மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 25 அக்டோபர், 2012

மனிதன் : கருப்புசாமி




அவரை எனக்கு இதற்கு முன் தெரியாது. எனது உறவும் இல்லை. தினசரி எதிரெதிரே சந்திப்பவர்களை தொடர்ந்து சில நாட்கள் சந்தித்தால் முதலில் ஒரு சிறு புன்னகை... அப்புறம் மலர்ந்த சிரிப்பு... பிறகு ஒரு ஹலோ... பின்னாளில் 'எப்படியிருக்கீங்க' என ஆரம்பித்து சில நாட்கள் பார்க்காமல் போனால் எந்த பாதிப்பும் இன்றி மீண்டும் புதிதாக பார்ப்பவரிடம் ஒரு புன்னகையில் ஆரம்பிக்கும் தண்டவாளப் பயணமாப் போகும் வாழ்க்கையில் இவரை புகுத்திப் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு பந்தம்... உறவாகிப் போன நட்பு... பாசம் என்னும் வலையை பாசாங்கு காட்டி விரிக்கும் உறவுகள் எத்தனையோ இருக்க என்னில் எதுவும் எதிர் பார்க்காமல எனக்குள் புகுந்த நட்பு இது.
நான் எங்கள் கம்பெனியின் ஒரு வருட பணிக்காக அந்த அரசு அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்து மூன்று  நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் அவரைப் பார்த்தேன். நான் வேலை பார்க்கும் அலுவலகத்தின் அருகில் இருக்கும் மீட்டர் வழங்கும் பிரிவில் ஆபீஸ் பாயாக இருக்கிறார். என்னைப் போல் இவரும் வேறொரு கம்பெனியில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்தான். அவரின் கம்பெனி கொடுக்கும் சொற்ப சம்பளம் கண்டிப்பாக போதாது என்பது எல்லாருக்கும் தெரியும். ஊரில் சித்தாளாக போகும் ஒரு ஆள் ஒரு நாள் 250,300 ரூபாய் வாங்குகிறார்கள் ஆனால் இவர் வேலை பார்க்கும் கம்பெனி கொடுக்கும் ஒரு நாள் கூலி அதைவிட ரொம்ப ரொம்ப குறைவு. இவரைப் போல் நிறைய நண்பர்கள் இதுபோல் கஷ்டப்படத்தான் செய்கிறார்கள். ஊரில் பையன் துபாயில் இருக்கிறான் என்ற பெருமை மட்டும்தான் மிச்சம். இவர்களின் கண்ணீர் யாரும் அறிவதில்லை. இங்கு காலை 6 மணிக்கு வந்து மதியம் 3 மணி வரை வேலை. அதன் பிறகு இரண்டு மூன்று வீடுகளில் பகுதி நேர வேலை என எல்லாம் முடித்து அவர் தங்கியிருக்கும் இடம் செல்ல இரவு 10 மணிக்கு மேலாகும். அப்புறம்தான் துணி துவைக்கிறது, சாப்பாடு எல்லாம். இவர் மட்டுமல்ல அந்தக் கம்பெனியில் எல்லாருடைய வாழ்க்கையும் இப்படித்தான். 
வழக்கம் போல் நான் நடந்து வந்து அலுவலக கேட்டருகே வரும் போது தனது காரை நிறுத்திவிட்டு என்னுடன் பேசியபடி வந்த கேரளாவைச் சேர்ந்த அண்ணன், இவர் எதிர்படவும் என்ன சாமி... என்று மலையாளத்தில் நலம் விசாரித்தார். இவரும் மலையாளத்தில் பேசிவிட்டு எனக்கும் கை கொடுத்துச் சென்று விட்டார். மதியம் வேலை முடிந்து வெளியே வரும் போது என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தார். பின்னர் 'சேட்டா நாட்டுல எவட?' அப்படின்னு கேட்டார், நான் காரைக்குடி அறியுமான்னு கேட்டேன். நீங்க காரைக்குடியான்னு தமிழுக்கு தாவினார். நான் ஆமா என்றதும் சரியாப் போச்சு போங்க நான் மேலூருக்குப் பக்கம் என்று கைகளைப் பிடித்துக் கொண்டார். காலையில அவரு கூட வந்ததால நீங்க மலையாளியோன்னு நினைச்சேன் என்று சிநேகமாக சிரித்தார். நானும் உங்களை அப்படித்தான் நினைச்சேன் என்றேன். பிறகு சில விசாரிப்புக்கள்... அவருக்கு வண்டி வர சென்று விட்டார்.
மறுநாள் நான் வரும் போது எனக்காக காத்திருந்து கூப்பிட்டுப் பேசினார். பின்பு ஒரு சகோதரன் போல குடும்பம் விசாரிப்புக்கள்... அவரின் குடும்பக் கதைகள் எல்லாம் சொன்னார். சரி ஒரு பத்து மணி போல வாங்க என்றார். பத்து மணிக்குப் போனால் ரெண்டு பிரட் சாண்ட்விச் ரெடியாக வச்சிருந்தார். போனதும் சாப்பிடச் சொல்லி ஒரு அருமையான காபி போட்டுக் கொடுத்தார். சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கதைகள் பேசிவிட்டு கிளம்ப தினமும் வரணும் நான் சாப்பிட எதாவது ரெடி பண்ணி வைக்கிறேன் என்றார். அட போங்கண்ணே நீங்க வேற... எவனாவது பாத்துட்டு உங்காளுக்கிட்ட சொன்ன அம்புட்டுத்தான். தேவையில்லாத வேலை எதுக்கு நேரம் இருக்கும் போது வந்து பாத்துட்டுப் போறேன்.. ஆனா சாப்பிடன்னு வரமாட்டேன் என்றதும் அட சும்மா வாங்க என்றார். நான் அவரைப் பார்க்கப் போகும் போதெல்லாம் காபி, டீ, சாண்ட்விச் என எதாவது கொடுக்காமல் இருக்கமாட்டார்.
என் மனைவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது நான் அவரைப் பார்க்கவில்லை என்றாலும் போன் பண்ணி எப்படி இருக்காங்க... பேசினீங்களா என்று விசாரிக்கத் தவறமாட்டார். அவருக்கு மகன் பிறந்த போது எனக்கு போன் பண்ணி உடனே வாங்க... எனக்கு பையன் பொறந்திருக்கான் அப்படின்னு சந்தோஷமாக சொன்னார்.  முதலில் இரண்டு பெண் குழந்தைகள் மூன்றாவதாய் பையன் ரொம்ப சந்தோஷமாக இருந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு பையனுக்குப் பேர் கார்த்தின்னு வச்சாச்சு என்றார். என்ன்ண்ணே நியூமரலாஜி பாத்து வச்சிக்களா என்றதற்கு அட போங்க நீங்க வேற பிறப்புச் சான்றிதழ்ல கார்த்தின்னு கொடுத்துட்டு வேற பேர வச்சோமின்னா நாளைக்கு அவனுக்கு ரெண்டு பேரால பிரச்சினை வரும். அதுக்கு எங்க அண்ணனே சாட்சி அப்படின்னு அந்தக் கதையை வெள்ளந்தியாக சொல்ல ஆரம்பித்தார். பின்பு ஊர் நிலவரங்கள் எல்லாம் என்னிடம் பேசினார்.
இப்படியாக எனக்குள் அண்ணனாக இறங்கியவர்தான் இந்த கருப்புசாமி, வீடு கட்டுவது குறித்தும் அதில் இருக்கும் சின்ன பிரச்சினைகள் குறித்தும் என்னிடம் கேட்கத் தவறுவதில்லை. என்ன பிரச்சினை வந்தாலும் வீடு வேலை நல்லா முடியும் கவலைப் படாதீங்க அப்படின்னு தைரியம் சொல்லி நிறைய பேசுவார். எனக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருக்கும் முசிறியால் பிரச்சினை வந்தபோது அவனை விட்டுதள்ளுங்க... அவனெல்லாம் ஒரு மனுசன்னு நம்ம போக்குல போங்க என்று ஆறுதல் சொல்லி மனசை லேசாக்கினார். 
இன்று காலை அவரை சந்திக்கப் போனபோது எப்போதும் உற்சாகமாக வரவேற்ப்பவர் லேசாக சிரித்தார். என்னண்ணே வருத்தமா இருக்காப்ல இருக்கு என்ன எதுவும் பிரச்சினையா என்றேன். இல்ல ஒரு பெங்காளி வந்து ஜெராக்ஸ் கேட்டான். சரி பாவமுன்னு எடுத்துக் கொடுத்துட்டேன். அப்பன்னு பார்த்து இந்த களவாணிப் பய வந்துட்டான். (அவரு இருக்கும் அலுவலகத்தின் பெரிய ஆள் - சரியான முசுடு) யாருக்கு எடுக்குறேன்னு கேட்டான். நான் இவரு கேட்டாரு அதான்ன்னு சொன்னதும் வேணுமின்ன வேற எங்கயாவது போயி எடுக்கச் சொல்லு. இங்க எதுக்கு எடுத்துக் கொடுக்கிறேன்னு கத்திட்டான். சை ஏண்டா எடுத்தோமுன்னு ஆயிருச்சு... அப்படின்னு புலம்பினார். சரி விடுண்ணே... இதெல்லாம் ஒரு மேட்டரா என்ன அப்படின்னு சொன்னதும்... இது ஒரு வித்தியாசமான உலகம் அவனவன் அவனவன் வேலையைப் பாத்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்கணும். இங்க எவனும் எவனுக்காகவும் இறங்கிப் போகவே இல்ல எதிர்பார்த்துக்கிட்டு இருக்கவோ கூடாது அப்படின்னு சொன்னார். அப்புறம் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்திட்டு வந்தேன்.
இந்த உறவு.... எனக்கு சாப்பாடு கொடுத்தார்... எனது கஷ்டத்துக்கு மருந்தாக இருந்தார் என்று மட்டும் நினைக்க வைக்கும்  உறவல்ல... எங்கோ பிறந்து இங்கு வந்து தமிழால் மட்டுமே இணைந்த உறவு... எனக்கு ஒரு நல்ல நண்பனாக... அண்ணனாக கிடைத்த உறவு.... ரயில் சிநேகம் , பேருந்து நட்பு போல பயணிக்கும் காலத்தில் மட்டும் பாச ஊற்று ஊறாமல் இனி தொடரும் எனது காலங்களில் இவரின் நட்பும் என்னுடனே பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. டிசம்பர் வரை இந்த ஆபீஸ்.. அப்புறம் வேறு இடம் வேறு அலுவலகம்... மாறும் பயணத்தில் மறக்க முடியா சில நட்புக்கள் இருக்கும், அந்த நட்பில் கருப்புசாமி அண்ணன் என் குடும்ப நட்பாக... இல்லை உறவாக இருக்க வேண்டும். அதுவே எனது ஆசை.
கருப்பு அண்ணன் போல முகம் பார்க்காமல் அண்ணனாய்... தம்பியாய்... அக்கா... தங்கைகளாய் எத்தனை உறவுகள் எல்லாமே என்றும்  நீடிக்க வேண்டும் என்பதை நான் இறைவனிடம் கேட்கும் ஒன்று.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

