மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 செப்டம்பர், 2017

மனசு பேசுகிறது : பிக்பாஸ் வெல்லப் போவது யாரு..?

பிக்பாஸ்...

எத்தனை முரண்கள் இருந்தாலும் அவ்வப்போது பார்க்கும்படிதான் இருந்தது. அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்... இவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று சொன்னாலும் பத்திரிக்கைகளில் பெரும்பாலானவை குறிப்பாக இணைய இதழ்கள் பிக்பாஸை வைத்து இந்த நூறுநாள் பொழப்பை ஓட்டின என்றால் மிகையில்லை. அதைவிட ஓவியா ஓ.எம்.ஆர். போனதை எல்லாம் தனது தனிப்பட்ட தளத்தில் விஜய் டிவி அவர்களது நிகழ்ச்சி போல பகிர்ந்து கொண்டார்கள். எது எப்படியோ ஆரம்பத்தில் ஆரவாரமாக இருந்த பிக்பாஸ் இல்லம் இப்போது நால்வர் வாழும் வீடாக இருக்கிறது. அதுவும் இன்று கடைசி என்று நினைக்கிறேன்.

சரி இந்த நால்வரில் யார் வெல்வார்...? இந்தக் கேள்வி ஓவியா இருந்திருந்தால் வந்திருக்காது என்று நினைக்கிறேன். இப்ப இருக்கும் நால்வருமே ஆண்கள்தான்... எத்தனையொ பெண்கள் போட்டியில் இருந்திருந்தாலும் யாராலும் ஓவியா போல் இருக்கவும் முடியவில்லை.. அவரைக் காப்பியடித்து நடிக்கவும் முடியவில்லை. சுஜாவைப் பொறுத்தவரை ஆண்களுக்கு நிகராக எல்லாப் போட்டிகளிலும் விளையாண்டாலும் ஓவியா போல் நடித்தும்... குடும்பச் சூழலைச் சொல்லி பச்சாதாபம் வாங்க நினைத்தும்... குறிப்பாக சுயநலவாதியாகவும் இருந்ததால்தான் இறுதி வரை வரமுடியாமல் போய்விட்டார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிந்து இரண்டு நாட்கள் இருக்க வெளியேற்றப்பட்டது மிகவும் வருத்தமான செயலே... மக்கள் ஓட்டுக் கிடைக்கவில்லை என்பதாய் அவர் நீக்கப்பட்டார்... ஆரம்ப நாட்களில் எதிலும் ஆர்வம் காட்டாதவரார் இருந்தவர் இறுதி வாரங்களில் உண்மையிலேயே ரொம்ப ஈடுபாடாய் இருந்தார். சரி போனவர்கள் பற்றி பேசுவதில் பயனென்ன இருக்கிறது. இருப்பவர்களைப் பார்ப்போம்.

இருக்கும் நால்வரில் கணேஷ்... ரொம்பத் திறமையாக காய் நகர்த்துபவர்.... யாரிடமும் கோபம் கொள்ளமாட்டார். எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு சிரிப்பார்... போட்டிகளில் கூட அவருக்கு கோபமே வராது... டெலிபோனில் கூப்பிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் எல்லாம் தனக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே விளையாடுவார். இல்லையென்றால் ஏதேனும் சாக்குச் சொல்லி விலகிக் கொள்வார். சுஜாவை உள் நிறுத்த அவரை பெரும்பாலான போட்டிகளில் தன்னுடன் நிறுத்திக் கொண்டார் என்றாலும் எல்லாருக்கும் நல்லபிள்ளையாகவே நூறு நாட்களை ஓட்டிவிட்டார். சாப்பாடு விஷயத்தை மற்றவர்கள் பெரிது படுத்த வேண்டியதில்லை... ஆனாலும் பலர் இவரை சாப்பாட்டு விஷயத்தை வைத்துத்தான் காயப்படுத்தினார்கள். குறிப்பாக வையாபுரி அதிகம் பேசினார். நல்லவனாக இருப்பதைவிட நடிப்பது கடினம் அதை இவர் திறம்பட செய்தார் என்றே சொல்லலாம். மக்களின் ஒட்டுப்படிப் பார்த்தால் இவருக்கான வாய்ப்பு ரொம்பக் கம்மிதான்.

