
தமிழகத்தில் ஜான் ஆபிரகாம் என்ற நடிகர் நடித்துள்ள 'மெட்ராஸ் கபே' என்ற திரைப்படத்தை வெளியிடக்கூடாதென எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதே வேளையில் இந்தியாவைக் கட்டிக்காக்கும் நாட்டின் மதிப்பைக் குறைத்துக் கொண்டே உதார் விடும் காங்கிரஸார் இந்தப் படத்திற்கு சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள். இவர்களுக்கு வடக்கே எதாவது நிகழந்தால் வாடிப்போய் ஓடி உதவுவார்கள். தமிழனுக்கு என்று வந்தால் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இது கடந்த ஐந்து வருடமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மீனவர் பிரச்சினையில் தொடர்ந்து கத்திக் கொண்டுதான் இருக்கிறோம். செவிடன் காதில் ஊதிய சங்காக ஜால்சாப்பு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த பிரதமர் என்று சொல்லப்படும் எங்கள் தொகுதியில் கள்ளத்தனமாக ஜெயித்த எம்.பி., எதற்கும் ஆதரவு குரல் கொடுப்பதே இல்லை. நாட்டின் பண மதிப்பு குறைந்து கொண்டே போகிறதே என்றால் இது பிரச்சினை இல்லை.... நகை வாங்காதீர்கள் என்பார். வெளிநாட்டில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டி கொண்டு வருகிறாயா... இங்கு கட்ட தனியாக ஒரு பெட்டியில் பணம் கொண்டு வா என்பார். இப்படி ஏறுக்கு மாறாக எதையாவது செய்யும் பொருளாதார மேதை இலங்கைப் பிரச்சினை குறித்து இன்றளவும் எதுவும் சொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருப்பார் போல.
தமிழர்களைக் கொன்று குவித்த எம் இனத் துரோகி ராஜபக்சே என்ற அரக்கன் விரித்த ரத்தினக் கம்பளத்தில் நடந்து சென்று படப்பிடிப்பை நடத்தி வந்திருக்கிறது மெட்ராஸ் கபே படக்குழு. தமிழர்களை உயர்த்திக் காட்ட படம் எடுக்க சென்றிருந்தால் இனத்துரோகி எப்படி வரவேற்ப்பு கொடுத்திருப்பான் என்பது நமக்குத் தெரியாதா என்ன... தமிழன் எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு செம்மறி ஆடாய் தலையாட்டிக் கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு என்பதை இந்த அரசியல்வாதிகள் மறந்து விட்டார்கள் போல.
தமிழினத் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் கேவலமாகச் சித்தரித்து இருப்பதாக படம் குறித்த செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அப்படியில்லை தமிழர்களை நல்லவிதமாகத்தான் காட்டுகிறார்கள் என்கிறார்கள் இந்திய காங்கிரஸில் இருக்கும் நம்ம தமிழ் நாட்டில் பிறந்த கேடுகெட்ட காங்கிரஸார். மும்பையில் கூட திரையிட்ட தியேட்டர் அடித்து நொறுக்கப்பட்டதாக செய்திகளில் பார்த்தேன்.
மும்பையில் குண்டு வெடித்த போது அதற்கு காரணமான பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடாது என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்த அரசு, நம் மக்கள் லட்சம் லட்சமாக கொல்லப்பட்டபோது அது குறித்து எதுவும் சொல்லவில்லை. பக்கத்து நாட்டை நட்பு நாடாகத்தான் பார்க்க வேண்டும். எதிரியாக பார்க்கக்கூடாது என்றார்கள். மேலும் இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழகத்தை தேர்ந்தெடுத்த போது நமது முதல்வர் அவர்கள் தனது கடுமையான எதிர்ப்பைக் காட்டி அதில் வெற்றியும் கண்டார். அதற்கும் எதிர்த்தார்கள்.
அதேபோல் ஐபிஎல் போட்டிகளின் போது இலங்கை வீரர்கள் எமது தமிழக மண்ணில் விளையாடக்கூடாது என்று எதிர்ப்பை தமிழக கட்சிகள் முன் வைத்த போது முதல்வரும் அதில் விடாப்பிடியாக நின்று அவர்களை தமிழக மண்ணிற்குள் வரவிடாமல் செய்தார். (இதற்காக நமது முதல்வரை கேவலமாக சித்தரித்து இலங்கைப் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வெளியிட்டார்கள். இதற்கு அரசு எதுவும் சொல்லியதாக தெரியவில்லை. ) இந்த எதிர்ப்புக்கு எதிராக வட இந்தியா வாலாக்கள் மட்டுமின்றி தமிழக காங்கிரஸாரும் விளையாட்டை விளையாட்டாய் பாருங்கள் என்றார்கள். வடக்கே வந்தால் விளையாட்டை விருட்சமாகப் பார்ப்பார்கள். தமிழனுக்கு என்றால் விளையாட்டை விளையாட்டாவே பார்ப்பார்கள். இதுதான் இன்றைய தமிழனின் நிலை.
