மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 25 ஜூன், 2019

பிக்பாஸ் சீசன்-3 ஆரம்பம்

Image result for பிக்பாஸ் சீசன் - 3

பிக்பாஸ் சீசன் - 3 ஆரம்பிச்சதும் 'இதெல்லாம் பார்த்துக்கிட்டு...' என ஒரு சாரார் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்... சொல்வதெல்லாம் உண்மைகளையும் தினம் தினம் அழுது கொண்டே நகரும் நாடகங்களைப் பார்ப்பதைவிட இது ஒன்றும் தவறில்லை என்பதே என் எண்ணம். 

இங்கு அலுவலகம், அதை விட்டால் அறை என்ற வாழ்க்கையில் ஊருக்குப் பேச, சமைக்க, சாப்பிட... இது தவிர்த்து வெறேன்ன இருக்கு பொழுது போக்க... எல்லாம் முடித்து கட்டிலில் முடங்கும் போது தூக்கத்தத்துக்கு முன் ஏதோ ஒன்று அது சினிமாவோ... யூடிப் வீடியோக்களோ அல்லது டிவி ஷோக்களோதானே பார்க்க வேண்டியிருக்கிறது. முகநூல் நேரங்கொல்லியில் கிடப்பதைவிட பிக்பாஸ் பார்ப்பதொன்றும் தவறில்லை.

பிக்பாஸ் பிடிக்காதவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்...

பிக்பாஸ் தொகுப்பாளன் என்பது கமலுக்கு கிடைத்த மிகப்பெரிய பிளாட்பாரம்... சென்ற சீசனிலேயே அரசியல் பேசியவர் கட்சி ஆரம்பித்த பின்னர் விடுவாரா என்ன இந்த முறை அதிக அரசியல் இருக்கும் என்பதை முதல் நாள் போட்டியாளர்கள் அறிமுகத்திலேயே மய்யமாக நின்றுதான் களமாடினார்.

லாஸ்லியா இலங்கைத் தமிழில் பேசச் சொன்னதும் இலங்கைத் தமிழென அரசியல் பேசினார். அத்துடன் லாஸ்லியா இலங்கைத் தமிழ் விடுத்து நம்ம தமிழுக்கு மாறிவிட்டார்.

பிக்பாஸ் - இது சமூகத்தின் பிரதிபலிப்பு என்று கமலும் பிக்பாஸூம் அடிக்கடி சொல்கிறார்கள். அப்படியென்ன சமூகத்தின் பிரதிபலிப்பு இருக்குன்னுதான் தெரியலை... பிரபலங்களை மட்டுமே கொண்டு வந்து கூண்டில் அடைக்கிறார்கள்... இதில் சாதாரண மனிதனின் குரல் எங்கே ஒலிக்கிறது என்பதுதான் தெரியவில்லை. 

குட்டை டவுசரும்... காலையில் ஆடும் குத்தாட்டமும்... கட்டிபிடி வைத்தியமும்தான் சமூகத்தின் பிரதிபலிப்பு என்று நினைத்துவிட்டார்கள் போலும். இதைச் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

தண்ணிக்கும் சமையல் எரிவாயுவுக்கும் கட்டுபாடு விதித்திருக்கிறார்கள்... தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்பது போல் பிக்பாஸில் முதல் முறையாக என்று சொல்லி எரிவாயுவுக்கு மீட்டரும்... தண்ணிக்கு லிட்டர் கணக்கும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

வந்திருப்பவர்களில் பாதிப்பேர் சீசன் - 3 யை சிறப்பாக கொண்டு செல்வார்களா என்பது சந்தேகமே.

சரவணனை பொன்னம்பலத்துக்குப் பதிலாக கொண்டு வந்திருப்பது போல்தான் தெரிகிறது... மனிதர் ரொம்ப அசட்டையாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்... ஆனால் பிக்பாஸ் இருக்க விடமாட்டர் என்பது வரும் நாட்களில் அறியலாம்.

