மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 10 ஆகஸ்ட், 2013

மழைக்காளான்

சொல்வனத்தில் எனது சிறுகதை முதல் முறையாக வெளியாகியிருக்கிறது. சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

சொல்வனத்தில் 'மழைக்காளான்' படிக்க இங்கேhttp://solvanam.com/?p=28211 சொடுக்குங்கள்... 

-------------------------

rain-village
ரண்டு நாட்களாக விடாது பெய்யும் மழையால் ஊரே வெள்ளக்காடாக மாறியிருந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர்… கண்மாய் எல்லாம் நிரம்பி சறுக்கை வழியாக தண்ணீர் வெளியாக ஆரம்பித்துவிட்டது. இரவெல்லாம் ஊத்தோ ஊத்தென்று ஊத்திய வானம் இன்னும் வெளிவாங்கவில்லை… தூறலாக பெய்து கொண்டுதான் இருந்தது.
குளிருக்கு இதமாக கருப்பட்டி போட்ட வறக்காப்பியை குடித்தபடி “அப்பிய மாசத்து மழங்கிறது சரியாத்தான் இருக்கு… இந்த ஊத்து ஊத்துது… வெளிய தெருவ போக முடியாம… எப்பத்தான் வெளி வாங்குமோ என்னவோ… நம்ம கம்மாய் சறுக்க எடுத்துக்கிச்சுன்னு மாரிமுத்து சொன்னான். இன்னேரம் தாவுச்செய்ய மறவங்கம்மாத் தண்ணி புடிச்சிருக்கும்…” என்றார் ராமசாமி
“காபிய குடிச்சிட்டு கொடய எடுத்துக்கிட்டு வெளிய தெருவ பொயிட்டு வாங்க… வூட்டுக்குள்ளயே உக்காந்துக்கிட்டு மோட்டு வளயப் பாக்காம…” என்றாள் மாரியாயி.
“ஆமா… கொள்ளக்காட்டுப் பக்கம் போனாலும் தண்ணியாக் கெடக்கும்… இதுல எப்புடி வெளிய போறது…”
“அதுக்காக… எல்லாரும் போகாமயா இருக்காங்க… சும்மாவே நாம இருக்க இடத்துல மனுச இருக்க முடியாது… இதுல போகாமலே இருந்தா… மழ ஒண்ணும் வேகமாயில்ல… கொடயப் பிடிச்சிக்கிட்டு மெதுவா கேப்பக் கொள்ளப் பக்கமா பொயிட்டு வாங்க… “
“சரி…” என்றவர் பெரிய குடை ஒன்றை எடுத்துக் கொண்டு நடக்கலானார். ரோடெங்கும் தண்ணீர் நின்றது. அதில் மாட்டுச் சாணியெல்லாம் கரைந்து தொறுத்தொறுவெனக் கிடந்தது.
“வந்தா ஒரே அடியா ஊத்துது… இல்லயினா காயப்போடுது… சை… இப்புடியா பேயும் பேய் மழயா…” என்று மழையைத் திட்டிய ராமசாமிக்கு சின்ன வயதில் மழையில் நனைவதென்றால் பேரின்பம். நனைந்து கொண்டே வீட்டுக்கு அருகில் ஓடும் மழை நீரில் கப்பல் செய்து விட்டு விளையாடி ஆத்தாவிடம் பலமுறை அடிவாங்கியிருக்கிறார். வயதானதும் எல்லாம் வெறுப்பது போல் மழையும் அவருக்கு வெறுத்துவிட்டது போல.
சாமிக்கண்ணு வீட்டை தாண்டும் போது முத்துப்பாண்டிப்பய அவருக்கு அருகில் வந்து சைக்கிளை கட் அடித்து “தாத்தா… பாத்துப் போ… மழ பெய்யுது… வழுக்கி விழுந்துறாம…” என்று கத்தியபடி சைக்கிளை மிதித்தான்.
“டேய்… களவாணிப்பய மவனே… குண்டுங்குழியுமா ரோடெல்லாம் தண்ணியா கெடக்கு… நீ விழுந்துறாம போ… எனக்குச் சொல்ல வேண்டாம்… இது வயிரம் பாஞ்ச கட்ட….” என்று கத்தினார்.
‘ம்… சின்ன வயசுல மழயில நாமளும் இப்படித்தானே…’ என்று நினைத்தவரின் மனசுக்குள் சாரலாய் சின்ன வயது ஞாபகம் சிதற ஆரம்பித்தது.
எப்பவும் லேசா இருட்ட ஆரம்பித்தாலே கிராமத்துப் பிள்ளைங்களை போகச் சொல்ற பள்ளிக்கூடம் அது. மழை வருவது போல் இருந்த ஒரு நாள் அப்படி போகச் சொல்ல, எல்லாரும் ஓடி வெளியேறிய போது மழை பிடித்துக் கொண்டது. வழியில் இருந்த சிவகாமி ஆச்சி வீட்டு வாசலில் மழைக்கு ஒதுங்கி, லேசாக மழைவிட்டபோது ஆச்சி வீட்லயே பையைப் போட்டுட்டு தூறலில் நனைந்து கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.
வழியில் ரோட்டுக்கு மண் அணைக்கிறதுக்காக வெட்டிய இடமெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்க… இடையில் சிறுசிறு அணைகளாக இருந்தது.
“டேய் எடயில இருக்க அணய ஒடச்சுவிட்டு பாலங்கட்டி வெளாண்டுட்டுப் போகலாமுடா” என்று கனகசபையிடம் சொன்னான் ராமசாமி.
“ஆத்தாடி… எங்காத்தா நனஞ்சிக்கிட்டுப் போனா,  வெளக்குமாத்துக் கட்டயால வெளுத்துப்புடும்… நா வரலப்பா…”
“டேய் மழயில நனயிறதுல ஒரு சுகமிருக்குண்டா… வாடா… டேய் மாரி நீயாவது வாடா…”
“போடா அங்கிட்டு… அவனுக்கு வெளக்குமாறுன்னா எனக்கு உறிச்சாமட்ட… சும்மா போடா”
“யேய் செவப்பி நீயாவது வாலே… நனஞ்சுக்கிட்டே வெளாடுறதுல ஒரு சந்தோஷம் இருக்கும்ல்ல…”
“ம்க்க்கும்…போடா வட்டு மண்டயா… நீ நன… ஒன்னய எதால அடிச்சாலும் உளுத்துப்புட்டு திரிவே… நாலாம் அப்படியில்லப்பா… சரோசா, சவுந்தரம் வாங்கடி போவோம்…”
