மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

மெட்ராஸ் கபேயும் காங்கிரஸாரும்


தமிழகத்தில் ஜான் ஆபிரகாம் என்ற நடிகர் நடித்துள்ள 'மெட்ராஸ் கபே' என்ற திரைப்படத்தை வெளியிடக்கூடாதென எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதே வேளையில் இந்தியாவைக் கட்டிக்காக்கும் நாட்டின் மதிப்பைக் குறைத்துக் கொண்டே உதார் விடும் காங்கிரஸார் இந்தப் படத்திற்கு சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள். இவர்களுக்கு வடக்கே எதாவது நிகழந்தால் வாடிப்போய் ஓடி உதவுவார்கள். தமிழனுக்கு என்று வந்தால் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இது கடந்த ஐந்து வருடமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

மீனவர் பிரச்சினையில் தொடர்ந்து கத்திக் கொண்டுதான் இருக்கிறோம். செவிடன் காதில் ஊதிய சங்காக ஜால்சாப்பு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த பிரதமர் என்று சொல்லப்படும் எங்கள் தொகுதியில் கள்ளத்தனமாக ஜெயித்த எம்.பி., எதற்கும் ஆதரவு குரல் கொடுப்பதே இல்லை. நாட்டின் பண மதிப்பு குறைந்து கொண்டே போகிறதே என்றால் இது பிரச்சினை இல்லை.... நகை வாங்காதீர்கள் என்பார். வெளிநாட்டில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டி கொண்டு வருகிறாயா... இங்கு கட்ட தனியாக ஒரு பெட்டியில் பணம் கொண்டு வா என்பார். இப்படி ஏறுக்கு மாறாக எதையாவது செய்யும் பொருளாதார மேதை இலங்கைப் பிரச்சினை குறித்து இன்றளவும் எதுவும் சொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருப்பார் போல.

தமிழர்களைக் கொன்று குவித்த எம் இனத் துரோகி ராஜபக்சே என்ற அரக்கன் விரித்த ரத்தினக் கம்பளத்தில் நடந்து சென்று படப்பிடிப்பை நடத்தி வந்திருக்கிறது மெட்ராஸ் கபே படக்குழு. தமிழர்களை உயர்த்திக் காட்ட படம் எடுக்க சென்றிருந்தால் இனத்துரோகி எப்படி வரவேற்ப்பு கொடுத்திருப்பான் என்பது நமக்குத் தெரியாதா என்ன... தமிழன் எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு செம்மறி ஆடாய் தலையாட்டிக் கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு என்பதை இந்த அரசியல்வாதிகள் மறந்து விட்டார்கள் போல.

தமிழினத் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் கேவலமாகச் சித்தரித்து இருப்பதாக படம் குறித்த செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அப்படியில்லை தமிழர்களை நல்லவிதமாகத்தான் காட்டுகிறார்கள் என்கிறார்கள் இந்திய காங்கிரஸில் இருக்கும் நம்ம தமிழ் நாட்டில் பிறந்த கேடுகெட்ட காங்கிரஸார். மும்பையில் கூட திரையிட்ட தியேட்டர் அடித்து நொறுக்கப்பட்டதாக செய்திகளில் பார்த்தேன்.

மும்பையில் குண்டு வெடித்த போது அதற்கு காரணமான பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடாது என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்த அரசு, நம் மக்கள் லட்சம் லட்சமாக கொல்லப்பட்டபோது அது குறித்து எதுவும் சொல்லவில்லை. பக்கத்து நாட்டை நட்பு நாடாகத்தான் பார்க்க வேண்டும். எதிரியாக பார்க்கக்கூடாது என்றார்கள். மேலும் இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழகத்தை தேர்ந்தெடுத்த போது நமது முதல்வர் அவர்கள் தனது கடுமையான எதிர்ப்பைக் காட்டி அதில் வெற்றியும் கண்டார். அதற்கும் எதிர்த்தார்கள்.

அதேபோல் ஐபிஎல் போட்டிகளின் போது இலங்கை வீரர்கள் எமது தமிழக மண்ணில் விளையாடக்கூடாது என்று எதிர்ப்பை தமிழக கட்சிகள் முன் வைத்த போது முதல்வரும் அதில் விடாப்பிடியாக நின்று அவர்களை தமிழக மண்ணிற்குள் வரவிடாமல் செய்தார். (இதற்காக நமது முதல்வரை கேவலமாக சித்தரித்து இலங்கைப் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வெளியிட்டார்கள். இதற்கு அரசு எதுவும் சொல்லியதாக தெரியவில்லை. ) இந்த எதிர்ப்புக்கு எதிராக வட இந்தியா வாலாக்கள் மட்டுமின்றி தமிழக காங்கிரஸாரும் விளையாட்டை விளையாட்டாய் பாருங்கள் என்றார்கள். வடக்கே வந்தால் விளையாட்டை விருட்சமாகப் பார்ப்பார்கள். தமிழனுக்கு என்றால் விளையாட்டை விளையாட்டாவே பார்ப்பார்கள். இதுதான் இன்றைய தமிழனின் நிலை.

நம்மக்களைக் கொன்றவனை அழைத்து விருந்து கொடுக்கிறார்கள். திருப்பதிக்கு குடும்பத்துடன் கூட்டிச்சென்று வழிபட வைக்கிறார்கள். மீனவர்களை சிறைபிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தால் நம் மீனவர்கள் மீது தமிழக எம்பிக்களே  குறை சொல்லுகிறார்கள். மேலும் இலங்கையில் இருந்து வந்த முக்கியப் பிரமுகர் தில்லியில் இருந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வந்ததால்தான் பிடித்து சிறையிலடைத்து வைத்திருக்கிறோம். இப்போது அவர்களை விடமுடியாது என்று தைரியமாகச் சொல்கிறார். அதைக் கேட்டுக் கொண்டு சும்மாதான் இருக்கிறார்கள்... இருக்கிறோம்...

