மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 3 அக்டோபர், 2016

என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது...

Image result for அப்போலோ மருத்துவமனை

'உங்களுக்காக நான்... உங்களோடு நான்...' என்று சொன்ன மக்கள் பிரதிநிதி பத்து நாளைக்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார். அவர் குறித்த எந்த செய்திகளும் இல்லாமல்... எப்படியிருக்கிறார்...? என்ன பிரச்சினை...? என்பது எதுவும் தெரியாமல் ஒரு மாநிலம் பரிதாபமாய் நிற்கிறது. ஆளுநர் சென்று வந்தது கூட பார்த்தாரா... பார்க்கவில்லையா... என்ற பட்டிமன்ற நிலையில்தான் இருக்கிறது.

சிறைக்குச் சென்ற போது மக்களின் முதல்வர் என்றார்கள்... அந்த மக்களின் முதல்வருக்கு என்னாச்சு...? மக்களுக்குத் தெரிய வேண்டாமா...? மற்ற தொலைக்காட்சிகளை விடுங்கள் அம்மா புகழ் பாடும் தொலைக்காட்சியிலாவது அம்மாவை வாட்ஸ்அப்பில் பேசச் சொல்லலாமே... மழையின் போது அப்படித்தானே பேசினார்... எதுவுமே இல்லாத ஒரு அமானுஷ்ய சூழலில் தமிழகம் இருக்கும் போது ஆறு கோடி மக்களில் சசிகலாவும் இளவரசியும் மட்டுமே உண்மை விபரம் அறிந்தவர்களாக... இவர்கள் மட்டும்தான் தமிழகமா...? எல்லாத்துக்கும் பொங்கும் ஊடக நண்பர்கள் அமைதி காப்பது ஏன்...? அம்மா மீது உள்ள பயமா..? இல்ல சின்ன அம்மா மீதுள்ள பயமா...? உங்க ஊடக தர்மம் என்னாச்சு... இதே கலைஞரை விடுங்க... விஜயகாந்த் என்றால் இந்நேரம் மருத்துவமனை மேற் கூரையைப் பிரிச்சிக்கிட்டு இறங்கியிருப்பீங்கதானே... உண்மையை உரக்கச் சொல்ல வேண்டிய ஊடகம் அம்மாவுக்கு பக்கத்துப் படுக்கையில் தூங்கிக்கிட்டு இருப்பதுதான் வேதனை. 

மந்திரிகள் எல்லாம் மந்திகளாய் அப்போலோ வாசலில் காத்து நின்றால் போதுமா..? பாவம் மந்திகள்... அவற்றிற்கு கொஞ்சமேனும் சுயபுத்தி உண்டு... இங்க சொல்புத்தியும் இல்லை... சுய புத்தியும் இல்லை.... அம்மா ஆதரவில் இரண்டு முறை முதல்வராய் இருந்த பன்னீர்ச்செல்வம் அப்போலோ வாசலில் விளக்கேற்றி அதற்கு நடுவில் அமர்ந்து பூஜை செய்கிறார்... அது மட்டும் போதுமா...? அவருக்குப் போதும்... பதவியை தக்க வைக்க...  அவர் மட்டுமா இப்படி...? ஏகப்பட்ட பூஜைகள்.. வேண்டுதல்கள்... அழுகைகள்... ஆரவாரங்கள்... என்ன கேவலம் இது...? இதைவிட தமிழனை கேவலப்படுத்த வேறு என்ன இருக்கு...? அம்மாவுக்கு என்னாச்சு... அதைச் சொல்லுங்கடா முண்டங்களா... தமிழகத்தைக் கெடுக்க வந்த தண்டங்களா...? பூஜையாம் புனஷ்காரமாம்... அடுத்த மாநிலத்துக்காரன் உங்கம்மாவுக்கு என்னாச்சுன்னு  கேவலமாய் கேட்கிறான்... என்னத்தைச் சொல்ல... எங்கம்மாக்கிட்ட காலையில பேசினேன் நல்லாயிருக்கே என்று சொல்லிவிட்டு வந்தேன்.

