மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

மனசின் பக்கம் : ஆனந்த யாழை யார் மீட்டுவது..?

ன்று மாலை அலுவலகம் முடிந்து அறைக்கு வந்தவுடன் அறிந்த செய்தி மிகுந்த வேதனையைக் கொடுத்தது.... கவிஞர். நா. முத்துக்குமார் மரணம் அடைந்து விட்டார் என்பதே அந்தச் செய்தி...  அவர் பதிவுகளைத் தாங்கிய முகநூலில் வலம் வந்தபோது கண்ணீர் எட்டிப்பார்த்ததை தடுக்க முடியவில்லை... சினிமாக் கவிஞர்களில் பழனிபாரதி, நா.முத்துக்குமார் என சில ஆளுமைகளின் கவிதை வரிகளுக்கு வாசகன் நான்.... அப்படி என்ன வயதாகிவிட்டது அந்தக் கவிஞனுக்கு...  எட்டு வயதில் ஒரு பையன்... ஒன்பது மாதத்தில் ஒரு பெண் குழந்தை... இந்தத் தகப்பனை அழைத்துக் கொள்ள காலனுக்கு எப்படி மனது வந்தது..?. பாரதி, பட்டுக்கோட்டை என்ற அழியாக் கவிஞர்களின் வரிசையில் இவனையும் விரைந்து கூட்டிக் கொண்டு விட்டானாம்... என்ன கொடுமை இது... திரை இசையில் தமிழ் ராகம் வாசித்த கவிஞன்... காசுக்கு விலை போகாதவன் என்ற பெயரும் இவனுக்கு உண்டு... காலன் இலவசமாகவே பெற்றுச் சென்று விட்டானே.... அவனின் கவிதைகள் உலகம் இருக்கும் வரை வாழும் என்று சொல்லி நம்மைத் தேற்றிக் கொள்ளலாம்... அவன் இருந்திருந்தால் இன்னும் நிறையக் கவிதைகளை தமிழ்த்தாயும் பார்த்திருப்பாள்... நானும் ரசித்திருப்போம்... அவனின் அன்பின் அந்தக் குடும்பமும் சந்தோஷித்திருக்குமே... அதை ஏன் கெடுத்தாய் இறைவா....

சென்ற எனது ஆயிரமாவது பதிவில் கீழே இருக்கும் வரிகளைச் சொல்லியிருந்தேன்... 

//வலைப்பக்கம் மொய்க்கு மொய்தானேய்யா... நானும் மொய் வைக்கலை... மற்றவர்களும் மொய் வைக்கலை... 

அது சரி... அது சரி...  வலைப்பூ உலகை தப்பாச் சொல்றே...

அட தப்பாச் சொல்லலை... யாரைக் கேட்டாலும் இது உண்மையின்னு சொல்வாங்க... ஏதோ மன திருப்திக்கு எழுதுறோம்... பல பேர் எழுதுறதில்லை தெரியுமா? ஆரம்பத்துல டுவெண்டி 20 ஆடின வலையுலகம் இப்போ டெஸ்ட் மேட்ச் ஆடிக்கிட்டு இருக்கு...//

இதற்கு நண்பர் பகவான்ஜி அவர்களின் கருத்து கீழே...

நாம் எழுதுவதே பலருக்கும் சென்று சேர வேண்டும் என்பதால்தான் , மனத் திருப்திக்காக என்றால் , வலைப்பூ , திரட்டிகள் தேவையில்லையே? எதிர்மறையான உங்களின் கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டு எல்லோரையும் ஆதரியுங்கள் , இன்னும் நல்லா வருவீங்க :)

