மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 23 நவம்பர், 2017

சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)

லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த முதல் படம். எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்த லால், மோகன்லாலை வைத்து எப்படியும் படம் இயக்க வேண்டுமென முயற்சித்து அதில் வெற்றியும் பெற்ற நிலையில் படத்தில் ஜெயித்தாரா?

இந்தக் கேள்வியோடு ஆரம்பிப்போம் படம் குறித்தான பார்வையை...

வெளிப்பாடிண்டே புஸ்தகம்...

இந்தப் பேரைக் கேட்டதும் என்ன புஸ்தகம் இது எனத் தோன்றலாம்.

இந்தப் படத்தின் பாடலொன்று உலகெங்கும் பிரபலமானதே அந்தப் பாடலைச் சொன்னால் உடனே ஞாபகத்தில் வந்துவிடும்தானே இது என்ன புஸ்தகம் என்பது...

ஆமா அது என்ன பாடல்...?

அட ஷெரில்... அதாங்க கல்லூரிப் புரபஸர் தன்னுடைய சக ஆசிரியர்களுடன் ஆட்டம் போட்டுச்சே... உடனே நம்ம பயக, புள்ளைங்க எல்லாம் ஆளாளுக்கு ஆட்டம் போட்டு யூடியூப்பை நிரம்பி வழிய விட்டார்களே...

இன்னும் ஞாபகத்தில் வரலையா...? அட நம்ம ஊரு தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், இணையச் சேனல்கள் எல்லாம் இந்தா இருக்கிற நெடுவாசல் போய் போராட்டம் நடுத்துனவங்களை எடுத்து போட முடியவில்லை என்றாலும் அந்தப்புள்ளை வீடு தேடிப்போயி பேட்டியெல்லாம் எடுத்துப் போட்டானுங்களே...

ம்... சும்மாவா மில்லியன் கணக்குலயில்ல லைக் போட்டிருக்கோம்... அதுல லைக் போட்டதுல நம்ம தமிழனுகளுக்குத்தான் முதலிடமாம் தெரியுமா..? 

ம்... அதே தாங்க... 'எங்கம்மாட ஜிமிக்க்கி கம்மல்'... ம்.... இப்ப ஞாபகத்தில் வந்திருக்குமே அந்த ஷெரில்... ச்சை... படம்.

சரி படம் எப்படி..?

Image result for velipadinte pusthakam poster

ஒரு கிறிஸ்தவக் கல்லூரி... அதில் மீனவ மாணவர்கள் மற்றும் எங்கும் இடம் கிடைக்காமல் இங்கு வந்து படிக்கும் பெரிய இடத்து மாணவர்கள் என இரண்டு குரூப்புக்குள் எப்பவும் மோதல்... நாங்க படிக்கும் போது இருந்த எங்க தேவகோட்டைக் கல்லூரி மாதிரித்தாங்க... எங்க கல்லூரியில் தேவகோட்டை - திருவாடானை மோதல் எப்பவும் இருக்கும்... சாதாரண அடி தடியில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட விரட்டி விரட்டி அடிக்கும் பெரிய அடிதடி வரை அடிக்கடி நிகழும். இப்ப நிறைய மாற்றம்... மாற்றம் நல்லதுதானே...

கல்லூரித் துணை முதல்வராய் இருக்கும் புரபஸர் பிரேம்ராஜ் (சலீம் குமார்)... செக்ஸ் பட பிரியர் என்பதால் மாணவர்களால் செல்லமாக காமராசு என அழைக்கப்படுகிறார். மாணவர்களின் பிரச்சினையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறேன் பார் என சிசிடிவி கேமரா வைக்க, அதன் மூலம் அவருக்கே பிரச்சினை வருகிறது. அதன் காரணமாக துணை முதல்வர் பதவி போய் சாதாரண புரபஸராகிறார். அவருக்குப் பதிலாக... துணை முதல்வராக கல்லூரிக்குள் நுழைகிறார் பாதர் மிக்கேல் இடிகுலா (மோகன்லால்).

இரண்டு பிரிவுகளின் தலைகளையும்... அதாங்க மீனவர் பிரிவின் தலைவன் பிராங்கிளின் (அப்பானி சரத்), பெரிய இடத்துக் குழுத் தலைவன் சமீர் (அருண் குரியன்) இருவரையும் இணைக்கும் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெறுகிறார்.

மிக்கேல் பாதர் என்பது கல்லூரிக்குள் தெரியாது... மேலிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்கிறது.. தமிழகத்தில் பாஜக ஆட்சி நடந்தாலும் அதிமுகதான் ஆள்கிறது என நாம் முட்டாள்தனமாக நம்புவது போல் திருமணம் ஆகாத மிக்கேல் தன்னைக் கட்டிக் கொள்வார் என முட்டாள்தனமாக நம்புகிறார் புரபஸர் மேரி (அன்னா ராஜன்), இந்தக் காதலை மிக்கேலிடம் சொல்ல சக புரபஸரும் தோழியுமான அனுமோல் (சினேகா ஸ்ரீகுமார்) முயல, மிக்கேலோ குர்பானாவுக்கு சர்ச்சுக்கு வாங்கன்னு சொல்ல, அங்குதான் அவர் பாதர் என்பது வெளிச்சத்துக்கு வருகிறது. பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வராமல் இருட்டுக்குள்ளயே கிடக்கின்றன இங்கே... எப்ப அவற்றின் மீது வெளிச்சம் படும்?

மேரி நல்ல பெண் என்றும் அவளுக்குத் தனக்குத் தெரிந்த நல்ல பையனை பேசி முடிப்பதாகவும் சொல்லி அதன்படி செய்கிறார். கல்லூரிக்குச் சைக்கிளில்தான் வருவேன் என வரும் மிக்கேல்... இங்க வார்டு கவுன்சிலரே ரெண்டு கார்ல போறாரு... துணை முதல்வர்... அடிக்கடி துணை முதல்வர்ன்னு சொன்னதும் நீங்க அவருன்னு நினைச்சிறாதீங்க... நான் அந்த தர்மயுத்தத்தைச் சொல்லலை... இவரு கல்லூரி துணை முதல்வருங்க... சுத்தமான தமிழில் சொன்னா வைஸ் பிரின்ஸ்பால்.

கல்லூரித் துணை முதல்வர் சைக்கிளில் போறாரே... அப்ப எப்படி மாணவர்கள் மதிப்பாங்கன்னு யோசிக்காதீங்க... ஏன்னா அது கேரளாங்க... முதல்வரே சர்ச்சுக்குள்ள இடமில்லைன்னு வெளியில உக்காந்திருந்தாருதானே... விடுங்க.. நம்மூரா இருந்தா சர்ச்சுக்குள்ள இருந்த எல்லாரையும் வெளிய போகச் சொல்லிட்டு முதல்வர் மட்டும் உள்ள இருந்திருப்பாரு இல்லையா... அப்ப இசைக்கத் தெரியாத அம்மணி அதுவும் செரிதான்னு அசால்டா பேட்டி கொடுக்கும். நமக்கெதுங்க அரசியல்... பதிவர் அரசியலே படு பயங்கர இருக்கும்போது நாட்டரசில் தேவையா...? 

சரி வாங்க   பொஸ்தவத்தை தொடர்ந்து வாசிப்போம்.

எங்க விட்டோம்.... ஆங்.... சைக்கிள்லதானே... ஒருநாள் மாலை சைக்கிளில் போகும்போது ஒரு குடிகாரனைச் சந்திக்க, அவனை சைக்கிளில் ஏற்றி வீட்டில் கொண்டுபோய் விட வேண்டிய சூழலில் சிக்குகிறார் பாதர். அந்த சிறிய குப்பத்து வீட்டுக்குப் போனால் அது பிராங்க்ளின் வீடு... அந்த குடிகாரன் அவனின் அப்பா வர்க்கி (பிரசாத்). பால் இல்ல கட்டங் காபிதான்... குடிப்பியலா... டம்ளர்ல மீன் வாசம் இருக்கும் என அவனின் அம்மா கொடுத்த காபியை வாங்கிக் குடித்து நல்லாயிருக்கு என்று சொல்லிக் கிளம்பும் போது உன்னோட சிறுகதை படித்தேன், ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சொல்லிச் செல்கிறார். ஆக பிராங்க்ளின் ஒரு எழுத்தாளன்... அதிலும் சிறுகதை எழுத்தாளன் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது.

கல்லூரியில் பாய்ஸ் ஹாஸ்டல் கட்ட வேண்டுமென முடிவெடுத்து அதற்கு வேண்டிய பணத்தை எப்படிப் புரட்டுவதென நடக்கும் பேச்சு வார்த்தையின் முடிவில் சினிமா எடுப்பதென தீர்மானம் நிறைவேறுகிறது. இதை எல்லாக் கல்லூரிகளும் தொடர்ந்தால் அன்புச் செழியன் போன்றவர்கள் சினிமாவில் வளர மாட்டார்கள்... கோடிகளும் புரளாதுதானே.... நம்ம சொன்னா எவன் கேக்குறான்.

பாதருக்குத் தெரிந்த தயாரிப்பாளர் விஜய்பாபு (படத்திலும் நிஜத்திலும் விஜய்பாபுதான்) ஒன்னறைக் கோடி முதலீடு செய்வதாகச் சொல்லி, சினிமாவில் பெரிய நடிகர்களைப் போடுவதைவிட நாமளே நடித்தால் செலவைக் குறைக்கலாம் என்றும் சொல்ல, அனைத்துத் தரப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு கல்லூரி பாடம் துறந்து படம் எடுக்க ஆரம்பிக்கிறது. அட இந்த வரி நல்லாயிருக்கே..! எனக்கு நானே ஆச்சர்யக் குறி போட்டுக்கிறேன்.

விஜய்பாபுவால் நம் சிறுகதை எழுத்தாளனின் கதை நிராகரிக்கப்பட, குறும்படம் எடுத்து அனுபவம் உள்ள சமீர் இயக்குநராக, எந்தக் கதையை எடுக்கலாமென யோசிக்கும் போது தாமரைக் குளத்துக்குள் ஒற்றை அல்லி பூத்திருப்பது போல், இந்தப் பேச்சுவார்த்தை நடக்கும் கலையரங்கத்தில் பாதர்களுக்கு மத்தியில் குங்குமப் பொட்டுடன் சிரிக்கும் விஸ்வநாதன் என்ற புல்லட் விஸ்வம் கவர்கிறார். ஆமா யார் இந்த விஸ்வம்..?

விஸ்வம் யாருன்னு பார்க்கும் முன்னால இதைச் சொல்லிடுறேன்... கிறிஸ்தவப் பள்ளிகளில் சர்ச்சுக்கு எல்லா மாணவர்களும் செல்ல வேண்டும் என்பது கட்டாயம்... ஆனால் அவர்கள் கொடுக்கும் திராட்சை ரசத்தில் நனைத்த பிரசாதத்தை மட்டும் கிறிஸ்தவக் குழந்தைகள் மட்டுமே வாங்க வேண்டும் என்பதும் கட்டாயம்...  இதெல்லாம் அனுபவம்... ஆராய்ச்சியில்லை. அப்படியிருக்க பாதர்களுக்கு நடுவே எப்படி விஸ்வம்..?

அதுக்கு ஒரு கதையிருக்கு... அதன் முடிவுதான் படத்தின் ஆரம்பக் காட்சியில் மழைநாளில் விஸ்வத்தின் கொலை...

அந்தக் கிறிஸ்தவக் கல்லூரி வரக்கூடாதுன்னு சொல்லுற ஒரு பெரிய மனிதர் மாதன் தரகன் (சித்திக்).. கல்லூரி வந்தே தீரும்ன்னு போராடி கல்லூரியைக் கொண்டு வரும் விஸ்வம். விடுவாங்களா... அதுதான் ஆரம்பக் காட்சிக் கொலையாய் அரங்கேறுகிறது ஒரு மழை நாளில்... மாதனுக்கு உதவியாய் அவரின் வலக்கை காக்கா ரமேஷன் (செம்பான் வினோத்) கொலைப்பழியில் சிறைக்குப் போகிறான்.

விஸ்வத்தின் கதை வியப்பைத் தருவதால் அதையே எடுப்போமென முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்குகிறார்கள். படமென்றால் நடிகர் தேர்வு இருக்கணுமே... எந்தக் கதாபாத்திரத்துக்கு யார் என்ற தேர்வு ஒரு சுபயோக சுபதினத்தில் நடக்கிறது.

விஸ்வத்தின் நெருங்கிய நண்பனாயிருந்து குடிகாரனானவர் வர்க்கி... அதாங்க பிராங்க்ளின் அப்பா... அவர் கதாபாத்திரத்தில் பிராங்க்ளின்... ஆம் கதை நிராகரிக்கப்பட்ட விரக்தியில் இருந்தவனை கதாபாத்திரமாக்கி சரிக்கட்டி விடுகிறார்கள். 

