மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

சினிமா : 'மக்கா கலக்கலப்பா' தர்மதுரை

ருத்துவம் படித்து கிராமத்து ஜனங்களுக்குத்தான் வைத்தியம் பார்ப்பேன் என்ற கொள்கை உடைய தர்மதுரை (விஜய் சேதுபதி), அரசு மருத்துவமனையில் பணி புரியும் போது தமிழ்ச்செல்வியை (ஐஸ்வர்யா) சந்தித்து, பிறருக்கும் உதவி செய்யும் குணமும் வெள்ளந்தியான பேச்சும் கவர, அவள் மீது காதலாகி, வீட்டில் சொல்லி பெண் பார்த்து நிச்சயம் பண்ணிய பிறகு, அவள் ஏழைக்குடும்பம் என்பதாலேயே வட்டிக்கு கொடுத்து... ஏலச்சீட்டு நடத்தி ஊருக்குள் பொழப்பு நடத்தும் விஜய் சேதுபதியின் சகோதரர்கள் ஐம்பது பவுனும் அஞ்சு லெட்சமும் வரதட்சணையாக கேட்டு மிரட்ட, அது ஐஸ்வர்யாவின் தற்கொலையில் முடிகிறது. அவர்களைப் பலி வாங்குவேன்... விஷத்தைக் குடித்து சாகும் வரைக்கும் விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டு மருத்துவத் தொழிலை மறந்து குடிகாரனாகி... உடன்பிறப்புக்களுக்கு எதிராகி... அடிவாங்கி... அறைக்குள் அடைத்து வைக்கப்படும் வி.சே அங்கிருந்து தப்பும் போது காட்சிகள் விரிகின்றன. 

Image result for தர்மதுரை

படம் ஆரம்பிப்பது குடிகார வி.சேயின் அடாவடி காட்சிகளில்தான்... அதைத் தொடர்ந்து சீயானின் இறப்பில் ஒரு குத்துப் பாட்டு... மக்க கலங்குதப்பா... குத்துன்னா குத்து செம குத்து... வி.சேக்கு சொல்லவா வேண்டும்... சிக்ஸர் அடித்திருக்கிறார்.

வீட்டிலிருந்து தப்பிச் செல்லும் வி.சே... தவறுதலாக ஏலச்சீட்டு பணம் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட, ஊரில் பூகம்பம் வெடிக்கிறது. அதன் பின் அவரின் சகோதரர்கள் போலீஸில் இருந்து சஸ்பெண்ட் ஆன சித்தப்பாவுடன் சேர்ந்து கஞ்சாக் கருப்பையும் பிடித்து வைத்துக் கொண்டு தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள். ஆனால் கல்லூரி வரை தேடிச் செல்லும் அதன்பின்  தேடுதலை விட்டுவிட்டு போலீசுக்கு போகிறார்கள்.

கல்லூரி வாழ்க்கை, கிராமத்துக் காதல், தமன்னாவுடனான வாழ்க்கை என்று மூன்று கட்டமாக நகரும் கதையின் ஆரம்பம் இரண்டாவது கட்டத்தின் இறுதி என்றாலும் ஊரை விட்டு ஓடும் வி.சே,  பேருந்தில் பயணிக்கும் போது சொல்வதாய் விரிகிறது மதுரை மருத்துவக் கல்லூரி வாழ்க்கை... அவர் செல்லமாக அழைக்கும் பக்கிகளாக தமன்னா, சிருஷ்டி டாங்கே... மாணவர்கள் விரும்பும் பேராசிரியர் காமராஜாக ராஜேஸ்... எதிர்த்துக் கொண்டு நிற்கும் சக மாணவன் அன்வர்,.. அவர்களுக்குள் அடிதடி.. வி.சேயை விரும்பும் சிருஷ்டி... தன் காதலை மறைத்து வைத்திருக்கும் தமன்னா... என கதை விரிகிறது... இது இடைவேளை நீள்கிறது.

கல்லூரிக்கு வந்து அங்கு தோழியரின் முகவரி வாங்கி அவர்களைத் தேடிச் செல்ல, சிருஷ்டியின் வீட்டில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதிலிருந்து மீண்டு அங்கிருந்து தமன்னாவைத் தேடிச் செல்ல, குடிகாரனாய் வி.சேயைப் பார்த்து வருந்தி யாருமில்லாத தன்னுடன் தங்க வைத்திருக்கிறார்.

