மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 12 ஜனவரி, 2018

என் வரலாற்றுப் பார்வை - அகல் மின்னிதழ் கட்டுரை

சிவகாமி ஏமாந்தாளா..? ஏமாற்றப்பட்டாளா..?

சிவகாமி ஏமாந்தாளா..? அல்லது ஏமாற்றப்பட்டாளா..?

இப்படி மொட்டையாக் கேட்டா... எந்தச் சிவகாமி..? அவள் எதில் ஏமாந்தாள்..? அல்லது யாரால் ஏமாற்றப்பட்டாள்..? என்ற கேள்வி எழத்தானே செய்யும்.

இவள் பல்லவ சாம்ராஜ்யத்தின் மதிப்புமிகு சிற்பியான ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி.

இந்தச் சிவகாமி, மாமல்லன் என்ற பட்டப் பெயர் பெற்ற நரசிம்மவர்மப் பல்லவனைக் காதலித்தவள்.

ஆம்... சிறு வயதில் ஒன்றாக விளையாடி, பதின்மத்தில் நட்பு காதலாக நரசிம்ம பல்லவனை தீவிரமாக்க் காதலித்தவள்... பரதக் கலையில் சிறந்தவள்...  ஆயனச் சிற்பி செதுக்கிய சிற்பங்களெல்லாம் இவளின் அபிநய வடிவம் தாங்கி நின்றவைதான். மகேந்திர பல்லவருக்கு மிகவும் பிடித்த ஆடலரசி... இவளின் நாட்டியம் உலகெங்கும் பேசப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டவர் அவர். ஆனாலும் காதல் என்று வரும்போது...? அதுவும் தான் கண்டு வைத்திருக்கும் கனவுக்குப் பங்கமாக தன் மகனையே காதலித்தாள் என்றால்...?

சிவகாமியின் காதலுக்குள் போகும் முன் கொஞ்சமாய் பொதுப்பார்வை பார்த்துச் செல்வோமே. காதல் என்பது வெற்றி பெறுவதை விட அதிகம் தோல்வியைத்தான் தழுவி வருகிறது என்பது அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை தொடரும் சோகம்தானே. என்னதான் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் தங்கள் பிள்ளையின் காதல் என்று வரும்போது முற்போக்கு பிற்போக்காகி விடுவதுண்டு. காதலித்துத் திருமணம் செய்தவர்கள் கூட தங்கள் பிள்ளைகளின் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட யோசித்ததை ஏன் அதைக் கிள்ளியெறிந்ததைப் பார்த்திருக்கிறேன்.

இன்றைய காதல்கள் ஆணவக் கொலைகளுக்குள் சிக்கிக் கிடக்கிறது... மேலும் பதின்ம வயதுக் காதல்கள் பல  உடல் பசியைத் தீர்த்துக் கொள்வதுடன் முடிந்து விடுவதும் உண்டு... சில உயிரை எடுப்பதும் உண்டு...  

காதல் சாதிக்குள் நிகழ்ந்தால் சந்தோஷம்... அதுவே சாதி மாறும் போது சங்கட்டம். அந்த சங்கட்டமே மரணம் வரை விஸ்வரூபம் எடுக்கும். அப்படியிருக்க ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட ராஜாக்களின் காதல்களில் பிரச்சினைகள் இல்லாமல் எப்படியிருக்கும்..? எத்தனையோ அரசுகள் பெண் காதலால் வீழ்ந்ததுண்டு அல்லவா..?

அப்ப சிவகாமியின் காதல்...?

ஆம் அவளின் காதலுக்கும் பிரச்சினை வரத்தான் செய்தது... அதுவும் நரசிம்மவர்மனின் அப்பா மகேந்திரவர்மரால்...