விஸ்வத்தின் மனைவி ஜெயந்தியாக புரபஸர் மேரி... மாதனாக புரபஸர் காமராசு... இப்படி எல்லாக் கதாபாத்திரமும் ஓகேயாக விஸ்வமாக யார்...? என்பது கேள்விக்குறியாகிறது... இதுவே தயாரிப்பாளரை விலகிக் கொள்ளலாம் என முடிவெடுக்க வைக்கிறது.

நாயகன்தானே சுமக்கணும்... அதுதானே சினிமா விதி... பாதர் பக்கா அடியாளாக அதாங்க விஸ்வமாக உருவெடுக்கிறார். விஸ்வத்தின் வீட்டில் மனைவி ஜெயந்தியிடம் (பிரியங்கா) அனுமதி வாங்கி அங்கு படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள். பாதரைப் பார்க்கும் போது ஜெயந்திக்கு விஸ்வம் ஞாபகம் வருகிறது.

விஸ்வத்தின் முதல் குழந்தை கொல்லப்படுவது... இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும் போது விஸ்வம் கொல்லப்படுவது... என கதைக்குள் மற்றொரு கதை சினிமாவாய் பயணிக்க, மாதன் பிரச்சினைக்கு வருகிறார். பின் அவரே விஸ்வத்தைத்தான் கொல்லவில்லை என்பதையும் சொல்கிறார்.

ஒரு பாடல் காட்சி பாக்கியிருக்கும் நிலையில் இறுதிக் காட்சி எடுக்கப்பட்ட பின்னரே விஸ்வத்தை யார் கொன்றார்கள் என்பது தெரிய வர, மீண்டும் காட்சியை மாற்றி எடுக்க வேண்டுமென பாதர் சொல்ல, இயக்குநரான சமீர் மறுக்கிறான். மீண்டும் இவர்களால் படத்துக்குப் பிரச்சினை வருகிறது. 

பாதர் குறித்து அவர் வீட்டில் நீண்ட நாட்களாக வேலை செய்பவர் சொல்லும் உண்மையில் உரைகிறது மாணவர் கூட்டம். அந்த உண்மை... அவர் ஒன்றை மனம் ஒத்து செய்தால் அதாகவே மாறிவிடுவார் என்பதுதான்... அவரின் படப்பிடிப்பு சமயத்திலான செயல்கள் எல்லாம் விஸ்வத்தை ஒத்திருப்பதை உணர்கிறார்கள்.

சரி இப்ப சஸ்பென்ஸ் கிளைமேக்ஸ்க்கு வருவோம்.

விஸ்வத்தைக் கொன்றது யார்..?

விஸ்வத்தின் முதல் குழந்தையை கொன்றது யார்..?

பாதர் மீண்டும் நடிக்க வந்தாரா இல்லையா..?

இறுதிக்காட்சியில் மாற்றம் பண்ணினார்களா இல்லையா..?

அந்த கதாபாத்திரமாகவே மாறிய பாதர் விஸ்வத்தைக் கொன்றவர்களை என்ன செய்தார்..?

மாதனாக நடிக்கும் காமராசு... ச்சை... பிரேம்ராஜ் தொடர்ந்து நடித்தாரா அல்லது நிஜ மாதனால் மிரட்டப்பட்டாரா...?

மேரிக்கு நிச்சயித்த மாப்பிள்ளையுடன் திருமணம் நடந்ததா...?

ஜெயந்தியும் குழந்தையும் என்ன ஆனார்கள்..?

இப்படி நிறையக் கேள்விக்கு இறுதிக் காட்சிகள் விடையாய்...

Related imageபடம் குறித்து...?

பாடம் நடத்தும் கல்லூரி ஒரு ஹாஸ்டல் கட்டுவதற்காக படமெடுக்குமா..? என்ற கேள்வி எழும்போதே படம் ஆளில்லாத ரோட்டில் 20கிமீ வேகத்தில் போவதுபோல் ஆகிவிடுகிறது.

ஒரு சர்ச் பாதர்... கல்லூரி துணை முதல்வர்... இதைச் செய்வாரா..? என்ற கேள்வி எழும்போது துணை முதல்வர் மீதான மதிப்பும் டமார்... இங்கயும் தர்மயுத்தத்தைச் சொல்லலை... அதுக்கு மதிப்பு இருந்தாத்தானே உடையும்..?

மிகப்பெரிய ஆள் ஒருவரால படப்பிடிப்பை நிறுத்த முடியாதா..? என்ற கேள்வி எழும்போது கதை மெல்லப் படுத்து 20-வதில் இருந்து 10 கிமீ வேகத்துக்கு வந்துவிடுகிறது. 

பெரிய மனிதரால் ஒரு படப்பிடிப்பை நிறுத்த முடியவில்லை என்பதைப் பார்க்கும் போது வெளியாக இருந்த படங்களான விஸ்வரூபத்தையும் துப்பாக்கியையும் கதற விட்ட நம்மாளுங்கதான் ஞாபகத்தில் வந்தார்கள்... என்ன மெர்சலா... அதில் மிகப் பெரிய அரசியல் இருக்கு... அதெதுக்கு நமக்கு.

மோகன்லால் - லால் ஜோஸ் இணைந்த முதல் படம் எப்படியிருக்க வேண்டும்... சும்மா அதிர வேண்டாம்... வேண்டாம் அட தூள்ன்னாச்சும் சொல்ல வைக்க வேண்டாம். எப்ப கல்லூரி சினிமா எடுக்குறேன்னு களத்துல இறங்குதோ அப்பவே மனசுக்குள் சுபம் போட்டு விடுகிறது கதையின் போக்கு.

அப்ப படம்...?

'ஜிமிக்கி கம்மல்' மட்டுமே அழகாய் ஆடுகிறது... எத்தனை ஷெரில் ஆடினாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தான்... படம் பார்க்கும் போது நான்கு முறை திரும்பத் திரும்ப பார்த்தேன்... செம.

ஜிமிக்கி கம்மல் மட்டுமே அழகு என யார் சொன்னது...? நெற்றியில் சிறியதாய் ஒரு குங்குமப் பொட்டும் வைத்தால்தானே இன்னும் அழகு... இல்லையா..? 

இயக்குநர் கம்மலை அழகாய் ஆடவிட்டு கதை என்னும் குங்குமப்பொட்டை சரியாய் வைக்கவில்லை... ஸ்டிக்கர் பொட்டுத்தான் வைத்தார் போல அதான்  பாதர் சினிமா எடுக்க ஆரம்பித்ததும் கீழ விழுந்துருச்சு... கடைசிவரை விழுந்த பொட்டை எடுத்து ஒட்டவும் இல்லாமல் புதிய பொட்டை எடுத்து வைக்கவும் இல்லாமல் வெற்று நெற்றியாய்த்தான் இருக்கிறது.

இசை ஜிமிக்கி கம்மலில் ஆட்டம் போடுகிறது... இசையாய் ஷான் ரஹ்மான்.

கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்... எழுதிய பென்னி பி.நாயரம்பலம்.

ஒளிப்பதிவில் கலக்கலாய்  விஷ்ணு சர்மா.

(ஷெரில் ஆடாத பாடல் படத்திலிருந்து)

முக்கியமாக ஒரு விஷயத்தில் மட்டும் இந்த மோகன்லால், மம்முட்டியைப் பாராட்டலாம்... எதில்..?

அதாங்க நாயகியுடன் டூயட் பாடாமல் தங்கள் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களாய் தேர்ந்தெடுப்பதில்தான்.... ஏன்னா தமிழ் நாயகர்கள் இப்படி எப்போது மாறுவார்கள் என ஏங்க வைக்கிறார்களே... அறுபதிலும் இருபதோடு ஆடிக்கொண்டு... ம்... சொன்னா நீ யாருடா சொல்லன்னு அவங்க கேக்குறாங்களோ இல்லையோ பால்குடம் எடுக்கிற நாங்கள் கேட்போம் நமக்கெதுக்கு... நாம் சேட்டன்களைப் பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்வோம். கருத்துச் சொல்றேன்னு  ஆளும் அரசின் அமைச்சர்கள் போல் உளறிக் கொட்டி வாங்கிக் கட்டிக்காம....

பாலா ஒத்தை வார்த்தையை வைத்து தூங்கிக்கிடந்த மாதர் சங்கத்தை எழுப்பியது போல் ஜிமிக்கி கம்மலை வைத்து கல்லாக் கட்டலாம் என நினைத்து அதில் ஜெயித்தும் இருக்கிறார்கள்.

அப்ப படம் பாக்கலாமா..?

விருப்பமிருந்தால் பார்க்கலாம்... போரடிக்காது என்பது கேரண்டி.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 21 நவம்பர், 2017

வாசிப்பனுபவம் : கவிழ்ந்த காணிக்கை

நான் முன்பு ஒரு பதிவில் சொல்லியிருந்தேன் 'வாசிப்பு ஒரு போதை' என்று...

உண்மைதான்... எப்படியான மனநிலை என்றாலும் பேருந்துப் பயணத்தில் வாசிப்பு என்பது தொடரத்தான் செய்கிறது. பாலகுமாரனின் 'முதல் யுத்தம்' முடிந்ததும் எனது தேடலில் கிடைத்தது 'கவிழ்ந்த காணிக்கை', இதுவும் பாலகுமாரன் எழுதியதுதான். இவர் அதிகம் சோழருக்குள் மட்டுமே திளைத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆம் இதுவும் சோழர்கள் கதைதான்... 

சாண்டில்யனைப் போல், கல்கியைப் போல் பரவலான வரலாற்றுப் பார்வைக்குள் போகவில்லை என்றாலும் கற்பனையைக் காட்டிலும் வரலாற்றை அவர்களைவிட கொஞ்சம் அதிகமாகவே கொடுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. எது எப்படியிருந்தாலும் அவர்களின் எழுத்தில் இருக்கும் ஈர்ப்பு வரலாற்றுக் கதைகளில் இவரிடம் இல்லை என்றும் தோன்றுகிறது. இந்த எண்ணம் எனக்கு மட்டும்தானா?

சரி கவிழ்ந்த காணிக்கையைப் பார்ப்போம்.

Image result for கவிழ்ந்த காணிக்கை

தஞ்சைப் பெரிய கோவில் பணிக்காக பாறைகள் வெட்டியெடுக்கும் பணி நடைபெறுகிறது. பூமியின் எலும்பான பாறைகளை இப்படியே வெட்டி எடுத்துக் கொண்டிருந்தால் ஒருநாள் இல்லையேல் ஒருநாள் பூமி பொலபொலவென உதிர்ந்து காணமல் போய்விடும் என்ற கவலையுடன் பாறைகள் வெட்டி எடுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறார் ஆதிச்ச பெருந்தச்சன். இப்ப நாம மலைகளை எல்லாம் கூறு போட்டு ஆழ...ஆழ....ஆழமாக வெட்டியெடுத்து பூமியையும் கூறு போட்டுத்தானே வைத்திருக்கிறோம்.

யார் இந்த ஆதிச்ச பெருந்தச்சன்..?  

இராஜராஜ சோழரால் நியமிக்கப்பட்ட ரகசிய பெருந்தச்சர். தஞ்சைக் கோவில் கட்டுமானப் பணிக்கு திருவக்கரையில் பாறைகள் எடுத்து சிற்பங்கள் செய்பவர். 

திருவக்கரைக்கு ஒரு மழைநாளில் வந்து மூன்று நாட்கள் தங்கிப் பணிகளைப் பார்வையிடும் இராஜராஜச் சோழன், இவரிடம் சிவலிங்கத்தையும் அதற்கு இணையான நந்தியையும் செய்யச் சொல்கிறார். அதற்கு என்ன சன்மானம் வேண்டும் என்பதை ஓலையில் எழுதித் தாருங்கள். சன்மானம் உங்கள் வீடு தேடிவரும். தங்கள் உதவிக்கு எத்தனை பேரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். திருவக்கரை கிராமத்துக்கு என்ன உதவிகள் தேவையோ அது உடனடியாகச் செய்யப்படும். கல் சுமக்க யானையோ குதிரையோ மிகப்பெரிய மாட்டு வண்டிகளோ உடனடியாக தரப்படும் என்றும் சொல்கிறார். 

