மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 28 ஜூலை, 2018

சினிமா : சூடானி ப்ரம் நைஜீரியா (மலையாளம்)

Image result for sudani from nigeria

'ஹேய் சூடானி...'

'ஐ ஆம் ப்ரம் நைஜீரியா...'

'ஓ... சூடானி ப்ரம் நைஜீரியா...'

படத்தோட பேரை ஒரு புட்பால் மேட்சுக்கு அப்புறம் பார்வையாளனாக வந்த ஒருவன் போட்டியின் நாயகனான சாமுவேல்கிட்ட கேட்பதில் படத்தின் பெயர் வந்துவிடுகிறது. 

நம்மவர்களோடு ஓப்பிடும் போதும் மலையாளிகள் ஒரு சின்னக் கதையை, தம்பி நௌஷாத் பாணியில் சொன்னால் 'நாட்'டை வைத்துக் கொண்டு மிகச் சிறந்த படத்தைக் கொடுப்பதில் வல்லவர்கள்.  அப்படித்தான் இந்தப் படமும் வந்திருக்கிறது. 

நாம எப்போது இப்படியான படங்களை எடுக்கப் போகிறோம் என்றார் நண்பர். இந்தப் படங்களை ரீமேக் பண்றேன்னு கொலை பண்ணாமல் இருந்தாலே போதும் என்றார் மற்றொருவர்... மூன்றாம் கலைஞரின் 'நிமிர்' பார்த்திருப்பார் போலும்.

நாம எப்படி கிரிக்கெட்டுக்கு முன்னால விழுந்து கிடக்கிறோமோ அப்படித்தான் மலையாளிகள் புட்பாலின் முன்னால்... அர்ஜெண்டினா தோத்துப் போச்சுன்னு தற்கொலையெல்லாம் பண்ணிக்கிட்டானுங்களா இல்லையா... 

இந்தப் படம் புட்பால் பின்னணியில் பயணித்தாலும் ஒரு தனி வீரன் அடிபட்டு விழ, அன்பு என்னும் வலைக்குள்... அவன் பின்னே பயணிக்கிறது அழகிய காட்சிகளுடன்.

கல்யாணத்துக்குப் பெண் பாக்கும் போது மாப்பிள்ளை என்ன பண்றார் என்ற கேள்விக்கு சும்மாதான் இருக்கார்ன்னு சொன்னா பெரும்பாலும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க... அப்படித்தான் சரியான வேலை இல்லாத காரணத்தால் பார்க்கும் பெண்ணெல்லாம் தட்டிப் போக, தான் மேலாளராய் இருந்து நடத்தும் ஒரு புட்பால் அணியின் வெற்றியில் சம்பாதிக்கும் காசை வைத்து வீரர்களுடன் மகிழ்வாகவே வாழ்கிறான், மிகப் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவில் இருக்கும் மஜீத்.

நைஜீரியாவில் மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் பாட்டி, தங்கைகளுடன் வாழ்ந்து வருபவம் சாமுவேலுக்கு குடும்ப வறுமையை விரட்ட பணம் வேண்டும். அந்த பணத்துக்காக பல வேலைகள் பார்க்கிறான். இறுதியில் உள்ளூர் புட்பால் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று பணம் சம்பாதிக்க கேரளா வந்து சேர்க்கிறான்... நாம வளைகுடா நாட்டில் வந்து கிடப்பது போல். 

இவனுடன் சேர்த்து மூன்று நைஜீரியன்களை தன் அணியில் வைத்திருப்பதால் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது மஜீத்தின் 'MYC' அணி. யார் கண்பட்டதோ அணியின் நட்சத்திர வீரனான 'ஷூடு' என்றழைக்கப்படும் சாமுவேல் பாத்ரூமில் விழுந்து அடிப்பட்டு, சில மாதங்கள் எழுந்து நடமாட முடியாது என்ற நிலைக்கு ஆளாகிறான்.

அவனை மருத்துவமனையில் வைத்துப் பார்த்தால் அதிக செலவாகும் என்பதால் வீட்டுக்கு கொண்டு வந்து பார்த்துக் கொள்ளும் மஜீத், அவனை ஊருக்கு அனுப்பலாமா... இங்கு வைத்துக் கொள்ளலாமா எனத் தவிக்கிறான், அதற்குக் காரணம் பணமே.

