மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சவால் போட்டிக்கான கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சவால் போட்டிக்கான கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 அக்டோபர், 2011

பூங்காவுக்குள்ளே புயல் (சவால் சிறுகதை - 2011)

யுடான்ஸ், ஆதி மற்றும் பரிசல்காரன் இணைந்து நடத்தும் 'சவால் சிறுகதைப் போட்டி – 2011'க்கான இரண்டாவது சிறுகதை இது. (ஒருவர் இரண்டு கதை அனுப்பலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.) யுடான்ஸ்ல எல்லாரும் ஓட்டுப் போடுங்க நண்பர்களே....

முதல் கதை படிச்சு... ஓட்டுப் போட....


*********          *********

(இது சவாலுக்கான படம்)
ப்பவும் சந்திக்கும் பூங்கா வாசலில் தனது பல்சரை நிறுத்திவிட்டு அருகிலிருந்த கடையில் கிங்ஸ் வாங்கி பற்ற வைத்துக்கொண்டு அங்கிருந்த தினத்தந்தியை மேய்ந்து கொண்டிருந்தான் செழியன். அவன் சிகரெட்டை முடிக்கவும் அவனது செல்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

எடுத்துப் பார்த்தவன் கண்ணம்மா என்று வந்ததும் கட் செய்துவிட்டு கண்களால் தேடினான். அவனுக்கு எதிர்ப்புறம் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு சிவப்பு கலந்த பச்சை சுடியில் ப்ரீ ஹேர் விட்டு தேவதையாக சாரு நின்று கொண்டிருந்தாள்.

தன்னை நோக்கி வேகமாக வரும் செழியனைக் கண்ட சாரு, இரு வாறேன் என்று சைகை காட்டியபடி அவனருகில் வந்தாள். “என்ன நான் வர கொஞ்சம் லேட்டானது ஐயா தம்மடிச்சிட்டிங்களோ?” என்று செல்லமாக கடிந்து கொண்டாள்.

“இல்ல வாய் நமநமன்னு இருந்துச்சு... இப்பல்லாம் ரெண்டு மூணுதான் தெரியுமா..? கொஞ்ச நாள்ல சுத்தமா குறச்சிடுறேன் என் கண்ணம்மாவுக்காக... ஓகே”

“இப்படியே சொல்லிக்கிட்டு இன்னும் குடிச்சிக்கிட்டுத்தான் இருக்கே... ரெண்டு, முணுன்னு சொல்லுவே... எனக்கென்ன தெரியும்... சரி வா... ஆமா கையில என்ன பேப்பர்... லவ் லெட்டரா...?”

“ஆமா... காதலிக்க ஆரம்பிச்சு மூணு வருசமாச்சு... இனி லவ் லெட்டர் கொடுத்தாத்தான் வாழும்... வேணுமின்னா காதலுக்கு டைவர்ஸ் லெட்டர் கொடுக்கலாம். " என்றான் சிரித்துக் கொண்டே.

“அப்ப நான் உனக்கு கசந்துட்டேனா... எவளாவது ஆபிசுல புதுசா வந்திருக்காளா... ஒகே... வேணாமின்னா விட்டுடு.... எனக்கும் நல்ல பையனா கிடைக்காமலா போயிடுவான்” படபடவென்று பேசியபடி பட்டென்று பிடித்திருந்த அவன் கையை உதறினாள்.

“ஏய்...லூசுக்கண்ணம்மா... சும்மா ஜாலிக்கு சொன்னா கோபம் வந்துருமே உனக்கு... அப்பா... உடனே மூக்கு சிவந்துருமே.... சும்மா சொன்னேன். நீதான் என் வாழ்க்கை... நீதான் என் உலகம்... நீதான் எல்லாமே... நீயில்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூட பாக்க முடியலை.... இதுல டைவர்ஸ் பண்ணுறதா... வா... இது வேற உள்ள போயி சொல்லுறேன்.”

“என்ன ஐயாவுக்கு புரமோஷன் பேப்பர் கொடுத்துட்டாங்களா?” சகஜ நிலைக்கு மாறினாள்.

“ஆமா... கொடுத்துட்டுத்தான் மறுவேலை பாப்பாங்க... அட நீ வேற வா சொல்லுறேன்...”

ஆட்கள் அதிகமில்லாத ஒரு இடமாக தேர்ந்தெடுத்து அமர்ந்தனர்.

“இங்க வந்ததுக்கு பேசாம இன்னைக்காவது பீச்சுப் பக்கம் போயிருக்கலாம்... சும்மா வந்து உக்காந்து பேசிட்டு போயிக்கிட்டே இருக்கதுல என்ன சுகமிருக்கு" முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு சொன்னான் செழியன்.