மேலும் தூண்களுக்கான பாறைகளையும், கூரை மூட மேல்தளத்துக்கான பாறைகளையும் தயார் செய்து வையுங்கள். தஞ்சையில் இருந்து ஆஸ்தான பெருந்தச்சர்களை வந்து எடுத்துப் போகச் சொல்கிறேன். கொண்டு செல்லும் பாதைதான் மோசமாக இருக்கிறது. அதை நான் சரி செய்து கொள்கிறேன் என்று சொல்லிக் கிளம்புகிறார்.

இரவு உணவுக்குப் பின் மனைவி வெற்றிலை மடித்துக் கொடுக்க வாயில் அதக்கியபடி, மூன்று ஆள் உயரத்திற்கு ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும் இரண்டு ஆள் உயரத்திற்கு நந்தியும் இந்த திருவக்கரையில் தன்னைச் செய்யச் சொல்லியிருப்பதாக மனைவியிடம் ஆதிச்ச பெருந்தச்சன் பெருமையுடன் சொல்கிறார். 

உடனே அவர் மனைவி தங்களுக்கு மகன் பிறந்தால் சிவனுக்கு வாகனம் செய்வதாக வேண்டியிருந்தீர்களே... ஏதேனும் ஒரு கோவிலுக்கு அடித்துக் கொடுப்பேன் என்றும் சத்தியம் வேறு செய்திருந்தீர்களே ஞாபகம் இருக்கிறதா..? என்று கேட்டு அதை ஏன் தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் செய்து கொடுக்கக் கூடாது என்றும் கேட்கிறாள். 

அவருக்கும் இது மிகச் சிறப்பானதொரு பணி, ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலத்துக்குப் பேசப்படக்கூடிய ஒரு கோவிலில் தமது காணிக்கையாக நந்தி, அதுவும் இதுவரை எங்கும் இல்லாத உயரத்தில் ஒரு நந்தி, யாருக்குக் கிடைக்கும் இந்தக் கொடுப்பினை என்று நினைத்து அப்படியே செய்யலாம் என்கிறார்.

ஆதிச்ச பெருந்தச்சன்  மகன்  சோமதேவன், பிறக்கும் போதே இடக்கை மூடி வலக்கை விரித்துப் பிறந்தவன். வலக்கையில் சுத்தியும் இடக்கையில் உளியும் பிடித்துப் பிறந்திருக்கிறான் என பார்க்க வந்தவர்கள் எல்லாம் பாராட்டினாலும் வீட்டில் உள்ளவர்கள் ஏழு வயது வரை அவனுக்கு சிற்பக்கலை கற்றுக் கொடுக்க  விடவில்லை. ஆதிச்ச பெருந்தச்சன் அவனை அடித்துத் துன்புறுத்திவிடுவார் என்பதுதான் காரணம்.

நந்தியைச் செய்து விட்டு சிவலிங்கம் செய்யலாம் என்று யோசித்தபோது கோவில் வேலை வேகமாக நடக்கிறது. ஒரு வருடத்திற்குள் சுற்றுப்புற கருவறைச் சுவர்கள் எழுப்பப்பட்டு விடும் அதற்குள் சிவலிங்கம் செய்தால்தான் உள்ளே கொண்டு போய் வைக்க சரியாக இருக்கும். நாம் முந்திக் கொள்ளாவிட்டால் புதுக்கோட்டையில் இருந்து எடுத்து வரும் கல்லிலோ, பாண்டிய நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள மலைகளில் இருந்து எடுக்க இருக்கும் கல்லிலோ செய்து வைத்து விடுவார்கள். நம் திருவக்கரைக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பை விட்டு விடக்கூடாது என பலரும் சொல்ல, ஆதிச்ச பெருந்தச்சன் சிவலிங்கத்துக்கும் ஆவுடையாருக்கும் தனித்தனிக் கல்லாக தேட ஆரம்பிக்கிறார்.

சிவலிங்கத்தை முதலில் செய்வதா..? இதென்ன கூத்து..? நந்தி தளபதி... காவல் தெய்வம்... நந்தியை முதலில் செய்துவிட்டுத்தானே இறைவனை வரவழைக்க வேண்டும்... அதுதானே முறை... காவலன் இன்றி எஜமானனா..? எஜமானுக்குப் பின்னர் வேலைக்காரன் வரவேண்டுமா..? இது தவறான விஷயம் அல்லவா..? என அவரின் அம்மா புலம்பினாலும் யாரும் கேட்பதாய் இல்லை.

சிவலிங்கம் செய்யும் வேலை துவங்கிய போது சோமதேவனும் அவருடனே இருந்து சிற்ப நுணுக்கங்களை விரைவாய் கற்றுக் கொள்கிறான். சிவலிங்கம் தயாரான போது அதை ஒரு பெரிய வண்டியில் வைத்து காளைகள் இழுக்க , யானை ஒன்று தள்ள சகடப் பெருவழி மூலம் தஞ்சைக்கு எடுத்துச் செல்கிறார்கள். மன்னர் சொன்னது போல் பாதைய ஆட்கள் செப்பனிட்டு... பாறைகள் பதித்து சீர்படுத்தி வைத்திருக்கிறார்கள். வழி நெடுக ஓலைக்குடிசைகள் கட்டப்பட்டு சிற்பிகளும் வீரர்களும் தங்கி இளைப்பாறச் செல்ல வகை செய்து ஒரு போர் வீரனையும் உதவிக்கு வைத்து இருப்பதைக் காண்கிறார்கள்.

வழியெங்கும் மக்களின் அன்பினில் நனைந்து நாலு நாள் நடையில் சென்றடையக் கூடிய தஞ்சையை சுமையின் காரணமாக ஆறு நாளில் அடைகிறார்கள்.  கோவில் கட்டுமானத்தைப் பார்த்த ஆதித்த பெருந்தச்சன் இவ்வளவு பெரிய கோவிலா என்று ஆச்சர்யப்பட்டு மன்னரைப் புகழ்கிறார். மன்னருக்கு ஒரு மாதம் தஞ்சையில் தங்கிச் செல்வதாகச் செய்தி அனுப்பி விட்டு கோவில் திருப்பணி நடக்கும் இடத்தில் தங்குகிறார்.

அவர் அங்கிருக்கும் சமயத்தில் மற்ற தச்சர்கள் கல் தேவைகளைச் சொல்லியும் ஆலோசனைகளைப் பெற்றும் பணி செய்கிறார்கள். அங்கிருக்கும் நாளில்   சிவலிங்கத்தையும் ஆவுடையாரையும் பந்தனம் செய்து வைக்கிறார்.  மன்னரிடம் தான் நந்தியை காணிக்கையாகச் செய்து தரவிருப்பதைச் சொல்ல மன்னருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி, இதைத்தான் ஒவ்வொரு குடிகளிடமும் எதிர்ப்பார்க்கிறேன் என்று சொல்லி வாழ்த்துகிறார்.

ஊர் திரும்பும் ஆதிச்ச பெருந்தச்சன்  தன் மகனுக்கு தொழில் கற்றுக் கொடுக்க நினைக்கிறார்... அப்போது சிலர் நீ சொல்லிக் கொடுப்பதைவிட மற்றொருவரிடம் பழகினால்தான் அவனால் எல்லாம் கற்றுக் கொள்ள முடியும் என்று சொல்ல, அதுவும் சரியென தஞ்சைக் கோவில் பணியில் இருக்கும் பெருந்தச்சர்களிடம் கூட்டிச் செல்ல, ஆதிச்ச பெருந்தச்சனின் மகனுக்கு பாடம் கற்பிக்க கொடுப்பினை வேண்டுமே என ஆளாளுக்கு நான் நீ எனப் போட்டியிட இறுதியில் ஒருவர் மற்றவர்களை அடக்கி சோமதேவனை தன் சீடனாக்கிக் கொள்கிறார்.

தஞ்சையில் தொழில் கற்கும் சோமதேவன்  இரண்டு தீபத்திருநாள் முடிந்து மூன்றாவது தீபத் திருநாள் வர இருக்கும் சமயத்தில் தொழிலில் தேர்ச்சி அடைந்து விட்டாய்... இதுவரை பாரத கண்டத்தில் இல்லாத உயரத்தில் நந்தி செய்து முடித்து விட்டேன். இது நம் குலப்பெருமையை விளங்க வைக்கும் உன்னை வாழ வைக்கும் என்று சொல்லி மகனை ஊருக்கு அழைக்கிறார் ஆதிச்ச பெருந்தச்சன்.

ஊருக்கு வந்த சோமதேவன் செதுக்கி உயர்ந்து நிற்கும் நந்தியைப் பார்த்து 'ஆஹா அற்புதம் அப்பா' என்று சொல்லி அவரை வாழ்த்திப் புகழ்கிறான். ஆனாலும் அவனுக்கு வால் பக்கமாக கல்லில் சோடை இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது அதனால் யாரும் இல்லாத சமயத்தில் தட்டிப் பார்த்து சப்பத்தில் வித்தியாசம் தெரிகிறதா என சோதித்துப் பார்க்கிறான். அப்பா மேல் அபார நம்பிக்கை இருப்பதால் அவர் நல்ல கல்லாகத்தான் தேர்ந்தெடுத்திருப்பார் என தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்கிறான்.

ஆதிச்ச பெருந்தச்சன் செய்த 16 மாட்டு வண்டியில் ஒரு நல்ல நாளில் நந்தி ஏத்தப்பட்டு... சுற்றிலும் ஆடாமல் ஆப்பு வைக்கப்பட்டு... பக்கவாட்டுக் கட்டைகள் அழுத்திப் பிடித்து இறுக்கிக் கட்டி... நந்தி முழுவதும் வைக்கோல் பிரி சுற்றி... இரண்டு யானைகள் தள்ள... போர் வீரர்கள் உதவிக்கு வர... கிராமமே பின் செல்ல... சங்கரபாணி ஆற்றுப் பக்கம் வந்து நின்றது.

ஐப்பசி மாதம் என்றாலும் மழை இல்லாததால் ஆற்றில் முழங்கால் அளவு தண்ணீர் இருக்க... மெல்ல மெல்ல வண்டியை ஆற்றின் நடுப்பகுதிக்கு கொண்டு செல்ல... வண்டியின் முன்பக்க அச்சு முறிந்து தண்ணீருக்குள் இருக்கும் பாறைக்குள் வண்டி சிக்கிக் கொள்கிறது. யானைகள் நெட்டித் தள்ள... அதன் வேகமான தாக்குதல் தாங்காமல் முன் பக்கம் உடைய... பெரிய பெரிய கட்டைகளைக் கொண்டு அண்டங்கொடுத்து தண்ணீருக்குள் விழாமல் நிறுத்தி வைக்கிறார்கள்.

அந்த இடத்திலேயே பலர் சேர்ந்து ஒரு நாள் முழுக்க வேலை செய்து புதிய சக்கரத்தைச் செய்கிறார்கள். அதுவரை நந்தி தண்ணீருக்குள் இருக்கிறது.

இந்தச் சமயத்தில் சோமதேவன் குடம் குடமாக நீரெடுத்து நந்திமேல் ஊற்றிக் கொண்டிருக்கிறான். ஒருவழியாக சக்கரம் மாற்றப்பட்டு முன்னே ஆட்கள் மெல்ல இழுக்க... பின்னே யானைகள் தள்ள ஒருவழியாக கரைகடந்து தஞ்சை சகடப் பெருவழிக்குச் செல்கிறது நந்தியைச் சுமக்கும் மாட்டு வண்டி.

தண்ணீரில் நனைந்த நந்தி, சகடப் பெருவழியில் செல்லும் போது வெயிலில் காய, நந்தியைச் சுற்றிப் பார்க்கும் சோமதேவன் திகைக்கிறான். ஆம் எல்லா இடமும் வெயிலில் காய ஒரு இடத்தில் மட்டும் ஈரம் அப்படியே இருக்கிறது.

அப்பாவை அழைத்து வந்து காட்ட, அவருக்கும் அவனுக்கும் அது தொடர்பாக வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த வாக்குவாதம் எதனால்...?

அப்படி என்ன விஷயத்தை நந்தியின் நீர் காயத இடத்தில் சோமதேவன் கண்டுபிடித்தான்..?

நீரில் தவித்து நிலத்துக்கு வந்த நந்தி தஞ்சைப் பெரிய கோவிலை அலங்கரிக்கும் தற்போதைய நந்திதானா...?

அப்பனுக்கும் மகனுக்குமான வாக்குவாதத்தின் முடிவு என்ன ஆனது...?

ஆதிச்ச பெருந்தச்சன் எடுத்த முடிவுதான் என்ன..?

இந்தக் கேள்விக்கெல்லாம் விடையை இங்கு சொல்லிவிட்டால் கதை வாசிக்கும் போது சுவராஸ்யமாய் இருக்காது.

மொத்தமே 33 பக்கம்தான்... ரொம்பச் சிறிய குறுநாவல் என்பதைவிட சற்றே பெரிய சிறுகதை என்பதே சரி.

