மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 12 ஜூலை, 2016

சினிமா : ஆக்சன் ஹீரோ பிஜூ (மலையாளம்)

ரிலிருந்து வந்தது முதல் தூக்கமில்லா இரவுகள்... நீண்ட நெடிய இரவாய் பயணிக்க, என்னை வாட்டும் வேதனைகளை விட்டொழிக்க, எழுத்தை ஆயுதமாக்கும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் கையிலே தவழ்ந்தன சில சினிமாக்கள்.... அந்த வரிசையில் நான் பார்த்த...

1. பஹத் பாசிலின் 'மகேஷிண்டே பிரதிகாரம்'
2. துல்கர் சல்மானின் ''கலி
3. பிருதிவிராஜின் 'டார்விண்டே பரிணாமம்'
4. விஷ்ணு விஷாலின் 'வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'
5. விஜய் சேதுபதியின் 'இறைவி'
6. வினீத் சீனிவாசனின் 'ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா'
7. கலையரசனின் 'ராஜா மந்திரி'
8. நிவின் பாலியின் 'ஆக்சன் ஹீரோ பிஜூ'
9. ரஜினியின் 'தனிக்காட்டு ராஜா'க்
10. ஒரு பழைய ஆங்கிலப்படம்

என்னடா படமா பாத்திருக்கானேன்னு நினைக்கிறீங்கதானே... வேற வழி இல்லைங்க... விடுமுறை தினங்களில் வீட்டுக்குப் பேசின நேரம், சமையல் செய்த நேரம் போக மற்ற நேரத்தைக் கடத்த இப்படித்தான் பயணிக்க வேண்டியிருக்கிறது. வெளியில் சென்றால் வியர்வையில் குளித்து வர வேண்டும் என்பதாலும் உறவுகளின் அறைகளுக்குச் சென்றால் பெரும்பாலும் நீந்திக் கொண்டிருப்பார்கள் என்பதாலும் எங்கும் செல்வதில்லை. வெளிநாட்டு வாழ்க்கையில் என்னைப் போன்ற பலருக்கு கணிப்பொறியே வாழ்க்கையாகிப் போய்விட்டது என்பதுதான் உண்மை... வருத்தங்கள் வாழ்வை நசித்து விடக்கூடாது என்பதால் வருந்தி சினிமா பார்க்க கத்துக் கொண்டு விடுகிறோம் என்பதே உண்மை.

இவ்வளவு படம் பார்த்திருந்தாலும் பார்த்த மலையாளப் படங்கள் எல்லாமே மிகவும் அருமையான படங்கள்தான்... அப்ப தமிழ்..? பார்த்த ரெண்டு புதுப்படமுமே காமெடி இருந்தால் போதும் ஜெயித்து விடலாமென கதையை எடைக்குப் போட்டுவிட்டு எடுத்த படங்கள்தான்... சிரிப்பு உத்ரவாதம்... லாஜிக் எல்லாம் யோசிக்கக் கூடாது... நம்மாளுங்க ஏன் இன்னும் இப்படியே இருக்காங்கன்னு தெரியலை... சின்னக் கதை... அதை அழகாய் நகர்த்தும் விதம் என சேர நன்நாட்டு இளம் இயக்குநர்கள் பயணிக்க ஆரம்பிக்கும் போது நம்மவர்கள்..? சரி விடுங்க... 

ஒவ்வொரு படம் குறித்து எழுதினால் ஒன்பது பதிவு தேத்திடலாம்தானே... ஹி... ஹி... மலையாள இளம் நடிகர்கள் எல்லோரையும் பிடித்தாலும் எனக்கு ரொம்பப் பிடித்தது நிவின் பாலி... 'ஆக்சன் ஹீரோ பிஜூ'. ஒரு போலீஸ்காரனின் வாழ்க்கையை விடுத்து காவல் நிலையத்தையே சுற்றும் கதை...