“ம்... வந்த்துல இருந்து ஒரு மார்க்கமாத்தான் பேசுறே...? பீச்சுக்குப் போனா மட்டும் என்னவாம்... அலையை ரசிச்சுக்கிட்டு பேசிட்டு வரப்போறோம். அம்புட்டுத்தானே...” அவனை வேண்டுமென்றே சீண்டினாள்.

“ஆமா லவ்வர்ஸா வாறவனெல்லாம் அலையை ரசிக்கவா வாறாங்க...” இழுத்தான்.

“அப்புறம் எதுக்கு வாறாங்க..?” தெரியாதது போல கேட்டாள்.

“நீ பாத்ததே இல்லையா... சுடுமணலுல உக்காந்து இப்படி துப்பட்டாவ எடுத்து ரெண்டு தலையவும் மறச்சிக்கிட்டு என்னென்வோ ஆராய்ச்சி பண்ணுவாங்க... ரெண்டு நாளைக்கு முன்னாடி நானும் பிரபாவும் போனப்போ ரெண்டு ஸ்கூல் ஸ்டூடண்ட பண்ணுன ஆராய்ச்சியப் பாக்கணுமே... கல்யாணம் பண்ணுனவங்க தோத்தாங்க போ...”

“இது பார்க்... என்னோட துப்பட்டாவ கொடு... எவ என்ன ஆராய்ச்சி பண்ணுறான்னு பாக்கத்தான் அவனும் நீயும் அடிக்கடி பீச்சுக்குப் போறதா... இனி பீச்சுப்பக்கம் போனே மவனே பிச்சுப்புடுவேன் பிச்சு... ஆமா...”

“நாம போற வழியில நடக்கிறத பாக்காம இருக்க முடியுமா?. ஆமா நீ என்ன எங்கேயும் எப்போதும் அஞ்சலி மாதிரி மிரட்டுறே... காதல்ல மிரட்டலெல்லாம் வச்சுக்கக்கூடாது கண்மணி...” அவளது இதழில் விரல் வைத்து அழுத்தினான்.

“சரி... ஐயாவுக்கு ரொமான்ஸ் மூடா இருக்கு போல... கொண்டு வந்த பேப்பரை பத்தி ஒண்ணும் சொல்லலை... என்ன பேப்பர்... ம்...?”

“இந்தா நீயே பாரு” என்றபடி அவளிடம் மடித்து வைத்திருந்த பேப்பரைக் கொடுத்தான்.

பிரித்துப் பார்த்தவள் “என்னடா இது... லூசு மாதிரி இதை எதுக்கு தூக்கிக்கிட்டு திரியுறே...”

“திட்டாம அதுல என்ன இருக்கு பாரு...”

“என்ன இருக்கா ஒருத்தன் திரும்பி உக்காந்துக்கிட்டு மொபைல நோண்டுறான். பேப்பர்ல பிரிண்டெடுத்து கட் பண்ணி வச்சிருக்கான்... “ அவள் அடுக்கிக் கொண்டே போக அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.

“எதுக்குடா... இது...” அவளின் கேள்வியால் தன்நிலைக்கு வந்தவன், “அந்த பேப்பர் துண்டுல எழுதியிருக்கதைப் படி...” என்றதும் “என்ன விளையாடுறியா..? ஒரு பேப்பரக் கொண்டாந்து அதுல இருக்கதை சொல்லு... படியின்னு சொல்றியே... எனக்கு வேற வேலையில்ல...”

“சரி நானே சொல்றேன்.... அந்த ரெண்டு பிட் பேப்பர்லயும் என்ன எழுதியிருக்குன்னா... ஒண்ணுல ‘Sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம் – விஷ்ணு’ அப்படின்னும் இன்னொன்னுல ‘Mr. கோகுல், s w H2 6f – இதுதான் குறியீடு கவனம் – விஷ்ணு’ அப்படின்னும் இருக்கா...”

“எனக்கு தமிழ்த் தெரியாதுன்னு படிச்சுக் காட்டுறியா...” கோபமாவது போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

“இல்ல இதுதான் இப்ப பதிவுலகத்துல பரபரப்பான மெஜெஸ்...”

“என்ன பரபரப்பு... யார் அந்த விஷ்ணுவும்... கோகுலும்...”

“இது சரியா பொருந்துற மாதிரி சிறுகதை எழுதணுமாம்... போட்டி அறிவிச்சிருக்காங்க...”

கைகளை இடுப்புக்கு கொண்டு வந்து அவனை முறைத்தாள்.


(இது கதைக்கான படம் -
படம் நன்றி : மணியம் செல்வன்)

“ஏண்டா கொல்லுறே...? உனக்கெதுக்கு இது... அதெல்லாம் கதை எழுதுறவங்க மண்டய உடச்சுக்கணும்... தூக்கி வீசிட்டு வாடா.... கொல்லாம...”