பணம் ஒரு மனிதனை என்ன பாடு படுத்தும் என்பதை உணர்ந்தவனால் மட்டுமே சொல்லமுடியும். நாமதான் ஆயிரம், ஐநூறு செல்லாதுன்னு சொன்னப்பவே உணர்ந்துட்டோமேன்னு  சொல்றீங்களா..? சரி விடுங்க.

அடிபட்டவனுக்கு ஒரு அம்மா அல்ல இரண்டு அம்மாக்களாய் மஜீத்தின் அம்மாவும்...அவரின் தோழியும்... எத்தனை பாசம் இந்தப் பெருசுகளிடம்... உடல் நலம் தேற... அவனின் பாட்டியின் மரணத்துக்கான செய்முறை... அவன் எழுந்து நடமாட வேண்டி பள்ளிக்குச் செல்லுதல் என எத்தனை நேசம் இந்த அம்மாக்களுக்குள்....  

மொழி புரியாவிட்டாலும் 'மம்மா' என்று சாமுவேல் அழைக்கும் போதெல்லாம் தன் மீதான கோபத்தில் மகன் தன்னை அம்மா என்றழைக்காமல்... பேசாமல்... அந்த வீட்டுக்குள் வாழ்வதை நினைத்து அழும் தாயிடம் 'மம்மா... டோண்ட் கிரை' என்று சொல்லும் போது நமக்கும் அழுகை வரலாம்.. வரும்.

காவிரி இல்லாது காய்ந்து கிடக்கிறோம் என நாம் புலம்புவதை நினைத்து மனம் இறங்க மறுக்கும் கர்நாடகாவிடம் நீ மறுத்தால் நான் விட்டு விடுவேனா என வருணபகவான் அடித்து ஆடி திறக்க வைக்க, நாமும் மண்ணெல்லாம் அள்ளி விற்று விட்டு குற்றுயிரும் குறை உயிருமாய்க் கிடக்கும் காவிரித்தாயின் மடி நனைந்தோடும் தண்ணீரை கடலுக்கு கொடுத்தது போக பாதியளவுக்கேனும் தேக்கி,  விவசாயம் செய்து மனம் மகிழ்கிறோம். 

எட்டு வழிச் சாலை எனக்குத் தேவை எனவும் நான் வேண்டியதால்தான் மழை வந்தது எனவும் ஆட்டம் போடுபவர்கள் மத்தியில் நாமும் நம் பங்குக்கு புதிய இந்தியா பிறந்து விட்டதா இல்லையா... கலைஞர் இறப்பாரா மாட்டாரா... பதினேழு பேர் கெடுக்கும் வரை அந்த சிறுமி என்ன செய்தாள் என என்னவெல்லாமோ பேசினாலும் நம் நாடு நமக்கு சுதந்திரத்தை மட்டுமல்ல சொர்க்கத்தையும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. 

எங்க வீட்டுப் போரெல்லாம் மணிக்கணக்கில் ஓடினால்தான் டேங்க் நிறைகிறது. பக்கத்து வீடுகளில் எல்லாம் போரில் தண்ணீர் வராமல் காற்று மட்டுமே வர, புதிய குழாய்களை இறக்கி விட்டார்கள் என்றாலும் தண்ணீர் பஞ்சம் என்பது குடங்களைத் தூக்கிக் கொண்டு கிணறு கிணறாக அலைந்த பள்ளி நாட்கள் அளவுக்கு அவ்வளவு மோசமானதாக இன்னும் நம் பகுதிக்குள் இறங்கிவிடவில்லை. 

நைஜீரியாவைக் காட்டும் போது தண்ணிக்கு ரேசன்... பணம் கொடுத்து வாங்கி...  சோமாலியர்களைப் போன்றுதான் அவர்களும் இருக்கிறார்கள். என்ன சற்றே உடலில் சதைகள் இருக்கின்றன... எத்தனை எத்தனையோ கஷ்டங்களை அந்த மக்கள் அனுபவிக்கிறார்கள். இப்படியான வாழ்க்கையை நமக்களிக்காத இறைவனுக்கு நன்றி.

