மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 8 மார்ச், 2016

தொடரும் சூப்பர் பதிவர்கள்...

ரியாதைக்குரிய முத்து நிலவன் ஐயா பிரபலங்கள் மற்றும் புதியவர்கள் என பதிவர்களை அறிமுகம் செய்து... அறிமுகம் என்பதைவிட, மிகச் சிறந்த எழுத்தாளர்களைப் பற்றி பகிர்ந்து நீங்களும் உங்களுக்குப் பிடித்த எழுத்துக்காரர்களைப் பகிருங்கள் என அழைப்பு விடுத்திருந்தார். அதில் என்னையும் இழுத்து விட்டிருந்தார். நிஷா அக்கா அவருக்குப் பிடித்த எழுத்தாளர்களில் என்னையும் சொல்லியிருந்தார். இந்த தொடர்பதிவு பலரால் எழுதப்பட்டு நாம் வாசிக்கும் பலரையும் அறிமுகம் செய்து விட்டார்கள். 

ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட எழுத்துக்காரர்களை வாசிக்கிறேன்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புப் பெற்றவர்கள்.. ஒருவர் அழகிய தமிழில் அசத்தினால் மற்றொருவர் அசரடிக்கும் எழுத்து நடையில் கவர்வார்... ஒருவர் கவிதையில் கலக்கினால் இன்னொருவரோ கதையில் வாழ்வார்... ஒருவர் இலக்கியம் பேசுவாரென்றால் மற்றொருவர் இலக்கணம் பேசுவார்... ஒருவர் நகைச்சுவையில் நம்மை ஈர்த்தால் மற்றொருவரோ சோகத்தில் அசரடிப்பார்... இப்படியாக.. நிறைய... நிறைய வித்தியாசமான எழுத்துக்காரர்களை எல்லாம் வாசித்து வருகிறோம். எல்லாரையும் சொல்வதென்பது ஒரு பதிவில் முடியாதது... அதானால் நான் எழுத்து என்று ஒரு பகிர்வு ஆரம்பித்து வாராவாரம் ஒரு சிலரை அறிமுகம் செய்ய நினைத்தேன். அது ஆரம்பித்த ஒரு வாரத்தோடு கிடப்பில் கிடக்கு. சரி வாங்க இந்தத் தொடருக்காக, சிலரைப் பற்றி பார்க்கலாம். இங்கு சொன்னவர்கள் தவிர மற்றவர்கள் எல்லாரும் எனக்குச் சிறப்பானவர்களே... சொல்லலைன்னு வருந்தாதீங்க... மனசுல இருக்கீங்க...

ஆம்... நான் வாசிக்கும் எல்லாருமே எனக்கு பிரபலங்கள்தான்... மேலும் பிரபலங்கள் என்று தனியாக பிரிக்கும் அளவுக்கான பிரபலங்களுடன் நான் எப்போதும் தொடர்பில் இருப்பதில்லை. மிகப் பெரியவர்கள் என்று நினைக்கப்படும் எல்லாருமே அடுத்தவர் பதிவுக்கு போவதில்லை... வாசிப்பதில்லை... அதனால் நான் அந்த பிரபலங்கள் வட்டத்தை விட்டு வெளியேதான் நிற்பேன். இப்போது நானும் அதிகம் கருத்திடுவது இல்லை என்பதால் என்னையும் பிரபல வட்டத்துக்குள் நுழைக்காதீர்கள்... வேலைப்பளுவின் காரணமாகவும், மனச்சோர்வினாலுமே வாசிப்பதில் தடை, மற்றபடி அனைவரையும் தொடர்ந்து வாசிப்பேன்.