இதற்குப் பதிலை நான் அங்கேயே சொல்லியிருக்கலாம்... நண்பரைப் போல் பலரின் மனசுக்குள் இந்த வரிகள் கேள்வி எழுப்பியிருக்கலாம்... நண்பர் அதை நேரிடையாகச் சொன்னதற்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை நிறையப் பேரை வாசிப்பேன்... யாரும் எனது தளம் வர வேண்டும் என்று இன்று வரை நினைத்ததில்லை... ஏன் பகவான்ஜி கூட என் தளத்திற்கு எல்லாப் பதிவுக்கும் வருவதில்லை... ஒரு சிலரிடம் உரிமையுடன் சண்டையிட்டிருப்பேன்...  மற்றவர்களின் வரவை எதிர்பார்த்து எழுதுவதில்லை... அவர் சொல்லியது போல் மனதிருப்திக்காகத்தான் என் எழுத்து... குடும்பத்தைப் பிரிந்த வெளிநாட்டு வாழ்க்கை, நசுக்கி எடுக்கும் வேலைப் பளு, ஒரு சிறிய அறையில் நாலு நண்பர்களோடு வாழ்க்கை... வாழ்க்கைப் பாதையில் பட்ட வலிகளும் அவமானங்களும் என எல்லாத்தையும் மாற்றத்தான் என் எழுத்தை நான் சுவாசிக்கிறேன். 

நண்பரே... நான் வாசிக்கும் பலரின் பக்கங்களின் என் கருத்துரை மட்டுமே இருக்கும் என்பதை தாங்கள் அறிய வாய்ப்பில்லை.... பெரும்பாலான தளங்களில் எனக்கு முன்னே தனபாலன் அண்ணா இருப்பார்... இப்போது அவர் வேலைப் பளுவின் காரணமாக வலையில் வலம் வருவதில்லை... அதனாலேயே புதியவர்கள் பலரை அறிய முடியவில்லை... மற்றபடி என்னிடம் எதிர்மறையான கருத்து இல்லை... இதுதான் இன்றைய வலையுலக உண்மை... பலரைப் பார்த்து விட்டேன்... இதைச் சொல்ல வருத்தப்படவில்லை.... ஊரிலிருந்து வந்தது முதல் சிலபல வேலைகள் மற்றும் பிரச்சினைகளால் அதிகம் வலையில் வரவில்லை... வெள்ளிக்கிழமை மட்டுமே கருத்து இட முடிகிறது... மன ஓட்டத்தில் நிறைய தடுமாற்றங்கள்... அதனாலேயே வாசிப்பில் இறங்கியிருக்கிறேன்... எல்லாரையும் வாசிக்கிறேன்... அவர்களை ஆதரிப்பதால் இன்னும் நல்லா வருவீங்கன்னு சொல்றது.... வாழ்க்கையிலா...? எழுத்திலா...? அந்த வரிகள் எதற்கானவை என்பது எனக்குத் தெரியவில்லை... :)

தங்கள் கருத்துக்கு மீண்டும் நன்றி... மனதில் உள்ளதைச் சொன்னதற்கு நன்றி... 

'நெருஞ்சியும் குறிஞ்சியும்' அப்படின்னு ஒரு  தொடர்கதை 16 பாகங்கள் எழுதியிருந்தேன்... ஞாபகம் இருக்கா உறவுகளே... அதை மீண்டும் தூசி தட்டி ஆரம்பிக்கலாம்ன்னு அடுத்த பகுதி எழுதி இன்று பதிவிடலாம்ன்னு இருந்தேன். கவிஞர் நா.முத்துக்குமாரின் இழப்பும்... ஊரில் மனைவியின் உடல் நலம் சரியில்லாத நிலையும் அதை எழுதும் எண்ணத்தை என்னுள் இருந்து தூக்கி எறிந்து விட்டது. சில பல பிரச்சினைகள் கொஞ்சம் குறையும் பட்சத்தில் வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் தொடர்கதையை தொடரலாம் என்று இருக்கிறேன்... பார்க்கலாம்... ஒரு சிலரின் கருத்துக்களைத் தனிப்பட்ட முறையில் தெரிந்து கொண்ட பிறகு தொடர்கிறேன்...

நா.முத்துக்குமாரின் வரிகளை கேட்டபடி இன்று கரைந்து கொண்டிருக்கிறது...


கவிஞனே உன் ஆத்மா சாந்தியடையட்டும்...

ஆனந்த யாழை இனி யார் மீட்டுவது...?
காலத்தை வெல்லும் பாடல்கள் கொடுத்தவனே...
காலனை வெல்ல முடியாமல் போனதேனோ..?

பாரதி... பட்டுக்கோட்டை போல்
இந்தக் குமரனையும் காலன் கூட்டிக் கொண்டானாம்...
இதில் பெருமை என்ன இருக்கு...