தண்டவாளப் பூக்கள்



"என்னடி... ரெண்டு நாளா ஒரு மாதிரி இருக்கே... எப்பவும் இருக்க கலகலப்பு இல்லாம எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கே... பன்னெண்டு மணியானாலும் டிவியை ஆப் பண்ணாம பார்ப்பே... ரெண்டு நாளா டிவி கூட பாக்கலை... என்னாச்சுடி... என்ன பண்ணுது..."
"ஒண்ணுமில்லம்மா.... நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்..."
"சும்மா சொல்லாதடி... பெத்தவளுக்கு தெரியாத பிள்ளை நல்லாயிருக்கா இல்லையான்னு... உனக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா என்ன... எதா இருந்தாலும் சொன்னாத்தானே தெரியும்... என்னமோ ஒரு பிரச்சினை உனக்குள்ள இருக்கு.... அதான் ஒரு மாதிரி இருக்கே... என்னான்னு சொல்லுடி..."
"அய்யோ... அம்மா நான் எது மாதிரியும் இல்லை எப்பவும் போல உங்க பொண்ணு நந்தினியாத்தான் இருக்கேன்... போதுமா?"
"ஏண்டி நல்லா இருக்க பிள்ளையை ஒரு மாதிரி இருக்கேன்னு சொல்லி உடம்புக்கு நோவு வர வச்சிருவே போல... இப்ப என்ன உன்னோட பிரச்சினை... அவ டிவி பாக்கலைங்கிறதா.... உன்னைய மாதிரி நாடகங்களை கட்டிக்கிட்டு அழுகாம அவளாவது இருக்கட்டுமே... டிவி பாக்காம இருக்கது நல்லதுதானே... காலேசுக்கு கிளம்புற பிள்ளைக்கிட்ட ஏதாவது சொல்லி வருத்தப்பட வைக்காம சும்மா இரு..."
"ஆமா இவுகளுக்கு மகளை ஒரு வார்த்தை சொல்லிட்டா கோபம் பொத்துக்கிட்டு வந்திரும்... ரெண்டு நாளா அவ ஆளே நல்லாவேயில்லை.... சொல்லப் போனா என்னய கிறுக்கச்சி ஆக்கிருவீங்க.... வேலைக்குப் பொயிட்டு வந்து பாக்குற உங்களுக்கும் வீட்ல இருந்து பாக்கிற எனக்கும் வித்தியாசம் இல்லையா... சும்மா எல்லாத்துக்கும் அவளுக்கு செல்லம் கொடுக்காதீங்க... சொல்லிப்புட்டேன்..."
"இங்கபாரு அவ நல்லாத்தான் இருக்கா... அவளுக்குன்னு நாம இதுவரைக்கும் எதாவது குறை வச்சிருக்கோமா என்ன... அவளுக்கு ஒரு பிரச்சினையின்னா நமக்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறா சொல்லு... சரி நீ காலேசுக்கு கிளம்பும்மா... உங்கம்மா சும்மா நொய்  நொய்யின்னு எதாவது சொல்லிக்கிட்டே இருப்பா"
"சரிப்பா..... அம்மா பை..." என்றபடி வேகமாக ஓடினாள். இதற்கு மேல் நின்றால் அம்மாவும் அப்பாவும் அவளுக்காக சண்டையை தொடர வேண்டியிருக்கும் என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.
*****
ல்லூரிக்குள் நுழைந்த நந்தினி ஏனோ வெறுமையாக உணர்ந்தாள். மனதுக்குள் ஏதோ ஒரு உணர்வு அழுத்தத்தைக் கொடுத்தது. வகுப்பறைக்கு எப்பவும் போல் சென்றவளுக்கும் முதல் பாடவேளையே மனசு வகுப்பிற்குள் இல்லாமல் எங்கோ தனியாகப் போய் அமர்ந்து விட்டது. அதற்கு மேல் இருக்க முடியாது என்று நினைத்தவள் தோழியிடம் தலை வலிக்கிறது லேடீஸ் ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கிறேன். மேடம் கேட்டா சொல்லிடு என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். கொண்டு வந்த புத்தகதை லேடீஸ் ரூமில் வைத்துவிட்டு அதற்குப் பின்னால் விளையாட்டு திடலில் இருக்கும் உட்காரும் கல்லில் போய் அமர்ந்தாள்.
இதே கல்லில் அமர்ந்திருக்கும் போதுதான் ராகேஷ் முதன் முதலில் அவளிடம் காதலை சொன்னான். அன்று நந்தினி இந்தக் கல்லில் அமர்ந்து அசைன்மெண்ட் எழுதிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ராகேஷ் அவளிடம் எப்பவும் போல் பேசிவிட்டு மெதுவாக 'நந்து... நான் ஒண்ணு சொன்னா என்னை தப்பா நினைக்க மாட்டியல்ல..' என்றான். 'என்னடா நீ நம்ம ரெண்டு பேரும் சின்னப்பிள்ளையில இருந்து பிரண்ட்... உன்னைய நான் இதுவரைக்கும் தப்பா நினைச்சிருக்கேனா என்ன... ஏன் இப்படி ஒரு வார்த்தை கேட்கிறே... என்ன சொல்லப் போறே சொல்லு...' என்றாள்.
அவன் தயங்கித் தயங்கி மெதுவாக அவள் மீதான தன் காதலைச் சொன்னான், அவனைப் பார்த்து சிரித்தாள். அவள் மனம் அவளது காதலை ஏற்க்க மறுத்தது. எல்லாரையும் மாதிரித்தான்டா நீயும் இருந்திருக்கே... என்று சொல்லிவிட்டு அவனது பதில் என்ன என்பதைக்கூட கேட்காமல் அங்கிருந்து கிளம்பினாள். ராகேஷ் ஒன்றும் சொல்ல முடியாமல் விக்கித்துப் போய் நின்றான்.
தொடர்ந்து வந்த நாட்களில் அவனைப் பார்ப்பதைக் கூட தவிர்த்தாள். பல நாட்கள் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளுக்குள்ளும் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிக்க அவனிடம் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள். அதன்பிறகு கல்லூரி வளாகத்துக்குள் ஒரு காதல் ஜோடி சுதந்திரமாக வலம் வந்தது.
சந்தோஷமாக போன அவர்களின் காதல் பயணத்தில் சில நாள் முன்னர் சிக்கல் ஆர்ம்பித்தது. எப்பவும் போல் கல்லூரி முடிந்து அவனுக்காக காத்திருந்தாள். வேகமாக வண்டியில் வந்தவன் 'நந்து உங்கிட்ட முக்கியமா பேசணும்.... வண்டியில ஏறு பார்க் போகலாம்... அங்க தனியா இருந்து பேசலாம்' என்றதும் 'என்ன விளையாடுறியா நான் பார்க்குக்கு எல்லாம் வரலை... எதுவா இருந்தாலும் இங்க சொல்லு நான் வீட்டுக்கு கிளம்பணும்' என்று தனது சைக்கிளை தள்ளியபடி பேசினாள். அவனும் தனது வண்டியை ஆப் பண்ணிவிட்டு அவளுடன் வண்டியை தள்ளியபடி நடக்கலானான்.