வாசித்துத் தெரிந்து கொள்ளுங்களேன் கேள்விக்கான விடைகளை...

கதையின் முடிவில் இன்றும் இருக்கும் ஒரு உண்மையை, மக்கள் போற்றும் ஒரு உண்மையைச் சொல்லியிருக்கிறார் பாலகுமாரன். 

அதென்ன உண்மை..?

அந்த உண்மையை இங்கு சொன்னால் கதையையே சொன்ன மாதிரி ஆகிவிடுமே...

ஆம்... கவிழ்ந்த காணிக்கை தொடர்பான உண்மைதான் அது...

வாசிப்புத் தொடரும்... அடுத்த வாசிப்பனுபவத்தில் ஜெயகாந்தனின் 'அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்'.

இப்போது வாசிப்பில் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' இரண்டாம் பாகத்தில் முக்கால்வாசி கடந்து இருக்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 17 நவம்பர், 2017

வாசிப்பனுபவம் : முதல் யுத்தம்

சென்ற வருடம் போல் தீவிர வாசிப்பு இல்லாவிட்டாலும் வாசிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போதைய மனநிலையில் பணி முடிந்து திரும்பியதும் சமையல், ஊருக்குப் பேசுதல், இணையத்தில் எப்போதேனும் சினிமா பெரும்பாலும்  வள்ளி திருமண நாடகத்தில் வள்ளி - நாரதரின் தர்க்கம் என்பதே தினசரி நிகழ்வாகிறது. 

பிரச்சினைகளின் தீவிரப் பிடிக்குள் சிக்குண்டு கிடக்கும் மனசுக்கு இதற்கு மேல் சிந்திக்க நேரமில்லை. சிந்தனையின் கிளை என்னில் இருந்து விலகி, வேறு பாதை நோக்கி நகர, எங்கே அப்படியான முடிவுக்குள் சிக்கிவிடுவோமோ என்பதால்தான் அவ்வப்போது மனசுக்கு பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஜெயகாந்தான் எழுதிய 'அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்'  முடித்ததும் ப்ரியா கல்யாணராமனின் 'தெற்கத்தி தெய்வங்கள்' வாசிக்க ஆரம்பித்தேன். தெய்கத்தி தெய்வங்கள் பாண்டி ஐயா, பதினெட்டாம்படி கருப்பர் குறித்து நாம் கேட்ட கதைகளும் அவர் எழுதியிருக்கும் கதைகளும் வித்தியாசமாக இருந்தாலும் ஏனோ பாதிக்கு மேல் மனம் அதில் ஒட்டவில்லை.

Image result for முதல் யுத்தம்

பின்னர் வாசிக்கலாமென மீண்டும் சாண்டில்யனுடனோ கல்கியுடனோ பயணிக்கலாமென முடிவெடுத்து இணையத் தேடலில் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' கிடைக்க, முதல் பாகம் முடித்து பரஞ்சோதியுடனும் சிவகாமியுடனும் இரண்டாம் பாகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். கல்கி கல்கிதான்... நம்மை ஈர்க்கும் எழுத்து.

பேருந்தில் மட்டுமே வாசிக்கும் மனநிலை என்பதால்... அதுவும் சில நாட்களை கிரிக்கெட் கேம் எடுத்துக் கொள்வதால் மெல்லவே பயணிக்க முடிகிறது. சீதோஷ்ண நிலை மாறியிருப்பதால்... பேருந்தினுள் விளக்கின் ஒளி அவ்வளவு சரியில்லாததாலும்  அதிகமான கூட்டத்தினாலும் மாலையில் அதிகம் வாசிக்க முடிவதில்லை.

சாண்டில்யனும் கல்கியும் ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் உடையாரில் பல விஷயங்கள் பிடிக்காதிருந்தாலும் பாலகுமாரன் கோவில்கள் பற்றி எழுதிய கட்டுரையை வாசித்தபோது அதிலும் குறிப்பிட்ட சமூகத்தை தூக்கி வைத்துக் கொண்டாடினார் என்றாலும் பிடித்தே இருந்தது. அதன் தொடர்ச்சியாக அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகளை வாசிக்கும் முன்னர் பாலகுமாரனின் இரண்டு குறுநாவல்களை வாசித்தேன். 

முதல் யுத்தம் என்றொரு குறுநாவலை வாசித்தேன்... மொத்தம் 132 பக்கங்கள்தான். 

இராஜராஜனின் பிரதான முதலமைச்சர் கிருஷ்ணராமனான மும்முடிச் சோழ பிரம்மராயரின் மகன் அருண்மொழிப்பட்டன் ஆறாண்டுகள் சேர நாட்டிலிருக்கும் காந்தளூர்க் கடிகையில் போர்ப்பயிற்சியும் அத்துடன் 100 பேருக்கு போர்ப் பயிற்சி அளிக்கவல்ல ஆசிரியர் பயிற்சியும் பெற்று அதற்குச் சான்றாக வெள்ளிக்கேயூரம் பெற்று மதுரை வழி சோழ நாட்டுக்குத் திரும்புகிறான்.

வைகையில் குளிக்கும் போது தன் காதலி அன்பு பரிசாக ஐந்து வருட படிப்பு முடிந்து சிலநாட்கள் சோழ நாடு சென்று திரும்பிய போது கொடுத்த 'நடராஜா' என்ற குதிரையுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கு குளிக்க வரும் பெரியவருடன் பேச ஆரம்பித்து, அவர் இல்லம் சென்று உணவருந்தி, அவருடன் அளவளாவ அவர் 'கர்வம் அழி, அன்பு செய், கர்வம் அழிய, அன்புதானே வரும்' என்று சொல்லி அனுப்புகிறார்.

இருள் மெல்ல பகலைத் துரத்த ஆரம்பிக்கும் நேரத்தில் மதுரைக்குள் செல்பவன் வீரர்களால் மடக்கப்படுகிறான். அவர்களை அடித்துத் தப்பிப் போகும்போது அவனின் நண்பனும் சோழர்படை உபதளபதியுமான பாண்டியன் ஸ்ரீவல்லபனால் பிடிக்கப்படுகிறான். 

பாண்டிய மன்னன் அமரபுயங்கன் காட்டுக்குள் மறைந்து படை திரட்டி பயிற்சி அளித்து வருவதாகவும் நாடாள ஆளில்லாத சூழலில் பொதுமக்களை யாரும் துன்புறுத்தாதிருக்கவும் பாண்டிய மன்னன் மீண்டும் அரியணையில் ஏறாதிருக்கவும் சோழர்படை பாண்டிய நாட்டில் விலாசமில்லாமல் சுற்றுவதாக வல்லபன் மூலம் அறிகிறான்.

மேலும் அவன் அரசாங்க மரியாதையுடன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவனைக் காண அவனின் தந்தை பிரம்மராயரும் வந்தியத் தேவரும் வருவதாகவும் அவர்களுடன் சேனாதிபதிகள் பரமன் மழபாடியும் தென்னவனும் வருவதாகவும் அதுவரை தான் சொல்கிறபடி நடந்து கொள்ள வேண்டும் என்றும்  சொல்கிறான் வல்லபன். 

நண்பனின் சிறையில் இருக்கும் போது இராஜராஜரின் மகளும் பௌத்த மதத்தின் மீது ஈடுபாடு கொண்டவளுமான சந்திரமல்லியினை... (இவள் இராஜேந்திரருக்கும் குந்தவை நாச்சியாருக்கும் இடையில் பிறந்தவள்.) சந்தித்ததையும் அப்போது நிகழ்ந்தவைகளையும் நினைத்துப் பார்க்கிறான். 

அவள் பௌத்த மதத்தை விரும்புவது அவளின் பாட்டியாரும் கோவில்களை எல்லாம் கற்றளியாக மாற்றி வருபவருமான செம்பியன் மாதேவியாருக்கு பிடிக்கவில்லை. அதன் காரணமாகவே மற்ற மதத்தை அழிக்க நினைக்காத மன்னர் அடக்கி வைக்க நினைக்கிறார் என்றும் சேரன் பாண்டியனுக்கு உதவ இருப்பதால்தான் சேரனை அடக்கி வைக்க நினைக்கிறார் என்பதையும் அறிந்து கொள்கிறான்.

தனக்கு குதிரை பரிசளித்த சுந்தரியை சந்தித்த நாளை நினைத்துப் பார்க்கிறான். அம்மாவைப் பார்த்துவிட்டு அமண்குடியில் குல தெய்வத்துக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனான நந்தா விளக்குப் போட ஊருக்குப் போய் நண்பர்களைச் சந்திக்கிறான். அவர்களோ நீ பெரிய ஆளாகப் போகிறாய் எங்களை எல்லாம் நினைப்பாயா, சேரப் பெண்களெல்லாம் அழகிகளாமே... அவர்களில் ஒருத்தியை கட்டிக் கொள்வாயோ என்றெல்லாம் பேசுகிறார்கள்.

நந்தா விளக்குப் போட்டுவிட்டு பழையாறை வழியாக நடந்து போகும் போது தளிர்சேரி பெண்கள் தங்கியிருந்த வீடுகளைக் கடந்து செல்கிறான். அப்போது  உதவி கேட்ட பெண்ணுக்கு யாரும் உதவி செய்யாத சூழலில் தான் போய் ஒன்றல்ல இரண்டு பாம்பைப் பிடிக்கிறான். 

அவனின் வீரச் செயலைப் பார்த்து எல்லாரும் அதிசயிக்க, அவள் விரும்பிக் கேட்க, அவளின் அத்தையைக் காணச் செல்கிறான். அவள்தான் பிரம்மராயரின் ஆசைநாயகி சரபன் தொண்டவை. உன் அப்பாவைப் பற்றி ஏதும் அறிந்தாயா என அம்மா அவனிடம் கேட்டதன் அர்த்தம் அப்போதுதான் விளங்குகிறது. தொண்டவை பற்றி அறிந்து அவளை அம்மா என்றே அழைத்து வணங்கி விடைபெறுகிறான். 

என் அத்தையின் மகன் எனக்கு முறைதானே எனச் சொல்லும்  சுந்தரி, அவனுக்குப் பரிசாக குதிரை ஒன்றைக் கொடுக்கிறாள். அந்தக் குதிரைக்கு 'நடராஜா' என்று பெயர் வைத்திருக்கிறான். அதனுடன்தான் வைகையில் பேசிக் கொண்டிருந்தான் என்பதை ஆரம்பத்தில் பார்த்தோம் அல்லவா.

சிவிகையில் மதுரை வரும் சுந்தரி மூலம் அவனுக்கு மன்னரின் ஓலை கொடுத்தனுப்பப்படுகிறது... அதில் அவனைக் குதிரைப்படையின் உபதளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தங்கள் வீரனை சிறை பிடித்து சேரன் துன்புறுத்துவதே இந்தப் போருக்கு காரணம் என்பதைக் காந்தளூர்க் கடிகையில் தெரிவிக்க தூதனாகச் செல்லவேண்டும் என்பதையும் அறிகிறான். 

மேலும் வீரனை சிறை பிடித்ததே காரணம் என்பது இவர்களே உருவாக்கியது என்பதையும்  சுந்தரிதான் ஒற்றர்படை ஆள் என்பதையும் அவள் காந்தளூர் கடிகைக்குள் சென்று ஆராய்ந்து வரவேண்டும் என்பதையும் அறிந்து வருந்துகிறான். 

தன் முகம் காட்டது ஓலை கொடுத்துவிட்டு இங்கு வேண்டாம் மாலையில் பேசலாம் என சுந்தரி சொன்னதை வைத்து அவளைப் பார்க்கப்போனால் பரமன் மழபாடி அவனைத் தடுத்து காந்தளூர்ச் சாலை கடிகை குறித்து விபரங்கள் கேட்கிறார். அதன்பின் அவருக்குத் தெரியாமல் சுந்தரியைச் சந்திக்கிறான். அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் மழபாடி உங்கள் பேச்சை போகும் வழியில் வைத்துக் கொள்ளுங்கள். அருண்மொழி உன் சாகசங்களுக்கு பெரிய வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதை மறக்காதே என்று சொல்லி கிளம்பச் சொல்கிறார்.

கடிகை நோக்கிச் செல்லும் போது சிவிகையில் இருந்து இறங்கி அவனின் குதிரையில் சுந்தரி ஏறிக்கொள்ள பேசிக் கொண்டே அவளின் பாட்டையும் கேட்டுப் பயணிப்பவன் கூட்டத்தை விட்டு குதிரையை விரைவாக செலுத்தி சேர, பாண்டிய தேச எல்லையை அடைந்து ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசப் பேச, பேச்சின் வீச்சு கொடுத்த சுகம் உடல் சுகத்தைத் தேட அருண்மொழியின் அணைப்பிற்கு மறுக்காமல் இணங்குகிறாள் சுந்தரி.