என்ன கொடுமை...
பிஞ்சுக் குழந்தைகளின் 
முகம் பார்த்து மனம் மாறவில்லையே காலன்...

ஆழ்ந்த வருத்தத்துடனும் இரங்கலுடன்...
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

கவிஞரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ):

எனக்காக ஒரு பதிவையே போட்ட மாதிரி உள்ளது ....நான் எதுவும் தப்பாய் சொல்லியிருந்தால் மன்னித்து விடுங்கள் !
உங்கள் கஷ்டம் எனக்கு புரிகிறது ,வலையுலக மூத்தவரான உங்களின் ஆக்கம் பல பேரை சென்று சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் 'நல்லா வருவீங்க 'என்று சொன்னேனே தவிர வேறு காரணமில்லை .
உதாரணமாய்,முந்தைய உங்கள் பதிவுக்கு த ம ஆறு வாக்குகள் விழுந்துள்ளது .இன்னும் ஒரு வாக்கு கிடைத்து இருந்தால் ,உங்கள் எழுத்து இன்னும் பலரை சென்று அடையுமே !இந்த வாய்ப்பை ஏன் இழக்கிறீர்கள் என்று புரியவில்லை !
#என்ன தோணுதோ அதைச் சொல்லுங்க... என் எழுத்தின் வளர்ச்சிக்கு அது உதவியாய் இருக்கும்....#என் மனதில் பட்டதை சொல்லி விட்டேன் :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆனந்த யாழை மீட்டியவ்ன் இன்று நம்மோடு இல்லை..... என்ன சொல்வது. இத்தனை அவசரம் வேண்டாம் காலனுக்கு.....

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.....

தொடர்ந்து எழுதுங்கள் குமார். நான் படிக்கும் பல வலைப்பூக்களில் எழுதுபவர்கள் பலரும் எனது பதிவுகளை படிப்பது இல்லை. அப்படி படித்தாலும் கருத்துகள் எழுதுவதில்லை. ஆனாலும் நான் தொடர்ந்து, நான் தொடரும் அனைவருடைய பதிவுகளையும் படித்து, முடிந்த வரை தமிழ்மண வாக்கும் வந்ததற்கான அடையாளத்தையும் விட்டுச் செல்கிறேன். அவர்கள் வருகிறார்களோ, இல்லையோ, நமக்கு எழுதப் பிடித்திருக்கிறது. பிடித்த வரை எழுதுவோம்.....

ஸ்ரீராம். சொன்னது…

முத்துக்குமாரின் மரணம் அதிர்ச்சியான விஷயம்தான். சிறுவயதிலேயே நேரும் இழப்பு மனதுக்கு வேதனையைத் தரும். அவர் பாடல்களில் ஒன்று என்று எல்லோரும் குறிப்பிடுவது இந்த 'ஆனந்த யாழை' பாடலைத்தான்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஜி....
இது உங்களுக்கான பதிவு அல்ல... தாங்கள் நேரிடையாகச் சொன்னதால் அதை மேற்கோள் காட்ட வேண்டியிருந்தது... பலர் கேட்க்கும் கேள்வி இது...

வலையுலகில் நான் மூத்தவரெல்லாம் கிடையாது... ஏதோ கிறுக்குகிறேன் அவ்வளவே....

நான் திரட்டிகள் சிலவற்றில் இணைப்பதுடன் சரி... அதன் பிறகு அதுபற்றி சிந்திப்பதில்லை... தற்போது பல பதிவுகளை தமிழ்மணம் தவிர மற்ற திரட்டிகளில் இணைப்பதும் இல்லை...

தமிழ்மணம் வாக்கு குறித்து எப்பவும் கவலை கொண்டதில்லை... என்னால் பலருக்கு வாக்கும் அளிக்க முடிவதில்லை... காரணம் தெரியவில்லை.... நீண்ட நேரம் சுற்றிக் கொண்டே இருக்கும்...

உங்க மனதில் பட்டதைச் சொன்னீர்கள்... நான் என் மனதில் உள்ளதை எழுதினேன் அவ்வளவே...