“என்னயப்பாத்தா கதை எழுதுற மாதிரி தெரியலையா... என்னோட வலைப்பூவுள்ள எழுதுனதை பாத்திருக்கேல்ல... நேத்து பிரபாகிட்ட இதை காட்டுனப்போ வேண்டாத வேலை எதுக்கு மாப்ளேன்னு சொல்லி சிரிக்கிறான். சரி நீயாவது நல்லது சொல்வேன்னு பாத்தா...” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரும்பி அமர்ந்தான்.

“இந்த கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்ல... ஐயா புலவரே... நீங்க நல்லா கதை எழுதுவீங்க... எழுதுங்க... ஜெயம் கிடைக்கட்டும்...” என்று அவன் கன்னத்தில் இச் பதித்தாள்.

“அதான் சாரு இருக்கியே... அப்புறம் எதுக்கு ஜெயம்...” அவளை இழுத்தான்.

“அடப்பாவி... கோபமெல்லாம் பொய்யா... ஒரு முத்தம் வாங்கத்தானா... அதுசரி ஜெயம் கிடைப்பாளான்னு நப்பாசை எதுவும் இல்லையே...”

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே “ம்.... சொல்லு எப்படி எழுதலாம்... க்ரைம் சப்ஜெக்ட் எடுதுக்கலாமா... இன்ஸ்பெக்டர் கோகுல், இன்பார்மர் விஷ்ணு... இவங்களுக்குள்ள நடக்கிற ஒரு நிகழ்வை வச்சி...”

“நிறுத்து... நீ க்ரைம் கதை எழுதவா.. அதுக்கெல்லாம் நிறையப் பேரு இருக்காங்க... பேசாம பாக்கியம் ராமசாமி எழுதுற அப்புச்சாமி கதை மாதிரி ஜோக்கா எழுது... நீ சிரியஸா பேசினாலே தாங்க முடியாது. இதுல சீரியஸ் கதை வேறயா... பதிவுலகம் கொஞ்ச நாளைக்காவது இருக்கட்டும் ராசா... பஸ்ஸ விட்டதும் எல்லாரும் அங்க போயி கும்முனிங்க... என்னாச்சு பஸ்ஸ செட்டுல போட்டுட்டு எல்லாரையும் வெரட்டிட்டாங்க...”

“சும்மா வெறுப்பேத்தாதே... சொல்லு எப்படி ஆரம்பிக்கலாம்...”

“எனக்கு கதையெல்லாம் எழுத தெரியாது... படிக்கும்போது பார்முலாவ ஞாபகம் வச்சுக்கவே என்னால முடியாது... இதுல S W H2 6F-ன்னு எல்லாம் வச்சு கதைவிடச் சொன்னா... எனக்குத் தெரியாது... நீ யோசிச்சு எதாவது எழுது... பந்தயத்துல ஜெயிக்கலையின்னாலும் கலந்துக்கிட்ட குதிரையின்னாலும் பெருமைதானே...”

“நல்லா ஓட்டக்கத்துக்கிட்டேடி... எப்படி ஆரம்பிக்கலாம்... அந்த பாழடைந்த ரோட்டில்....”

“ஏய்... இரு... பார்க்ல பக்கத்துல காதலிய வச்சிக்கிட்டு கதை... அதுவும் பேய்க்கதை போல யோசிக்கிற நேரமாடா இது... நீ ரொம்ப படுத்துறேடா... நா போறேன்... நீ உக்காந்து யோசி....” கோபமாக எழுந்தாள்.

“சரி... சரி... நான் அப்பறமா யோசிச்சிக்கிறேன்... உக்காரு... அங்க பாரேன்... அந்த ரெண்டு பேரையும்... “ அவன் கை காட்டிய திசையில் பார்த்தாள். அங்கே இதழாராய்ச்சியில் இருவர் தீவிரமாக இருந்தனர்.

“கருமம்... கருமம்... பூங்காவுக்குள்ள புயல வர வச்சிடுவாங்க போல...”

“என்ன சொன்னே... என்ன சொன்னே....”

“என்ன...”

“இல்ல எதோ பூங்காக்குள்ள...”

“பூங்காக்குள்ள இல்ல... பூங்காவுக்குள்ள புயலயின்னு சொன்னேன்...”