சுந்தரியை விடுத்து தான் மட்டும் கடிகை சென்று தனக்கு கற்றுக் கொடுத்த ஆசான் ஐயன் குஞ்சன் நம்பூதிரியிடம் விபரத்தை எடுத்துச் சொல்லி இரண்டரை லட்சம் வீரர்களின் தாக்குதலை சமாளிப்பது கடினம் என்கிறான். அவர் எவ்வளவு பேர் வந்தாலும் சமாளிப்போமெனச் சொல்லி அவனை வீட்டுக்காவலில் வைக்கிறார். அங்கு சோழ வீரர்களால் விரட்டப்படுவது போல் நாடகமாடி நுழைந்த சுந்தரியும் காவலாளிகளும் கூட சிறை வைக்கப்படுகிறார்கள்.

மறுபுறம் மன்னன், வந்தியத் தேவன், பிரம்மராயர், சேனாதிபதிகள் என பலரும் போருக்கு ஆயத்தமாகிறார்கள். மழபாடி மூலம் அருண்மொழிப்பட்டன் சிறைப்பிடிக்கப்பட்ட விபரம் தெரிய வருகிறது. கடிகையின் அருகே இருக்கும் காட்டில் சோழர்படையால் தீ வைக்கப்படுகிறது.

கடிகைக்குள் சிறை பிடிக்கப்பட்டவர்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள், அருண்மொழி கண் முன்னே சுந்தரி செய்த தவறுக்காக வலி தெரியாவண்ணம் அவளையும் அவளுடன் வந்த வீரர்களையும் தன் மாணாக்கர்களிடம் சொல்லி கொல்லச் சொல்கிறார் ஐயன். அவரிடம் சுந்தரி நேற்று முதல் என் மனைவி அவளை விட்டுவிடுங்கள் என்று அருண்மொழி கெஞ்சியபோதும் அவளின் தவறுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அவனின் கண் முன்னே குறுவாளால் குத்தப்படுகிறார்கள். கட்டவிழ்க்கப்பட்ட அருண்மொழி அவளை மடியில் தூக்கிக் கதற, உயிர் பிரிகிறது.

தனக்குப் பாடம் கற்பித்த குரு என்றாலும் தன் கண் முன்னே... வேண்டாமெனக் கெஞ்சக் கெஞ்ச சுந்தரியைக் கொன்ற ஐயனுடன் ஆக்ரோஷமாக மோதி அவரைக் கொல்கிறான்.. உன் கையால்தான் நான் சாகவேண்டும் என அவர் சொன்னதை நினைத்துப் பார்த்து அதற்குத்தான் இத்தனை வெறியேற்றினாரோ என்றும் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான்.

சோழ வீரர்கள் உள்ளே நுழைய, அவர்களுடன் மழபாடியும் நுழைகிறார். வந்தியத்தேவனிடம் ஐயனைக் கொன்றதை சொன்னதும் முதல் யுத்தம்... முதல் கொலை... அதுவும் உன் குரு குஞ்சன் நம்பூதிரியாக அமைந்தது அதிர்ஷ்டம்... வாழ்த்துக்கள் என்று சொல்லி கடிகைக்கு நெருப்பு வைக்கச் சொல்ல, சுந்தரியின் உடலை எடுத்து தான் அடக்கம் செய்ய நினைத்து உள்ளே காதலி இருக்கிறாள் என்று சொல்கிறான். வெளியே வந்தாலும் எரியூட்டத்தான் போறோம்... உள்ளே இருக்கட்டும் என எரியூட்டப்படுகிறது.

'வீரனுக்கு உறவுமில்லை... உற்றாருமில்லை.... அவனின் உறவு மரணம்... காதலி போர்' என்று வந்தியத்தேவன் அவனுக்கு எடுத்துச் சொல்ல, அங்கிருந்து 'நடராஜா'வின் மீதேறி கிளம்புகிறான். கடிகை எரிந்து கொண்டிருக்கிறது. 

அப்போது ஆயிரம் வீரர்களுடன் முன்னே சென்று கொண்டிருக்கும் மன்னனின் ஓலையை வல்லபன் கொண்டு வந்து கொடுக்க, அதில் 'மெச்சினோம்... தெரிஞ்ச கைக்கோள குதிரைப்படையின் தளபதியாக்கினோம். வாழ்த்துக்கள்' என எழுதி புலி இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கிறது. மெச்சியதற்கும் பதவி உயர்வுக்கும் அவன் முகத்தில் மகிழ்ச்சியின் அறிகுறி இல்லை.

உன் அப்பாவிடம் சொல்ல வேண்டாமா...? என்ற வல்லபனின் கேள்விக்கு 'வீரனுக்குத்தான் தாய், தந்தை, மனைவி, மக்கள், குரு, சீடன், நண்பன் எவருமில்லையே' என்று விரக்தியாகச் சொல்லிவிட்டு பயணிக்கத் தொடங்குகிறான்.

பதினெட்டு வயதில் ஒரு வீரன் சந்திக்கும் முதல் போர் குறித்த கதைதான் இது.... இதற்குள் ஒரு காதலியைக் கொண்டு வந்து... கதை சொல்லிச் சென்றாலும் அதன் போக்கில் பயணிக்கும் போது கடிகையில் நிகழும் போர் காட்சிகள் அவசரமாக முடிக்கப்பட்டிருப்பதால் கதையை வாசித்து முடிக்கும் போது ஏதோ தொக்கி நிற்பது போல் தோன்றுகிறது.

பாலகுமாரனைப் பிடிக்காதென்றாலும் இந்தக் கதையை வாசிக்கலாம்... மரணம் குறித்த பேச்சு... முதல் போர் கொடுக்கும் அழுத்தம்... காதலர்களின் பேச்சில் சங்கப்பாடல் விளக்கம்... குறிப்பாக துதிபாடல் இல்லாதது என வாசிப்பில் அலுப்பில்லாமல் நகர்கிறது.

இதைத் தொடர்ந்து வாசித்த 'கவிழ்ந்த காணிக்கை' குறித்து மற்றொரு பதிவில் பார்ப்போம்.

*****

பிரதிலிபி போட்டியில்.... (வாசிக்க நினைத்தால் இணைப்பைச் சொடுக்குங்கள்)
                                               சிறுகதை : தலைவாழை
                                               கட்டுரை   : பதின்மம் காப்போம்

-'பரிவை' சே.குமார்.

புதன், 15 நவம்பர், 2017

சோலோ - மலையாளம்


Image result for solo
சோலோ-

இது ஒரு பரிஷார்த்த முயற்சி.

அப்படித்தான் சொல்ல வேண்டும். இதுவரை இப்படியான ஆந்தாலஜி வகை படங்கள் தென்னிந்திய மொழிகளில் வந்திருக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி இல்லை என்ற வார்த்தையைச் சொல்லும் போது இது ஒரு கன்னி முயற்சிதானே... அதுதான் பரிஷார்த்தம் என்பதாய் முதல் வரியில்.

நாம் பார்த்த சினிமாக்களில் நாலைந்து கதைக்களங்கள் இருந்தாலும்... வெவ்வேறு புள்ளியில் ஆரம்பித்து நகர்ந்து எல்லாக் கதையும் ஒரே புள்ளியில் இணைந்து சுபமாகவோ சோகமாகவோ முடியும். ஆனால் இதில் நான்கு புள்ளிகளை வைத்து அதை இணைக்க மையப்புள்ளி என்று ஒன்று வைக்கவே இல்லை.

நாலும் நாலுவிதமான... ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கதைகள். ஒன்று முடிந்ததும் மற்றொன்று...எல்லாம் அழகிய குறும்படமாய்... அதற்குள் காதல், சோகம், மகிழ்ச்சி, வலி என எல்லாமே இருக்கிறது.

ஒவ்வொரு கதைக்களத்துக்கும் இசை,ஒளிப்பதிவு என எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்.

படம் ஆரம்பிக்கும் போதே சிவனின் நர்த்தனத்தை ஓவியமாகி ஒரு பாடலின் பின்னணியில் இது சிவன் சார்ந்த கதை எனக் காட்டி விடுகிறார்கள். ஒவ்வொரு கதைக்கும் முன்னர் சிவனின் ஓவியம் காட்சிப்படுத்தப்படுகிறது. அது விளக்குகிறது கதைக்கான களத்தை.

நீர், காற்று, நெருப்பு, நிலம் என நான்காய் களம்.

நான்கிலும் நாயகன் மம்முட்டியின் மைந்தன் துல்கர் சல்மான்.

நான்கிற்கும் நான்கு விதமான நாயகிகள்.

நீண்ட முடி வளர்த்து கல்லூரி ரவுடியாக, திக்குவாய் ஷேகர்... 

கண்ணாடி அணிந்த, லேசான தாடி வைத்த விலங்குகள் மருத்துவர் திரிலோக்...

டானின் வலதுகரமாக... எதற்கும் துணிந்த ஷிவா...

இராணுவ வீரனான, கோபக்காரனான ருத்ரா...

இப்படியான நாலு கதாபாத்திரங்களையும் தன் தோளில் சுமந்து படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் துல்கர்.

Image result for dhansika in solo

முதல் கதையின் நாயகியாய் தன்ஷிகா... கபாலியில ரஜினியின் மகளாய் வருவாரே... அட டி.ஆர். இங்கிதமில்லாம மேடையில் வைத்து திட்ட, அதை அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் சிரிச்சிக்கிட்டு வேடிக்கை பார்க்க கண்ணீர் விட்டு அழுதுச்சே... அந்தப் பொண்ணுதாங்க...

தன்ஷிகாவுக்கு கண் தெரியாது... அவரோடு ஷேகருக்குக் காதல்... வீட்டில் கண் தெரியாதவளைக் கட்டக்கூடாதென எதிர்ப்பு... மீறித் திருமணம்... குழந்தை... பிறக்கும் குழந்தைக்கும் கண் தெரியாமல் போவதற்கான சாத்தியக்கூறு... ஒரு தொகை கொடுத்து ஒதுக்கி விடலாம் என வீட்டார் முடிவு... இப்படியான நகர்வின் முடிவு என்ன என்பதை கோபம், காதல், பிரிவு, வேதனை என எல்லாம் சமமாய்க் கலந்து கொடுத்திருக்கிறார். 

இது நீர் சம்பந்தப்பட்டது என்பதால் பெரும்பாலான காட்சிகள் நீரோடு... கண் தெரியாத தன்ஷிகாவின் அறிமுகம் நீர் நடனத்தில்... காதலைச் சொல்லும் இடம்... பிரிவுக்கான இடம் என எல்லாமே நீர் சம்பந்தப்பட்ட இடமாகவே.

முடி வளர்த்த துல்கரைவிட அழகான தன்ஷிகா கவர்கிறார்.

Image result for arthi venkatesh solo

இரண்டாவது கதையில் ஆர்த்தி  வெங்கடேசை காதல் திருமணம் செய்த திரிலோக்... மனைவியுடன் ஒரு ஜாலியான சைக்கிள் பயணம்... கணவனை விடுத்து தனியே பயணிக்கும் மனைவிக்கு ஆக்ஸிடெண்ட்... உயிர் இருக்கு காப்பாற்றி விடலாம் என மருமகனும்... வேண்டாமென மாமனும்.. இந்தப் போராட்டத்தில் மாமன் வெற்றிபெற சில தூரம் கொண்டு சென்று ரோட்டில் போட்டுவிட்டு போய்விடுகிறார்கள்... அவள் மூச்சை விடுகிறாள்.

அவளை மோதியவனில் மாமன் மரணமடைய மருமகனுக்கு ஒரு விபத்து... அவனைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறான் கால்நடை மருத்துவரான திரிலோக். அவனின் மனைவியின் சாவுக்கு தானே காரணம் என்பதால் அவனிடம் உண்மையைச் சொல்லத் துடிக்கிறான் மருமகன்.

அவன் சொன்னானா... மனைவியைக் கொன்றவர்களை என்ன செய்தான் த்ரிலோக் என்பதை விறுவிறுப்பாய்ச் சொல்லியிருக்கிறார்கள்.

இது காற்று சம்பந்தமானது என்பதால் மூச்சும், செல்போன் பேச்சுமே பிரதானமாய்...

Image result for சோலோ ஸ்ருதி ஹரிஹரன்

மூன்றாவது கதைக்களம் தமிழ்ச் சினிமாவின் டான் வகையறா... ஒரு பெரிய ரவுடி... அவனுக்குக் கீழே சில இரண்டாம் கட்ட ரவுடிகள்... அதில் பிரதானமாய்... வலது கையாய் ஷிவா... பொதுவாய்ச் சொல்லப் போனா தேவாவுக்கு சூர்யா மாதிரி... புதுப்பேட்டை தனுஷ் மாதிரி...