இப்படி தமிழனுக்கு நடக்கும் துரோகத்தை தோலுரித்துக் காட்ட வேண்டிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக எம்.பிக்களும் காங்கிரஸ் அடிபொடிகளும் அதைவிடுத்து எவனோ ஒரு நடிகன் தமிழனைத் தாக்கி எடுத்ததற்கு ஆதரவாய் குரல் கொடுக்கிறார்கள். இவர்களை என்ன சொல்வது... பதவிக்காக தாங்கள் சார்ந்த அரசு செய்யும் ஈனத்தனமான எல்லாத்தையும் நல்லது என்றே சொல்லிக் கொண்டு இருக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளான இவர்கள் இத்தாலி அன்னையார் சோனியாவும் பொருளாதார மேதை தஞ்சாவூர்ப் பொம்மை மன்மோகன்ஜியும் சொன்னால் பீயைக்கூட பிரமாதம் என்று தின்பார்கள்... இவர்கள் எல்லாம் சுயமாகச் சிந்திக்கத் தெரியாத .... இங்கே நம் செல்லப்பிராணியில் பெயரைப் போடக்கூட தகுதியற்றவர்கள் இவர்கள். அவை எப்போதும் நன்றியுடன் இருக்கும்... ஆனால் இவர்கள்..?

கலைஞனுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கு என ஜான் ஆபிரகாம் சொல்கிறார். இதற்கு காங்கிரஸாரும் ஒத்து ஊதுகிறார்கள். சரி ஆர்.கே செல்வமணி குற்றப் பத்திரிக்கை என்று ஒரு படத்தை எடுத்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற ஒரே காரணத்துக்காக அந்தப் படத்தை எத்தனை வருடங்களாக வெளிவரவிடாமல் தடுத்து வைத்திருந்தனர். அன்னைக்கு கலைஞனுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கு என்று சொல்ல எந்த காங்கிரஸ்காரனாவது முன்வந்தானா இல்லையே...

விஸ்வரூபம் மற்றும் தலைவாவுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டபோது தலைவனின் படத்துக்குப் பிரச்சினையா என்று ஆர்ப்பாட்டம் செய்த தமிழக ரசிகர்கள் இந்த நேரத்தில் யாருடைய ரசிகராக இருந்தாலும் ஒன்றினைந்து போராடி மெட்ராஸ் கபேயை தமிழகத்துக்குள் வரவிடாமல் தடுக்க வேண்டும். திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட மறுத்ததால் இன்று வெளியிட இருந்த படம் வெளியாகவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் போராட்டத்தில் பாதி வெற்றியை அடைந்துவிட்டோம் என்பது சந்தோஷமானதுதான். ஆனால் தொடர்ந்து போராடி நம் தமிழ் மக்களுக்கு எதிரான படத்தை தமிழகத்துக்குள் நுழையாமல் தடை செய்ய வேண்டும்.

மேலும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழக காங்கிரஸாருக்கு வரும் தேர்தலில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களை எந்த நாடு என்றால் இந்தியா என்பான்.  இந்தியாவில் எங்கே என்றால் மட்டுமே தமிழ்நாடு என்பான். ஏனென்றால் தமிழன் தம்மை ஒரு இந்தியனாகத்தான் பார்ப்பான். ஆனால் மலையாளியோ முதலில் கேரளா என்றே சொல்வான். அதை தனி நாடு என்பான். மீண்டும் மீண்டும் கேட்டால் மட்டுமே இந்தியா என்பான். அவனுக்கு சொம்பு தூக்கும் அரசு தமிழனை கேவலமாக நடத்துவதை வாடிக்கையாக வைத்து உள்ளது. நமக்கு எதிரான சினிமாவுக்கு மட்டுமல்ல அரசுக்கும் தமிழன் யார் என்பதை தெரிவிக்கும் காலம் விரைவில் வரத்தான் போகிறது.

-'பரிவை' சே.குமார்.

நாயகி : ஸ்ரீதேவி 50


தமிழகத்தில் இருந்து பாலிவுட்டில் கால்பதித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி, தனது 50வது பிறந்த தினத்தை சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினார்.

தமிழ் சினிமாவில் கமல், ரஜினியின் ஆரம்பகாலத் திரைப்படங்களில் அதிகம் ஆக்கிரமித்த ஸ்ரீதேவி, 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிவகாசியில் பிறந்தார். 1967ஆம் ஆண்டு அதாவது தனது நான்காவது வயதில் 'கந்தன் கருணை' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகனார்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினியும் கமலும் இணைந்து நடித்த 'மூன்றுமுடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதில் கமல், ரஜினியுடன் போட்டி போட்டு நடித்திருப்பார். இந்தப் படத்தில் 'வசந்தகால நதிகளிலே... வைரமணி நீரலைகள்...' என்ற அருமையான பாடல் இடம்பெற்றிருந்தது. அதன் பிறகு பாரதிராஜாவின் '16 வயதினிலே...' படத்தில் அவர் ஏற்று நடித்த மயிலு கதாபாத்திரம் எல்லாராலும் பேசப்பட்டது. தமிழ்ச் சினிமா படப்பிடிப்பை ஸ்டுடியோக்களுக்குள் இருந்து வெளியிடங்களுக்கு கொண்டு சென்ற படம் என்ற பெருமையைப் பெற்றது. தமிழ்சினிமாவை 'பாரதிராஜாவிற்கு முன்... பாரதிராஜாவிற்குப் பின்' என்று பார்க்க வைத்த படம் இது. இதில் இடம்பெற்ற 'செந்தூரப்பூவே... செந்தூரப்பூவே...' என்ற பாடல் இன்னும் இசை ரசிகர்களின் விருப்பப்பாடலாக இருக்கிறது.


