மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 5 மே, 2016

வாக்காளர் அலப்பறை...10

"வர வர நம்மாளுங்க செய்யிறது சரியில்லைங்க... சொல்லப்போனா என்னோட சண்டைக்கு வர்றாங்க..." என்றபடி அறைக்குள் நுழைந்தார் திருஞானம்.

"ஏன்..? என்னாச்சுண்ணே...? யாராவது உங்ககிட்ட பிரச்சினை பண்ணினாங்களா?" என்றார் கணிப்பொறியில் இருந்து தொலைக்காட்சிக்கு பிரேமலதாவின் பேச்சை மாற்றிக் கொண்டிருந்த அறை நிர்வாகி ராமராஜன்.

"நேத்து நீங்களும் இல்லை... இன்னைக்கு லீவு வேறயா...? நம்மாளுங்க நைட்டு ரெண்டு மூணு மணி வரைக்கும் கம்ப்யூட்டர்ல படம் பார்த்துக்கிட்டு என்னைத் தூங்க விடலைங்க..."


"இன்னைக்கு லீவு... அப்படித்தானே இருக்கும்... இது எப்பவும் நடக்குறதுதானே... இதுக்காக சண்டையா போட முடியும்..."

"நான் உங்களைச் சண்டை போடச் சொல்லலைங்க... பாத்துட்டுப் போகட்டும்... அதுக்காக ரெண்டு பேரு மாத்தி மாத்திச் சிரிச்சா எப்படிங்க... கொஞ்சமாச்சும் அடுத்தாளு தூங்குறான்னு பாக்க வேண்டாமா.. பகலெல்லாம் வேலை பாத்துட்டு ஆத்துப் போயித்தானே வர்றோம்..." ஆதங்கத்தோடு பேசினார் திருஞானம்.

"நீங்க சொல்றது சரிதாண்ணே... பல தடவை சொல்லிட்டேன்... படம் பாருங்க... சத்தம் போட்டு சிரிக்காதீங்கன்னு... இன்னைக்கும் சொல்லிடுறேன் விடுங்க..."

"ம்.. நாம சொல்லி அவனுங்க கேப்பானுங்களாக்கும்..." என்றபடி கட்டிலில் அமர்ந்தார். அப்போது அறைக்குள் நுழைந்தான் அவன்.

"என்னங்க... நேத்து ராத்திரி போன ஆளு... ஒரே தண்ணிப் பார்ட்டிதானா...? நாளைக்கும் லீவுதானே... அதுக்குள்ளயும் வந்துட்டீங்க..."  அவனிடம் கேட்டார் ராமராஜன்.

"இல்ல நாளைக்கு காலையில அலைன் போகலாம்ன்னு முடிவு பண்ணினோம்... அதான் டிரஸ் எடுக்க வந்தேன்... பிரண்ட்ஸ் கீழ கார்ல இருக்காங்க... இங்க இருந்தாலும் எதிர் பெட்டுக்காரனுங்க ரெண்டு பேரும் படம் பார்த்து சிரிச்சே நம்மளை தூங்க விடமாட்டானுங்க" என்றான் .

"இப்பத்தான் அண்ணன் சொல்லிக்கிட்டு இருந்தாரு.... நீங்களும் சொல்றீங்க... கொஞ்சம் கண்டிச்சி விட்டிருவோம்..."

"கண்டிச்சி என்னங்க ஆகப்போகுது... அவங்களுக்கா அறிவு வேணும்... நம்ம மக்களுக்குத்தான் சுய சிந்தனை இல்லையே..." என்றான் அவன்.

"ஆமாங்க நாம இலவசங்களுக்கு மயங்குற ஆளுங்கன்னு நல்லா கணிச்சி வச்சிருக்கானுங்க... எல்லாப் பயலும் இலவசம் இலவசம்ன்னுதான் சொல்றான்... " என அரசியலுக்கு மாறினார் ராமராஜன்.

"இதுல கூத்து என்னன்னா தேர்தல் கமிஷன் இலவசங்கள் கொடுக்கக்கூடாதுன்னு சொல்லுது... நாங்க தேர்தல் அறிக்கையில அழகா இலவசங்களை அள்ளி விடுறோம்..." சிரித்தார் திருஞானம்.