"நந்து... எங்க வீட்ல எனக்கு நிச்சயம் பண்ணப் போறாங்க..." மெதுவாக அவன் சொன்னதும் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நின்றாள்.
"எ.. என்ன?"
"ஆமா நந்து எங்க மாமா பொண்ணு உனக்குத் தெரியுமே சரண்யா... அவளுக்கும் எனக்கும்  நிச்சயம் பண்ணி வைக்கப் போறாங்களாம்"
"இன்னும் நீ படிப்பே முடிக்கலை... அவ இப்பத்தானே லெவன்த் படிப்பா... அதுக்குள்ள என்ன அவசரம்?" பதட்டமில்லாமல் கேட்டாள்.
"மாமா இருந்தப்போ அப்பா சொன்னாராம் சின்னவனுக்குத்தான் உன் பொண்ணுன்னு... அவரு இறந்ததும் எங்க நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்னா என்ன பண்றதுன்னு அத்தைக்குப் பயம் வந்திருச்சாம்... அப்பாகிட்ட நாம நினக்கிறதுக்கு மாறா நம்ம பிள்ளைங்க நினைச்சிட்டா என்னண்ணே பண்றது... நாளைக்கு ராகேஷ் எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா அப்ப நான் என்ன பண்றதுன்னு கேட்க... உடனே அப்பா இப்படி ஒரு ஏற்பாடை செய்திட்டாரு..."
அவள் எதுவும் பேசாமல் இருக்கவும் அவனே தொடர்ந்தான். "இப்ப நிச்சயம் பண்ணிட்டு நான் படிப்ப முடிச்சதும் கல்யாணம் வைக்கலாம்ன்னு இருக்காங்க..."
"...."
"என்ன நந்து நீ எதுவுமே பேச மாட்டேங்கிறே?"
"இதுல என்ன பேசணுமின்னு நினைக்கிறே... பேசினது உங்க வீட்ல... உனக்கும் சரண்யா மேல ஒரு கண்ணுதானே... அவளையே கட்டிக்க..."
"என்ன சொல்றே நீ... இதுக்குத்தான் லவ் பண்ணினோமா?"
"அப்ப நீ வீட்ல சொல்லியிருக்கணும்... நான் ஒருத்திய லவ் பண்றேன்... அவளைத்தான் கட்டிப்பேன்னு..."
"எப்படி நந்து... இப்போ சொன்னா தேவையில்லாத பிரச்சினை வரும்... யாருடா அதுன்னு கண்டிப்பா கேப்பாங்க... அப்ப நான் உன் பேரை சொல்ல வேண்டி வரும்... வீணாவுல உன் மேல உயிரையே வச்சிருக்கிற உங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் பிரச்சினை வரும். இது போக அத்தை மொத்தமா அத்துக்கிட்டுப் போயிருவாங்க..."
"இவ்வளவு யோசிக்கிற நீ இதை லவ் பண்றேன்னு சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்... சரி... சொல்லப் பயமா இருந்தா எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை... தாராளமாக அவளையே கட்டிக்க..."
"இங்க பாரு நந்து... அவளைக் கட்டிக்க... அவளைக் கட்டிக்கன்னு சொல்றியே.... அப்படி அவளைக் கட்டுறதா இருந்தா உன்னைய காதலிச்சு இருக்க மாட்டேனே... சரி நீ டென்சனா இருக்கே நந்து... நான் சொல்றதை கோவப்படாம கேளு."
"என்ன..?"
"நாம எங்கயாவது போயி கல்யாணம் பண்ணிக்கிட்டு கொஞ்ச நாள் கழிச்சு வந்தால் எல்லாம் சரியாகும்"
"எதுக்குடா உனக்கு இப்படி புத்தி போகுது?"
"வேற என்ன பண்றது சொல்லு... ரெண்டு வீட்லயும் சம்மதம் வாங்கி நாம கல்யாணம் பண்ண முடியாது... சாதி நம்ம காதலுக்கு எதிரியாயிடும்... இல்லேன்னா நிச்சயம் பண்றபடி பண்ணட்டும். மேரேஜ்க்கு முன்னால நம்ம காதலை சொல்லி நிறுத்தப் பாக்கலாம்... அதுலயும் ஒத்துக்கலைன்னா ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கலாம்"
"ஓடிப்போறேன்... ஓடிப்போறேன்னு சொல்லுறியே... ஓடிப்போயி... இப்ப ஓடினா நம்ம படிப்பும் போகும்.... லைப்பும் போகும்... சரி நீ சொல்ற மாதிரி படிப்பு முடிச்சிட்டு காதலை சொல்லி கல்யாணத்தை நிறுத்தப் பார்த்து அதுவும் நடக்கலைன்னு நாம அப்ப ஓடினாலும் வேலை வெட்டி இல்லாம குடும்பம் நடத்த முடியுமா? நீங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டிங்க இந்தாங்க வேலையின்னு கூப்பிட்டு கொடுப்பாங்களா என்ன... இல்ல நண்பர்கள் உதவுறதுக்கும்... ஒரு பாட்டுல பெரிய லெவலுக்கு வர்றதுக்கும் இது என்ன சினிமாவா...சும்மா ஓடிப்போவோம்... ஓடிப்போவோமுன்னு... புரியாம பேசாதடா"
"அப்ப உன் முடிவுதான் என்ன.."
"இதுல என்னோட முடிவு என்ன இருக்கு... எனக்கா மாப்பிள்ளை பார்த்திருக்காங்க... உனக்குத்தான் நிச்சயம் நீதான் முடிவு பண்ணனும்..."
"நந்து ப்ளீஸ் என்னைக் கொல்லாத..."
"நான் கொல்றேனா... நீ ஒண்ணு செய்யி நம்ம காதலைக் கொன்னுட்டு உங்க வீட்ல நிச்சயம் பண்ற சரண்யாவை கட்டிக்க... நான் வாறேன்... பை..."
"நந்து..."
"அவனது கத்தலை பொருட்படுத்தாமல் சைக்கிளில் ஏறி மிதிக்கலானாள்.
'சை... புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாளே...' என்று நினைத்து தரையில் உதைத்தவன் "சை... என்ன இவள் யாரோ லவ் பண்ணின மாதிரி பேசிட்டுப் போறாள்... சரி டென்சனா இருக்கா... விட்டுப் பிடிப்போம்... ரெண்டு நாள்ல சரியாகும்..' என்று நினைத்தபடி பேசாமல் அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.