இதேபோல் 1983ஆம் ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடித்த 'மூன்றாம் பிறை' தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக வந்திருந்தது.இந்தப் படத்தில் மனநிலை தவறிய பெண்ணாக நடித்திருப்பார்.  கவிஞர் கண்ணதாசனின் கடைசி திரை இசைப்பாடலான 'கண்ணே கலைமானே...' என்ற அருமையான பாடல் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தது.  இந்தப் பாடலில் மற்றுமல்ல படம் முழுவதும் ஸ்ரீதேவியின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும். கமல் சொல்லவே வேண்டாம்... கடைசி காட்சியில்  மனுசன் நடிப்பில் கலக்கியிருப்பார்.இந்தப் படத்தின் இறுதிக்காட்சியில் கமலின் நடிப்பு திரையுலகில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

ஆரம்ப காலங்களில் தமிழில் மட்டும் நடித்த ஸ்ரீதேவி பின்னர் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 'ஆலிங்கனம்', 'ஆத்யபாடம்' போன்ற படங்கள் அவருக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. இந்தித் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவிக்கு முதல்படம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லை. ஆம்... அவர் நடித்த 'சோல்வா சாவன்' என்ற படம் தோல்வியைச் சந்தித்தது. ஆனால் அவரது அடுத்தபடமான 'ஹிம்மத்வாலா' இமாலய வெற்றி பெற்று இந்தித் திரையுலகில் ஸ்ரீதேவிக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக் கொடுத்தது. அதன் பிறகு வந்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன.


'லம்ஹே' என்ற இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தனது தந்தையை இழந்தார். பின்னர் தனது தாயையும் இழந்தார். பெற்றோர் இருவரையும் தனது இளம்வயதிலேயே இழந்த ஸ்ரீதேவி தனது சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தார். அந்தப் பிரச்சினைகளில் எல்லாம் இருந்து மீண்டு வந்த அவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியுடன் இணைத்துப் பேசப்பட்டார். மிதுன் சக்கரவர்த்தி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஸ்ரீதேவியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்யப் போகிறார் என்ற வதந்திக்கு மிதுன் அவர்கள் தனது மனைவியை விவகாரத்து செய்யப் போவதில்லை என்று சொன்ன பிறகுதான் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அந்த நிகழ்வுக்குப் பிறகு 1996ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரைத் திருமணம் செய்து கொண்டார். அவரது சந்தோஷமான திருமண வாழ்வில் அடையாளமாக ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்களைப் பெற்றெடுத்தார். 


நீண்ட காலங்களுக்குப் பிறகு தமிழில் அரவிந்த் சாமியுடன் 'தேவராகம்' என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழ் மற்றும் இந்தியில் வெளியான 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' என்ற படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது திறமையை நிரூபித்திருப்பார். இந்தப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. தமிழில் ஒரு காட்சியில் 'தல' அஜீத் நடித்திருப்பார். தமிழில் ஸ்ரீதேவிக்குப் பின்னர் அம்பிகா,ராதா,நதியா, குஷ்பு, சிம்ரன்,திரிஷா, அசின்,அனுஷ்கா என நிறைய நாயகிகள் வந்து சென்றாலும் ஸ்ரீதேவியின் இடத்தை யாருமே அடையவில்லை என்பதே உண்மை.

இந்த வருடம் மத்திய அரசு ஸ்ரீதேவிக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது. மேலும் தமிழில் 'மீண்டும் கோகிலா', இந்தியில் 'சால்பாஸ்' மற்றும் 'லம்ஹே',  தெலுங்கில் 'க்ஷன க்ஷனம்' முதலிய படங்களுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றிருக்கிறார். 'தேவராகம்' படத்தில் நடித்ததற்காக 'டொரண்'டோ விருதினைப் பெற்றார். மேலும் வம்சி ஆர்ட்ஸ் தியேட்டர் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு  'வாழ்நாள் சாதனையாளர்' என்ற விருதை வழங்கி சிறப்பித்தது.


தன் திறமையால் இந்தியத் திரையுலகை ஆண்ட தமிழச்சி ஸ்ரீதேவி பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்...

செய்திகளுக்காக விக்கிப்பீடியா உள்ளிட்ட சில தளங்களைப் பார்த்தேன்... அந்தத் தளங்களுக்கு எல்லாம் நன்றி.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

நெல் குறித்த பகிர்வுக்கு ஜோதிஜி அண்ணனின் பின்னூட்டம்


நான் நேற்று எழுதிய கிராமத்து நினைவுகளில் நெல்லும் நினைவுகளும் என்ற பதிவுக்கு எங்கள் மண்ணில் இருந்து சென்று திருப்பூரில் தொழிற் செய்யும் அன்பு அண்ணன் ஜோதிஜி அவர்கள் மிகவும் அருமையான... நீண்டதொரு பதிவை பின்னூட்டமாக எழுதியிருந்தார். டாலர் நகரம் என்ற புத்தகத்தின் ஆசிரியரான அவரின் பதிவுகள் பெரும்பாலும் சமூகம் சார்ந்தவையாகவே இருக்கும்... அண்ணனின் பின்னூட்டம் பின்னூட்டத்தில் மட்டும் இருந்தால் எல்லாரும் பார்க்க வாய்ப்பில்லை என்பதால் இங்கு பகிர்கிறேன்.... படியுங்கள்...

படியளந்தார் பண்டைத் தமிழர்! நாம் எப்படி இருக்கிறோம்..?

நமது முதியவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி மிக இயல்பாக' ஆண்டவன் படியளக் கிறான் ' என்று குறிப்பிடுவதுண்டு. கிராமங்களில் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து சற்று வசதியாக வாழ்பவர்களை 'உனக்கென்னப்பா ..முதலாளி படியளக்கிறாரு ......' என்று நண்பர்கள் நையாண்டி செய்வதுண்டு. ஆணவத் தொனியில் பேசுபவர்களைப் பார்த்து 'என்னமோ நீ படியளக்கிற மாதிரியில்ல பேசுறே..' என்று வரிந்து கட்டுவதுண்டு.

படியளப்பது என்பது என்னவென்று நமது இந்த நவீன கால இளம் வயதுத் தோழர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. 'சமைக்கவே வேண்டாம். அப்படியே சாப்பிடுவேன் 'என்பது போன்ற 'பாஸ்ட் புட்' கலாசாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவர்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை. கிராம் மற்றும் கிலோ கணக்குகளில் உழன்று கொண்டிருக்கின்ற இந்தக் கால இல்லத்தரசிகளுக்குக் கூட இது மறந்துபோய்க் கொண்டிருக்கின்ற விஷயமாக இருக்கக் கூடும். அதனால் இந்த ' படியளப்பது' குறித்த சில விஷயங்களை இங்கே பதிவு செய்து வைப்பது அவசியமாகிறது.

