மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

எங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... அருவியும் நகைச்சுவையும்

யுகாவின் பேச்சுக்குப் பின்னர் கவிதைப் போட்டி பரிசளிப்பு நேரம் என்பது சினிமாவில் இடைவேளை விட்டது போல் இருக்கைகள் எல்லாம் காலியாக, பார்வையாளர்கள் எல்லாம் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பலாமென வெளியில் சென்றிருந்தார்கள். அரங்குக்கு வெளியே மணிமேகலைப் பிரசுரம் புத்தக விற்பனை செய்து கொண்டிருந்து. நாமெல்லாம் பிடிஎப் வாசிப்பாளன் என்பதால் அந்தப் பக்கம் செல்லவில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

பேச்சாளர்கள் ஒவ்வொருவராக திருமதி. சித்ரா அவர்களின் அழகிய சிறிய அறிமுகத்துடன் மேடை ஏற, தமிழ் மொழியின் அடையாளமாக இன்றும் நிலைத்து நிற்பது பழஞ்சுவை இலக்கியம், பண்பாட்டின் வெளிப்பாடு, திரைக்கவிஞர்களின் ஆளுமை என்ற தலைப்பிலான விவாத அரங்கம் ஆரம்பித்த போது மணி 8.30க்கு மேல்.


விழாத் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் மூவரையும் பேச விட்டு, அவர்கள் பேசியதில் இதுதான் சரியென்ற முடிவை நான் சொல்லப் போவதில்லை. ஒவ்வொருவரின் பேச்சும் ஒவ்வொரு விதமானது... அதை நீங்கள் ரசிக்க வேண்டும்... இதில் இவர்தான் பெரியவர் அவர்தான் பெரியவர் என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது என்றவர் மோகன சுந்தரம் ஐயா, பர்வீன் சுல்தானா மேடத்துடன் நிறைய நிகழ்ச்சிகளில் பேசியிருப்பதாகவும் இசைக்கவி ஐயாவுடன் பேசியதில்லை இதுதான் முதல் மேடை என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் செய்திருக்கும் அவரின் பேச்சைக் கேட்க ஆவலாக இருப்பதாகச் சொன்னார்.

நான் இப்போதே பேசிவிடுகிறேன் முடிவில் பேசப் போவதில்லை என்றவர், நம்ம ஊரில் இருந்து இங்கு ஆட்களைக் கூட்டி வரும்போது அவர்களைப் பேச விட்டுக் கேட்க வேண்டும். அவர்களின் தமிழைப் பருக வேண்டும். பத்து நிமிடம் பதினைந்து நிமிடம் என பேச விடுவது சரியல்ல. இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெறுவதால் ஐந்து மணிக்கே ஆரம்பிக்கலாம் தவறில்லை என்றார். அவர் சொன்னது உண்மையே ஒவ்வொருவருக்கும் 15 நிமிடங்களே ஒதுக்கப்பட்டிருந்தது. மணி ஒலித்தபின்னர் கொஞ்சம் இழுத்து 20 நிமிடங்கள் ஆக்கினார்கள்.

பர்வீன் சுல்தானா அவர்களுக்கு மட்டுமே சற்று நேரம் கூடுதலாக கொடுக்கப்பட்டது என்றாலும் அவர் நிறைவாய் பேச முடியாத சூழல். குற்றாலக் குறவஞ்சிக்குள் மழையாய் நுழைந்தவர் காற்றுக் கலைத்த மேகம் போல வெளியேற, நேரம் கருதி முடித்தது சரியே எனக் கிளம்பினாலும் மனசு மட்டும் அவர் அதிக நேரம் பேசவில்லையே என்று வருந்தியது. அவருக்காக மட்டுமல்ல மோகன சுந்தரம் ஐயா சிரிப்பொலியோடு இன்னும் கொஞ்சம் இருக்க முடியவில்லை... ரமணன் ஐயாவின் கம்பீரக் குரலிலான தமிழை கொஞ்சம் கூடுதலாக சுவைக்க முடியவில்லை. ஆம் பேசிய நால்வருக்குமே நேரச் சிக்கல் பேச்சைக் குறைக்க வைத்துவிட்டது.

தமிழன் மட்டுமே தான் வாழும் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்து வைத்திருக்கிறான். உலகில் வேறு எங்கும் பிரிக்கப்படவில்லை என்று சொன்ன தமிழருவி அவர்கள், காற்றை நான்கு வகையாக அதாவது வடக்கே இருந்து வருவது வாடை, தெற்கே இருந்து வருவது தென்றல், கிழக்கே இருந்து வருவது கொண்டல், மேற்கே இருந்து வருவது கோடை எனப் பிரித்து வைத்திருக்கிறோம் என்று சொன்னவர் பேசும் மொழியை இயல், இசை, நாடகமென மூன்று வகையாகப் பிரித்தவன் வாழ்வை அகம், புறம் என இரண்டாகவும் ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாகவும் பார்த்தவன் நம் தமிழன் என்றார்.

அகநானூறு புறநானுறு குறித்து விரிவாகப் பேசினார். புறநானுற்றில் 398 பாடல்கள் மட்டுமே இருக்கு. 267, 268 எண் கொண்ட இரண்டு பாடல் இல்லை... காணாமல் போச்சு.. நம்ம குழந்தைகளுக்கு பழந்தமிழ் இலக்கியங்களைச் சொல்லிக் கொடுக்கணும்... இல்லேன்னா ரெண்டு போனது மாதிரி நாம எல்லாத்தையும் தொலச்சிட்டு நிப்போம் என்று வருத்தப்பட்டார்.

Image may contain: 1 person, smiling, sitting and hat

கண்ணதாசனைப் பற்றி வாலி 'வாலிப வாலி' என்னும் புத்தகத்தில் எழுதியிப்பதைச் சொல்லி, தனக்குப் போட்டியாளராய் இருந்தவரைப் பற்றிச் சிலாகித்துப் பேச பெரிய மனசு வேண்டும் என்றார். கண்ணதாசனுடனான மோதலுக்குப் பின்னே எம்.ஜி.ஆர்.தான் வாலியை வளர்த்து விட்டவர் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

பேசிக் கொண்டிருக்கும் போது முன்வரிசை வி.ஐ.பி. களுக்கு சாப்பிட எதோ கொடுக்கப்பட மைக்கில் தட்டி கூப்பிட்டு நான் பேசும் போது எந்தச் சத்தமும் இருக்கக்கூடாது என்று நினைப்பவன்... இப்படிக் கொடுப்பதெல்லாம் எனக்குப் பிடிக்காது என அவர்களைப் போகச் சொன்னார். அரங்கம் கைதட்டலால் நிறைந்தது என்றாலும் கொடுத்தவர்கள் ஒரு ஓரமாக ஒதுங்கி கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

இனி வரும் காலங்களில் மேடைகளில் சங்க இலக்கியங்களைப் பற்றி மட்டுமே பேசப்போவதாகச் சொன்னார். பாரதியின் கண்ணம்மா பற்றி பேசினார். கண்ணம்மா காதலி அல்ல அவள் குழந்தை என்பதை இசைக்கவி பேசும் போது சொன்னார். மயக்கமா கலக்கமா பாடல் பற்றிய பேச்சு இசைக்கவியின் பேச்சில் எழுந்தபோது அதை எழுதியவர் கண்ணதாசன் என்றவர் அந்தப் பாடலை எப்போது கேட்டாலும் அழுதுவிடுவேன் என்றார்.

யுகபாரதியின் பேச்சைச் சிலாகித்தார்.   இன்னும் இன்னுமாய் நிறையப் பேசினார் ஒரிடம் தவிர அரசியலுக்குள்ளேயே போகவில்லை அவர். இது இலக்கிய மேடை என்பதில் துளியும் பிசகாது அரை மணி நேரத்தில் இலக்கிய மழை பொழிந்தார். அதனால்தானே அவர் தமிழருவி ஆனார்.

அவரைத் தொடர்ந்து பேச வந்தவர் நகைச்சுவை அரசர் மோகன சுந்தரம் ஐயா அவர்கள். இந்த மனுசன் வாயைத் திறந்தாலே சிரிப்புத்தான். தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னவர் உங்களுக்கு கவலையில்லை நீங்க சித்திரை ஒண்ணு கொண்டாடிட்டீங்க... எங்களுக்குத்தான் பிரச்சினையே... சித்திரை ஒண்ணுன்னு இவன் சொன்னான். அடுத்த ஆட்சி மாறினப்போ தை ஒண்ணுன்னான்... அப்புறம் மறுபடியும் சித்திரை ஒண்ணுன்னான்... இனி ஆட்சி மாறி வேற யாராச்சும் வந்து டிசம்பர் 12-ன்னு சொன்னாலும் நாங்க ஏத்துப்போம்... இல்லே மஹாளய அமாவாசைதான் தமிழ் வருடப்பிறப்புன்னு சொன்னாலும் நாங்க ஏத்துப்போம். எங்களுக்குத் தேவை ஒரு நாள் விடுமுறை... சாயந்தரம் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாய் புதுப்படம் விளம்பரங்களுக்கு இடையே அவ்வளவுதான் என்றார்.

டாய்லெட்டை இப்ப நாம ரெஸ்ட் ரூம் என மாற்றி வைத்திருப்பதை வைத்து அவர் நகைச்சுவையாகப் பேசிய போது சிரிப்பொலி அடங்கவே இல்லை. அலுவலக செகரெட்டரி காலையில் வந்தவுடன் டாய்லெட் போக, மேனேஜர் வந்தவர் அவள் எங்கே எனக் கேட்க, மற்றொருவர் ரெஸ்ட் ரூம் போய்விட்டதாகச் சொன்னதும் என்ன வேலைக்கு வந்த உடனேயே ரெஸ்ட் ரூமா என்று திட்டிய போது சார் ரெஸ்ட் ரூம்ன்னா டாய்லெட் என்று சொல்ல வேண்டியிருந்ததைச் சொல்லி, டாய்லெட்டை ரெஸ்ட் ரூம் ஆக்கிட்டீங்க... அப்ப மத்தியானம் சாப்பிட்டு உட்காந்திருக்க ரூமுக்கு என்ன பேர் என்றார்.

ஆங்கிலம் பேச முடியாமல் தவிப்பதைச் சொல்லி, அப்படிப் பேச வேண்டும் என்றால் மனசுக்குள் வார்த்தைகளைக் கோர்த்து  அட்சர சுத்தமாகப் பேச, மனசுக்குள் பேசிப் பார்த்து பேச வேண்டியிருப்பதை நகைச்சுவையாய் சொன்னவர் தன்னிடம் மேலதிகாரி, நீ வெளியில பட்டிமன்றமெல்லாம் பேசுறியாமே இங்க அதெல்லாம் பேசக்கூடாது என்று சொன்னதாகவும், ஒரு முறை குட்டியானையில் மோதி ஸ்கூட்டர் பழுதானபோது மேனேஜருக்கு போனில் கூப்பிட்டு ஆங்கிலத்தில் பேச சார் குட்டியானை என ஆரம்பித்து அடுத்தடுத்த என்ன வரி போடுவது என்ற சிக்கலில் எப்பவும் சொல்லும் சார் ஐ ஆம் நாட் பீலிங் வெல் எனச் சொல்லி வைத்ததாய்ச் சொன்னார்.

திருமணத்துக்கு தன்னை மனைவி அனுப்பி வைப்பதையும் அங்கிருப்பவர்கள் தன்னை விடுத்து வீட்டில் கூட்டிவரலையா என்று கேட்பதையும் அப்ப நான் வீடில்லையாடா என அவர் மனசு கேட்பதையும் வீட்டுக்கு வந்ததும் உங்க சித்தப்பா என்னைக் கேட்டாரா...? உங்க அத்தை என்னைக் கேட்டாரா என மனைவி கேட்பதையும் நகைச்சுவையுடன் சொன்னார்.

இடையில் தமிழனாய் இருந்தால் ஷேர் பண்ணு என்பதையும் திருவள்ளுவருக்கே தாடி வச்சவனுங்க நாம என்பதையும் சாமியார்கள்தான் வாழ்கிறார்கள் என்பதையும் அவருக்கே உரிய நகைச்சுவையில் சொல்லி சிரிப்புக் கடலில் ஆழ்த்தினார். அவர் பேசும் போது சிரிப்பொலி தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. அன்றைய பண்பாடு, இன்றைய பண்பாடு குறித்தெல்லாம் பேசினார்.

அவர் பேசிய பின்னர் பலர் மேடைகளில் நகைச்சுவையை வலிந்து திணிப்பார்கள். அது நமக்கு சிரிப்பைக் கொடுக்காது ஆனால் சண்முக சுந்தரம் அவர்கள் பேசுவது எல்லாமே நகைச்சுவையாய்... நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தும் என்று சொன்ன தமிழருவி அவர்கள் இசைக்கவி ரமணன் ஐயா அவர்களை அழைக்க, கம்பீரமாய் எழுந்து வந்தார் அந்த மீசைக்காரர். அவரது வெண்மை நிற மீசையும் உயரமும் நடையும் திரு.பொன்னீலன் ஐயாவை கண் முன் நிறுத்த, தன் பேச்சை ஆரம்பித்தார்.

