மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 18 ஜனவரி, 2017

திமிலில் துள்ளும் வீரம்


ல்லிக்கட்டுக்கான போராட்டம் பல நாட்களாகத் தொடர்ந்தாலும், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆங்காங்கே சல்லிக்கட்டுகள் தடையை மீறி நடத்தப்பட்டன. இது பீட்டாவுக்கு செருப்படிதான் என்றாலும் நம் கலாச்சார, பண்பாட்டின் அடையாளத்தை யாரோ ஒருவருக்காக பயந்து பயந்து ஒளிந்து ஓடி நடத்தியதில் மானத் தமிழனாய் மார்தட்டிக் கொள்ள முடியவில்லை. எங்கள் உரிமை... எங்கள் பாரம்பரியம்... நாங்கள் ஏன் அவர்களுக்குப் பயப்படணும்... அடங்கிப் போகணும்... என அலங்காநல்லூர் வாடிவாசலில் திங்களன்று கூடிய சிறு கூட்டத்தின் மீது போலீஸ் தடியடி நடத்தி தொடங்கி வைக்க, மாணவர்கள் விதைத்த விதை நேற்று வேர்விட்டு இன்று விருட்சமாக வளர்ந்து தமிழகமெங்கும் வேள்வித் தீயில் தகித்துக் கொண்டிருக்கிறது.

வன்முறை சிறிதும் கலக்காமல் மிகவும் அமைதியாக அறவழிப் போராட்டத்தைக் கையில் எடுத்த மாணவர்கள், மாலை ஐந்து மணிக்கு மேல் கேட்டதெல்லாம் இரண்டு வருடமாக வாடிவாசலில் மாடு விடப்படலை... ஐந்து மாடுகளை மட்டும் அதன் மூலம் அவிழ்த்து மட்டும் விடுங்கள் போதும் என்றார்கள். மேலும் நேரம் செல்லச் செல்ல இரண்டே இரண்டு மாடுகளை வாடிவாசல் வழியாக பிடித்து வந்தால் போதும் என்றார்கள். எதற்கும் அசையாத போலீஸ்... அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை... ஆளுபவன் சொல்வதைச் செய்ய வேண்டியது அவர்களின் வேலை... தலையெழுத்து... தமிழுணர்வு உள்ளவன் எல்லாம் தடியைத் தூக்கிக் கொண்டு நிற்க வேண்டிய நிலை என்ன செய்வான்..? ஆளும் அரசில் யார் முதல்வர் என்ற போட்டியோடு, மத்திய அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டு கர்நாடகக்காரன் காவிரியில்  நீதியை மதிக்க மாட்டான்... கேரளக்காரன் முல்லைப் பெரியாரில் நீதியை மதிக்கமாட்டான்... ஆனால் நாங்கள் மட்டும் நீதியை மதிப்போம்... ஏனென்றால் எங்களுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு இருக்கே என்று செத்துக் கிடக்கும் அரசு எதையும் செவி சாய்க்கவில்லை.

போராட்டக் களத்தில் இருந்தவர்களை அதிகாலையில் அள்ளிக் கொண்டு போகச் சொன்ன அரசு, மாணவர்கள் கையில் எடுத்த பிரச்சினை எப்படிப் பரவும் என்பதை அறியாமலா இருந்திருக்கும். என்ன செய்யப் போகிறார்கள்... நாம் ஊமையாய் இருப்போம்... புரட்சித் தலைவர் நூற்றாண்டில் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்ப்போம் என சென்று விட்டார் வேலைக்காரி காலில் விழும் முதல்வர்... இவர் பேசுவதில் தனியொருவன்... செயலில் ஆயிரத்தில் ஒருவன் கூட இல்லை என்பதை நாம் அறிவோமே... நேற்றுக் கைதான மாணவர்களை விடச் சொல்லி மெல்ல மெல்ல மெரினாவில் கூடிய மாணவர்களுக்கு ஆதரவாய் தமிழகமே திரள, எல்லா இடமும் போராட்டகளம் ஆனது. எங்கள் உரிமையை மீட்டெடுத்துத் தாறேன் என்று சொல்லுங்கள் என்ற கோரிக்கையை கேட்க நாதியில்லை... நம் நாதியற்ற தமிழகத்தில்....இந்த அறப்போராட்டம் இன்னும் வீரியம் எடுக்கக் கூடாது என்பதற்கான முயற்சியில் அரசும் அதிகாரிகளும்... இந்த வீரியத்தை கட்டுக்குள் வைக்க விடமாட்டோம் என்று மாணவர்களும் இளைஞர்களும் ஆண்களும் பெண்களும் ஏன் குழந்தைகளும் வீதியில்...

