மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

பட்டிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றம் - நிறைவுப் பகுதி)



முந்தைய பகுதிகள் படிக்காதவர்கள் படிக்க

தொகுதி-1                              

தொகுதி-2

தொகுதி-3

----------------------------------------------------------------------------------------

திருமணத்துக்குப் பின்பே அணியின் திரு. மதுக்கூர் ராமலிங்கள் அவர்கள் கடைசியாக பேச வந்தார்.  அவர் எத்தனை ராஜாக்கள் வந்தாலும் பட்டிமன்றத்தின் முடிசூடா மன்னன் என்று லியோனியைப் பார்த்துக் கூற, ஏய்யா வழுக்கத்தைத் தலையின்னு நேரடியாச் சொல்ல வேண்டியதுதான். இப்ப நாட்டுல ரொம்பப் பேரு இப்படித்தான் திரியிறான்... எனக்கு மட்டும்தான் வழுக்கையா அங்க பாரு எல்லாத் தலையையும் நம்ம பாரதி நட்புக்காக தலைவர் ராமகிருஷ்ணனுக்கும் இப்புடி ஏறிடுச்சு. முன்னாடி இழுத்து சீவியிருக்காரு என்று கலாய்த்தார்.

மதுக்கூர் ராமலிங்கம்: எம் பையன் இந்த வருசம் பத்தாவது எழுதுறான். அவனைப் படிக்க வைக்கணுமின்னு நைட்ல முழிச்சு எழுப்பினா அப்பா ஒரு நிமிசம் அப்படின்னு தூங்குறான். மறுபடியும் வந்து தட்டி எழுப்பி படிக்க வச்சி, அப்துல் கலாமைப் பாரு அவரு மாதிரி வரணுமின்னு சொன்னா, ஆமா நீ எவ்வளவு மார்க் வாங்கினேன்னு திருப்பிக் கேக்கிறான் என்றார்.

நடுவர் அவர்களே தம்பி செந்தில் பேசும் போது பட்டாம்பூச்சி அப்படியே பறந்து திரியுமின்னார். ஆனா பட்டாம் பூச்சி பூ மீது அப்படி ஜோடியா உக்காந்திருக்கும் போதுதான் அழகா இருக்கும் என்று சொல்ல, செந்தில் பட்டாம் பூச்சி தனியா பறந்து திரியுறதை ரசிச்சிருக்காரு. ஆனா இந்தாளைப் பாருய்யா எப்படி ரசிச்சிருக்காருன்னு என்று இடையில் புகுந்தார் லியோனி. அப்புறம் நடுவர் அவர்களே தண்ணிப்பால் (தனபால்) எம் பொண்டாட்டி அதைக் கேக்குறா, இதைக் கேக்குறான்னு அள்ளிவிட்டார். எந்தங்கச்சி எம்புட்டு நல்லவங்க தெரியுமா... ஒரு நா தனபால் வீட்டுக்குப் போறேன், நடு வீட்ல இந்த ஆளை உக்கார வச்சி எந்தங்கச்சி தேங்காய் பழமெல்லாம் வச்சி படச்சு இருக்கு. என்னம்மான்னு கேட்டா, நேரம் சரியில்லையின்னு சனீஸ்வரனை கும்பிடச் சொன்னாங்க... பக்கத்துல கோவில் இல்லை அதான் இந்தாளுக்கு படச்சு கும்பிடுறேன்னு சொன்னுச்சு என்றதும் அவையில் சிரிப்பொலி அடங்க நேரமானது.

நடுவர் அவர்களே திருமண வாழ்க்கை என்பது எவ்வளவு சந்தோஷமானது. அதுவும் பொண்ணு பாத்துட்டு வாரது... சிவாஜி தன் நண்பனுக்கும் நண்பன் சிவாஜிக்கும் பொண்ணு பாத்துட்டு வந்து குளிச்சிக்கிட்டு "பொண்ணோன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமோ' ன்னு பாடுவாரே என்று பாட, லியோனியும் சேர்ந்து சில வரிகள் பாடினார். பாடல் முடிந்ததும் இப்படி ஒரு டூயட்டை என் வாழ்க்கையில் இன்னைக்குத்தாய்யா பாடியிருக்கேன்னார்.

லியோனியைப் பார்த்து நடுவர் அவர்களே நீங்க ஒரு படத்துல நடிச்சீங்கள்ல... அந்த கொடுமையை ஏய்யா இப்ப கேக்குறேன்னு லியோனி கேக்க, சொல்லுங்க நடிச்சிங்களா இல்லையா... ஆமா நடிச்சேன்... அந்தப் படம் ஓடுச்சா... ஓடிச்சின்னு சொன்னாங்க... எங்க ஓடுச்சு தியேட்டர் தியேட்டரா ஓடுச்சு... அந்தப் படம் ஏன் ஓடலை தெரியுமா... ஏய்யா?... அதுல ஒங்களுக்கு ஜோடியில்ல... ஜோடியிருந்திருந்தா படம் சூப்பர் ஹிட்டாயிருக்கும் என்று சொல்ல, ஆமா என க்கு ஜோடியாப் போட்டிருந்தா காந்திமதியைப் போட்டிருப்பாங்க என்றதும் சிரிப்பொலி அடங்க நேரமானது.