இது மொய்க்கு மொய்க்கு என்ற நிலையில் பயணிக்கும் எழுத்து உலகம்தான் என்று சொன்னால் யாராலும் அப்படியில்லை என மறுக்க முடியாது. கடந்த ஒரு மாதமாகவே என்னால் யாருக்கும் சரியான முறையில் கருத்து இடமுடியவில்லை... ஏன் பலரை வாசிக்க கூட முடியவில்லை... எல்லாம் என் பக்கத்து பிரச்சினைகள்தான்... அதிலிருந்து மீளும்போது எப்பவும் போல் எல்லாருடைய எழுத்திலும் வலம் வருவேன் என்பது எனக்குத் தெரியும்... ஆனால் நான் வாசிக்கும் என்னை வாசிக்கும் நண்பர்களுக்குத் தெரிவதில்லை... இப்போதே பலரைக் காணோம்... இன்னும் சில மாதங்கள் கடந்தால் ஒரு சிலர் மட்டுமே என்னோடு தொடர்பில் இருக்கலாம். நான் கருத்துக்காக எழுதவில்லை... கருத்து வேண்டும் என்றும் நினைப்பதில்லை... இருந்தாலும் அடுத்தவர் தளத்தில் கருத்திடும் நண்பர் நம் பக்கம் வரவில்லையே என்ற எண்ணம் எழத்தானே செய்கிறது.  அந்த நினைப்பின் இறுதியில் 'மொய்க்கு மொய்' கண் முன்னே வர, சரி என்னைக்கு நாம மொய் வைக்கிறோமோ அன்னைக்கு அந்த நண்பர் வரட்டும் என விட்டுவிட்டேன்.

நம் எழுத்தை காப்பி செய்வது குறித்து நான் எழுதியதற்கு நிஷா அக்கா, 'நம்ம எழுத்து பிடித்துத்தானே வாசிக்கிறார்கள்.. பகிர்கிறார்கள்... விட்டுவிடுங்கள்' என்று சொல்லியிருந்தார். அதெப்படி விட முடியும்.... நம் எழுத்தை இவர் எழுதியது எனக்குப் பிடித்ததால் பகிர்கிறேன் என்று சொன்னால் பரவாயில்லை ஆனால் அவர்கள் பெயரில் பகிரும் போது அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? மேலும் இதை புத்தகமாக்க வேண்டும் என நமக்கு கனவு இருக்கும் அது நிறைவேறுவதற்குள் அவர்கள் அதை புத்தகமாக்கிவிட்டால் நாம் என்ன செய்ய முடியும்...? சொல்லுங்கள். நம் எழுத்து நமக்கானது... பிடித்தால் இவர் எழுதியது என்று சொல்லி பதியட்டும்... ஆனால் காப்பி பேஸ்ட் செய்வதை எப்படி ஏற்பது...?

தேவா சுப்பையா : வாசிக்கும் போதே நேசிக்க வைக்கும் எழுத்து... மெல்ல மெல்ல நம்மைத் தின்னும் எழுத்து.. படித்து முடிக்கும் போது பரவசத்தை அள்ளிக் கொடுக்கும் எழுத்து... என்ன எழுதினாலும் அதை ரசனையோடு கொண்டு செல்லும் எழுத்து... திரும்பத் திரும்ப வாசிக்கச் சொல்லும் எழுத்து... நீங்களும் வாசித்து பாருங்களேன்.


ஜோதிஜி: தேடல் நிறைந்த மனிதர்... ஒவ்வொரு பதிவிலும் பகிரும் கருத்துக்களுக்கான தேடல் அதிகம்... இவரின் பகிர்வில் நிறைய விவரங்களை அறியலாம். பல தரப்பட்ட தகவல்களைத் தேடி பகிர்வாக்கும் இவரின் மின்நூல்கள் மிகப்பெரிய வரவேற்ப்பைப் பெற்றிருக்கின்றன. இப்போது வலையில் அதிகம் எழுதுவதில்லை. இருப்பினும் வாசிக்க வேண்டிய பகிர்வர் இவர்.

பா.ராஜாராம்: கதையாகட்டும் கவிதையாகட்டும் அதில் லயிக்க வைக்கும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர். அவ்வளவு அருமையான எழுத்துக்காரர்... இவரின் எழுத்தை வாசித்து பிடித்துப் போய் ஆனந்த விகடனில் அடிக்கடி கேட்டு வாங்கிப் போட்டார்கள்.  நான் சித்தப்பா என்று சொல்லும்  இவரின் எழுத்து வாசித்தால் வசப்படுத்தும். நிச்சயம் ஒரு நல்ல எழுத்தை வாசித்த மனத்திருப்தி கிடைக்கும். இவர் சாகித்ய அகாதெமி வாங்கக் கூட அளவுக்கு உயர வேண்டியவர் ஏனோ இவர் கடந்த இரண்டு வருடங்களாக எழுதுவதில்லை. 

தேனம்மை லெட்சுமணன் : நல்ல எழுத்து... நிறைய புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன... பத்திரிக்கைகளில் எழுத்துப் பணி... இப்படி நிறைய நிறைவான பயணங்களுக்கு இடையே வலையிலும் தொடர்ந்து எழுதுகிறார். இவரின் எழுத்துக்கள் உங்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

கரிசல்மண்ணைச் சேர்ந்தவங்களுக்கு நாங்கதான் அதிகம் சாகித்ய அகாதெமி வாங்கியவங்க... எங்களில்தான் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்ற பெருமை எப்போதும் உண்டு. அதை தமிழின் கர்வம் என்று கூடச் சொல்லலாம். இதை இங்கு சொல்லக் காரணம்... அதை பலரிடத்தில் பார்த்திருக்கிறேன்... சமீபத்தில் கூட ஒரு புத்தக அணிந்துரையில் படிக்க நேர்ந்தது. அவர்களின் கர்வம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. நான் மேலே சொன்ன என் மண்ணின் சொந்தங்கள் போல் இன்னும் பலர் எங்க சிவகங்கை சீமையில் உண்டு... இவர்களின் எழுத்துக்களும் ஒரு நாள் சாகித்ய அகாதெமி வாங்கும்... அன்று எனக்குள்ளும் கர்வம் குடிகொள்ளும்.

இனி வாசிக்க வேண்டியவர்கள் சிலர்...

ஜெயசீலன் : துளசிதரன் சார் சொல்லிட்டாங்க... நல்ல எழுத்துக்காரர். நிறைய விஷயங்கள் பேசுவார். என்ன அடிக்கடி காணாமல் போய் விடுவார்.

வருண் : கருத்துப் போர் நிறைந்த மிகச் சிறந்த எழுத்தாளர், சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை என்பதால் கருத்து இடாமல் வந்துவிடுவேன். ஆனல் பல  விஷயங்கள் கருத்துச் செறிவு மிக்கவை. இவரின் பதிவுகளுக்குப் போனால் நான் வாசிப்பது வந்திருக்கும் கருத்துக்களையும் அதற்கான இவரின் பதில்களையும்தான்...

மேனகா சத்யா : இவர் வலையில் பெரிய சாப்பாட்டுக்கடை அதிபர்... இங்கு போனால் விதவிதமாக சமைக்கக் கற்றுக்கலாம். வெரைட்டி வெரைட்டியாக செய்து அதை படமெடுத்து போட்டு நம்ம வயிற்றெரிச்சலை (ஆமா.. பார்த்ததும் சாப்பிடும் ஆசை வந்து வயிறு புடுங்க ஆரம்பிச்சிடும்ல அது வயிற்றெரிச்சல்தானே...) கிளப்பி விடுபவர்.போய் பார்த்து புதிது புதிதாய் சமைத்துச் சாப்பிடுங்க.

நிஷா அக்கா சொன்னது போல் மீரா செல்வக்குமார் அண்ணாவின் செல்லங்கள் 'ஓடி விளையாடு பாப்பா' சக்தி மற்றும் 'சின்னவள்' சூர்யா மற்றும் முத்துநிலவன் ஐயா பகிர்ந்திருந்த கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரி மாணவி செல்வி. வைசாலி பபோன்று இன்னும் நிறையப் பேர் வாசிக்கப்பட வேண்டியவர்கள்.

இன்னும் இன்னுமாய் காணாமல் போன நல்ல எழுத்தாளர்கள் நிறையப் பேரைச் சொல்ல எண்ணம்... எல்லாரையும் அடுக்க முடியாது... அதனால் கவிதைகளில் கொள்ளை கொள்ளும் 'வானம் வெளித்த பின்னும்' ஹேமா அக்கா, பார்ப்பவற்றை எல்லாம் சிறந்த பதிவாக்கும் 'வேடந்தாங்கல்' கருண், முகநூலில் குட்டிக் குட்டியாய் மௌனச் சிதறல் தொடுக்கும் கவிதையில் ஜொலிக்கும் 'எண்ணச் சிதறல்' அனிதா ராஜ், கவிதைகளின் நாயகன் என் ஆருயிர் நண்பன் 'இதயச் சாரல்' தமிழ்க்காதலன் என இவர்களையும் வாசியுங்கள்.

ஆன்மீகத்தில் எங்க 'தஞ்சையம்பதி' துரை. செல்வராஜூ ஐயா மனதுக்கு நிறைவாய் படங்களுடன் கலக்கலான, நாம் அறியாத தகவல்களை அள்ளித் தருவார். அங்கிட்டும் போய் ஆன்மீகம் பருகுங்கள். ஐயாவைப் போல் ஆன்மீகத்தில் அழகிய படங்கள் இணைத்து 'மணிராஜ்' என்ற அழகிய ஆன்மீகத் தளத்தை நடத்திய அம்மா இராஜராஜேஸ்வரி அவர்களைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சில நாட்கள் முன்னர் அவரின் தளத்தில் வந்திருந்த பகிர்வு கண்டு, ரொம்ப நாளைக்கு பின்னர் அம்மா வந்திருக்காங்களேன்னு போனா, அவங்க போன மாதம் இறந்த செய்தியை அவரின் பிள்ளைகள் பகிர்ந்திருந்தாங்க. ரொம்ப வருத்தமாப் போச்சு... முகம் தெரியாவிட்டாலும் எழுத்தின் மூலம் அம்மாவாய் மனசுக்குள் நிறைந்தவர்... இனி அவர் எழுதப் போவதில்லை என்ற நினைவு வாட்டுகிறது. அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அப்புறம் நாம கொஞ்சப் பேரை பிடிச்சவங்களை எழுதுங்கன்னு கூப்பிடணுமாம்... உங்க மனசுக்குப் பிடித்த பதிவர்களை நீங்க எழுதுங்க... எல்லாரும் எழுதலாமே...

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

45 எண்ணங்கள்:

ஜோதிஜி சொன்னது…

இன்னமும் நினைவில் இருப்பேன் போல. சிறிது காலம் கழித்து எழுதலாம் என்று ஒரு இடைவெளி விட்டுள்ளேன். நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

நிறைவான தகவல்களுடன் - அந்தந்த தளங்களுக்கு இணைப்பினையும் வழங்கி சிறப்பாக பதிவு செய்திருக்கின்றீர்கள்..

தொகுப்பினில் என்னையும் குறித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

வாழ்க நலம்..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்திருக்கிறேன். தனது எழுத்தால் ஆச்சர்யப் படவைத்தவர்கள் பலபேர்.வலை சரப் பணியை அவ்வப்போது அவரவர் தளங்களில் செய்வதும் நல்ல முயற்சி

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா நன்றி குமார் தம்பு. நான் உங்களுக்கு அதிகம் பின்னூட்டமிட்டதில்லை எனினும் என் பக்கம் வந்து இதுநாள் வரை நான் எழுதியுள்ள அநேகப் பதிவுகளுக்குக் கருத்திட்டு ஊக்கம் கொடுத்த அன்புத் தம்பி நீங்கள். அதை என்றும் மறவேன்.

நேரம் கிடைக்கும்போது வருவேன். ஆனால் பல சமயம் முகநூல் பராக்குப் பார்த்தல்களில் பொழுது போய்விடுகிறது. படிப்பதில் சோம்பேறித்தனம் வந்துவிட்டது,

ஆயினும் மிகத் தன்னம்மிபிக்கையோடு நம் சிவகங்கைச் சீமைக்காரர்களும் சாகித்ய அகாதமி விருது வாங்கும் நாளில் நீங்கள் கர்வம் கொள்வதாகக் கூறியுள்ளீர்கள். இதற்கு சாலவும் பொருந்த இருக்கும் நீங்கள் சாகித்ய அகாதமி விருது வாங்கினால் நாங்கள் மிகவும் பெருமிதப்படுவோம். உங்கள் கதைகளைப் புத்தகமாக்கம் செய்யுங்கள். அன்பு வாழ்த்துகள்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

அடே யப்பா! எத்தனை புதிய மற்றும் மூத்த எழுத்தாளர்களைப் பகிர்ந்து விட்டீர்கள் குமார்? இதுக்குத்ததான் -ஒரு சுயநலமாகத்தான் புதியவர்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான்- இந்தத் தொடர் பதிவைத் தொடங்கினேன். தங்கள் அறிமுகத்தில் எனக்கு அறிமுகமில்லாத பலரைத் தெரிந்துகொண்டேன். இனித் தொடர்வேன். மிக்க நன்றி நண்பர் குமார்.

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல லிஸ்ட். ஸ்விஸ் ஹேமா ஃபேஸ்புக்கில் கூட ஆளைக் காணோம்!

balaamagi சொன்னது…

நல்ல அலசல் சகோ, தாங்கள் வாசிக்க வேண்டியவர்கள் நானும் தான்,, அனைவருக்கும் வாழ்த்துக்கள்,, தொடருங்கள்.

Nagendra Bharathi சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

மீரா செல்வக்குமார் சொன்னது…

நன்றி குமார்...தொடர்ந்ததற்கும்.. என் பிள்ளைகளை புகழ்ந்ததற்கும் ..உங்கள் தேர்வுகளும் மிகச்சரியானதே..
பிள்ளைகள் தேர்வில் இருப்பதால் அவர்கள் சார்பிலும் நன்றிகள்...

KILLERGEE Devakottai சொன்னது…

அழகான அறிமுகங்கள் நண்பரே விரிவான அலசலுடன் வாழ்த்துகள்
தமிழ் மணம் 6

S.P.SENTHIL KUMAR சொன்னது…

அறிமுகங்கள் அனைத்தும் அருமை. நான் அறியாத சிலரையும் உங்களால் அறிந்து கொள்ள முடிந்தது.
த ம 6

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஜோதிஜி நீங்கள் இப்போதும் எங்கள் எல்லார் நினைவிலும் இருக்கின்றீர்கள். எப்படி மறப்போம் நண்பரே! நோ சான்ஸ்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். வைசாலி, சக்தி, சின்னவள் இன்னும் சில இளைஞர்கள் பற்றிச் சொல்ல நினைத்து, நீங்கள் சொல்லியிருப்பது போலவே அவர் பதிவு என்று நினைத்து அவரைப் பற்றிய பதிவாகி நம்முள்ளும் பதிவான ராஜேஸ்வரி அவர்களின் மரணச் செய்தி அறிந்து அப்படியே மனம் ஓடாமல் நிறுத்தி அதைச் சொல்லி முடித்துவிட்டோம்.

உங்கள் அறிமுகங்கள் அனைவரும் அருமையான பதிவர்கள். சிலரை அறியவில்லை குறித்துக் கொண்டோம். அனைவருக்கும் வாழ்த்துகள்

வைசாலி செல்வம் சொன்னது…

வணக்கம் ஐயா.தங்களின் வலைப்பூவில் என்னை அடையாளப்படுத்தியத்திற்கு மிகவும் நன்றிகள் ஐயா.இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு எங்கள் கல்லூரியின் சிறந்த வலைப்பூ எழுத்தாளர் என்ற விருதை சிறப்பு விருந்தினராக வந்த பாடகி மற்றும் நடிகையுமான அனுராதா கிருஷ்ண மூர்த்தி அவர்களின் கரங்களால் பெற்றேன் ஐயா.இதை தங்களோடு பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி ஐயா.தங்களை போன்ற மூத்த வலைப்பதிவர்களின் ஊக்கமும் உறுதுணையும் இருக்கையில் நான் வெற்றி பாதையை விரைவில் அடைவேன் என்பது உறுதி ஐயா.தொடர்ந்து இணைந்திருங்கள் ஐயா.

நன்றிகள் ..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வலைத்தளத்தில் பலருக்கு உற்சாகம் குறைந்தாலும், அந்த அனல் அப்படியேத்தான் இருக்கிறது !

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

அம்மாவுக்காக கண்ணீர் அஞ்சலி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான பகிர்வு. பலரும் நான் தொடர்ந்து வாசிப்பவர்கள். சிலர் புதியவர்கள். நன்றி குமார்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அசத்தல் அறிமுகங்கள் நண்பரே
நன்றி
தம+1

வருண் சொன்னது…

****வருண் : கருத்துப் போர் நிறைந்த மிகச் சிறந்த எழுத்தாளர், சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை என்பதால் கருத்து இடாமல் வந்துவிடுவேன். ஆனல் பல விஷயங்கள் கருத்துச் செறிவு மிக்கவை. இவரின் பதிவுகளுக்குப் போனால் நான் வாசிப்பது வந்திருக்கும் கருத்துக்களையும் அதற்கான இவரின் பதில்களையும்தான்...****

என்னைப்பற்றி சரியான விமர்சனம், வாழ்த்துக்கள்!




