மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

மனசு பேசுகிறது : பிரியமான தோழி

நேற்று அரசியல் பதிவு எழுதலாம் என்றும் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்கு எழுதிய கதையை பகிரலாம் என்றும் இரு வேறான எண்ணங்கள் மனசுக்குள் இருந்தது. மனமும் சசிகலா போல் அமைதியின்றி தவித்தது... அதற்கான காரணமும் என்னவென்று தெரியவில்லை. சரி அதை விடுங்க... எந்த ஒரு நிகழ்வும் நமக்கான நன்மைக்கே என்று நினைத்துக் கடந்து சென்று விடுவேன். நல்லது நிகழும் என்ற நம்பிக்கையோடு பயணிப்பதே நலம் பயக்கும் அல்லவா?  அதை விடுங்க... பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. கதைகள் தேர்வு வாசகர்களின் வாசிப்பின் அடிப்படையில் என்பதாய்த்தான் அவர்களின் தேர்வு இருக்கும்... சிலரின் கதைகள் ஐயாயிரம் ஆராயிரம் பேர் வாசிக்க பலரின் கதைகள் ஐநூறு பேரைத் தாண்டலை. நாம ஆயிரத்தைத் தொட்டோம். இது சரியான தேர்வு முறை அல்ல என்பதை முன்பே ஒரு முறை சொல்லியிருந்தேன். சில நல்ல கதைகள் முந்நூறு நானூறு பேர் மட்டுமே வாசித்திருந்ததைப் பார்க்க முடிந்தது. அதற்குக் காரணம் அவர்கள் வரிசைப்படுத்தியதை முதல் நாளில் இருந்து அப்படியே வைத்திருந்ததே.... வாரம் ஒருமுறை ஏனும் வரிசையில் மாற்றம் செய்திருந்தால் ஒருவேளை முந்நூறு நானூறு பேரால் வாசிக்கப்பட்ட கதைகள் இன்னும் அதிகம் பேரால் வாசிக்கப்பட்டிருக்கலாம். இனிமேலாவது வரும் போட்டிகளில் இதை அவர்கள் செய்யலாம். அப்படிச் செய்தால் இன்னும் போட்டியில் போட்டியிருக்கும்.

இப்பல்லாம் எந்த பதிவை எழுதினாலும் அதை ஆரம்பிக்காமல் வேறு எங்கோ பயணப்பட்டு மீண்டும் பதிவுக்குள் வருவது போல் இருக்கிறது. இன்று காதலர் தினம்... சசிகலாவுக்கு வழக்கில் தீர்ப்பு... பணம் பேசாமல் நீதி பேசினால் நல்லது... பாவம் காதலர் தினம் கொண்டாட மெரினாவுக்குச் செல்லும் காதலர்கள் பாடுதான் திண்டாட்டம். இப்ப நம்ம பகிர்வும் காதலர் தினத்துக்கானதுதான். என்னது...? காதலா...? தினமா..? இதெல்லாம் தமிழன் பண்பாடு இல்லையே அப்படியிப்படின்னு சொல்லி சுத்த தமிழனா இருந்தா... மறத் தமிழனா இருந்தா.... வீரத் தமிழனா இருந்தா... சோழன் பரம்பரையா இருந்தா... பாண்டியன் வாரிசா இருந்தா... இதை எல்லாம் விட ஒரு அப்பனுக்குப் பொறந்திருந்தா காதலர் தினம் கொண்டாடாதேன்னு எல்லாம் எங்கிட்ட சொல்லாதீங்க... நான் தினம் தினம் நேசிக்கும் என் மனைவிக்கு காதலர்தின வாழ்த்துச் சொல்வதில் மேலே சொன்ன எதுவும் தேவையில்லைதானே...? அன்பின் பிடிக்கும் அடக்கும் வாழ்வில் எல்லாம் அவளே என்ற நிலைதான் என் நிலை.... பிரிவு என்பது நிரந்தரம் அல்ல... தற்போதைய பிரிவு வாழ்வின் நிமித்தம் எனினும் இன்னும் எங்களுக்கும் அன்பின் துளிகளை அதீதமாக்கிக் கொண்டுதான் இருக்கிறது.

திருமணத்தின் போது குமார் பெரிய வேலையிலும் இல்லை... கல்லூரியில் சொற்ப சம்பளத்தில் பணி... ஒரு அட்லஸ் சைக்கிள் பயணத்துணைவனாய்.... மதுரையில் செல்லமாய் வளர்க்கப்பட்டு என்னுடன் இணைந்த பின்னர் நாங்கள் தேவகோட்டையில் குடியிருந்த வீடு... மிகப்பெரியது ஆமாம் ஒரு சிறிய ஹால், சின்ன கிச்சன் அதனருகே பாத்ரூம்... புது வீடு... ஆனால் ரொம்பச் சிறியது என்றாலும் வீட்டின் முன்னே சின்னதாய்... அழகாய் ஒரு தோட்டம்... பாப்பா பிறந்து நடக்கும் வரை அந்த வீடுதான்... அதற்கு இடையில் ஒரு முறை துபாய்க்கு விசிட்டிங்கில்... வேலை தேடி தினம் தினம் அம்பது அறுபது கம்பெனிகளில் பயோடேட்டா கொடுத்துக் கொடுத்து மூன்றாம் மாத முடிவில் அதைப்படி... இதைப்படி... என பலரின் அறிவுரைகளோடு மீண்டும் ஊருக்கே பயணம்... இதில் எல்லாவற்றிலும் எனக்குத் துணையாய்... தோழியா... என் மனைவி என்னோடு. ஊருக்குத் திரும்பிய பின்னர் கல்லூரி வேலையும் இல்லை என்பதால் சென்னைக்குப் பயணம்... அங்கு சின்னச் சின்னதாய் நகர்ந்து தினமணியில் உட்கார்ந்த போது குடும்பமும் என்னோடு சென்னையில்.... அங்கும் பெரிய அளவிலான வாழ்க்கை இல்லை என்றாலும் மனைவி, மகளின் அன்பில் நனைந்த வாழ்க்கை. பாப்பா எல்கேஜி வேலம்மாவில் படித்து யுகேஜி போகும் போது மீண்டும் அபுதாபி பயணம்... குடும்பம் காரைக்குடியில் வாடகை வீட்டில்... அதன் பின்னான நகர்வுகளில் எல்லாம் என்னை வழி நடத்தி மற்றவரின் முன்னால் நாங்களும் கடனை வாங்கினாலும் கஷ்டப்பட்டாலும் உயர்ந்து நிற்க வைத்தது எல்லாம் என் மனைவிதான் என்பதே சத்தியமான உண்மை.