“எஸ்... பூங்காவுக்குள்ள புயல்... இதுதான் கதையோட தலைப்பு... தமிழகம் முழுவது குண்டு வக்கிறாங்க.... இது மாதிரி ஒரு பூங்காவுல குண்டு வக்கிறது சம்பந்தமான குறியீடு ஒண்ணு இன்பார்மர் விஷ்ணுவுக்கு கிடைக்குது... அதே நேரம் தீவிரவாத கும்பலுக்கு விஷ்ணு இன்பார்மர்ன்னு தெரிய வருது... அவனோட குடும்பத்தை பணயமா வச்சி மிரட்டுறாங்க... அப்ப அவன் இன்ஸ்பெக்டர் கோகுலுக்கு தப்பான குறியீடை கொடுக்கிறான்... எப்படி தீவிரவாத கும்பல் மாட்டுது... இதுதான் கதை...” படபடவென்று சொல்லிக் கொண்டே போக...

“ஐயோ... நிப்பாட்டு... நீ இப்படி கொல்லுவேன்னு தெரிஞ்சிருந்தா இன்னைக்கு நான் வந்திருக்கவே மாட்டேன்... இதெல்லாம் நிறைய தமிழ்ப்படத்துல பாத்தாச்சு... கொஞ்சம் வித்தியாசமா யோசி... இப்ப என்னய ஆளைவிடு... நான் கிளம்புறேன்... எனக்கு நாளைக்கு முக்கியமான டாஸ்க் முடிக்கணும்... கொஞ்சம் ஜாவா கோடிங்க பாக்கணும்... அப்புறம் இந்தப் போட்டி எப்ப முடியுதுன்னு சொல்லு அதுக்கு அப்புறம் வாறேன்...” என்றாள் சிரித்துக் கொண்டே.

“போம்மா... என்னோட கிரியேட்டிவிட்டிய கேவலப்படுத்தாதே... எனக்குள்ள ஒரு இயக்குநர் இருக்கான்... அவன் வெளிய வாற நாள் தூரத்தில் இல்ல...”

“ஓகே... இப்ப சொல்றேன்... க்ரைம் அது இதுன்னு யோசிக்காம... இதை வச்சி கொஞ்சம் வித்தியாசமா யோசி... ஏன் இப்ப நமக்குள்ள நடந்ததை கொஞ்சம் மாத்தி கதையா ரெடி பண்ணு.... வெற்றி பெற வாழ்த்துக்கள்... காலையில போன் பண்ணும் போது நீ உன்னோட கதையை எங்கிட்ட சொல்றே... பர்ஸ்ட் நான் கேட்டதும் நீ அனுப்பி வைக்கலாம்... ஓகே... பெஸ்ட் ஆப் லக் மை டார்லிங்...” என்றபடி எழும்ப அவனும் அவளுடன் எழுந்து கொண்டான்.

இருவரும் இணைந்து நடக்க, இரண்டு நண்பர்கள் தீவிர ஆலோசனையில் இருந்தார்கள். அவர்களை கடக்கும் போது ‘இன்ஸ்பெக்டர் கோகுலுக்கு தனக்குத் தெரியாம இன்பார்மர் விஷ்ணு தப்புப் பண்றானோன்னு சந்தேகம் வந்திருது... அதனால...’ என்று ஒருவன் இன்னொருவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“இவங்க ரெண்டு பேரும் எழுத்தாளர்கள் சுபா போல பதிவுலக சுபா போல... என்னமோ பரிச்சைக்குப் படிக்கிற மாதிரி சின்ஸியரா... உன்னய மாதிரியே நிறைய அலையுதுக போல... நல்லா போட்டி வச்சாங்கப்பா... ஒரு படத்தைப் போட்டு பதிவுலகத்தையே பைத்தியமா க்ரைம் கதையின்னு அலைய வச்சிட்டாங்கப்பா... " என்று செழியனின் காதில் சாரு கிசுகிசுக்க, அவளை “சும்மா வாடி...” என்றான் சிரித்துக் கொண்டே.

-‘பரிவை’ சே.குமார்.

சனி, 29 அக்டோபர், 2011

பொறி (சவால் சிறுகதை - 2011)

(இந்தக் கதை யுடான்ஸ், பரிசல்காரன் மற்றும் ஆதி இணைந்து அறிவித்திருக்கும் சவால் சிறுகதைப் போட்டிக்கானது. கதையைப் படித்து உங்கள் கருத்தையும் தவறாமல் யுடான்ஸில் ஓட்டும் அளியுங்கள். யுடான்ஸ் திரட்டியில் நீங்கள் அளிக்கும் ஓட்டும் வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதில் சிறு பங்காற்ற இருக்கிறதாம். எனவே தவறாமல் வாக்களியுங்கள்.... எனக்கு மட்டுமல்ல... கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் வாக்களியுங்கள். )




டற்கரையில் அமர்ந்து சூரியன் அஸ்தமிப்பதை ரசித்துக் கொண்டிருந்த விஷ்ணுவை நெருங்கினார் இன்ஸ்பெக்டர் கோகுல்.