சிறு வயதிலிருந்து அம்மா அப்பாவை திருப்திப் படுத்துவதுதான் நமது கல்ச்சர். அப்படித்தான் அன்பால் கட்டுப்படுத்தப்பட்டு, கட்டுப்பட்டு வளர்ந்தேன், வாழ்ந்தேன், வாழ்கிறேன். என் மனதில் ஒரு சிந்தனை...போற போக்கைப் பார்த்தால் சாகும் வரை இதுபோல் பிறரை (அம்மா அப்பா சுற்றம் நண்பர்கள், பதிவுலக நண்பர்கள்ணு) திருப்திப் படுத்தணும் என்றே வாழ்வு முடிந்துவிடும் போலவே என்பது தெளிவு பட்டது. அப்போ நம் உணர்வுகளைச் சொல்லாமலே சாவது அர்த்தமற்ற வாழ்வாச்சே? நம் உணர்வதை சொல்லித்தான் பர்ப்போமே? நமக்காக கொஞ்சம் வாழ்வோமே? என்பதுதான் என்பதிவுலக வாழக்கை குமார். புரிதலுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அண்ணே... வணக்கம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க...
எப்பவும் நீங்க எங்க நெஞ்சுக்குள்... மீண்டும் எழுத ஆரம்பியுங்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
ஆன்மீகம் என்றால் அது எங்க ஐயாதான்... அதற்கான உழைப்பு உங்களிடம் அதிகம்... எல்லாராலும் முடியாது ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முரளிதரன் ஐயா...
ஆமாம்... மீண்டும் வலைச்சரத்தை துளிர்க்க வைத்தால் நல்லது... முயற்சிப்போம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
பின்னூட்டம் இடவில்லை என்றாலும் உங்கள் மனதில் எப்போதும் தம்பியாக இருக்கிறோமே அது போதுமல்லவா...?

கண்டிப்பாக நம் மண்ணின் மைந்தர்கள் வாங்குவார்கள் அக்கா... அந்த நாளை நாம் அனைவரும் கொண்டாடுவோம்...

புத்தகம் ஆக்க வேண்டும் அக்கா... விரைவில் செய்கிறேன்... நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா....
தாங்கள் ஆரம்பித்து வைத்தீர்கள் எங்களால் முடிந்த பதிவர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறோம்...

நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
ஆமாம் அண்ணா... அவங்களோட இரண்டு வலையிலும் தொடர்ந்து வாசிப்பேன்... இப்ப ஆளையே காணோம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
வாழ்த்துக்கு நன்றி...
தங்களை எல்லாம் சொல்ல நினைத்து பதிவின் நீளம் கருதி சுருக்கி விட்டேன்... விரைவில் 'எழுத்து' என்ற பகுதியை தொடர்ந்து எழுத எண்ணம்.... அதில் கண்டிப்பாக தாங்களெல்லாம் இடம் பெறுவீர்கள்...

நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் கருத்துக்கு நன்றி. பிள்ளைகள் படிக்கட்டும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
ஆமாம் சார்... இராஜராஜேஸ்வரி அம்மாவின் மரணம் எதிர்பாராதது...
இன்று இளமதி அக்காவின் கணவனரின் மரணம்... இடையில் கலாபவன் மணியின் மரணம் என வருத்தங்கள் நிறைய...

தங்கள் கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
முதல் வருகைக்கு நன்றி...
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...
தொடர்ந்து எழுதுங்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
மீண்டும் தங்களின் பதிவுகளை வலையில் பார்ப்பதில் மகிழ்ச்சி...
கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

உண்மைதான் வருண்...
எனக்கு உங்களின் கருத்துச் செறிவு மிக்க எழுத்து ரொம்பப் பிடிக்கும்... அப்படியே பயணியுங்கள்... நம் பாதையில் இருந்து நாம் விலகாமல் பயணிக்க வேண்டும்... நன்றி.

ஜோதிஜி சொன்னது…

போற போக்கைப் பார்த்தால் சாகும் வரை இதுபோல் பிறரை (அம்மா அப்பா சுற்றம் நண்பர்கள், பதிவுலக நண்பர்கள்ணு) திருப்திப் படுத்தணும் என்றே வாழ்வு முடிந்துவிடும் போல

வருண் அப்படியே என் தற்கால சிந்தனையோட்டத்தை எழுதியிருக்கீங்க.

