மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 30 ஜனவரி, 2013

கமலுக்கு ஆதரவாக விஜயகாந்த் அறிக்கை



-'பரிவை' சே.குமார்

பிறவிக்குணம்

ரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்யும் அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. கசாலையில் சாணியும் மூத்திரமும் கலந்து உடலெங்கும் அழுக்கேறியிருந்த மாடுகள் வைக்கோலை வேண்டா வெறுப்பாக மென்று கொண்டிருந்தன. கோழிக்குஞ்சுகள் குளிருக்கு இதமாக தாயின் இறக்கைக்குள் தஞ்சம் அடைந்திருந்தன.மழை தூற ஆரம்பித்தபோது காணாமல் போன மின்சாரம் இரண்டு நாட்களாக எட்டிப்பார்க்கவில்லை. கருவ மரங்களுக்கு இடையே வரும் மின்சாரக் கம்பியில் எங்காவது மரம் விழுந்து கிடக்கலாம். எப்பவும் போல் மழை நின்றதும் போய்ப் பார்த்து சரி செய்தால்தான் மின்சாரம் வரும்... அதுவரைக்கும் வீட்டிற்குள் மசமசவென்று எரியும் அரிக்கேன் விளக்குதான்.

'சே... இந்த மழை நசநசத்து பொழப்பைக் கெடுக்குது... வெளிய தெருவ போகமுடியுதா..?' புலம்பினாள் ராமாயி.

தொடர்ந்து மழை பெய்வதைப் பார்த்தால் இந்த வருஷம் விவசாயம் நல்லாயிருக்கும். இந்த மழைக்கே கண்மாய் நிறையக்கூடிய வாய்ப்பு இருக்கு... மழை ஆரம்பிக்கும் போதே இளந்தாரிப்பசங்க போய் பக்கத்து ஊருக்குப் போற குளக்காலை அடைத்து கண்மாய்க்கரையை வெட்டி திருப்பி விட்டாச்சு. அதனால கண்மாய்க்கு நீர் வரத்து அதிகம் இருக்கும்.

வானம் இடித்துக் கொண்டிருக்க, மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. ''ம்... அப்பவே அடிச்சிக்கிட்டேன்... வயல்ல முள்ளப் புடுங்கி கொழுஞ்சி பறிச்சிப் போடுங்கன்னு கேட்டாத்தானே... இந்த மனுசன் காதுல வாங்குனாத்தானே... வெள்ளையும் சொள்ளையுமா கிளம்பிப் போனா மட்டும் போதுமா... இந்த தண்ணியில எப்புடி சுத்தம் பண்ண முடியும். அவனவன் மழை விட்டதும் ஏரக் கட்டப் போறான்.நாம முள்ளுப் புடுங்கலாம். எல்லாம் எந்தலையெழுத்து... நாந்தான் லோலோன்னு கத்துறேன்..." கத்தலைத் தொடங்கினாள் ராமாயி.

"எதுக்கு இப்ப கத்துறே... பிடுங்கலாம்...ஈரத்துல புடுங்க நல்லா வரும் ஒருநா வேலை" என்று சொன்ன மாணிக்கம், 'எப்ப புடுங்கினாலும் நாந்தானே புடுங்கணும்... நீ வரப்போறியா..?' மனதிற்குள் கேட்டுக்கொண்டார்.

வயல் வரப்பு, ஆடு மாடு என்று ராமாயி ஒவ்வொன்றாக ஆரம்பிக்க, எதையும் கண்டு கொள்ளாமல் புகையிலையை எடுத்து கையில் தேய்த்து வாயில் அடக்கிக் கொண்டார்.

மழையோடு பால் கொண்டு போனவர்கள் திரும்பி விட்டனர் என்பது வீதியில் கேட்கும் பேச்சுக்குரலில் தெரிந்தது. "என்ன செல்லம்மா, கம்மாயில தண்ணி ஏறிடுச்சா..? வீட்டிற்குள் இருந்து புகையிலை குதப்பி வாயில் எச்சில் வழியாதவாறு கேட்டார் மாணிக்கம்.

"அந்த சனியனைத்தான் துப்பிட்டு பேசுறது" வெடித்தாள் ராமாயி.

"பெரிய முட்டு மறையிறமாதிரி இருக்கு மாமா இன்னும் சறுக்கை போகலை... கொளக்கால்ல அவ்வளவா தண்ணி இல்லை..." அவரது கேள்விக்குப் பதிலாக வெளியில் இருந்து குரல் வந்தது. பெரிய முட்டு என்பது கண்மாய்க்குள் இருக்கும் ஒரு சில மேடான பகுதிகளில் பெரியது. அந்தப் பகுதி தண்ணீருக்குள் அமுங்கினால் அந்த வருட நல்ல விளைச்சல் என்பது அவர்கள் வழிவழியாக வைத்திருக்கும் கணக்கு.

"எங்க ராசுப் பெரியப்பா வேற தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக்கிட்டு கிடக்குதாம்... இந்த அடைமழைக்கு போயிடுதோ என்னவோ..." புலம்பினாள் ராமாயி.