"ஹாய் விஷ்ணு... எப்படியிருக்கீங்க?"

"வாங்க கோகுல்... நான் நல்லாயிருக்கேன். நீங்க எப்படியிருக்கீங்க?"

"நல்லாயிருக்கேன்... வாங்க நடந்துக்கிட்டே பேசலாம்..."

"என்ன கோகுல் திடீர்ன்னு என்னய வரச்சொல்லியிருக்கீங்க... அதுவும் அலுவலகத்துக்கு வரச்சொல்லாம... கடற்கரைக்கு வரச் சொல்லியிருக்கீங்க... எனித்திங்க் இம்பார்ட்டண்ட்?"

"ஆமா விஷ்ணு.... இது முக்கியமான விசயம்... இதை அங்க வச்சு பேசக்கூடாது ஏன்னா சுவருக்குக்கூட காது இருக்கும்... நான் உங்ககிட்ட சொல்றது நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியணும்..."

அவர்கள் ஆள் அதிகமில்லாத பகுதிக்கு வந்து கரையோரத்தில் கிடந்த படகில் அமர்ந்தனர். சிகரெட் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்துக் கொண்டு விஷ்ணுவிடம் நீட்டினார். அவனும் எடுத்துக் கொள்ள... சிகரெட் இருவர் கையிலும் கரைந்து கொண்டிருந்தது.

"இதுதான் மேட்டர் விஷ்ணு..." என்றபடி கரைந்த சிகரெட் துண்டை மணலில் போட்டார் கோகுல்.

"ம்... இந்த விசயத்துல நான் என்ன பண்ணனுமின்னு நினைக்கிறீங்க..."

"விஷ்ணு.... இதுல ஒரு அமைச்சர் சம்பந்தப்பட்டிருக்கிறதுனால டிபார்ட்மெண்ட் எப்படித்தான் விசாரிச்சாலும் எங்க ஆளுக மூலமாக தினசரி நடவடிக்கைகள் அவங்களுக்கு தெரிஞ்சிருது... அதானால விசாரணையும் விசாரிக்கிற அதிகாரியும் பாதிக்கப்படுறாங்க... அதான் உங்களை யாருக்கும் தெரியாம விசாரிச்சு எனக்கு தெரிவிக்கச் சொல்லுறேன்..."

"என்ன கோகுல் நீங்க... இன்னைக்கு நாட்டுல நடக்கிற அம்புட்டு கெட்ட காரியத்துலயும் அமைச்சருங்க இல்லாததே இல்லையே... கொள்ள அடிச்சுப்புட்டு களி திங்கிறதைத்தான் இப்ப உலக நாடே பாத்துக்கிட்டுதானே இருக்கு..."

"அவனுங்க நேரடியா இருக்கதாலதான் எந்த விசாரணையையும் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல போகுதில்ல... எத்தன கேசு தூங்குது தெரியுமா?"

"சரி விடுங்க... ஜனநாயக நாடு... ஜனங்கள ஏமாத்திப் பொழக்க ஒரு எம்.எல்.ஏ. பதவி இருந்தாப் போதும்.. சரி விடுங்க... நமக்கெதுக்கு அரசியல்... மேட்டருக்கு வருவோம்"

"நான் சொன்னதை நீங்க சீக்கிரமா விசாரிச்சு நல்ல பதிலா சொன்னீங்கன்னா நான் எல்லார் மேலயும் ஆகஷன் எடுப்பேன்... அதுக்கப்புறம் தண்ணியில்லாத காட்டுக்கு மாத்துனாலும் கவலைப்படமாட்டேன்."

"கண்டிப்பா... இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு இந்த கேஸ் சம்பந்தமான எல்லா விவரங்களையும் கொண்டு வந்து தாறேன்... ஒகே... சரி நான் இப்படியே போறேன்... நீங்க வந்த வழியா போயிருங்க..." என்றபடி கிளம்பினான் விஷ்ணு.

*******

றுநாள் மதியம் 12.30 மணிக்கு சூர்யா லாட்ஜ்க்குள் நுழைந்தான்.

"எக்ஸ்கியூஸ் மீ... பரந்தாமன் சாரைப் பாக்கணும்..."

"நீங்க விஷ்ணுவா... எப்ப வந்தாலும் உங்களை அனுமதிக்க சொல்லியிருக்கார். நாலாவது மாடியில ரூம் நம்பர் 401ல இருக்கார். நீங்க போங்க நான் கூப்பிட்டு சொல்லிடுறேன்."

லிப்டில் நாலாவது மாடிக்கு சென்று ரூம் நம்பர் 401 முன்னால் செல்ல, உள்ளே இருந்து வந்த ஒருவர் "நீங்கதான் விஷ்ணுவா... அண்ணன் உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கார்..." என்றபடி உள்ளே அழைத்துச் சென்றார்.