“யாரும் வர வேண்டாம்… நானே வெளாண்டுட்டு வாரேன்” என்று தலைக்குப் போட்டிருந்த பிளாஸ்டிக் கொங்காணியை கனகுவிடம் கொடுத்துவிட்டு மழையில் நனைந்தபடி தண்ணிக்குள் இறங்கினான். அவன் ஆவாரங்குச்சியை ஒடித்து அணையை உடைத்து அருகில் கிடந்த உடைந்த செங்கலை எடுத்து வந்து அடுக்கி, அதன் மேல் செம்மண்ணை அள்ளி வைத்து பாலம் கட்டி விளையாட ஆரம்பிக்க… ஒவ்வொருவராய் தண்ணீருக்குள் இறங்கி வழி நெடுகிலும் பாலம் கட்டிய படி தெப்பலாக நனைந்தனர். “இன்னக்கி இருக்குடி உங்களுக்கு…” என்ற செவப்பியின் கையில் அவர்களது கொங்காணி இருந்தது.
‘ம்… அது ஒரு காலம்… ‘ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவர் கண்மாய் கரையில் ஏறி நீர் மட்டம் பார்த்து “அப்பா… இந்த வருசம் வெளஞ்சிடும்” என்றபடி நடக்கலானார்.
மேகம் மீண்டும் இருட்ட ஆரம்பிக்க மழையின் வேகம் கூடியது.
அவரைக் கடந்து சென்ற பக்கத்து ஊர் பால்காரப் பெண்கள், “பாத்துப் போங்கய்யா… செருப்பில்லாம் போறீங்க… காத்துல முள்ளெல்லாம் இழுத்துப் போட்டுக்கிடக்கு…” என்று சொல்லி அவர்களது பேச்சை தொடர்ந்தனர்.
'தேவானை மவ செவப்பி இருக்காளே…' என ஒருத்தி ஆரம்பிக்க, செவப்பிங்கிற பேரைக் கேட்டதும் மீண்டும் பின்னோக்கி பயணிக்கலானார்.
அன்னைக்கும் இதே மாதிரி மழைக்காலந்தான். சனி மூலையில இருட்டிக்கிட்டு கடமுடான்னு உருட்டிக்கிட்டு இருந்துச்சு. கனகுவோட ஆட்டுக் கசாலைக்கிட்ட மாட விட்டுட்டு உக்காந்து இருந்த ராமசாமி, செவப்பி சைக்கிளில் வரவும், வேக வேகமாக ரோட்டுக்கு வந்து அவளை மறித்தான்.
“என்னடா… எதுக்குடா என்னயா மறிக்கிறே…”
“இருலே போகலாம்… நம்ம செட்டுல நீ மட்டுந்தான் படிக்கிறே…”
“அதுக்கென்ன இப்போ…”
“உங்கிட்ட கொஞ்சம் பேசணும்… அதான்…”
“என்ன பேசணும்… வேகமா சொல்லு மழ வர்றாப்புல இருக்கு… அதுக்குள்ள வீட்டுக்குப் போகணும்…”
“அது…”
“என்ன யோசிக்கிறே… உம்முழியே சரியில்லயே…”
லேசாக தூறல் ஆரம்பித்தது. “அப்பறம் சொல்லு… மழ வருது… நா போறேன்…” என்று சைக்கிளை தள்ள முயல இறுக்கி சைக்கிளை பிடித்துக் கொண்டான்.
“நீ இப்ப போனியன்னா பெரிய மழயா வந்தா சுத்தமா நனஞ்சிருவே… ஆட்டுக் கசாலக்குள்ள நின்னுட்டு போகலாம்…”
“வேண்டாம்… நீ… நீ… சரியில்ல..”
“ஒன்னய முணுங்கிற மாட்டேன்… இந்தா காராங்காய் உனக்குப் பிடிக்குமே…”
“கராங்காய் கொடுத்து கணக்குப் பண்ணப் பாக்குறியே…”
“ஏய்.ச்சீய்… சும்மா பிகு பண்ணாமா கசாலக்கி வா…”
ஆட்டுக் கசாலைக்குள்ள கனகுவோட அப்பா படுக்க கட்டில் போட்டு சின்னதாக அடைத்து வைத்திருந்தார். மற்ற இடமெல்லாம் ஆடு அடைந்து மூத்தரமும் எருவுமாக இருந்தது. அந்த வாசமே கொடலைப் புரட்டியது.
“நாத்தமா இருக்கு… யாராவது பாத்தா நம்மள தப்பா நெனக்கப் போறாங்க…”
“எதுக்கு தப்பா நெனக்கனும்… நா மாடு மேக்கிறேன்… நீ பள்ளிடம் விட்டு வந்துருக்கே… மழ வாறதால நிக்கிறோம்… அம்புட்டுத்தான்…”
“சரி என்ன சொல்லணும்…”
“நா… நா… உன்னைய கட்டிக்கணும் புள்ள…”
“அட இங்க பாருடா எருவ மாடு மேய்க்கிறவருக்கு காதலாம்… நீ ஜெமினிகணேசன் படத்துக்காப் போகயிலயே நெனச்சேன்…”
“உண்மதாம்புள்ள… நீயின்னா எனக்கு உசிரு… “
“சும்மா போடா… காதலாவது… மண்ணாவது…”
“அடி உண்மதான்டி… நா மனசுக்குள்ள நீதான் எம்பொண்டாட்டின்னு நெனச்சு வச்சிருக்கிறேன்… ம்… இந்தா மாங்காய் சாப்பிடு…”
“இது எதுக்கு காதல் பரிசா… காராங்காய்… மாங்காயின்னு கடயே வச்சிருக்கே…”
"கொடுத்தா தின்னு கேள்வி கேக்காம..."
“சரி… மழ வாற மாதிரி தெரியல… நாங் கெளம்புறேன்…”
“நாங் கேட்டதுக்கு பதிலேக் காணும்…”
“ம்… மாங்கா இனிக்குதுடா… முண்டம்” என்று சிரித்தபடி ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சைக்கிளை எடுத்தாள்.
அவள் அங்கிருந்து சென்ற சில நிமிடத்தில் வானம் பொத்துக்கிட்டு ஊத்த சந்தோஷமாக மழையில் நனைந்தான்.
“கிணிங்” என்ற சைக்கிள் மணியோசைக்கு சுய நினைவுக்கு வந்தவர், அடித்துப் பெய்யும் மழையில் குடையை வேறு பக்கமாக பிடித்து மழையில் நனைந்து கொண்டிருந்தார்.
“அடேய்… லூசுப்பயலே நீ இன்னும் மழயில நனயிறத விடலயா… இப்புடியே போனே உம் பொண்டாட்டி நல்லா மணத்துக்குவா…” என்றபடி கடந்து போன கனகுவின் சைக்கிளின் பின்னால் சாக்குக் கொங்காணிக்குள் தலையை மறைத்திருந்த செவப்பி கிணுங்கென சிரித்தாள்.

