மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

கலையாத கனவுகள் (81வது பகுதி இப்படி முடிந்திருக்கலாமோ?)

ராம்கி - புவனாவின் திருமணத்திற்குப் பின்னர் இப்போதைக்கு திருப்பூருக்கு வரவேண்டாம். உனக்கு இப்போதைக்கு வாழ்க்கையை நகர்த்த ஒரு வேலையை தேடிக்க, படிச்ச படிப்பும் அதற்கான முயற்சியும் தொடரட்டும்.... விரைவில் நல்ல வாழ்க்கை அமையும்... அதுவரை நான் உனக்குப் பணம் போட்டு விடுறேன்... நீ திருப்பூருக்கு வந்த யாராவது அங்க தேடி வருவாங்க... அப்புறம் தேவையில்லாம நீங்க பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கும்... இங்கயே இரு... சேகர் மூலமா ஏதாவது பண்ணிக்கலாம்... என சேவியர் சொல்ல அனைவரும் அதை ஆமோதித்தனர். சேகரும் அவனுக்கு ஒரு வேலை கிடைக்கிற வரை இங்க தாராளமா இருக்கட்டும்... எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிட அவர்களை விட்டுவிட்டு நண்பர்கள் ஊர் நோக்கிப் பயணித்தார்கள்.

"இங்க பாருடா மச்சான்... எதாவது ஒரு வேலை ட்ரைப் பண்ணிக்கலாம்.. ஆபீஸ் பிரண்ட்ஸ்க்கிட்ட சொல்லியிருக்கேன். சீக்கிரம் பிடிச்சிடலாம்... இப்போதைக்கு சின்னதா ஒரு வாடகை வீடு... மூணு வேலை சாப்பாட்டுக்கான வருமானம் வந்தா போதும். சேவிங்கஸ் எல்லாம் தேவையில்லை." ராம்கியிடம் சொன்னான் சேகர்.

"இல்லடா... நகரத்து வாழ்க்கை... நீ வாங்குற சம்பளத்துல உங்க லைப்பை ஓட்டுறதே பெரிய விஷயம்... எதோ ரெண்டு மூணு நாள்ன்னா பரவாயில்லை... வேலை கிடைக்கும் வரையின்னா கஷ்டம்டா... உங்களைக் கஷ்டப்படுத்த விரும்பலை... எங்கிட்ட காசு இருக்கு... இப்போதைக்கு செலவுக்கு கஷ்டமில்லை... அப்படி வேணுமின்னா சேவியருக்கு போன் போட்டா அனுப்பப் போறான்... இங்க பக்கத்துல எதாவது சின்ன போர்ஷனா பாரு... நாங்க ரெண்டு பேரும்தானே.. அட்ஜஸ் பண்ணி வாழக் கத்துக்கிறோம்..."

"இல்லடா... இப்ப எதுக்கு... கொஞ்ச நாள் இங்க இருக்கலாமே?"

"பரவாயில்லடா... பக்கத்துலதான பாக்கச் சொல்றேன்..."

"இல்ல ராமு... நீங்க இங்க இருங்க... உனக்கு ஒரு நல்ல வேலை சீக்கிரம் கிடைக்கும்..." - இது காவேரி.

"இல்ல காவேரி... அவரு சொல்றதுதான் சரி... ஒண்ணா இருக்கதவிட கொஞ்சம் தள்ளி இருந்தா நமக்குள்ள எப்பவும் சந்தோஷம் இருக்கும். எங்கிட்ட எங்கண்ணன் கொடுத்த பணம் இருக்கு... அம்மா கொடுத்தனுப்பிய நகை இருக்கு... அப்புறம் என்ன... உங்கண்ணன் சம்பாரிச்சு வாங்கித் தரப்போறார்... சேகரண்ணா... ஒரு வீடு இந்த வீதியிலேயே கூட பாருங்க... ஒத்த ரூமா இருந்தாலும் போதும்..."

"அதுக்கில்ல அண்ணி... உங்க பணம் நகை எல்லாம் இருக்கட்டும்... இங்கயே இருங்க..."