"சொல்றதை எப்பவுமே சரியாச் செய்ய மாட்டாங்க... சொன்னதைச் செய்வோம்ன்னு சொல்வாங்க சொல்லாததை எல்லாம் முதல்ல செய்வாங்க... இலவசம்ன்னு சொல்லி மகுடிக்கு மயங்குன பாம்பு மாதிரி நம்மளை மயக்க நிலையில வச்சி, ஜெயிச்சி, கோடி கோடியா கொள்ளை அடிக்கப் போறாங்க... இது தெரியாம... இலவச மொபைலு... கம்ப்யூட்டரோட இணைய வசதி அப்படின்னு வாயைப் பிளந்திடுறோம்.." கடுப்பாய்ச் சொன்னான் அவன்.

"இதுல கூத்து என்னன்னா இருக்கவனுக்கே வேலையைக் காணுமாம்... வீட்டுல ஒருத்தருக்கு வேலையாம்... கேக்குறவனை கேன...." கோபமாகப் பேசிய திருஞானம் கெட்டவார்த்தையை விட்டு விடுவாரோ எனப் பயந்து "அண்ணே..." என்று கத்தினார் ராமராஜன்.


"எதுக்கு அலர்றீங்க... தேர்தல் அறிக்கைகளைப் பார்த்து மக்கள் இதுபோல அலறி இருந்தா அவனுகளுக்கு ஒரு பயம் வந்திருக்கும்... நான் மக்களை கேனையன்னு நினைச்சிட்டாங்களான்னுதானே சொல்ல வந்தேன்..." சிரித்தார்.

"எப்படி விஜயகாந்த் சொன்ன மாதிரி... நீங்க கத்திக்கிட்டே இருந்தா... நீங்க மட்டுந்தான் இங்க வந்திருகீங்களா... இந்தா உக்காந்திருக்கவனெல்லாம்... என்ன சொம்பைங்களான்னு கேட்டாரே... அது மாதிரி நீங்க நம்மளை கேனையன்கள்ன்னு சொல்றீங்களா?" சிரித்தான் அவன்.

"அந்தாளு என்ன பேசுறாரு... அவரைப் போயி பேசிக்கிட்டு..."

"இதுக்குத்தான் அவரு எனக்குப் பேச்சு வரலையாம்... எனக்கு பேச வரலையா... யாரைப் பார்த்துச் சொல்றீங்கன்னு கேட்டாருல்ல... சரி விடுங்க... இந்தத் தேர்தல் அறிக்கைகள் எல்லாமே நம்மளை ஏமாற்றும் ஒரு கருவிதான்... நிறையாச் சொல்வாங்க... நிறைவாச் சம்பாதிச்சிக்குவாங்க... இது கானல் நீர் மாதிரி... அப்படியே காணாமல் போயிடும்..." என்றான் அவன்.

"அம்மா தேர்தல் அறிக்கை எல்லாம் இலவசங்கள்... ஆனா ஒருவேளை இந்த ஆத்தா ஜெயிச்சி வந்துட்டா... பஸ், பால், மின்சாரம்ன்னு எல்லாத்தையும் தூக்கி உச்சியில வச்சி... நம்மளை கத்திரிவெயில்ல அம்மணக்கட்டையா நிப்பாட்டிரும்... அதுதான் நடக்கும் பாருங்க..." என்றார் ராமராஜன்.

"அப்ப ஐயா வந்தா மட்டும் கச்சத்தீவை மீட்டு டாஸ்மாக்கை மூடிருவாராக்கும்... அட போங்கங்க... பேண்டு போட்டவனெல்லாம் டிரண்ட் மாறி முதல்வராயிடலாம்ன்னு பாக்குறான்... அரை டவுசர்களும் அல்லக்கைகளும் பண்ணுற அலப்பறை தாங்க முடியலை..." என்றவன் "சரி வர்றேன்... கீழ பிரண்ட்ஸ் நிக்கிறாங்க... அரசியல் பேசினா இங்கயே உக்காந்திருவேன்..." என அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

"கருத்துக் கணிப்புன்னு சொல்லி மக்கள் மனசுல ரெண்டு கட்சியை மட்டுமே திணிக்கப் பாக்கிறாங்க... பொது மேடையில என்னமா அடிச்சிக்கிறாங்க... மக்கள் கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க... இதுவே இப்ப பெரிய திருப்பம்தான்..." என்றார் திருஞானம்.

"உண்மைதாண்ணே... பல ஊர்கள்ல சிட்டிங் எம்.எல்.ஏக்களை விரட்டி அடிக்கிறாங்க... இது நல்ல மாற்றம்தான்..." என்றார் ராமராஜன்.