சிவகாமியின் நடனத்தின் மீது அதீத விருப்பம் கொண்ட மகேந்திரருக்கு தன் மகன் மீது அதீத விருப்பம் கொண்டிருக்கும் சிவகாமியை எப்படி வெட்டி விடுவது என்பது குறித்து தீவிர சிந்தனை ஏற்படுகிறது. அதற்குக் காரணம்... தான் அமைத்த சாம்ராஜ்யத்தை தன் மகனும் அவனுக்குப் பின்னான வாரிசுகளும் கட்டிக் காக்க வேண்டும் என்பதால் அவரின் விருப்பம் சிவகாமியைத் தவிர்க்க வேண்டும் என்பதாய்த்தான் இருக்கிறது.

அவரின் ஆசையும் சரியானதுதானே...? சோழர்களை தங்களுக்கு கப்பம் கட்ட வைத்து, பாண்டியர்களைத் தங்களைச் சீண்ட முடியாத அளவிற்கு பயமுறுத்தி வைத்து சேரர்களையும் பல்லவர்களை எதிர்க்க வேண்டும் என யோசிக்கக் கூட நினைக்க விடாமல் வைத்திருப்பதுடன் வடக்கே மிகப்பெரிய அரசனான ஹர்ஷவர்த்தனன், புலிகேசி என எல்லாருக்கும் பல்லவன் என்றால் ஒரு பயத்தை உண்டாக்கி வைத்திருக்கும் நிலையில் அந்தச் சாம்ராஜ்யம் ஆண்டாண்டு காலத்துக்கு அதன் தன்மை இழக்காது இருக்க வேண்டும் என்றால் சிலவற்றைச் செய்துதானே ஆக வேண்டும். அதுதானே ராஜ தந்திரம்.

ராஜாக்களின் தியாகங்கள் நாட்டு மக்களுக்கானது மட்டுமல்ல... தங்கள் நாட்டைக் கட்டிக் காக்கவும்தானே... அப்படியிருக்க மகேந்திரர் நினைத்தது எப்படித் தவறாகும்..?

பாண்டியனின் மகளை நரசிம்மவர்மன் மணம் முடித்துக் கொண்டால் பாண்டியனின் உறவு தனது ராஜ்யத்தைக் கட்டிக்காக்க உதவியாக இருக்குமே... அப்படியிருக்க இந்த சிற்பி மகளைக் கட்டிக் கொண்டால் போருக்கு கிளம்பி வரும் புலிகேசிக்கு ஒருவேளை பாண்டியன் உதவி செய்யும் பட்சத்தில்... சில சிற்றரசர்களும் அவர்களுக்கு உதவியாகும் பட்சத்தில்... தங்களுக்கு கப்பம் கட்டும் சோழ அரசும் எதிராக எழும் பட்சத்தில்... காஞ்சி மட்டுமல்ல, பல்லவ ராஜ்யமே சுனாமிக்குள் சிக்குமே என யோசிக்கக் கூட முடியவில்லை என்றால் அவன் எப்படி மிகப்பெரிய அரசனாய்... தந்திரசாலியாக... மாறுவேடம் போட்டு எதிரி கண்ணில் விரலை விட்டு ஆட்டுபவனாக இருந்திருக்க முடியும்...?

மாமல்லனை விழுந்து விழுந்து காதலிக்கிறாள்... அவனும் சிவகாமியை மனதார காதலிக்கிறான்... அவளைப் பார்க்காது அவனால் இருக்க முடியாது.... அவளை குளக்கரையிலும் அவளின் வீட்டிலும் காணும் போதெல்லாம் அவர்களின் கண்கள் ஆயிரம் காதல் பேசுகின்றன. அந்த இடத்தில் தமிழ் சினிமா காதல் என்றால் சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் காதல் பறவைகள் பறந்து இருக்கும். ஆனால் இது ராஜ காதல் என்பதால் அழகிய பூங்காக்களிலும் சிற்பக் கூடத்திலும் காஞ்சி வீதியிலும் காதலாய் கசிந்துருகுகிறது.