ஒரு புதிய மனிதனோ... புதிய பொருளோ வீட்டுக்கு வரும்போது அக்கம் பக்கத்தார் சன்னல் வழி எட்டிப் பார்ப்பது கிராமத்துக்கே உரிய இயல்புதானே... பெண் பார்க்க வந்தாலும் அப்படித்தானே பார்ப்பார்கள். பள்ளியில் படிக்கும் காலத்தில் ஊருக்குள் முதலில் வந்த தொலைக்காட்சிப் பெட்டில் படம் காண இப்படித்தானே நின்றிருக்கிறோம். அப்படித்தான் அடிபட்டு ஸ்டெக்சரில் கொண்டு வரப்படும் சாமுவேலை எட்டிப் பார்க்கிறது ஒரு சிறுவர் கூட்டம்.  நம்ம பயலுக ஒரு கட்டம் போட்டு சிக்ஸ் அடிச்சா அவுட்டுன்னு கிரிக்கெட் விளையாடுற மாதிரி அவனுக புட்பாலோட திரியிறானுக... பின்னாளில்  சாமுவேலின் நண்பர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்... நம்ம ஷுடுவும் கோச்சாக ஆகிறான்.

படுத்த படுக்கையாய்  இருப்பவனிடம் பீரைக் காண்பித்ததும் அவனின் முகத்தில் வரும் சந்தோஷம் அடுத்த நொடி உடைக்கிறேன் பேர்வழி என தரையில் போட்டு உடைக்கும் நண்பனால் காணாமல் போய் விடுகிறது. காட்டுக் கத்தாலாய் கத்துகிறான். இதே போன்ற ஆற்றாமையை மஜீத்தும் அவ்வப்போது வெளிப்படுத்துகிறான். இருப்பினும் அன்பு ஜெயித்து ஆற்றாமையை அழித்து விடுகிறது. அதில் மஜீத்தின் ஆங்கிலமும் அளவளாவுகிறது.

மேனேஜர் நீ அம்மாவிடம் பேசாமல் இருக்கக்கூடாது என அந்த அன்னையின் கண்ணீருக்கு ஆதரவாய் மஜீத்திடம் பேசும் போதும்... பாட்டி செத்துப் போச்சு நான் ஊருக்குப் போகணும் என அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் போதும்... பெண் பார்க்க போறவனிடம் எனக்கும் ஒருத்தி இருக்கிறாள் என போட்டோவைக் காட்டி வாழ்த்துச் சொல்லி அனுப்பும் போதும்... சுவரில் படம் வரைந்து அம்மாக்களிடம் காட்டி மகிழும் போதும் மனசுக்குள் நிற்கிறான் சாமுவேல்.

அடிபட்டவனுக்கு செலவு செய்யணுமா... எழுந்து வருவானா மாட்டானா... ஊருக்கு அனுப்பலாமா... என எத்தனையோ எண்ண ஓட்டமிருந்தாலும்.. பார்க்கும் பெண்ணெல்லாம் தன்னை வெறுத்து ஓதுக்குதே என்ற வருத்தம்... போட்டிகளில் ஜெயிக்கும் சந்தோஷத்தை வீரர்களுடன் கொண்டாட்டம்... அம்மாவை... அம்மாவைக் கட்டிக் கொண்ட அப்பனை வெறுத்து ஒதுக்கி வாழ்தல்... என அடித்து ஆடும் மஜீத் (ஷோபின்), சாமுவேலின் மலம் எடுத்து வெளியே போடும் மனிதாபிமானம் நிறைந்தவனாக... மன நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

எங்கோ பிறந்து தன் வீட்டில் முடங்கிக் கிடக்கும் வேற்று மதத்தினனை தன் மகனாய் பார்க்கும், மகனின்  அன்புக்காக ஏங்கும் மஜீத்தின் அம்மாவும், அவரின் தோழியும் மிகச் சிறப்பாய் நடித்திருக்கிறார்கள்.  அன்னையை மணம் புரிந்து கொண்ட காரணத்தால் மஜீத் தன்னை  ஒதுக்கினாலும் அந்த வீட்டுக்கு விடுமுறையில் வந்து செல்லும் வாப்பாவும் சிறப்பாய் நடித்திருக்கிறார்.

ஒரு ஏழை தன்னால் இயலாது என்றாலும் தன்னை நம்பி வந்தவனை எப்படியும் காப்பாற்றி ஆக வேண்டுமென நினைக்கும் போது வெளிநாட்டவனை தங்க வைத்திருப்பதில் இருக்கும் சட்டச் சிக்கல்கள், அதை எதிர் கொள்ளும் விதம், பாஸ்போர்ட் தொலைந்த நிலையில் அவனை எப்படி ஊருக்கு அனுப்புவது என அலைபாயும் மனதுடன் ஓடித்திரிதல் என வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷக்காரியா.