"இல்ல காவேரி... அவங்க சொல்றது சரிதான்... எதுத்த வீட்டுல பின்பக்கமா ஒரு வீடு காலியிருக்குன்னு சொன்னாங்கதானே.... நீ அதை விசாரி... அதுல இப்போதைக்கு இருக்கட்டும்... பின்னால மச்சானுக்கு வேலை கிடைச்சதும் நல்ல வீடாப் பாத்து மாறிக்கலாம்..." என்றான் சேகர்.

"என்னண்ணே முடிவுல இருக்கீங்க... அத்தாச்சிய திருப்பூருக்கு அனுப்பியாச்சி... நாம அங்கயும் போகாம... ஒரு முடிவுக்கும் வராம இப்படியே இருந்தா என்ன அர்த்தம்... அவ வேற என்ன இங்க வரலையான்னு கடைக்கு போன் போட்டுக்கிட்டே இருந்திருக்கா..." புவனாவின் அப்பாவிடம் சித்தப்பா கேட்டார்.

"இதுல இனி முடிவெடுத்து என்ன பண்ணப் போறோம்... கழுத போனது பொயிட்டா பிடிச்சாந்து அவனை வெட்டி... அவளை வெட்டி... வேண்டாம் தொலஞ்சது தொலஞ்சதாவே இருக்கட்டும்...."

"என்னண்ணே நீங்களும் வைரவன மாதிரிப் பேசுறீங்க... அதுக்காக அந்த நாயை அப்படியே விட்டுறதா... நம்ம கௌரவம் என்னாகுறது?"

"கௌரவம்... ஆமா அது இப்ப எங்க இருக்கு? அதுதான் அவ போனப்பவே போச்சுல்ல... அம்புட்டுப்பயலும் நாக்கு மேல பல்லுப் போட்டுப் பேசலை... படிக்க வச்சே.. படிக்க வச்சேன்னு கத்துனானுங்களே... அப்பவே போச்சுப்பா எல்லாம்... இனி என்ன கௌரவம் இருக்கும்... வைரவன் தெளிவாப் பேசுறான்... அது மாதிரி நாமளும் இருந்துட்டுப் போவோம்..."

"அண்ணே...." இழுத்தார்.

"இங்க பாரு... அவளுக்கு அவனைப் பிடிச்சிருந்துச்சி பொயிட்டா... நாயி கஷ்டப்பட்டாலும் நஷ்டப்பட்டாலும் அவனுகிட்டதானே கெடக்கப் போறா... கண்ணைக் கசக்கிக்கிட்டு நம்ம முன்னால் வந்து நிக்கவா போறா... விட்டுட்டு வைரவனுக்கு நம்ம மச்சினன் மகளை கட்டி வைக்கிற வேலையைப் பாப்போம்..."

"முன்னால அவன ஆகாதுன்னு அடிச்சீங்க... இப்பப் போயி நின்னா ஒத்துப்பானா... எதாவது எடக்கு மடக்கா பேசினா..."

"ஏம்ப்பா வைரவன் எவளையும் கூட்டிக்கிட்டு ஓடிப் போகலையே... அவனுக்குள்ளயும் அந்தப்புள்ள மேல ஆசை இருக்கு... இனி கௌரவம் பாத்து என்னாகப் போகுது... அதுதான் போச்சே... போயி பேசுவோம்... அவனுக்கு எம்மேல மரியாத இருக்கு... அதுபோக அந்தத் தங்கச்சிக்கு வைரவனுக்கு கட்டத்தான் ஆசை... அதை ஜாடைமாடையா உங்கத்தாச்சிக்கிட்ட கூட சொல்லியிருக்கு... பேசிப்பாப்போமே..."

"சரிண்ணே... ஆனா இந்த விஷயத்தை அப்படியே விடச் சொல்றதுதான் நல்லாயில்ல..."

"எது நல்லது... எது கெட்டதுன்னு பாத்துப்பாத்து இப்ப தெருவில நிக்கிறோம்... விடு அவ எங்கயாவது வாழ்ந்துட்டுப் போகட்டும்...  கோவத்துல அவளைக் கொல்லணுமின்னு சொன்னேன்... ஆனா என்னோட ரத்தத்தை மண்ணுல சாய்க்க மனசு இடங்கொடுக்கலைப்பா... விட்டுடுவோம்..."

"சரிண்ணே... வாங்க திருப்பத்தூர் போயிட்டு காலையில வருவோம்..."

சில நாட்களுக்குப் பிறகு இளங்கோவைக் கடைவீதியில் வைத்துப் பார்த்த வைரவன் அவனிடம் பேசினால் வீண் வம்புதான் வரும் என பார்க்காதது போல் வண்டியை எடுக்க, "டேய் மாப்ள" என இளங்கோவே கூப்பிட வண்டியை நிறுத்தினான்.

"சாரி இளங்கோ... இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நெனக்கலை... உன்னை வேற கோபத்துல திட்டிட்டேன்..."

"விடுடா... என்னோட வீட்ல அப்படி ஒரு சூழல் இருந்திருந்தா நானும் அப்படித்தான் பேசியிருப்பேன்... உங்க கஷ்டமெல்லாம் புரியிது... இப்படிப் பண்ணிட்டாளேடா..."

"என்னடா பண்றது... எல்லாம் முடிஞ்சிருச்சு... எங்க குடும்ப மானத்தையே கெடுத்துட்டாடா... அந்தப்பயல எங்கயிருந்தாலும் தேடிப் பிடிச்சி...." ஆக்ரோஷமாகப் பேசிய வைரவனிடம் "வேண்டாம் மாப்ள... அவனைப் பிடிச்சித்தானே போனா... சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டும்... விட்டுடுங்க... எனக்கும் அப்போ கோவம் இருந்துச்சி... யோசிச்சா...அவங்க வாழ்க்கையை அவங்க தீர்மானிச்சதுல என்ன தப்பு... நீங்க பாத்திருந்தாக்கூடா அவன மாதிரி மாப்பிள்ளை கிடைக்கமாட்டான்... நான் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சிதானே எனக்கு கட்டுறேன்னு சொன்னே... விடு வாழ்ந்துட்டுப் போகட்டும்..."

"என்னடா நீயா இப்படி..."

"மாப்ள எப்பவுமே வாழ்க்கை ஒவ்வொருத்தருக்கும் அதைப் புரிஞ்சு வாழ ஒரு சந்தர்ப்பம் கொடுக்கும்... இப்ப நான் அதை புரிஞ்சி வாழக் கத்துக்கிட்டேன்... அப்புறம் எனக்கும் சொந்தத்துல பொண்ணு பாத்துட்டாங்க... சீக்கிரம் பத்திரிக்கையோட வாறேன்..."

"அப்படியா சந்தோஷம்டா... புவனா போனதால அப்பா வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தாரு... அப்புறம் எங்க மாமா பொண்ணையே எனக்கும் பேசிட்டாரு... தேதி பாத்துக்கிட்டு இருக்காங்க... ரெண்டு பேரு கல்யாணமும் ஒரே நாள்ல வந்துடாமே..." சொல்லிச் சிரித்த வைரவன் கொஞ்ச நேரம் பேசிவிட்டுக் கிளம்பினான்.

காலம் தன் போக்கில் போய்க் கொண்டிருக்க, சில வருடங்கள் கழிந்தன. தனது மகன் நல்ல வேலையில் சேர்ந்து சந்தோஷமாய் இருக்கணும் என்ற நாகம்மாவின் கனவுப்படி ராம்கி எழுதிய் பி.எஸ்.ஆர்.பி. கை கொடுக்க வங்கியில் உத்தியோகம் கிடைத்தது. புவனாவுக்கும் படித்த படிப்புக்கு நல்ல வேலை கிடைத்தது. நல்ல வீடாகப் பார்த்து குடியேறி சந்தோஷமாக வாழ்ந்தார்கள். நாகம்மாவும் சில மாதங்கள் சின்ன மகனுடன் வந்து இருந்து செல்லப் பேரனைக் கொஞ்சி மகிழ்ந்து செல்வாள். ராம்கி இங்கயே இரும்மா என்று சொன்னாலும் எனக்கு உன்னைய மாதிரித்தான்டா மத்தவங்களும்... உனக்கென்ன உன்னைய பாத்துப் பாத்துக் கவனிக்க ராஜாத்தியாட்டம் எம் மருமக இருக்கா... நான் கொஞ்ச நாள் பெரியவமுட்டு புள்ளைகளையும், அக்காவுட்டு புள்ளைகளையும் பாக்க வேண்டாமா... என்று மறுத்துக் கிளம்பிவிடுவாள்.