நெல், பயறு போன்ற தானியங்களை அளப்பதற்கு பண்டைய தமிழ் மக்கள் ஏறத்தாழ 20 வகையான அளவீடுகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அணு , சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு ,படி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்பவை அவைகளில் முக்கியமானவைகளாக இருந்தன.

'படி' என்ற உருளை வடிவிலான அளவுக் கருவியில் நெல்லை நிரப்பினால் அதில் 14,400 நெல்மணிகள் இருந்தன. அரிசியானால் 38000 மணிகளும் பயறு ஆனால் 14,800 மும், மிளகு ஆனால் 12,800 மும் இருந்தன. இது ஒரு படி என்று அளக்கப்பட்டது.

இதற்கு அடுத்ததாக 'மரக்கால் ' என்ற அளவீட்டுக் கருவி இருந்தது. எட்டு படிகளைக் கொண்டது ஒரு மரக்கால். அதாவது ஒரு மரக்காலில் நெல்லை நிரப்பும்போது அதில் எட்டுப் படிகளில் அளக்கக் கூடிய நெல் நிரம்பும். இப்படித்தான் நமது முன்னோர்கள் தானியங்களை அளவீடு செய்து வந்தார்கள்.

இந்த பழங்கால அளவீட்டு முறை இப்போது அழிந்தொன்றும் போய் விடவில்லை. இன்றும் தென்னகக் கிராமங்களில் பழக்கத்தில் இருந்து வருகின்றது. பண்ணையார்களின் நிலங்களில் பயிர்த்தொழில் செய்து வருகின்ற விவசாயிகள் இந்த முறையில்தான் தங்களது குத்தகையைச் செலுத்தி வருகிறார்கள்.

இங்கே இந்த ' படியளப்பது ' பற்றிய விஷயத்தை பதிவு செய்வதின் நோக்கமே இனிமேல்தான் வருகிறது.

என்ன அது..?

சமீபத்தில் கிராமம் ஒன்றில் இப்படிப் படியளக்கும் ஒரு நிகழ்வைக் காண நேர்ந்தது. அது சுவாரஸ்யமாக இருந்தது என்று மட்டும் சொல்வதை விட வியப்பூட்டுவதாகவும் இருந்தது என்றும் சொல்லவேண்டும். அந்த நிகழ்வை விளக்குகிறேன். கேளுங்கள்.

அந்த விவசாயி மரக்கால் கொண்டு , தான் விளைவித்த நெல்லை அளந்து கொடுத்தார். இந்த 'அளப்பு' ஒரு இசைப்பாட்டு போல சந்தத்தோடு இருந்தது என்பதுவும், எண்ணிக்கையை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் உரத்த குரலில் இருந்தது என்பதுவும் வேறு விஷயங்கள். இங்கே நான் சொல்ல வருவது அதைப் பற்றியல்ல.

முதல் மரக்காலை 'ஒன்று' என்று எண்ணாமல் 'லாபம்' என்று அவர் சொன்னார். அடுத்து ரெண்டு,மூணு,நாலு,ஐந்து, ஆறு ,ஏழு..என்று எண்ணினார். எட்டாவது மரக்காலை எட்டு என்று அவர் எண்ணவில்லை. .'எட்டு மரக்கால்' என்று சொன்னார். அடுத்து 'ஒன்பது', 'பத்து' என்று தொடர்ந்து, பதினெட்டாவது மரக்கால் அளக்கும்போது 'பதினெட்டு மரக்கால்' என்று எண்ணினார்.

ஏன் ஒன்று என எண்ணாமல் லாபம் என்று சொன்னார்..?. ஏன் எட்டு என்று சொல்லாமல் எட்டு மரக்கால் என்று எண்ணினார்..?

இங்கேதான் நமது முன்னோர்கள் ஆதி காலம் முதலாகவே தம்மிடம் பன்முகச் சிந்தனையைக் கொண்டிருந்த சிறப்பை நாம் புரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது.

இந்த வருடத்து உழைப்பின் பயனாக வந்த முதல் மரக்கால் நெல்லை 'லாபம்' என்று சுபச் சொல்லால் குறிப்பிட்டு அந்த லாபம் அடுத்த ஆண்டும் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

'எட்டு' என்ற எண் ஏனோ ராசியில்லாத எண்ணாக உலகம் முழுவதுமே புறக்கணிக்கப்பட்டு வருகிறது.' எட்டு குட்டிச் சுவர்' என்ற சொலவடை ஒன்று இன்றும் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டுதான் தங்களின் வாழ்வாதாரமான வேளாண் வருமானத்துக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடாதவாறு 'எட்டு' என்று மட்டும் உச்சரிக்காமல் அதோடு நெல் நிறைந்த மரக்காலையும் சேர்த்துக்கொண்டு 'எட்டு மரக்கால்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்ததாக அளந்த நெல்லை சாக்குப்பைகளில் நிரப்பிக் கட்டும் இடைவெளிகளில் நெல்லை அளப்பவர் தான் வைத்திருந்த மரக்காலை தவறிக்கூட குப்புற வைத்துவிடாமல் நிமிர்ந்த நிலையிலேயே வைத்திருப்பதில் கவனமாக இருந்ததைக் கவனிக்க நேர்ந்தது.

ஏன் அப்படி..?

ஏனெனில் கவிழ்த்து வைப்பது ' முடிந்து விட்டது' என்பதின் அடையாளமாகக் கருதப்பட்டது. படியளப்பது எப்போதுமே தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் வினைச்செயல் அது.

இறுதியாக நெல் அளந்து முடிந்தது. இப்போதும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அளந்த மரக்காலை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்தபோது நெல் அளந்தவர் வெறும் மரக்காலைக் கொடுக்காமல் மரக்காலில் சிறிது நெல்லை அள்ளிப்போட்டு மரக்காலைக் கொடுத்தார்.

இந்தச் செயலுக்குப் பொருளென்ன..?