"எம்.எல்.ஏக்களை மட்டுமில்ல... திருவாடானை தொகுதியில கருணாஸை பல ஊர்களுக்குள்ள விடவே மாட்டேங்கிறானுங்களாம்... செய்யணும்... சென்னையில இருந்து போயி சாதிப்பிரச்சினையை கிளப்பி விடுறான்... நாளைக்கு ஜெயிச்சிட்டா அங்கிட்டு போகவே மாட்டான்... விரட்டணும்... மக்கள் கொஞ்சம் விழிப்பாத்தான் இருக்காங்க..." 

"இந்த தடவை எல்லாருக்கும் வச்சிச் செய்வாங்க... இவனுக நம்மளை இளிச்சவாயனுங்கன்னு நினைச்சிட்டானுங்க... கச்சத்தீவை மீட்போம்ன்னு இவர் சொன்னா... கொடுத்தது யாருன்னு அவங்க கேக்குறாங்க.... டாஸ்மாக்கை மூடுவோம்ன்னு சொன்னா... சரக்கு யார் ஆளுங்க உற்பத்தி செய்யிறாங்கன்னு கேக்கிறானுங்க... இப்படியே மாத்தி மாத்தி பேச வேண்டியதுதான்..."


"இதுல கூத்து என்னன்னா கடந்த அம்பது வருசமா அவனுங்கதான் மாத்தி மாத்தி ஆளுறானுங்க... ஏன் ஒருத்தன் தப்புச் செஞ்சா மற்றவன் அதை மாற்றலாமே... செய்ய மாட்டானுங்களே... அப்பன் ஒரு இடத்தை அடகு வச்சா மகன் அதை திருப்பமாட்டானா என்ன... அரசியல் செய்ய அது வேணும்... இன்னைக்கு இல்ல... நம்மளோட பேரன் பேத்திகளோட காலத்துல கூட இவனுக தலைமுறை இதைச் சொல்லியே நம்மளை ஆண்டுக்கிட்டு இருக்கும்...." சிரித்தார் திருஞானம்.

"ஆமா... ஆமா... கச்சத்தீவை பேசுவானுங்க... ஈழத்தைப் பேசுவானுங்க... விட்டா அமெரிக்காவுல இருந்து அதை கொண்டாருவோம்... இதைக் கொண்டாருவோம்ன்னு சொல்வானுங்க... ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, பக்கத்து மாநிலத்தோட தண்ணிப் பிரச்சினை பற்றி எல்லாம் பேச மாட்டானுங்க... விவரமானவனுங்க..." 

அப்போது இரவில் படம் பார்த்துச் சிரிப்பதாக திருஞானம் சொன்ன இருவரும் உள்ளே நுழைய, "என்ன ரவுண்ட் அடிச்சிட்டு வந்தாச்சாக்கும்.. இனி நைட்டுப் படம்தானா...?" என்றார் ராமராஜன்.

"பின்னே... வேற வேலை..." என்றான் சுந்தரம்.

"பாருங்க... மத்தவங்களுக்கு நம்மளால டிஸ்டர்ப்பன்ஸ் இருக்கக்கூடாது..."

"ஓ... அண்ணே நைட் தூங்க விடாம சிரிச்சிட்டிட்டோமோ... நாந்தான் சிரிச்சேன்னு நினைச்சேன்... அவனுமா... சாரிண்ணே... இனி அப்படி நடக்காது..." என்றான் சுந்தரம்.

"சரிப்பா விடுங்க..."

"என்னமோ காரசாரமான விவாதம் போய்க்கிட்டு இருந்துச்சு... எங்களைப் பார்த்ததும் நின்னு போச்சு..."

"எல்லாம் அரசியல்தான்..."

"கெடுகெட்ட அரசியல்ண்ணே... அம்மாவும் ஐயாவும் நம்மளை நல்லா எடை போட்டு வச்சிருக்காங்க.." என்றான் மற்றொருவனான பிரவீண்.

"ம்... இந்த சீமான்... பாட்டன், முப்பாட்டன்னு பேசினாலும் இனம் மதம்ன்னு பேசினாலும்... சில விஷயங்கள் ரொம்பச் சரியாப் பேசுறான்... டோல்கேட் வச்சி வசூல் பண்ணுறானுங்க பாருங்க... அதப்பத்தி பேசினான்... எவ்வளவு உண்மைங்கிறீங்க... நாம ஏன் அதை யோசிக்கலை... நான் கார் வாங்கும் போதே ரோடு டாக்ஸ் கட்டுறேன்... அப்புறம் எதுக்கு அம்பது கிலோமீட்டருக்கு ஒருதடவை பணம் பிடுங்கிறே... அப்ப நான் எந்த ரோட்டுக்கு வரி கட்டினேன்னு கேட்டான்... ரொம்பச் சரிங்கிறேன்... இனம் ஈழம்ன்னு அவனோட அரசியல் வேணுமின்னா நமக்கு எரிச்சலா இருக்கலாம்... ஆனா சரியான விஷயங்களை ரொம்பத் தெளிவாச் சொல்றான்...." என்றார் திருஞானம்.