ஹரீஷ்... ரொம்ப நல்ல பையன்... மனசு என்ன சொல்லுதோ அதன்படி நடக்க வேண்டும் என்று நினைப்பவர்... நடப்பவர்... யார் செய்தது தப்பு என்றாலும் நேரிடையாகச் சொல்ல யோசிப்பவரில்லை... மனசாட்சிக்கு விரோதமாக விளையாட முடியாது என சில போட்டிகளில் விளையாட மறுத்தவர். போதுமடா சாமி இவனுககிட்ட மனுசனா இருக்க முடியாது என்னை விட்டுவிடுங்கள் என இடையில் ஓட நினைத்தவர்... இந்த வாரம் ஒருவர் வெளியேற வேண்டிய சூழலில் வரிசையாக விளக்கொளிக்கு நின்ற போது... அதுவும் சிநேகன், கணேஷ். ஆரவ் தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொள்ள பிந்துவுடன் நீயா... நானா... போட்ட போது வெற்றியின் விளிம்பில் எங்கே தனக்கான வாய்ப்பு நழுவி விடுமோ என்ற பரிதவிப்பை அவரின் கண்களில் காண முடிந்தது. வலிக்கவே இல்லையே என்று சொன்னாலும் எல்லாருடைய முகத்திலும் வலியின் வலி தெரியத்தான் செய்தது. இவருக்கு கூடுதலாகத் தெரிந்தது. நூறு நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்திருந்தால் ஒருவேளை இவர் போட்டியில் வெல்லக்கூட வாய்ப்பிருந்திருக்கலாம். இப்போது இவருக்கான வாய்ப்பு அவ்வளவு பிரகாசமில்லை.

ஆரவ்... ஆரம்பத்தில் பிடிக்காமல் இருந்தாலும் இப்போது இவரை பலருக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது என்பதே உண்மை. எந்தப் போட்டி என்றாலும் இவரிடம் முழு ஆர்வம் இருக்கும். சகபோட்டியாளர்களை சிரிக்க வைப்பதில் இவர்தான் முன்னோடி... ஓவியாவைக் காதலிக்க மறுத்தது அவரின் சொந்த விருப்பம்... நீ ஏன் அவளை வேண்டாம் என்று சொன்னாய் என்று கேட்பதெல்லாம் அபத்தம்... அந்தப் பெண் மனதில் ஆசையை வளர்த்த விதத்தில் வேண்டுமானால் அவர் தவறு செய்திருக்கலாம். மற்றபடி நல்ல நண்பனாய் அவர் இருக்க நினைத்ததில் தவறில்லை. காயத்ரி, சக்தி கையில் மாட்டி தங்கள் சுயம் இழந்தவர்கள் ஜூலியும் ஆரவும்... ஜூலி திருந்தவே இல்லை.... ஆரவ் தன்னைத் திருத்திக்கொள்ள நேரமும் காலமும் கிடைக்க அதைச் சரியாகச் செய்து தன்னை திருத்திக் கொண்டார்.  புறம் பேசுதல் என்பது எல்லாரிடமும் இருக்கும் ஒன்றுதான்... நான் புறம் பேசவே மாட்டேன் என்பவர்கள் அரிது... பிக்பாஸ் வீட்டைப் பொறுத்தவரை அப்படி யாருமே இல்லை. ஆரவ்வும் அந்த வகைதான்... ஓவியாவைவிட இவர் பிந்து மீது அதிக பற்றுதல் கொண்டிருந்தார். அடிக்கடி கட்டிப்பிடி வைத்தியமும் செய்தார். ஆரவ் போல் ஆட்கள்தான் உலகில் அதிகம்... இது தவறில்லை... இப்படியான வாழ்க்கைதான் எல்லாருக்குமே அமைகிறது. ஆரவ் வெல்ல வாய்ப்பு இருக்குமா...? இல்லையா...? என்பதை அடுத்த ஒருவரைப் பார்த்துவிட்டுப் பேசலாமே...

