார்டு இல்லை என்று சொல்கிறார்களே... தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவில்லை... எம் ராஜராஜன் காலத்தில் கரைபுரண்ட காவிரியில் தண்ணீர் கேட்டால் அடிக்கிறார்களே... ஆந்திராவுக்கு பிழைக்கப் போன தமிழன் அடி வாங்கிச் சாகிறானே... அணைகட்டுவதற்கான புவியியல் அமைப்பு இங்கு இல்லை என்கிறார்களே.. மதுக்கடைகளை மூடுவதாய் கண்துடைப்புச் செய்து கிராமங்களுக்குச் செல்லும் பாதைகளில் கடைகளைத் திறந்து அந்தப் பாதையில் பாதுகாப்பில்லாத தன்மையை உண்டு பண்ணிவிட்டார்களே... வீட்டிற்கு ரேசன் இல்லை சாரய பாட்டிலை வாங்கி வைத்துக் கொள் என்கிறார்களே... கபட நாடகம் ஆடும் எதிர்க்கட்சிகள்... பாண்டிச்சேரியிலும் ஒரு கூவாத்தூர்... ஏழைகளான எம்.எல்.ஏக்களின் சம்பள உயர்வு... என எத்தனையோ பிரச்சினைகள் குறித்து எல்லாத் தமிழனுக்கும் வருத்தம் உண்டு. அது எனக்குள்ளும் உண்டு.

இதேபோல் எழுபது பச்சிளம் குழந்தைகளைக் கொன்று விட்டு அதனால் செத்தார்கள்... இதனால் செத்தார்கள்... இது இப்போதுதான் நிகழும் நிகழ்வில்லை... இதற்கு முன்னரும் நிகழ்ந்திருக்கு என ஆளாளுக்கு பேசுகிறார்களே... குழந்தைகள் இறப்புக் குறித்து வாய் திறக்காத பிரதமர் தமிழகத்தில் கங்கையும் காவிரியும் இணைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவிக்கிறாரே.... அம்பானி மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல நேரில் செல்கிறாரே... மதங்களைக் கடந்து வாழ்ந்த அப்துல்கலாம் நினைவு மண்டபத்துக்குள் மதப்பிரச்சினையைக் கொண்டு செல்கிறார்களே.. காதலித்தால் நிர்வாணமாக்கி தற்கொலைக்கு தூண்டுகிறார்களே... விவசாயியின் கோவணத்துணி கிழிந்து தொங்க ஆதியோகிகளுக்கு நிலங்களைத் தானமாக கொடுக்கிறார்களே... மழை வேண்டி வாடி நிற்க காட்டை அழிக்க கோட்டை உதவுகிறதே... ஆற்று மணலெல்லாம் பக்கத்து மாநிலங்களுக்கு அணைகட்ட அள்ளிக் கொடுக்கப்படுகிறதே.. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தண்ணீர் தாரை வார்க்கப்படுகிறதே... மாடுகளுக்கு இருக்கும் மதிப்பு மனிதர்களுக்கு இல்லையே... மீனவனின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லையே... ஆளாளுக்கு அரசியல் செய்கிறார்களே... ஏழரைக்கோடி மக்களைக் கொண்ட தமிழகத்துக்கு ஒரு நிலையான ஆளுநர் கிடைக்கவில்லையா... இப்படி இன்னும் இன்னுமாய் நிறைய வருத்தங்களும் வேதனைகளும் ஒவ்வொரு இதயத்துக்குள்ளும் விரவித்தான் கிடக்கிறது... அதற்காக பிறந்த நாட்டுக்கு எதிராக பகிர்வுகள் போடுவதால் என்ன லாபம்?

