மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 14 ஜூன், 2019

மனசு பேசுகிறது : நட்பும் எழுத்தும்

ன் வாழ்க்கை எப்போதுமே நட்புக்கள் சூழத்தான் இருக்கிறது. உறவுகளுடன் உரசல் இல்லையென்றாலும் நட்புக்களே படிக்கும் காலம் முதல் இன்று வரை தொடர்ந்து என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இப்படியான நட்புக்கள் கிடைத்திருப்பது வரமே.

உடல் நலமின்மையால் பேசும்போது இருமிக் கொண்டே பேசியதைக் கேட்டதும்  உங்களிடம்தான் முதல் காப்பியை கொடுப்பேன் எனத் தன்னுடைய நான்கு புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு இரவு பத்தரை மணிக்கு மேல் என்னைத் தேடி வருகிற நௌஷாத்தின் கைகளில் பேரிச்சைப் பழமும் இருமலுக்கான டானிக்கும். இதெல்லாம் எதற்கு... நான் அணிந்துரை எழுதிய புத்தகத்தை மட்டும் நட்புக்காகப் பெற்றுக் கொள்கிறேன்... மத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாங்குகிறேன் என்றதும் அதெல்லாம் இல்லை என நான்கு புத்தகத்தையும் கொடுத்து வாசியுங்கள்... உங்க கருத்தை எழுதுங்க... மற்றவர்களுக்கும் வாசிக்கக் கொடுங்க என்றான். வாசித்து எழுத வேண்டும்.

இரவு டிபன் அவனுடன்... அவனேதான் பில் பணமும் கொடுப்பேன் என நின்று கொடுத்தான். புத்தகங்கள் கொடுத்ததைவிட மருந்தோடு வந்த மனசுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்..?


முதல் தொகுப்புக்காக தெரிவு செய்த கதைகளைப் பலருக்குக் கொடுத்தேன். அதில் சிலரே வாசித்து தங்கள் கருத்தைச் சொன்னதுடன் அதை முகநூலிலும் பகிர்ந்து கொண்டார்கள். வாசிக்காதவர்களைப் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை... இங்கு வேலை... வேலை என ஓடிக் கொண்டிருக்கும் போது வாசிக்க முடியாமல் போகலாம்... ஆனால் வாசித்த அந்த சிலரை என் எழுத்து ஈர்த்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

அப்படித்தான் தங்கை சுடர்விழியிடமும் கொடுத்தேன். இரண்டே நாளில் வாசித்து தன் கருத்தைச் சொன்னதுடன் அவர் பங்குக்கு முகநூலில் எழுதியிருந்தார். அது உங்கள் பார்வைக்கு...

தீபாவளி முதல் சமையல் சிறுகதை வரையிலும் அப்படி ஒரு மண் மனம். பல கதைகள் அடுத்த கதைக்கு நகர விடாமல் அப்படியே கட்டிப் போட்டது. அதன் தாக்கம் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. குறிப்பாக தீபாவளி, அப்பாவின் நாற்காலி, செல்வம், காத்திருந்த உயிர், மனச்சுமை, சமையல் போன்ற கதையின் தாக்கம் சற்று அதிகம் தான். 

நீங்கள் பல தளத்தில் பயணித்தாலும் தொடர்ந்து மண், மக்கள் சார்ந்த உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும். 

நாம எப்படி வாழ்ந்தோம் வளர்ந்தோம் என்று மறந்து போன போது உங்களை போன்றோரின் எழுத்துக்கள் எல்லாவற்றையும் கண் முன்னே நிறுத்துகிறது. 

இது தான் நாம், இவ்வளவு தான் வாழ்க்கை என்ற எண்ணத்தை தருகிறது. 