காதலைப் பிரிக்க புலிகேசியின் படையெடுப்பு உதவியாய் அமைய அதைப் பயன்படுத்தி காதலர்களைப் பிரிக்கிறார். பிரிக்கிறார் என்பதை விட பிரிக்கும் முயற்சிக்கு விதை இடுகிறார். இந்த இடத்தில் அவர் செய்யும் செயல்கள் நம் நம்பியாருக்கும் ரகுவரனுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் முன்னோடியாய்... எப்படிப் பிரித்தாலும் மகன் சிவகாமியை விட்டு விலக மாட்டான் என்பதை அறியும் போது எப்படி இந்தக் காதல் மோகத்தை உடைத்தெறிவது என யோசித்து தன் படைத்தலைவன் பரஞ்சோதியையும் பயன்படுத்திப் பார்க்கிறார். மாமல்லனின் காதல் எப்போதும் போல் துளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

சிவகாமிக்கு வில்லனாய் வருகிறான் புலிகேசி... தன் வில்லன் சிவகாமிக்கு வில்லனாகியதில் மகேந்திரனுக்கு மனதுக்குள் மகிழ்ச்சி என்றாலும் ஆடலரசி என தான் போற்றியவள் புலியிடம் மாட்டியிருப்பதில் அவருக்கு மிகுந்த வருத்தம். அவளை அப்படியே விட்டுவிட்டால் அந்த அழுக்கு எப்பவும் பல்லவர்கள் மீது தங்கி விடுமே என்பதால் அவளை மீட்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே... அப்படி மரணப் படுக்கையில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்...  தன் ராஜ்யத்தை காக்கும் விதமாக பாண்டிய இளவரசியை மகன் கட்டிக்கொள்ள வேண்டும் என்று வரம் வாங்கிக் கொண்டு சிவகாமியை எப்படியேனும் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் சொல்லிச் சாகிறார்.

Picture
(போட்டோவுக்கு நன்றி அகல்)
இப்ப சிவகாமிக்கு வருவோம்...

பெண் புத்தி பின் புத்தி என்று நிரூபித்தவள் இவள்... தன் காதலைப் பிரிக்க மன்னர் எடுக்கும் முயற்சிகளை அறிந்திருந்த போதும் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிய பேதை இவள். இவளுக்கு ஆடலரசி என்ற கர்வம் உண்டு... நரசிம்மன் தன்னை விடுத்து வேறு பெண்ணைக் கட்டமாட்டான் என்று நம்பியதில் தமிழ் சினிமாவின் இரண்டாவது கதாநாயகி இவள். பெரும்பாலும் தமிழ் சினிமாவின் இரண்டாம் நாயகி உயிரை விடுவாள். இவளோ புலிகேசியின் உயிரை வாங்குகிறாள் அவ்வளவுதான் வித்தியாசம் என்றாலும் மீண்டும் சொல்கிறேன் பெண்புத்தி பின்புத்திதான்.

தன்னைத் தேடி வந்து என்னுடன் வாவென நரசிம்மன் அழைத்த போது வர மறுத்து வாதாபி எரிய வேண்டும்... புலிகேசி மடிய வேண்டும் என வசனம் பேசுகிறாள்... தன் காதலன் தன்னைத் தேடி பல மைல் கடந்து வந்து என்னுடன் வந்து விடு அன்பே என்று நிற்கும் போது எந்தப் பெண்தான் நான் இங்குதான் இருப்பேன்... நீ என்னைக் கொண்டு வந்தவனின் ரத்தத்தை இந்த மண்ணில் வடிய விடு... அப்போதுதான் வருவேன் என்று சொல்வாள்...?

இவள் சொல்கிறாள்... இதுதான் சிவகாமியின் சபதமாம்... 