சென்ற பதிவில் போட்டிருந்த நடனப் போட்டோவில் இருக்கும் பையன் குறித்து கனவுப்பிரியன் அண்ணன் முகநூலில் சிலாகித்து எழுதி எனக்குக் கற்றுக்கொடுத்த ஆசானே நன்றி என முடித்திருந்தார். உண்மைதான்... தன் எதிரே ஒரு கூட்டம் இருக்கு... தன்னைச் சுற்றி சில பெண் குழந்தைகள் ஆடுகிறார்கள் என்பதெல்லாம் பற்றி கவலை கொள்ளாது பாடலில் மட்டுமே கவனம் கொண்டு மிகச் சிறப்பாக ஆடினான். பாரதி மேடைகளில் தொடர்ந்து ஆடுபவன்... பரதம் அவனிடம் பரவசப்பட்டு நின்றது. வாழ்த்துக்கள் சகோதரா.

(தொடரும்)

படங்கள் உதவி : சுபஹான் அண்ணன்.
-'பரிவை' சே.குமார்.


சனி, 21 ஏப்ரல், 2018

எங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... யுகா கலக்கல்....

மீரத்தின் நேற்றைய மாலையை அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பு தமிழ் அருவியில் நனையும் மாலையாக ஆக்கியது. முதலில் அவ்வமைப்புக்கும் சிறப்பாக வழிநடத்தும் திரு.இராமகிருஷ்ணன் மற்றும் திரு. கலீல் அவர்களுக்கு நன்றி.

Image may contain: 4 people, people smiling, people standing

மாலைதான் நிகழ்வு என்றாலும் மதியமே நெருடாவிடம் இருந்து அழைப்பு, நாங்கள் இலக்கியவாதிகள் எல்லாம் தலைமை இலக்கியவாதியுடன் இணைந்து உங்க பக்கமாக காளியின் காதலனைத் தேடி வருகிறோம்... நீங்களும் இணைந்து கொள்ள வேண்டுமென... இலக்கியவாதிகள் சந்திப்பில் எளக்கியவாதிக்கென்ன வேலை என முயற்சிக்கிறேன் என்று சொல்லி முடித்துக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து அழைத்து... பின்னர் தலைமை இலக்கியவாதி சொன்னால்தான் வருவான் என முடிவு செய்து அவரிடம் போட்டுக் கொடுக்க, 'நாங்க வர்றோம்... நீ கீழே நிக்கிறே' என்பதாய்  தலைமை முடித்துக் கொள்ள, சரி தலைமை அலைனில் இருந்து வந்திருக்கிறாரே ஒரு எட்டு பார்த்து விட்டு வந்துவிடலாம் என படுத்திருந்தவன் எழுந்து ஓட காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய்ட்டாங்க சாப்பாட்டுக் கடைக்கு... அறையில் வைத்த பிரியாணி, இந்த வாரமும் ஓடிட்டியாடான்னு கேட்டது எனக்கு நல்லாவே கேட்டது.

பின்னர் ஒரு பெரிய இலக்கியக் கும்பலுடன் எளக்கியவாதியாய் ஒரு ஓரமாக நின்று அவர்கள் அடித்து ஆட, பார்த்துக் கொண்டிருந்தேன். இலக்கியமாப் பேசியதால் பசிக்க, அப்படியே கடைக்குள் நுழைய நல்லதொரு சாப்பாடு... அதன் பின் கனவு அண்ணன் இல்லத்தில் ஒரு சிறிய தூக்கம்... மாலை காபி முடித்து விழா நடந்த சூடான் கலாச்சார மய்யத்துக்குச் செல்லும் முன்னரே இடம் பிடித்து வைத்திருப்பதாக நண்பர் நந்தா மெஜேச்சியிருந்தார். அங்கு சென்றால் நிறைய நட்புக்களைக் காண முடிந்தது. இந்த துபாய் மக்களில் பாதிப்பேருக்கு நம்மளைத் தெரியலை... இலக்கியவாதிகளை மட்டுமே தெரிந்தது. சசிக்குமார் அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறேன் போல அருகில் வந்து கை கொடுத்தார். ஆர்.ஜே. நாகா பேசினார். 

எப்பவும் சரியான நேரத்துக்கு ஆரம்பிக்கும் பாரதி அமைப்பினர் நேற்றைய விழாவை 7 மணி வாக்கில்தான் ஆரம்பித்தார்கள். தமிழ்தாய் வாழ்த்து, வரவேற்புரை என எல்லாம் முடிந்து எப்பவும் போல் ஆஷா நாயர் அவர்களின் திறமையான பயிற்சியில் பாரதியாரின் இரண்டு பாடலுக்கு மிகச் சிறப்பான நடன நிகழ்வுடன் விழா விரிய ஆரம்பித்தது.

விழா நாயகர்களை அறிமுகம் செய்தவர் வசீகரா பாட்டை யுகபாரதி எழுதியதாகச் சொன்னதும் அதெப்படி அது தாமரையாச்சேன்னு யோசிக்க பக்கத்தில் இருந்த இலக்கியவாதி ராஜாராம் அவர்கள் வசியக்காரி பாடல், புதிய கீதை படத்துக்கு எழுதியது என விளக்கினார். விளக்கமாய்ச் சொல்லும் பால்கரசு, நௌஷாத், ராஜாராம் போன்றோர் அருகிலிருந்ததால் விபரங்களை அறிய முடிந்தது.

அதன்பின் சில மரியாதைகள் செய்யப்பட்டு மேடை கவிஞர் யுகபாரதியின் கையில் கொடுக்கப்பட்டது... சிறப்புரை அவர்தானே.... அதனால் அவர்தானே முதலில் இறங்க வேண்டிய மட்டையாளர்... கவிஞர், ஆயிரம் பாடலுக்கு மேல் எழுதியவர் என்பதால் 'என் தமிழ்த்தாயே... பாரதியே.... ' என்றெல்லாம் பேசுவாரோ என்ற பய யோசனை தோன்றினால் நம்ம பக்கத்துல உக்காந்து இந்தருய்யா... நான் இப்படித்தான் எனப் பேசுவது மாதிரி பேச்சை ஆரம்பித்தார் கவிஞர்.

முதலில் பாரதியின் பாடலைப் பாடி... எல்லா மேடையிலும் இந்தப் பாடலைத்தான் பாடுவேன்... மேடை அலங்காரப் பேச்செல்லாம் பேசுவதில்லை என்று நகைச்சுவையாய் தொடங்கியவர், பல்லாங்குழியின் வட்டம் பாடலை சிநேகா தொலைக்காட்சிகளில் ஆடி ஆடி கோடிகளில் சம்பாதிக்க பாட்டெழுதிய தனக்கு அடுத்த பாட்டு வரவேயில்லையே என்ற ஏக்கம் கொண்டு புலம்பியதைச் சொன்னபோது அரங்கம் சிரிப்பொலியுடன் கலந்த கைதட்டலில் அதிர்ந்தது. 

லிங்குச்சாமி இவரிடம் பிரபலமான பாட்டை எழுதினே... அடுத்த பாட்டுக்கான சான்ஸ் உனக்கு வரவேயில்லை என்றபோது நீங்க கூடத்தான் நல்ல படமெடுத்தீங்க... எட்டு மாசமா சும்மாதானே இருக்கீக என்று இவர் சொன்னதும் உனக்கு ஏன் பாட்டெழுத வாய்ப்பு வரலைன்னு இப்பத்தான்யா தெரியுதுன்னு அவர் சொன்னதை நகைச்சுவையோடு சொல்லி சிரிப்பைத் தொடர வைத்தார்.

 

இவருக்கும் வித்யாசாகருக்குமான முதல் சந்திப்பைச் சொன்னபோது அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. மனுசனுக்குள்ள ரெண்டு மூணு வடிவேலு இருக்கானுகய்யா... பேசப் பேச சிரிப்பு... இவரு பாட்டெழுதுறதோட சிரிப்பு நடிகர்களுக்கு வசனமும் எழுதலாம். இப்ப அதுதானே ரொம்ப பஞ்சமா இருக்கு... வறட்டுச் சிரிப்பை வச்சி நம்மளைக் கொல்லுறானுங்க.

லிங்குச்சாமியின் அடுத்த படத்தில் பாட்டெழுத, அதாவது தனது இரண்டாவது பாட்டு வாய்ப்புக்காக இசையமைப்பாளர் வித்யாசாகர் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார் கவிஞர். வித்யாசாகர் ஆர்மோனியப் பெட்டியோடு காதல் செய்து கொண்டு தலைவரை ஒரு பொருட்டாகவே மதிக்கலையாம்... இவரும் ரெண்டு மூணு கவிதை தொகுப்பு போட்டவரு... ரெண்டு தொகுப்புக்கு தமிழக அரசு விருது பெற்றவரு... (இதையெல்லாம் அவரு திரும்பத் திரும்ப சொல்லும்போது அரங்கெங்கும் நிறைந்திருந்தது சிரிப்பலை.) அப்படியிருந்தும் மனுசன் மதிக்கலை. இவரு செருமிப் பார்த்து சார் எனக் கூப்பிட்டு தன்னுடைய கவிதை தொகுப்பைக் கொடுத்தப்போ இடது கையால் வாங்கி தூக்கிப் போட்டுட்டாராம். பதினெட்டு வருசத்துக்கு முன்னே இன்னைக்கு சிரிச்சிச் சிரிச்சிப் பேசுறவருக்கு அன்னைக்கு முறுக்கிக்கிட்டு நிக்கிற வயசுல்ல... கோபம் கடுமையா வந்திருக்கு இருந்தாலும் அடக்கிக்கிக்கிட்டு மீண்டும் சார் போட, வித்யாசாகர் பேசியிருக்கிறார். என்ன சொன்னாராம் தெரியுமா..?

உம்பாட்டே தப்பாயிருக்கேய்யா... அதென்ன பல்லாங்குழியின் வட்டம்... பல்லாங்குழி வட்டமாய்யா... அது குழிவட்டம்... எதோ எழுதணுமின்னு எழுதக் கூடாதுன்னு சொன்னாராம். இவருதான் ஒரு பாட்டுல பேமஸான மகாகவியாச்சே.... ரெண்டு மூணு புத்தகம் வேற போட்டவரு... அதுல தமிழக அரசு விருது வேற... இதெல்லாம் இருந்தும் மதிக்காம பேசுனா... அதுபோக கொடுத்த புத்தகத்தை இடது கையால தூக்கிப் போட்டுட்டு பாட்டுல பிழை கண்டுபிடிச்சா... இவருக்கு கோபம் வந்து தாமரைக் கன்னம், நிலா முகம்ன்னு எல்லாம் எழுதுறோம்... தாமரைக் கன்னமா சார்... நிலா முகமா சார்ன்னு கேட்டதும் இசையமைப்பாளருக்கு கோபமாயிருச்சாம். லிங்குச் சாமி சாரைக் கூப்பிட்டு இந்தப் படத்துக்கு இந்தப் பையன் எழுதணுமான்னு கேட்டாராம்.

அப்ப லிங்குச்சாமி சென்டிமெண்டா இவர் எழுதினா நல்லாயிருக்குன்னு நினைக்கிறேன்னு சொன்னாராம்... அப்பத்தான் நம்ம பாட்டுமேல நம்பிக்கை வச்சி எழுதச் சொல்லலை... சென்டிமெண்ட் மேலதான் நம்பிக்கை வச்சிருக்காங்கன்னு தோணுச்சாம் இவருக்கு.... பின்னர் இது ஒரு காதல் கடிதம் எழுதுவது போலான பாட்டு அன்புள்ளன்னு எல்லாம் எழுதக்கூடாதுன்னு ஏகப்பட்ட விதி முறைகள் சொல்ல, கடைசியில் இவர் லிங்குச்சாமியிடம் உங்க படத்துக்கு இவர் இசையமைக்கணுமான்னு யோசிச்சிக்கங்க சார்ன்னு சொல்லிட்டு வந்துட்டாராம்.

பின்னர் லிங்குச்சாமி உன்னோட திறமைமேல அவருக்கு இருக்கும் எண்ணத்தை மாற்ற நல்ல பாட்டா எழுதி காலையில கொண்டு வான்னு சொல்ல இரவெல்லாம் உக்காந்து இலக்கியங்கள் வாசித்து 'காதல் பிசாசே'ங்கிற வார்த்தையை எழுதிட்டு அதுக்கு மேல என்ன எழுதன்னு தெரியாம தூங்கிட்டாராம்... பின்னர் காலையில் நண்பருடன் பேசிய போது கிடைத்த வார்த்தை அடுத்த வரியாக, பயணப்பட்ட போது ஸ்கூட்டர் விபத்துக்குள்ளாக ஓட்டிய நண்பருக்கு அடிபட்ட போதிலும் நீ போய் பாட்டைக் காட்டு என்று நண்பர் சொல்லிய போது சில வரி உதயமாக, பாட்டை எழுதிக் கொண்டு போய் லிங்குச்சாமி முன்னர் நின்றார். இந்தப் பாடலில் முதல் இரண்டு வரி போக மீதமெல்லாம் வித்யாசாகரை திட்டியதுதான் என்றும் சொன்னார்.