வாழ்த்துகள் அண்ணா.  புத்தகம் வெளியான பின்னர் இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

ராஜாராம் எனக்கு எப்பவுமே சிறப்பு... என் கதைகளை எல்லாம் கேட்டு வாங்கி வாசித்துக் கருத்துத் தெரிவிப்பவர். இந்த நாவல் இங்கு தொடராக பகிரப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. முடிக்க வேண்டும் என்ற முனைப்போடு எழுதி, முதலில் தம்பியும் கவிஞருமான கரூர் பூபகீதனிடம்தான் கொடுத்தேன். வாசித்துவிட்டு என்னுடன் பேசிய போது என் வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வை அப்படியே படம் பிடித்தது போல் இருக்கிறது அண்ணா என்று சொன்னார். அதை ஒருமுறை ராஜாராமிடம் சொன்னதும் அந்தக் கதையைக் கொடுங்க வாசிக்கணும் எனக் கேட்டார்... தர்றேன் என்று சொன்னேனே தவிர அனுப்பவில்லை... கறுப்பி வாசித்து முடித்ததும் எனக்கு நெருஞ்சியும் குறிஞ்சியும் வேண்டுமென விடாப்பிடியாய் நின்று வாங்கி வாசித்து இதோ அவரின் நீண்ட கருத்தையும் முகநூலில் போட்டிருக்கிறார்... புத்தகம் ஆக்குதல் என்பது ரெண்டாம்பட்சம்தான்... வாசித்ததும் அழுதேன்... என் வாழ்கையைப் பிரதிபலிக்கிறது என்பதான வார்த்தைகளை பெறும் தகுதியில் இருக்கும் எழுத்து என்னுள் தொடர்ந்தால் போதும் நான் இன்னும் நிறைய கிராமத்து மனிதர்களுடன் உலாவுவேன். இராஜாராமின் பார்வை கீழே...

நெருஞ்சியும்_குறிஞ்சியும் சிறு நாவல் பற்றி.......

மீண்டும் மண் மணம் மாறாத கிராமத்திற்குள் சென்று வந்துள்ளேன், வேலாயுதம், கோபக்கார மனுசன் அதக்க போயில இல்லாமல் இருந்துருவார் போல சாதிய விட்டுட்டு வாழவே மாட்டாரோனு தோனுகிற அளவுக்கு தோளில் தூக்கிச் சுமக்கிறார்., பொதுவாக யாருமே தூக்கிச் சுமப்பதில்லை அதுதான் உண்மை...

அமந்துபோய் கெடந்தாலும், அத ஊதி பொகய விட எங்கிட்டாவது இருந்து ஒருத்தன் வருவான். அந்த மாதிரியில்லாம கூடவே பஞ்சநாதன் வருகிறார்., ஒரே சாதிக்காரர் என்பதால் கூடவே வச்சுகிட்டாரோ என்னவோ வேலாயுதத்தின் கோபத்திற்கும், அனுதாபத்திற்கும் ஒரு நிதானியாக வருகிறார். சவுந்தரம், வேலாயுதத்தின் மனைவி என்னதான் சாதி முறுக்கு, வேகம், கோபம்னு இருந்தாலும் இவருக்கு மனைவியிடம் பணிந்தே போகிறார். 

மூத்தமகன், தன் விருப்பதிற்கு வேறொரு சாதி பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறார். ஆகையால், கடைசி வரை தன் குடும்பத்தில் சேரவே கூடாதென ஒதுக்கியே வைக்கிறார். ஏதாவது, சுப துக்க காரியங்களை காரணமாக வைத்து குடும்பத்தில் சேர்க்க மனைவியும், மகளும், சிறிய மகனும் பலவாறு முயற்சி செய்கிறார்கள், பஞ்சநாதனும் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஓதுகிறார். இதற்கெல்லாம் வேலாயுதம் இசைந்தாரா, இல்லையா என அருமையாக நகர்த்தியிருக்கிறார் எழுத்தாளர் அண்ணன் குமார் அவர்கள்.

இக்கதையினூடே இன்னொரு கதையாக அக்ரஹாரமும் அதில் மெல்லியதாக பயணிக்கும் காதலுமென நேர்த்தியாக செல்கிறது. எங்கும் தொய்வில்லா கதை நகர்வு, சொல்லும் விதம் வழக்கமான வட்டாரச்சொல் தாண்டி அக்ரஹார மொழிநடையும் சிறப்பாக இருக்கிறது. 