பாத்திமா பாபுவைப் பொறுத்தவரை நானே நாட்டாமை செய்ய வேண்டுமென எல்லாத்துக்கும் விளக்கம் கொடுக்கிறேன் என கழுத்தறுப்பு செய்ய ஆரம்பிக்கிறார்... அம்மாவென எல்லாரும் அழைக்கிறார்கள்... மும்தாஜ், காயத்ரி வரிசையில் இவரும் இருக்க வைக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. இருப்பினும் முதல் முறை என்பதால் என்ன ஏது என்று ஆராயாமல் கைதட்டுவது தவறு என்று அவர் சொன்னது ஏற்க்கக் கூடிய ஒன்று. நாம் எப்போதும் யோசிக்காமல்தானே கை தட்டுகிறோம்... திரையில் தனுஷ் உதடு முத்தம் கொடுக்கும் போது கைதட்டுபவர்கள்தானே நாம்...

காதல் கண்ணீர் இல்லாமல் பிக்பாஸா..? 

அதெப்படி கோழிகளையும் சேவல்களையும் ஒரு கூட்டில் அடைத்து விட்டு காதல் களபரம் இல்லாமல் விட்டுவிட முடியும்...?

அதற்கான முயற்சியாய் முதல்நாளே பலமான திரைக்கதை எழுதிட்டாங்க... அபிராமிக்கு கவின் மீது கிரஷாம்... என்னங்கடா டேய்... வந்த உடனேயா என்று தோன்றினாலும் 100 நாள் சுவராஸ்யத்துக்கு காதல் இல்லையென்றால் எப்படி..? ஆரம்பிச்சிட்டாங்க என ரசிகர்கள் ஆர்ப்பரிக்க வேண்டாமா..?

டிஆர்பிக்காகவும் தமிழின உணர்வுக்காவும் இலங்கையில் இருந்து இருவர்... அரசியலாகட்டும் ஊடகங்களாகட்டும் இலங்கையை நம் சுயலாபத்துக்காக மட்டுமே பயன்படுத்த நினைப்பது வேதனைக்குரியது... வெட்கப்பட வேண்டியது 

மலேசியாவில் இருந்து வந்திருக்கும் பாடகர் முகன்ராவ் கூட டிஆர்பிக்கானவர்தான்... வெளிநாட்டவர் மூவரும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ..?

சாண்டி ரொம்ப ஓவராகத்தான் நடிக்கிறார்... சொல்லி விட்டிருப்பார்கள் போல... முகவாயில் அடிபட்டு நாலு தையல் என்றார்கள். நாலு மணி நேரத்தில் காயத்தின் வடுகூட தெரியாமல் தையல் பிரிக்கப்பட்டிருப்பது ஆச்சர்யப்பட வைத்தது. அப்படியொரு வைத்திய முறையை ஏழைபாழைகளும் பயன்படுத்தும் விதத்தில் வெளிக்கொண்டு வரலாம் விஜய் டிவி.

லாஸ்லியாவை முகன்ராவ் லவ்வும் நாள் விரைவில் வரும்... நேற்றே பய வட்டம் போட்டுட்டான்.

கவின் மீது அபிராமி மட்டுமின்றி சாக்சியும் லவ்வக் கூடும் என்றும் தோன்றுகிறது. 

சீசன்-3 முக்கோணக் காதலில் மூழ்கலாம்... மூழ்கலாம் என்ன மூழ்கலாம்... கண்டிப்பாக முக்கோணக் காதல்தான்.

வைத்யா இளைஞர்களுடன் ரொம்ப இயல்பாய் இருப்பது சிறப்பு. 

நான் விரும்பும் இயக்குநர் சேரன், சாண்டி ஆடச் சொன்னதற்கு இறங்கி ஆடினார்... பாத்திமா பாபு விளக்கம் கொடுத்தபோது இந்த திட்டத்துக்குத்தான் கை தட்டினோம் என்றார். சேரனைப் பொறுத்தவரை இவர்களுடன் எப்படி இணைந்து பயணிப்பார் என்று தெரியாது. முதல் வாரத்தில் கூட நாமினேசன் செய்யப்படலாம்.