தமன்னாவிடம் சொல்வதாய் நகர்கிறது கிராமத்து வாழ்வும்... ஐஸ்வர்யாவுடனான காதலும்... நிச்சயிக்கப்பட்ட திருமணம்... சகோதரர்களின் வரதட்சணை ஆசை... காதலியின் மறைவு... என எல்லாம் சொல்கிறார்.

Image result for தர்மதுரை ஐஸ்வர்யா

குடியில் இருந்து அவரை மீட்டெடுத்து மீண்டும் மனிதராக்கும் தமன்னாவுடனான வாழ்க்கை கதையின் இறுதிப் பகுதியாக நகர்கிறது. பெங்களூரில் இருக்கிறான் என்று சொன்ன கணவன், உண்மையில் அவளுடன் சேர்ந்து வாழவில்லை என்பதும் இருவரும் விவாகரத்துக்காக காத்திருக்கிறார்கள் என்பதும்  விவாகரத்து கிடைத்த அன்று தமன்னாவுடன் நீதிமன்றத்துக்குச் செல்லும் போதுதான் தெரிகிறது. அங்கு தன் முன்னாள் கணவரிடம் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதாகச் சொல்வதுடன், விவாகரத்துக்கான காரணத்தையும் வி.சேயிடம் சொல்கிறார். அவனின் கேடுகெட்ட செயலை அறிந்து துடிக்கும் வி.சே நீதிமன்ற வளாகத்தில் வைத்து முன்னாள் கணவனை அடித்து உதைக்கிறார்.

'காலேஜ்ல படிக்கும் போது என்னை விரும்பினாய்தானே..?' என்று கேட்கும் போது ஒரு புன்னகையில் மறைத்து நகர்ந்தாலும்... 'உன்னை நான் தமிழ்ச்செல்வியாக பார்க்கிறேன்' என்று சொன்னபோது அங்கிருந்து ஒரு பதட்டத்துடன் நகரும் தமன்னா, அன்று இரவு படுக்கையை பகிர்ந்து கொண்ட பின்னர் 'இப்பத்தான்டா ரொம்ப பாதுகாப்பா உணர்றேன்' என்று சொல்லுமிடத்தில் அவர்களின் காதல் வாழ்கிறது. இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து கொண்டே சின்ன கிளினிக் ஆரம்பித்து சந்தோஷமாக நாட்களை நகர்த்த, அவர்களைத் தேடி வரும் கண் தெரியாத காமராஜ் ஆசிரியர், சேர்ந்து வாழ்வதென்பது நம் கலாச்சாரத்துக்கு சரியானது அல்ல என்று சொல்லி, விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்கிறார். 

அவர்களுடன் படித்த ஒருவன் புரபஸர் காமராஜ் நம்பர் கொடுத்தார் என போன் செய்து, திருமணம் செய்து கொள்ள இருப்பதற்கு வாழ்த்து தெரிவித்து, வி.சே பணத்தை எடுத்துக் கொண்டு வந்ததையும்... அவரின் சகோதரர்கள் தேடி அலைவதையும் சொல்ல, தமன்னா அது குறித்துக் கேட்க, அப்போதுதான் வி.சே விவரம் தெரிய வருகிறது. யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று சொல்லுபவரிடம் நீதான் போகணும்... நான் நல்லாயிருக்கேன்னு அவங்களுக்கு காட்டணும்... உன் அம்மாவை இங்க கூட்டியாரணும்... நம்ம குழந்தையை அவங்க கையில கொடுக்கணுமின்னு நினைக்கிறேன் என்று அனுப்பி வைக்கிறார்... அங்கு சென்ற வி.சேக்கு நடந்தது என்ன..? மீண்டும் திரும்பி தமன்னாவிடம் வந்தாரா...? என்பதே படத்தின் முடிவு.

கன்னங்குழி விழ சிரிக்கும் சிருஷ்டியும்... கண்களாலேயே பேசும் ஐஸ்வர்யாவும் அடித்து ஆடியிருக்கிறார்கள் என்று சந்தோஷம் படும் நேரத்தில் அனாயாசமான நடிப்பால் அவர்களை பின் தள்ளி முன்னே நிற்பவர் தமன்னா... பாந்தமான பண்பட்ட நடிப்பு... அவரின் கதாபாத்திரம் எல்லாருக்கும் நிச்சயம் பிடித்துப் போகும்.