புவனாவின் அம்மாவும் வைரவனும் எப்படியும் வாரத்தில் இருமுறை போனில் கூப்பிட்டுப் பேசி விடுவார்கள். புவனாவை நேரில் பார்க்க முடியவில்லையே என்றுதான் அம்மா எப்போதும் வருந்துவாள். அந்த வருத்தத்தைப் போக்கும் விதமாக முதல் முறை ராம்கி குடும்பத்துடன் ஊருக்கு வந்த போது அவளை தேவகோட்டையில் மல்லிகா வீட்டில் வைத்துப் பார்த்துப் பேசி உச்சி முகர்ந்தாள். அதன் பின்னான வருகைகளில் எல்லாம் அம்மா மகள் சந்திப்பு நிகழத்தான் செய்தது.

ராம்கியின் நண்பர்கள் அனைவரும் தங்கள் குடும்பம் குழந்தைகள் என வாழ்க்கையில் செட்டிலாகிவிட அவர்களின் உறவு போனில் தொடர்ந்தாலும் வருடம் ஒரு முறையாவது சந்திப்பில் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. தனது மகளுக்கு திருமணம் முடித்து கல்லூரி ஆசிரியர் பணி நிறைவுக்குப் பின்னர் தமிழய்யா, சொந்தக் கிராமத்தில் போய் செட்டிலாகிவிட்டார். எப்போது ஊருக்குப் போனாலும் ஐயா வீட்டுக்குப் போய் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் ராம்கி - புவனா தம்பதியினர்.

சாப்பிட்டு விட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து வெற்றிலையை எடுத்துக் காம்பு கிள்ளி சுண்ணாம்பைத் தடவியபடி, "எல்லா விஷேசத்துலயும் அவ இல்லாதது உனக்கு வருத்தமாயில்லையா?" என்று கட்டிலுக்கு கீழே அமர்ந்திருந்த மனைவியிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் புவனாவின் அப்பா.

"எவங்க... நம்ம விசேசத்துக்கெல்லாம் வராதவ... நம்ம பாப்பாயி மவளா... அவ கெடக்கா...?" தெரியாதது போல கேட்டாள்.

"ஆத்தி.... ஒலக மகா நடிப்புடி... என்னமா ஆக்ட்டு கொடுக்கிறே..." என்று சிரித்தவர், "அதான் நம்ம... ம்... உம்மவளைத்தான் சொல்றேன்..."

"அதென்ன எம்மவ... உங்க மவ இல்லையா?"

"சரி... நம்ம மவ... அவ இல்லாம உன்னோட சந்தோஷம் போயிருச்சு இல்லையா?"

"அதான் வேண்டானுட்டுப் பொயிட்டாளே... அப்புறம் என்ன நம்ம மவ... அவளுக்காக சந்தோஷத்தைக் கெடுத்துட்டா... வைரவனோட வாழ்க்கையும் இருக்குல்ல..."

"இல்ல... ஏதோ இன்னைக்கு கேக்கணுமின்னு தோணுச்சு...

"என்ன தோணுச்சு... அவளைப் பத்தி இப்ப என்ன பேச்சு... தொலஞ்ச கழுத தொலஞ்சதாவே இருக்கட்டும்" கோபமாகப் பேசுவது போல் குரலை உயர்த்தினாள்.