தனித் தமிழகம் அமைந்தால்தான் உண்மையான சுதந்திரம் என்று பதிவிடுவதெல்லாம் எவ்வளவு முட்டாள்தனமானது... இது அரசியல் பிழைப்பவர்கள் கூறும் வார்த்தைகள்... இதைத் தூக்கிக் கொண்டு திரிவது நமக்குக் கேவலமில்லையா... தமிழன் அவமானப் படுத்தப்படுகிறான்... கேவலப் படுத்தப்படுகிறான்.. தலை குனிவு ஏற்படுகிறது நமக்கெதுக்கு சுதந்திர தினம்..? வாழ்த்துச் சொல்லாதீர்கள்... கொடியேற்றாதீர்கள்.... கொண்டாடாதீர்கள் எனக் குதிக்கிறோமே... இந்த அவமானம்... கேவலம்... தலைகுனிவு எல்லாம் யாரால்..? நம்மால்தானே... ஊழல் அரசியல்வாதிகள் கொடுக்கும் சொற்பக் காசுக்கு விலை போவது யார்...? நாம்தானே... படிப்பவறிவு நிரம்பியவர்கள் நிறைந்த மாநிலங்களில் நம் தமிழகமும் ஒன்று என்றாலும் பண்புள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கிறோமா..? இல்லையே... இப்பவும் பெரும் நிதிகள் இணைப்புக்குப் பின் தமிழக அரசியல் கேலிக்கூத்தை கேலிச்சித்திரங்களாய் ரசிக்கத்தானே செய்கிறோம்.. வேறு என்ன செய்துவிட்டோம்... இதையும் கடந்து கொடுக்கும் பணத்துக்கு மீண்டும் முதலைகளிடமே அடமானம் ஆவோம்தானே... இல்லையே... நம் சுதந்திரத்தை நாம்தானே அடகு வைக்கிறோம். நம்மை நாமே சில்லறைக்காக வித்து விட்டு ரஜினி சொல்வதுபோல் சிஸ்டம் சரியில்லை என்றால் எப்படி...? அந்த சிஸ்டம் சரிவர இயங்க நாம் என்ன செய்தோம்... அதைப் பாழாக்கியதில் நமக்குத்தானே அதிகப் பங்கிருக்கிறது.

சரிங்க... இந்தியாவோட இருக்க என் தமிழகம் வஞ்சிக்கப்படுது... எல்லா வகையிலும் நமக்கு தீங்கிழைக்கப்படுது... பிரதமரின் பார்வை நம் மீது இல்லை... மாநில நிர்வாகமோ கைப்பாவையாய்... எத்தனையோ பிரச்சினைகள்... எதுவுமே தீர்க்கப்படாமல்... அதனால் எங்களுக்கு தனிநாடு... எங்கள் தமிழகம் இந்தியாவில் இருந்து பிரிய வேண்டும்... எல்லாம் சரிதான்... பிக்பாஸ் பார்க்காதே... சமுதாயத்தைப் பார்... சமூகப் பிரச்சினைக்கு குரல் கொடுன்னு சொன்ன எத்தனை பேர் உண்மையிலேயே பிக்பாஸ் பார்க்காமல் சமூக பிரச்சினைக்கு குரல் கொடுத்தோம்..? சாதியை ஒழிப்போம் என்று சொன்ன எத்தனை பேர் அதைச் செயல்படுத்தியிருக்கிறோம்..? காதலுக்கு எத்தனை குடும்பங்களில் பச்சைக்கொடி காட்டப்படுகிறது..? இவ்வளவு ஏன் நம் வீட்டில் ஆண் என்ற அகங்கார ஆதிக்கதை எத்தனை பேர் விட்டொழித்திருக்கிறோம்..?  என் வீட்டில் எந்த முடிவென்றாலும் என் மனைவி எடுக்கலாம் என எத்தனை பேரால் சொல்ல முடியும்..? சாதீய தலைவர்களுக்கான விழாக்களில் மற்ற சாதியினர் கலந்து கொள்ள விடுவோமா...? அன்றைய தின ஆர்ப்பரிப்பில் மற்ற சாதிக்காரர்களை துன்புறுத்தாமல் இருக்கிறோமா..? மக்கள் தலைவர்களை சாதித் தலைவர்களாக்கி கொண்டாடாமல் இருக்கிறோமா..?  இன்னும் நிறைய இருக்குங்க... பொங்கினா நிறையப் பொங்கல் வைக்கலாம்.