சிநேகன்... எல்லாவற்றுக்கும் உணர்ச்சி வசப்பட்டு பொசுக்கென்று அழுது விடும் மனம் படைத்தவர்... விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்... கிராமத்தான் என்பதால் இவருக்குள் மற்றவர்கள் மீது நேசம் கொள்ளும் மனம் சாதாரணமாகவே வந்து விட்டது. இந்த வீட்டைப் பொறுத்தவரை எல்லா வேலைகளிலும்... போட்டிகளிலும்.... தன்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்ய நினைப்பவர். கட்டிப்பிடி வைத்தியம் நடத்துபவர்... பெண்களைக் கண்டால் கட்டிப் பிடிப்பவர் என்றெல்லாம் சொன்னாலும்... அவர் எல்லாரையும் கட்டித்தான் பிடிக்கிறார்... மற்றவர்களும் பெண்களைக் கட்டித்தான் பிடிக்கிறார்கள்... அவர்கள் இருக்கும் துறையில் இதெல்லாம் பெரிதில்லைதானே... மேடையில் கட்டிப் பிடிப்பது சகஜம்தானே... இதை வைத்து மட்டும் சிநேகனை தவறானவராக சித்தரிப்பது தவறு... சுஜாவைப் பொறுத்தவரை சிநேகந்தான் நிறைய உதவிகள் செய்தார்... ஆனால் சுஜாவைப் பொறுத்தவரை தனக்கான மிகப்பெரிய சவாலே சிநேகன்தான் என்பதால்தான் அவருடன் மோதி, அவரைப் பற்றி தவறுதலாகப் பேசி மக்களிடம் அனுதாபம் பெற விரும்பினார். ஆரவ் கூட சிநேகனை கேவலமாகப் பேசியிருந்தாலும் பின்னர் அவருடன் இணக்கமானார். எல்லாருக்கும் உதவும் மனமும் பிறருக்காக வருந்தும் குணமும் கொண்டவரை கட்டிப்பிடி வைத்தியர் என்ற ஒரு காரணத்தை வைத்து திட்டுவது என்பது தவறானதே. கவிஞர் சிநேகன் நல்லாத்தான் கவிதை எழுதுறார்... கேட்ட உடனே கவிதை எழுதும் திறன் இருப்பது பாராட்டுதலுக்குரியது.

இந்த நால்வரில் என்னைப் பொறுத்தவரை சிநேகனுக்கும் ஆரவ்வுக்கும்தான் போட்டியாக இருக்கும் என்றே கடந்த வாரத்தில் நினைத்தேன். அப்படித்தான் இதுவரை இருக்கிறது. இந்தப் பொட்டியில் சிநேகனுக்குத்தான் அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. எனக்கும் சிநேகந்தான் வெல்ல வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. பிக்பாஸ் வாக்களிப்பைப் பொறுத்தவரை கூட சிநேகனைதான் முன்னணியில் இருக்கார். சிநேகனா ஆரவ்வா முதல் போட்டியின் வெற்றியாளர் என்பதை இன்று இரவு பார்க்கலாம்... 



-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பிக்பாஸ் அவ்வளவாகப் பார்ப்பதில்லை. எனவே ரிஸல்ட் பற்றிச் சொல்ல முடியவில்லை. என்றாலும் உங்கள் பதிவின்மூலம் சினேகன் வெல்லும் வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது. பார்ப்போம்

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

ஆச்சர்யம். சரியாகக் கணித்திருக்கிறீர்கள். ஆரவ் வெற்றி பெற்றதில் எனக்கு உடன்பாடில்லை. சினேகன் ஜெயித்திருக்கலாம். ஹரிஷ் வெளியேறியதும் சொன்ன காரணம் நேர்மையாக இருந்தது.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பிக்பாஸ் பார்த்ததேயில்லை நண்பரே

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

பிக்பாக்ஸ் பக்கம் செல்வதேயில்லை. ஆதலால் கருத்து கூற இயலா நிலை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஆரவ் வென்று விட்டார்.எப்போதாவது பார்த்ததால் ஒன்றும் புரியவில்லை.