அவன் முரடன் என்றாலும் காதலிக்கும் மனைவியாய் ஸ்ருதி ஹரிஹரன்... ரவுடியாகத் துடிக்கும் தம்பி... அவன் அன்பு செலுத்தும் குழந்தை.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏற்பட்ட பிரிவின் வலி சுமக்கும் இதயம்... அப்பாவைக் கொன்றவனை தேடிச் செல்லுமிடத்தில் அவனின் மனைவியாய் அம்மா.

முடிவு பரிதாபமாய்...

இது நெருப்பு சம்பந்தப்பட்டது என்பதால் துப்பாக்கியே பிரதானம்.

Related image

நான்காவது கதையில் ருத்ரன் இராணுவத்தில் பயிற்சி நிலையில்... இராணுவ அதிகாரி மகளான நேஹா சர்மாவுடன் காதல்... பெண் வீட்டார் எதிர்ப்பால் வேலைக்கு அபாயம்... காதலி படிப்பிற்காக வெளிநாடு செல்கிறாள்... காதல் உடைக்கப்படுகிறது... அவளுக்குத் திருமணம்.

அதை நிறுத்த வந்து பிரச்சினையாக, காதல் உடைபட்டதற்கு உன் அப்பனே காரணம் என்கிறாள் (முன்னாள்) காதலி. அப்பா மீது கோபம்... அம்மாவும் அப்பாதான் காரணம் என்கிறாள் வேறொரு கதையோடு.

திருமணம் நின்றதா... இல்லையா.. காதல் சேர்ந்ததா... என்பதை காதலோடு சொல்லியிருக்கிறார்கள்.

நாலு விதமான கதைகள்... ஒன்றோடொன்று இணையாத தண்டவாளமென.

இதில் தன்ஷிகாவுக்கே முதலிடம்... நேஹாவுக்கு இரண்டாமிடம்... மற்றவர்களுக்கு அதிக வேலையில்லை என்றாலும் நடிப்பில் குறையில்லை.

அதென்ன சோலோ... இந்தப் படத்தை சோலோவாக அதாவது தனியாளாக தூக்கி நிறுத்தியிருப்பவர் சல்மான். அதனால் இருக்கலாமோ என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

அப்ப சோலோன்னா...?

நான்கில் மூன்றில் தனிமைப்பட்டு நிற்பதாலும் வலிகளையும் வேதனையையும் அவன் ஒருவனே சுமப்பதாலுமே 'சோலோ' என்ற தலைப்பிட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

சரி விடுங்க... பெயர் காரணம் இப்ப எதற்கு...? படம் எப்படி...?

இது வித்தியாச முயற்சி.... 2.30 மணி நேரத்தில் நாலு படங்களைப் பார்த்த திருப்தி.

அழகான நாயகிகள்... 

அருமையான எடிட்டிங்...

புதிய முயற்சியைப் பார்க்கும் விருப்பமிருந்தால் படத்தைப் பார்க்கலாம்...

Related image

முதல் கதையின் முடிவை அறியாமல் கதை சூடு பிடிக்கும் என்று நினைக்கும் போது இரண்டாவது கதை தொடங்கிவிடுவதால் ஒரு அயற்சி ஏற்படுகிறது... ஒவ்வொரு கதையையும் விரிவான திரைக்கதையாக்கினால் நாலு படங்கள் எடுத்திருக்கலாமே எனத் தோன்றுகிறது.

நல்ல படம்ன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். அப்படி என்ன வித்தியாசமாய் இருக்கு எனப் பார்க்க விரும்பினால் பார்க்கலாம்... போரடிக்காது என்றுதான் சொல்லுவேன்.

நேரடித் தமிழ்ப்படமாகவும் வந்திருக்கிறது. தமிழ்க்கண்-ல் நல்ல பிரிண்ட் வந்தாச்சு.

நான் மலையாளத்தில் பார்த்தேன்.

***

பிரதிலிபி போட்டியில்....

                                       சிறுகதை : தலைவாழை

                                       கட்டுரை  : பதின்மம் காப்போம்
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 13 நவம்பர், 2017

மனசின் பக்கம் : திருமணக் கதை பேசிய விருது

'திருமண ஒத்திகை' -

இந்தத் தலைப்பு பலருக்கு நினைவிருக்கலாம். ஆர்.வி.சரவணன் அண்ணன் தனது குடந்தையூர் தளத்தில் எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்தி, புத்தகமாகக் கொண்டு வர நினைத்த கதைதான் இது. 

இதில் நாயகன், நாயகி, கதையாசிரியர் என மூன்று பார்வைகளாய் கதை விரியும். அவரது பாணியில்... அதாவது திரைக்கதையாய் விரியும் கதை. இதை புத்தகமாகக் கொண்டு வரும் வேலைகளை ஆரம்பித்த போது பாக்யாவில் தொடராக வரும் வாய்ப்பைப் பெற்றது. 

இந்தக் கதையை இரண்டு முறை முழுவதும் வாசித்திருக்கிறேன். இப்போது புத்தகமாகி, திரைக்கதை வித்தகர் பாக்கியராஜ் அவர்கள் தலைமையில் நேற்று வெளியிடப்பட்டிருக்கிறது. 

இது அவரின் இரண்டாவது நாவல். முதல் நாவல் 'இளமை எழுதும் கவிதை நீ' முழுக்க முழுக்க கல்லூரியைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை நாவல். இதுவோ திருமண நிச்சயம்... அதன் பின்னான நிகழ்வுகள் என இரு மனங்களையும் இரு குடும்பங்களையும் வைத்து எழுதப்பட்ட திரைக்கதை வடிவிலான நாவல்.

Image result for திருமண ஒத்திகை

இந்த நாவலை புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கியபோது எனக்கு ஒரு மின்னஞ்சல்... அதில் நீங்க ஒரு அணிந்துரை எழுதித் தரவேண்டும் என்று கேட்டிருந்தார். 

'நானா... அணிந்துரையா.... கதையென எதையாவது கிறுக்கிவிடலாம்... ஒரு நாவலுக்கு அணிந்துரையா' என்று யோசித்து மறுத்த போது நீங்கதான் எழுதுறீங்க என்று அன்புக்கட்டளை இட்டார். அதன் பின் எழுதி அனுப்ப, கதை பாக்யாவில் 21 வார தொடரானது.

தற்போது அவரின் கனவான இரண்டாவது நாவலாக... அதுவும் பாக்யாவில் வெளிவந்த தொடர்கதை என்ற ஒரு மகுடமும் சேர்ந்து கொள்ள, அந்த மகுடத்தில் பாக்யராஜ் என்னும் மலையோடு இந்த மடுவின் அணிந்துரையும் வந்திருக்கிறது. 

பின் அட்டையில் அவரோடு எங்கள் போட்டோவெல்லாம் போட்டிருக்கிறார். இதெல்லாம் ஏன் என்று கேட்டபோது எப்பவும் போல் சிரித்தபடி 'கேட்டதும் எழுதிக் கொடுத்தீங்க... எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது...' என்றார். 

நான் மதிக்கும் விரும்பும் ஒரு திரைக்கதையாளனின் படத்தோடு, என்னை நேசிக்கும்.. நான் விரும்பும் வருங்கால இயக்குநரின் படத்தோடு என் படமும் பின் அட்டையில் பார்த்துப் பரவசமானேன். 

இன்று காலை போன் செய்தபோது விழா மிகச் சிறப்பாக நடைபெற்றதாக மகிழ்வுடன் சொன்னார். அவர் இன்னும் நிறைய புத்தகங்கள் கொண்டு வரவும் அவரது இயக்குநர் கனவு விரைவில் நிறைவேறவும் இறைவனைப் பிராத்திக்கிறேன்.

வாழ்த்துக்கள் அண்ணா.

அவர் அனுமதிக்கும் பட்சத்தில் அணிந்துரையை இங்கு பகிர்கிறேன்.
**** 
'கதை கதையாம்' -

பிரதிலிபி சிறுகதைப் போட்டி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எப்படியும் வெற்றியைத் தட்டிச் செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஒவ்வொரு பிரசவத்தின் போதும் எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும்... அப்படியான ஒரு எதிர்பார்ப்பு என்னுள்ளே.

வாசகர் பார்வைக்கான ரேசில் ஆறாயிரத்துக்கு மேல் பெற்று வாசிப்பின் அடிப்படையில் மூன்றாவது இடமென்றாலும் அவர்களின் தேர்வு முறையில்  நாலாவது இடத்தில் வந்து வெற்றியைத் தவறவிட்டிருக்கிறது. 

இந்தக் கதை பிறந்தது ஒரு மாலை வேலையில்... இது போட்டிக்கென எழுதிய கதை இல்லை... முன்பு எழுதி என் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததுதான். போட்டிக்கான இறுதி நாளில்தான் அனுப்பியிருந்தேன். வாசித்த, கருத்துக்களிட்ட அனைத்து நட்புக்களுக்கும் நன்றி.


இங்கு குறும்படங்கள் எடுக்கும் அண்ணன் ஒருவர் அந்தக் கதையை குறும்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். தற்போது வெறொரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். விரைவில் திரைக்கதை எழுதி, எனக்கு அனுப்புவதாய்ச் சொல்லியிருக்கிறார். கதை மட்டுமே என்னுடையது... திரைக்கதை அவர் பாணியில். நட்பிற்காக சரியெனச் சொல்லியிருக்கிறேன்.

கதையை விரைவில் இங்கு பகிர்கிறேன்.
****
திரு.எஸ்.இராமகிருஷ்ணன் -

அவர்களுடனான சந்திப்பின் நிகழ்வுகளை 80% அளவுக்கு மூன்று பதிவாகத் தொகுத்திருந்தேன். ஒரு நண்பர் பேப்பரும் பேனாவும் கையிலேயே இருக்குமோ என்றார். பாக்கெட்டில் பேனாவும் கையில் வாட்சும் இல்லாது எங்கும் செல்லாத நான் அன்று பேனாவும் எடுக்கவில்லை... வாட்சும் கட்டவில்லை. 

எல்லாமே அவர் சொல்லும் போது கேட்டுச் சேமித்தவைதான்... எழுதியெல்லாம் வைக்கவில்லை. அப்படி எழுதி வைத்து எழுதும் பழக்கமும் இல்லை. முடிந்தவரை அவர் என்ன பேசினார்.. எதற்கடுத்து எதைப் பேசினார் என்பதை யோசித்தே எழுதினேன். முகநூலில் பகிர்ந்த பதிவை அவரின் மனைவி தன் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


ஷார்ஜா வந்ததைப் பதிவாக்கிய எஸ்.ரா அவர்கள் அதில் எங்களுக்கும் இடமளித்து எங்கள் படங்களையும் பகிர்ந்து கொண்டிருப்பதைப் வாசித்தபோது சிறந்த எழுத்தாளனின் வரிகளில் நாமும் என்ற சந்தோஷம் ஏற்பட்டது. 

'சூப்பரா எழுதியிருக்கீங்க... நீங்கதான் அவர் பேசிய மொத்தத்தையும் விரிவாக் கொடுத்திருக்கீங்க... மூன்றையும் ஒன்றாக்கி ஆவணப்படுத்தி வையுங்க' என்றார் எழுத்தாளர் கனவுப்பிரியன்.
****
திரு. சுபான் பாய் -

பாலை மண்ணிலும் எஸ்.ராவுடனும் எங்களை மிக அழகாக கேமராவில் சுட்ட கேமராக் கவிஞன் இந்த அண்ணன். இவருக்கு Dear Health Medical Centre , Ajman, UAE என்ற மருத்துவ நிறுவனம்  'BEST PHOTOGRAPHY' விருதினை H.H.SHEIKH ABDUL MUNAEM BIN NASSER AL NUAIMI ,AJMAN . அவர்களில் கையால் வழங்கி கெளரவித்திருக்கிறது.

Image may contain: 2 people, people standing

வாழ்த்துக்கள் அண்ணா.
-'பரிவை' சே.குமார்.

சனி, 11 நவம்பர், 2017

இலக்கில்லா பேச்சின் இனிமை - 3

ழுத்தாளர் திரு. எஸ்.ரா. அவர்களுடன் ஒரு நிலா ஊர்வல இரவில் அபுதாபி ஷேக் சையீத் பள்ளியில் பள்ளி நாட்களில் சுற்றுலா செல்லும் போது ஆசிரியர் அந்த இடம் குறித்து விளக்கமாய்ச் சொல்லிச் செல்ல, அதைக் கேட்டுக் கொண்டு அந்த இடத்தை ரசிக்கும் மாணாக்கர்களாய் பள்ளியின் அழகினைப் பருகியபடி, எஸ்.ரா. அவர்களின் பேச்சைச் சுவாசித்துக் கொண்டு நடந்த கதையை சென்ற இரண்டு பகிர்விலும் பார்த்தோம்.