திருமணம் நிச்சயிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரான நிவின் தனது சகாக்களுடன் காவல் நிலையத்தில் கையாளும் வழக்குகளே கதைக்களம்... அதாவது எல்லாக் காய்கறிகளையும் போட்டு அவியல் செய்வது போல் கஞ்சா, தற்கொலை, கள்ளக்காதல், திருட்டு என கலந்து கட்டி கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் கதைகள் எல்லாமே காவல் நிலையத்துக்கு வரும் வழக்குகள்தான்... ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவை... படம் முழுவதும் நகைச்சுவையையும் வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

பள்ளிக் குழந்தையை நாயை ஏவி விட்டு கடிக்க விட்டவனை பிடித்த உடன் அவனுக்காக எம்.எல்.ஏ பேச ஆரம்பித்ததும் 'ஆஹா... இனி வில்லனுக்கும் நாயகனுக்கும் நடக்கும் மோதல்தான் படம்... போலீஸ் கதை வேற... நம்ம கவுதம் வாசுதேவ் மேனன் மாதிரி விட்டு விளையாடப் போறானுங்கன்னு பார்த்தா... அவனை பதினைந்து நாள் ரிமாண்டில் வைத்ததோடு அடுத்த காட்சி, அடுத்த வழக்கு என பயணிக்க ஆரம்பித்து விடுகிறது... இங்கு வில்லன் கிடையாது.. அடியாட்கள் கிடையாது... சிலரை அடித்து துவம்சம் செய்யும் நிவின், பலரை மிரட்டியதோடு விட்டு விடுகிறார்.

நடுரோட்டில் தண்ணியடித்து விட்டு வேட்டியை அவிழ்த்து ஆட்டம் போடுபவனை செந்தட்டி போன்ற அரிப்பு செடியை பிடிங்கி அவனது இரண்டு தொடைக்கும் இடையில் வைத்து வேட்டியை கோவணம் போல் கட்டிக் கொண்டு வருவதும், காவல் நிலையத்தில் அவனைப் பாடச் சொல்லி ரசிப்பதும்... ஒருவனை மிரட்டி விசாரிக்கும் போது செந்தட்டி ஆள் முந்திக் கொண்டு அவனை அடிப்பதும் ரகளை என்றால் போலீஸ் வாக்கி டாக்கியை சுட்டுச் செல்லும் குடிகாரன், போலீஸார் கொடுக்கும் கட்டளைகளுக்கு நகைச்சுவையாய் பதில் அளிப்பதும் 'சிட்டி அண்டர் கண்ட்ரோல்' என்ற கமிஷனரின் சொல்லுக்கு 'அண்டர் கண்ட்டுரோலா.. இனி சிட்டி மை கண்ட்டுரோல்' என்று சொல்வதும் அவனைப் பிடிக்கத் திணறுவதும் ரகளையோ ரகளை.

இப்படி சுவராஸ்யமான வழக்குகளை சந்திக்கும் நிவின், ரவுடிகளுக்கு அடி கொடுப்பதில் கூட வித்தியாசம் காட்டியிருக்கிறார். துணியில் கட்டப்பட்ட உறிக்கப்படாத தேங்காயை வைத்து, குற்றவாளியை குனிய வைத்து முதுகெலும்பில் அடிப்பார்.. அடி வாங்குபவனுக்கும் அதைப் பார்ப்பவனுக்கும் குற்றம் செய்யவே தோன்றாது. கணவனின் நண்பனோடு சென்றவள் காவல் நிலையத்தில் வந்து குழந்தையும் அவனுக்கு பிறக்கவில்லை... அவனது நண்பனுக்குத்தான் பிறந்தது என்று சொல்லும் வழக்கு சோகமென்றால் ஆட்டோக்காரரின் காதல் ரசிக்க வைக்கும்.


வீட்ல குழந்தைங்க குளிக்கும் போது எதிர்த்த வீட்டுக்காரன் எல்லாத்தைக் காட்டிக் கொண்டு குளிக்கிறான் என்று கேஸ் கொடுக்க வரும் பெண்களிடம் ஏன் அவனைப் பார்க்கிறீர்கள் என்று கேட்க, அவன் ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ன்னு கூப்பிடுறான்னு சொல்லவும், ஆளு பங்கியுண்டோன்னு கேக்க, பங்கி எல்லாம் இல்ல...  என்று அந்தப் பெண் சொல்ல, அப்ப பங்கி இருந்த ஒகேயா என்றதும் அந்தப் பெண் தலையாட்டி சிரிப்பாருங்க பாருங்க சிரிப்பு... அப்போ அந்தப் பெண்ணின் முகபாவம் சூப்பர்.