"அட ஏன் ரெண்டு நாளைக்கு முன்னாலதான் ராமு மச்சானைப் பார்த்தேன். அவரு நல்லாயிருக்காராம். கொஞ்ச நாள் இருந்துட்டுப் போகட்டுமே... பொயிட்டா பாக்கவா போறோம்..."

"யாரு கண்டா... இந்த மழையில போனா எப்புடி சாதி சனத்தை இழுத்துப் போறது..."

"உனக்கு நல்ல பேச்சே வராதா..?"

"மாணிக்கண்ணே..."

"என்ன ராமசாமி.. என்ன விசயம்?"

"கம்மாக்கரை உடைக்கிற மாதிரி இருக்குண்ணே... நம்ம சறுக்கைக்குப் பக்கத்துல கரை சரியில்லை... தண்ணி தளும்புது..." படபடப்பாக பேசினான் ராமசாமி.

"அடி ஆத்தி ராத்திரி உடைப்பு ஏற்பட்டா தண்ணியெல்லாம் போயி நம்ம தலையில கல்லு விழுந்துருமே...எல்லாருக்கும் குரல் கொடு நான் இந்தா வாரேன்." என்றபடி தோளில் துண்டைப் போட்டுக் கொணடு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு மழையில் இறங்கினார்.

"தலையில எதாவது எடுத்துப் போட்டுக்கிட்டு போங்க... போயி ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இளந்தாரிப்பயலுகளை வேலை ஏவிட்டு வாங்க. அதை விட்டுட்டு மழயில நனைஞ்சுக்கிட்டு மாங்கு மாங்குன்னு மண்ணை வெட்டிட்டு இங்க வந்து அது வலிக்குது இது வலிக்குதுன்னு கிடக்கப்புடாது சொல்லிப்புட்டேன்." முதுகுக்குப் பின்னால் கூவினாள் ராமாயி.

வீட்டிற்கு ஒருவர் பொதுக்காரியங்களுக்கு வரவேண்டும் என்பது ஊர்க்கட்டுப்பாடு. இருந்தவர்களெல்லாம் மண்வெட்டி, கூடை, சாக்கு சகிதமாக கிளம்பி வந்தனர்.

ராமசாமி காட்டிய இடத்தில் கரை உடைப்பதற்கான அறிகுறி தென்பட்டது. "ஏம்ப்பா... ரெண்டு இளவட்டம் போயி குளக்கால்ல போட்ட அணையை உடச்சு விட்டுட்டு கம்மாக்கரைய மண்மூடை போட்டு அடச்சுட்டு வாங்க"என்று மாணிக்கம் சொன்னதும் சில இளைஞர்கள் கிளம்பினர்.

மற்றவர்கள கரையை அடைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினர். கேலியும் கிண்டலுமாக பேச்சு மட்டும் குறையவில்லை. "பேச்சைக் குறைச்சுட்டு வேலையைப் பாருங்க... இருட்டுறதுக்குள்ள முடிக்கணும்"

"அப்பா... ரெண்டு பேரு மண்ணை வெட்டிக் கொடுங்க... ஆத்தா அதை சாக்குகள்ள நிரப்புங்க... தம்பி தூக்கி அடுக்குங்க..." ஆளாளுக்கு வேலை பார்க்க மழையிலும் வேலை வேகமாக நடந்தது.

"என்ன எழவு சனியனோ தெரியலை... வருசா வருசம் கண்மாய் வெட்டுறமுன்னு இந்தக் கடைசியில இருந்து அந்தக் கடைசி வரைக்கும் ஒரே வழியா வழிச்சு... அதை அளந்து காசு பாக்குறாங்க... நல்லா வெட்டி கரையில அள்ளிப் போட்டு கரைய உயர்த்துனாத்தானே உடைக்காது... நாமளும் இந்த மழையில நனைஞ்சுக்கிட்டு மண்ணு வெட்ட வேண்டியதில்லையில்ல..."

"ஆமா வருசா வருசம் வழிச்சே கண்மாய் தாழ்ந்து வயல் உயர்ந்து போச்சு. இதுல நல்லா வெட்டவேற வேணுமாக்கும்... எதோ இன்னும் கண்மாய்கள் இருக்கிறதால ஒரு சில பேரு வழிச்சு சம்பாதிக்கிறாங்க..."

பேச்சும் சிரிப்புமாக வேலையில் கவனம் செய்து ஒரு வழியாக அடைத்துவிட்டு வீடு திரும்பினர். அனைவரும் சொட்டச் சொட்ட நனைந்திருந்தனர்.

மாணிக்கம் மழையில் நனைந்து வந்திருந்ததால் ஆத்திரமான ராமாயி "இப்புடி நனைஞ்சுட்டு வந்தா நாளைக்கு காச்சல்ன்னு படுத்தா யார் பாக்குறது.ஆடு மாடுகதான் மனுசளை பாடாப்படுத்துதுகன்னா எல்லாந்தெரிஞ்ச இவுகளும் படுத்துறாக... போகயிலயே தலைதலையா அடிச்சுக்கிட்டேன்... ம்... கேக்கமாட்டாங்களே... எம் பேச்சைக் கேட்டிருந்த எனக்கெதுக்கு இந்த தலையெழுத்து..." என்று எதேதோ பேச, அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை.

ராமாயி வாய் முகூர்த்தமோ என்னவோ காலையில் எழ முடியவில்லை இருமல்... தும்மல்... காய்ச்சல் என்று எல்லாம் ஒன்றாய்...

அவரது நிலை கண்ட ராமாயி, "எனக்குன்னு வந்து வாய்க்கிதுக பாரு... நல்லா... வந்ததும் அப்படித்தான் இருக்கு... பெத்ததுகளும் அப்படித்தான் இருக்கு... இந்தா மழை விட்ட மாதிரி இருக்கு... மாடுகளை கொண்டு போய குளிப்பாட்டிட்டு கொள்ளைப்பக்கம் விட்டுட்டு வரலாம்... ரெண்டு நாளா கட்டுத்தொறையிலயே கிடக்குது... அதுகளும் காலாற பொயிட்டு வரும்... இவுகதான் சாஞ்சுட்டாகளே... ஊர் வேலை பாக்க ஆள் இருக்கும்... உள்ள வேலை பார்க்கத்தான் ஆள் இருக்காது... நான் என்ன சொன்னாலும் கேக்கிறதில்லைங்கிறது இன்னைக்கு நேத்தா இருக்கு,,, முப்பது வருசமா இதேதானே... யாராவது மடை எடுத்துக்கிச்சுன்னு சொல்லட்டும் காய்ச்சலாவது தலைவலியாவது மொத ஆளா நிப்பாக..."

அவள் பாட்டுக்கு கத்த, படுக்கையில் இருந்து எழாமல் கண்ணை இறுக்க மூடிக் கொண்ட மாணிக்கம், 'இது பிறவிக்குணம்... சவக்காரம் போட்டுக் கழுவினாலும் மண்டை மண்ணுக்குள்ள போற வரைக்கும் போகாது' என்று நினைத்துக் கொண்டார்.

எனது சிறுகதைகள் தளத்தில் பகிர்ந்தது மீள் பதிவாக மீண்டும் உங்கள் பார்வைக்கு....
-'பரிவை' சே.குமார்.

"தமிழகம் நான் வெளியேற வேண்டும் என விரும்புகிறது" கமல் பேட்டி



விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக சென்னையில் பேட்டியளித்த கமல் , "என்னுடைய படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை எப்படி கேலி செய்ய முடியும். என்னுடைய இந்த படத்தை எடுத்திருப்பதாக பெரும் செலவு செய்திருக்கிறேன். என்னுடைய திரையுலகை அனுபவத்தையும் எனக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டும் இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்தபடத்துக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன்.

படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இப்போது நான் உங்களுக்கு பேட்டி அளித்து கொண்டு இருக்கும் இந்த வீடு ‌எனது இல்லை. கோர்ட்டில் வழக்கு நடந்தபோது நீதிபதி கேட்டார். ஒருவரின் முதலீடுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா என்று கேட்டார். நான் இப்போதும் சொல்கிறேன். நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம். நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்க தயாராக இருக்கிறேன்.


எனக்கு மதம் கிடையாது, அரசியல் கிடையாது. எனக்கு மனிதநேயம் முக்கியம். மனதில் பட்டதை தைரியமாக எடுத்து சொல்பவன். இந்தப்படம் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் கிடையாது. எதற்காக எனது படத்தை தடை செய்கிறார்கள் என்று புரியவி‌ல்லை.

என்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். ஒருவேளை தமிழகம் மதச்சார்ப்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால் நிச்சயம் வேறு ஒரு மாநிலத்தை தேடி போவேன். அதற்காக தமிழகத்தை விட்டு வெளியேறவும் நான் தயார். வேறு மாநிலமும் கிடைக்காவிட்டால் வேறு நாட்டை தேடி போவேன்.

இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் முஸ்லிம்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள்.


கேரளாவில் மலபார், ஐதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு பேசினார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பிய நிருபர் ஒருவர், நீங்கள் தமிழகத்தை வெளியேற வேண்டும் என விரும்புகிறீர்களா என கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகம் தான் நான் வெளியேற வேண்டும் என விரும்புகிறது என கமல் வேதனையுடன் தெரிவித்தார்.


செய்தி : தினமலர்.
-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 29 ஜனவரி, 2013

ஒற்றைச் சிறகு - தமிழருவிமணியனின் முதல் சிறுகதை!

(ஓவியம் : ம.செ.,)

லகம் அழிவதற்கான பிரளயம் பெருக்கெடுத்துவிட்டதுபோல் இரவு முழுவதும் பேரிரைச்சலுடன் மழையின் ஊழிக்கூத்து. பெரியவர் குமரேசன் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டு இருந்தார். மாடி அறையின் கூரை மீது மழை விழும் ஓசை, இரவின் அமைதியை அழித்தது. வெறிகொண்ட பேயின் கொடுங்கரங்களால் அறைபடுவதுபோல் சாளரங்கள் சடசடத்தன. தொலைவில் டிரான்ஸ்ஃபார்மர் வெடிக்கும் சத்தம் இடியின் முழக்கமாக எதிரொலித்தது. அடுத்த கணம் மின் விளக்கு அணைந்து அறையில் இருளின் ஆதிக்கம் பரவியது.

 குமரேசன் எழுந்து அமர்ந்தார். அவருடைய வாழ்வின் கடைசிப் பொழுது வாசற்படி கடந்து கண் முன் வந்து நிற்பதாக உள்ளுக்குள் உணர்ந்தார். மெள்ள எழுந்து மெழுகுத் திரியைத் தேடி எடுத்துத் தீக்குச்சியால் ஒளி வளர்த்தார். மேசையின் மீது இருந்த மகாத்மாவின் படம் அவர் கண்களில் மங்கலாகத் தெரிந்தது. மீண்டும் படுக்கையில் வந்து அமர்ந்தவர், விழிகளை மூடிக்கொண்டார். எண்பது வயது வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்வுகள் அவருடைய நினைவுத் திரையில் படம் படமாக விரிந்தன. படித்துவிட்டு வேலை தேடாமல், சமூக சேவை, சர்வோதயம் என்று சுற்றியபோது, தந்தை சொன்ன சுடுசொற்கள் அவர் நெஞ்சில் நிழலாடின. அன்று வளர்த்தெடுத்த வைராக்கியத்தை இந்த இரவு வரை காப்பாற்றிவிட்ட கம்பீரம் அவர் முகத்தில் பளிச்சிட்டது.

மரணம் நெருங்கும் நேரம் மனிதர்களுக்குத் தெரிந்துவிடும் என்று அவருடைய நண்பர் ஆனந்தமூர்த்தி அடிக்கடி சொன்னது உண்மைதான் என்று குமரேசனுக்கு, இந்த இரவில் புரிந்தது. பரந்துகிடக்கும் பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு மூலையில் ஓர் அற்ப உயிர் விடைபெற்று யாரும் அறியா சூட்சும வெளியில் கலந்துவிடும் தருணத்தை வரவேற்கத் தயாராகிவிட்டவர்போல், வாய் திறந்து 'ஈஸ்வரா’ என்று முனகியபடி கையெடுத்துக் கும்பிட்டார் குமரேசன். அவருக்காகவே வாழ்ந்த மனைவியும் அவரால் வாழ்வு பெற்ற மகனும் மகளும் நினைவில் வந்து நின்றபோது, விழிகளில் நீர் வழிந்தது.

அவருடைய உடல் முழுவதும் சொல்லில் விளங்காத சோர்வு படர்ந்து பரவியது. கால்களை நீட்டியபடி படுக்க வேண்டும்போல் தோன்றியது. அதற்கு முன்பு எதையோ எண்ணியவராக எழுந்து, முயன்று நடந்து, அறைக் கதவின் தாளைத் திறந்துவிட்டுப் படுக்கையை நெருங்கினார். பாடையில் பிணம் கிடத்தப்படுவது போன்று கால்களை நீட்டிப் படுத்தார். மார்பின் மேல் இரண்டு கைகளையும் வைத்தபடி காந்தியின் படத்தை இறுதியாகத் தரிசித்து இமைகளை மூடிக்கொண்டார். ஓங்கி வீசிய காற்றில் அறைக் கதவு படீர் என்ற சத்தத் துடன் திறந்துகொண்டது. மழையின் பலத்த சிதறல் அறை முழுவதும் தெறித்தது. மெழுகுத் திரியின் வெளிச்சம் காற்றில் கரைந்தது. வானத்தில் பெரிய பொத்தல் விழுந்துவிட்டதுபோல் மழையோ நிற்காமல் பொழிந்துகொண்டு இருந்தது.

மயிலாப்பூர், சுந்தரம் ஐயர் தெருவில் இருந்த தன் வீட்டின் கீழ்த் தளத்தை, குமரேசன் தன் நண்பரான ஆனந்தமூர்த்தியின் குடும்பத்துக்கு மிகக் குறைந்த வாடகைக்கு விட்டிருந்தார். யாரும் எதையும் இலவசமாகப் பெற்று அனுபவிப்பதும், எதன் பொருட்டும் எவர் பொருட்டும் பிறர் உதவியில் வாழ்வதும் குமரேசனுக்குப் பிடிக்காது. அவருடைய மகன் தமிழினியன், திருச்சியில் காவல் துறை அதிகாரியாகவும்... மகள் பூங்குழலி, விழுப்புரம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றுகின்றனர். மனைவி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதய நோயால் கண் மூடிய பின்பு தனி மரமாகிவிட்ட குமரேசன், அவ்வளவு பெரிய வீட்டில்இருக் கப் பிடிக்காமல் மேல் தளத்தில் ஒரு சிறிய படுக்கையறையும் குளியலறையும் கட்டி முடித்து அங்கு இடம் பெயர்ந்தார்.