நமக்கு கீழ் இருப்பவனுக்கு நாம் சுதந்திரம் கொடுக்கவும் மாட்டோம்... கொடுக்க விடவும் விடமாட்டோம்... மக்கள் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் போடலாம்... கொள்ளை அடித்தவர்களுக்கு கோவிலும் கட்டலாம்... எழுத்து சுதந்திரம் பறிக்கப்படலாம்... எங்கோ ஒருத்தன் கேள்வி கேட்டால் ஒடுக்கப்படலாம்.. சினிமாவில் தவறாக சித்தரித்தால் மகளிர் அமைப்புக்கள் மல்லுக்கு நிற்கலாம்... நிஜத்தில் நடந்தால் நமக்கேன் வம்பென வாய் பொத்தி வேடிக்கை பார்க்கலாம்... சாதீய வெறியில் வெட்டிக் கொல்லலாம்... வெட்டியவனுக்கு அடுத்த வாரமே விழா எடுக்கலாம்... பாரதியையும் திட்டலாம்... வள்ளுவனையும் கேவலப்படுத்தலாம்... சிவனைச் சீண்டலாம்... ஏசுவை ஏசலாம்... அல்லாவை அவமதிக்கலாம்... இப்படி எதுவேண்டுமென்றாலும் செய்யலாம்... ஏனென்றால் சுதந்திரம் இருக்கு... மக்களாட்சி இருக்கு... குடியரசு இருக்கு... இதெல்லாம் இருந்தாலும் என் சுதந்திரம் எனக்கில்லை என தாய்நாட்டின் சுதந்திர தினத்தன்று எதிர்ப்பு பதிவுகள் போடலாம்... கேவலமாக எழுதலாம்... கேடுகெட்ட வார்த்தைப் பிரயோகம் செய்யலாம்... ஏனென்றால் தனித்தமிழகம் இல்லாத சுதந்திரம் நமக்கு வேண்டாம்.

முதலில் நாம் சுதந்திரமாக இருப்பதைப் போல் நாம் அடக்கி வைப்பவர்களுக்கும் சுதந்திரம் கொடுப்போம்... தமிழனாய் தலை நிமிர்ந்து நிற்போம்... ஊழல், கொள்ளை, சாதீய வெறிகளை அடித்துத் துரத்துவோம்... இதையெல்லாம் விட எத்தனை வேற்றுமை இருந்தாலும் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம். தனித்தமிழகம் வருதோ இல்லையோ தலைநிமிர்ந்த தமிழனின் புகழ் உலகெங்கும் பரவும் என நம்புவோமாக.
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

"நாடென்ன செய்தது எனக்கு? எனக் கேள்விகள் கேட்பது எதற்கு? நீயென்ன செய்தாய் அதற்கு? எனநினைத்தால் நன்மை உனக்கு" என்பது புரட்சிக்கவிஞர் வரிகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// நாம் அடக்கி வைப்பவர்களுக்கும் சுதந்திரம் கொடுப்போம்... //

இது தான் நல்ல மனசு என்பது...

ஆதங்கமாக பதிவு என்றாலும் உணர்வு முழுவதும் உண்மை... அசத்தல்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்களுக்கு உள்ள ஆதங்கமும், நம்பிக்கையும் எங்களுக்கும் உள்ளது.

Yarlpavanan சொன்னது…

அருமையான எண்ணங்கள்

தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.

G.M Balasubramaniam சொன்னது…

எங்கு சுதந்திர ம் என்பதே பேச்சு ஆனால் மனதளவில் நாம் இன்னும் அடிமைகளே

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

உங்கள் ஆதங்கம் எங்களுக்கும் உண்டு. நம் நாட்டில் சுதந்திரம் சற்றுக் கூடுதல் என்றே தோன்றுகிறது இல்லையா?!! எல்லாம் புறந்தள்ளி நம்மால் நம் நாட்டிற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம்...நல்லதே நினைப்போம்...