நெல் அளக்கும் மரக்கால் வெறுமையாக இருக்கக் கூடாது. 'அட்சய பாத்திரத்தில் இடப்படுகின்ற ஒரு பிடிச் சோறு வளர்ந்து ஒரு ஊரின் பசியைத் தீர்ப்பது போல அந்த மரக்காலில் இடப்படுகின்ற நெல் எப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அந்த மரக்கால் நெல்லை அளந்து கொண்டேயிருக்கவேண்டும் என்பது அந்த முன்னோர்களது விருப்பம். அந்த விருப்பத்தின் விளைவே இந்தச் செயலானது

இப்படியாக கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் அளந்த மரக்காலின் உரிமையாளருக்கும் கூட நன்மையே விளைய வேண்டும் என்ற நேர்மறை எண்ணங்களைத் [ Positive thinking] தம்மிடம் கொண்டு அதற்கேற்ற வகையில் தம் செயல்களை வகுத்துக்கொண்ட நம் முன்னோர்களின் அறிவுத் திறனை என்னவென்று வியப்பது..?

யாதும் ஊராக, யாவரும் கேளிராக, எல்லோரும் இன்புற்று வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர். நாம் எப்படி இருக்கிறோம்..?

அண்ணனின் பின்னூட்டம் இதுதான் எவ்வளவு அற்புதமான விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறார். கடைசியில் "fb" என்று போட்டிருந்தார். ஒருவேளை முகநூலில் பகிர்ந்திருக்கலாம். சமீபத்தில்தான் அண்ணனின் முகநூல் நட்பு வட்டத்தில் இணைந்தேன். அதனால் நான் அறியவில்லை.

அவர்  சொல்லியிருப்பது போல் நெல்லைப் படியால் அளக்கும் போது முதலில் லாபம் என்றுதான் சொல்லுவார்கள். பின்னர் ரெண்டு, மூணு என்று வரிசையாக எண்ணுவார்கள். எங்க பக்கத்தில் எட்டு என்று சொல்லும் போது எட்டுப்படி என்பார்கள். அதற்கு அண்ணன் சொல்லியிருப்பதே காரணமாக இருக்கலாம்.

வயலில் இருந்து கொண்டு வந்து களத்தில் வைத்த கதிர்கட்டுக்களை அடித்து நெல்லையும் வைக்கோலையும் பிரித்து, வைக்கோலை மாட்டை வைத்து பிணையல் அடித்து நல்ல நெல்லையும் பிணையலில் வந்த நெல்லையும் தனித்தனியாகத் தூற்றி காற்றுக்காக சொளகு (முறம்) வீசி சுத்தம் செய்து சுத்தமான நல்ல நெல்லை வீட்டிற்கு அள்ளி வரும் முன்னராக போராகக் கிடக்கும் நெல் குவியலில் இருந்து வேலை பார்த்தவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருப்பார். கூலியைவிட ஒருபடி ரெண்டுபடி கூடுதலாகப் போட்டுத்தான் கொடுப்பார். அதனால் அப்பாவுக்காக வேலைக்கு வருபவர்கள் வேறு யார் கூப்பிட்டாலும் செல்லமாட்டார்கள்.

அப்புறம் அளந்து முடிந்ததும் படியை குப்புற வைக்கமாட்டார்கள்.... அதில் கொஞ்சம் நெல்லைப் போட்டுத்தான் கொடுப்பார்கள். இங்கு அறையில் சோறு வடிக்கும் போது நான் அரிசி எடுத்தால் எத்தனை உலக்குப் போட்டாலும் கடைசியில் உலக்கில் நாலைந்து அரிசிகளை வைத்தே அரிசி வாளிக்குள் போடுவேன். இந்தப் பழக்கம் சிறுவயதில் நெல் அளக்கும்போது பார்த்து வந்ததுதான்.

எங்கள் பக்கம் இன்னும் இந்த அளவீட்டு முறைகள் இருக்கத்தான் செய்கின்றன... அண்ணன் ஜோதிஜி அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்ததும் பதிய விரும்பினேன்.  அவர் தம்பிக்கு அனுமதிப்பார் என்ற நம்பிக்கையில் அவரிடம் அனுமதி பெறவில்லை...

திரு. ஜோதிஜி அண்ணனின் கருத்துக்கள் எப்படியிருக்கு என்று சொல்லுங்கள் உறவுகளே....

-'பரிவை' சே.குமார்.

புதன், 21 ஆகஸ்ட், 2013

கிராமத்து நினைவுகள் : நெல்லும் நினைவுகளும்

(படம் : கூகிள்)

கிராமத்து நினைவுகளை அப்ப அப்ப கொஞ்சம் மீட்டிப் பார்ப்பதுண்டு. அப்படி இன்று எனக்குள் வந்து சென்ற நினைவு அம்மாவுடன் சேர்ந்து நெல் அவித்த நாட்கள் குறித்தாகும். சரி அதை கிராமத்து நினைவுகளில் பகிரலாம் என எழுதியாச்சு...

வயலில் அறுவடை செய்து களத்துக்கு கொண்டு வந்து அடித்து காயவைத்து மூட்டைகளாகக் கற்றி பின்னர் மறுநாட்களில் மீண்டும் காயவைத்து தூற்றி சுத்தம் செய்து மச்சுக்குள் (நெற்குதிர்) கொட்டி வைப்போம்.

கிராமத்து வீடுகளில் எல்லாம் நெல் கொட்டி வைக்கும் மச்சு என்பது ஒன்று இருக்கும். எங்கள் வீடு மாடமாளிகையோ கூட கோபுரமோ இல்லை... சிறிய ஓட்டு வீடுதான்... வீட்டில் முதலில் இருப்பதை திண்ணை (மோப்பு) என்போம் அதற்கு அடுத்தது ஆல்வீடு (ஒருவேளை ஹால் என்பது ஆல் என்று மாறியிருக்குமோ என்னவோ) எங்க வீடு இது இரண்டையும் கொண்டது. திண்ணையில் பத்துக்குப் பத்து அறை அளவுக்கு மச்சு கட்டியிருப்போம். அதன் மேலே பாத்திரங்கள், களைக்கொட்டு, கதிர் அருவாள்கள் மற்றும் சிலவற்றை போட்டு வைத்திருப்போம். மச்சின் மேல் புறம் நடுவில் ஒரு ஆள் இறங்கி ஏறும் அளவுக்கு பலகையால் அடைத்து வைத்திருப்போம். மச்சின் முன்புறம் கீழிருந்து சற்றே உயரமான இடத்தில் வட்டவடிவில் ஒரு ஓட்டை இருக்கும் அதையும் அடைத்து வைத்திருப்போம்.