பொங்கல் வரை நீங்க நடத்துங்க நாங்க இருக்கோம் என்றவனெல்லாம் திங்களன்று வெளியில் வரவில்லை... நான் மத்திய அமைச்சர்... நான் போராட்ட களத்துக்கு வரமுடியாது என்கிறான் ஒருவன்... பீட்டாவுக்கு அனுமதி அளித்து பணம் பண்ணிக் கொண்டவன் நாங்கள் ஆட்சியில் இருந்தால் நடத்துவோம் என்கிறான்... நாங்கள்தான் மக்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கிறோம் என்கிறாள் ஒருத்தி... இப்படிப் பேசும் இவர்கள் எல்லாம் எங்கள் பாரம்பரியம் காக்கப்படவேண்டும்... நாங்களும் போராட்டக் களத்தில் இருப்போம்... எங்களுக்கு இந்த எம்.பி., எம்.எல்.ஏ பதவியெல்லாம் வேண்டாம்... நான் தமிழன் என்று எவனும் இதுவரை இறங்கி வரவில்லையே... இவனுக எல்லாம் மக்கள் பிரதிநிதியாம்... கேட்டால் பணம் வாங்கிக் கொண்டுதானே ஓட்டுப் போட்டீர்கள் என்கிறார்கள்... அவன் சொல்வதும் சரிதானே... நம் தலையில் நாம்தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டோம். இனியாவது விழித்துக் கொள்வோம்.

மாணவர் பிரச்சினையில் தாங்களும் ஆதரவு அளிப்பது போல் உள் நுழைந்து தங்கள் பதவியையும் பவுசையும் தக்க வைத்துக் கொள்வோம் என்ற மனப்பால் குடித்து வந்த ஸ்டாலின், சரத்குமார் போன்றோரை இது மாணவர்களின் போராட்டக்களம்.... இங்கு நுழைந்து அரசியல் களம் ஆக்காதீர்கள்... உங்கள் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்று சொன்ன என் தமிழ் இளைஞனை... என் சொந்தத்தை... என் இன ரத்தத்தின் திமிலை... திணவெடுக்கும் திமிரைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு போராட்டம் தொடரும் வரை இருக்கட்டும். எந்த பச்சோந்தியையும் நமக்குள் நுழைய விடாதீர்கள். இங்கு அவர்களுக்கு ஆதரவில்லை அங்கு ஆதரவுண்டு என்ற நிலைப்பாட்டுக்கு வராதீர்கள்... எல்லா இடத்திலும் அரசியல்வாதி, பிரபலங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள்... அலங்காநல்லூரில் அனுமதி... மெரினாவில் மறுப்பு என்பதையும் அரசியலாக்குகிறார்கள் சில முகநூல் நண்பர்கள். நமக்கு நாம்தான் எதிரி என்பதை உணருங்கள்... தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான முன்னெடுப்புக்களை வையுங்கள். இன்று ஆடு நனையுதேன்னு வருத்தப்படும் பச்சோந்திகள் நம்மை வைத்து தன்னைக் குளிர்வித்துக் கொள்ள நாடகம் போடுகிறது. விடாதே தமிழா.