நினைவில் இருந்து மீண்டவள் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள். அப்பா அம்மாவா... இல்லை ராகேஷான்னு பார்த்தா எனக்கு அப்பா அம்மாதான் முக்கியம்... ஆனா அவன் காதலிக்கிறேன்னு சொன்னப்பவே முடியாதுன்னு மறுத்திருக்கணும்... அவன் மனசையும் கெடுத்த பாவம் என்னைத்தான் சேரும்... இருந்தாலும் நான்தான் உலகம் என்று இருக்கவங்களை தவிக்க விட்டுட்டு இவனே உலகமுன்னு நம்பிப் போனா இரண்டு பேரையும் கொன்ன கொலைகாரியாயிருவேன்... வேண்டாம்... இதயத்தில் நுழைந்த காதலுக்காக தொப்புள் கொடி உறவை தவிக்க விடணுமா என்ன... இந்தக் காதல் மரித்தால் சில காலம் வலியிருக்கும்... பரவாயில்லை நம்ம பிள்ளை நல்லா படிக்குமின்னு அனுப்புன அப்பா அம்மாவை ஏமாத்திட்டு காதலிச்சதுக்கு தண்டனையா இதை ஏத்துக்கிறேன்... அப்பா இல்லாத அந்தப் பொண்ணு நல்லாயிருக்கணும்... ராகேஷ்கூட நிச்சயம் ஆகி அவனையே நினைச்சு வாழப்போறவளை கல்யாணத்தப்போ நாங்க லவ் பண்றோமுன்னு சொல்லி அவ கனவை கலைக்கனுமா... அது நியாயமா... இல்ல அவளுக்கும் ராகேஷூக்கும் கல்யாணம் நடக்கணும். ராகேஷ் கொஞ்சம் கொஞ்சமா மாறி அவளை நல்லாப் பாத்துப்பான். அவன் நல்லவன்... என்று நினைத்தபடி கல்லில் இருந்து எழுந்தவள் மனதை கல்லாக்கிக் கொண்டு சுடிதாரில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டியவள் காதலையும் அங்கயே விட்டுச் சென்றாள்.