எல்லாருடைய எதிர்பார்ப்பும் வனிதா விஜயகுமார் மீதுதான்... வெளியில் குடும்பத்தினரை ரோட்டுக்கு இழுத்தவர்... பிக்பாஸ் வீட்டுக்குள் அடித்து ஆடாமலா இருப்பார்... பாத்திமாவுக்கு ஒருபடி மேலே வில்லியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை... எப்போது விஸ்வரூபம் எடுப்பார் என ஆவலுடன் காத்திருக்கலாம். 

கணவனுடன் சேர வேண்டுமென நித்யா வந்தது போல் மகன் புரிந்து கொள்ள வேண்டும் என வனிதா சொல்லியிருக்கிறார். அவன் புரிந்து கொள்ளும்படி சக போட்டியாளர்களுடன் இவர் நடந்து கொள்ள வேண்டுமே... நடப்பாரா..?

ஜாங்கிரி மதுமிதா.... சாமியெல்லாம் கும்பிட்டு ஸ்லோகம் சொல்லி நுழைந்திருக்கிறார்... அவர் காமெடிப் பீசா... இல்லை கர்ஜிப்பாரா என்பதை போகப்போகத்தான் வெளிக்காட்டுவார்... ஆனாலும் ரொம்ப சாமர்த்தியமாக விளையாடுவார் என்பது மட்டும் நிச்சயம்.

துள்ளுவதோ இளமை ஷெரினை அப்படியே மனதில் வைத்திருந்தால் பிக்பாஸ் தேடிப்பிடித்து அதெப்படி 18 வருசமா ஷெரினை அதே முகத்தில் மனசுக்குள் வைத்திருப்பீர்கள்... இன்றைய முகத்தைப் பாருங்கள் என கண்ணில் காட்ட, சத்தியமாக இதுதான் ஷெரின் என பெயரைச் சொல்லும் வரை நம்ப முடியவில்லை. காலம்தான் எத்தனை மாற்றங்களை நம் உடலில் கொண்டு வந்து விடுகிறது.

எத்தனை பெண்கள் இருந்தாலும் பிக்பாஸ் திரைக்கதைப்படி முகன்ராவ், கவின் மட்டுமே காதல் நாயகர்களாக இருக்க முடியும்... தர்ஷன் ஒதுக்கியே வைக்கப்படலாம் என்றாலும் பிக்பாஸின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைப் பொறுத்து திரைக்கதையில் மாற்றம் செய்யப்படலாம்.

மொத்தத்தில் இந்த பிக்பாஸ் - அடித்து ஆடுமா தெரியாது... கண்டிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோணி ஆடியது போல் ஆட விடமாட்டார் பிக்பாஸ் என்று நம்பலாம். 

சண்டையில்லேன்னா எப்படி... இந்நேரம் திரைக்கதையில் எத்தனை மாற்றம் செய்தாரோ...?

எல்லாமே முன் கூட்டியே சொல்லிக் கொடுத்துத்தான் நடக்கிறது... என்னோட நண்பன் அங்க வேலை பார்க்கிறான்... அவன் முதல்நாள் இரவே அடுத்தநாள் எப்படி நடிக்க வேண்டும் என திரைக்கதை கொடுக்கப்படும் என்று சொன்னான் என நண்பர் ஒருவர் சொன்னார். இது முழுக்க முழுக்க எழுதப்பட்ட கதைதான் என்பதை எல்லாரும் அறிவோமே.... அதை அங்கு வேலை பார்ப்பவர்தான் சொல்ல வேண்டுமா என்ன... சுவராஸ்யமாய் போகுதா... அது போதும் நமக்கு... 100 நாள் பார்க்கலாம்.

ஆண், பெண் படுக்கை அறைகளுக்கு இடையே தடுப்பு இல்லை... தடுப்பு இருக்கும் போதே சீசன் 2-ல் மகத் பண்ணியதை நினைவில் கொண்டு பிக்பாஸ் இம்முறை தடுப்பெல்லாம் எதுக்குடா... என்ன வேணுமின்னாலும் செய்யுங்கடா... எனக்கு டிஆர்பி வேணும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போல.