மகனுக்காக வருந்தும் தாய் ராதிகா, எங்கே பசும்பொன் ராதிகா ஆகிடுவாரோன்னு பயப்பட வைத்தாலும் மகனை கொல்வதற்காக ஏற்பாடு செய்கிறார்கள் என்பதை அறிந்து அவன் தப்பிச் செல்ல இட்லிக்குள் சிறிய ரம்பத்தை வைத்துக் கொடுத்து தப்ப வைக்கும் போதும்... பணத்தை எடுத்தது தர்மதுரைதான் அவன் மீது எப்ப.ஐ.ஆர். போடுங்க என்று மகன்கள் சொல்லுமிடத்தில் போலீஸ் ஸ்டேசனில் சும்மா அடிச்சி ஆடும்போதும் அருமையான ஆத்தாதான்னு நிரூபிச்சிட்டாரு.

கம்பவுண்டராக கஞ்சா கருப்பு, வி.சேயுடன் அவருக்கு முதல் படம்ன்னு நினைக்கிறேன். வி.சேயுடன் அவர் அடிக்கும் லூட்டியை விட, அவரைத் தேடிச் செல்லும் சகோதரர்களிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் காட்சிகள் செம... மக்கா கலங்குதப்பா பாட்டில் சார் அது கரண்ட் பில் கட்ட வச்சிருந்த காசு என பாவாடையைக் கட்டிக்கொண்டு சொல்லியபடி வந்து நிறைவாய் செய்திருக்கிறார். அக்காவின் கணவராக வீட்டோட மாப்பிள்ளையாக வரும் அந்த கட்டை மனிதர் நல்லா நடித்திருக்கிறார். அக்கா, அண்ணன், தம்பிகள் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். மந்திரம் போடுகிறேன் என்று சொல்லி ஜீபூம்பா பண்ணும் அக்கா மகள் கலக்கல்.

பாடல்கள் வைரமுத்து... இசை யுவன் சங்கர் ராஜா... பாடல்களும் பின்னணி இசையும் கலக்கல். ஆண்டிப்பட்டி கணவாய்... கிராமத்து மெலோடி. பாடலும் காட்சிப்படுத்தப்பட்ட இடங்களும் அழகு. கேமரா தேனியின் அழகை உள்வாங்கி இருப்பதுடன் ஊட்டியிலும் அழகாய் பயணித்திருக்கிறது.

விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குநர் சீனு இராமசாமி இயக்கியிருக்கிறார். தாரை தப்பட்டையில் வில்லான வந்து கலக்கிய சுரேஷ் தயாரித்திருக்கிறார். குத்துப்பாட்டில் ஒரு குத்தும் போட்டுப் போகிறார்.

Image result for தர்மதுரை


ஐஸ்வர்யாவைக் கொன்றார்கள் ஓகே... ஏற்றுக் கொள்ளலாம்... கதையை நகர்த்த ஒரு முடிச்சு வேண்டுமல்லாவா... ஆனால் சிருஷ்டியை எதற்காக...? வி.சேயை சிருஷ்டி காதலிப்பது எதற்காக...? என் வீட்டில் வந்து பேசுன்னு சொல்றதோட போவதற்குப் பெயர் காதலா...? அப்புறம் எதற்காக தண்ணி போட்டு விட்டு அந்த அலம்பல் எல்லாம்...? தான் காதலிக்கும் ஒருவனின் தொடர்பு எண் இல்லாமல் போகுமா..? சிருஷ்டியை தோழியாகவே காட்டியிருக்கலாமே...ஏன் காதல் போர்வை..? சாதாரண கல்லூரிகளிலேயே ஆட்டோகிராப் எல்லாம் இருக்கும் போது... மருத்துவக் கல்லூரியில் அப்படியெல்லாம் இல்லையா என்ன...?  சிருஷ்டி காதலிப்பதாய்ச் சொன்னதால்தான் தமன்னா சொல்லாமல் நெஞ்சுக்குள் பூட்டி வைக்கிறாரோ...? மனதில் நினைத்தவனுடன் வாழத்தான் கணவனை கெட்டவன் ஆக்கிவிட்டார்களோ...? இந்தக் காலத்தில் அதுவும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போன், இணையம் என எதிலும் தொடர்பில் இல்லாமலா இருப்பார்கள்..? எட்டு லட்சத்தை பேக்கில் வைத்துக் கொண்டு போனவன் அதை எடுத்துப் பார்க்கவே இல்லையா...? மெடிக்கல் புத்தகம் என்றல்லவா நினைத்தேன் என்று இறுதியில் சொல்வதாய் ஒரு வசனம்... சரிதான்... கொண்டு வந்த மெடிக்கல் புத்தகத்தையும் எடுத்துப் பார்க்கவே இல்லையா...? என ஆயிரத்தெட்டு கேள்விகளை எழுப்பாமல் இல்லை... அது எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளி வி.சே - தமன்னா இணைந்து வாழ ஆரம்பிக்கும் இடைவேளைக்குப் பின்னர் விரியும் காட்சிகளால் அதுவரை தத்தளித்த படகு... கவிழாமல் ஆழ் கடலுக்குள் அழகாய் பயணித்திருக்கிறது.

