மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 12 நவம்பர், 2016

சினிமா : புலி முருகன் (மலையாளம்)

Image result for மோகன்லாலின் புலிமுருகன்

புலி முருகன்...

மோகன்லாலைப் பொறுத்தவரை எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் தன் கதாபாத்திரத்தை தனது நடிப்பால் மேம்படுத்துவதில் வல்லவர். ஐம்பத்து ஐந்து வயதுக்கு மேலான மனிதர் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் படம் 'புலி முருகன்'. கேரளா திரைப்பட வரலாற்றில் வசூலில் சாதனை படைத்திருக்கும் படம் இது. இதே படத்தை நம்ம ஊரில் எடுக்கப் போவதாகப் பேச்சு... நம்மாளுங்க இன்னும் மாஸ் சேர்க்கிறேன் பேர்வழின்னு படத்தைக் கெடுத்து குட்டிச்சுவராய் ஆக்கிடுவாங்க என்பது மட்டும் திண்ணம்.

நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து இயக்கும் இயக்குநர்கள் நிறைந்தது கேரளச் சினிமா என்பதை நாம் அறிவோம். மலையாளப் படங்களைப் பார்க்கும் போது... நம் தமிழ் சினிமாவோடு ஒப்பிடும் போது... பல படங்கள் பீரியட் படங்களாகத்தான் தோன்றும்... ஆங்கிலப் படம் பார்த்தோமென்றால் முதல் அரைமணி நேரம் பேசியே கொல்வார்கள்... அட என்னடா... எப்படா விமானத்தை எடுப்பார்கள்... எப்போ சண்டை போடுவார்கள் என்று தோன்றும். அப்படித்தான் பல மலையாளப் படங்கள் இறுதிவரை இருக்கும்... ரொம்ப மெதுவாய் நகரும்... ஆனால் அந்தக் கதை நம்மை அதற்குள் ஒரு பேரலையாக இழுத்துக் கொண்டு செல்லும். அப்படிப்பட்ட எத்தனையோ படங்களை ரசித்துப் பார்த்திருக்கிறேன். புலி முருகன் அதில் இருந்து மாறுபட்ட படம்.

ஒரு காடு... அழகான அருவி... அதற்குப் பக்கத்தில் ஒரு வீடு... பாசத்தில் சண்டை இடும் அன்பான காதல் மனைவி... அழகான குட்டித் தேவதை... ஒரு முரட்டு மீசைக்காரனுக்கு... புலியெனச் சீறும் ஒருவனுக்கு இதை விட வேறென்ன வேண்டும். காடும் காடு சார்ந்த இடங்களிலும் வாழும் அவனுக்கு நாட்டு மனிதர்களால் பிரச்சினை... புலியைக் கொல்லும் வீரனான அவன் மனித மிருகங்களிடம் மாட்டிக் கொண்டு இறுதியில் என்ன ஆகிறான் என்பதே புலி முருகன்.

ஆமா... அதென்ன புலி முருகன்... ஐயப்பந்தானே புலி மீது ஏறி வந்தார்... முருகன் மயில் வாகனம்தானே... அதுதான் அவரோட லாரியை மயில்வாகனம்ன்னு சொல்லுறாங்களே... அதனால புலி முருகனுக்கு மயில் வாகனம் இருக்கு.  'ஐயப்பன் ஏறி வந்தது புலி அல்லா அது கடுவன்' அப்படின்னு படத்தில் ஒருத்தன் சொல்வான்.  நமக்கு ஐயப்பன் புலிப்பால் கொண்டு வரப்போய்.. புலி மீது ஏறி வந்தார்... அவ்வளவுதான்... அந்த ஐந்து மலைக்குள் ஐயப்பனை... பதினெட்டுப்படி ஏறி தரிசிக்கும் போது அவன் அழகில் சொக்கி நின்ற அனுபவம் நான்காண்டுகள் தொடர்ந்து கிடைத்தது... பஸ்மக் குளத்தில் மணிக்கணக்கில் நீந்தியதை புலி முருகன் நினைவில் கொண்டு வந்தான். சரி அதென்ன புலி முருகன் அப்படித்தானே இந்தப் பாரா ஆரம்பித்தோம்... பின்னே எதற்காக ஐயப்பன் பின்னால் பயணம்... வாங்க புலி முருகனோட போகலாம்.

தம்பி பிறந்த உடன் அம்மாவின் மரணம்... பார்த்துப் பார்த்து வளர்க்கும் தந்தை தன் கண் முன்னே புலிக்கு இரையாக, சிறுவனான முருகன் அந்தப் புலியை மாமாவின் உதவியுடன் கொல்கிறான். அன்று முதல் அந்த புலியூர் கிராமத்துக்கு அவன் புலி முருகன் ஆகிறான். அடிக்கடி மக்களை அடித்து இழுத்துச் செல்லும் புலிகளைக் கொல்கிறான். புலி நம்ம தேசிய விலங்குதானே... அதுவே அழிந்து வரும் ஒரு இனம்... அதைக் கொல்வதா..? அப்போ அவனை போலீஸ் புடிக்காதா... மானை அடித்துச் சாப்பிட்டவனை... மனிதனை கார் ஏற்றிக் கொண்டவனை எல்லாம் நம்ம அரசு என்ன பண்ணுச்சு... இது சினிமாதானே... அதுவும் நாயகன் புலி... அப்புறம் எப்படி... இருந்தாலும்... எதுவாக இருந்தாலும் படம் பார்த்தால் தெரியும்.

Image result for மோகன்லாலின் புலிமுருகன்

புலி முருகன் காதலிக்கும் மைனாவை விரட்டும் போலீஸ்காரன்... மனைவியான பின்னும் வந்து உதை வாங்கிச் செல்கிறான். தன் ஊர் மக்களுக்காக புலியைக் கொன்றாலும்... லாரி ஓட்டிச் சம்பாரிக்கும் பணத்தில் குடும்பம் நடத்தி... தம்பியைப் படிக்க வைக்கிறான்... அவந்தான் உயிர்... அவன் மூலமாக ஆயுர்வேத மருந்து தயாரிக்க கஞ்சா வேண்டும் என வரும் டாடி கிரிஷாவின் மகன் வழியாக பிரச்சினை பின் சீட்டில் அல்ல... அவனின் லாரியின் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கொள்கிறது... பின்னர் அது அவன் வாழ்க்கையைக் கொல்கிறது. நம்ம வால்டர் வெற்றிவேல் போல... படிக்காதவன் போல... தம்பிதான் வில்லனாய் வருவானோன்னு பார்த்தா... அவன் நல்லவனாத்தான் இருக்கான். அப்ப வில்லன் யார்...? அதான் டாடி கிரிஷா... சைலண்ட் வில்லன்... ஆயுர்வேத மருந்து என்ற போர்வையில் கஞ்சாக் கலந்து மருந்து தயாரிக்கிறார்கள்.

அவர்களிடம் தெரியாமல் மாட்டிக் கொள்ளும் புலி முருகன் எப்படி அதிலிருந்து தப்புகிறான்... புலி வேட்டைக்குப் போவது பிடிக்காத மனைவி... ஆரம்பத்தில் முறைத்துக் கொண்ட போலீஸ்... தன்னால் பாதிக்கப்பட்ட மாமா... வில்லனிடம் மாட்டிய தம்பி... எனக் கதை சொல்லி... இறுதிக் காட்சியில் தன் மகள் வயதொத்த குழந்தையை தூக்கிச் சென்ற புலியைக் கொன்றானா...? வில்லனை என்ன செய்தான்..? போலீஸ் முறைத்துக் கொண்டதா... அணைத்துக் கொண்டதா...? என்பதை 'முருகன்... முருகன்... புலி முருகன்'னு பின்னணி இசைக்க விறுவிறுப்பாய் நகர்த்தியிருக்கிறார்கள்.

படத்தில் பாராட்ட வேண்டியது சண்டைக் காட்சிகள் அமைத்த பீட்டர் ஹெயின்... புலியைக் கொல்லும் காட்சிகள் எல்லாம் மயிர்க் கூச்செறிய வைக்கும் அழகான காட்சிகள்... அதேபோல் தம்பிக்காக போடும் சண்டை... லாரிக்காக போடும் சண்டை... இறுதிச் சண்டைக் காட்சி... போலீசுடன் மோதும் சண்டை... லாரி சேசிங் காட்சி... என படத்தின் விறுவிறுப்பில் அடித்து ஆடியிருக்கிறார். மிகவும் அருமையான சண்டைக் காட்சிகள்.

மாமாவாக வரும் லால்... போலீசாக வரும் கிஷோர்... வில்லனாக வரும் ஜெகபதி பாபு...  சசியாக வந்து சிரிப்புப் பட்டாசு வெடிக்கும் சுராஜ்... என எல்லாருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மைனாவாக வரும் கமலினி முகர்ஜி... புலி வேட்டையாடி விட்டு வந்து குளிக்கும் கணவனை வெறுப்பதும்... தண்ணியடித்து விட்டு வரும் போது கோபமாய் சண்டையிடுவதும்... நமீதாவுடன் முறைத்துக் கொள்வதும்... எத்தனை கோபமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் கொஞ்சுவதுமாய்... காதல் கணவன் மீது கோபம் நிறைந்த பாசக்காரியாகவும் அருவிக் கரையோரம் அழகிய மைனாவாக வாழ்ந்திருக்கிறார்.

நமீதா சில காட்சிகளில் வருகிறார்... அவர் வரும் போதெல்லாம் 'கட்டிப்புடி... கட்டிப்புடிடா... பாடல் பின்னணி இசையாக... ஆனாலும் சில காட்சிகளுடன் அவரை காணாமல் செய்து விடுகிறார்கள். லால் தண்ணியடித்துவிட்டு ஓலைப்பாயை விரிப்பதில் வடிவேலு 'எங்ககிட்டயேயா... நாங்கள்லாம்...' என பாய் விரிக்கும் காட்சியில் இருந்து கொஞ்சம் சுட்டிருக்கிறார்கள். மோகன்லால் முறுக்கு மீசையுடன் புலி முருகனாய் பாய்கிறார்.

மலையாள சினிமாவைப் பொறுத்தவரை வசூல் சாதனை செய்த படம் என்றாலும் தமிழ் படங்கள் போலில்லாவிட்டாலும் பின்னணி பில்டப் நிறைந்த படம்தான் புலி முருகன். அழகிய கதைக்களங்களில் பயணிக்கும் மலையாள சினிமாவில் புதிய சரித்திரமாய் பின்னணி அதிர, பறந்து பறந்து சண்டையிடும் மாஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது... நல்ல கதைகளை மலையாள சினிமா இழந்து விடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

(பாட்டைக் கேளுங்க... நல்ல மெலொடி)

கதைகளுக்காகவே மலையாளப் படங்களைத் தேடிப் பார்ப்பதுண்டு... இனி அங்கும் தல. தளபதி போல் மாஸ் நிறைந்த படங்கள் கோடிகளின் ஆசையில் கோலோச்சலாம்.

பின்னணி இசையில் கோபி சுந்தர் ஜமாய்த்திருக்கிறார்... பாடல்களும் நல்லாயிருக்கு. விறுவிறுப்பான படத்தை... தமிழில் கோடிகளில் சினிமாக்கள் புரளும் போது கிட்டத்தட்ட முப்பது கோடி செலவில் எடுக்கப்பட்ட முதல் படம் என்பதோடு முதல் முறையாக நூறு கோடி கிளப்பில் இணைந்த படம் என்ற பெருமையையும் உரிதாக்கிக் கொண்ட புலி முருகனை இயக்கிய வைசாக், தயாரிப்பாளர் தோமச்சன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

சொல்ல மறந்துட்டேனே... அந்த கிராபிக்ஸ் புலி நல்லாவே இருக்கு... உறுமலுடன் சீறுவது சூப்பர்.

மொத்தத்தில் புலி முருகன் நல்லாவே உறுமியிருக்கு.
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

விமர்சன விளக்கம் நன்று நண்பரே
த.ம.1

Yarlpavanan சொன்னது…

அருமையான கண்ணோட்டம்

ஸ்ரீராம். சொன்னது…

மலையாளத் திரைப்பட உலக வசூலில் இது ஒரு சாதனை என்கிற தகவல் படித்திருக்கிறேன்.. பார்க்கும் பொறுமை இல்லை!!!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நல்ல கதைகளை மலையாள சினிமா இழந்து விடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
நியாயமான வருத்தம்தான் நண்பரே

Kasthuri Rengan சொன்னது…

கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம்... இல்லையா ?
பார்க்கலாம் ..
தம +

Anuprem சொன்னது…

அருமை...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல விமர்சனம்... கதையே சொல்லாமல் அருமையான விமர்சனம்... நன்றி...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

படத்தை பார்க்கத் தூண்டும் விமர்சனம்! நன்றி!

Thenammai Lakshmanan சொன்னது…

படம் நல்லாருக்குன்னு சொன்னாங்க மாமா.உங்க விமர்சனமும் உறுதிப்படுத்துது. பார்த்திர வேண்டியதுதான் :)