தங்கள் டிஆர்பிக்காகத்தானே ஊடகங்கள் நடிகர் சங்கத் தேர்தலின் போது தீவிரமாக நேரடி ஒளிபரப்புச் செய்தார்கள். மக்கள் பிரச்சினைகளின் போது முன்னும் பின்னும் மூடிக் கொண்டுதானே இருப்பார்கள். அதனால்தான் சுரேஷ்குமார் என்பவர் 'தமிழக வேசி ஊடகங்கள்' என டுவிட்டரில் டிரண்ட் ஆக்கியிருக்கிறார். என்ன செய்தாலும் நாம திருந்தப் போறோமா என்ன... பிக்பாஸும் டிஆர்பி பின்னேதான் ஓடுவார் என்பதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து உண்டா... 

மதுமிதா சொல்வது போல் இந்த முறை லெக்பீஸ்கள் அதிகம்தான்... குழந்தைகளுடன் பார்க்க முடியாத பிக்பாஸாகத்தான் இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


ஓவியா ஆர்மி போல பலருக்கு ஆர்மிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன... 

எல்லாரையும் சாக்சியை விட லாஸ்லியா கவர்வார் என்றே தோன்றுகிறது.

கவினுக்கும் சாண்டிக்கும் வெற்றி யாருக்கு என்பதில் பெரிய போட்டியிருக்கும்.

ஐஸ்வர்யாவைக் காப்பாற்றியது போல் சாக்சி, ரேஷ்மா, அபிராமி மூவரில் ஒருவரை பிக்பாஸ் காப்பாற்றி இறுதிவரை இழுத்து வருவார்.

பாத்திமா, வனிதா இருவரும் அடித்து ஆட பயன்படுத்தப்படுவார்கள்.

என்னதான் சொன்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுக்க கமலைத் தவிர சிறப்பான ஒருவர் கிடைப்பது அரிது.

சீசன் 2-ல் பார்த்த கம்பீர கமல் இதில் மிஸ்ஸிங்... தேர்தல் அலைச்சல் அவரின் தேகத்தில் தெரிகிறது... அந்தக் கம்பீரக் குரல் கூட உடைந்திருக்கிறது... வரும் நாட்களில் உடலிலும் குரலிலும் கம்பீரம் கூடும் என்று நம்புவோமாக.

இந்த முறை பிக்பாஸ் வீடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பிக்பாஸ் பதிவுகள் அடிக்கடி வரும்.
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

இது வெறும் ஷோ அல்ல! உங்கள் லைஃப் - கமல்ஹாசன்

இப்படி சொல்லியதால் நாம் பார்க்காமல் வாழமுடியாது.

பிரேசில் நாட்டின் பிக் பிரதர் நிகழ்ச்சியின் காப்பி கிட்டத்தட்ட 70% வந்து விட்டது.

அடுத்த சீசனில் 100% நுழைந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் தரட்டும்.

ஸ்ரீராம். சொன்னது…

நான் பார்க்கவில்லை.

Anuprem சொன்னது…

இது வரை பார்த்தது இல்ல ...

அதுபோல இதுவரை இதை பற்றி கேள்விபட்டதும் வேறு விதம் ...

எனக்கும் ஆசை வரலாம் ...வந்தால் பார்க்கலாம் (...இதிலும் குழப்பம் .)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இதுவரை பார்த்ததில்லை. பார்ப்பதாக எண்ணம் இல்லை. இருந்தாலும் இந்நிகழ்வினைப் பார்ப்பவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இதுவ்ரை பார்த்ததில்லை குமார் நாங்கள் இருவருமே...

துளசிதரன், கீதா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இதுவரை பார்த்ததில்லை. இனிமேலும் பார்க்கப் போவதில்லை ஏனெனில் நான் டிவி பார்ப்பது இல்லை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

எல்லாம் சொல்லி வைத்து நடப்பதே என்றாலும் ஒரு பொழுது போக்கு... அவ்வளவுதான்.
நன்றி அண்ணா

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி சகோதரி..

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அய்யா

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா
நன்றி அக்கா

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா