மார்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விதவிதமான கோலங்கள் வரைந்து அதில் பொறுமையாய் பார்த்துப் பார்த்து கலர்க் கொடுத்து ரோட்டில் போவரை எல்லாம் ரசிக்க வைப்பதில் அலாதிப் பிரியம்.

நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்க அக்காக்களெல்லாம் மார்கழி மாதம் வருவதற்கு முன்னரே கலர்பொடி பாக்கெட்டுக்களை வாங்கி வந்து அதில் மணல் கலந்து டப்பாக்களில் கொட்டி வைப்பார்கள். கிராமங்களில் எல்லா நாளும் கலர் கொடுக்க மாட்டார்கள். மாதத்தில் சில நாட்கள் கொடுப்பார்கள். பொங்கலன்று கொடுப்பார்கள்... அவ்வளவே... விதவிதமாய் கோலங்கள் வரைந்து பத்திரப்படுத்தி வைத்த நோட்டுக்களை மார்கழி மாதம் மட்டுமே எடுப்பார்கள். முதல்நாள் இரவே நாளைக்கு என்ன கோலம் வரைவது என்பதை முடிவு செய்து, எத்தனை புள்ளி எத்தனை வரிசை என்று பார்த்து ஒரு முறை போட்டுப் பார்த்துக் கொள்வார்கள். மறுநாள் வாசலைக் கூட்டி, அதில் சாணம் தெளித்து (இப்பல்லாம் தண்ணிதான்) அழகாய் புள்ளி வைத்து கோலமிட்டு கலர்க் கொடுத்து நிமிரும் போது அவர்களின் கைவண்ணம் அதில் அழகாய்த் தெரியும்.

அப்போதெல்லாம் கோலத்திற்கு கலர் கொடுக்கப் போவதுண்டு. எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் எங்க வீட்டில்தான் கோலம் போடுவார்கள். எனவே தினம் இரண்டு கோலம் போடுவதால் கோவிலில் போட்டுவிட்டு வீட்டிற்கு போடுவதற்குள் கோவிலில் நானும் தம்பியும் கலர் கொடுத்து விடுவோம். அப்புறம் நாங்க வீட்டு வாசலுக்கு வர, அக்காவோ அண்ணியோ கோவில் கோலத்தின் மேல மறுபடியும் கோலப்பொடியால் விளிம்பிவிட்டு வருவார்கள். ஒரு சில நேரங்களில் நாங்கள் கலர் கொடுக்க எழுந்திரிக்க மாட்டோம். படுத்துக்கிட்டு தூக்கம் வருதுன்னு பிகு பண்ணுவோம். அவர்கள் கெஞ்ச... நாங்க மிஞ்சிவிடுவோம்.
பெரும்பாலும் பொங்கலன்று பொங்கப்பானை போடுவதெல்லாம் நாங்களாகத்தான் இருக்கும். கரும்பு, மஞ்சள் கொத்து அது இதுன்னு எல்லாம் நாங்களே வரைவோம். மாட்டுப் பொங்கலன்று தம்பி அழகாய் மாடு வரைந்து விடுவான். பின்னர் பொங்கல் வாழ்த்துக்கள் என்று அழகாய்(?) வேறு எழுதுவதுண்டு.
