மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 18 மே, 2023

மறக்க இயலா நினைவுகள் - 5

ங்கப்பலகை முகநூல் குழுமத்தில் எழுதிய மறக்க இயலாத நினைவுகள் இங்கும் பகிர்வாக...

***

ன்று அன்னையர் தினமாம், இன்று ஒரு நாள் மட்டும் கொண்டாட இது ஒன்றும் மற்ற தினங்களைப் போல இல்லை என்பதால் நாம் தினம் தினம் கொண்டாட வேண்டிய ஆத்மா அது என்பதை மட்டும் சொல்லிக் கொண்டு எனக்கும் அம்மாவுக்குமான நினைவுகளில் மறக்க இயலாத நினைவுகளை இங்கு பகிரலாமென நினைக்கிறேன்.

நாங்க கிராமத்து விவசாயக் குடும்பம்தான், அதுவும் அதிக வசதிகளற்ற சாதாரணக் குடும்பம்தான். குடும்ப வறுமையே நன்றாகப் படித்தும் எங்க பெரியக்கா, பெரியண்ணனை எல்லாம் பனிரெண்டாவதுக்குப் பின் படிக்க வைக்க முடியாமல் போனது என்பதே உண்மை என்றாலும் எங்க அண்ணன் பத்தாவது படிக்கும் போது நாங்க சில வருடம் லீசுக்கு எடுத்துப் பார்த்த தோட்டத்துக் காய்கறிகளை சைக்கிளில் கொண்டு போய் விற்றுவிட்டு வந்து பள்ளிக்கு கிளம்பிப் போவார். பனிரெண்டாவதில் நல்ல மதிப்பெண் பெற்றாலும் குடும்பச் சூழலால் வேலைக்குப் போனார். அப்படியான குடும்பத்தில் நாங்கள்ல்லாம் படிக்க நினைச்சும் படிக்கலை நீங்களாச்சும் படிக்கணும் என அவர்களின் விருப்பத்தின் பேரில்தான் நானும் என் தம்பியும் கல்லூரி வாசலை மிதித்தோம்.
விவசாயம் என்பது மழையை நம்பித்தான் இருக்கும், பயிர்களைப் பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கும். இந்த வருடம் நல்லா விளையும் என்று நினைத்திருந்தால் சரியாக பால் பிடிக்கும் சமயத்தில் தண்ணீர் இல்லாது, மழை பெய்யாது காய்ந்து போய் சாவி ஆகிவிடும். அந்த வருடம் ரேசன் அரிசிதான் சாப்பாட்டுக்கு என்றாகிப் போகும். அப்பா அப்போது திருச்சிப் பக்கம் வேலை பார்த்தார், வீட்டில் அம்மா மட்டும்தான். எங்கள் படிப்பு பள்ளிக்கூடங்களில் பயணிக்க எங்க அம்மாவே காரணம்.
நான் எட்டாவது முடித்ததும் வேறு பள்ளி போக வேண்டும். தே பிரித்தோவில் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றால்தான் ஒன்பதாவது சேர முடியும். தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றதும் , எங்க ஊரில் இருந்து குறுக்குப் பாதையில் பயணித்தாலே மூணு கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் பள்ளிக்கு அவனைக் கூட்டிப் போய் சேர்த்து விட்டு வாங்க எனச் சில உறவுகளிடம் அம்மா கேட்டும் அவர்கள் வேலை இருக்கு எனச் சொல்லி ஒதுங்கிக் கொள்ள, அம்மாவே என்னைக் குறுக்குப் பாதையில் நடந்தே கூட்டிக் கொண்டு போய் சேர்த்து விட்டார்.
அதேபோல்தான் கல்லூரியில் சேரும் போதும் நன்பர்களுடன் போய் விண்ணப்பம் வாங்கிப் போட்டு, இடம் கிடைத்ததும் அம்மாதான் கூட்டிப் போய் சேர்த்துவிட்டார்.
பள்ளியில் படிக்கும் போது வீட்டில் மின்சாரமெல்லாம் கிடையாது. அரிக்கேன் விளக்குதான். அதைச் சுற்றி நாங்க மூணு பேர் - நான், அக்கா, தம்பி - அமர்ந்துதான் படிப்போம். மின்சாரம் வந்தபோது எங்க அக்கா, அப்பாவுடன் திருச்சிக்குப் போய் அங்கு படித்தார், நானும் தம்பியும்தான் வீட்டில்.