கர்நாடகாக்காரன் தண்ணி தர முடியாதுங்கிறான்... நீதிமன்ற தீர்ப்பைத் தூக்கி குண்டிக்குப் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கிறான். முன்னாள் பிரதமர் ஒருத்தன் உண்ணாவிரதம் இருக்கிறான். அவன் பிரதமர் ஆக நாமதானே காரணமா இருந்தோம்... இன்னைக்கு அவன் உண்ணாவிரதம் இருக்கிறானே பாருங்கள்... அவனுக்கு விளக்கேத்தி அப்துல்கலாமை மீண்டும் ஜனாதிபதியா வரவிடமா விளக்கை அணைச்சவனுங்கதானே நாம...  தூங்கமூஞ்சி தேவகௌடா பிரதமரா இருக்கும்போது நமக்கு என்ன பண்ணியிருப்பான் யோசிச்சீங்களா...? அவனை புடிச்சி உள்ள போடுங்கடான்னு ஒரு வழக்குத் தொடுக்க துப்பில்லை... மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாதுன்னு சொல்லுது... என்ன பண்ணப் போறோம்... எவனும் பேசாமல் தூங்கிக்கிட்டுதானே இருக்கப் போறோம்... காவிரிக்காக கண் விழித்துக் கொள்ளாதவனெல்லாம் தூக்கம் மறந்து ரோட்டில் நிற்கிறான்... காவிரி பிரச்சினை அப்போ நம்ம மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் இப்படி கூடலையே... அப்ப மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் களத்தில் இறங்கலை... காத்துக் கிடக்கலை... ரோட்டுக்கும் வரலை... விவசாயத்துக்கு தண்ணி வேணுமின்னு பூஜை எல்லாம் பண்ணலை....

உண்மையாக முதல்வருக்கு என்னாச்சு... ஒரு பெண்ணாக இருந்தாலும் பல விஷயங்களில் அதிரடியாக செயல்பட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாதான் என்பதை எல்லோரும் அறிவோம்... காவிரி நீர் பிரச்சினையை சட்டப்படி நகர்த்தியதில் சாமர்த்தியசாலி.... கேரளனும் கர்நாடகனும் பயப்படும் தமிழகத்தின் ஒரே அரசியல்வாதி... எதையும் எப்படியும் நகர்த்தும் திறமைசாலி... அவருக்கு குடும்பம்... குழந்தை இல்லாததால் வஞ்சக வலைக்குள் சிக்கித் தவிக்கிறார் என்பதை எல்லாரும் அறிவோம்.

ஜெயலலிதா சர்வாதிகாரி என்று சாதிக்கட்சிகள் சப்தமிடலாம்... ஆம் சர்வாதிகாரிதான்... அந்த சர்வாதிகாரியால்தான் சில நன்மைகள் நமக்குக் கிடைத்தது... கலைஞரால் என்ன கிடைத்தது.... பாலம் கட்டினார்.. அப்படின்னு மட்டும் சொல்லிடாதீங்க... யோசித்துப் பாருங்க... குடும்ப அரசியல்... குடும்ப தொழிற்சாலைகள்.. குடும்ப ஊழல்.. அப்படித்தான் நகரும் அவரின் மக்கள் பணி. ஜெயலலிதா செய்யலையான்னு கேக்கலாம்... கொடநாட்டுல போய்த் தூங்கினார்ன்னு சொல்லலாம்... எதிலும் தான் செய்வதே சரி என்று நினைப்பவர்... செய்பவர் என்றெல்லாம் சொல்லலாம்... அவரும் செய்தார்தான்... இருந்தாலும் தமிழனுக்குன்னு சில விஷயங்களில் போராடி வெற்றியும் பெற்றார் இல்லையா... அதைப் பாராட்ட வேண்டிய இடத்தில் அரசியல் பேச வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்...

ஜெயலலிதாவோ கருணாநிதியோ மக்கள் பிரதிநிதி என்கிற போது அவர்களின் உடல்நிலை குறித்தான விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்கத்தானே வேண்டும். பத்துநாளாக எதுவுமே சொல்லாமல் நல்லாயிருக்கார் என்று நாட்களை நகர்த்தும் நாடகத்தின் உண்மை என்ன...? செத்துவிட்டார் என்ற வதந்தி கிளம்பியபோதும் நான் நலமுடன் இருக்கிறேன் என்று அவர் ஒரு வார்த்தை சொல்லாதது ஏன்..? சசிகலாவின் கைப்பாவையான அவரை மரப்பாச்சி பொம்மை ஆக்கிவிட்டார்களா...? சசிகலாவும் இளவரசியும் மட்டுமே பார்க்க முடிந்த அவரை மூத்த அமைச்சர்கள் கூட பார்க்க முடியாத நிலை ஏன்...? உண்மையில் அப்போலோவில் நடப்பது என்ன...? தமிழகத்துக்கு தலைமை ஏற்க வருவாரா... இல்லையா...?