என்னய்ய சபதம் வேண்டிக் கிடக்கு... தன் வாழ்க்கையைப் பார்ப்பதை விட சபதம் பெரிதா... ஒருவேளை சிவகாமி என்றாவது ஒருநாள் புலிகேசியை வென்று வாதாபியை தீக்கிரையாக்க வேண்டும் என்று சொல்லி நரசிம்மனுடன் வந்திருந்தால் மகேந்திரர் மகனிடம் வரம் கேட்கும் போது காதல் வென்றிருக்கும்... மகேந்திரரின் வில்லத்தனமும் முடிவுக்கு வந்திருக்கும். சிவகாமியும் பல்லவ பேரரசின் அரசியாகியிருப்பாள்.

அப்படி ஆகியிருந்தால் பல்லவ பேரரசு என்ன ஆயிருக்கும்...?

நரசிம்மன் சதா சர்வ காலமும் போராடிக் கொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும். பாண்டியன் சேரனுடன் சேர்ந்து மோதியிருப்பான்... சோழன் பார்த்தீபன் வெகுண்டெழுந்த வேளையில் அவனுக்கு மற்றவர்களும் உதவியாய் இருந்திருப்பார்கள். இராஜராஜன் காலத்தில் புகழ்பெற்ற சோழப் பேரரசு பார்த்தீபன் காலத்திலேயே வளர்ச்சிப் பாதையில் பயணித்திருக்கும். வாதாபி எரிந்ததற்கு புலிகேசியின் வாரிசு எவனாவது ஒருவன் கிளம்பி வந்திருப்பான். ஆனால் இதெல்லாம் நடக்கவில்லை... காரணம் சிவகாமியின் காதல் மரணித்ததால் நரசிம்மனின் பாதை மாறியது என்பதுதானே.

சபதமிட்டு ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தானே வாதாபி எரிகிறது... சிவகாமி சிறை மீட்கப்படுகிறாள். இளம் வயதில் சிறை சென்றவள் இளமை கடந்துதான் மீட்கப்படுகிறாள். நரசிம்மன் இளவரசனாய் இருக்கும் போது சிறை பிடிக்கப்பட்டவள்... தன்னைத்தானே சிறைக்குள் வைத்துக் கொண்டவள் மீட்க்கப்படும் போது அவனோ ஒரு நாட்டின் மன்னனாய்... பாண்டிய வானமாதேவியின் கணவனாய்... இரு குழந்தைகளின் தந்தையாய்... மாறியிருக்கிறான்.  சிவகாமி இன்னும் மாறாதிருக்கிறாள்... இளவரசன் நரசிம்மனின் காதலியாய்.

சிவகாமி போட்ட சபதத்தின் காரணமாக புலிகேசியை எதிர்த்துப் போனான் என்று நினைத்தாலும் அந்த சபதத்தை மட்டும் தூக்கிச் செல்லவில்லை அவன். தன் தந்தையைக் கொன்ற புலிகேசியை பலிக்குப்பலி வாங்கவே அவன் பெரும்படையுடன் செல்கிறான். அப்படிப்பட்ட வெறியோடு சென்றவனின் மனசுக்குள் சிவகாமியின் காதலும் ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது.

சிவகாமியைப் பொறுத்தவரை காதல் தோல்விதான்... ஏமாற்றப்பட்டவளதான்... அரச குடும்பம் எப்பவும் இப்படித்தான்... தன் நினைவில் நரசிம்மன் தாடி வளர்த்து யோகதாசாக இருக்கவில்லைதான்... தன்னை மீட்டுக் கொண்டு வரும் போது ஒரு மன்னனாகத்தான் வருகிறான் என்பதை அவள் உணரும் தருணத்தில் தன்  காதல் முறிந்ததை அறிந்து, அந்த வலியின் உச்சத்தில் நரசிம்மன் தன்னை ஏமாற்றிவிட்டதாக மனசு துடித்திருக்கலாம்.

ஆனால் நரசிம்மனைப் பொறுத்தவரை... சிவகாமியின் காதலை விட வானமாதேவியின் உறவால் பாண்டியனின் உறவு... அதன் காரணமாக தன் சாம்ராஜ்யப் பாதுகாப்பு.... எவரை எதிர்த்து நின்றாலும் வெற்றி மாலை.... பல்லவ சாம்ராஜ்யத்தின் மிகச் சிறந்த பேரரசன்... எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவன்.... இப்படியான ஒரு நிலையை அடைய சிற்பியின் மகளை இழந்தது தவறில்லைதானே.