லிங்குச்சாமி பாட்டை பார்க்காமலே என்னய்யா ஒரு பக்கம் மட்டும் எழுதியாந்திருக்கே என்றபோது இதுக்கு மேல் எழுத முடியாது சார் என்று சொன்னதும் இவரை வித்யாசாகரிடம் அனுப்பி வைக்க, அவரோ முதல் நாள் போல் ஆர்மோனியப் பெட்டியுடனான காதலில் இருக்க, பாட்டைக் கொடுக்க எழுதிட்டிக்கிட்டு வந்துட்டியா என கேட்டபடி வாசித்தவர் , இவரை அருகழைத்து எழுந்து அருமையா இருக்கு என கட்டிக் கொண்டாராம். மேலும் உன்னோட முதல் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... அதை நேற்றே சொல்லியிருந்தால் பெரிய கவிஞன் என்ற மிதப்பில் இப்படி எழுதியிருக்கமாட்டாய். அதான் அப்படிப் பேசினேன் என்று தட்டிக் கொடுத்தார். அவருக்கு முன்னூறு பாடலுக்கு மேல் எழுதியதாய்ச் சொன்னார்.

மேலும் பாரதியின் அக்கினிக் குஞ்சொன்று கண்டேனையும்... கண்ணதாசனயும் வியந்து பேசினார். பாரதி மீதான தன் காதலையெல்லாம் வார்த்தைகளாக்கி வசீகரிக்க விட்டார். கண்ணம்மா பாடல் எழுதியதைக் குறித்து சிலாகித்துப் பேசினார். அந்தப் பாடலை தன் மகளை மனதில் வைத்து அவளுக்காக எழுதிய பாடலே என்றார். கண்ணம்மா பாடல் தாமரை எழுதியதென நினைத்துக் கொண்டிருந்த திருமதி. பர்வீன் சுல்தானா அவர்களுக்கு இன்றுதான் நான் எழுதியது என்பது தெரியும் என்றவர், பாரதி நட்புக்காக அமைப்பு ஐந்தாவது முறையாக பர்வீன் அவர்களை அழைத்திருப்பது நன்றாக பேசினார் என்பதாலா அல்லது இந்த முறையாவது நன்றாக பேசிவிடுவார் என்பதாலா என கிண்டலாய் இடைச் செருகினார்.

மன்மத ராசா போன்ற பாடல்களை எழுதினாலும் முடிந்தளவு நல்ல பாடல்களை எழுதுவதாகச் சொன்னார். இசையமைப்பாளர் இமானுக்கு முன்னூற்றம்பது பாட்டுக்கு மேல் எழுதியிருப்பதாகவும் இதுவரை அவரும் இவர் நல்ல பாடலை எழுதிவிடுவார் என்று வாய்ப்புக் கொடுப்பதாகவும் இவரும் அவர் நல்ல டியூனாகப் போட்டு விடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சிரிப்போடு சொல்லிவிட்டு இதெல்லாம் யூடிப்புல போடும் போது எடிட் பண்ணிருங்க... நாளை மறுநாள் விசுவாசம் கம்போசிங் இருக்கு என்றார்.

நிறைய விஷயங்கள் பேசினார்... நிறைவாய்ப் பேசினார்... ஒரு கவிஞன் இவ்வளவு நகைச்சுவையாய்... அவையை அதிர வைக்கும் சிரிப்பொலியையும் கைதட்டலையும் தொடர வைத்தபடி பேசுதல் என்பது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. சிறப்பான பேச்சு... இடையில் வண்ணங்கள் பற்றி பேசும் போது கருப்பு அரசியலும் எட்டிப் பார்த்தது. மனைவிக்கு சமையலில் உதவி செய்வேன் என கவிதை சொன்னது... இதுவரை அவருக்கு உதவாதது... அதை அவர் கேட்டபோது நீ என்னைக்கு நல்லா சமைக்கிறியோ அன்னை உதவுறேன்னு சொன்னது என்ன இவரின் பேச்சின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சிரிப்புக்கும் சிந்தனைக்கும் பஞ்சமில்லை.

இவரின் பேச்சுக்குப் பின்னே கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு கொடுக்கப்பட்ட போது சொதப்பி விட்டார்கள். சரியான முறையில் பரிசுக்குறியவர்களின் பெயர்களை எழுதி வைக்காமல் பரிசு பெறாத மூவருக்கு பரிசு கொடுத்து விட்டார்கள். முதலாமர் பரிசு வாங்க மேடையில் நிற்கும் போது பரிசு பெற்ற கவிதையில் கவர்ந்த வரிகள் என கவிஞர் சொன்னபோதுதான் விவரம் வெளிச்சமானது.

இரண்டாவது பரிசு பெற்றவர் அரசியல்வாதிபோல் கூட்டத்தில் இருந்து மேடைக்குப் போகும் போதே கையெல்லாம் தூக்கிக் கும்பிட்டு அலப்பறை கொடுத்துச் சென்றார். ஐந்து நிமிடத்தில் அது திரும்பப் பெறப்பட அவரின் முகத்தில் மகிழ்ச்சி மறைந்து சோகம் குடி கொண்டது. மூன்றாம் பரிசு எனச் சொல்லி மேடைக்கு அழைத்து பரிசு கொடுத்த போதே சுதாரித்திருக்கலாம். பாவம் மூவருக்குமே மிகுந்த வருத்தம். இனி வரும் விழாக்களில் இப்படியான நிகழ்வு இல்லாதிருக்கட்டும்.

இதன் பின் மேடை திரு. தமிழருவி மணியன், ஐயா மோகன சுந்தரம், ஐயா ரமணன், திருமதி. பர்வீன் சுல்தானா வசம் ஒப்படைக்கப்பட்ட போது மணி 8.30க்கு மேல்.... 

தமிழ் மொழியின் அடையாளமாக இன்றும் நிலைத்து நிற்பது என்ற தலைப்பில் தலைவராக தமிழருவி வீற்றிருக்க, பழஞ்சுவை இலக்கியங்களே என பர்வீன் அவர்களும் பண்பாட்டின் வெளிப்பாடே என மோகன சுந்தரம் அவர்களும் திரைக்கவிஞர்களின் ஆளுமையே என இசைக்கவி ரமணன் அவர்களும் பேச ஆரம்பித்தார்கள். கவிதை போட்டி சொதப்பல் மறந்து பேச்சை ரசிக்க அரங்கம் அமைதியானது.

(தொடரும்)

படங்கள் (நன்றி) : சுபஹான் அண்ணன்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 18 ஏப்ரல், 2018

இன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)

பிரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது. இதில் வழக்கமான கிராமத்துப் பாணி இருக்காது. வாசித்து உங்க கருத்தைச் சொல்லுங்க.

அப்படியே நம்ம ஸ்ரீராம் அண்ணாவின் எங்கள் பிளாக்கில் நேற்றைய கேட்டு வாங்கிப் போடும் கதையில் எனது 'மஞ்சநெத்திப் பூ வாசம்' வந்திருக்கு. அங்கு கருத்துச் சொன்ன அனைவருக்கும் இங்கும் நன்றிகள். நீங்களும் வாசிங்க... எனக்கென்னவோ கதையை இன்னும் பட்டை தீட்டியிருக்கலாமோ எனத் தோன்றியது என்பதே உண்மை. அண்ணனிடம் சொன்னபோது எனக்குப் பிடித்திருக்கிறது என எடுத்துக் கொண்டார்கள். சிலருக்கு சுத்தமான கிராமத்து வாசனை பிடிக்க வாய்ப்பில்லை. எப்படியிருந்தாலும் நான் எழுதியதில் இதுவும் ஒரு சிறந்த கதையே.... நன்றி ஸ்ரீராம் அண்ணா.

******

இன்னார்க்கு இன்னாரென்று...

னி...

என் வாழ்வில் மறக்க முடியாத பெயர். ஏறத்தாழ இருபத்து மூன்று வருடங்களுக்கு முன் எனது மூன்றாண்டு கல்லூரிக் காலத்தை அன்பால் நிறைத்தவள். வசந்தம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்க வைத்தவள்... தினம் தினம் சந்தோஷம் பூக்க வைத்தவள்.

அவளைக் கடைசியாகப் பார்த்து பதினெட்டு வருசமாச்சு... அதாவது ஒன்னறை மாமாங்கம்... இனி அவளை சந்திக்கவே போவதில்லை என்று நினைத்தவன் அவளை மறக்காது மனசுக்குள் பூட்டி வைத்திருந்தேன். வேதனையான தருணங்களில் அவளின் நினைவுகளை மெல்ல மீட்டெடுப்பேன்... என் வேதனைகள் கரைந்து போகும்.

காரைக்குடி செல்ல மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் நின்றவன், ஏதேச்சையாக திரும்பிப் பார்க்க எனக்குப் பின்னே சற்று தள்ளி அவள் நின்றாள்... தனியாக அல்ல... இன்னும் இரண்டு பெண்களுடன் ஏதோ சுவராஸ்யமாய் பேசியபடி... என் கண்ணை என்னாலேயே நம்ம முடியாமல் மீண்டும் அவளைப் பார்த்தேன் அவள்... அவளேதான்... அதே வசீகரிக்கும் முகம்... அதே மின்னல் வெட்டும் கண்கள்... கொஞ்சம் குண்டாகத் தெரிந்தாள்.

அவளிடம் பேசுவோமா வேண்டாமா என யோசிக்க ஆரம்பித்தேன் நான்.

பாலா...

இந்தப் பெயரை என்னால் எப்படி மறக்க முடியும்... என் கல்லூரி நாட்களை வசந்தமாக்கியவன்... இவன் எனக்கானவன் என்று பெருமிதம் கொள்ள வைத்தவன். எந்தப் போட்டி என்றாலும் வகுப்பறைக்கு வரும் வெற்றி பெற்றவர்கள் பெயரைத் தாங்கிய அறிவிப்பில் அவன் பெயரில்லாது வராது. ஒவ்வொரு முறை அவன் பெயரை வகுப்பறையில் ஆசிரியர் உச்சரிக்கும் போது எனக்குள்ளே சந்தோஷம் சதிராடும்...

ரொம்ப ஜென்டிலானவன்... கல்லூரி இறுதிநாளில் யாருமற்ற வேப்பமரத்தில் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்... பிரிவுச் சுமையை தூக்க முடியாமல் கண்ணீர் எட்டிப் பார்த்தது... ஆறுதலாய் கரம் பற்றி அவசரமாய் நெற்றியில் ஒரு முத்தம் பதித்தான்... அதுவே காதலின் முதலும் கடைசியுமான முத்தம்... இப்போது நினைத்தாலும் என் நெற்றி ஒரு முறை சிலிர்த்து அடங்கும்.

பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் கையறு நிலையில் என்னிடம் விடைபெற்றவனை அதன் பிறகு பார்க்கவேயில்லை... இதோ என் முன்னே நிற்கிறான்... என்னை அவன் பார்க்கிறான்... நானும் அவனைப் பார்த்துவிட்டேன்... ஆனால் பார்க்காதது போல் நிற்கிறேன்.

அவன் அருகில் செல்வதா வேண்டாமாவென யோசிக்கலானேன்.

சுபத்ரா...

கல்லூரி முடித்து எம்.ஏ முடிக்கும் வரை கனியுடனான காதல் உயிர்ப்போடு இருந்தது. அதன் பின்னர் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். வேலையும் இல்லாமல்... குடும்பச் சூழலும் சரியில்லாமல் அவளை கூட்டிக் கொண்டு போய் என்ன செய்வது என்ற கையறு நிலையில் அவளைப் பிரிந்தவன், இந்த பதினெட்டு வருடத்தில் ஓடி.. ஓடி... ஓரிடத்தில் செட்டிலாகிவிட்டேன்.

அம்மாவின் நச்சரிப்புக்காகவும் வயது போய்க் கொண்டிருந்தாலும் தூரத்துச் சொந்தத்தில் நான் மணமுடித்தவள்தான் சுபத்ரா... பள்ளி ஆசிரியை... பல நேரங்களில் வீட்டிலும் ஆசிரியை போல் கேள்வி மேல் கேள்வி கேட்பாள்.

கனி குறித்து அவளுக்குத் தெரியும்... பல நேரங்களில் என்ன அவளை மறக்க முடியலையோ என்று வேல் பாய்ச்சவும் தவறமாட்டாள்... இருந்தாலும் என் மீது பாசம் கொண்டவள்.

ணிகண்டன்

எம்.எஸ்.ஸி முடித்தவுடன் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்போது பாலாவுக்கும் வேலை இல்லை... கஷ்டப்படுற குடும்பம்... இரண்டு தங்கைகள்.. ஒரு தம்பி... விவசாயியான அப்பாவைவிட படித்து முடித்த அண்ணனையே பெரிதும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

என் நிலையை அழுகையோடு சொன்னபோது அவன் சூழலைச் சொல்லி எப்படி முடியும் என எதிர்க் கேள்வி கேட்டான். அந்த நிலையில் எத்தனை வருடமானாலும் காத்திருப்பேன் என்று என்னால் சொல்ல முடியாத நிலை. என் காதலைப் புதைத்து அம்மாவின் அண்ணன் மகனான மணியின் மனைவியானேன்...

மணி பக்கா ஜென்டில்மேன்... என்னைத் தாங்குதாங்கென்று தாங்குவார்... இன்று வரை அப்படித்தான்... அவரிடம் ஏனோ என் காதலை இன்று வரை சொல்லவில்லை... சொல்லி என்னாகப் போகுதுன்னு விட்டுட்டேன்... அதுவும் நல்லதுக்குத்தான்... ஒருவேளை சொல்லியிருந்தா அவரு மனசுக்குள் சில வன்மங்கள் தோன்றியிருக்கக்கூடும்.

1993... செப்டெம்பர் 17

கல்லூரி முதல் வருடம்... பள்ளிக்கும் கல்லூரிக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ஒரு சில போட்டிகளுக்கு வெளியூர்களுக்கு மாணவ மாணவிகள் இணைந்து செல்லும் போது என்னைக் கவர்ந்தவள் கனி... ஆரம்பத்தில் சாதாரணமாக பேச ஆரம்பித்தவன், அவளை தினமும் பார்க்கணும் ஏதாவது பேசணுங்கிற நிலமைக்கு தள்ளப்பட்டேன்.

இதெல்லாம் வயசுக்கோளாறு... ஏதோ அந்தப்புள்ள நல்லாப் பேசுது.. அதைக் கெடுத்துக்காதே என்று நண்பர்கள் சொன்னாலும் அவள் மீதான காதல் மாறவில்லை... ஒருநாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது என் காதலைச் சொல்லிவிட்டேன்.

அந்த நாள்தான் செப்டெம்பர் 17.

1993 செப்டெம்பர் 25

எனக்கு நல்லா நினைவிருக்கு செப்டெம்பர் 17, எப்பவும் போல பாலா கூட பிரண்ட்லியா பேசிக்கிட்டு இருந்தேன். என்னைக்கும் இல்லாம அன்னைக்கு அவன் ரொம்ப பதட்டமா இருந்தான்...  என்னாச்சு... பதட்டமா இருக்கே என்று கேட்டதற்கு அதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு மழுப்பினான். ஆனால் ஏதோ ஒண்ணு இருக்குன்னு தோண, நான் சொன்னாத்தான் பேசுவேன்னு சொன்னேன். உடனே அவன் என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டான்.

பிரண்ட்லியா பேசினதை காதல்ன்னு சொல்லிட்டானேன்னு எனக்குக் கோபம்... என்னோட மனவலி கண்ணீரா மாறிடுச்சு... ச்சீ... உங்கூட பழகுனேன் பாரு... இனி எங்கிட்ட பேசாதேன்னு சொல்லிட்டு கண்ணீரோட எழுந்து போயி சைக்கிளை எடுத்துக்கிட்டு வேகமாப் பொயிட்டேன்.

அதுக்கு அப்புறம் ஒரு வாரமா அவனைப் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை...  அவனைப் பார்க்காமல் பேசாமல் நகர்ந்த அந்த ஏழுநாள் எனக்கு மிகுந்த வேதனையையும் அவன் மீதான பெருங் காதலையும் கொடுத்துச்சு. அன்னைக்கு காலையில கல்லூரி கிளம்பும் போது எனக்குள்ள அவன் நிறைந்திருந்தான்...

அவனைப் பார்த்து நான் காதலைச் சொன்ன நாள் செப்டெம்பர் 25.

பிச்சைக்காரன்

என்னருகே வந்த பிச்சைக்காரன் ‘தர்மம் பண்ணுங்க சாமி’ என்றான். நான் ஒன்றும் பேசாமல் நிற்கவும், ‘உங்க பிள்ளை குட்டி நல்லாயிருக்கும் சாமி’ அப்படின்னு சொல்ல சிரித்தபடி ‘சில்லறை இல்லய்யா’ என்று விரட்டினேன்.

அவன் என்னை ஒரு மாதிரி பார்த்தபடி ‘சில்லறை இல்லாம வெள்ளையுஞ் சொள்ளையுமா ஏன் வாறீங்க சாமி’ என்று முணங்கியபடி அவளை நோக்கி நகர்ந்தான்.

நாங்க காதலிக்கும் போது பலமுறை பிள்ளையார்பட்டி கோவிலுக்குப் போயிருக்கிறோம். ஒருமுறை பிச்சைக்காரன் ஒருவன் எங்களிடம் வந்து யாசகம் கேட்க, நான் சில்லறை இல்லை என விரட்ட, ‘தாயி... மகாலெட்சுமி... தர்மம் போடு தாயி’ன்னு சொன்னதும் அவ பர்ஸில் இருந்து சில சில்லறைக் காசை பிச்சைப் பாத்திரத்தில் போட்டாள்.

'தாயி... இந்தாளையா கட்டிக்கப் போறே... சரியான கஞ்சனா இருப்பான் போல... பாத்து தாயி... கஞ்சி ஊத்தாம விட்டுடப் போறான்...' சொல்லிட்டு திரும்பிப் பாக்காம பொயிட்டான்.

கனி என் தோள் சாய்ந்து வெகுநேரம் சிரித்தாள்.

பூக்காரி

மாட்டுத்தாவணி பஸ் நிலையம் முழுவதும் பூக்கடைகள் நிறைந்திருக்கும். எப்போது மதுரை வந்தாலும் மல்லிகைப் பூ நிறைய வாங்கிக் கொள்வேன். எனவே எனக்கு வேண்டிய பூ வாங்கி வைத்திருந்தேன்.

கைகுழந்தையுடன் வந்த பூக்காரி 'அம்மா பூவாங்கிக்கங்கம்மா... இதை அப்படியே எடுத்துக்கிட்டு முப்பது ரூபாய் கொடுங்க போதும்’ என்றாள். ‘இல்லம்மா நான் வாங்கிட்டேன் எனக்கு வேண்டாம்’ என்றதும் ‘பச்சைக் குழந்தைம்மா... இது மட்டும்தான் பாக்கி குடுத்துட்டா கிளம்பிடுவேன்’ என்று கெஞ்சினாள்.

அவளைப் பார்க்க பாவமாய் இருக்க அதை மொத்தமாய் வாங்கி மூன்றாய் கட் பண்ணச் சொல்லி மூணு பாலிதீன் பையில் போட்டு வாங்கி உறவுக்கார பெண்களிடம் இரண்டைக் கொடுத்து விட்டு ஒன்றை எனது பேக்கில் வைத்துக் கொண்டேன்.

கல்லூரியில் ஒரு விழா... அதற்கு வீட்டிலேயே பூவாங்கி வைத்துக் கொண்டு சென்றேன்... கல்லூரி வாசலில் நின்ற பாலா என்னிடம் ஒரு பாலித்தீன் பையை நீட்ட, என்னது என்றேன்... மல்லிகைப்பூ என்றான்... எதுக்கு என்றதும் உனக்குத்தான் என்றான்.

நான் நிறைய வைத்திருக்கிறேன் என்றதும் இதையும் வச்சிக்க பூத்தானே... இன்னும் அழகா இருப்பே என்றான். அவனின் மனசு வருந்தக் கூடாது என்பதற்காக  வாங்கி அவன் முன்னே தலையில் வைத்துக் கொண்டேன்.

பாலா

பிச்சைக்காரன் முணங்கிக் கொண்டே சென்றதும் நான் கையிலிருந்த பாக்யாவைப் புரட்டி பாக்யராஜின் கேள்வி பதில்களை வாசிக்க ஆரம்பிக்க, ஏனோ மனசு அதில் ஒட்டவில்லை... கண் அவளை மீண்டும் மீண்டும் பார்க்க முயற்சித்தது. என் மனதின் ஓரத்தில் இருந்த அவள் இப்போது மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தாள்.

இன்று அவள் வேறொருவரின் மனைவி என்றாலும் அன்று அவள் என் காதலி, அவளைப் பார்க்கும் வாய்ப்பு இனி ஒரு தடவை கிடைக்குமோ என்னவோ...? யார் அறிவார்...? பதினெட்டு வருடத்திற்குப் பின்னர் சந்திக்கிறேன்... ஏறத்தாழ எங்களின் நாப்பதுகளில்... பக்குவப்பட்ட வயதில் பார்த்தும் பார்க்காமலும் செல்வது அழகல்லவே... இன்றைய காதல் தோல்விகள் கொலையில் முடிகின்றன... அன்றைய காதல்கள் அப்படியில்லையே... தோற்றாலும் பல இதயங்களில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றது.

என் உயிர் நண்பன் ராகவனின் காதல் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்தபோது அவனை வேறொரு ஊரில் கொண்டு வைத்து பத்திரமாக பார்த்துக் கொண்டதில் எனக்கும் பங்கு இருந்தது... அந்த ஒரு வாரம் என்னால் மறக்க முடியாத நாட்கள். இன்று ராகவன் தன் முன்னால் காதலியின் குடும்பத்தில் ஒருவனாய்... அவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்பவனாய் இருக்கிறான்... இதுதான் காதல்... அவர்கள் அரிவாள் எடுக்கும் போது அவனும் அரிவாள் எடுக்க நினைக்கவில்லை... காலங்கள் கடக்க அன்பு என்னும் ஆயுதத்தை மட்டுமே பிரயோகித்தான் அதனால்தான் அவனின் காதல் இன்று நட்பாய்... உறவாய் தொடர்கிறது.

இப்படித்தான் சுபாவைக் காதலித்த முருகன் அவளை ஒருமுறை பேக்கரியில் பார்த்திருக்கிறான்... அவள் குழந்தைகளோடு நின்றிருக்கிறாள்... இவன் தன் மகனோடு போயிருக்கிறான்... பார்த்தும் பார்க்காதது போல் வந்துவிட்டானாம். என்னிடம் சொல்லிப் புலம்பினான்... ஏன்டா பேசலைன்னு கேட்டதுக்கு என்னத்தைப் பேச சொல்றே... நான் நல்லாயிருக்கியான்னு கேட்டு அவ நல்லாயில்லைன்னு சொல்லிட்டான்னா மனசு ஒடைச்சிடுமேடா... அதான் பேசலைன்னு சொன்னான். இப்படியும் சிலர்... ஒருவேளை அவள் பார்த்திருந்தால் அவனுடன் பேசியிருக்கக் கூடும்.

மனசு பழங்கதைகளை நினைத்த போது அருகருகே பார்த்தும் பார்க்காமல் செல்வது அழகல்ல என்பதால் கனியை நோக்கி நகர்ந்தேன்.

னி

உறவுகளிடம் பேசினாலும் மனம் மட்டும் எனக்கு முன்னே கொஞ்ச தூரத்தில் நின்ற பாலா மீதே இருந்தது. பார்த்திருந்தால் கண்டிப்பாக பேசியிருப்பானே... பார்க்கவில்லை போலும் என்று நினைத்தேன். எங்கள் காதலின் போது வந்த ஊடல்களின் முடிவில் எல்லாமே பாலாதான் முதலில் பேசியிருக்கிறான்.

எத்தனை வருசமாச்சு..? இப்போ கணவன், குழந்தைகள் என காதல் விரிந்து பரவிக்கிடக்க, எப்போதும் மனதின் ஓரத்தில் அவன் இருந்து கொண்டுதான் இருக்கிறான். காதலித்து பிரிந்தவர்கள் மறந்துவிட்டு வாழ்கிறேன் என்று சொன்னால் அது சுத்தப் பொய்... மனதுக்குள் மறைத்து வைத்துத்தான் வாழ முடியும்.

நட்புக்கள் யாரேனும் அவர்கள் குறித்துப் பேசினாலும், அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை கண் பார்த்தாலும் அந்தக் காதல் வெளியில் வந்து விளையாடி கண்ணில் ஆட்டம் கட்டி கண்ணீரை வெளியேற்றும். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

அவனைப் பார்த்தும் பார்க்காமல் செல்ல மனசு இடம் கொடுக்கவில்லை... என்னோட காலேஜ் மெட் நிற்கிறார் பார்த்துட்டு வாறேன் என உறவுகளிடம் சொல்லிவிட்டு பாலாவை நோக்கி நகர்ந்தேன்.

பேருந்து

இரண்டு அரசு பேருந்து சென்ற பின்னர் கிளம்பிய தனியார் பேருந்தில் ஏறினோம். மதிய நேரம் என்பதால் கூட்டம் அதிகமில்லை. பெரும்பாலான சீட்டுக்கள் காலியாக இருந்தன. இதே பேருந்து காலையும் மாலையும் கால் வைக்க இடமில்லாமல் ஆட்களை ஏற்றி வரும்.

மூன்று பேர் அமரும் இருக்கையில் உறவினர் இருவரும் அமர்ந்து கொள்ள, அவர்களுக்குப் பின்னிருக்கையில் கனி அமர்ந்து கொண்டு என்னை அமரச் சொன்னாள்.

பேருந்தில் ஏறும் முன்னரே இருவரும் குடும்பம் குழந்தைகள் என எல்லாம் பேசிவிட்டோம். இனி பேச ஒன்றுமில்லை என்றாலும் அவளருகே அமர்ந்தேன்.

காதலிக்கும் போது இதே பேருந்தில் பல முறை பயணித்திருக்கிறோம்... அப்போதெல்லாம் இரண்டு பேர் அமரும் இருக்கையில்தான் அமருவோம்... அப்போதெல்லாம் அவளின் சேலை முந்தானையோ அல்லது சுடிதாரின் துப்பட்டாவோ என் கையில் விளையாடும்... என் தோள் சாய்ந்து தூங்கும் போது காற்றிலாடும்  அவளின் கேசம் என் முகத்தில் விளையாண்டு கவிபாடும். சேலையின் முந்தானையை இழுத்து அவள் மடியில் கிடத்திக் கொண்டாள்.

