மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 8 மே, 2014

தேவகோட்டையில் நான்,,,

ஊருக்கு வந்தது முதல் மழை அடித்துப் பெய்கிறது. எங்கும் செல்ல முடியவில்லை. எங்கள் வீட்டைச் சுற்றி கண்மாய் போல் தண்ணீர் நிற்கிறது. இன்னும் மழை விட்டபாடில்லை... அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பிக்கும் நாளில் நல்ல மழை என்பது சந்தோஷமே. இன்னும் யாருக்கும் போன் பண்ணவில்லை.  வீட்டைச் சுற்றி தவளை கத்துவது அடை மழை காலத்தில் எங்களது கிராமத்தில் இருப்பது போன்றதொரு எண்ணத்தைத் தருகிறது.

விமானத்தில் வரும்போது பணிப்பெண் சிரித்துச் சிரித்துப் பேசினாள். சரக்குக் கொடுத்துக் கொண்டு வரும்போது என்ன சார் வேண்டும் என்றாள். ஆப்பிள் ஜூஸ் என்றதும் சார் டைகர் பீர் சூப்பரா இருக்கும்... குடிச்சிப் பாருங்க... என்று கிண்டலாய் சொன்னாள். சுதாரித்து இருக்க வேண்டும். சரி பேசிட்டுப் போறா என்று நினைத்தபடி ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் குடித்தேன். யாருக்கோ தண்ணீர் ஊற்றியவள் கை தவறி நான் அமர்ந்திருந்த இருக்கையில் ஊற்றி என்னையும் நனைத்து விட்டாள். நல்லவேளை சரக்கு அபிஷேகம் பண்ணவில்லை. அதன் பிறகு ரொம்பச் சிரித்தாள். சுதாரிச்சிருக்கணும் சூனாப் பானான்னு சொல்லிக்கிட்டே தல படம் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.

சென்னை வந்திறங்கி அங்கிருந்து திருச்சிக்கு விமானத்தில் வர, எனக்காக மனைவி, மகள், மகன் எல்லோரும் விமான நிலைய வாசலில் காத்திருந்தார்கள். அவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியில் மனசு துள்ளியது. அவர்களுடன் பேசியபடி காரில் தேவகோட்டை நோக்கிப் பயணம்... ஊருக்கும் வந்தாச்சு. இன்னும் எந்த வேலையும் பார்க்கவில்லை... மனைவியின் மயக்கும் காபியை உறிஞ்சியபடி... மழையை ரசித்துக் கொண்டிருக்கிறேன்...

அனைவரிடமும் பேச வேண்டும்... விரைவில் பேசலாம்.
-'பரிவை' சே.குமார்.