இப்படி இன்னும் இன்னுமாய் கலந்து கட்டி கடைசி வரை ரசிக்க வைக்கும் படத்தில் முழுக்க முழுக்க காவல் நிலைய நிகழ்வுகளே காட்டப்படுவதால் நாயகிக்கு மூக்குத்தி அழகி அனு இம்மானுவேலுக்கு அதிக வேலை இல்லை. ஒரிரு முறை போனில் பேசுவதோடு இரண்டு பாட்டிலும் இறுதிக் காட்சியிலும் வருகிறார். பின்னணி இசை முருகேசன்.. நம்ம பக்கத்து ஆளு போல அடிச்சி துவம்சம் பண்ணிடுறாரு... நிவினே தயாரிச்சு இருக்காரு... லஞ்சம் வாங்காத, மக்கள் பணிதான் முக்கியம் என்று இரவு பகல் பாராது உழைக்கும் எத்தனையோ காவலர்களின் பிரதிபலிப்புதான் நிவினின் கதாபாத்திரம். 'எம்.எஸ்.ஸி., எம்.பில் படிச்சிட்டு புரபஸர் வேலையை தூக்கி எறிஞ்சிட்டு விரும்பி இந்த வேலைக்கு வந்தவன்டா...' என்று சீறும் போதும்... பள்ளிக் குழந்தைகளிடம் பேசும் போதும்... ரோஹிணிதான் திருடினார் என்பது தெரிந்த போது என்,சி,சியில் கலக்கும் குழந்தையின் அம்மாதான் அவர் என்று தெரிந்து மருகும் போதும் காதலியுடன் போனில் பேசும் போதும்... நிவின் ஜொலிக்கிறார். மலையாள சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை நிவின் பிடிப்பார்.

இந்தப் படத்தை அவரே தயாரித்திருக்கிறார்... படத்தின் ஆரம்பத்தில் அப்பா, அம்மா, மனைவி, குழந்தை, சகோதரிகள், நட்புக்கள், தன்னை ஏத்திவிட்ட ஏணிகளாம் இயக்குநர் நண்பர்கள் எல்லாருக்கும் நன்றி சொல்லியிருக்கிறார். என்னை அறிந்தால் அஜீத் போன்று சில இடங்களிலும் சாமி விக்ரம் போல் பல இடங்களிலும் தெரிகிறார். இனி போலீஸ் கதாபாத்திரத்தில் பயமின்றி இறங்கலாம்.


படம் சூப்பருங்க... நம்மாளுங்க இன்னும் வில்லனின் பின்னால்தான் திரிகிறார்கள்... இவர்கள் வில்லனே இல்லாமல் படம் எடுத்து வெற்றியும் பெறுகிறார்கள்.

'ஆக்சன் ஹீரோ பிஜூ'வை சிரித்தும்... சீரியஸாகவும் ரசிக்கலாம்.

--------------------------------

ஜூலை மாத கொலுசு மின்னிதழில் எனது "காத்திருந்த உயிர்" என்னும் சிறுகதை வெளிவந்திருக்கிறது. கொலுசில் இது எனது முதல் கதை. அடுத்த பகிர்வாய் கதையை இங்கு பகிர்கிறேன்..

கொலுசு இணையத் தளத்தில் வாசிக்க... "காத்திருந்த உயிர்"

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

பங்கி என்றால் என்ன?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்
நன்றி நண்பரே

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
அழகுன்னு அர்த்தம் அண்ணா... பங்கின்னே எழுதிட்டேனா... அதுசரி...:)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anuprem சொன்னது…

நன்று....பதிவுலகுக்கு வந்தவுடன் நானும் பல மொழி படங்களையும் தெரிந்து கொள்கிறேன்...

துரை செல்வராஜூ சொன்னது…

>>> வெளிநாட்டு வாழ்க்கையில் என்னைப் போன்ற பலருக்கு கணிப்பொறியே வாழ்க்கையாகி விட்டது என்பதுதான் உண்மை... <<<

நியாயம்!..

வாழ்க நலம்!..

KILLERGEE Devakottai சொன்னது…

விமர்சனம் அடிபொழி கேட்டோ...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அப்படித் தான் செல்கிறது வாழ்க்கை.....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் எங்கள் தளத்திலும் எழுதியுள்ளோம். நல்ல படம்.

தங்கள் வெளிநாட்டு வாழ்க்கை...ம்ம்ம் அப்படித்தான் பலருக்கும் ஆகிப் போகிறது....இங்குமே தனியாக இருப்போருக்கு அப்படித்தான்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் நட்பே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அய்யா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
உண்மைதான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.