நம்மக்களைக் கொன்றவனை அழைத்து விருந்து கொடுக்கிறார்கள். திருப்பதிக்கு குடும்பத்துடன் கூட்டிச்சென்று வழிபட வைக்கிறார்கள். மீனவர்களை சிறைபிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தால் நம் மீனவர்கள் மீது தமிழக எம்பிக்களே குறை சொல்லுகிறார்கள். மேலும் இலங்கையில் இருந்து வந்த முக்கியப் பிரமுகர் தில்லியில் இருந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வந்ததால்தான் பிடித்து சிறையிலடைத்து வைத்திருக்கிறோம். இப்போது அவர்களை விடமுடியாது என்று தைரியமாகச் சொல்கிறார். அதைக் கேட்டுக் கொண்டு சும்மாதான் இருக்கிறார்கள்... இருக்கிறோம்...
இப்படி தமிழனுக்கு நடக்கும் துரோகத்தை தோலுரித்துக் காட்ட வேண்டிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக எம்.பிக்களும் காங்கிரஸ் அடிபொடிகளும் அதைவிடுத்து எவனோ ஒரு நடிகன் தமிழனைத் தாக்கி எடுத்ததற்கு ஆதரவாய் குரல் கொடுக்கிறார்கள். இவர்களை என்ன சொல்வது... பதவிக்காக தாங்கள் சார்ந்த அரசு செய்யும் ஈனத்தனமான எல்லாத்தையும் நல்லது என்றே சொல்லிக் கொண்டு இருக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளான இவர்கள் இத்தாலி அன்னையார் சோனியாவும் பொருளாதார மேதை தஞ்சாவூர்ப் பொம்மை மன்மோகன்ஜியும் சொன்னால் பீயைக்கூட பிரமாதம் என்று தின்பார்கள்... இவர்கள் எல்லாம் சுயமாகச் சிந்திக்கத் தெரியாத .... இங்கே நம் செல்லப்பிராணியில் பெயரைப் போடக்கூட தகுதியற்றவர்கள் இவர்கள். அவை எப்போதும் நன்றியுடன் இருக்கும்... ஆனால் இவர்கள்..?
கலைஞனுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கு என ஜான் ஆபிரகாம் சொல்கிறார். இதற்கு காங்கிரஸாரும் ஒத்து ஊதுகிறார்கள். சரி ஆர்.கே செல்வமணி குற்றப் பத்திரிக்கை என்று ஒரு படத்தை எடுத்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற ஒரே காரணத்துக்காக அந்தப் படத்தை எத்தனை வருடங்களாக வெளிவரவிடாமல் தடுத்து வைத்திருந்தனர். அன்னைக்கு கலைஞனுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கு என்று சொல்ல எந்த காங்கிரஸ்காரனாவது முன்வந்தானா இல்லையே...
விஸ்வரூபம் மற்றும் தலைவாவுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டபோது தலைவனின் படத்துக்குப் பிரச்சினையா என்று ஆர்ப்பாட்டம் செய்த தமிழக ரசிகர்கள் இந்த நேரத்தில் யாருடைய ரசிகராக இருந்தாலும் ஒன்றினைந்து போராடி மெட்ராஸ் கபேயை தமிழகத்துக்குள் வரவிடாமல் தடுக்க வேண்டும். திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட மறுத்ததால் இன்று வெளியிட இருந்த படம் வெளியாகவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் போராட்டத்தில் பாதி வெற்றியை அடைந்துவிட்டோம் என்பது சந்தோஷமானதுதான். ஆனால் தொடர்ந்து போராடி நம் தமிழ் மக்களுக்கு எதிரான படத்தை தமிழகத்துக்குள் நுழையாமல் தடை செய்ய வேண்டும்.
மேலும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழக காங்கிரஸாருக்கு வரும் தேர்தலில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களை எந்த நாடு என்றால் இந்தியா என்பான். இந்தியாவில் எங்கே என்றால் மட்டுமே தமிழ்நாடு என்பான். ஏனென்றால் தமிழன் தம்மை ஒரு இந்தியனாகத்தான் பார்ப்பான். ஆனால் மலையாளியோ முதலில் கேரளா என்றே சொல்வான். அதை தனி நாடு என்பான். மீண்டும் மீண்டும் கேட்டால் மட்டுமே இந்தியா என்பான். அவனுக்கு சொம்பு தூக்கும் அரசு தமிழனை கேவலமாக நடத்துவதை வாடிக்கையாக வைத்து உள்ளது. நமக்கு எதிரான சினிமாவுக்கு மட்டுமல்ல அரசுக்கும் தமிழன் யார் என்பதை தெரிவிக்கும் காலம் விரைவில் வரத்தான் போகிறது.
-'பரிவை' சே.குமார்.