ஆல்வீட்டில் ஒரு சாமி அறை இருக்கும் அதற்குள் சாமிப்படங்களைத் தவிர மர பீரோக்கள் முக்கியமான பாதுகாக்க வேண்டிய பொருட்களை வைத்து பூட்டி வைத்திருப்போம். வீட்டின் பின்னே ஒரு மாட்டுக் கசாலை. முன்னால் அடுப்படி அதை ஒட்டியிருக்கும் இடத்தில் சிமெண்ட் போட்டு தென்னங்கீற்றால் ஒரு கொட்டை போட்டு வைத்திருப்போம். சரி வீட்டு நினைவுக்கு அப்புறம் போகலாம்.  நெல் நினைவுக்குப் போகலாம் வாங்க.

நல்லா காய்ந்த நெல்லை கொண்டு வந்து மச்சுக்குள் கொட்டி வைப்போம். ஒரு சில வருடங்கள் மச்சு நிறைந்து இடமில்லாம் மூட்டைகளாக கட்டி வைப்பதும் உண்டு. அப்போதெல்லாம் அப்பா மச்சுக்குள் இத்தனை பொதியிருக்கு என்று கணக்கு வைத்திருப்பார். அவர் கணக்கெல்லாம் நமக்குத் தெரியாது.

நெல் அவிப்பதற்கு அம்மா தேர்ந்தெடுக்கும் நாள் பெரும்பாலும் சனி, ஞாயிறுதான்... அப்பத்தானே நாங்கள் வீட்டில் இருப்போம். மச்சுக்குள் நெல் அதிகமிருந்தால் பிரச்சினை இல்லை முன்பக்கம் இருக்கும்  வட்ட வடிவ ஓட்டையைத் திறந்து கொட்டாப் பொட்டியில் (பணமட்டை நாறில் உருவாக்கியது) பிடித்து வைப்போம். அம்மா அதிகாலையில் எழுந்து எப்பவும் நாங்கள் நெல் அவிப்பதற்காக போட்டிருக்கும் '' வடிவாக வைத்திருக்கும் மூன்று கல்லின் மீது நெல் அவிக்கும் பெரிய அண்டாவை வைத்து முதல் நாள் கொண்டு வந்து போட்ட கருவைச் சுப்பிகளையும் பனைமரத்தின் சில்லாமடைகளையும் போட்டி அடுப்பைப் பற்ற வைக்க நாங்கள் நெல்லைக் கொண்டு வந்து கொட்டி அண்டாவை முக்கால் அளவுக்கு நிறைத்து தண்ணீரும் மோந்து ஊற்றி வைக்க,  கொஞ்ச நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்துவிடும். கொதி வந்ததும் சாக்கை வைத்து இறுக மூடி விடுவாரக்ள். நன்றாக அவிந்ததும் தண்ணீரை வடித்து கொட்டாப்பெட்டி மற்றும்  கூடைகளில் அவிந்த நெல்லை அள்ளி வைத்து நன்றாக நீர் வடிந்ததும் களத்தில் கொண்டுபோய் காய வைப்போம்.

மச்சுக்குள் இருந்து நெல் அள்ளுவதே ஒரு கலைதான் போங்க... நிறைந்து இருந்தால் பிரச்சினை இல்லை. முன்பக்கம் இருக்கும் ஓட்டை வழியாக சுலபமாக நெல்லை பெட்டிகளில் பிடித்துவிடலாம். குறைந்து அடிமட்டம் வரும்போது மேல்புறமாக திறந்து ஒருவர் இறங்கி நெல்லைக் குவித்து முன்பக்க ஓட்டை வழியாக தள்ளிவிட வேண்டும். பள்ளியில் படிக்கும் போதெல்லாம் மின்சாரம் இல்லை. அப்போ இறங்கி டார்ச் லைட்டை வைத்துக் கொண்டு தள்ள வேண்டும். வேர்க்க ஆரம்பித்ததும் நெல் தூசி மேலில் பட்டு அரிக்க ஆரம்பித்துவிடும். நாளாக நாளாக அந்து என்ற பூச்சியும் நிறைய இருக்கும். உள்ளே இறங்குபவரை மொய்த்து எடுத்துவிடும். அதில் இறங்க எனக்கும் தம்பிக்கும் சண்டையே நடக்கும். பின்னர் யாராவது ஒருவர் இறங்க ஒருவர் பெட்டிகளில் பிடித்து அம்மாவிடம் கொண்டு செல்வோம்.

அடுத்த பிரச்சினை நெல் காயப்போடும் பொட்டலில் ஆரம்பிக்கும்... வீட்டுக்கு அருகில் இருக்கும் பொட்டலில் போட நினைத்தால் வேறு யாராவது விளக்குமாற்றைப் போட்டு இடம் பிடித்துவிடுவார்கள். அக்கா ரொம்ப உஷாரா இருந்து அதிகாலையிலேயே விளக்குமாற்றைப் போட்டு வைத்து அதன் பிறகு மாட்டுச்சாணியைக் கரைத்து நன்றாக தெளித்து கூட்டி வைத்துவிடும். நெல்லைக் கொட்டி காய வைப்பது என்பது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி 2 மணி வரை அடிக்கடி நெல்லைக் கிளறிவிட்டு காய வைக்க வேண்டும். அப்போது யாராவது ஒருவர் அங்கயே உட்கார்ந்து இருந்து மாடு ஆடு தின்னுவிடாமல், கோழி கலைத்துவிடாமல், காக்கை வந்து சாப்பிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 