முதல்வர் இல்லாமல் ஒரு மாநிலத்தின் அலுவல்கள் நடந்து கொண்டிருப்பது வேடிக்கையே... அவருக்கு பிரச்சினை என்றால் ஏன் தற்காலிகமாக ஒருவரை நியமித்து அலுவல்களை செய்யவில்லை... தலைமைச் செயலகம் அப்போலோவிற்கு மாற்றப்பட்டுவிட்டது என்பது நகைச்சுவையாக இருந்தாலும் கேவலமும் வேதனையும்தானே... எந்த மாதிரி சூழலில் மாநிலம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் நாட்கள் நகர்வது நல்லதுக்கல்ல... முதல்வர் எப்படியிருக்கிறார்... நலமாக இருக்கிறாரா...? என்று எப்போது நாம் அறிந்து கொள்ள முடியும்... தமிழகம் சர்வாதிகாரிகளின் கையிலா...? இவர்கள் எத்தனை நாளைக்கு மறைத்து வைக்க முடியும்...? கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வரத்தானே வேண்டும்...

இதைவிடக் கொடுமை... ஜெயலலிதா செத்து விட்டார் என்று சந்தோஷிக்கும் மனிதர்களை என்னவென்று சொல்வது...?  சிலருக்கு ஒருவரின் மரணம் என்ற செய்தி எத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதை பார்க்கும் போது வலிக்கத்தான் செய்கிறது... அவளுக்கு அதுவாம்... செத்துட்டாளாம்... அப்படி இப்படின்னு பேசும்போது அவர்கள் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்... எத்தனை குரூரம்... ஏதோ தான் சார்ந்த சாதிக்கட்சித் தலைவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் தமிழகத்துக்கு மோட்சம் கிடைக்கும் என்ற மிகப்பெரிய கனவைச் சுமக்கிறார்கள் என்பதே இந்த சந்தோஷத்துக்கு காரணம்... எந்த சாதிக்கட்சித் தலைவனாலும் தமிழனை முன்னேற்றிவிட முடியாது... இனி எவன் முதல்வன் ஆனாலும் தமிழன் தலை நிமிரவே விடமாட்டார்கள்... சாதிகள்தான் தலை நிமிரும்... சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி கூட மீண்டு வந்தால் சாதிகள் உண்டென்று கொட்டு முரசேன்னுதான் பாடுவாரு... இன்றைய அரசியல்வாதிகள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே... 

சாகக் கிடக்கிறவன் எதிரியே என்றாலும் நமக்கு கொஞ்சமேனும் பச்சாதாபம் உண்டாக வேண்டும்... ஐய்யோ பாவம் என்ற எண்ணம் மனசுக்குள் எழ வேண்டும்... அப்படிப்பட்டவன்தான் மனிதன்... ஆஹா செத்துட்டானா... அவன் சாவு எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று நினைத்து மகிழ்வது வக்கிர புத்தி அல்லாது வேறென்ன... எவ்வளவு கேவலமான எண்ணம்... சிந்தனை... முகநூலில் முதல்வர் குறித்து வரும் மோசமான செய்திகளை எல்லாம் வாசித்து மகிழ்ந்து அதை மற்றவர்களிடம் சொல்லிச் சிரிப்பது... குழந்தைகளுக்கு போனில் சொல்லி சிரிப்பது என்ன வகையான மனம்... இது குரூர புத்தி அல்லவா...? இறைவா இந்த மனத்தை எம்மிடத்தில் இருந்து தள்ளியே வை... எமக்கு வேண்டாம் இந்த மனம்... எதிரி என்றாலும் துரோகி என்றாலும் வாழ்ந்து விட்டுப் போகட்டும்... மரணம் மரணமாக நிகழட்டும்... கொடூரமாக வேண்டாம்.