நான் ஆதரவு... நான் எங்கே எதிர்த்தேன்... தமிழுணர்வு என்னக்குள்ளும் இருக்கு... என்று நேற்று போட்டி போட்டி பேட்டி கொடுத்த நடிகனின் ஆசை வார்த்தைக்கு அடிபணிந்து விடாதே என் தமிழா... அவனெல்லாம் இவ்வளவு தூரம் வரும் என்று நினைக்கவில்லை... பீட்டாவுக்கு ஆதரவு என்பது என் சொந்த நிலைப்பாடு... சல்லிக்கட்டு என்று வரும்போது நான் பீட்டா இல்லை என பீலா விடுகிறான்... பீட்டாவை விட்டு வெளியேறிவிட்டேன் என எந்த நாயும்.. மன்னிக்கவும் நாய் நன்றியுள்ள விலங்குதானே... இவனுகளுக்கு தேவை பணம்... அவன் படம் வரும்போது கட் அவுட் வைக்கவும் பாலாபிஷேகம் பண்ணவும் ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்துப் பார்க்கவும் மட்டுமே நாம் வேண்டும்... இந்தப் போராட்டம் தொடர்ந்து எழுச்சி பெற்றால் நம்ம பொழப்பு நாறிப் போயிரும் என்பதால் இப்போது நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஆதரவு என அள்ளிவிடுகிறார்கள்... நம்பி விடாதீர்கள்... அரசியல்வாதிகளை தள்ளி வைத்தது போல் இவர்களின் கரங்களையும் தட்டிவிடுங்கள்... பீட்டாவை எதிர்க்கிறோம் என்று சொல்லும் இவர்கள் இதுவரை தங்கள் உறுப்பினர் அட்டையைத் தூக்கி எரியலையே.. பின்ன என்ன எதிர்ப்பு...  நம் உரிமை... நமக்கான போராட்டம்... எவன் தயவும் நமக்கு வேண்டாம்... நாம் நாமாகவே போராடுவோம்.

கரண்டை நிறுத்துவது... மிரட்டுவது.... அடிப்போம் எனச் சொல்வது இதெல்லாம் மிரட்டி நம்மைப் பணிய வைக்கச் செய்யும் முயற்சிகள். நாம் இனமானத்தோடு சாதி, மதம் துறந்த தமிழர்கள்... எதையும் எதிர்க்கொள்வோம். துணை ராணுவம் வருகிறது என்கிறார்கள்...தஞ்சாவூர் பகுதி போலீசாரெல்லாம் சென்னை வரவேண்டும் என்ற செய்தியெல்லாம் பரவிவருகிறது... இதையெல்லாம் செய்ய முடிந்த அரசு, மாணவர் போராட்டத்தைக் கணக்கில் கொண்டு அவசர சட்டம் கொண்டு வரும்படி மத்திய அரசை கேட்க முடியாதா என்ன...? வழக்கு நீதி மன்றத்தில் இருந்தால் என்ன... ஒரு இனமே போராடும் போது அதன் தலைமையும் அந்த மாநிலத்தின் மீடியாக்களும்...(நியூஸ் 7 நீங்கலாக) மௌனம் சாதிப்பது எதற்காக,,,? யாருக்காக...? விஜயகாந்த் துப்பியதில் தவறேயில்லை...

முதல்வர் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சொல்கிறார்... முதல்வர் என்ன கோமாவிலா இருக்கிறார்... இல்லை சின்னம்மா காலில் விழுந்து அறிக்கை விடலாமா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறாரா...? வெட்கக்கேடு. மாணவர்களை விடுவித்து விட்டோம் என போலீசார் சொல்வதையும் நம்பாதீர்கள். அந்த மாணவர்கள் வந்தால் மட்டுமே உறுதி செய்யுங்கள். அமைச்சர்களை தேடிச் செல்லாதீர்கள்... அவர்கள் நம்மைத் தேடி வரச் செய்யுங்கள்.

தேசியக்கொடியை எரிப்போம்... இந்தியாவை வெறுப்போம் என்பதெல்லாம் வேண்டாம்... இதுபோல் நம் போராட்டம் திசை திருப்பப்படுமானால் அது தமிழ்த் தீவிரவாதிகள் என்ற நிலைக்கு கொண்டு வந்துவிடும்... இது நம் பண்பாடு, பாரம்பரியம் காக்க அறவழிப் போராட்டம் இதை இந்த வழியிலேயே நகர்த்தி வெற்றி பெறுவோம். ஒருவேளை வெற்றி கிடைக்கவில்லை என்றால் வரும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு கருப்பு தினமாக  அனுசரிப்போம், அப்போது தெரியும் தமிழன் யார் என்பது.. அதுவரை அறவழிப் போராட்டத்தை அறவழியிலேயே கொண்டு செல்வோம்.