"என்னாச்சுண்ணே மாம்பழத்துல இருந்து மெழுகுவர்த்தி பத்த வைக்க வந்துட்டீங்க...." சிரித்தார் நிர்வாகி.

"அப்படியில்லை... எது சரியோ அதை நாம பேசுறதுல தப்பேயில்லை... சாராயக் கம்பெனி எந்த திமுக காரனுக்கும் இல்லைன்னு ஐயா சொன்னதும் விஜயகாந்த் ஒரு கூட்டத்துல அப்ப வச்சிருக்கவனை நான் கெட்டவார்த்தையால திட்டவான்னு கேட்டார்... வெள்ளம் வந்தப்போ வரமுடியலை.. அப்துல்கலாம் இறந்ததுக்குப் போக முடியலை... இன்னைக்கு மட்டும் தினமும் சுத்தமுடியுதோன்னு கேட்டாரா இல்லையா... இதெல்லாம் சரிதானே... ஏன் கருத்துக் கணிப்பு என்பது திராவிடக்கட்சிகளை தூக்கி நிறுத்த பத்திரிக்கைகள் செய்யும் வேலை என வைகோ சொல்லும் போது அன்புமணி மூணாவது இடத்துல வருவார்ன்னு சொல்றது நம்புறமாதிரியா இருக்குன்னு சொல்லலையா... அரசியல் வேறு... நல்ல பேச்சுக்களை கேட்டு பாராட்டுறது வேறு..." என்றார் திருஞானம்.

"ஆமாண்ணே... அரசியல்வாதிங்க மக்களோட புத்தியை மழுங்கலா வைக்கவே விரும்புறாங்க... அதை சரியாச் செய்யிறாங்க..."

"திராவிடக் கட்சிகள் இலவசங்களைக் கொடுப்போம்ன்னு சொல்லியே நம்மை ஏமாத்துறாங்க... எப்பத்தான் இவங்க திருந்துவாங்களோன்னு புலம்புறதை விட்டுட்டு நாம சிந்திக்க ஆரம்பித்தால் தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்... செய்வோமா?" என்றார் ராமராஜன்.

"செய்வோம்... அப்படின்னு நம்புவோம்" சிரித்தார் திருஞானம்.

படங்களுக்கு நன்றி : இணையத்துக்கும் இணைபிரியாத கவுண்டர் செந்திலுக்கும்..

-'பரிவை' சே,குமார்.

11 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் வரவர வெறுப்பேற்றுகின்றன. இனி வரும் காலங்களில் வெளிப்படையாகவே கொள்ளையடிக்கக் கேட்டுக் கூட வாக்குக் கேட்பார்கள்.

balaamagi சொன்னது…

இப்படியே பழகிப்போச்சு,,

KILLERGEE Devakottai சொன்னது…

அலப்பறை நல்லாத்தான் இருக்கு தேர்தல் முடிந்தவுடன் மக்களுக்கு இருக்கு ஆப்பு.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தீர்ப்புகளைத் திருத்துவோம் நண்பரே

சிவகுமாரன் சொன்னது…

ஸ்ரீராம் சொல்வது போல் நடக்கலாம் . யார் கண்டது

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சிவகுமாரன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தீர்ப்புக்கள் திருத்தப்பட்டால் நலமே.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
ஆமா... வச்சி வச்சி செய்வானுங்க...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
பழக்கத்தை மாற்றுவோம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
ரொம்ப வெறுப்பாத்தான் இருக்கு..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தேர்தல் பிரச்சாரம் செம காமெடி சில சமயங்களில் சில ரொம்ப கடுப்படித்தன...எப்படியோ எல்லாம் போய் இப்ப முடிவும் வந்து என்னவோ போங்க குமார்.....நல்லது நடக்கும்னு நினைக்கறீங்க மீண்டும் அதே ஆட்சி வந்ததால்? நடந்தா நல்லது...பார்ப்போம் நன்றிக்கடனாவது இருக்கானு...

கீதா