மெடிக்கல் கல்லூரி காட்சிகள் அதிக நீளமாக இருந்தாலும்... சின்னச் சின்ன சொதப்பல்கள் இருந்தாலும்... இடைவேளை பின்னான காட்சிகளால் தர்மதுரை ஜெயித்திருக்கிறது.  அன்வர் எதிரியாய் வருவானோ என்று பயம் இருந்தது என்னவோ உண்மை... காரணம் கதாபாத்திரத்தின் பெயர்தான்... கண்டிப்பாக வில்லனாக்கி வேடிக்கை பார்ப்பார்கள்தானே... ஆனால் இதில் அவன் வி.சேக்கு உதவி செய்கிறான்... அதுவும் மிகவும் முக்கியமான உதவி... அதேபோல் முனியாண்டி காமராஜ்மேல் உள்ள பற்றுதலால் பேரை காமராஜ் என்று வைத்துக் கொண்டது... தண்டட்டி போட்ட கிழவிகள் ஆட்டெழும்பை கடித்து இழுப்பது... சேர்ந்து வாழ்தல் நம் பண்பாடு இல்லை என்பதைச் சொன்னது என பல இடங்களில் இயக்குநரைப் பாராட்டலாம். மதுரையை மையமாகக் கொண்ட கதை அடி தடி வெட்டுக்குத்து என்றில்லாமல் மதுரையின் மணத்தோடு ஊட்டிக் குளிரில் இதமாய்ப் பயணிக்கிறது.

சீனு ராமசாமியும் வி.சேயும் இணையும் மூணாவது படம்... மிக அருமையாக செய்திருக்கிறார்கள்... வைரமுத்துவின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை கலக்கல்.  சுகுமாரின் கேமரா கவிதையாய் நகர்கிறது.

மக்க கலங்குதப்பா செம குத்து என்றால் ஆண்டிப்பட்டி கணவாய் சோ சுவீட் மெலோடி... செம... தினமும் நாலைந்து முறை ஓடிக் கொண்டிருக்கிறது செல்பேசி திரையில்... நீங்களும் கேளுங்க...


-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

இப்பதான் சேதுபதி பார்த்தேன். விஜய் சேதுபதியை நானும் ரசிப்பேன். இந்தப் படம் பார்க்கக் கொஞ்ச நாட்கள் ஆகும்! வைரமுத்து - யுவன் சங்கர்! அப்பா சேரமாட்டார் என்றாலும் மகன் சேர்ந்து விட்டார் போல!

Unknown சொன்னது…

Kathai ivvalavu virivaga sonnal suvarasiyam poi vidume sir!

Unknown சொன்னது…

தர்'மதுரை ' என்பதால் பார்த்து ரசிக்கத் தோன்றுகிறது :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு பகிர்வு. பாராட்டுகள்.

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//ஐஸ்வர்யாவைக் கொன்றார்கள் ஓகே... ஏற்றுக் கொள்ளலாம்... கதையை நகர்த்த ஒரு முடிச்சு வேண்டுமல்லாவா... ஆனால் சிருஷ்டியை எதற்காக...? வி.சேயை சிருஷ்டி காதலிப்பது எதற்காக...? //


http://kanavukale.blogspot.com/2016/09/blog-post_4.html

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் நண்பரே...

ஆமாம்... எப்பவும் இப்படி எழுதுவதில்லை...
என்னவோ இந்தப் படத்தின் கதையைச் சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் எழுதியாச்சு.... மற்ற விமர்சனங்களில் சொல்வதில்லை...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஜி...
தர்'மதுரை' மட்டுமல்ல தர்ம'துரை'...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

உங்கள் தளம் திறப்பதில் பிரச்சினை இருக்கிறது நண்பரே...
எனக்கு மட்டும்தானா மற்றவர்களுக்குமா தெரியவில்லை...