தனக்கு வேண்டிய உணவைச் சமைத்துக்கொள்வதிலும், தன்னுடைய துணிகளைத் தானே துவைத்துக்கொள்வதிலும் குமரேசனுக்கு ஒரு பெருமிதம் இருந்தது. தான் பிறருக்குப் பயன்பட வேண்டுமே தவிர, தனக்குப் பிறர் பயன்படக் கூடாது என்ற கொள்கையை குமரேசன் ஒரு வைராக்கியமாகவே பின்பற்றிவந்தார். ஆனந்தமூர்த்திக்கு இது ஓர் அர்த்தமற்ற அசட்டுப் பிடிவாதமாகவேபட்டது. வாய்ப்பு நேரும்போது எல்லாம் அவர் குமரேசனிடம் வாதம் செய்து பார்த்தார்.

''குமரேசா! ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதற்குப் பெயர்தான் வாழ்க்கை. யாரும் தனியாகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவிட முடியாது. நாம் கண்ணை மூடி இந்த மண்ணைவிட்டுப் போகும்போதும் நாலு பேர் உதவி தேவைப்படும். இந்த வயதில் எதற்குத் தனியாக இருந்து சிரமப்படணும்? நான் என் பிள்ளையோடு இல்லையா? உன் மகன் அவன் குடும்பத்தோடு வந்து இருக்கும்படி வருந்தி வருந்திக் கூப்பிட றானே. உன் மகள் வீட்டில் தங்கறதுக்கு நீ யோசிக்கலாம். மகனிடம் கௌரவம் பார்ப்பது நியாயமா?’ என்று ஆனந்தமூர்த்தி கேட்கும்போது எல்லாம் குமரேசனிடம் இருந்து ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைக்கும்.

கல்லூரிக் காலம் முதல் ஆனந்தமூர்த்தியிடம்தான் குமரேசன் நெஞ்சம் கலந்து நெருங்கிப் பழகினார். இளமையில் ஒருநாள் மெரினா கடற்கரையில் மாலை நேரம் இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது 'ஆனந்தம்! நேற்று என் அப்பா என்னிடம் கோபப்பட்டார். 'எம்.ஏ., படித்து ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை தேடுவதில் நாட்டம் செலுத்தாமல், சமூக சேவை, சர்வோதயம் என்று சுற்றித் திரிவது நியாயமா? பிள்ளையை வளர்த்துப் படிக்கவைப்பது எதற்காக? வயதான காலத்தில் தாய், தந்தைக்குக் கஞ்சி ஊற்றுவான் என்பதற்குத்தானே?! இப்படிப் பொறுப்பு இல்லாமல் நீ சுற்றித் திரிவதற்கா உன்னைப் பெற்றோம்?’ என்று சத்தம் போட்டார். மனசு ரொம்ப வலிக்குது’ என்ற குமரேசனிடம், 'உன் அப்பா சொல்வதில் என்ன தவறு?’ என்றான் ஆனந்தமூர்த்தி.

குமரேசன் கடல் அலைகளைப் பார்த்தபடி சிறிது நேரம் பேசாமல் இருந்தான். 'கைம்மாறு கருதாத அன்பே, இந்த உலகத்தில் இல்லையா? வாழ்க்கை என்பது வெறும் கொடுக்கல் வாங்கல் வியாபாரமா? முதலில் கொடுத்துப் பிறகு திரும்பப் பெறுவதுதான் பெற்றோர் பாசமா? வயோதிகத்தில் வாழ்க்கை உத்தரவாதம்தான் பிள்ளை வளர்ப்பில் தாய், தந்தை எதிர்பார்ப்பா? அன்பு, பாசம் என்பவை உன்னதமான உணர்வுகள் இல்லையா? பிள்ளைகளிடம் காட்டும் அன்பிலேயே சுயநலம் இருந்தால், அடுத்தவரிடம் இவர் களால் மழையைப் போல் எதையும் எதிர் பாராமல் எப்படிப் பாசத்தைப் பகிர்ந்துகொள்ள முடியும்?’ என்று அவன் பொங்கிய போது, ஆனந்தமூர்த்தி எந்த மறுமொழியும் சொல்லாமல் மௌனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

'ஆனந்தம்! நாளை முதல் தீவிரமாக வேலை தேடப்போகிறேன். இனி, என் பெற்றோர்க்கு நான் கொடுப்பவனாக மட்டுமே இருப்பேன். நாளை நான் மணம் முடித்து பிள்ளைகள் பெற்றாலும் அவர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் நான் கொடுப்பேன். சாகும் வரை அவர்களிடம் கை நீட்டி எதையும் பெற மாட்டேன். யாரிடத்தும் எதையும் எதிர்பாராத அன்பு ஒன்றுதான் இன்று முதல் என் தவமாக இருக்கும்’ என்று தீர்க்கமான குரலில் குமரேசன் அன்று சொன்னதை ஆனந்தமூர்த்தி பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

காலம் அதன் கதியில் ஓயாமல் ஓடியது. ஒரு தனியார் பள்ளியில் குமரேசனுக்கு வேலை கிடைத்தது. கல்விப் பணியைப் பகலிலும், காந்தியக் கடமைகளை இரவிலும் பங்கிட்டுப் பணியாற்றியவன் வாழ்க்கைப் பாதையில், சுசீலா என்ற வசந்தம் வழி மறித்தது. இரண்டு பிள்ளைகள் ஒழுக்கம் தழுவிய கல்வியைக் கற்று முடித்தனர். பெற்றோர் ஒருவர் பின் ஒருவராகக் குறைவின்றிக் கண் மூடினர். இல்லற வாழ்வில் பிள்ளைகள் இடம் பெயர்ந்தனர். காரியம் யாவினும் கை கொடுத்த மனைவியைக் காலம் பறித்தது. ஆனந்தமூர்த்தி தந்த வாடகைப் பணம் அடையாறு அநாதை இல்லத்துக்குச் சென்றது. ஓய்வூதியத்தில் குறைந்த தேவையில் குமரேசன் வாழ்க்கை நிறைவாக நடந்தது.