" அடி ஆத்தி இம்புட்டுக் கோபமா எதுக்கு அங்க இங்க மறைஞ்சு மறைஞ்சு உம்மவள வரச்சொல்லிப் போயி பாக்குறே...?"

"என்ன... எப்ப.... நா... எங்க... அவள... யாரு... சொன்னா..." குழறினாள்.

"எல்லாம் எனக்குத் தெரியும்... விடு... மக பாசம்.... நானும் ஆரம்பத்துல கோபத்துலதான் அவளை வெட்டணுமின்னு சொன்னேன்... ஆனா இப்ப அவ நல்லா இருக்கா... அந்தப் பையன் அவள நல்லா வச்சிருக்கான்னு நாலு பேரு சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு... ஏன் உந்தங்கச்சி புருஷன் கூட முன்னால அப்படி இப்படின்னு குதிச்சான்.. இப்போ யாரோ சொன்னாங்கன்னு நம்ம புள்ள ரொம்ப நல்லா இருக்காம்ண்ணேன்னு சொல்றான்... எல்லாரு சொல்லுறதையும் கேக்கும் போது எனக்கும் அவளப் பாக்கணும்... அவகிட்ட பேசணுமின்னு இருக்கு... ஆனா ஏதோ ஒண்ணு தடுக்குது... முடியல... நீ அவளைப் பாக்குறே... பேசுறேன்னு கேட்டப்போ எனக்கு கோபம் வந்துச்சு... நமக்கிட்ட மறச்சுட்டாளேன்னு ஆத்திரம் வந்துச்சு... அப்புறம் நிதானமா யோசிச்சா பெத்தவ மனசுல்ல எப்படி விட்டுக்கொடுக்கும்ன்னு நினைப்பு வர கோபமெல்லாம் போயிருச்சு... " என்று பேசிக் கொண்டே வந்தவர் "ஆமா பேரப்பய எப்படியிருக்கான்... நம்ம ஜாடையா இல்ல அந்தப்பையன் ஆளுக ஜாடையா.." ஆர்வமாய்க் கேட்டார்.

"அப்படியே நீங்கதான் போங்க... மக மேல இம்புட்டுப் பாசம் இருக்குல்ல... அப்புறம் எதுக்கு இன்னம் வீம்பு, அவகிட்ட பேசுறியளா... போனடிச்சித் தாறேன்... "

"ம்க்கும்.. வேணா..." மழுப்பலாய்ச் சொன்னார்.

"அட நம்ம மகதாங்க அவ... அந்தப் பையன் ரொம்ப நல்ல பையன்.. நல்ல உத்தியோகம்... நாம பாத்தாக்கூட இப்படி பாத்திருக்க மாட்டோம்... இப்ப நல்ல சந்தர்ப்பமுங்க... நம்ம வைரவன் காரைக்குடியில கட்டியிருக்கிற புது வீடு குடிபோறதுக்கு வரச்சொல்லி கூப்பிடுங்க... அப்பா எப்ப கூப்பிடுவாருன்னுதான் அவளும் இருக்கா... கண்டிப்பா வருவா..."

"ஆமா அவளைக் கூப்பிட்டு நடு வீட்ல நிக்க வச்சா நம்ம ஜாதிசனம் என்ன சொல்லும்... வேண்டாம் விடு..."

"என்னங்க சாதிசனம்... சாதிசனமுன்னு... நம்ம புள்ள நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு எவளைக் கேக்கணும்... நீங்க அவளக் கூப்பிடுங்க... சாதிசனம் எதாவது பேச வந்த நா பேசிக்கிறேன்..." என்றவள் வீட்டுக்குள் கணவனை அழைத்துச் சென்று போனை எடுத்து மகளின் நம்பரைச் சொடுக்கி கணவனிடம் கொடுத்தாள். 'நீ பேசு...' என சைகை செய்தார். 'இல்ல நீங்களே பேசுங்க...' என்றபடி அவரிடம் கொடுத்துவிட்டு அருகே அமர்ந்தாள்..