"வாங்க தம்பி... காலயிலயே வராம இப்பத்தான் வாறிய.." வெற்றிலையை மென்றபடியே கேட்டார்.

"இல்லங்க... கொஞ்சம் முக்கியமான வேலையா சிலரப் பாக்க வேண்டியிருந்துச்சு... அதான் முடிச்சிட்டு வாறேன்... என்ன பேசணும்..." அவரிடம் பேசியபடி அருகிலிருந்தவர்களைப் பார்த்தான்.

"நம்ம ஆளுகதான்... ஒண்ணும் பிரச்சினையில்ல... சொல்றேன்... ஒக்காருங்க..."

"தம்பி... துப்பறிஞ்சு நல்ல பேரு சம்பாரிச்சு வச்சிருக்கியலாமே..." பெரிய மீசை அவனைப் பார்த்து கேட்டது.

"ஐய்யோ... அப்படியெல்லாம் இல்லங்க... எதோ பொழப்பு ஓடுது..."

"சரி தம்பி விசயத்துக்கு வருவோம்..." என்ற பரசுராமன், "ஒங்களுக்கு எம்புட்டு பணம் வேணும்" என்றார்.

"என்னங்க எதுக்கு எனக்குப் பணம்... என்ன வேலையின்னு சொல்லுங்க... வேலைக்குத் தகுந்தமாதிரித்தான் வாங்குவோம்..."

"நீ வேல பாக்கம இருக்கத்தான் பணம் தாறேங்கிறேன்..." வெற்றிலை எச்சில் தெரிக்க சிரித்தார்.

"எனக்குப் புரியல..."

"என்ன தம்பி நானே நேரடியா பேசுறேன்னா... என்ன வேலயின்னு தெரியாதா ஒனக்கு... நாலு ஓட்டலு... ரெண்டு தேட்டரு... நாலஞ்ச்சு மில்லு... சில பல லாரியின்னு பெரிய லெவல்ல இருக்க நானே எறங்கிப் பேசுறேன்னா... பிரிய வேணாமா தம்பி.."

"உண்மைக்குமே புரியலங்க..."

"கோகுல் ஒங்கிட்ட சொன்ன வேலய பாக்காம இருக்கத்தான் பணம் தாறேன்னு சொல்றேன்..."

"...." அதிர்ச்சியாய் அவரை நோக்கியவன் சுதாரித்து " எந்த கோகுல்... எனக்கிட்ட என்ன வேலை கொடுத்தார்".

"தம்பி நடிக்காதீங்க... எங்களுக்கு எல்லா எடத்துலயும் ஆளு இருக்கு... கடற்கரைக்குப் போயி பேசினா... இது பெரிய ரிஸ்கான வேல தம்பி... அமைச்சரு, எம்.எல்.ஏ. பெரிய பெரிய புள்ளிங்கன்னு நிறைய பேரு இதுல இருக்கோம்... எங்க எல்லாரையும் நீங்க தண்டிக்கணுமின்னா தமிழ்நாடு தாங்காது..."

"என்ன மிரட்டுறீங்க... எனக்கு தெரியாதுங்கிறேன்..."

"தம்பி அடிச்சி மிரட்டச் சொல்றியா... என்ன... ம்... ஊட்ல ஒருத்த உயிரோட இருக்கமுடியாது... நீ பிரண்டுன்னு அவனுக்கு உதவப் போற நான் கோடிய கொட்டித் தாறேன்னு சொல்லுறேன்... என்ன கண்டுபிடிச்சியோ எங்கிட்ட கொடுத்துட்டு ஒதுங்கிக்க... நாங்க அவன போட்டுத் தள்ளிடுவோம்... மண் அள்ளுறதை எதுத்த இன்ஸ்பெக்டரை கல்யாணமாகி நாலு மாசத்துல மண்ணு லாரியில மோதி கொன்ன எங்களுக்கு இவன் என்ன பிஸ்கோத்து... வாழ வேண்டிய வயசு... சின்ன சின்ன வேலய பாத்துக்கிட்டு வாழ்க்கய ஓட்டமா... எதுக்கு இதெல்லாம்... ம்"

"அது..." நாக்கு வறண்டது.

"தம்பி நாங்க கஷ்டப்பட்டு ரிஸ்க்கெடுத்து காரியம் பண்றோம்... அவன் இதுல மூக்க நொழச்சதுமில்லாம... பாவம் நீ ஒன்னயும் இழுத்து விட்டிருக்கான்..."

"நான்... அது..."