மழை இன்னும் விட்டபாடு இல்லை. காரிருள் கலைந்து வானம் மங்கலாக வெளுத்து இருந்தது. சோடை இழந்திருந்த சூரியனை மேகங்கள் லேசாக மறைத்து இருந்தன. ஆனந்தமூர்த்தி வாசற் கதவைத் திறந்து பேப்பர் பையன் வீசி எறிந்திருந்த காலைப் பத்திரிகையைக் கையில் எடுத்தார். தாள்கள் தண்ணீரின் ஈரத்தில் நனைந்துஇருந்தன. ஒவ்வொரு நாள் காலையிலும் பத்திரிகையோடு மாடிப் படி ஏறி, ஆனந்தமூர்த்தி அறைக் கதவைத் தட்டுவார்.அற்புதமான சுவையுடன் குமரேசன் கலந்துகொடுக்கும் காபி அறை முழுவதும் மணக்கும். இருவரும் காபி குடித்தபடி பத்திரிகைச் செய்திகளைப் பரிமாறிக்கொள்வார்கள். கொஞ்ச நேரத்தில் இருவரும் சுந்தரம் ஐயர் தெருவில் தெற்கு நோக்கி நடந்து, சாய்பாபா கோயிலைக் கடந்து, தெப்பக் குளத்தைச் சுற்றிக்கொண்டு, கபாலீஸ்வரர் கோயில் கோபுரத்தைக் கையெடுத்துக் கும்பிட்டு 'ஈஸ்வரா’ என்று வாய்விட்டுக் குரல் கொடுத்து, சாந்தோம் சர்ச் வழியாகக் காலாற மெதுவாகச் சென்று, காந்தி சிலை அருகில் அரைமணி நேரம் கண்களை மூடியபடி அமர்ந்திருப் பார்கள். மாலையிலும் இதே காரியம்தான் மாறாமல் நடக்கும்.

குமரேசன்தான் மாதம்தோறும் பேப்பர் காசு கொடுப்பார். ஆனந்தமூர்த்தி வீட்டில் இருந்து எதையும் அவர் ஏற்றது இல்லை. 'குமரேசா! சுயமரியாதை இழந்தவன்தான் உன்னுடன் நண்பனாக நீடிக்க முடியும்’ என்று ஆனந்தமூர்த்தி சொல்லும்போது, 'ஆனந்தம்! சரியோ, தவறோ கொடுப்பவனாகவே இறுதி வரை இருந்துவிட்டுப் போக எனக்கு நீ உதவியாக இருக்கக் கூடாதா?’ என்று அவர் சிரிப்பார்.

நண்பனின் வறட்டுப் பிடிவாதங்களை நெஞ்சில் அசைபோட்டபடி மாடிக்குச் சென்ற ஆனந்தமூர்த்தி, அச்சத்தில்உறைந்து போனார். அறைக் கதவு திறந்துகிடந்தது. மழைச் சாரலின் தெறிப்பில் தரையில் ஈரம் படர்ந்திருந்தது. சடலம்போல் படுக்கையில் அசைவற்று நீட்டிப் படுத்து இருந்த குமரேசன் முகத்தில் ஆழ்ந்த அமைதி படிந்திருந்தது. கலவரத்துடன் 'குமரேசா’ என்று குரல் கொடுத்த படி அவருடைய கைகளை ஆனந்தமூர்த்தி பற்றியபோது அவை தொய்ந்து விழுந்தன. பதற்றத்துடன் உடலை அசைத்துப் பார்த்தார். எந்த உணர்வும் இல்லை. மூக்கில் விரல்வைத்தார். சுவாசத்துக்கான சுவடே இல்லை. அறுபது ஆண்டு ஆழமான நட்பு அறுபட்டுவிட்டது. நெஞ்சில் உறைத்ததும் ஆனந்தமூர்த்தியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 'குமரேசா’ என்ற அவருடைய அழுகுரல் வீதி எங்கும் நிறைந்தது.