தாங்கள் தப்பாக எதுவும் சொல்லவில்லை.... வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்ற வார்த்தைக்கு காரணம் என்ன என்றே கேட்டேன்...

மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை ஜி... அதெல்லாம் நமக்கெதுக்கு... என்ன தவறு செய்தோம் மன்னிப்புக்கு கேட்கவும்... மன்னிப்பு அளிக்கவும்...

தங்கள் அன்பிற்கு நன்றி....

மீண்டும் சொல்கிறேன் இது பலருக்கான பதிவு... அதில் பகவான்ஜி சென்ற பதிவின் கருத்தாய்ச் சொன்னதால் இங்கு சொல்ல வேண்டியதாகிவிட்டது....

எப்பவும் போல் நட்பாய் இருப்போம் ஜி.... நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...

முத்துக்குமார் அவர்களின் மரணம் வேதனையான விஷயம்....

நானும் எல்லாருடைய பதிவுகளையும் வாசித்துவிடுவேன்... முடிந்தவரை கருத்து இட்டு விடுவேன்.... தமிழ்மண வாக்கு அளிப்பதில் பிரச்சினை உண்டு... அதனால் பலருக்கு வாக்களிப்பதில்லை....

ஆம் அண்ணா பிடித்தவரை எழுதுவோம்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வேதனைக்குரிய விஷயம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்புக் கவிஞனின் ஆத்மா சாந்தியடையட்டும்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நான் படிக்கும் பதிவுகளில் உங்களின் பதிவும் ஒன்று. தொடர்ந்து எழுதுங்கள். எழுத்து நம்மை மேம்படுத்தும், ஆசுவாசப்படுத்தும், சுகம் தரும்.

S.P.SENTHIL KUMAR சொன்னது…

எழுதுங்கள் குமார் வெளிநாட்டில் குடும்பத்தை பிரிந்து இருக்கும் வேதனையை இந்த எழுத்து மூலமே ஓரளவு போக்கமுடியும். வலையுலகம் நீங்கள் சொல்வதுபோல்தான் இருக்கிறது.

முத்துக்குமார் பற்றிய வரிகள் மனதை தைத்தது.
த ம 5

KILLERGEE Devakottai சொன்னது…

OK
From Mobile

சாரதா சமையல் சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

முத்துக்குமாரின் மரணம் பெரிய அதிர்ச்சி! உடல்நிலை, மனநிலை, தவிர என்னுடைய ரிலையன்ஸ் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நிறைய பேரின் வலைப்பக்கம் வர முடியவில்லை! திருப்திக்காகத்தான் எழுதுகிறோம் என்றாலும் நம்முடைய பதிவை படித்து கருத்து சொல்லும் ஒருவர் திடீரென்று வராமல் போனால் வருத்தம் மேலிடுகிறது. நாம் போகாதது காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. நேரம் கிடைக்கையில் நான் விரும்பும் பதிவர்களின் படைப்புக்களை வாசித்துவிடுவேன்! நன்றி!

Yarlpavanan சொன்னது…

'அழகே அழகே'

'ஆனந்தயாழை மீட்டுகிறாய்'

ஆகிய பாடல்களைக் கேட்கக் கேட்க

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள்

நம்மோடு வாழ்வதை நாம் உணருவோமே!

ஆதலால்,

ஒரு பாவலன் / கவிஞன்

சாவடைந்ததாக வரலாறு இல்லையே!

ஆயினும்

நாமும்

துயர் பகிருகிறோம்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நா முத்துக்குமாரின் மரணம் பேரதிர்ச்சி. அதுவும் இத்தனை சிறிய வயதில் கவி உலகில் ஆளுமை படைத்தவர்...என்ன சொல்ல என்று தெரியவில்லை....ஆழ்ந்த இரங்கல்கள்...

குமார் நாம் எழுதுவோம். நீங்கள் அருமையாக எழுதுகின்றீர்கள் தொடர்ந்து எழுதுங்கள். நாங்களும் இடையில் வேலைப்பளு என்று பல தளங்கள் பார்க்க முடியாமல் ஆகிவிடுகிறது. என்றாலும் வரும் போது கூடியவரை தவறவிட்ட எல்லா பதிவுகளையும் வாசித்துவிடுவது உண்டு. எழுதுங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.