அதன் பின் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவிடம் சென்று அங்கும் தொடர்ந்த பேச்சினைக் குறித்தும் அந்த இடத்தில் பெரிய பள்ளியின் அழகு பிம்பமாய் சொக்க வைப்பதையும் சென்ற பதிவில் சிலாகித்திருந்தேன். சிறு வயதில் வீட்டு வாசலில் பாய் விரித்து நிலா ஊர்வலத்தை ரசித்தபடி, நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டே நகரும் நட்சத்திரங்களையும் கடக்கும் விமான விளக்குகளையும் ரசித்தபடி அம்மா சொல்லும் கதைகளுக்கு உம் கொட்டிக் கொண்டு உறங்கிய நாட்களின் ஞாபகம் மனசுக்குள் எழ, எழுத்தாசிரியரின் பேச்சின் வீச்சில் வீழ்ந்து கிடந்தோம்.


ஏழை, பணக்காரன் குறித்தான பேச்சில் பணக்காரனைப் பார்த்த்து ஏழை ஆடம்பரம் என்பான் என்றும் ஏழையைப் பார்த்து பணக்காரன் அநாதை என்பான் என்றும் சொல்லி இலக்கண இலக்கியம் குறித்து விளக்கினார். இந்தப் பணக்காரன் - ஏழை மிக நீளமான பேச்சாக அமைந்தது.

பசி, காதல், காமம், வாழ்க்கை என எல்லாவற்றையும் மிக விரிவாக அலசினார்... அவரின் இலக்கில்லாத பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தோம். பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், காந்தி என இன்னொரு பரிமாணத்திலும் பயணித்தார்.

சிறுவயதில் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னரே என்னென்ன பலகாரம் செய்வோம், அதை விரும்பி எப்படிச் சாப்பிடுவோம் என்பதே பேச்சாக இருக்கும். தீபாவளி அன்று எல்லாப் பலகாரமும் தயாராக, நசநசக்கும் மழையும் ஏதோ காரணத்தால் சாப்பாட்டின் மீதான விருப்பமின்மையும் எதெல்லாம் சாப்பிட வேண்டுமென நினைத்தானோ அதை சாப்பிடாமல் வெடியுடன் செல்பவனை என்னடா நல்லா சாப்பிடடியான்னு சகதோழன் கேட்கும் போது இல்லடா என்பான் என்று பசி, காமத்தில் பயணிக்கும் போது விளக்கமாய் சொல்ல இதையும் சொல்லிச் சென்றார். இதன் பின்னே தொடர்ச்சியாய் பயணித்தார்.

ஜோசப் நீத்தம் என்னும் அயர்லாந்து மருத்துவர் பெயரில் சீன அரசு விருது வழங்குவது குறித்துச் சொன்னவர் அந்த மருத்துவரே இதுதான் சீனா என்பதாய் 23 தொகுதிகள் கொண்ட புத்தகம் எழுதியவர் என்றும் அதுவே சீனா குறித்து இதுவரை உலகம் அறிய உதவும் கருவி என்பதையும் சொன்னார். அதற்காக அந்த மருத்துவர் சீன மொழி கற்றதுடன் நில்லாமல் லட்சக் கணக்கான புத்தகங்கள் வாசித்ததாகவும் அதற்காக ஒருவர் ஒரு லட்சம் புத்தகங்களை அவருக்கு கப்பலில் அனுப்பிக் கொடுத்த தகவலையும் அவர் கதையாகச் சொன்னபோது வியப்பாக இருந்தது.

நேரம் அதிகமாகிவிட்டபடியால் சாமி கும்பிட கோவிலுக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ஊரில் திருவிழாவில் மைக்கில் கத்துவது போல... (நானும் கத்தியிருக்கிறேன் எங்கள் ஊரில்). ஹோட்டல் அடைத்து விடுவார்கள் என்பதை நண்பர்கள் மெல்லச் சொல்லிக் கொண்டிருந்ததால் இச்சுவை நிறுத்தி அச்சுவை பெறச் செல்வோம் என மெல்ல நகர்ந்தோம்.

பள்ளியின் பிம்பத்தினை பிரமாண்டமாக்கி தரையோடு காதல் கொண்டு நகர்ந்த தண்ணீர் வாய்க்காலோட அதைக் கடக்கும் போது தண்ணீர் பூமிக்கு எதிர் திசையில் பயணிக்குமா எனக்கேட்டு, அதற்கு அவரே பதிலாய் பயணிக்கும் என்று சொல்லி, அதன் பின் தண்ணீர்தான் ஆவியாகவும் நீராகவும் பணிக்கட்டியாகவும் முப்பரிணாமத்திலும் இருக்கும் என்றும் மற்ற எதற்கும் அப்படி ஒரு தன்மை இல்லை என்றும் காரணங்களுடன் விளக்கினார்.

சிறுகதைகள் எழுதும்போது சம்பந்தப்பட்ட கதாபாத்திரமே சொல்ல வந்ததை பேசக்கூடாது.... எல்லாரும் அறிந்த செய்திகளை உள் வைத்து எழுதுவதை விட, புதிய செய்திகளை உள்வைத்து எழுதப் பழக வேண்டும் என்று கனவுப்பிரியன் அண்ணனிடம் அவர் சொன்னபொது அங்கிறைத்த நீர் இங்கும் கொஞ்சம் பாய்ந்தது. அவர் சொன்னதைப் போல் பல கதைகள் எழுதியிருக்கிறேன் என்றாலும் கனவுப்பிரியன் போல் செய்திகளை கதைக்குள் வைத்து எழுத நமக்கு வருவதில்லை.

கூழாங்கற்கள் பற்றிப் பேசியவர், மழையை ரசித்தபடி ஒருவர் பயணிக்கும் கதையை உங்கள் தொகுப்பில் எழுதியிருக்கிறீர்கள் இல்லையா என கனவுப்பிரியன் அண்ணனிடம் கேட்டார். வியப்பாக இருந்தது... பிரபலங்கள் ஒருவரின் கதையை ஞாபகத்தில் வைத்து கேட்பதென்பது அரிது. இது கனவுப்பிரியன் அண்ணனுக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

மெல்ல நகர நான்கு கார்களில் அபுதாபி நகருக்குள் பயணித்தோம். நான் துபையில் இருந்து வந்த நண்பர் நந்தகுமாரின் காரில் அவருக்குத் துணையாக... அந்தக் காருக்கு வழிகாட்டியாக சுபான் பாயும் கனவுப்பிரியனும் முன்னே. எங்களுக்குப் பின்னே வந்து பின் முன் சென்றது மற்ற இரண்டு கார்களும். ஒன்றில் எஸ்.ராவின் பேச்சை ரசித்துக் கொண்டே பயணித்தார்கள் நண்பர்கள்.

காரில் பயணிக்கும் போது நண்பர் நந்தகுமார் பிஸ்கெட் கொடுத்து சாப்பிடச் சொன்னார். துபைக்குள் கார் ஓட்டியவருக்கு அபுதாபியில் கொஞ்சம் பயமே. காரணம் இடம் அறியவில்லை என்பதே என்றாலும் எனக்கும் பயமே... பின்னே சிக்கனலில் கார் நிற்கும் போது மொபைல் பார்த்து சிக்னல் விழுந்த பின்னே நாம் சொல்லித்தான் நகர்கிறார். இங்கு சிக்னல் அபராதம் எல்லாம் ஆயிரங்களில் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை போலும். அவரின் நட்பு மிகச் சிறப்பு. அருமையான நண்பர் அவர். அவரால்தான் நாங்கள் ஒரு இலக்கிய மாலையை அனுபவிக்க முடிந்தது. நன்றி நண்பா.

அஞ்சப்பர் உணவு விடுதி சென்று  சாப்பிட்டபடி மீண்டும் எங்கள் பேச்சு ஆரம்பமானது... ஒரு நண்பர் பாலாவின் அவன் இவனில் வசனங்கள் குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவுக்கு இருந்ததைச் சொல்லி, நான் குடும்பத்துடன் சென்று ரொம்பக் கஷ்டப்பட்டதாகச் சொன்னார். இப்ப நாமெல்லாம் இந்த வசனங்களை ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து செல்கிறோம்.  அவர் கடந்தாரா இல்லையா தெரியவில்லை ஆனாலும் அவன் இவன் அவரைப் பாதித்திருக்கிறது.

கதைகளில் கூட வட்டார வழக்கில் எழுதும் போது பல வார்த்தைகளை அப்படியே எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் என் நண்பர் நாடோடி இலக்கியனின் கதை வாசித்தேன். முழுக்க முழுக்க வட்டார வழக்கு... நிறைய வார்த்தைகள்... அதற்காக அந்தக் கதை சொல்ல வந்ததை... அது கொடுத்த தாக்கத்தை அனுபவிக்காமல் கடந்து சென்றேன் எனச் சொல்வது சரியல்ல... கிராமங்களில் எல்லா வார்த்தைகளும் சாதாரணமாக வந்து விழும்.

அந்த நண்பரின் குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை என்ற கூற்றை பிரபு ஆட்சேபித்தார். வீட்டில் நாம் கெட்ட வார்த்தை பேசுவதில்லையா என்றார். அவரின் கேள்வி நியாயமானதே... இப்போது கெட்ட வார்த்தைகள் வராத படங்கள் ஏது...? அதைப் பார்க்காத பெண்கள் ஏது..? 

இதற்குப் பதிலளிக்கும் போது அந்த மக்கள் அப்படித்தான் பேசுவார்கள்... இதுதான் வேண்டும் என்பதில் பாலா தீவிரம் காட்டியதாகவும் தனக்கு அவன் இவனில் வசனம் எழுதிய அனுபவம் குறித்தும் சொன்னவர், பாபாவில் அவருக்குக் கிடைத்த அனுபவத்தையும் அந்தப் படம் ஏன் தோல்விப்படம் ஆனது என்பதையும் விரிவாகச் சொன்னார்.

அவர் சென்ற ஆஸ்திரேலிய கிராமங்களில் காலையில் டீக்குடித்து விட்டு வயல் வேலை பார்க்கச் செல்பவர்கள் மாலை திரும்பி வரும்போது மீண்டும் டீக்குடித்துக் கொண்டு அளவளாவுவதையும் மாதம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ டவுனுக்குச் சென்று வேண்டியதை வாங்கி வருவதையும் பற்றியும் பேசினார்.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஜெய்சல்மார் பாலைவனத்தில் எல்லைப் பகுதியைப் பார்க்க தில்லியில் அனுமதி பெற வேண்டியதையும் அங்கு ஒட்டகத்தில் பயணித்த அனுபவத்தையும் சொன்னார்.

நிறைவான சாப்பாட்டுக்குப் பின்னர் அவர் தங்க இருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். எங்கள் அலுவலகத்தின் அருகில், நான் தினமும் கடந்து செல்லும் ஒரு கட்டிடமாக இருந்தாலும் அவருடன்தான் முதன் முதலில் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தோம். அங்கு வரவேற்பரையில் சில நிமிடங்கள் பேச்சு... பின் அவர் ஓய்வெடுக்க ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாவது தளத்தின் அறைக்குச் சென்றோம்.

அறையில் விளக்கு எரியவில்லை என்றாலும் மேசை விளக்கு வெளிச்சத்தில் அந்த அறை இலக்கியம் ருசிக்க ஆரம்பிக்க, போனில் சொன்னதால் சிறிது நேரத்தில் எலெக்ட்ரிசன் வந்து பீஸ் போகியிருந்த பல்பை மாற்றி வெளிச்சமாக்கினார். அதற்குள் எஸ்.ராவின் பேச்சின் மின்சாரம் பத்து முகங்களிலும் பரவி வெளிச்சக் கீற்றை அறையெங்கும் நிரப்பியிருந்தது.

நினைவிடத்தில் பிளாஸ்க்குள் புகுந்த டீ எங்கள் வயிற்றுக்குள் மெல்ல இறங்கியது... சுபான் பாய் அவர்களின் அன்பு மகள் எங்களுக்காக இஞ்சியெல்லாம் சேர்த்து மிக அருமையாக தயாரித்துக் கொடுத்த டீ... அவருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இந்த ஊரில் மிக அருமையான டீக் குடித்து எவ்வளவு நாளாச்சு... இதுவரை பெங்காலி கடை டீத்தான் சுவையாய் நாக்கை ஆக்கிரமித்திருக்கிறது.  மாலையே குடித்திருந்தால் இன்னும் சூடாய் இருந்திருக்கும்... நாங்கள் குடித்ததோ இரவு பதினோரு மணியளவில்... அப்போதும் இளஞ்சூடாய்.