வீட்டில் நான் படிக்கலைன்னாலும் அவன் பாஸாயிருவான் என்று நம்பிக்கையோடு சொல்லும் அம்மா, தம்பியைப் புத்தகம் எடு, படி எனச் சொல்லிக் கொண்டே இருப்பார். அதென்ன அவனை மட்டும் படிக்கச் சொல்ல மாட்டேங்கிறே என அவன் மல்லுக்கு நிற்பதும், புத்தகத்துக்கு உள்ளே க்ரைம் நாவலை வைத்து வாசிப்பதும் தனிக்கதை.
எங்க வீட்டில் அம்மாவுடன் அதிகம் இருந்தது நானாகத்தான் இருக்கும். அண்ணனெல்லாம் சின்ன வயதிலேயே வேலைக்குப் போய்ட்டாங்க. தம்பி கூட கல்லூரி முடித்ததுடன் சிங்கப்பூர் பக்கம் போயிட்டான். நான் கணிப்பொறி மையம் வைத்திருந்ததாலும் கல்லூரியில் வேலை பார்த்ததாலும் அம்மாவுடந்தான் இருந்தேன். நானும் அம்மாவும் மட்டும்தான் வீட்டில்.
மேற்படிப்பு படிக்கும் போது எங்க ஊரில் இருந்து தேவகோட்டைக்குச் சைக்கிளில் வந்து, அங்கிருந்து காரைக்குடிக்குப் பேருந்தில் பயணித்து, பெரியார் சிலை அருகில் இறங்கினால் அடுத்த நிமிடமே பேருந்து நிலையத்தில் இருந்து வரும் புதுக்கோட்டை என்.என்.எல்லில் ஏறினால்தான் கல்லூரிக்குச் சரியான நேரத்தில் போக முடியும் என்பதால் அதிகாலை எனக்கு முன் எழுந்து காலை, மதியம் என இரண்டு வேலைக்கு சமையல் செய்து கொடுத்து அனுப்புவார்.
ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை, பதினென்றாவது படிக்கும் போது அம்மாவைச் சைக்கிளில் சந்தைக்கு கூட்டிப் போக ஆரம்பித்தவன் கல்லூரி முடிக்கும் வரை வாராவாரம் கூட்டிப்போவேன். அப்போதெல்லாம் அம்மாவுடன் போகும் போது எதிரே வரும் பசங்க, கை காண்பித்துச் செல்ல, நாம் சிலருக்கு வணக்கம் சொல்ல, இதையெல்லாம் கவனிக்கும் அம்மா வீட்டில் வந்து தம்பி இங்க யார்க்கிட்டயும் பேசலைன்னாலும் வெளியில நிறையப் பேரப் பழகித்தான் வச்சிருக்கு, எதிர வர்றவனெல்லாம் கையைத் தூக்கிட்டுத்தான் போறானுங்க. பெரிய ஆளுகளெல்லாம் பார்த்து சிரிச்சித் தலையாட்டுறாக, இதுக்கு கடைசி வரைக்கும் பழகின ஆளுக உதவிருவாங்கன்னு சொல்லும். அப்படித்தான் இப்போது வரை நட்புக்களால் நான் உயர்ந்து கொண்டே இருக்கிறேன்.
அம்மாவோட சந்தைக்குப் போனதால காய் எப்படி வாங்குவது..? எந்தக் கடையில் நல்லாக் கொடுப்பாங்க..? என்ற விபரமெல்லாம் நன்றாகவே தெரிந்து வைத்திருந்ததால் ஒரு கட்டத்தில் அவன் போனாலே நல்லதாப் பாத்து வாங்கிட்டு வந்திருவான் என்று என்னை மட்டும் போய் வாங்கி வரச்சொல்லிவிடுவார். மீன் முதற்கொண்டு வாங்கி வந்துவிடுவேன். அதுதான் இப்போது வரை தொடர்கிறது. இப்ப ஊருக்குப் போனாலும் சந்தைக்குப் போனால் கருவாட்டுக் கடைக்காரர் எல்லாம் 'அண்ணே... எப்பண்ணே வந்தே...?' என அன்போடு விசாரிப்பார்.
எங்கண்ணன் சிரித்துக் கொண்டே 'அம்மா உனக்குத்தான் நிறையப் பண்ணியிருக்கு, அதனால் நீதான் பார்க்கணும்' என அடிக்கடி சொல்வார். தற்போது அப்பா அம்மா இருவரும் நல்ல நடைபொடையா இருந்தாலும் வயதானவர்களுக்கே உரித்தான உடல் நலப் பாதிப்புக்களில் சிக்கி இருக்கும் சூழலில் என் மனைவி மிகச் சிறப்பாகவே பார்த்துக் கொள்கிறார்.
அம்மாவுடன் இன்னும் நிறைய மறக்க முடியாத நினைவுகள் உண்டு.

-பரிவை சே.குமார்.

2 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

எப்போதுமே, எல்லோருக்குமே அம்மா ஸ்பெஷல்தான்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை குமார்...