அரசியல்வாதிகளை நம்மோடு அமர விட வேண்டாம்...

நடிகனை நமக்காக குரல் கொடுக்கச் சொல்ல வேண்டாம்...

தேசியக் கொடியை அவமதிக்க வேண்டாம்...

அமைச்சர்களிடம் பேசுகிறோம் என்று அவர்களை நாடிச் செல்லாதீர்கள்...

யாராகினும் பொதுவெளியில் வந்து பேசச் சொல்லுங்கள்.

நாம் வீரத்தமிழர் பரம்பரை என்பதை இந்த வீரியமிகு போராட்டத்தில் காட்டுவோம்...

மறத்தமிழன் மட்டுமல்ல... மானத் தமிழன்... வீரத்தமிழன்... உலகையே ஆண்ட வெற்றித் தமிழன் நாங்கள் என்பதை உலகுக்கு நிரூபிப்போம்.

மாட்டை துன்புறுத்துபவன் நாங்கள் அல்ல... எங்கள் வீட்டுச் செல்லங்களின் திமிலைத் தடவி ஏறு தழுவுதல் நடத்துபவர்களே நாங்கள் என்பதை நிரூபிப்போம்.

சிங்கத்தை அடக்கி ஆண்ட பரம்பரைதான் நாங்கள் என்பது இப்போராட்டத்தில் நிரூபிப்போம்...

தமிழனின் போராட்டம் வெல்லட்டும்... நம் பாரம்பரியம் காக்கப்படட்டும்... இந்த விதை சல்லிக்கட்டோடு மட்டும் நிற்காமல் விவசாயிகள் சாவு, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை ஒழித்தல், நதிநீர் பிரச்சினைகள் என எல்லாவற்றிற்கும் வேர் விடட்டும்...

-'பரிவை' சே,குமார்.

தற்போதைய சூழல் தமிழனுக்கான குரல் கொடுக்கும் நேரம் என்பதால் இந்த வாரம் போட வேண்டிய 'என்னைப் பற்றி நான்' வெள்ளி அல்லது சனியில் பதியப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

7 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நம்மில் இரு வலைப்பதிவர்களே மாறுபட்ட கருத்து சொல்கிறார்கள்... இதில் ஒருவர் தமிழ் இலக்கியம் (M.A) படித்தவர்... மற்றுமொருவர் ஊருக்கேற்ப குசும்புக்காரர்... இருவரும் பாவம்... இவர்களை திருத்த முடியாது...

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) சொன்னது…

நானும் முழு ஆதரவு தருகிறேன்.ஆனால் மாணவர்களை அடித்து விடுவார்களோ என்ற பயமும் வருகிறது.
karthik amma

மனோ சாமிநாதன் சொன்னது…

மிக அருமையான அலசல்! தெளிந்த பார்வை!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எதில்தான் அரசியல் என்ற விவஸ்தை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. பீட்டாவைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அதற்குத் துணை போக மாட்டார்கள், ஆனால் அதிலும் அரசியல்! பீட்டா உண்மையான விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு என்று சொல்லவே முடியாது. போராட்டம் நடத்துபவர்கள் எவரும் எந்தவித வன்முறையிலும் இறங்காமல் அற்ப்போராட்டமாகத்தான் நடத்துகிறார்கள்.இந்தப் போராட்டங்கள் இவற்றோடு நின்றுவிடாமல் மக்களின் பிரச்சனைகள் பொதுப்பிரச்சனைகள் என்று எல்லாவற்றிற்கும் தொடர்ந்து புரட்சி ஏற்பட்டால் நம் தமிழ்நாட்டிற்கும், நாட்டிற்கும் ஒரு நல்ல தலைமை கிடைத்திடும்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போராட்டம் வெல்லட்டும் நண்பரே

Yarlpavanan சொன்னது…

ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) எழுச்சி
புதிய இலக்கைத் தொடும்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு பகிர்வு.....