இன்றோ இருவருக்கும் இடையில் ஒருவர் அமரும்படியான இடைவெளி... அந்த இடைவெளியில் சுபத்ரா அமர்ந்திருப்பதாக நான் நினைத்துக் கொண்டேன்... அவள் கூட மணிகண்டன் அமர்ந்திருப்பதாக நினைத்திருக்கக் கூடும்.

அப்போது பேருந்தில் இன்னார்க்கு இன்னாரென எழுதி வைத்தானே தேவன் அன்று என்று பாடிக் கொண்டிருந்தது.
-‘பரிவை’ சே.குமார்.

திங்கள், 16 ஏப்ரல், 2018

இப்படியும் சிலர் (அகல் மின்னிதழ்)

சித்திரை மாத அகல் மின்னிதழில் வெளிவந்த எனது கட்டுரை உங்கள் பார்வைக்கு... கட்டுரையை வெளியிட்டதற்கும் தொடர்ந்து எழுத வாய்ப்பளிப்பதற்கும் நண்பர் சத்யா அவர்களுக்கு நன்றி. 

அகலில் வாசிக்க "இப்படியும் சிலர்"

*****

ம்மைக் கடந்து செல்லும்... நாம் கடந்து போகும்... மனிதர்களில் சிலர் அவர்களது செய்கையால் நம் மனதுக்குள் வந்து விடுவார்கள். தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த மனிதர்களைப் பற்றி சத்யா அவர்கள் 'முகங்கள்' என்னும் தொடராய் முத்துலெட்சுமி ராகவன் அவர்களின் தளத்தில் எழுதி வருகிறார். இதையே என்னை நேசித்த மனிதர்களைப் பற்றி 'வெள்ளந்தி மனிதர்கள்' என்னும் தலைப்பில் என் தளத்தில் எழுதி வந்தேன். என்னை நேசிப்பவர்களை எழுத எழுதக் குறையாது என்றாலும் என்ன காரணத்தாலோ தொடர் பாதியில் நிற்கிறது.

வாழ்வின் நிமித்தம் ஓடிக்கொண்டிருக்கும் போதும் இங்கும் அன்றாடம் நிறைய முகத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். அதில் சில முகங்கள் அவர்களின் செய்கையால் மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறார்கள். இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் பல முகங்கள் பரிதாப முகங்களே. சமீபத்தில் முகநூலில் ஒரு கவிதை வாசித்தேன். கவிதையின் சாராம்சம் வெளிநாட்டு வாழ்க்கைக்காரர் இருவரின் மனைவியர் பற்றியதாய்... இறுதியில் இரண்டு மனிதர்களும் ஒரே கட்டிட வேலை இவரை மனதை அவர் அறியாது அவர் மனதை இவர் அறியாது வேலை பார்ப்பதாய் முடியும். அதுதான் நிதர்சனம். இனி கட்டுரைக்குள் வருவோமா?

நாங்கள்... நாங்கள் என்றாலும் நானும் இன்னொரு தமிழ் நண்பரும் காலையில் பேருந்து ஏறும் இடத்தில் சற்றே கூட்டம் இருக்கும். இங்கு பேருந்தில் இடம் பிடிக்க வேண்டும் என ஜன்னல் வழியாக துண்டு போடுதல், குழந்தையை வீசுதல் எல்லாம் இருக்காது. அடித்துப் பிடித்து ஏறுதலும் இல்லை என்பதால் ஒவ்வொருவாராக ஏறுவார்கள். இடையில் திடீரென ஒருத்தன் வர ஆரம்பித்தான். அவன் பாகிஸ்தானி, கையில் வைத்திருக்கும் லேப்டாப் பேக்கில் மதிய சாப்பாட்டை வைத்துக் கொண்டு ஏறுவான்.

பேருந்து வந்ததும் ஓடி படியில் நின்று கொள்வான். யாராவது அவனுக்கு முன்னே ஏற முனைந்தால் இடித்துத் தள்ளுவான். ஏறி அமர்ந்து மொபைலில் முகம் பார்த்து அதை அஷ்டகோணலாக்கி என்னென்னமோ செய்வான். அவன் இருக்குமிடத்துக்கு அருகில் அமர்பவர்கள் அவனுடன் உரசி விடாமல் இருக்க, ரோபோ போல் உட்கார்ந்து கொள்வான். அவனைப் பார்த்தாலே பேருந்தில் பயணிக்கும் யாருக்குமே பிடிப்பதில்லை. ஒருநாள் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற போது மற்றவர்களுக்கு வந்த சிரிப்பைப் பார்க்க வேண்டுமே! இப்படியும் சிலர்.

இங்கு பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் இல்லை என்றாலும் ரோட்டைக் கடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதையில் எப்போதேனும் சிலர் அமர்ந்து பிச்சை எடுப்பார்கள். சில நாட்கள் முன்னர் ஒருவர் என்னமோ பைபாஸ் சர்ஜரி செய்தது போல் மிகப் பெரிய பேண்டேஜ் ஒட்டி அது தெரிய, சட்டை கழட்டி விட்டு உட்கார்ந்திருந்தான். பார்க்கும் போதே கடுப்பு தான் வந்தது.

அதன் பின்னான ஒருநாள் அலுவலகம் விட்டு பேருந்தில் வந்து இறங்கி நடந்த போது ஒரு அரபிப் பெண்மணி, அரபி என்றாலும் உள்ளூர்க்காரி அல்ல வேறு நாட்டிலிருந்து வந்தவள்தான். ஓரு ஓரமாக உட்கார்ந்து முன்னே ஒரு பிளாஸ்டிக் கவர் வைத்திருந்தார். அதில் சில சில்லறைகளும் கிடந்தன. அவளருகே ரோஜா மலர் போல ஒரு பெண் குழந்தை, மூணு நாலு வயதிருக்கும்... அமர்ந்திருந்தது. அம்மா என்ன செய்கிறாள் என்பது தெரியாமல் அந்தக் குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணோ மகளுக்கு முத்தம் கொடுத்து அரபியில் ஏதோ சொன்னாள். உண்மையில் அவள் வாழ்வில் ஏதேனும் கஷ்டம் இருக்கலாம் இருப்பினும் குழந்தையை அருகமர்த்தி பிச்சை எடுத்தது மனசுக்கு வருத்தத்தையே கொடுத்தது. இப்படியும் சிலர்.

கழிப்பறைகளை அடிக்கொரு தரம் சுத்தம் செய்ய அதற்கென பணியாட்கள் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் இந்தியர்களும் (குறிப்பாக தமிழர்கள், தெலுங்கர்கள்) வந்கதேசத்தவர்களும் இந்த வேலைக்கு வருவார்கள். அவன்தான் சுத்தம் செய்கிறானே என்ற நினைப்பில் பாத்ரூமைப் பயன்படுத்துபவர்கள் அலங்கோலம் செய்து விட்டுப் போவதைப் பார்க்க வேண்டுமே... சுத்தம் செய்பவனும் மனிதன் தானே என்ற எண்ணம் ஏற்படுவதேயில்லை. அதுவும் சிலர் பாத்ரூம் போய்விட்டு தண்ணீர் விடுவதே இல்லை. பாகிஸ்தானிகளோ வெஸ்டர்ன் டாய்லெட்டில் மேலே ஏறி இருந்து... வயல்ல நாத்துப் பறிச்ச மாதிரியே போட்டு வச்சிருப்பானுங்க... இப்படியும் சிலர்.

எங்கள் அறை இருக்கும் கட்டிடத்தில் ஒரு மலையாளி ஹோட்டல். அங்கு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு தமிழர் வேலை செய்கிறார். ஆரம்பத்தில் அவரும் மலையாளி என்றுதான் நினைத்தேன். தினம் செல்வதால் அவருடன் பழக்கம் ஏற்பட, அவர் வேலூர்க்காரர் என்பதை அறிய முடிந்தது. ஒரு ஆள், எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பார். மிகவும் சுறுசுறுப்பானவர். ஊருக்குப் பேத்தியைப் பார்க்கப் போறேன் என்று சொன்னபோது அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஊருக்குப் போய் திரும்பி வந்து விட்டார். இப்போது பம்பரமாக சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியும் சிலர்.

இதுவும் பேருந்து ஏறும் இடத்தில் பார்க்கும் நிகழ்வுதான். சில நாட்களாக நானும் நண்பரும் நிற்கும் இடத்துக்கு அருகில் ஒரு பிலிப்பைனி வந்து நிற்பதும், பெண்கள் சிகரெட் விற்பனையில் இருக்க, சில ஆண்களே பெண்கள் சிகரெட்டை பிடிக்கும் போது இந்தப் பெண்ணோ ஆண்கள் சிகரெட்டை வாயில் வைத்து ஊது ஊது என்று ஊதுவாள். தள்ளி வாங்க விட்டா புகையால நம்மளைக் குளிப்பாட்டிருவா போலன்னு நண்பர் சொல்வார். அதே இடத்தில் சற்று தள்ளி ஒரு பெண்ணும் (ஆந்திரா) மூணு பசங்களும் அடிக்கும் லூட்டி இருக்கே.... அப்பப்பா எல்லாரும் அவர்களைத்தான் பார்ப்பார்கள். நம்ம ஊரா இருந்தா என்ன தங்கச்சி இப்பதான் லாத்துதுன்னு கொமட்டுல ரெண்டு குத்துவிடுவாங்க... இங்க எல்லாம் சகஜம்தானே... அதனால் அவங்க ஆட்டம் நிற்பதே இல்லை. இப்படியும் சிலர்.

இங்கு மலையாளியுடன் வேலை பார்த்தாலும் எகிப்துக்காரனுடன் வேலை பார்ப்பது என்பது மிகவும் சிரமம். அவர்கள் வேலையே பார்க்கமாட்டார்கள். வேலை பார்ப்பவனை ஏறி மேய்வதும், போட்டுக் கொடுத்தலுமே அவர்கள் வேலை. அப்படிப்பட்ட கூட்டத்தில் முன்பு ஒரு நண்பருடன் வேலை செய்தேன். அவன் வேலை செய்யமாட்டான் என்றாலும் நமக்கு மிகவும் நெருக்கமாய் உதவி செய்பவனாகவும் இருந்தான். இப்போது ஒரு நண்பர் அதே போல்... மிகவும் நல்லவர்... இவர் எகிப்துக்காரரா என்று நினைக்கத் தோன்றும். இப்ப புதிதாய் ஒருத்தனும் எங்க புராஜெக்ட்டுக்கு வந்திருக்கான். இவன் நான் எகிப்துக்காரன்டா என வந்த உடனே நிரூபிச்சிட்டான். இப்படியும் சிலர்.

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்... பார்த்த பல மனிதர்களை. நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

பூமாராங் (காற்றுவெளி மின்னிதழ்)

சித்திரை மாத காற்றுவெளி மின்னிதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. சிறுகதையை வெளியிட்ட ஆசிரியர் முல்லை அமுதனுக்கு நன்றி.

இதழுக்கான இணைப்பு : http://kaatruveli-ithazh.blogspot.co.uk/

*****



பூமாராங்
'இந்த அநியாயம் எங்கயாச்சும் நடக்குமா என்ன... இப்படிப் பண்ணிட்டாளே... இவளெல்லாம் பொம்பளப் புள்ளதானா...' காயத்ரிக்கு மனசு கிடந்து அடித்துக் கொண்டது. 

'சை என்ன ஜென்மங்களோ... இவளுகளுக்கு எல்லாம் எப்படி இப்படித் தோணுதோ... இதுகளை எல்லாம் செங்கக் காலவாயில வச்சி எரிக்கணும்...' மனசுக்குள் திட்டிக் கொண்டே சுபத்ரா கொடுத்த தண்ணீரை மடக் மடக்கென்று குடித்தாள். 

வாயில் ஊற்றிய நீர் வெளியில் வடிந்து மார்ப்புச் சேலையை நனைத்தது.

"ஏன்டி... தண்ணிய மெதுவாத்தான் குடிச்சா என்ன... அப்புடியென்ன அவசரம்... எந்த ரெயிலப் பிடிக்கப் போறே.... நல்லாத்தான் சின்னப்புள்ளயாட்டம் சேல எல்லாம் நனச்சிக்கிட்டு..." சிரித்துக் கொண்டே கேலி செய்தாள் சுபத்ரா.

"அடியாண்டி நெஞ்சு பத்திக்கிட்டு எரியுது... இவளுக எல்லாம் என்ன நெனச்சிக்கிட்டு இருக்காளுக... இந்நேரம் இதயே ஒரு பய பண்ணியிருந்தான்னா நம்ம ஊர்ல எல்லாப் பயலும் வாள்வாள்ன்னு கத்தியிருப்பானுங்க... பொட்டச்சி பண்ணினா... அதுவும் அவனுக வீட்டுல பண்ணினா சத்தங் காட்ட மாட்டானுங்க..."

"ஏய்... இப்ப எதுக்கு நீ இந்தக் குதி குதிக்கிறே...?"

"என்னடி தெரியாத மாதிரி பேசுறே... இது படிச்ச பொட்டச்சி செய்யிற வேலயா... சொல்லு..."