-'பரிவை' சே.குமார்

புதன், 3 அக்டோபர், 2012

ஒலி மூலமாக ஒளி காண்கிறார் ஓர் அமெரிக்கர்


(இது புதிய தலைமுறையில் வெளிவந்த கட்டுரை...  நண்பர் ஒருவர் மூலமாக படித்ததில் பிடித்ததால் பகிர்ந்துள்ளேன்)


நம் எல்லோருக்குமே தெரிந்த அறிவியல் உண்மை இது. வவ்வால்களுக்கு பார்வை இல்லை. ஆனாலும் அவை அடர்த்தியான இரவுகளில் கூட, அனாயசமான வேகத்தில் இரைதேடி பயணிப்பதை கண்டிருக்கிறோம். ஒலி அலைகளை எதிரொலித்து தன்னுடைய புவியியல் சவாலை அவை எதிர்கொள்கின்றன. இதை ஆங்கிலத்தில் echolocation என்கிறார்கள்.

நாற்பத்தியாறு வயது டேனியல் கிஷ் அமெரிக்கர். இவர் பிறந்து பதிமூன்றே மாதங்கள் ஆனபோது கேன்சர் நோயால் முற்றிலும் பார்வை இழந்தார். எக்கோலொகேஷன் முறையில் பார்வையுள்ளவர்களுக்கு இணையாக அன்றாட வாழ்வியலை மேற்கொள்கிறார். இவரே தன்னிச்சையாக, யாருடைய ஆலோசனையுமின்றி பார்வை சவாலை எதிர்கொண்ட முறை இது. இவரது இந்த தன்மையை ஒரு சினிமா ஹீரோவுக்கு சித்தரித்து, தமிழில் ‘தாண்டவம்’ என்கிற படம் வெளியாக இருக்கிறது. அப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னைக்கு வந்திருக்கிறார் டேனியல்.