இப்படிப் போன கோல நாட்களில் என் மனைவியின் வருகைக்குப் பின் எங்கள் வீட்டுக் கோலங்கள் இன்னும் உயிர்பெற்றன. இவர் தினமும் கோலம் போட்டு கலர் கொடுப்பதற்காகவே மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். எங்க வீடு, தேவகோட்டை, சென்னை, காரைக்குடி என குடியிருந்த வீடுகள், தற்போது தேவகோட்டையில் இருக்கும் எங்க வீடு என எல்லா இடங்களிலும் இவரது கோலம் பிரபலம். காரைக்குடியில் இருந்து வீடு காலி பண்ணி வந்த அடுத்த வருடம் பக்கத்து வீட்டு ஆண்டி போன் பண்ணி நித்யா நீ இல்லாம நம்ம ஏரியாவுல மார்கழி மாதமாவே இல்லை என்று சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
விதவிதமாய் கோலங்கள் வரைவதில் கில்லாடி... புள்ளி வைத்து... புள்ளி வைக்காமல் என அழகோவியமாய் கோலம் வரைந்து கலர் கொடுத்து வாசலுக்கு அழகை கொடுத்து விடுவார். அவருக்கு கோலம் போடுவதில் அலாதிப் பிரியம்... அதுவும் பாக்கெட் கலர்பொடி வாங்கமல் கலர்களை வாங்கி வந்து இவரே கலந்து டப்பாக்களில் நிரப்பி வைப்பார்... மார்கழி மாதம் முழுவதும் கலர் கோலம் மட்டுமே போடுவார்,.
அதிகாலையில் எழுந்து பனியில் கோலம் போடுவதற்கு என்னிடம் தினமும் திட்டு வாங்குவார். இப்பவும் ஊரெல்லாம் திருட்டு பயம் இருக்குன்னு எழுந்திரிக்காதே என்று இங்கிருந்து கூவினாலும் கேட்பதில்லை.... இந்த முறை விஷால் நான் சொல்வது போல் உங்களுக்கு என்ன கிப்டா கொடுக்கப் போறாங்க, பீவர்தாம்மா வரும்ன்னு மழலையில் திட்ட, உங்க மகன் அப்படியே உங்களை மாதிரியே இருக்கான்... நான் கோலம் போடப்போனா நீங்க திட்டுற மாதிரி இப்ப இந்த ஆம்பளை திட்டுறாருன்னு சொல்லிச் சிரிச்சாங்க. இப்ப வீட்ல சின்னக்குமார் மிரட்டல் விட ஆரம்பிச்சிருக்கார்.
இடத்திற்கு ஏற்றார் போல் சுருக்கி விரித்து கோலம் போடுவதில் கில்லாடி... எங்க வீட்டில் என்ன கோலம் போட்டிருக்கிறார் என்று பக்கத்து வீட்டார் எல்லாம் வந்து பார்த்து ஒருநாள் போடவில்லை என்றாலும் என்னாச்சு என்று கேட்கும் அளவுக்கு காரைக்குடியிலும் சென்னையிலும் வைத்திருந்தார். தேவகோட்டையில் ஒதுக்குப்புறமாய் வீடு... இன்னும் அதிகம் வீடுகள் வரவில்லை... எதிரே இருக்கும் மூன்று வீட்டாரும் கோலமா... அப்படின்னா என்ன என்று கேட்கும் ரகம். இருந்தும் எங்க வீட்டில் கோலம் கலக்கிக் கொண்டுதான் இருக்கிறது,
என் மனைவி போடும் கோலங்களை இனி என் எழுத்தில் இந்த மாதம் முழுவதும் அப்ப அப்ப பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன் என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன். போன வருடம் முகநூலில் பகிர்ந்தேன்... இந்த முறை என் மனசில்...
இங்கு பகிரப்பட்டிருக்கும் கோலங்கள் அனைத்தும் இந்த மார்கழியில் எங்க வீட்டில் விளைந்தவையே.... இவற்றை விற்கும் எண்ணம் என்னிடம் இல்லை... அதற்கான உரிமையும் என்னிடம் இல்லை... அதெல்லாம் இதன் ஓனரிடமே... விரும்பினால் அவரிடம் கேட்டுக் கொடுக்கப்படும்... யாரும் சொல்லாமல் தூக்கிக் கொண்டு போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். என்ன பண்றது... அம்மணியோட கைவண்ணமுல்ல... அப்படித்தான்... கோபப்படாதீங்க.... அப்ப அடுத்த மார்கழிக் கோலங்கள்ல சந்திப்போம்.
-'பரிவை' சே.குமார்