நீண்ட நேரம் அடித்த போன் எதிர்முனையில் எடுக்கப்பட உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டார். "அலோ... என்னம்மா... வீட்ல இருந்து பேசுறீங்க... இந்நேரத்துக்கு அப்பா வந்திருப்பாங்களே...? அலைச்சல்ல வந்து படுத்துட்டாரா?" என்றது எதிர்முனை, சில வருடங்கள் கழித்து மகளின் துள்ளலான குரலைக் கேட்டதும் அவருக்குப் பேச்சு வரவில்லை.

பதில் வராமல் அமைதி தொடர "அம்மா... அலோ... அம்மா... என்னாச்சும்மா... அலோ... அலோ... எதாவது பிரச்சினையா?" புவனாவுக்குள் ஒரு பதட்டம் வந்திருப்பது குரலில் தெரிந்தது.

"நான் அப்பா பேசுறேன்..." மெதுவாகச் சொன்னார்.

எதிர்முனையில் சிறிது மௌனத்துக்கு பின்னர் "அ... அப்பா.... அப்ப்ப்ப்பாவா... எப்படிப்பா... உண்மையா.... எங்கப்பாதானா.... என்ன மன்னிச்சிட்டிங்களா... அப்பா... சாரிப்பா... நா பண்ணுனது தப்புத்தானேப்பா... எம்மேல கோபம் போச்சாப்பா..." அதற்கு மேல் பேச முடியாமல் வெடித்து அழுதாள்.

புவனாவின் அருகே அமர்ந்திருந்த ராம்கி அவளது தோளை ஆதரவாய்ப் பற்றி தேற்ற, மகளின் குரலும் அவளின் அழுகையும் சில வருட வலிகளை உடைத்தெரிய, அவருக்குள்ளும் அழுகை உடைத்துப் புறப்பட்டது. எதற்கும் கலங்காத கணவனின் கண்ணீரைப் பார்த்ததும் 'என்ன இது சின்னப் பிள்ளையாட்டம்' என்றபடி அவரை அணைத்து ஆறுதல் சொல்ல... இருபக்க அழுகைகளையும் காதில் வாங்கியபடி ரிசீவர் காத்திருக்க... இனி தொடரப் போகும் சந்தோஷங்களை சுமந்த பௌர்ணமி இரவு விடியலை நோக்கி மெல்ல நகர்ந்தது.

-முற்றும்.
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

Yoga.S. சொன்னது…

இப்படி முடித்தது கூட நன்றாகவே இருக்கிறது.பெற்ற பாசம் பிள்ளைகளுக்குப் புரிவது,பிள்ளைகளும் பெற்றவர்களாக மாறும்போது தான்.

KILLERGEE Devakottai சொன்னது…


இதுவரை படித்ததில்லை ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த முற்றும் பகுதியை படித்தேன்.

மகேந்திரன் சொன்னது…

இனிய வணக்கம் சகோதரரே...
கலையாத கனவுகளின் சில பகுதிகளே படித்திருக்கிறேன்...
மீதமுள்ள பகுதிகளை நேரம் கிடைக்கையில் படிக்கிறேன்...

Yarlpavanan சொன்னது…

சிறந்த இலக்கியப் படைப்பு என்பதே
என் கருத்து
தொடருங்கள்!

கோமதி அரசு சொன்னது…

இந்த முடிவு மிக அருமையான முடிவு.பேரகுழந்தைகள் தாத்தாவை பார்க்க வரும் சந்தோஷ்ங்கள் தொடருட்டும்.

இருக்கும் காலத்தில் எதற்கு வீம்பு,
எல்லோரும் மகிழ்ந்து இருக்கட்டும்.

சென்னை பித்தன் சொன்னது…

street என்பதை st. என்று எழுதுவார்கள்.தொடக்கம் படித்திருக்கிறேன். முடிவை இன்று படித்து விட்டேன்.இனி வலைப்பூவுக்கு தொடர்ந்து வருவேன்

தனிமரம் சொன்னது…

நல்ல முடிவு இதுதான் முழுமையாக ஒரு தொடர் படித்த் திருப்தி. வாழ்த்துக்கள் .