பின்னர் மீண்டும் பெருமழையெனப் பெய்யாமல் ரம்மியமான சாரல். மழை நாளில் காபியுடன் சன்னலருகில் அமர்ந்து மழையை ரசிப்பது போல்... இந்தச் சாரல் என்னை மிகவும் கவர்ந்தது... ஏனென்றால் இந்த மழை சென்னை மழையின் போது கூட ஒரு சொட்டு மழை பெய்யாத எங்கள் சிவகங்கை, ராமநாதபுரத்தைச் சுற்றி வந்தது.

ஐந்திணைகள் பற்றி பேச்சு எழுந்த போது பாலைத் திணை என்பது பாலையைக் குறிப்பதல்ல அது கரடு என்பதைக் குறிக்கும் சொல் என்று சொன்னார். அப்ப பாலை என்பது பாலைவனத்தைக் குறிப்பதில்லையா அப்படியானால் இங்கு  நிலப்பரப்புக்கள் பிரிக்கப்பட்டிருக்குமா என்ற நண்பரின் கேள்விக்கு நாம் நமது நிலங்களை ஐந்திணைகளாகப் பிரித்திருப்பது போல் இங்கும் திணைகள் பிரிக்கப்பட்டிருக்கலாம்  என்றார்.

திணைகள் குறித்துப் பேசும் போது நாம் மேலிருந்து கீழாக வருவதால்தான் ஆழத்தைப் பார்த்ததாகச் சொல்கிறோம்... அவர் ஆழமாக யோசிப்பார்... அவர் ஆழமான விஷயத்தைப் பேசக்கூடியவர் என்று நாம் சொல்கிறோம்... ஆனால் மேலை நாட்டவரோ கீழிருந்து மேல் செல்பவர்கள் அதனால்தான் அவர்கள் 'உச்சத்தை' அடைந்தார் என்று சொல்கிறார்கள் என்றார்.

பழைய இராமநாதபுர மாவட்டம் அதாவது இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மூன்றும் ஒன்றாய் இருந்த போது ஐந்திணைகளையும் ஒருங்கே கொண்ட மாவட்டம் அது என்று அதன் சிறப்பைச் சொன்னார். இப்பவும் அந்த மாவட்டத்தில் இருக்கும் இந்து முஸ்லீம் ஒற்றுமையையும் ஒரு கிராமம் இந்துக்கள் ஒரு கிராமம் முஸ்லீம்கள் என்று இருப்பதையும் சொன்னவர் முஸ்லீம் ஒருவர் மற்ற மதத்தவர்களின் ஊரில் பிரசிடெண்டாக இருப்பதை யாரும் எதிர்ப்பதில்லை என்றார். எங்கள் தேவகோட்டைக்கு அருகில் ஒரு கிராமத்தில் சந்தனக்கூடு விழாவை மற்ற மதத்தினரே முன்னின்று மிகச் சிறப்பாக இன்றுவரை நடத்தி வருகிறார்கள். யாருக்கும் மதம் பிடிப்பதில்லை.

எல்லா நதியும் கடலில் கலந்தாலும் கடலில் கலக்காமல் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கண்மாயில் கலக்கும் வைகை பற்றியும், நாரை பறக்க முடியாத 48 மடைகளைக் கொண்ட ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் குறித்தும் சொன்னார்.  

ஓரியூரில் சர்ச் கட்டியதும் அங்கு வந்த பாதர்களை வரவிடாமல் தடுத்து வந்ததையும் பின்னர் அவர்கள் அனுமதி பெற்று உள்ளே வந்ததையும் சொல்லி, தற்போது சர்ச் இல்லாத ஊரே இல்லை... எல்லா ஊரிலும் சர்ச் உண்டு என்றார்.

இடைக் காட்டூரில் ஐயர்கள் இருக்கும் வீதியில் இருக்கும் பிரமாண்ட சர்ச்சைக் குறித்தும் அந்தச் சர்ச் பெல்ஜியத்தில் இருக்கும் சர்ச்சைப் போல் இருப்பதாகவும் பல பொருட்கள் அங்கிருந்து தருவிக்கப்பட்டவை என்று சொன்னார். மேலும் இன்றும் அந்த ஊரில் ஜோசப் ஐயர், ஜேம்ஸ் ஐயர் எனப் பெயர்கள் இருப்பதைச் சொல்லி, கிராமங்களில் சர்ச் பாதர்களை ஐயர்மார் என்று சொல்லும் வழக்கம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தை அவர் விவரித்த போது ஆச்சர்யமாக இருந்தது. தான் பண்பாடு என்றுதான் எழுதுவதாகவும் பேசுவதாகவும் சொன்னார். தீவிரவாத கலாச்சாரம் துவங்கியது என்றுதான் சொல்கிறோமே தவிர பண்பாடு என்று சொல்வதில்லை. இரண்டும் ஒன்றைக் குறிக்கும் சொல்லாக இருந்தாலும் பண்பாடு என்ற சொல் நல்லதுக்கே பயன்படுத்தப்படுகிறது என்பதையும் சொன்னார்.

இங்கிருக்கும் வெயில் குறித்துப் பேசும் போது இது அடர்த்தியான வெயில் என்றார். நம் ஊர் வெயிலில் நாம் சென்றாலும் நம் உடலில் ஒரு பிசுபிசுப்பு ஏற்படுவதில்லை. இங்கு அந்த பிசுபிசுப்பு இருக்கிறது என்ற போது நண்பர் ஒருவர் நாங்க இங்கதான் இருக்கிறோம்... வேலைக்குப் போறோம் வர்றோம்... அடர்த்தியா இருக்கா... அடர்த்தியில்லாம இருக்கானுல்லாம் பாக்குறதில்லை என்றபோது நான் பலநாடுகள் செல்பவன் ஒவ்வொரு நாட்டு வெயிலும் எப்படியானது என்பதை நான் அறிவேன் என்று சொன்னார்.

வருடத்தில் ஒரு மாதம் நம்ம ஊர் வெயிலில்  இருந்து விட்டு இங்கு வரும்போது கருத்துப் போய்த்தான் வருவோம். இங்கு பதினோரு மாதங்கள் வெயிலில் அலைந்தாலும் உடல் கருப்பதில்லை. ஒரு வேலை அடர்த்தி அதிகமிருந்து உடம்பில் பிசுபிசுப்பு உண்டாவதால் இருக்குமோ தெரியவில்லை.

யாருமே அயலக வாழ்க்கையை சினிமா ஆக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டபோது இந்த வாழ்க்கையை ஆக்க நினைத்தால் அனுமதி பெறுவது சிரமம்... முன்பு ஒரு முறை முயற்சித்து முடியாமல் போய்விட்டது. இதிலிருக்கும் நல்லதைச் சொல்ல விடுவார்கள்... தீமையைச் சொல்ல விட மாட்டார்கள் என்றவரிடம் மலையாள சினிமாக்கள் பல இங்கு எடுக்கப்படுகிறதே என்ற கேள்வியை நண்பர் ஒருவர் முன்வைத்தார்.

மலையாளத்தில் எத்தனை சினிமா வந்தாலும் அவற்றில் இந்த வாழ்க்கையைப் பேசுவதில்லையே என்றார். அது உண்மைதான் மலையாள சினிமாக்கள் அரபு நாட்டைப் பற்றி பேசுமே ஒழிய அரபு நாட்டில் வேலை பார்ப்பவர்களின் கறுப்புப் பக்கங்களைப் பேசாது. நான் எழுதிய பேச்சிலர் ரூம் நிறையப் பேரால் வாசிக்கப்பட்டது.

இந்த வாழ்க்கையைச் சொல்ல நினைத்தால் செட்டுப் போட்டு எடுக்கலாம்ல்ல என்றவரிடம் இந்த வாழ்க்கையை... இந்தத் தெருவை... நீங்கள் தங்கியிருக்கும் இடத்தை... உங்கள் வலிகளை ஒரு செட்டுக்குள் சொல்லிவிட முடியாது. இங்கு வந்து படம் பிடித்தால்தான் இங்கிருப்போரின் வாழ்க்கையைச் சிறப்பாகச் சொல்ல முடியும்.

இந்த மண்ணைப் பற்றி அதிகம் எழுதப்படவில்லை என்ற ஆதங்கத்துக்கு இங்கிருப்பவர்கள் முயற்சியுங்கள் என்று சொன்னார். அப்போது பாலை மண்ணின் காதலன் கனவுப்பிரியன் அதற்கான முயற்சியில் இருக்கிறார் என்றும் தற்போது எழுதும் நாவல் கூட அரபு தேசத்தைப் பேசும் என்றும் பிரபு அவர்கள் சொன்னார். அப்படியா... சிறப்பாக எழுதுங்கள் உங்களால்தான் இதை சிறப்பாகச் சொல்ல முடியும் என்றார்.

தனது குடும்பம் பற்றி... தன் பசங்களில் மூத்தவர் சினிமாத் துறையிலும் சிறியவர் எழுத்துத் துறையிலும் பயணிக்க ஆரம்பித்திருப்பதைச் சொன்னார். அவர் எழு புத்தகங்கள் வெளியிட்டிருப்பதாகவும் தற்போது ஆங்கிலத்தில் கதைகள் எழுதுவதாகவும் சொன்னார்.

வெளிநாடுகளில் எழுத்தாளன் என்பவன் செல்வந்தன்.... நம் நாட்டில் அப்படியா... ஒரு முறை வெளிநாட்டு விமான நிலையத்தில் நான் யார் என்று கேட்க எழுத்தாளன் என்றதும் மில்லியன் கணக்கில் சொத்து இருக்குமே என்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை எழுத்து வருமானம் என்றார். நமக்கு அது அத்ம திருப்திக்கானது என்றார்

தமிழ் எழுத்தாளனாய் இருப்பது குறித்துக் கேட்கப்பட்ட போது மிகப் பழமையான நம் தமிழ் மொழியில் எழுத எனக்கும் ஒரு இடம் கிடைத்திருக்கிறதே... தமிழ் எழுத்தாளனாய் இருப்பதில்  எனக்குப் பெருமையே என்றார்.

வெளிநாட்டு வாழ்க்கையில் நிறைய வாழ்க்கைச் சுமைகள் இருக்கும் என்றும் அதனால் ஊருக்குச் சென்றாலும் சில நாளில் என்ன இன்னும் கிளம்பலையா என்ற கேள்வி எழும் என்றும் ஏன் பிள்ளைகள் கூட கேட்பார்கள் என்றும் சொன்னார்... இது உண்மையே... இதை அனுபவித்தவர்களுக்கே அந்த வலி தெரியும்.

இன்னும் இன்னுமாய் பள்ளியில் ஆரம்பித்து நினைவிடம் நகர்ந்து அஞ்சப்பரில் அடித்து ஆடி அறையில் அமர்ந்து பெருமழையென விடாமல் அவர் பேசிக் கொண்டே இருக்க,   மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டுமே என பிரிய மனமின்றி விடைபெற்ற போது எங்களைத் தனித்தனியே அணைத்து அன்பு செலுத்தி சென்னை வந்தால் வீட்டிற்கு வாருங்கள் என்றவரிடம் மீண்டும் ஒருமுறை குடும்பத்துடன் அபுதாபி வாருங்கள்... சில நாட்கள் தங்கியிருந்து சுற்றிப் பார்த்துச் செல்லலாம் என்று சொன்னதும் கண்டிப்பாக வருகிறேன் நாமெல்லாம் மீண்டும் சந்திப்போம் என்றார். 

சுபான் பாய் கனவுப்பிரியன் அண்ணனுடன் செல்ல, நான் திரு.வேல்முருகன் அவர்களின் காரில் நண்பர்களுடன் கார்னிச் சாலையில் பயணிக்க, காருக்குள்ளும் தல பிரபும் மற்றொரு நண்பரும் இலக்கியம் பேச, அலைனில் இருந்து வந்திருந்த பிரபு தான் தங்கியிருந்த நண்பரின் அறைக்கருகே இறங்கிக் கொள்ள, இரவுப் பசி தீர்த்துக் கொள்ள நடந்த பேரத்தைப் பார்த்தபடியே கார் ஹம்தான் சாலைக்குள் வர நான் இறங்கி அறைக்கு வந்தபோது அமீரகத்தின் தலைநகரம் அபுதாபியில் நள்ளிரவைக் கடந்து ஞாயிறு பிறந்திருந்தது.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.