மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 30 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது : பழைய பன்னீரு

Image result for சசிகலாவுடன் பன்னீர்

த்திரியன் படத்தில்  விஜயகாந்தைப் பார்த்து திலகன் அவர்கள் 'பன்னீர் செல்வம் நீ பழைய பன்னீர்செல்வமா வரணும்... வருவே...' அப்படின்னு சொல்வார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மூன்றாவது முறையாக முதல்வரான பன்னீர்செல்வம் அவர்கள் பழைய பன்னீர்செல்வமாக இல்லாமல் புதிய பன்னீர்செல்வமாக மலர்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் அதிகமாகவே இருந்தது. மன்னார்குடி மாபியா கையில் சொத்துக்கள் செல்வதை மக்கள் விரும்பவில்லை என்றாலும் அதற்காகத்தானே இத்தனை கபட நாடகங்கள் நடந்தேறியது என்பதை அறிந்தே இருந்தார்கள்.. சோற்றுக்குள் பூசனிக்காயை மறைப்பது போல் மறைக்க நினைத்தாலும் உலகுக்கே தெரிந்த விசயம் அது... சொத்துக்கள் போகட்டும் ஆனால் கட்சி அந்தம்மா கையில் போகக்கூடாது என்பதில் மட்டும் மக்கள் மிகத் தீவிரமாக இருந்தார்கள்... இன்று வரை இருக்கிறார்கள். நாளை எப்படியோ... பணம் பத்தும் செய்யும். நேற்று வரை முழுக்க முழுக்க பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவளிப்போம் என்று பொதுமக்களும் சமூக வலைத்தள அன்பர்களும் கத்திக் கதறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நடந்தது என்ன..?

மரணம் குறித்து மறைக்கப்பட்ட உண்மைகளுடன் ஜெயலலிதா என்னும் உறவுகளற்ற மனுஷியின் உடல் மெரீனாவில் புதைக்கப்பட்ட பின்னர், சசிகலாவின் நடை உடை பாவனை எல்லாமே அவரைப் போல் மாறியதைப் பார்த்தபோதே நாமெல்லாம் இரும்பு மனுஷி என்று புகழ்ந்த ஜெ.யின் ரிமோட் முழுக்க முழுக்க இவரின் கையில்தான் இருந்திருக்கிறது என்பதை நம்மால் உணர  முடிந்தது. ஜெ.யின் சாவில் மர்மம் இருக்கு... அதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று இப்போது ஆளாளுக்கு கூவினாலும் இனி என்ன ஆகப் போகிறது..? கோடிகளை அடித்த கேடிகளை பேச விட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு, தன் மந்த நிலையைத்தான் தொடருமே தவிர ரகசியத்தை வெளியிட முன் வராது... சாமானியனை வதைக்கும் மோடி பணக்காரர்களிடம் சரண்டர் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை... சமீபத்திய நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. டாக்டரிடம் வக்கீலிடமும் பொய் சொல்லக் கூடாது என்று சொல்வார்கள்... அது சாதாரண மக்களுக்குத்தான்... டாக்டருக்கும் வக்கீலுக்கும் அல்ல என்பதை டாக்டர் ரெட்டி அன் கோ நன்றாக நிரூபித்திருக்கிறார்கள்... பணம் பத்தும் செய்யும் என்றால் ஜெ. விசயத்தில் பணம் பத்தாயிரம் செய்திருக்கிறது.

சரி பன்னீருக்கு வருவோம்... இரண்டு முறை  தற்காலிகமாக இருந்தவர் இந்த முறை நிரந்தர முதல்வராக வலம் வருவார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. அவரின் நடவடிக்கைகளும் பாராட்டும்படியாகத்தான் இருந்தது... பொன்னையன், தம்பித்துரையைப் போல் காலில் விழுந்து கிடக்காமல் பழைய பன்னீர் புதிய பன்னீராக மாறிவிட்டார் என்று நினைக்கத் தோன்றியது அதெல்லாம் எதுவரை... 'மாண்புமிகு சின்ன அம்மா' என வளைந்து நிற்கும் வரை.. ஆம் தன் பணத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் இன்னும் சம்பாதித்துக் கொள்ளவும் இதைவிட்டால் வேறு வழியில்லை என்பதை அவரும் உணர்ந்து கொள்ள, ஒரு மிகப்பெரிய கட்சி இன்று அழிவின் பாதையை நோக்கி சதி(சி)கலா கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தன் சொத்து சுகத்துக்காக மானத்தை எப்பவும் காற்றில் பறக்க விடுபவன் நான் என்பதை நிரூபித்திருக்கிறார். 

தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும்... சின்ன புரட்சித் தலைவர்... சிங்கமே சீறி வா... உன் பின்னே நாங்கள் இருக்கிறோம்... என்று எழுச்சி பெற்ற தமிழினத்தை தன் வாழ்நாள் கூழைக்கும்பிடு மூலம் கேவலப்படுத்திவிட்டார் இந்த மனிதர்... என்னைக்குமே நான் பழைய பன்னீர் செல்வம்தான்... புதிதாய் பிறந்து வா என்று நீங்கள் சொன்னாலும் நான் மாற மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். நாளை முதல்வர் பதவியைக் கொடுத்துவிட்டு சசிகலாவின் கார் போகும் போது ரோட்டைத் தொட்டுக் கும்பிடுவார்... அவருக்கு சொத்து பத்து முக்கியம் அடிப்படைத் தொண்டனும் அப்பாவித் தமிழன் அல்ல என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார்... அவர் மட்டுமல்ல எல்லா அல்லக்கைகளும் அப்படியே.

சசிகலா ஆளக்கூடாதா... அவரும் தமிழச்சிதானே என்று பொங்குகிறார் இங்கு நண்பர் ஒருவர்... ஆளட்டுமே... யார் வேண்டாம் என்றது... ஒரு திறமைசாலியாய் இருந்து... உண்மையான தோழியாய் இருந்து... ஜெவின் மரண முடிச்சுக்களை அவிழ்த்து... மக்களைச் சந்தித்து... தன்னாலும் சிறப்பான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்று நிரூபிக்கும் பட்சத்தில் ஒரு நல்ல மனுஷியாய் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.. ஆனால் பண ஆசையும் பதவி வெறியும் பிடித்த ஒரு பெண், ஜெயலலிதா என்ன செய்தாரோ அதையே செய்ய நினைக்கும் ஒரு பெண், எப்படி மக்கள் மனதில் இடம் பெற முடியும்... கூன் பாண்டியர்களை வைத்து அரியணை ஏறுவார் என்பதில் சந்தேகமே இல்லை... டீக்கடைக்காரர் பிரதமராக இருக்கும் நாட்டில்... வீடியோக்கடைக்காரி முதல்வர் ஆவதில் தப்பு ஏதும் இல்லையே...  ஆனாலும் எதுவுமே அறியாத... இந்த இடத்தில் இப்படிச் சொல்வது தவறுதான்... ஏனென்றால் கொள்ளைகளை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்... ஜெயலலிதாவையே அடக்கி ஆண்டவர் எனும் போது எதுவுமே அறியாத என்ற சொல் தவறுதான்... இருந்தாலும் ஒரு நாட்டை நிர்வகிக்கும் திறமை இல்லாத ஒரு மனுசியை கூன் பாண்டியர்கள் ஏற்றுக் கொள்ளலாம்... ஆனால் மக்கள்..?

அதிமுகவின் அஸ்தமனத்துக்கான தீர்மானம்தான் சசியை தேர்ந்தெடுத்தது... ஆனாலும் சசி முதல்வராக நம்மை ஆளும் நிலமை வரக்கூடாது என்றால் அவர் நிற்கக்கூடிய தொகுதி மக்கள் பணத்துக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்... பணம் மக்களை விலைக்கு வாங்கிவிடும் என்ற நினைப்புத்தான் தமிழகத்தின் தலையெழுத்து இனி கேள்விக்குறியாகிவிடும் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. என்ன செய்ய... கொள்ளை அடித்தவன் அரசை மிரட்டுறான்... அவன் பேசுவதைப் பார்த்தால் மீண்டும் அவனுக்கு சாமரம் வீசிவார்களோ என்றுதான் தோன்றுகிறது. அரசின் மௌனமும் அதைத்தான் சொல்கிறது. நடப்பவை எல்லாம் மன்னார்குடிக்கு சாதகம்தான் என்ற நிலையில் வருந்திப் பயனில்லை என்றாலும் தமிழகம் இன்னுமொரு பீகார் ஆகாமல் இருந்தால் சரி...

ஆமா தையில முதல்வர் பதவி ஏற்பாருன்னு சொன்னானுங்க... இப்ப அடுத்த வாரம்ன்னு சொல்றானுங்க... பன்னீரு... நீங்க இன்னும் பழைய பன்னீராவே இருக்கீங்களே... மாறுவீர்கள்... வீறு கொண்டு எழுவீர்கள் என்று நாங்கள் நம்பியதும்... அதைச் செய்தார் ... இதைச் செய்தார்... என இணைய இதழ்கள் வரிந்து கட்டி எழுதியதும் கானல் நீராய் போய்விட்டதே...  என்ன செய்வது பணம் காக்க நீங்கள் சொன்ன 'மாண்புமிகு சின்ன அம்மா' உங்களுக்கு வாழ்வு.... தமிழனுக்கு இழுக்கு.

நக்கிப் பிழைப்பதற்கு நரகலைத் தின்பது மேல்...
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

பெரும்பாலான மக்களின் உணர்வு இதுதான் என்று நினைக்கிறேன் குமார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

திருந்தாத ஜென்மம்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆதங்கம்... உங்களுடையது மட்டுமல்ல, பலருடையதும்....

நல்ல பகிர்வு.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இந்த ஆதங்கம்பெரும்பாலான தமிழ் மக்களின் ஆதங்கமும் கூட ....என்றுதான் தெரிகிறது...

அருமை..குமார்

கீதா

நிஷா சொன்னது…

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்