"இங்க பாரு... அந்தக் குடும்பத்துக்கும் நம்ம பங்காளிகளுக்கும் ஒத்து வராது... நீ ஏதாவது பேசப்போக அவனுக அத ஊதிப் பெரிசாக்கி நம்மக்கிட்ட பிரச்செனக்கி வருவானுங்க... அவனுகளப் பத்தித்தான் தெரியுமில்ல... பேனப் பெருமாளா ஆக்குறவனுங்க... இது அவனுக வீட்டுப் பெரச்செனங்கிறதால பேசமா இருக்கானுங்க.. இந்நேரம் இது நம்ம வீட்டுப்பக்கம் நடந்திருக்கட்டும்... இந்நேரம் ஊருக்கே தந்தி அடிச்சிருப்பானுங்க..."

"அதுக்காக... அவ பண்ணுது செரியின்னு சொல்லுறியா...?"

"இங்க பாரு... நான் செரியா தப்புன்னு பேச வரல... இத யாரு செரியின்னு சொல்லுவா... நமக்கு இது தேவயில்லன்னுதான் சொல்லுறேன்... நம்ம வீட்டுப் புள்ளயள நாம செரியா வளத்தாப் போதும் அம்புட்டுத்தேன்… நமக்கு வேண்டாத சனங்க எப்புடிப் போனா நமக்கென்ன... விட்டுட்டு வேலயப் பாரு... கத்திரிக்காய் முத்துனா கடத்தெருவுக்கு வந்துதான் ஆவும்... ஆமா..."

"என்னடி இப்படிப் பேசுறே...? யாரு வீட்டுப் புள்ளயா இருந்தாலும் பாதிக்கப்பட்டவங்களோட மனசு என்ன பாடுபடும்..."

"அடிப்போடி... பாதிக்கப்பட்டவுங்களுக்காக நாம பாவப்பட்டாலும் அவனுக யாருக்காகவும் பாவப்படுறவனுக இல்லதானே... மூத்தவள ஒரு இடத்துல கட்டுனானுங்க... என்னாச்சு... மாப்பிள்ளை இப்ப வீட்டோட... எங்க பயல எங்ககிட்ட திருப்பிக் கொடுங்கன்னு கேக்க வந்த அப்பன அவனோட மவன விட்டே வெரட்ட வச்சானுங்களா இல்லயா...”

“ம்…”

“இன்னைக்கு மாமானும் மாப்பிள்ளயுமா வண்டியில சுத்துறானுங்க... பெத்த அப்பன் டவுனுக்குள்ள ஒரு கட வச்சிக்கிட்டு கஷ்டப்பட்டு வாழ்க்கய ஓட்டிக்கிட்டு இருக்காரு... சரி அத வுடு... ரெண்டாவது புள்ளய கட்டுனானுங்களே... அதாச்சும் சேர்ந்து வாந்துச்சா... புருஷன் அடிக்கிறான்... புருஷன் திட்டுறான்னு தினம் ஒரு பொய்ய ஆத்தாக்கிட்ட அவுத்து விட்டுட்டு... அத எல்லாரயும் நம்ப வச்சி... ஆத்தா பின்னாடியே திருஞ்சிச்சு... முறுக்கிக்கிட்டு போன அவ புருஷன் இப்ப மாமியாவுக்கு டிரைவரு... பொண்டாட்டி முந்தானய பிடிச்சிக்கிட்டு அவனும் பெத்த நாத்தானப்பன ஏவங் கேக்குறானா இல்லயா... விட்டுட்டுப் போடின்னா..."

"ஏன்டி வெக்கங் கெட்டவனுங்க பெத்தவங்கள விட்டுட்டு இங்க வந்து கிடக்குறானுங்களே... இதே மாதிரி நாளக்கி இவங்க பொத்திப் பொத்தி வளக்குற மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா... அவன் இவங்களப் பாக்காம மாமியா வீட்டுக்குப் பொயிட்டா... பொயிட்டா என்ன... போகத்தான் போறான்... நான் பாக்கத்தான் போறேன்... அன்னக்கி கெடந்து கத்துவாளுங்கதானே... அப்பத் தெரியுமில்ல அவங்க பண்ணுனதோட பலனு..." கடுகடுப்பாகப் பேசினாள் காயத்ரி.

"என்னத்த அனுபவிக்கப் போறானுக... அவனுக நல்லாத்தான் இருப்பானுக... நல்லது நெனக்கிற நமக்குத்தான் எல்லாமே நேர்மாறா நடக்கும். செரி நீ எதுக்கு இம்புட்டுக் கோபமா இருக்கே... அவுக வெதச்சத அவுக அறுப்பாக... அந்தாளுக்கு அதெல்லாம் தெரியமயா மாப்பிள்ளகளுக்கு நில புலனெல்லாம் வாங்கி இங்கிட்டே செட்டில் பண்ணுறான்... என்ன செய்ய... இன்னக்கி ஒரு குடும்பதையில அறுத்துப் போட்டுப்புட்டானுக... செரி இதப் பேசுனா மனசு ஆறாது...  விட்டுட்டு வேலயப் பாருடி..."

"எனக்கு அந்த வீட்டு மூணாவது சிறுக்கி பண்ணுனதைக் கேள்விப்பட்டதுல இருந்து மனசு கொதிக்கிதுடி... நாக்க புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டாதான் என்னோட கோபமெல்லாம் அடங்கும். என்ன தகிரியம் அந்தக் குட்டிக்கு... என்ன நெஞ்சுரம் இருந்தா இப்படிப் பண்ணியிருப்பா..."

"அவதான் லெட்டர் எழுதி வச்சிருக்காளாமே... எனக்குப் பிடிக்கல... எங்கப்பாம்மாதான் என்னை கட்டாயப்படுத்துனாங்கன்னு..."

"படிச்சிருக்காதானே... பிடிக்கலன்னா முன்னாடியே சொல்றது... ஒருத்தனோட வாழ்க்கயில்ல போச்சு... நெடுங்குளத்துல மரியாதயான குடும்பத்துப் பிள்ள அது... ரோட்டுல பாத்தாக்கூட பல்லுத் தெரியாம சிருச்சிக்கிட்டு அத்த நல்லாயிருக்கிகளான்னு கேட்டுட்டுப் போகும்... அதோட வாழ்க்கயில வெளாண்டுட்டாங்களே பாவிய..."

"சொத்துப் பத்து இருக்க குடும்பம்ன்னு இவங்க போனாங்க... அவங்களுக்கும் இவுக மாப்பிள்ளகள வீட்டோட வச்சிக்கிறதும் தெரிஞ்சிருக்கு... இவ சங்கதியும் தெரிஞ்சிருக்கு… சரி தூரத்துச் சொந்தம் வேற... நமக்கிட்ட அப்படியெல்லாம் நடக்க மாட்டாக... புள்ளயும் பாக்க கலரா மொக லெட்சணமா இருக்கா... அவளும் ஒத்துக்கிட்டு பயலையும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாளேன்னு நெனச்சிருக்காங்க... பாவம் இப்ப வெளிய தலகாட்ட முடியாம நொந்து போயிகெடப்பாக... அதுக்காக நாம என்ன பண்ண முடியும்... “

"என்ன பண்ண முடியும்ன்னு என்னால் இருக்க முடியலடி... அவள… அந்தச் சிறுக்கி மவ சிறுக்கியோட முடியை அறுத்து எரியணும்... களவாணி நாயக் கண்டந்துண்டமா வெட்டணும்... என்ன ஒரு திமிரு... எம்புட்டுத் தகிரியம்… ஒருத்தனுக்கு கழுத்த நீட்டிட்டு எனக்குப் பிடிக்கல... நான் லவ்வு பண்ணுனவன் கூட போறேன்னுட்டு லெட்டர் எழுதி வச்சிட்டுப் போவா...”

“அவள வெட்டுணாச் சரியாயிருமா…” 

“இந்தச் சிறுக்கிய வெட்டுறதவிட இவளக் கூட்டிக்கிட்டு போனாம்பாரு அவனயும் சேர்த்து வெட்டணும்... பாவம் அந்தப் புள்ள மனசொடிந்து போயி மருந்தைக் குடிச்சி இப்ப ஆஸ்பத்ரியில உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்காம்.... அதோட தலயெழுத்து இந்தச் சிறுக்கிய கட்டி தொட்டுக்காம கட்டிக்காம மருந்தக் குடிச்சிட்டுக் கெடக்கு... இனி அதுக்கு கல்யாணமின்னாலே பாவக்காய் சாப்பிட்ட மாதிரி நெனக்காதா..."

"சனியன் இத்தோட போச்சுன்னு விட்டுட்டு வேற புள்ளயப் பாத்து கட்டிக்கிட்டு அது சந்தோஷமா வாழணும்... இதை நெனச்சிக்கிட்டு செத்து என்ன பண்றது... சரி அதை விட்டுட்டு நீ வேலயப் பாரு... எவளோ எக்கேடோ கெட்டுட்டுப் போறா... நாம் பொலம்பி என்னாகப் போவுது."

"என்னடி இப்படிப் பேசுறே... நீ எல்லாத்தயும் லேசா எடுத்துக்கிறே...? ஆனா என்னால முடியல..."

"வேற என்ன பண்ணச் சொல்றே... நம்ம புள்ளயா இப்படிப் பண்ணுச்சு... அது ஒரு கேடுகெட்ட குடும்பம்... அதப் பேசி என்ன பண்ண.... எங்கண்ணனுக்குத் தெரிஞ்சா உன்னய மட்டுமில்ல என்னயிம் தூக்கிப் போட்டு மிதிக்கும்... இது நமக்குத் தேவயா... வேலையைப் பாருன்னா..." 

“நம்ம பரம்பரெக்கே இந்தப் புத்தியில்ல…”

“நீ சொல்றது செரிதான்…”

"என்னவோ போ... இப்படியும் பண்ணிட்டு எப்படித்தான் சந்தோஷமா வாழுவாளுங்களோ தெரியல... என்னத்தைப் படிச்சி என்ன புண்ணியம்... படிக்க வச்சதுக்கு இதுதான் பலன்... ம்... நம்ம வீட்டு புள்ளயளயும் காலாகாலத்துல கட்டிக் கொடுக்கணும்... காலங் கெடக்குற கெடயில நமக்கெல்லாம் இந்தப் பேரு வேண்டாந்தா..." என்றபடி எழுந்தாள் காயத்ரி.

"ஆமா யாரக் கூட்டிக்கிட்டு ஓடுனாளாம்..." சுபத்ரா மெதுவாகக் கேட்டாள்.

"என்னடி என்னய பேசாதேன்னு சொல்லிட்டு இப்ப நீ மறுக்கா ஆட்டய ஆரம்பிக்கிறே...?"

"இல்ல யாருன்னு வெவரந் தெரியுமான்னு கேட்டேன்..."

"இவுகதான் மெட்ராஸ்ல வேல பாக்குறேன்னு லாத்துனாகள்ல... அங்க எவனோ ஒருத்தன லவ்வு பண்ணுனாகளாம் லவ்வு... வீட்ல சொன்னதுக்கு யாரு எவன்னு கூட கேக்காம நாங்க சொல்றவனத்தான் கட்டிக்கணுமின்னு மிரட்டி இந்தப் புள்ளக்கி கட்டி வச்சாகவளாம்”.

“அது செரி…”

 “ஒரு மாசமா ரெண்டுக்கும் ஒண்ணும் நடக்கலயாம்... ஒப்புக்குத்தான் புருஷன் பொண்டாட்டியாம்... வீட்டுக்குள்ள தனித்தனியாம்...  என்னமா யோசிக்கிறாளுங்க இப்ப உள்ளவளுவ...”

“அடி ஆத்தி…. இம்புட்டு நடந்திருக்கா… நமக்குத்தேன் ஒண்ணுந் தெரியிதில்ல…”

“சனியன் ஒத்துக்காம மருந்தைக் குடிச்சி செத்திருந்தாக்கூட பரவாயில்லை... அவன மேடயேத்தி இன்னக்கி அறுத்துப் போட்டுட்டு பொயிட்டா... அவளக் கூட்டிக்கிட்டு ஓடுன நாயி வெளங்குங்கிறே... எங்கயாச்சும் போகயில ரெண்டும் அடிபட்டுத்தான் சாகும்..." கைகளை நெறித்து 'சடச்சட'வென நெட்டி பறித்தாள்.

"சரி வாறேன்... பொழுசாய அங்கிட்டு வா..." என்றபடி எழுந்து முந்தானையை இழுத்து சொருக்கிக் கொண்டு அவிழாத கொண்டையை அவிழ்த்து கொண்டை போட்டுக் கொண்டு வீதியில் இறங்கினாள்.

'என்ன காயத்ரி ஒனக்கு வெசயந் தெரியுமா... ஒங்கண்ணன் மவன் இருக்கானுல்ல... அதான் ஒம்மவ செம்பவத்த கட்டணுமின்னு வச்சிருந்தியே... அந்தப்பய கூட வேல பாக்குற புள்ளய கட்டிக்கிட்டானாம்.... இப்பத்தான் ஒங்கண்ணனுக்குத் தெரியுமாம்... வீட்டுல கூகூன்னு கெடக்காம்... ஒங்கூரு ராமசாமி சொன்னான்... ஒனக்கு யாரும் சொல்லலயா...' என்றபடி மாணிக்கம் சைக்கிளை மிதிக்க, மகள் செண்பகம் கண்ணில் தோன்றி மறைய காயத்ரிக்கு நெஞ்சை அடைத்தது.