தேவகோட்டையில் வீட்டுப் பணி... விஷால் எல்.கே.ஜி படிக்கும் போது ஆரம்பிக்கப்பட, குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பி விட்டு விட்டு காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு ஸ்கூட்டியில் பயணித்து வீட்டுப் பணிகளை மேற்பார்வை செய்து மூணு மணிக்கு விஷாலுக்கு ஸ்கூல் விடும் என்பதால் அதற்குள் வந்து... அடுத்த நாள் பயணித்து... ரொம்பக் கஷ்டப்பட்டு தேவகோட்டையில் எங்களுக்கு என ஒரு வீடு உருவாவதில் சாப்பாடு, நல்லது கெட்டது எல்லாம் துறந்து உடல்நலம் சரியில்லாமல் போய் ஐசியூவில் வைத்திருந்து... அதற்குக் கூட நான் போகவில்லை என்ற கோபம் இப்பவும் உண்டு என்றாலும் கோபம் இருக்கும் இடத்தில்தானே குணம் இருக்கும். அப்புறம் எங்க பரியன்வயலில் எங்க வீடு தம்பிக்கு கொடுக்கப்பட, வீடு கட்டும் சூழல் உருவாகி எங்கள் முன்னே பூதகரமாக நிற்க, கையில் இருப்பு இல்லாத நிலையிலும் தைரியமாக இறங்கி அங்கும் சிறு வீடாயாச்சு... இப்ப கடன்களும் வட்டிகளும் வங்கியில் இருக்கும் நகைகளும் எங்கள் முன்னே மிகப்பெரிய சுமையாக நின்றாலும் எப்பவும் போல் இதழில் புன்னகையுடன் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையோடு என்னை வழி நடத்திக் கொண்டிருப்பவர் என் மனைவிதான்.

எந்த வேலைக்கு மலைப்பதில்லை... எல்லாவற்றிற்கும் முன்னால் நிற்பார்... எல்லாருக்கும் நேரம் காலம் பார்க்காது வேலை செய்வார்.... அவர் செய்யும் உதவிகளே எங்கள் பிரச்சினைகளை பின்னுக்கத் தள்ளி வைத்திருக்கிறது. நன்மை செய்பவரை காயப்படுத்திப் பார்ப்பதில் நம்மவர்கள் எப்பவுமே கில்லாடிகள் அல்லவா.. அப்படியான கல்லடிகள் கிடைத்துக் கொண்டே இருந்தாலும் அதையெல்லாம் மனசுக்குள் புதைத்துக் கொண்டு புன்சிரிப்போடும்... கலகலப்பான பேச்சோடும் எல்லா உறவுகளையும் அரவணைப்பதில் அவருக்கு முன்னே நான் எல்லாம் தள்ளித்தான் நிற்க வேண்டும்.

எதுக்கு இதெல்லாம் அப்படின்னு பாக்குறீங்களா...? எல்லாம் காதலர் தினத்துக்குத்தான்... இங்கிருந்து என்னத்தை பரிசாக் கொடுக்கப் போறோம்.. எழுத்துதான் நமக்கு வரம்... அந்த வரத்தின் மூலமாக ஒரு வாழ்த்து அவ்வளவே...

என் அன்பான... பிரியமான... நேசத்துக்குரிய... காதலிக்கு... மனைவிக்கு... தோழிக்கு என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

கீழே இருக்கும் அன்பு திரைப்படப் பாடல் எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்... என்ன ஸ்பெஷலா அது சஸ்பென்ஸ்... பாட்டை மட்டும் கேளுங்க... வரட்டா...

-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள்...

Yarlpavanan சொன்னது…

அருமையாக எழுதி
காதலர் நாளை
சிறப்பித்துள்ளீர்கள்

Avargal Unmaigal சொன்னது…

காதலர் தினத்தில் நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

arumai vaalthukal.

Unknown சொன்னது…

arumai vaalthukal.

ஸ்ரீராம். சொன்னது…

காலமெல்லாம் காதல் வாழ்க!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார்! வாழ்த்துகள்! இன்று போல் என்றும் மகிழ்வுடன் நீங்கள் இருவரும் உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்திடவும் வாழ்த்துகள்!

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் நல்வாழ்த்துகள்..