மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

நெருஞ்சியும் குறிஞ்சியும் - ஞாபகப் பார்வை

லையாத கனவுகளில் ஆரம்பித்து வேரும் விழுதுகளும்... கொலையாளி யார்? என்ற தொடர்களை எழுதி நெருஞ்சியும் குறிஞ்சியும் ஆரம்பித்து (அட நானும் நாலு தொடர்கதை எழுதிட்டேனா... என்னமோ கிறுக்கி... எப்படியோ நகர்த்தி... ஆச்சர்யம்தான்) 16 பகுதிகள் வரை நகர்த்திய போது விடுமுறையில் ஊருக்குச் சென்றதால் அதை அதற்கு மேல் தொடர வாய்ப்பில்லாமல் போனது... ஊரிலிருந்து வந்த பின்னும் அதனைத் தொடர்ந்து எழுதும் எண்ணம் ஏனோ எழவில்லை. ஒரு வழியாக எண்ணத்துக்கு எண்ணெய் இட்டு அதில் திரி போட்டு மெல்ல எரிய விட்டு... நாளை முதல் மீண்டும் தொடரலாம் என்ற எண்ணம் சுடர் விட ஆரம்பித்துவிட்டது.

கதையை நானே மறந்துட்டேன்... அப்ப படித்த நீங்களும் மறந்திருப்பீங்கதானே... கொஞ்சம் ஞாபகப்படுத்திகலாமே என்றுதான் இந்த ஞாபகப் பார்வை... 


ஆரம்பம் முதலே கதை இரு வேறு களத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது... 

நெருஞ்சியாக கிராமத்து மனிதர் வேலாயுதம்... முழுக்க முழுக்க சாதிக்குள் ஐக்கியமாக்கிக் கொண்ட மனிதர்... சாதி... சாதி... என்று ஊருக்குள் வம்பை கூட்டிக் கொண்டு வருபவர்... தன்னை மீறி திருமணம் செய்து கொண்ட மகனை வெட்டிப் போட்டாலும் போடுவேனே ஒழிய குடும்பத்தோடு சேர்க்கமாட்டேன் என்ற பிடிவாதக் கொள்கை உடையவர்.மைத்துனர் முறையான பக்கத்து வீட்டு பஞ்சநாதன் மூத்தவனை சேர்ப்பதில் என்ன பிடிவாதம் என்று அடிக்கடி கேட்பதுண்டு.. அவருக்கான பதிலாக அவர் சொல்வது நாஞ் செத்தாலும் அவன் இங்க வரக்கூடாது என்றும் என்னோட சாவுக்கு அப்புறம் வேணுமின்னா அவனோட எல்லாரும் சேர்ந்துக்கட்டும் என்று சொல்வார்... சாதி வெறி பிடித்த வைராக்கியமான மனிதர்.

குறிஞ்சியாக கண்ணன்.... கல்லூரியில் படிக்கும் கண்ணன் தனது நண்பன் பார்த்த சாரதி வீட்டுக்கு மற்ற நண்பர்களுடன் போகிறான். அங்கு அவனின் அத்தை மகளும், அவனுக்குத்தான் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருப்பவளுமான சுபஸ்ரீயை சந்திக்க நேரிடுகிறது. இருவருக்குமான நட்பு தொடர்ந்து ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. கண்ணனின் நண்பன் அம்பேத்கார் இது நட்புக்குச் செய்யும் துரோகம் என்று எடுத்துச் சொன்னாலும்... வீட்டில் முடிவு பண்ணி வைத்திருந்தால் போதுமா... என்னோட மனசுல என்ன இருக்குன்னு கேட்பாங்கதானே... பார்த்தாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்... ஆனா அவனை மேரேஜ் எல்லாம் பண்ணிக்க முடியாது... எனக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்கு என்று அவனைத் துரத்த, கண்ணன் அவள் மீது காதலாகிறான்.

இப்படிப் பயணிக்கும் கதையில் வீட்டில் மூத்தவனை சேர்க்க வேண்டும் என இளையவன் தனது அக்கா கணவரிடம் பேச, அவரோ உங்கப்பா சாதி.. சாதியின்னு பேசுவாரு... நான் எதாவது பேசப்போயி ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிற சூழல் வரும். நீயே பேசு மாப்ள... அவரு இறங்கி வந்தால் நான் வர்றேன் என்று சொல்லிவிட, அப்பாவிடம் பேசுவதற்காக வார விடுமுறையில் கிராமத்துக்கு குடும்பத்துடன் போகலாம் என்று முடிவு செய்கிறான்.

சுபஸ்ரீக்கும் சாரதிக்கும் திருமணம் பற்றி வீட்டில் பேச்சு எழ,  தங்கள் காதலை சாரதி வீட்டில் சொல்லி முதலில் சம்மதம் வாங்குவதென்றும் அதன் பின்னர் கண்ணன் வீட்டில் பேசலாம் என்றும் முடிவு செய்து கண்ணனும் சுபஸ்ரீயும் தனித்தனியாக ஒரு நம்பிக்கையான ஆளிடம் பேச நினைத்து அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார்கள்.

குறிஞ்சியில் கடைசியாக....

சில மாதங்களுப்பிறகு... சாரதிக்கும் சுபஸ்ரீக்கும் திருமணத்தை முடித்து விடலாம் என்றும் அதன் பின் அவள் தன் படிப்பைத் தொடரட்டும் என்றும் வீட்டில் முடிவு செய்த விவரத்தை கண்ணனிடம் சொல்லி, இனி பேசாமல் இருந்தால் சரி வராது என்று சொன்ன சுபஸ்ரீயிடம் யாரிடம் பேசுவது..? எப்படிப் பேசுவது..? என்றெல்லாம் பேசி முடிவு செய்தான் கண்ணன்.

அந்த நாளும் வந்தது.

நெருஞ்சியில் கடைசியாக....

கட்டிலில் வந்து அமர்ந்தவர் ‘முக்கியமான விஷயமா..? என்னவா இருக்கும்...? வயவரப்பை அவன் பேர்ல எழுதச் சொல்லப் போறானா...? இல்ல ரோட்டோரமாக் கெடக்க மேட்டு நாத்தங்கால்ல வீடு கட்டலாமான்னு கேக்கப் போறானா...?  என்னவா இருக்கும்...’ என்று யோசித்தவர் மனைவியிடம் “ஏலா உங்கிட்ட எதுவும் சொன்னானா...” எனக் கேட்டார்

“ஆமா... அப்பன் புள்ளைக்கிட்ட ஆயிரம் இருக்கும்... எல்லாத்தையும் எங்கிட்டயா சொல்றீங்க...? அதான் வந்து பேசுறேன்னு சொல்லியிருக்கானுல்ல... வரட்டும்...” என்றபடி வெற்றிலையை மெல்ல ஆரம்பித்தாள்.

இதுவரைக்கும் கதை 16 பகுதிகளாக வளர்ந்து வந்திருந்தது... நாளை முதல் மீண்டும் தொடர்கிறேன்.... நீங்களும் தொடருங்கள் நண்பரே... கதை குறித்த தங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்...

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

#வெற்றிலையை மெல்ல ஆரம்பித்தாள்#
நீங்களும் மெல்ல ஆரம்பிங்க :)

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடருங்கள் நண்பரே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தொடருங்கள்.....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தொடருங்கள் நினைவிருக்கிறது கதை...நாங்கள் தயார் வாசிக்க...