இறப்புச் செய்தி சேர்ந்ததும் மாலைக்குள் உறவுகள் கூடிவிட்டன. மகனும் மகளும் தந்தையின் மார்பில் முகம் புதைத்துக் கண்ணீர் சிந்தினர். 'ஆனாலும், இந்தப் பெரியவருக்கு இவ்வளவு வைராக்கியம் இருந்திருக்கக் கூடாது’ என்று விமர்சனங்கள் எழுந்தன. 'அமர வாகனம்’ வாசலில் வந்து நின்றது. தாங்க முடியாத சோகத்துடன் ஆனந்தமூர்த்தி நெஞ்சை அழுத்திப் பிடித்தபடி ஓர் மூலையில் அமர்ந்து இருந்தார். 'ஆனந்தம்! என் தந்தை என்னிடம் பிரதிபலன் எதிர்பார்த்து அன்பு செய்தார். நான் என் பிள்ளைகளிடம் இன்று வரை எதையும் எதிர்பார்க்கவில்லை, இந்தப் பையில் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. பத்திரமாக எடுத்து வை. எப்படியும் உனக்கு முன்னால் நான்தான் போவேன். இந்தப் பணத்தில் பிணம் சுமக்கும் வாகனத்தை வரவழை. கொடுக்கும் காசுக்கு அவர்களே என் சடலம் சுமந்து மின் தகனம் செய்துவிடுவார்கள். போகும்போதும் நான் யாருக்கும் கடன்வைக்க விரும்பவில்லை’ என்று குமரேசன் சொல்லிவிட்டுப் பணம் கொடுத்த சம்பவம் அவர் நினைவில் நின்று நெஞ்சைக் கிழித்தது.

ஈமக் கடன்கள் நியதி மாறாமல் நடந்தேறின. சேகண்டியும் சங்கும் வீதியில் விட்டுவிட்டு அலறின. மாடி அறையில் இருந்து சடலம் அப்புறப்படுத்தப்பட்டது. மேசையின் மேல், படத்தில் இருந்த மகாத்மா மட்டும் குமரேசன் வாழ்வுக்கு மௌன சாட்சியாகத் தனித்துவிடப்பட்டார். அமர வாகனம் மயிலாப்பூர் மயான பூமியை அடைந்தது. குமரேசனின் பொய்யுடல் மின் தகன மேடையில் கிடத்தப் பட்டது. பிணத்தின் முகத்திலும் மார்பிலும் ஈக்கள் மொய்த்தன. அருகில் நின்ற ஆனந்த மூர்த்தியின் விழிகளில் இருந்து நீர் அருவியாக வழிந்துகொண்டு இருந்தது.

குமரேசனின் வறட்டுத்தனமான வாழ்க்கை வைராக்கியத்தை ஆனந்தமூர்த்தி அழுதபடி நெஞ்சில் அசைபோட்டார். 'எவ்வளவு பெரிய முட்டாள்தனம்’ என்று யோசித்தார். 'பெற்றவர்கள் வெறும் பணத்தையா பிள்ளைகளிடம் எதிர்பார்க்கின்றனர்? வயோதிகத்தில் வந்து தாங்குவார்கள் என்றா பிள்ளைகளிடம் பெற்றோர் பாசத்தைப் பொழிகின்றனர்? பாசத்தின் பகிர்தல் அல்லவா அன்பின் ஆதர்சம். மடியில் தலைவைத்துப் பிள்ளை படுத்தால் போதுமே ஒரு தாய்க்கு, ஒரு வேட்டியும் சட்டையும் அன்போடு மகன் வாங்கித் தந்தால் தந்தையின் மனம் ஆனந்தக் கூத்தாடுமே. காந்தியம்கற்ற இந்த முட்டாளுக்கு ஒரு சாதாரண வாழ்க்கை உண்மை சாகும் வரை விளங்காமல் போய்விட்டதே. என்னால் முடிந்ததை எல்லாம் என் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டேன். எதையும் அவர்களிடம் இருந்து எனக்குஎன்று எடுத்துக்கொள்ளவில்லை என்று பெருமை பேசுவானே. கொடுப்பதுஇன்பம் என்றால், அன்பை இன்னொரு உயிரிடம் இருந்து பெறுவதுதானே பேரின்பம். அன்பைத் தருவதும் பெறுவதும் அல்லவா வாழ்க்கை நதியின் இரு கரைகள். பெற்றோர் குழந்தைகளைப் பேணுவதும் பிள்ளைகள் பெற்றோரைப் பராமரிப்பதும் நம் பண்பாடு செதுக்கிக்கொடுத்த பாரம் பரியச் சங்கிலி அல்லவா. ஒற்றைச் சிறகோடு ஒரு பறவை பறக்கக்கூடுமா? தவறான வாழ்க்கைப் புரிதலில் குமரேசன் ஒற்றைச் சிறகோடு ஒடுங்கிப் போய்விட்ட வனா?’ நினைக்க நினைக்க ஆனந்தமூர்த்திக்கு நெஞ்சம் அதிகமாக வலித்தது.

'எல்லோரும் கடைசியாக ஒரு முறை முகத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்’-வெட்டியானின் குரல் வேகமாக ஒலித்தது. மின் தகன மேடையில் சடலம் கிடத்தப் பட்டது. குமரேசனின் பிள்ளையும் ஆனந்த மூர்த்தியும் மின் கலத்தின் வாய்ப்புறத்தில் ஆற்ற முடியாமல் அழுதபடி சடலத்தைத் தள்ளியதும், 'அரை மணி நேரம் காத்திருந்து சாம்பலை வாங்கிச் செல்லுங்கள்’ என்ற அறிவிப்பு எழுந்தது. அவ்வளவு நேரம் அழுதுகொண்டு இருந்தவர்கள் விழிகளைத் துடைத்துக்கொண்டனர். ஆனால், வானம் மட்டும் விடாமல் இன்னும் அழுதுகொண்டு இருந்தது!

