மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 29 அக்டோபர், 2010

முதுமை போற்றுவோம்



இன்றைய இளமை நாளைய முதுமை என்பதை நாம் யாருமே நினைவில் கொள்வதில்லை. பெற்றோராக இருக்கட்டும்... உறவினராக இருக்கட்டும்... பழகியவராக இருக்கட்டும்... ஏனோ முதுமையை மதிக்க நாம் மறுக்கிறோம்.

அவர்கள் என்ன சொன்னாலும் 'பெருசுக்கு வேற வேலையில்லை' 'கிழடு அப்படித்தான் கத்தும்', 'வயசாயிட்டாலே நையி நையின்னு' என்று பலவாறு அவர்களின் அறிவுரைகளை உதாசீனப்படுத்துகிறோம். அதுமட்டுமின்றி அவர்களுடன் சேர்த்து அவர்களின் கருத்துக்களையும் மூலையில் கிடாசுகிறோம் .

இளம் பிராயத்தில் அவர்களும் நம்மைப்போல்தான் இருந்திருப்பார்கள். நாம் செய்யும் சேட்டைகளையும் உதாசீனங்களையும் அவர்களும் செய்திருப்பார்கள் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் வயதுக்கு ஏற்ற மரியாதையை அவர்கள் கொடுத்திருப்பார்களா என்று யோசிப்பதைவிட அவர்களின் வயதுக்கும் அனுபவத்துக்கும் உரிய மரியாதைய நாம் கொடுக்கலாமே.

பேருந்துப் பயணத்தின் போது நாம் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகே ஒரு தள்ளாத வயதுடைய பெரியவர் வந்து நின்றால் அவருக்கு இடம்தர வேண்டும் என்ற எண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு வருகிறது. கைப்பிள்ளையுடன் வந்து நிற்கும் பெண்ணையே கண்டு கொள்ளாத நாம் பெரியவருக்கா இடமளிக்கப் போகிறோம்?

இதற்கும் மேலாக அழுக்கடைந்த உடையுடன் யாராவது பெரியவர் நம் அருகே வந்தமர்ந்தால் 'பெரியவரே... அந்தப் பக்கமெல்லாம் இடமிருக்குல்ல... அப்படி உக்கார்ரது... இங்க ஆள் வருது' என்று சொல்லி இடம்தர மறுப்பதுதான் நம் இயல்பு. ஒரு சில நேரங்களில் அவர் ஏறுமுன் படியில் வைத்து அவரை மறித்து 'வேற வண்டி பாரு... இதுல ஏறக்கூடாது' என்று கண்டக்டரே மறுப்பதும் உண்டு.

எத்தனை வீட்டில் பெற்றோர்கள் கவனிப்பில்லாமல் காலத்தை தள்ளுகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. இன்றைய காலகட்டத்தில் வேலை நிமித்தமாக வெளி ஊரிலோ, வெளி மாநிலத்திலோ, வெளி நாட்டிலோ தங்கும் நாம் குடும்பத்துடன் இடம் பெயரும் போது சந்தோஷமாக வழி அனுப்பி வைக்கும் அவர்கள் அதன்பின் தனிமையில் சந்தோஷத்தை இழக்கிறார்கள் என்பதே உண்மை. பலர் பெற்றோருக்கு வேண்டிய எல்லாம் செய்து கொடுத்தாலும் முதுமையில் தனிமை கொடியதல்லவா?

எத்தனை பெரியவர்கள் சந்ததியிருந்தும் கவனிக்காத நிலையில் பிச்சைக்காரர்களாக தெருவில் திரிந்து மரிக்கிறார்கள். நம் குழந்தைகளை நாம் சீராட்டுவது போல்தானே அவர்களும் நம்மை சீராட்டி இருப்பார்கள். இன்று நாம் செய்வதை நாளை நம் பிள்ளை செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம்.

எனக்கு மிகவும் நெருங்கிய உறவினர் ஒருவர் நல்ல நிலையில் இருந்தும் தாயாரின் கடைசிக் காலத்தில் கவனிக்கவில்லை. ஆனால் அந்தத் தாய் இறந்தபோது தாரை தப்பட்டை என்று தடபுடலாக வழி அனுப்பினார். இந்த படாடோபம் எதற்கு? இருக்கும்போது அனுசரணையாக இருந்திருந்தால் அந்த தாயுள்ளம் சந்தோஷமாய் இருந்திருக்கும் அல்லவா?

இன்னொரு வீட்டில் நடந்தது கொடுமையான சம்பவம்... அந்தத் தாய்க்கு ஒரே மகன்... நல்ல குடும்பத்தில் பெண் எடுத்தார்கள். பையன் மாமனார் வீட்டுப்பக்கம் சாய்ந்துவிட அந்தத்தாய் தனித்துவிடப்பட்டாள். யாரும் கவனிக்காமல் தள்ளாத வயதில் தானே சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அந்த அம்மாவின் நடமாட்டமும் இல்லை... வீடும் உள்பக்கமாக தாளிடப்பட்டிருக்க... சந்தேகப்பட்ட ஊரார் கதவை உடைத்துப்பார்க்க அங்கே அவர் பிணமாகக் கிடந்துள்ளார். எப்ப இறந்தார்...? எப்படி இறந்தார்...? என்பது யாருக்கும் தெரியாது... இறக்கும் தருவாயில் அந்த வயதான தாயின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

முதுமை வரமா...? சாபமா...? என்று சிந்திப்பதை விடுத்து அதை சாபமாக மாற்றாமல் சந்தோஷ மாற்ற வேண்டுமெனில் முதுமைக்கு அன்பும் அரவணைப்பும் மிக அவசியம்... ஆனால் அந்த அரவணைப்பைக் கொடுக்க ஏனோ நமக்கு மனம் இடம் தருவதில்லை. அவர்களை உதாசீனப்படுத்தும் நம்மை பார்த்து வளரும் நம் வாரிசு நாளை அதைத்தானே நமக்கும் செய்யும்... அப்ப 'நான் அப்படி வளர்த்தேன்... இப்படி வளர்த்தேன்னு புலம்பி என்ன லாபம் அடைய முடியும் சொல்லுங்கள்...

முதியவர்களை கேவலமாக பார்க்கும் நம் எண்ணத்தை கைவிட்டு அவர்களை அரவணைப்போம்... நாளைய உலகில் நாமும் அரவணைக்கப்ப்டுவோம்.

-'பரிவை' சே.குமார்

 படத்துக்கு நன்றி கூகிளுக்கு...

27 எண்ணங்கள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

தாய், தந்தை வாழும் காலத்தில் அவர்களைப்
பேணிக் கவனிக்காமல், அவர்கள் மனம் வருந்தி,
துன்பப்பட்டு இறந்ததும் தடபுடலாய் இறுதிக்காரியங்கள்
செய்வது, பொது மக்களிடையே வெறுப்பையே
ஏற்படுத்தும்; அதோடு பாவமும் வந்து சேரும்.
நல்ல கருத்துள்ள இடுகை குமார்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முத வட,இருங்க படிச்சுட்டு வர்றேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உங்கள் மனதில் பட்டது எங்கள் நெஞ்சை சுட்டது.

முதியவர்களை கேவலமாக பார்க்கும் நம் எண்ணத்தை கைவிட்டு அவர்களை அரவணைப்போம்... நாளைய உலகில் நாமும் அரவணைக்கப்ப்டுவோம்.


உண்மை

Chitra சொன்னது…

முதியவர்களை கேவலமாக பார்க்கும் நம் எண்ணத்தை கைவிட்டு அவர்களை அரவணைப்போம்


.....சிறு வயதில் இருந்தே பெரியோர்களை மதித்து உதவி செய்ய பழக்கி வளர்ப்பதில் இருக்கிறது என்று நினைக்கிறேன். மற்றும் முன் மாதிரியாக வீட்டில் அனைவரும் நடந்து கொள்வதிலும் இருக்கிறது.

தமிழ்க்காதலன் சொன்னது…

கலாச்சார சீரழிவின் உச்சம் நண்பா.., உதட்டு சாயமும்..., பெருத்த புட்டமும்.., தடித்த உடம்பும் தந்த மயக்கம்... பெற்றத்தாயை, தந்தையை, ஊரை, உறவை உதாசீனப் படுத்துகிறது பிதுங்கி கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்கள் ஒட்டகம் மேய்க்கும் உடைக்கு மாறிய நம் கலாச்சாரம்...., மறைக்க வேண்டியதை திறந்து காட்ட உடை எதற்கு...? தலுக்கும், குளுக்கும் தான் நிரந்தரம் என நினைக்கும் இன்றைய சிருசுகள் நாளைக்கு வயதாகும் சமயத்தில் "தற்கொலை" செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

நல்ல பகிர்வு தோழா, இன்னும் கூட சவுக்கால் அடிக்கலாம் தோழா, நாம் திருந்த மாட்டோம்ல...., டேய் அங்கப் பார்றா... இளசு போகுது....ஹி..ஹி..ஹி..

மதுரை சரவணன் சொன்னது…

//சாபமாக மாற்றாமல் சந்தோஷ மாற்ற வேண்டுமெனில் முதுமைக்கு அன்பும் அரவணைப்பும் மிக அவசியம்... //

good thought . keep it up. vaalththukkal.

Unknown சொன்னது…

இன்று நாம் முதியோர்களை கவனித்தால் நாளை நம் குழந்தைகள் நாம்முதியோர் ஆகும் பொழுது அவர்கள் நம்மை கவனிப்பார்கள்..

நல்ல பதிவு

நசரேயன் சொன்னது…

ம்ம்ம்

santhanakrishnan சொன்னது…

மிகப் பரிவுடன் எழுதியிருக்கிறீர்கள்
குமார். உங்களின் நல்ல மனசுக்கு
ஒரு சல்யூட்.

இலா சொன்னது…

ரொம்ப உணர்வு பூர்வமான பதிவு. இதுவரை பெரியவர்களை மதிக்காமல் இருந்ததில்லை.. ஆனாலும் சில விசயங்களை மறுபரிசீலனை செய்ய தூண்டுகிறது. Reconsidering my choices :)

க.பாலாசி சொன்னது…

உண்மையில் இதுவொரு நல்ல இடுகைங்க.. பெரியவர்கள் நிச்சயம் மதிக்கப்படவேண்டியவர்கள்...ஆனா பலயிடங்கள்ல அப்படியில்லை என்பதுதான் உண்மை..

இறந்துபோன அந்த அம்மாவோட கடைசி துடிப்பு, தவிப்பு என்னவாக இருந்திருக்கும்னு நினைத்துப்பார்த்தால் மனதெங்கும் பாரம்..ப்ச்..

vasu balaji சொன்னது…

good one!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.. நல்ல பதிவு ..

சுந்தரா சொன்னது…

//பையன் மாமனார் வீட்டுப்பக்கம் சாய்ந்துவிட அந்தத்தாய் தனித்துவிடப்பட்டாள். யாரும் கவனிக்காமல் தள்ளாத வயதில் தானே சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வந்தாள்.//

இது பல இடங்களில் நாம் கண்கூடாகப் பார்க்கிற நிஜம்.அந்தச் சூழ்நிலையிலும்கூட தன் பிள்ளைகளை குறைத்துப்பேசுவதில்லை அந்தப் பெற்றோர்கள்.

உணர்வுபூர்வமான கட்டுரை.

ஈரோடு கதிர் சொன்னது…

முதுமைத் தனிமை கொடுமையானதுங்க

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

வாங்க சி.பி....
முத வடையை நிஜாமுதீன் எடுத்துட்டாருங்க....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ராக்கா....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

வாங்க தமிழ்க்காதலன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
அதுசரி... பின்னூட்டம் போடாம எங்க பின்னாடியே போயிடுவிங்க போல...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சிநேகிதி....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

வாங்க நசரேயன் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சந்தானகிருஷணன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

வாங்க இலா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. பெரியவர்களை மதிக்கும் உங்கள் மனதுக்கு வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாலாசி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

வாங்க வானம்பாடிகள் ஐயா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

வாங்க வெறும்பய அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுந்தரா....
முதல் வருகைக்கும் உங்கள் அருமையான கருத்துக்கும் நன்றிங்க... அடிக்கடி வாங்க.


வாங்க அண்ணா....
உண்மைதான் அண்ணா...
நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை, அதற்கும் கருத்துக்கும் நன்றிண்ணா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Sriakila சொன்னது…

முதுமையை வரமாகவும் இல்லாமல், சாபமாகவும் இல்லாமல் அனைவரும் பார‌மாகத்தான் நினைக்கிறார்கள்.

இது வருந்தத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கதும் கூட.

முடிந்தால் என்னுடைய இந்தப் பதிவையும் பாருங்கள்.
http://akilawrites.blogspot.com/2010/08/blog-post_07.html

மோகன்ஜி சொன்னது…

குமார்! நெஞ்சைத் தொட்ட இடுகை இது

r.v.saravanan சொன்னது…

முதுமை போற்றுவோம்

போற்றத்தக்கது போற்றப்பட வேண்டியது

நல்ல இடுகை குமார்!

vanathy சொன்னது…

//நம் குழந்தைகளை நாம் சீராட்டுவது போல்தானே அவர்களும் நம்மை சீராட்டி இருப்பார்கள். இன்று நாம் செய்வதை நாளை நம் பிள்ளை செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம்.//
100% true.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீஅகிலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் இடுகையைப் படித்தாச்சு.

வாங்க ஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.