‘புதிய தலைமுறை’ உடனான பிரத்யேக உரையாடலுக்கு ஒப்புக்கொண்டவரை நட்சத்திர ஓட்டல் அறையில் சந்தித்தோம். யாருடைய உதவியுமின்றி டேனியல் தனியாகதான் தங்கியிருக்கிறார். துணைக்கு யாரையும் ஊரில் இருந்து அழைத்து வரவில்லை. அவர் பார்வையற்றவர் என்கிற எண்ணமே ஓட்டல் பணியாளர்களுக்கு சற்றும் ஏற்படவில்லை. பார்வையற்றவர்கள் வழக்கமாக குளிர்கண்ணாடி அணிவார்கள். அவர்கள் மற்றவர்களை பார்த்து பேசும்போது விழி வேறு திக்கை நோக்கும் என்பதால் உரையாடல் சிரமமாக இருக்கும் என்பதற்காக இந்த ஏற்பாடு. டேனியல் நம் கண்களை நேருக்கு நேராக பார்த்துப் பேசுகிறார். “நீங்கள் ஒளி மூலமாக உலகை எதிர்கொள்வதைப் போல, நான் ஒலி மூலமாக எதிர்கொள்கிறேன். இரண்டுமே ஆற்றல்தான். இவற்றுக்கிடையே பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. ஒளிக்குப் பதிலாக ஒலி. அவ்ளோதான்”

பார்வையற்றவர் என்று நினைத்து அவரை யாரேனும் தொட்டுப் பேசினால் கோபப்படுகிறார். “எப்போதும் மற்றவரை இப்படி தொட்டு தொட்டுதான் பேசுகிறீர்களா? நீங்கள் எதிரே சோஃபாவில் அமர்ந்திருப்பது எனக்கு நன்றாக தெரிகிறது. அங்கிருந்தே பேசுங்கள்” என்று செல்லமாக கடிந்துக் கொள்கிறார். புகைப்படங்களுக்கு இயல்பாகவே ‘போஸ்’ கொடுக்கிறார். “இடது பக்கம் திரும்புங்கள், லேசாக வலது பக்கம்” என்று நம் புகைப்படக்காரரின் கோரிக்கைகளுக்கு மிகச்சரியாக செவிசாய்க்கிறார்.

“சிறுவயதில் தூக்கம் எனக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது. பார்வையற்றவனுக்கு எது பகல், எது இரவு என்று தெரியாது இல்லையா? பல நாட்களில் என் பெற்றோர் இரவுகளில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நான் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். இரவுகளில் கேட்கும் ஒலி மிக மிக துல்லியமானதாக இருக்கும். அவற்றை அடையாளம் கண்டு வித்தியாசம் உணர்ந்து, ஒவ்வொரு ஒலிக்கும் கற்பனையில் ஒரு தோற்றம் கொடுக்க ஆரம்பித்தேன். எதையாவது கண்டதுமே உங்கள் மூளைக்குள் ஒரு ‘இமேஜ்’ எப்படி தோன்றுகிறதோ, அதுமாதிரியே எதையாவது கேட்டதும் என் மூளைக்குள்ளும் ஒரு ‘இமேஜ்’ உருவாகிறது.

என் வீட்டுக்குப் பின்னால் நான் விளையாட நீளமான வராந்தா மாதிரியான பகுதி இருந்தது. அது என்னுடைய ராஜ்ஜியம். அந்த வராந்தாவுக்கு அந்தப் பக்கமாக பெரிய காம்பவுண்டுச் சுவார். இங்கே விளையாடும்போது ‘சீட்டி’ அடித்து ஒலியெழுப்பி, அது சுவரில் பட்டு எதிரொலிப்பதை ஆர்வமாக கவனிப்பேன். நாளாக நாளாக இம்மாதிரி சீட்டியடித்து, எனக்கும் எதிரில் இருக்கும் ஏதோ பொருட்களுக்குமான தூரத்தையெல்லாம் சுலபமாக கணிக்க ஆரம்பித்தேன். நாளாக, நாளாக இந்த திறமை எனக்குள் வளர்ந்துக் கொண்டே போனது. பெற்றோரின் அபரிதமான ஆதரவும் இருந்ததால் ஒரு கட்டத்தில் நான் இந்த விஷயத்தில் ‘மாஸ்டர்’ ஆகிவிட்டேன்.