சொல்வனம் 09/08/2013 இதழில்...

-'பரிவை' சே.குமார்

5 எண்ணங்கள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

வட்டார வழக்கை அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள். அருமையான கதை. சொல்வனம் வெளியீட்டுக்கு வாழ்த்துகள், குமார்.

கோமதி அரசு சொன்னது…

ராமசாமி பெரியவரின் இளமைக்கால நினைவுகள் அருமை.

//அடேய்… லூசுப்பயலே நீ இன்னும் மழயில நனையிறத விடலையா… இப்புடியே போனே உம் பொண்டாட்டி நல்லா மணத்துக்குவா…” என்றபடி கடந்து போன கனகுவின் சைக்கிளின் பின்னால் சாக்குக் கொங்காணிக்குள் தலையை மறைத்திருந்த செவப்பி கிணுங்கென சிரித்தாள்.//

மலரும் நினைவில் வந்த சிவப்பி நிஜமாக வந்து இப்படி சொன்னதும் ஒரு கனமான பெருமூச்சு வந்தது நிஜம்.
மழை படங்கள் அருமை.
கதை மிக நன்றாக இருக்கிறது குமார்.

vanathy சொன்னது…

Very nice story.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அருமையான கிராமிய வாசனை மணக்கும் கதை. வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வட்டார வழக்கில் ஒரு அற்புதமான காதல் கதை......

சொல்வனத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்....

பாராட்டுகள் குமார்.