*************

நான் எழுதிய 'ஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்' என்ற பகிர்வு துபை நண்பர் நந்தகுமார் மூலமாக இந்நேரம்247 என்ற இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட இந்நேரத்தாருக்கும், அதற்கு காரணகர்த்தாவாக இருந்த நண்பருக்கும் நன்றி. அந்தப் பதிவின் கீழ் பேரைக் கொண்டு வருவதற்குத்தான் வெகுநேரம் முயற்சிக்க வேண்டியிருந்தது.

***

பிரதிபிலி மாயா சிறுகதைப் போட்டியில் 'பய'ராத்திரி அப்படிங்கிற பேர்ல நம்ம கதையும் இருக்கு. பேய், பிசாசு, திகில் எல்லாம் கலந்து எழுத வேண்டிய கட்டாயத்தால் கிறுக்கிப் பார்த்தேன்... வாசிங்க... ஆனா இதுல என்னய்யா திகிலு இருக்குன்னு கம்பு தூக்கிறாதீங்க.... நன்றி.


***
-'பரிவை' சே.குமார்.

சனி, 7 ஏப்ரல், 2018

ஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்

(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்)
லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்கள்ல சிலர் தானே பெரியவன் தனக்கு நிகர் யாருமில்லை என்பதாய்ப் பேசி பின்னர்தான் விழா நாயகனுக்கு வருவார்கள். இன்னும் சிலரோ எஸ்.ராவைப் பாருங்கள்.... ஜெயகாந்தைப் பாருங்கள்... கி.ராவைப் பாருங்கள் என முன்னத்தி ஏர்களை பெரிதாகப் பேசுவார்கள். பின்னத்தி ஏர் அதைவிட அருமையாக சால் போட்டு வருவதை சொல்வதில் அவர்களுக்கு தயக்கம் என்பதைவிட புகழக்கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள்... இன்னும் சிலரோ நீ எப்படி அவரைத் தாக்கிப் பேசப்போச்சு என ஒருமையில் குதிப்பார்கள். பெரும்பாலும் ஒலக எளக்கியம் பேசுவார்கள். அது நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் ஒதுங்கியே இருந்துவிடுவது என் வாடிக்கை.

நேற்று மாலை துபையில் ஒரு இலக்கிய நிகழ்வு... இங்கிருக்கும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான அய்யனார் அவர்களின் 'ஓரிதழ்ப்பூ' நூலறிமுக மற்றும் விமர்சனக் கூட்டம். மேடையை அலங்கரித்த மூன்று நாற்காலிகளிலும் ஏதோ முப்பெரும் தேவர்கள் அமருவார்கள் போலும் என்று நினைத்தால் ஓரிதழ்ப்பூவின் துர்க்காவும் அங்கயற்கன்னியும் அமுதாக்காவும் அமர்ந்து கொண்டார்கள். ஏதோ வித்தியாசமா யோசிக்கிறாய்ங்கய்யா (பாலாஜி கவனிக்க நாங்களும் மதுரக்காரய்ங்கதான்) எனத் தோன்றியதால் இது எளக்கியக் கூட்டமாக இல்லாமல் இலக்கிய கூட்டமாகத்தான் இருக்குமென நண்பர்களுடன் அமர, அரங்கு நிறைந்தது. அட பரவாயில்லையே புதுப்படம் போட்டாக்கூட தமிழ்ராக்கர்ஸ் இருக்க தைரியத்தில் அரங்கு நிறைவதில்லையே இங்கு நிறைஞ்சிருச்சிய்யா என்ற மகிழ்வும் ஏற்பட்டது.

விழாவின் ஆரம்பம் கடவுள் வாழ்த்துடன்... சப்தம் அதிகமாக இருந்தது. எல்லாரும் பாடுறானுங்கய்யா... இன்னும் மறக்கலை போல.

வரவேற்புரை வழங்கியவர் திருமதி. ரமா மலர் என்று சொன்னதாய் நினைவு. நல்லதொரு வரவேற்ப்பு உரை.

ஓரிதழ்ப்பூவை வச்சிச் செய்வார்கள் என்ற கனவைப் பொடிப்பொடியாக்கி(!?) ஆசிரியர் திரு.அய்யனாரை இதில் காரம் குறைவு இன்னும் காரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர்களே அதிகம் என்றாலும் என்னதான் கருவாட்டுக் குழம்புடன் கஞ்சி குடித்தாலும் சின்னவெங்காயமோ, பச்சை மிளகாயோ லேசாக் கடிச்சிக்கும் போது கிடைக்கும் சுவை அலாதிதானே... அப்படி எல்லாரும் சிக்ஸர் அடித்தாலும் அபுதாபியில் இருந்து புயலெனக் கிளம்பி பந்துவீசிய இருவர் கிளீன் போல்ட் ஆக்கத்தான் செய்தார்கள். ஸ்... அப்பா.... சொல்ல வந்ததைச் சொல்லியாச்சு.

நிறையப் பேர் பேசினாங்க.. நிறைவாய்ப் பேசினார்கள். சிலரை சுமையாக் கூட்டத்தின் மூலம் தெரியும்.... பலரை நேற்றுத்தான் அறிய முடிந்தது. நிறைய இலக்கிய ஆளுமைகள் துபையில் இருக்கிறார்கள் என்பது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது. பேசியவர்கள் பெயரைச் சொல்லி எழுதினால் பக்கம் பக்கமாக பள்ளி, கல்லூரியில் தேர்வு எழுதியது போல் ஆகிவிடும் அப்புறம் பிலால் சொன்னது போல் எனக்கும் ஒரு அயற்ச்சி ஏற்பட்டு, உடம்பில் பிசுபிசுப்பு ஏற்பட்டு குளிக்கச் சொன்னாலும் சொல்லும் என்பதால் சிலவற்றை மட்டும் சொல்லாம் என்று நினைக்கிறேன்.

முதலில் இறங்கிய துவக்க ஆட்டக்காரர் 'எழுத்தாளனும் எழுத்தும்' என்று பேசினார். நீலம், பச்சை, பாம்பு என இராமநாராயணன் படத்தைப் பற்றி பேசினார். இராஜேஷ்குமார், ஜெயகாந்தன், எஸ்.ரா. எனப் பேசி நீண்ட நேரம் களத்தில் நின்றார் என்றாலும் சதமடிக்கும் வாய்ப்பைத் தவற விட்டார். அந்த வாய்ப்பை குறைவான நேரமே நின்றாலும் தினேஷ் கார்த்திக் போல அடித்து ஆடி எங்க மதுரைக்கார பாலாஜி தட்டிச் சென்றுவிட்டார் என்பதை பார்வையாளர்கள் அறிவார்கள்.

பெண்ணியம் குறித்து... பெண்கள் எல்லாமே இப்படித்தான் என்ற ஆசிரியரின் பார்வை குறித்து மிகத் தெளிவான பார்வையுடன் பேசினார் ஜஸீலா, தன் மகளுக்கு பொய், உண்மை குறித்த சொன்ன கருத்தைப் பகிர்ந்து கொண்டார். ஓரிதழ்ப்பூ குறித்து அவர் சமரசம் செய்து கொண்டு பேசவில்லை. மனதில்பட்டதை மழுப்பாமல் மறைக்காமல் பேசினார்.

சுரேஷ் அவர்கள் பேசும் போது சில இடங்களில் மேலே பறந்து கொண்டிருப்பது போல் இருந்தது என்று சொன்னாலும் வசீகரிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அய்யனாரை வாழ்த்திச் சென்றார்.

கனவுப்பிரியன் அண்ணன் இன்னும் சிறப்பாக பேசுவார் என்றே நினைத்திருந்தேன். ஓரிதழ்ப்பூ புத்தகத்தை எனக்குத் தரமாட்டேன் என தன் தலையணைக்கு கீழே வைத்திருந்தவர், துர்காவைத் தேடுவதிலேயே நாட்களை வீணடித்திருக்கிறார் என்பது வருத்தமே என்றாலும் பாடல்களைச் சொல்லி அதனுடன் ஒப்பீடு செய்து பேசிய விதம் அருமை. இவரும் எழுத்தாளரை உயர்த்திப் பிடித்த கட்சிக்காரர்தான். ஆமா இவரு பேச எழும் போதும் பேசும் போதும் பயங்கர கைதட்டல்... மாஸ் ஆகிக்கிட்டு வர்றாரு... அண்ணே இனி நீ நம்ம தல பிரபு மாதிரி ஷேவ் எல்லாம் பண்ணி சும்மா நச்சின்னும் இலக்கிய கூட்டத்துக்குப் போன்னே... விசிலடிக்க நிறைய ஆளிருக்கு... காற்றடிக்கும் போதே தூத்திக்கணும்... அடுத்து கட்சி ஆரம்பிக்கிற வேலையைப் பார்ப்போம்.

இன்னொன்னு சொல்லணும்... கனவுப்பிரியன் அண்ணன் சரிதாதான் துர்காவான்னு யோசிச்சப்போ, ஆளாளுக்கு காந்திமதி, வடிவுக்கரசியின்னு அவங்க அவங்க காலத்துக்குப் பொயிட்டாங்க. அதுக்குத் தனியா ஒரு பட்டிமன்றம் நடந்துச்சு... நாங்கூட குஷ்புவா இருக்குமோன்னு நினைச்சிக்கிட்டேன்... :) இப்ப உள்ளவனுங்க கதையைப் படிச்சா யாரா இருக்கும்ன்னு நினைப்பாய்ங்க... கஷ்டம்தான். அதவிடுங்க... நமக்கெதுக்கு அந்தக் கவலை.

தமிழாசிரியர் ஷோபியா அவர்கள் சபைக்காக தன்னை சமரசம் பண்ணிக் கொண்டுதான் பேசினார். ஒரு தமிழாசிரியர், அதுவும் கணறும் கனலி கொடுத்தவர் அடிச்சி ஆட வேண்டாமா... பார்த்து வாசித்தல் என்பதே இதுவே கடைசியாக இருக்கட்டும். கனவுப்பிரியன் அண்ணனைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்த கூட்டத்தில் சூறாவளியை எதிர்பார்க்கிறோம்.

காளியின் காதலன் பிரபு, ஆளு கட்டிங் போட்டு... இருங்க வேற மாதிரி யோசிக்காதீங்க... முடி வெட்டி, மீசைக்கு எல்லாம் கலர் அடிச்சி வந்து நின்னுக்கிட்டு நான் இன்னொரு நாளைக்குப் பேசுறேண்ணேன்னு சங்கோஜப்பட்டுட்டு இது பட்டசாராயம் மாதிரி தூக்கலா இல்லைன்னு சொன்னாரு. அடுத்த நாவல் இவருக்கு டாஸ்மார்க் மாதிரி இல்லாம பட்டசாராயம் மாதிரி இருக்கணுமாம். கடைசியா சொன்னபடி பேசிட்டேனாண்ணேன்னு கேட்டுவிட்டு வேறு வந்து அமர்ந்தார். சொன்ன பணம் வந்துருச்சா தல.. :)

நண்பரைச் சந்திக்க துபை வந்திருந்த காரைக்குடிக்கார ஆங்கிலக் கவிதை எழுத்தாளர் தனக்கு கொடுக்கப்பட்ட மரியாதைக்குப் பின் மகிழ்வாய்ப் பேசினார். திரு. காவிரி மைந்தன், ராம்கி என நிறையப் பேர் பேசினார்கள். எல்லாருமே ஓரிதழ்ப்பூவை தூக்கிப் பிடித்த விமர்சகர்கள்.

இடையில் புத்தக வெளியீடு... இவங்க அவங்களுக்கும் அவங்க இவங்களுக்கும் கொடுத்துக் கொண்டார்கள். பிரபு கங்காதரனுக்கு கனவுப்பிரியன் கொடுத்தார். இதுனாலயே இந்தாளு பட்டச்சாராயம் பத்திப் பேசியிருப்பாரோன்னு தோணுச்சு.

இதெல்லாம் முடிஞ்சதும் வேகப்பந்து வீச்சாளர்களான நெருடாவையும் பால்கரசுவையும் இறங்கிவிட்டார் ஆசீப் மீரான் அவர்கள். அபுதாபியில இருந்தே பால் போட்டுப் பார்த்துக் கொண்டே போன ஆளுங்க... எல்லாருக்குமே இவர்கள் எதிர்க்கட்சி ஆட்கள் என்பது தெரியும் என்றாலும் ஆசீப் மீரான் அவர்களும் சொல்லிவிட்டார். நாங்கள்தான் சரவணபவனை முதலில் அடைந்தோம். எங்களைப் பார்த்த அய்யனார் மூணு பேரும் முன்னாலயே வந்தாச்சான்னு கேட்டார். 'வந்துட்டாய்ங்கய்யா... வந்துட்டாய்ங்க' அப்படின்னு அவரு மைண்ட் வாய்ஸ் சொன்னது கேட்டுச்சு.

நெருடா முதல்பால்லயே போல்ட் ஆக்கிட்டாருன்னு பார்த்தா, கொக்காமக்கா மனுசன் தேடித் தேடி படிச்சிருக்காருய்யா... சும்மா எடுத்து வீசி 'யோவ் நீ அவனை அந்த திட்டு திட்டியிருக்கே... இப்ப நீ அவனை விட மோசமா எழுதியிருக்கே'ன்னு விட்டு விளாசிட்டாரு. அதுவரை சிக்ஸர் மழையில் நனைந்த அய்யனார் தடுப்பாட்டம் ஆடுவதுக்கே சிரமப்பட ஆரம்பித்தார். நல்லவேளை திருமதி. அய்யனாரும் பசங்களும் வந்ததால நெருடா பாதியோட விட்டுட்டாரு... இல்லேன்னா நெலம என்னாயிருக்கும்... ஆண்டவா... யோசிக்கவே பயமாயிருக்கே....ஹி..ஹி....