"பயப்புடாதே... இன்னயில இருந்து நீ நம்மாளு ... ஒனக்கு சொன்னபடி பணம் வரும்... அவன திசை திருப்பி விட்டுட்டு ஒதுங்கிக்க... சரி... முகத்தை தொடச்சிட்டு கிளம்பு. காலையில பண்ணினது என்னோட பெர்சனல் நம்பர்... சேவ் பண்ணி வச்சிக்க.... ஒகே... நாங்க என்ன பண்றோம். எங்க பண்றோமுன்னெல்ல்லாம் நீ துப்பறிய வேண்டாம். பேசாம ஓன்னோட வேலயப் பாரு... அப்புறம் எதுக்கும் நீ என்னய தேடி வரவேண்டாம். அது கோகுலுக்கு சந்தேகத்தை வரவச்சிடும்... அப்புறம் சிக்கலாயிடும். எனக்கு நீ போனெல்லாம் பண்ண வேண்டாம். அவசியமுன்னா நாங் கூப்பிடுறேன்."

"சரி..." என்று கிளம்பியவன் கடற்கரையில் பேசியது இவங்களுக்கு தெரிஞ்சிருக்குன்னா இன்ஸ்பெக்டரை பாலோ பண்றாங்க... இதுல மாட்டிக்கிட்டு நாம குடும்பத்த இழக்கணுமா... இவங்களுக்கு உதவுனா பணத்துக்கு பணமுமாச்சு... உயிர் பயமும் இல்ல... என்று நினைத்தான். ஆனால் உள் மனசு தப்பு பண்ணாதே என்று கத்தியது.

கீழே இறங்கியவன் அவளைப் பார்த்தான்... அவளும் பார்த்தாள். இருவருக்கும் மிகுந்த சந்தோஷம். பின்னர் அவளுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்பினான்.

*******

ரவு தனக்கு வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் திவ்யா என்ற பெயரில் வந்திருந்த மின்னஞ்சலை படித்தவன், 'எஸ்... எஸ்... கிடைச்சிருச்சு... இதை முதலில் கோகுல்கிட்ட சொல்லணும்' என்று நினைத்தபோது போன் அடித்தது. எடுத்துப் பார்த்தவன் 'இவரு எதுக்கு இப்போ கூப்பிடுறாரு?' என்று நினைத்தபடி 'அலோ' என்றான்.

"என்ன தம்பி ஒன்னோட டிடக்ட்டிவ் புத்திய நமக்கிட்டே காட்டுற..?" எதிர்முனையில் பரந்தாமன் கோபமாய் கேட்டார்.

"எ... என்ன... நான் ஒண்ணும் பண்ணல சார்... உங்களுக்கு பேவராத்தான் இருப்பேன்..."

"தம்பி... எங்கிட்ட பொய் சொன்னா எனக்குப் பிடிக்காது... ஆமா ஒன்னால ஒரு பொம்பளப்புள்ள மாட்டிக்கிட்டாளேப்பா..."

"சார்... அவள ஒண்ணும் பண்ணிடாதீங்க... ப்ளீஸ்..."

"நீ நடந்துக்கிறதப் பொறுத்துத்தான் எதாவது பண்ணுவேன்... இன்னும் ஒண்ணும் பண்ணல... சரி வெசயத்துக்கு வா... அவ பண்ணுன காரியத்துக்கு பிசுனசு பேச வாற ரெண்டு வெள்ளக்காரப்பயலுவ நம்ம பக்கத்து பொண்ணு பிரசா வேணுமின்னாங்க... அவங்களுக்கு விருந்து வைக்கலாமுன்னு இருக்கேன். அவள காப்பாத்துது ஒங்கையிலதான் தம்பி இருக்கு..."

"வேண்டாம்... நா... நா... எ... என்ன செய்யணும்?"

"அவ அனுப்புனதை வச்சி நீ கோகுலுக்குட்ட வெசயத்தை சொல்ல ரெடியாயிருப்பே... நாங்க இன்னும் ரெண்டு நாள்ல செய்யப் போற இந்த ஆபரேசன் எங்க நடக்குதுன்னு ஒனக்கு தெரிஞ்சி போச்சு... ஒருவேளை ஒனக்கு முன்னாடி அவனுக்கும் தெரிஞ்சிருக்கலாம். ஆனா நீ சொன்ன அவன் நம்புவான். அதனால அவனுக்கு பொய்யான தகவலை கொடு. மத்ததை நாங்க பாத்துக்கிறோம்."

"சரி செய்யிறேன்... திவ்யாவை...."

"எங்க வேல முடியட்டும்... அவ பத்திரமா வருவா..." என்றபடி போனை கட் பண்ணினார்.

'சை... எப்படி... எப்படி மாட்டுனா... எல்லாம் போச்சு...' என்று நினைத்தவன் திவ்யாவுக்கு எதாவது ஆனால் என்ன பண்றது என்று நினைத்தபோது மனசு படபடக்க ஆரம்பித்தது.

யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் பரந்தாமன் நம்பருக்கு போன் செய்ய, அது சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது. 'இப்பத்தானே பேசினான். அதுக்குள்ள மப்படிச்சிட்டு மல்லாந்துட்டானா... இல்ல திவ்யாவை எதாவது...' யோசித்த போதே வியர்க்க ஆரம்பித்தது.

கணிப்பொறியில் வேகவேகமாக எதோ டைப் செய்து பிரிண்ட் போட்டு இரண்டாக கட் பண்ணி எடுத்தான். அதில் 'sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்துள்ளேன். கவலை வேண்டாம். -விஷ்ணு' என்றிருந்ததை படித்துப் பார்த்தவனுக்கு ஏதோ தவறு இருப்பது தெரிய... மீண்டும் டைப் செய்தான். இந்த முறை குறியீட்டை தகவலாக மாற்றி பிரிண்ட் எடுத்து ஒரு கவரில் போட்டான்.

'Mr.கோகுல், s w H2 6f - இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு' என்று இருந்ததை இன்னொரு கவரில் போட்டு பேரெழுதி இரண்டையும் எடுத்துக் கொண்டு வேகமாக வண்டியை எடுத்தவன், எதுக்கு லெட்டர்ல கொடுத்துக்கிட்டு காலையில சொல்லிக்கலாம் என்று வீட்டுக்குள் வந்து கோகுலுக்கு பிரிண்ட் எடுத்த மேட்டரை அவரது மின்னஞ்சல் முகவரிக்கு அவசரம் என்று தலைப்பிட்டு அனுப்பிவிட்டு அதை கிழித்து எறிந்தான்.

*******

சில தினங்களுக்குப் பிறகு தினங்களுக்குப் பிறகு அன்றைய நாளிதழ்கள் ஏழைக் குடும்பத்து பிள்ளைகளை கடத்தி வந்து கிட்னி திருடும் கும்பல் கூண்டோடு கைது என்றும் சில நகரங்களின் முக்கிய புள்ளிகளுடன் சேர்ந்து ஒரு மத்திய மந்திரியும் இந்த பாதகச் செயலை செய்திருக்கிறார். பிடிபட்டவர்களின் வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து மத்திய மந்திரி இன்று மாலைக்குள் கைது செய்யப்படலாம் என்றும் பரபரப்புச் செய்தியை தாங்கி வந்திருந்தன.

*******

ன்று மாலை கடற்கரைக்கு அருகில் இருக்கும் இந்தியன் ரெஸ்டாரண்டில் "எந்த மிரட்டலுக்கும் பயப்படாம எனக்கு சுப்ரமணியபுரம் மேற்குல வீட்டு வசதி வாரிய கட்டிடம் எண் 2 தளம் எண் 6 அப்படிங்கிறதை அழகா s w H2 6f - குறியீடா அனுப்பி, அதே சமயம் பரந்தாமனையும் நம்ப வச்சி... மிகப்பெரிய கிட்னி திருட்டுக் கும்பலை பிடிக்க உதவுனதுக்கு ரொம்ப நன்றி விஷ்ணு. அதுதான் உங்க டிடெக்டிவ் மைண்ட்... உங்களுக்கு என்ன செய்யணுமோ அது விரைவில் காவல்துறை மூலமா செய்யிறேன். இது என்னோட கிப்ட் உங்களுக்காக..." என்று அவனது கையில் அந்த பாக்ஸை கொடுத்த கோகுல், "ஆமா ரெண்டு மூணு நாளா நீங்க தூங்கல போல..." என்று கேட்க

"ஆமா சார் திருட்டுக் கும்பல்கிட்ட இருந்து எனக்கு பிராப்ளம் வந்தா நான் பேஸ் பண்ணிப்பேன். எனக்கு உதவப் போய் என்னோட காலேஸ் மெட் திவ்யா மாட்டிக்கிட்டதுதான் சார் எனக்கு ரொம்ப வருத்தமாப் போச்சு..."

"அவங்களத்தான் சேப்பா காப்பாத்தியாச்சில்ல... நம்ம அரசு நேர்மையா நடவடிக்கை எடுத்தா பரந்தாமன் மத்திய மந்திரியெல்லாம் சிறைவாசம்... இல்லேன்னா எனக்கு தண்ணியில்லாத காடு... நீங்க உயிர காப்பாத்திக்க வேற ஊரு..." என்றபோது விஷ்ணுவின் போன் அடிக்க... அதில் திவ்யா என்று வந்ததும விஷ்ணு முகத்தில் காதலின் மொட்டு மலர்வது கோகுலுக்குத் தெரிந்தது.

-'பரிவை' சே.குமார்.