ஏலே எத்தனை பாட்டிருந்தாலும் ஒரு குத்துப் பாட்டு வேணும்... அது கஸ்தூரியா இருந்தாலும் பரவாயில்லை... அவரு பாட்டுக்கு... ஓரு பக்கம் தொப்புள்காட்டி ஆடிக்கிட்டு இருக்கட்டும் என தமிழ் சினிமா தரமாய்ப் பயணிக்கும் போது நாயகியே இல்லாமல் சேவல் பண்ணையை வைத்தே படமெடுத்து உலக சினிமாவாய் கொடுப்பது கூட ஒரு தில்தான்... 

நாம இன்னமும் அரிவாளும் ரத்தமும்... ஏய் உய்யின்னு டாட்டா சுமோ பறத்தலுமாய் பயணிக்க சேரநாடு பசுமையான படங்களைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. குடும்பத்துடன் பார்க்கும் படங்களை அள்ளிக் கொடுக்க நாம எப்போதேனும் கடைக்குட்டி சிங்கங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

என்னய்யா இந்தாளு நாயகி இல்லாம... தொப்புள் காட்டாம... சினிமா எடுத்து... சை... என்ன படமோ... இப்படியெல்லாம் எடுக்க முடியுமா... இல்ல எடுக்கலாமா... சாமி குத்தமில்லையா... அப்படின்னு எல்லாம் யோசிக்க விடாம நம்மளையும் சாமுவேல் பக்கத்துல படுக்க வைத்து... அந்த அம்மாக்களோட அன்பில் நனைய வைத்து... மஜீத் பின்னால அலையவிட்டு... கடைசியில கண்ணுல தண்ணி வர வச்சிடுறாரே... வாழ்த்துக்கள் இயக்குநர் ஷக்காரியா. உமக்கு இது முதல் படமாய்யா... வச்சி செஞ்சிட்டே போ.

வெற்றிக்குப் பின் சட்டையைக் கழற்றிச் சுற்ற தாதா வேண்டும் கிரிக்கெட்டில்... ஆனால் புட்பாலில் வெற்றிக்குப் பின் பனியனை மாற்றிக் கொள்ளுதல் இயல்பான ஒன்று.  சாமுவேல் தன் பனியனைக் கழற்றிக் கொடுக்க, மஜீத்தும் தன் பங்கிற்கு தனது பனியனைக் கொடுக்க, அந்த ஏழைகளின் பரஸ்பர அன்பு உயர்ந்து நிற்கிறது ஒரு உன்னத சினிமா.

போலீஸ் ஸ்டேசனுக்கு  வரச் சொன்ன போலீசு இருங்கய்ய பத்து நிமிசத்துல வாறேன்னு சொல்லிட்டுப் போய் இரவு பத்து மணிக்கு வந்து நீங்க இன்னும் போகலயான்னு கேட்டு சரி போங்கன்னு சொன்னான் பாருங்க... எதுக்கு உக்காரச் சொன்னாருன்னு மணிக்கணக்குல உக்காந்து கடைசியில ஒண்ணுமில்லாம கொடுத்த காசு போச்சுன்னெல்லாம் வர வேண்டாம்... கொடுக்குறதுக்கு மேல மன நிறைவு கிடைக்கும் கண்களில் கண்ணீருடன்.

ஆமா பாஸ்போர்ட் கிடைச்சிருச்சாய்யா... போலியாமே... பார்த்தா தெரியப் போகுது கிடைத்ததா இல்லையா என்பது...

சூடானி ப்ரம் நைஜீரியா... பார்க்க வேண்டிய மிகச் சிறந்த படம்.

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான விமர்சனம்
படம் பார்க்கத் தூண்டுகிறது
நன்றி நண்பரே

ஸ்ரீராம். சொன்னது…

மூன்றாம் கலைஞர் !

:))

ஸ்ரீராம். சொன்னது…

எவ்வளவு பெரிய விமர்சனம்?! இந்தத் திரைப்படம் பற்றித் தெரிந்து கொண்டேன்.

Anuprem சொன்னது…

பார்க்கும் ஆவலை தூண்டுகிறது ...தங்கள் எழுத்து..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகிய விமர்சனம்... ஆழ்ந்த விமர்சனம்...