சிவகாமியைக் கட்டியிருந்தால் அவளின் ஆடல் கலையில் கட்டுண்டு காஞ்சியையும் இழந்திருப்பான் நரசிம்மன்... அப்படியெல்லாம் நடக்காமல் வரலாறு வாழ்ந்திருக்கிறது. ஆம் பல்லவ வரலாறு அதன் பின்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும் சிவகாமியைப் பொறுத்தவரை அவள் ஏமாந்தாள்... ஏமாற்றப்பட்டாள் என்றாலும் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டிக்காக்க இந்தக் காதல் முறிக்கப்பட்டதில்... முறிபட்டதில் யாருக்கும் வருத்தமில்லை. 

நரசிம்மன் கூட மனைவி மக்களுடன் சந்தோஷமாகத்தான் வாழ்ந்திருக்கிறான். காதல் தோல்வியை தூக்கிச் சுமக்காததால்தான் தன் வாழ்நாளில் தோல்வியைச் சந்திக்காத பனிரெண்டு மன்னர்களில் ஒருவனாய்  அவனால் திகழ முடிந்திருக்கிறது... எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்க முடிந்திருக்கிறது.

சிவகாமி பல்லவ அரசி ஆவதைவிட  நடன அரசியாகத் திகழ்ந்ததே சரியானது... அவள் ஏமாந்தாள்... அல்லது ஏமாற்றப்பட்டாள் என்பதைவிட ஒரு சாம்ராஜ்யம் அமையக் காரணமாக இருந்தாள் என்றே நினைத்துக் கொள்வோம்.

-------------------------

கல் பொங்கல் சிறப்பிதழில் எனது 'நினைவிலே கரும்பு' என்ற கிராமியக் கட்டுரை வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட அகல் மின்னிதழ் ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

நினைவிலே கரும்பு வாசிக்க இங்கு சொடுக்குங்கள்.
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

​​நல்லதொரு சுருக்கம்.




...





ஸ்ரீராம். சொன்னது…

கரும்பின் நினைவுகள் அருமை. இனிக்கும் நினைவுகள்தான். எண்ணெய் பொறுத்தவரை தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட்டில் இருந்தபோது அதன் பின்புறமாய் சறுக்கலை ஆலைக்கு டிராக்டரிலும் லாரியிலும் கரும்புகள் ஏற்றிச் சொல்லப்படும்போது பின்னாலேயே ஓடி, அல்லது சைக்கிளில் துரத்தி, கரும்பிழுத்த அனுபவ நினைவுகள் இனிமையானவை! ஆனால் அதிகம் கரும்பு சாப்பிடமாட்டேன்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே
தம +1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அவளை நடனத்தின் ராணியாகவே நான் பார்க்கிறேன்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வரலாற்று உண்மைகள். நல்லதொரு பகிர்வு. இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

ராஜி சொன்னது…

சிவகாமியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த திமிர்தான் அவள் அழிவுக்கு காரணம்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

முதலில் எங்கள் இருவரின் தைப்பொங்கல்திருநாள் வாழ்த்துகள்!

துளசி: கதை விமர்சனாம் நல்லாருக்கு.

கீதா: கதைச் சுருக்கத்தின் முடிவு வரிகள் அருமை...அதுதான் பிடித்திருக்கு...குமார் பெண் புத்தி பின் புத்தி என்பதை விட அவளது கர்வம் அவள் கண்ணை மறைத்தது என்று சொல்லலாம் இல்லையா...நல்லா சொல்லிருக்கீங்க குமார்.

KAYALVIZHI சொன்னது…

சிவகாமி ஒரு கற்பனை பாத்திரம்தானே .உண்மை இல்லை என்பது சரியா ?