பள்ளி, கல்லூரிகளுக்கு போகும்போதெல்லாம் நான் மற்ற மாணவர்களைப் போல சாதாரணமாகவே இருந்தேன். பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடம் தேர்ந்தெடுத்து சிறப்பாக தேறினேன். எனக்கு கார், மோட்டார் பைக் ஓட்டத் தெரியாதே தவிர, சைக்கிளை சிறப்பாக ஓட்டத் தெரியும். சைக்கிளை வைத்து மலைகூட ஏறுவேன் தெரியுமா?”

பேசிக்கொண்டே லேப்டாப்பை திறந்து வேகமாக ஏதோ பணிகளை கவனிக்க ஆரம்பித்தார்.

“லேப்டாப்பெல்லாம் பயன்படுத்துகிறீர்களா?”

“இரண்டுவகையான லேப்டாப்புகளை பயன்படுத்துகிறேன். ஒன்று நீங்கள் பயன்படுத்தும் அதே ஆப்பிள் வகை லேப்டாப். இதில் ஆணைகளை எல்லாம் ஒலியாக மாற்றும் சிறப்பு மென்பொருள் இருக்கிறது. இதைவைத்துதான் என் வேலைகளை பார்த்துக் கொள்கிறேன். ‘தாண்டவம்’ படம் தொடர்பாக உங்கள் ஆட்கள் என்னோடு முழுக்க முழுக்க ஈமெயில் மூலமாகதான் பேசினார்கள். இது தொடர்பாக மட்டுமே கிட்டத்தட்ட இருநூறு ஈமெயில்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். இன்னொரு வகை லேப்டாப் பார்வையற்றவர்களுக்கானது. இது எப்படி இயங்குகிறது என்று உங்களுக்கு சொல்லி புரியவைக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை”

“இந்த லேப்டாப்பின் வடிவத்தை நீங்கள் மனதுக்குள் எப்படி உணர்கிறீர்கள்?”

“ஒரு வடிவத்தை நீங்கள் உணர்வதற்கும், நான் உணர்வதற்கும் நிச்சயமாக வித்தியாசமிருக்கிறது. நீங்கள் சொல்வதைப் போல செவ்வகம், சதுரம், வட்டம் என்றெல்லாம் நான் உணர்ந்துக் கொள்வதில்லை. என் மனதுக்குள் ஒவ்வொரு பொருளுக்கும் நான் ஏற்படுத்தி வைத்திருக்கும் ‘இமேஜ்’ வேறானது. தனித்துவமானது. ஆனால் செயற்கையாகவோ, இயற்கையாகவோ உலகில் அமைந்திருக்கும் எல்லாவற்றையுமே நான் உங்களுக்கு இணையாக புரிந்துகொள்கிறேன் என்பதுதான் மேட்டர்”

“பேஸ்புக், ட்விட்டர் மாதிரியான சமூகவலைத் தளங்களில் இயங்குகிறீர்களா டேனியல்?”

“உருப்படியாக பயன்படுத்துவதற்கே நேரம் போதவில்லை. இதெல்லாம் வேறா? மின்னஞ்சலை வாசித்து பதில் சொல்லவே சரியாக இருக்கிறது. ஆனால் எனது நிறுவனத்துக்கு ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் கணக்கு உண்டு”

‘வேர்ல்ட் ஆக்சஸ் ஃபார் ப்ளையண்ட்’ என்கிற லாபநோக்கில்லாத நிறுவனத்தை பண்ணிரெண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் டேனியல். உலகமெங்கும் வாழும் பார்வையற்ற குழந்தைகளின் திறனை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம். சுயமாகவே தான் கண்டறிந்த எக்கோலொகேஷன் முறையை, இதுவரை குறைந்தபட்சம் 500 பார்வையற்றவர்களுக்கு போதித்திருக்கிறார் இவர். வாழும் அதிசயம் என்பதால் இவரது முறை குறித்து பல்கலைக்கழகங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, இவரது மூளை எக்கோலொகேஷன் க்கு ஏற்றவாறாக மாற்றம் கண்டிருப்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

“எங்கள் ஊர் எப்படியிருக்கிறது?”

“பார்ப்பவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்பவரிடம் கேட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். ஏற்கனவே ஒருமுறை கொல்கத்தா சென்றிருக்கிறேன். மற்ற நகரங்களை ஒப்பிடும்போது உங்கள் சென்னை ரொம்ப அமைதியான நகரம். ஒலிமாசு குறைவு. அன்பாகவும், பண்பாகவும் நடந்துக் கொள்கிறீர்கள். கய்யா முய்யாவென்று கத்தாமல் அமைதியாக பேசுகிறீர்கள். சாந்தமான சுபாவம் கொண்டவர்கள் தமிழர்கள்” ஜில்லென்று நம் தலையில் டன் கணக்காக ஐஸ் வைத்தார் டேனியல்.

(நன்றி : புதிய தலைமுறை)

-'பரிவை' சே.குமார்.