நெல்லோடு சேர்ந்து வெயிலில் காய்வதற்குப் பதில் மாடு மேய்க்கப்போனால் பசங்களுடன் கம்மாயில் ஆடலாம், செட்டியார் தோட்டத்தில் எளநீ வெட்டிக் (தெரியாமல்தான்) குடிக்கலாம் என்பதால் எனக்கும் தம்பிக்கும் மீண்டும் சண்டை வரும். ஜெயிப்பது பெரும்பாலும் தம்பியாகவே இருக்கும். நெல்லைக் காயப் போட்டுவிட்டு அங்கிருக்கும் மரத்தடியில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டு க்ரைம் நாவலோ பாக்கெட் நாவலோ படிக்க வேண்டியதுதான். அம்மா காபி போட்டுக் கொடுத்துவிடுவார். அப்பா தேவகோட்டை போனால் மலையாளத்தார் கடையில் அப்பம் வாங்கிக் கொண்டு வருவார். பொட்டலில் நெல்லைப் பார்த்துக் கொள்ளும் நமக்கு இரண்டு கிடைக்கும். 

மழை வருவது போல இருந்தால் உடனே அள்ளிவிடுவோம். இல்லையென்றால் நல்லா காயவைத்து அள்ளி மூட்டைகளில் வைப்போம். இரண்டு மூன்று நாட்கள் நன்றாக காய வைத்து அரைக்கப் போகும் அன்று கொஞ்ச நேரம் நிழக்காய்ச்சலில் போட்டு (அப்பத்தான் நெல் உடையாமல் இருக்கும்) அரைக்க கொண்டு போவோம். அப்பாவும் நானும் ஆளுக்கொரு சைக்கிளில் மூட்டையைக் கட்டிக் கொண்டு போய் அரைத்து வருவோம். அது பெரிய கதையாக இருக்கும் அதை பின்னொரு பதிவில் பார்ப்போம்.

இப்ப என்ன வருத்தம்ன்னா விவசாயமும் பொய்த்துப் போச்சு... எங்க வீட்ல மச்சையும் இடித்து எடுத்தாச்சு... இப்போ பத்துக்குப் பத்து இடம் திண்ணையில் கூடியாச்சு. நெல் காயப்போட்ட களங்களெல்லாம் மாட்டுச் சாணமும் குப்பையுமாய்... நெல் அவிக்கும் அண்டா பரணில் பத்திரமாய்... எல்லாம் இழந்து இப்போ மில்லில் அரிசி வாங்கி சாப்பிடுகிறார்கள்.
-'பரிவை' சே.குமார்.

தொடர்கதை : கலையாத கனவுகள்-9

முந்தைய பதிவுகளைப் படிக்க...



***** ***** ***** ***** ***** *****

9. கோபம் கொள்ளும் மனம்

முன்கதைச் சுருக்கம்.

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் கிராமத்து ஏழை மாணவன் ராம்கி கல்லூரியில் சேர்கிறான். அங்கு மாணவி புவனாவின் அறிமுகம் கிடைக்கிறது. நண்பர்கள் காதல் என்று ஏற்றிவிடுகிறார்கள். அவள் கல்லூரி ரவுடி வைரவன் தங்கை என்று தெரிய வருகிறது. இதற்கிடையே ராம்கியின் அக்காவுக்கு பிடிக்காத மாமா மகன் ரவுடி முத்துராசுக்கு அவளைக் கட்டி வைக்க அம்மா முடிவு செய்கிறாள். புவனா அவனை அடிக்கடி எதேச்சையாக சந்திக்கிறாள். ஆனந்தவிகடனில் புவனாவின் கவிதை வந்திருப்பதால் அதை வாங்க முடிவு செய்கிறான்.

இனி...

"மாப்ளே... நேர கருணாநிதி அண்ணன் பெட்டிக்கடை போ..." என்றான் ராம்கி.

"எதுக்குடா..." - பழனி.

"அதான் மத்தியானமே சொன்னேன்னுல்ல... ஆனந்த விகடன் வாங்கணுமின்னு"

"அதுல என்னடா அப்படி வந்திருக்கு.."

"வா... புத்தகத்தை வாங்கி என்ன இருக்குன்னு காட்டுறேன்..."

"ம்..."

புத்தகத்தை வாங்கி பரபரவெனப் பிரித்தான். கவிதைகள் வெளியாகியிருந்த பக்கத்தில் கண்களை மேயவிட்டான். புவனா பேர் இருக்குதான்னு தேடினான். பேரே இல்லை... சை... எதுக்கு அவ பொய் சொல்லணும் மனசு வலித்தது. அவனது ஆவல் சப்பென்று போக முகத்தில் இருந்த சந்தோஷம் மின்சாரம் போன திரையரங்கமாக இருள் அப்பிக்கொண்டது.

"ஏய்... என்னடா ஆச்சு... சந்தோஷமா வந்தே... சப்புன்னு ஆயிட்டே..."

"ஒண்ணுமில்ல... சரி வா போலாம்..."

"இதுல என்ன இருக்கு... எதுக்கு வாங்கினே..."

"சும்மாதான்... வாடா..."

"நீ போ... நான் வரல... என்கிட்ட மறைக்கிற அளவுக்கு முக்கியமான விசயம் உன்கிட்ட இருக்குன்னா அப்புறம் உன்கூட நான் எதுக்கு... நீ போயிக்க..."

"டேய்... எதுக்குடா கோபப்படுறே... அவ கவிதை வந்திருக்குன்னு சொன்னா அதான் பாக்கலாம்ன்னு வாங்கினேன்..."

"எவ...?"

"அதான்டா புவனா..."

"ஓ... இம்புட்டுத்தூரம் வந்தாச்சா... எங்ககிட்ட அவ ஒண்ணும் சொல்லலைன்னு சொன்னே..."

"எல்லார்கிட்டயும் இத சொன்னா அவ லவ் பண்றா அது இதுன்னு எதாவது சொல்லுவாங்க... சும்மா பேசினதுக்கு கதை கட்டுவாங்க... அதான்..."

"சரி சும்மா பேசினே... சரி.... அவ சொன்னதை நம்பி புத்தகம் வாங்குற அளவுக்கு வந்திருக்கே... அப்புறம் காதல் இல்லாம் என்ன இது..."