ஜோதிஜி சொன்னது…

எங்கள் எல்லார் நினைவிலும் இருக்கின்றீர்கள். எப்படி மறப்போம் நண்பரே! நோ சான்ஸ்!

உங்கள் அன்புக்கு நன்றி.

r.v.saravanan சொன்னது…

நான் விரும்பி படிக்கும் பதிவர்களுடன் படிக்காத பதிவர்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்த்து. நன்றி குமார் ராஜராஜேஸ்வரி அம்மா அவர்கள் மறைந்தது இப் பதிவின் மூலமாக அறிந்தேன். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

Menaga Sathia சொன்னது…

தொகுப்பினில் என்னையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றியும் சந்தோஷமும் சகோ..
சீக்கிரமே தங்கள் புத்தகத்தை வெளியிட வாழ்த்துக்கள்..

நிஷா சொன்னது…

நான் கண்டுக்காமல் விடுங்க என சொன்னது நீங்கள் இனி இணையத்தில் எழுதாமல் இருப்போமா என தோன்றுகின்றதே என எழுதியதை வைத்து தானே தவிர காப்பி பேஸ்ட் செய்வோரை கண்டுக்காமல் இருக்க சொல்லவில்லையே!

அனைவர் குறித்த அறிமுகமும் அசத்தல்பா!எனக்கு அனைவரும் புதியவர்களே!

கடைசி வரிகள் சோகத்தினை சுமக்கின்றது, ஆழ்ந்த அனுதாபங்கள்!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

ஆஹா அருமையான பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். நான் தாமதமாகத் தொடர்வதால் சிக்கல் தான் :)

நானும் மொய்க்கு மொய் என்று பார்ப்பதில்லை சகோ..ஆனால் வாசிக்க வேண்டும் என்று நினைக்கும் தளங்களுக்குச் செல்வது கூட சில நேரம் வேலைகளினால் தாமதப்படுகிறது, சில நேரம் மறந்தும் விடுகிறது.

கோமதி அரசு சொன்னது…

அருமையான பதிவர்கள் அறிமுக பகிர்வு. நிறைய பேர் நான் படிப்பவர்கள்.
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது உள்ளம். எல்லா பதிவர்களுக்கும் பின்னூட்டம் அளித்து உற்சாகம் தந்தவர்.

மு. கோபி சரபோஜி சொன்னது…

இந்தப் பதிவின் மூலமாக பல பதிவர் பக்கங்களை அறிய முடிந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களின் வலைப்பக்கம் வழியாகவும் பயணிக்கிறேன். என் பங்களிப்பாய் என் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக நான் அறிந்த, வாசிக்கின்ற பதிவர்களை என் பக்கத்தில் எழுதி இருக்கிறேன். அதில் உங்கள் பக்கத்தையும் குறிப்பிட்டிருக்கிறேன்.
விரைவில் உங்கள் எழுத்துகளைப் புத்தகமாகக் கொண்டு வாருங்கள். அச்சு வடிவ எழுத்தும் ஒரு படைப்பாளிக்கு அவசியம்.

J.Jeyaseelan சொன்னது…

மிக்க நன்றி சார்... என்னையும் அறிமுகம் செய்தமைக்கு.. சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள், அடிக்கடி காணாம போயிற்றேன்னு... எப்பயாச்சும் வருவேன்.. பாருங்க நீங்க போட்டு ஒரு வாரம் ஆச்சு..?இப்போதான் பார்த்தேன்... சாரி சார்.. முடிந்த அளவு முயற்ச்சிக்கிறேன்..பார்க்கலாம்..! அப்புறம் நான் உங்கள் தளம் மட்டும் மறக்காமல் வந்துவிடுவேன்.. மொபைலிலாவது.. என்ன அதில் கருத்திட கடினம் என்பதால் படித்து சென்றுவிடுவேன்.. உங்களுடைய நிறைய பதிவுகளை புக்மார்க் செய்து வைத்துள்ளேன்.. நேரம் கிடைக்கும் போது படிக்க.. தெரியாதவங்களையும் தெரிந்து கொண்டேன் இனி அவங்களையும் தொடர்வேன்... ரொம்ப நன்றி சார்...