(இந்தக் கதை எந்தப் புத்தகத்தில் வந்தது என்பது தெரியவில்லை... எனக்கு நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார் - நன்றி - பிரசுரித்த பத்திரிக்கைக்கும்... அனுப்பிய நண்பருக்கும்.... எழுதிய திரு. தமிழருவி மணியனுக்கும்...)
-'பரிவை' சே.குமார்

பத்து ரூபாயில் சிறுநீரக கல்லுக்கு சிறந்த தீர்வு..!


இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இந்த உபயோகமான தகவலை முகநூல் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டார்கள்.இப்போது நம்மில் நிறைய நண்பர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது .

அதனால் இது போன்ற நல்ல தகவல்கள் நாம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று இன்று ஒரு தகவல் பக்கத்தில் பதிவு செய்கிறேன் உங்களுடைய நண்பர்களுக்கும் கட்டாயம் பகிர்வு செய்யுங்கள்

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.

வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்

நன்றி : இன்று ஒரு தகவல்

நன்றி : மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு...

-'பரிவை' சே.குமார்

திங்கள், 28 ஜனவரி, 2013

பழைமை நினைவுகள் - சுஜாதாவின் அருமையான கட்டுரை

   மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில்  நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன  வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம்  என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். "யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று  கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன். "எதுக்குப்பா?" "தொடுங்களேன்!" சற்று வியப்புடன்  தொட்டார். "மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’என்று, விரல்களைச்  சொன்னபடி அசைத்தார். "ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி  வெச்சுண்டு ஒரே ஒரு தடவை  லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..." "இது என்னப்பா ட்ரிக்கு?" என்று  அப்படியே செய்தார். "உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!"  என்றேன். அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"  "ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து  உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன்.
    
    தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச்  சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு  வருவதில்லை.  ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார... அந்த  நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி  நேரம்  யோசித்தேன், கிட்டவில்லை. மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன்.  "ரம்யா கிருஷ்ணன்" என்றாள்.
    
    இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது  தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது  மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்,  சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில்  "ஜகதலப்ரதாபன்"  சினிமா போனது, ஒண்ணாம்  கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க்  கொடுத்தது,  பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம்  தெளிவாக  ஞாபகம் உள்ளது.
    
    ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள்  ஞாபகங்களின் வடிவம்தான்! டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும்,  பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து  வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல்  பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
    
    மெரீனாவில்,  ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன்.  இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே,  பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து  வருகின்றன.
    
    ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா,  பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை...  நாம  தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து,  ‘பரவால்லை... இன்னும்  கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம்  வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன்,  உடம்பு  சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
    
     சயின்ஸ் அதிகம்  படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன.  யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர்  கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இ டையில்  எங்கோ இருக்கிறது!".
    
    ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின  வேறுபாடுகளையும்,  அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன்  உணர்வுக்கும்,  நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு  நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல்  படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித்  தெரியாதவனாக இருந்திருக்கிறேன்.
    
    மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை.  பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்.  தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும்  புதிய  பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி.  மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல்  கஷ்டப்படுவேன்.
    
    இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல  யோசிக்கும் போது, சட்டென்று  ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன்.
    
    சொர்க்கம், நரகம்  இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன்.  அப்படி  ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச்  சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.
    
    ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில்  காலை  எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன்.
    
    வாழ்க்கையே  இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
    
    இன்றைய  தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில்  உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல்  இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது,  இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது  படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது  லிஸ்ட்டை  விட்டுப் போய்விட்டது.
    
     தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும்  டாக்டருக்குப் போல,  மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச்  சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று >> நிறுத்திவிட்டாள்.  பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல்  வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு  தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட்  கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல,  கேரளா  ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.
    
    அம்பலம்  இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷமாக  உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி  என்ன நினைக்கிறீர் கள்?" என்று. நீண்ட யோசனைக்குப் பிறகு பதில்  அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க  வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!"  என்று.
    
    என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.  பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டிலிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை  யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள்  நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள்  அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள்.
    
     ‘ரோஜா’  வெளிவந்த  சமயத்தில், பெங்களூருக்குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை  ஜலஹள்ளியில்,  ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள்.  "ஆ"  கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண்டும்" என்று  திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப்  படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என்  வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில்  இருந்து  முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள்.
    
     மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால்  பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்..!

(குறிப்பு : எனக்கு நல்ல கட்டுரைகளை மின்னஞ்சலில் அனுப்பி படிக்கத் தூண்டும் அன்பு நண்பரும் அண்ணனுமாகிய் திரு. சுபஹான் அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பிய பகிர்வு இது - நன்றி அவருக்கும் அவருக்கு அனுப்பிய நண்பர்களுக்கும்)

-'பரிவை' சே.குமார்.