"அதெல்லாம் இல்லடா.. சும்மா பிரண்ட்லியாத்தான் வாங்கிப் பார்த்தேன்..."

"சும்மா சொல்லி அவ உன்னைய டெஸ்ட் பண்ணிப் பாத்திருக்கா... நீ நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு புத்தகத்தை வாங்கிட்டே..."

"பிரண்டோட எழுத்துன்னா வாங்கிப் பார்க்கச் சொல்லுமுல்ல அப்படித்தாண்டா வாங்கினேன்..."

"சரி... மாப்ளே.... எதா இருந்தாலும் யோசிச்சு இறங்கு... அந்த சாதிக்காரனுவா கொலை வரைக்கும் போவாய்ங்க... நமக்கு அதெல்லாம் சரிப்படாது அம்புட்டுத்தான்... நீ போ நான் சரவணன் வீட்டு வரைக்கும் பொயிட்டு வாறேன்..." என்றபடி சைக்கிளைத் திருப்பினான்.

அடுத்த நாள் கல்லூரி மரத்தடியில் சைக்கிளை நிறுத்தியவன் எதேச்சையாக திரும்ப, புவனா தோழிகளுடன் வகுப்பறை நோக்கி போய்க் கொண்டிருந்தாள். அவனைக் கடக்கும் போது புன்னகைக்க ஆனந்த விகடன் வருத்தத்தில் திரும்பிக்கொண்டான். 

"அலோ" பின்னால் குரல் கேட்டு திரும்பினான். புவனா அருகில் நின்றாள். பேசாமல் நின்றான்.

"தெரிஞ்சவங்கங்கிறதாலதான் சிரிச்சேன்... சும்மா எல்லாரையும் பார்த்து சிரிக்க நான் ஒண்ணும் பைத்தியமில்லை... பேசாம போறதுன்னா போங்க... திரும்பிக்கிறீங்க..." கோபமாகக் கேட்டாள்.

"நீங்க எதுக்குங்க எங்கிட்ட பொய் சொன்னீங்க...?"

"என்ன பொய்... எப்பச் சொன்னேன்..."

"அது சரி... ஆனந்த விகடன்ல கவிதை வந்திருக்குன்னு சொன்னீங்க... இந்தா இருக்கு இதுல எங்கங்க வந்திருக்கு?" கோபமாக புத்தகத்தை அவளிடம் நீட்டினான்.

"இதுக்குத்தான் இம்புட்டா... சரி நேத்து நான் சொன்னப்போ வேண்டா வெறுப்பாக் கேட்டீங்க.... என்ன கவிதை... என்ன பேர்ல வந்திருக்குன்னு கேட்கணுமின்னு தோணலை உங்களுக்கு... எங்க எங்க அண்ணனோ அவனோட பிரண்ட்ஸோ வந்துருவாங்கன்னு பயந்து போயி நின்னீங்க... அப்புறம் புக்க வாங்கி தேடிட்டு இல்லைன்னா நான் என்ன செய்யிறது..." என்றபடி புத்தகத்தைப் பிரித்து "இந்தாங்க வாழ்க்கைப் பயணம்ன்னு இருக்குல்ல அதைப் படிங்க..." என்று அவனிடம் திருப்பி நீட்டினாள்.

வாங்கியவன் முதலில் பேரைப் பார்த்தான் 'கவிதைப்பிரியா'ன்னு இருந்தது. கவிதையை வாசித்தவன் இப்படியெல்லாம் எழுத முடியுமா என்று வியந்தான். 
"இதுல கவிதைப்பிரியான்னு...." மெதுவாக இழுத்தான்.

"நாந்தான்... சும்மா புனைப்பெயர் வச்சி எழுதுறேன்... அப்புறம் எங்கிட்ட பேசுறதுனால எங்க அண்ணன் ஒண்ணும் கோவிச்சுக்க மாட்டான். என்னைப் பற்றி அவனுக்கு நல்லாத் தெரியும்... பயப்படாதீங்க.. ஓகே பார்க்கலாம்... வாறேன்..." என்றபடி வகுப்பறை நோக்கி நடந்தாள்.

ராம்கி மீண்டும் அந்தக் கவிதையை வாசித்துப் பார்த்து கவிதைப்பிரியாவை ரசித்தான். சைக்கிள் கேரியரில் இருந்து நோட்டையும் டிபன் பாக்ஸையும் எடுத்துக் கொண்டு வகுப்பிற்கு கிளம்ப அவனுக்கு அருகில் 'சர்ர்ரென்று...' தனது யமாஹாவை கொண்டு வந்து நிறுத்தினான் வைரவன்.

(சனிக்கிழமை தொடரும்)

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

எங்க போறே தாத்தா...?

(படத்துக்கு நன்றி : வண்ணத்துப்பூச்சி சினிமா குழு)

என்ன தாத்தா கோவமாப் போறே..?
ஒண்ணுமில்லடி ராசாத்தி...

இப்படித்தான் பாட்டி போனப்போ
நீ ஒண்ணுமில்லன்னு சொன்னே
பாட்டி இன்னும் வரலை...

நீயும் ஒண்ணுமில்லன்னு சொல்றே...
அப்ப நீயும்.... வாயைப் பொத்தி
மடியில் அமர்த்தி...

பாட்டி போனாங்கள்ல 
அவங்களைத்தான்
பார்க்கப் போறேன்...

நானும் வாரேன்...

ரொம்பத்தூரம் போகணும்
தாத்தா பாத்துட்டு வந்துடுறேன்...

சீக்கிரமா பார்த்துட்டு வா...
எங்கிட்ட கூட்டிக்கிட்டு வா...

ராத்திரியாச்சின்னா வராதே...
பேயெல்லாம் வருமாம்...

சரிடி என் செல்லம்...
துண்டை தோளில் போட்டுக் 
கொண்டு மனைவியை புதைத்த
இடம் நோக்கி நடந்தார்... 

சில வார்த்தைகள் பேசி
மனபாரத்தை குறைக்க..!

(மார்ச் 2010-ல் நெடுங்கவிதைகள் தளத்தில் எழுதியது)


-'பரிவை' சே.குமார்.