கனவுப்பிரியன் அண்ணன் சொன்ன எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு ஆதர்ஷ நாயகன் இருப்பான் என்பதற்கு அப்படியே ஆதர்ஷ நாயகன் இருந்தாலும் யாரும் அவனைப் பார்த்ததும் ஓடிப்போய் கட்டிக் கொள்வதில்லை. கலவி கொள்ள விரும்புவதில்லை என்று பதில் சொன்ன நெருடா அதேபோல் பிரபுவின் பட்டசாராயத்துக்கும் பதிலாய் பேட்டரி கூடிப்போனா சங்குதான்டி மாப்ளே என்றும் சொன்னார்.

அடுத்த பால் போட்டவரு தன் பேரிலேயே பாலை வைத்திருக்கும் பால்கரசு, இவரும் இப்படி எழுதலாமா..? அப்படி எழுதலாமா..? எனப் பேசி ஓரிதழ்ப்பூ காமத்துப்பூய்யான்னு சொல்லிட்டு வந்துட்டாரு. இவரு போனும் மக்கர் பண்ணிருச்சிய்யா... ஏதோ சாமி அய்யனாரு பக்கம் இருந்திருக்கும் போல.

பாலாஜிய இறக்கிவிட்டாங்க... இந்தாளு இருக்கிற இடத்துல இருக்கவனுக்கு பீபீ, சுகரு, அட்டாக் எதுவும் வராதுய்யா... மனுசன் சிரிக்கச் சிரிக்க பேசுவதில் கில்லாடி. என்ன ஒரு குறை என்றால் இவருக்கு யாருமே புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொல்ல மாட்டேங்கிறாங்க... படிக்கலைன்னாலும் மனுசன் சதமடிச்சிட்டாருய்யா... என்ன பேச்சு... இதுல ஏதோ இருக்கும் போல... நமக்கு ஒருத்தனும் புத்தகம் தரமாட்டேங்கிறானுங்க... அவனுங்களே மாத்தி மாத்தி கொடுத்துக்கிறானுங்கன்னு வருத்தப்பட்டார். புத்தகம் கிடைச்சிருச்சு... நேற்றிரவே வாசித்து மோட்சம் அடைந்திருப்பார் என்று நம்பலாம்.

அப்புறம் பிலால், எனக்கு பிலால்கிட்ட பிடிச்சது அவரோட அருமையான எழுத்து.... நேற்று பேச்சும். என்ன மேடையில மனுசன் ஏறிட்டா இந்தப்பக்கம் மூணு மீட்டர் அந்தப்பக்கம் மூணு மீட்டர் இடமிருக்கணும். பின்னே... டான்ஸ் ஆடிக்கிட்டேயில்ல பேசுறாரு. இவருக்கு திருவண்ணாமலைக்குப் போயி துர்க்காவைப் பார்க்கணுமாம். அதுக்காகவே ஊருக்குப் போவாருன்னு நினைக்கிறேன். சந்தடி சாக்குல 'செயல்' சொன்ன 'யானை வரும் முன்னே'யை புதுமொழியின்னு சொல்லிட்டாருய்யா... பின்னாலிருந்து பாலாஜி குரல் கொடுக்க 'யோவ் பாலாஜி நீ பேசும்போது நா எதுனாச்சும் பேசுனேன்னா'ன்னு பாவம்மா கேக்கும் போது 'டேய் நீ காப்பி அடிச்சத நான் டீச்சர்க்கிட்ட சொன்னேனா'ன்னு பள்ளிக்கூடத்துல பசங்க கேட்டமாதிரி இருந்தது. இவரு என்ன எளவுய்யா இது, பாதி படிச்சதும் ஒரு அயற்சி, பிசுபிசுப்பு... குளிக்கணுமின்னு தோணுச்சுன்னு சொன்னார். அதுக்கும் மேல மேட்டர் நாவல்ன்னும் சொன்னார். எல்லாம் சொல்லிட்டு ரொம்ப அருமை அய்யனாருன்னு போல்ட் ஆக்குவார்ன்னு பாத்துக்கிட்டு இருந்தா சிக்ஸ் அடிச்சிட்டு வந்துட்டார்.

அவரை ஓவியர் என்று சொன்னார்கள் பெயர் தெரியவில்லை. மன்னிக்கவும். 'யோனி குறித்து பேச நாம் பயப்படுகிறோம் வெட்கப்படுகிறோம்' என்றெல்லாம் பேசி... நரஉடல் குறித்தும் சொன்னார.  உண்மையிலேயே நிறையச் செய்திகளுடன் மிகச் சிறப்பாக பேசினார்.  ஓவியரய்யா எங்க பக்கம் கூத்து (நாடகம்) ரொம்பப் பிரபலம். தென் தமிழகத்தில் மட்டுமே இது இன்னும் கோலோச்சி இருக்கிறது. அதில் வள்ளி திருமணம் என்றொரு நாடகம்... முடிந்தால் நாரதரும், வள்ளியின் சகோதரரும் (பபூன்) பேசுவதை யூடிப்பில் கேளுங்கள். யோனி பற்றிய பேச்சு மிகச் சாதாரணம். கிராமங்களில் ரெண்டு பெண்களை சண்டை போட வைத்துப் பாருங்கள். இதெல்லாம் சரளமாய் வந்து விழும். யாருக்கும் பேச, எழுத பயமில்லை... அளவுக்கு மீறும் போது விமர்சனங்கள் வரவே செய்யும். உப்புக் கூடினால் உணவு சுவைக்காது.

இன்னும் நிறையப் பேர் பேசினார்கள்... என்ன பேசினார்கள் என்பதெல்லாம் ஞாபகத்தில் இருக்கு... ஆனாலும் பதிவின் நீளம் போதும்ன்னு நினைக்கச் சொல்லுது. இத்தோட நிப்பாட்டுன்னா பிரபலங்கள் பேசினதை மட்டுமே எழுதுறாய்ங்கய்யான்னு குறிஞ்சிநாதன் அவர்கள் கோபித்துக் கொள்வார். அவரே கேட்டு வாங்கி... அடித்து ஆடினார் கடைசி மணித்துளிகளை.

அருமையாகப் பேசினார்... மைக் தேவையில்லை எனச் சொல்லிய வெண்கலக் குரல். ஒவ்வொரு வரியையும் அலசி ஆராய்ந்து வாசித்திருக்கிறார் என்பது பேச்சில் தெரிந்தது. ஆனாலும் ஒவ்வொருவரின் பார்வையிலும் விமர்சனம் வைக்க உரிமை இருக்கிறது. நீ தூக்கித்தான் பேசியிருக்க வேண்டும் எப்படி தாக்கிப் பேசுவே என்று நாம் சொல்ல முடியாது இல்லைங்களாண்ணா... உங்க பார்வை... மற்றவர் பேசிய கருத்தில் தங்களுக்கு இருக்கும் மாற்றுக் கருத்து  என்ன என்பதாகப் பார்த்தீர்கள் என்றால் உங்கள் பேச்சு இன்னும் அருமையாக இருக்கும்.


விழாவினைத் தொகுத்து வழங்கியவர் திரு.ஆசீப் மீரான், மிகச் சிறப்பான தொகுப்பாளர் என்பது அவரின் தொகுப்பில் தெரிந்தது. அருமை வாழ்த்துக்கள். ஆசிப் மீரான் அவர்கள் இடையிடையே பேசும் போது ஜி.நாகராஜன் மற்றும் கோபி கிருஷ்ணா ஆகியோரின் எழுத்தில் இருந்து எடுத்துச் சொல்ல நினைத்து சொல்லாதவை என ஒரு பகிர்வு ஆபிதீன் அவர்களால் பகிரப்பட்டிருக்கிறது என்றாலும் அதில் சில விஷயங்களை ஆசீப் மீரான் அவர்கள் பேசினார்.  

'இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்? என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்' என்றும் 'பக்திப் பரவசத்துக்கும் விஸ்கிப் பரவசத்துக்கும் அதிக வித்தியாசமில்லை' என்றும் பேச்சின் இடையில் சொல்லிச் சென்றார். இவரது விழாத் தொகுப்பு... அந்தக் குரல் வளம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது அவர்களை ஞாபகத்தில் கொண்டு வந்தது. அருமை.

ஏற்புரை வழங்க வந்த அய்யனார் அவர்கள் பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கும் நேற்று சிலர் முன் வைத்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாது துர்க்காவை என்னுள் இருந்து இறக்கி உங்களிடம் உலாவ விட்டு விட்டேன். அவள் எப்படிப்பட்டவள் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கணும். துர்க்கா இறங்கிச் சென்ற என் மனது வெற்றிடமாக இருக்கிறது. அங்கு வேறொரு முளை விடத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லி தப்பித்துக் கொண்டார். தானும் சாரு, ஜெமோ போல் எழுத வேண்டும் என்ற ஆசை என்றும் சொன்னார். மிக விரிவாக எதையும் பேசிவிடவில்லை என்பது வருத்தமே. இருப்பின் ஆள் நம்மளைப் போல கூச்ச சுபாபம் கொண்டவர் என்பதால் விட்டுவிடலாம்.

நன்றியுரை சொல்ல வந்த அமீரகத்தில் தமிழுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கும் (இதை நான் சொல்லல... சொன்னது இன்னொரு ஆள்) நந்தா அவர்கள் வேகவேகமாக நன்றியுரை சொன்னார். குலவை போடும் போது மட்டும் என்ன வேகம்... எங்கூருல வருசா வருசம் செவ்வாயின் போது குலவை போட ஒரு பொம்பளயில்லையான்னு எங்க சித்தப்பா கத்துவாரு... இந்த வருசம் நந்தாவை கூட்டிப் போயிற வேண்டியதுதான்... எட்டூருக்கு எங்கூரு குலவைச் சத்தத்தைக் கேட்க வைக்கலாமில்லையா. உண்மையிலேயே இந்த விழாவில் அய்யனாரின் உழைப்பை விட நந்தாவின் உழைப்பு அதிகம். வாழ்த்துவோம். தொடரட்டும் சகோதரரே தங்கள் பணி. அதுக்காக அலைனுக்கு கூட்டப் போறதெல்லாம் ரொம்ப அதிகம். குறைச்சிக்கங்க... முடிஞ்சா அடுத்த கூட்டத்துக்கு ஆள் கூட்ட அபுதாபி வாங்க.

விழா இனிதே நிறைவு  பெற இலக்கியம் பருகியவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. உணவு ருசியாய்... டீ தான் பக்கத்து பாகிஸ்தானி ஹோட்டலில் அருமையாக இருந்தது என்று சொல்ல வைத்தது.

அய்யனார் அவர்கள் பதிவு வழியும் நேற்றைய நிகழ்வின் கேள்விகளுக்கு தனிப்பட்ட முறையில் பதில் சொல்வார் என்று நம்புகிறேன்.

பேசியவர்களில் பெரும்பாலானோர் கொஞ்சமே கொஞ்சம் சமரசம் செய்து கொண்டாலும் ஒரு இலக்கிய நிகழ்வாய் இல்லாமல் மிகவும் மகிழ்வாக, இனிமையாக மூன்றரை மணி நேரத்தைக் கடக்க வைத்தது. ஓரிதழ்ப்பூ மூலம் இதை நிகழ்த்திக் காட்டிய எழுத்தாளர் அய்யனாருக்கு வாழ்த்துக்கள்.  அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரராக இருக்கும் இவர் இன்னும் சிறப்பான நாவல்களை எழுத வேண்டும்.  அவரைப் போல்... இவரைப் போல்... என்றெல்லாம் யோசிக்காமல் உங்கள் பாணியில் தொடருங்கள். அருமையான எழுத்து உங்கள் வசம் இருக்கிறது.

ஒரு படைப்பு தனக்கான இடத்தை அது தானாகவே எடுத்துக் கொள்ளும் என்பதை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு.

என்னை வாடா தம்பி... வாடா தம்பி என்று அழைத்துக் கொண்டே இருந்த என் தேவா அண்ணனுக்கும், பத்திரமாக கொண்டு வந்து அபுதாபியில் என் இருப்பிடம் சேர்த்துப் பின்னர் முஸபா சென்ற நெருடா மற்றும் பால்கரசுக்கும், உருட்டுக்கட்டைகளுடன் இருந்தானுகளே பத்திரமாப் பொயிட்டீங்களா என விடியுமுன்னரே முகநூல் மூலம் விசாரித்த பாலாஜிக்கும் நன்றி. 

போட்டோக்கள் இன்னும் எத்தனை மாதம் சென்று எடுத்துப் பார்த்தாலும் இலக்கியம் பேசும். கேமராக் கவிஞன் சுபஹான் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள். 

பேசிய, கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மீண்டும் இது போன்றதொரு நிகழ்வு எப்போது அமையும்...? என்ற கேள்வியை மனசுக்குள் எழுப்பி நிறைவைக் கொடுத்த நிகழ்வு. வாழ்த்துக்கள் அய்யனார்.
-'பரிவை' சே.குமார்.