ஒருவேளை இணையத்திலும் தமிழகத்திலும் சுற்றும் வதந்தி உண்மையாக இருந்தால்.... நினைத்துப் பாருங்கள்... ஒரு மாநிலத்தின் முதல்வர் அநாதை போல பத்து நாட்களாக... என்ன வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல் குளிரூட்டிய அறைக்குள் வைத்திருப்பார்கள் என்று நம்பலாம்... ஆனால் அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்பது நம்மில் யாருக்குத் தெரியும்... எதோ ஒரு குடும்பம் வாழ அவரை பயன்படுத்துகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்... இதே அவருக்கென்று ஒரு குடும்பம் இருந்திருந்தால் இன்றைக்கு இந்த நிலை வருமா...? அவருக்கு என்ன ஆச்சு என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்தானே... சொத்துக்காக... அதை தங்கள் பக்கம் எடுப்பதற்காக இந்த நாடகம் என்றால்... அப்படித்தான் பேச்சுக்கள் வருகின்றன... எது உண்மை என்பதை நாம் அறியோம்... ஒரு சர்வாதிகாரியாக வாழ்ந்தவர்... மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்... இன்று இருக்கிறாரா...? இல்லையா....? என்று தெரியாமலேயே நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

முதல்வர் இல்லை என்ற நிலை வந்தால் அடுத்த முதல்வர் யார்..? இப்போதைய சூழல் சின்னம்மாவைத்தான் முன்னிறுத்துகிறது... அப்ப அவர்தான் அடுத்த முதல்வரா...? கட்சி கரைவேஷ்டிகளுக்கு அழைப்பு விடுப்பது... அப்போலோவில் ஆலோசனை என எல்லாமே இப்ப சின்னம்மா கையில்தானாமே... தமிழகமும் சின்னம்மா கைக்குப் போனால்.... நினைக்கவே பயமாக இருக்கிறது.... ஒரு தேசம்... ஒரு நாகரீகம்... ஒரு மூத்த மொழி அழிவின் பிடியில்... என்ன செய்வது...? தமிழனின் தலையெழுத்து....

முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு ஏதும் ஆகியிருக்காது என்று நம்புவோம்... விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று திடமாய் நம்புவோம்...

நம்பிக்கைதானே வாழ்க்கை...

______________________________

அகல் மாதமிருமுறை  மின்னிதழில் (அக். 1-15) எனது சிறுகதை 'காத்தாயி' வெளிவந்திருக்கிறது. இதுவரை நான்கு கட்டுரைகள் ஒரு சிறுகதை எழுத வாய்ப்பளித்த அகலில் எனது ஆறாவது படைப்பு இது. கட்டுரை வேணும் ஜி... என்று மட்டுமே கேட்கும் அகல் சத்யா அவர்கள் எங்கே நம்மை கட்டுரைகள் மட்டும் எழுத பயன்படுத்துவாரோ என்ற நினைப்பை உடைக்கும் விதமாக சிறுகதையை வாங்கிப் போட்டிருக்கிறார். கதையை வாசித்து கருத்தைச் சொல்லுங்க...


எனக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுக்கும் அகல் சத்யா ஜி அவர்களுக்கும் ஆசிரியர் குழுவுக்கும் அகல் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி.

-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…

சிறந்த அலசல்
அருமையான சிந்தனை

ஸ்ரீராம். சொன்னது…

எப்படியோ, அப்பல்லோவுக்கு செம விளம்பரம்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று திடமாய் நம்புவோம்...

துரை செல்வராஜூ சொன்னது…

முதல்வர் அவர்கள் - விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதற்கு வாழ்த்துவோம்!..

S.P.SENTHIL KUMAR சொன்னது…

சரியான சாட்டையடி பதிவு!
த ம 3

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல பதிவு! ஜெஜெ அவர்களின் பேச்சு இன்று வாட்சப்பில் வந்திருக்கிறதே. மருத்துவமனையிலிருது என்று!! பல வதந்திகள். பல யூகங்கள். ஆளுக்காள் ஒவ்வொரு கதை கிளப்பி என்று ...

நன்றாகச் சொன்னீர்கள் குமார். அப்போலோ நன்றாக விளம்பரம் தேடிக் கொண்டது. இடையில் அதனைப் பற்றி பலர் கடுப்பானார்கள். எங்கள் உறவினருமே...இப்போது நல்ல விளம்பரம்...

கீதா

KILLERGEE Devakottai சொன்னது…

விரிவான அலசல் நன்று நண்பரே எதிரியாயினும் வாழ்ந்து மரணிக்கட்டும் என்று எண்ணுபவனே மனிதன்.
பிறரின் சாவில் ஒருவன் வாழ்வது நீடிக்காது.
த.ம.4

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு பகிர்வு. கத்திரிக்காய் முற்றினால்.... அதைத் தான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்!