சில இடங்களில் கலங்கித்தான் போகிறது விழிகள், வாசிப்பைத் தாண்டி சில நிகழ்வுகள் கண்முன்னே விரியும்பொழுது... வார்த்தைகள் இல்லை. எல்லோருக்கும் இதே பாதிப்பைத் தருமா என்றால் தெரியாது, ஆனால்! இதை வாசித்த அண்ணன் குமார் அவர்களின் நண்பரும், நலன் விரும்பியுமான பூபகீதன் அவர்கள் இக்கதையை வாசித்துவிட்டு தன் சொந்த அனுபவங்கள் நினைவில் வந்ததாக சொன்னாராம். எப்பொழுதும் போல எந்தக் களத்தில் கதை சொன்னாலும் தன் பாங்கையும், மண்ணின் மணத்தையும் விட்டு விலகாமல் பயணித்திருக்கிறார். 

இதுபோன்ற கதைகள் கண்டிப்பாக நூலாக வரவேண்டும். அண்ணன் குமார் அவர்களின் கதைகள் அதிகமாக வாசித்தவன் என்ற முறையில் திட்டவட்டமாக சொல்வேன், அவர் எந்தக் களமும் இறங்கி எழுதக்கூடிய திறனுள்ள ஆகச்சிறந்த கதை சொல்லியும் கூட.... மிக விரைவில் அண்ணனின் ஒரு சிறுகதை தொகுப்பு வெளிவர இருக்கிறது., அதைத் தொடர்ந்து இன்னும் வெளிவராத சிறுகதைகளும், நாவல்களும் இருக்கிறது, இவைகள் விரைவாகவே நூல்களாக வரவேண்டுமென வேண்டி வணக்கமும் வாழ்த்தும்...

நேற்று இரவு போனில் நீண்ட நேர உரையாடல் எழுத்தாளரும் அண்ணனுமான யூசுப் (கனவுப்பிரியன்) மற்றும் கவிஞரும் தம்பியுமான பிரபு கங்காதரனுடனும்... கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கு மேல் சிறப்பாக நகர்ந்தது. நான் அதிகம் பேசவில்லை... ஆனால் இருவரின் வாசிப்புத் திறமையும் அது குறித்தான பேச்சும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. சின்ன மன வருத்தம் எனக்கும் யூசுப் அண்ணனுக்கும் சிறு கோடாய் நின்று கொண்டிருந்தது. அது நேற்றைய பேச்சில் அறுந்து விட்டது போன்ற உணர்வு. எப்பவும் அன்போடு பேசும் கனவு அண்ணனைக் கண்டேன் நேற்றைய போனில்... எங்களை இணைத்து பெரும் கதையாடல் நிகழ்த்திய பிரபுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

படிக்கும் காலத்தில் நிறைய நட்புக்கள்... தம்பியோட சைக்கிள்ல போன எதுக்க வர்றவனெல்லாம் கையைத் தூக்குறான்... பழக்கம்தான் நிறைய வச்சிருக்கு என எங்கம்மாதான் சொல்லும். அப்படியான நட்புக்கள்தான் நான் கலங்கி நின்ற போதெல்லாம் கை கொடுத்தன... இப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இவர்களையெல்லாம் நட்பாய்... உறவாய்... பெற நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்... இந்த நட்புக்கள் என் இறுதிவரை தொடரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் ஆசையும்...

எல்லாருக்கும் நன்றி உறவுகளே.
என்றும் நட்புடன்,
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நட்புகள் என்றும் வாழ்க.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமை...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நட்பு என்றுமே இனிமைதான்.

உங்கள் கதைக்கான விமர்சனமும் அருமை.

துளசிதரன்

குமார் உங்கள் கதை நன்றாக நினைவிருக்கிறது. வேலாயுதத்தம் இறங்கிவராமல்..கூடவே காதல் என்ற நெருஞ்சியும் குறிஞ்சியும் கதை அருமையாகச் சென்றது ஆனால் எங்களுக்கு முடிவு தெரியாதே. நீங்கள் புத்தகமாகப் போடப் போகிறீர்கள் இல்லையா

நட்புகள் தான் இனிமை குமார்.

கீதா