இன்னும் நகைச்சுவையாய் பேசியவர், ஒரு ஊர்ல வயதான ஒருத்தர் செத்துப் பொயிட்டாரு... அவரை தூக்க ஏற்பாடு பண்ணினாங்க... அப்ப அவரு சம்சாரத்தைக் காணோம்... எங்கடான்னு பார்த்தா வீட்டுக்குப் பின்னால சுடுதண்ணி வச்சிக்கிட்டு இருக்கு. எல்லாரும் அதை திட்ட... அப்ப அது எப்பவுமே அவரு சுடுதண்ணியிலதான் குளிப்பாரு... இப்பவும் அதுலயே குளிப்பாட்டி அனுப்புங்கன்னு சொன்னுச்சாம் என்று சொல்லி திருமண வாழ்வின் மகோத்துவத்தை விளக்கினார்.


(பாரதி அமைப்பினர்)

திரு.லியோனி : மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் பேச்சுக்கு சில கருத்துக்களைப் பகிர்ந்த திரு. லியோனி, இப்படித்தாய்யா எங்கப்பத்தாவும் ஐயாவும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டு இருப்பாங்க... ஆனா அவங்களுக்கு எங்கப்பாவையும் சேத்து 16 புள்ளைங்க... எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கியலே எப்படி தாத்தா 16 பெத்தியன்னு கேட்டா அட அத ஏன்டா, கேக்குறே..? காத்து வல்லையின்னு அப்படி போனேன்... உங்க பெரியப்பன் பொறந்தான்... கரண்ட் இல்லை உங்க அத்தை பொறந்தா... விசிறி எடுக்கப் போனேன் உங்கப்பன் பொறந்தான்னு சொன்னாருன்னு இன்னும் நகைச்சுவையாய் பேசினார்.

பட்டிமன்றப் பேச்சாளர்கள் எல்லாம் பேசி முடிச்சிட்டாங்க இப்ப நான் தீர்ப்பு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ரெண்டுந்தாய்யான்னு சொன்னா இதை வந்தவுடனே சொல்லியிருந்தா மழை நேரத்துல வீட்டுக்கு சீக்கிரம் போயிருப்போமுல்ல.... எதுக்கு மூணு மணி நேரம் உக்கார வச்சேன்னு நீங்க கேப்பீங்க... இந்த பட்டிமன்றத்தை மூன்று மணி நேரமாக ரசித்து, பலர் சீட் இல்லாமல் நிண்டு கொண்டு ரசித்தீர்கள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது நம் தமிழுக்கு கிடைத்த வெற்றி. நானும் நிறைய ஊருக்குப் போயிருக்கேன். அங்கெல்லாம் இவ்வளவு கூட்டம் வந்ததேயில்லை (சம்பிரதாய வார்த்தைகள்).

இப்படித்தான் ஒரு ஊருக்கு பட்டிமன்றம் நடத்தப் போனோம்... உக்காந்திருந்தவங்களெல்லாம் எந்திரிச்சுப் போக, ஊர்ப்பெரிசிடம் என்னய்யா கூட்டமே இல்லைன்னு கேக்க, எல்லா இடத்துலயும் குழாய் கட்டியிருக்கோம். வீட்ல இருந்தே கேப்பாங்கன்னார்... நாங்க கத்திக்கிட்டு இருக்கணுமாம். இவங்க போயி படுத்துக்கிட்டு கேப்பாங்களாம். இன்னம் சில பட்டிமன்றங்கள்ல முன்னாடி ஒரு பத்துப் பேரு வந்து உக்காந்துக்கிட்டு என்ன சொன்னாலும் சிரிக்கவே மாட்டாங்க... அப்படியெல்லாம் இல்லாம சந்தோஷமா சிரிச்சு ரசிச்சீங்க... ரெண்டு அணியினரும் தங்கள் கருத்தைச் சொல்லி அமர்ந்திருக்காங்க...

திருமணத்துக்கு முன்னான வாழ்க்கை என்ன சந்தோஷங்கிறீங்க... நம்மளை கேக்க யாரும் இருக்க மாட்டாங்க.... அது மாதிரி ஒரு வாழ்க்கை திரும்ப கிடைக்குமா? அந்த பருவத்து வாழ்க்கை குறித்து சிலாகித்து நிறைய பேசினார்...

அப்புறம் அதற்காக திருமணத்துக்கு பின்னான வாழ்க்கை சரியில்லைன்னு நினைச்சிடக்கூடாது. அதுல இருக்க சந்தோஷம் இருக்கே, வேலைக்குப் பொயிட்டு வாரப்போ வண்டியில வந்து ஒருத்தன் விழுந்துட்டு இவங்கூட சண்டைக்கு வந்திருப்பான். வீட்டுக்குள்ள வந்த உடனே என்னங்க ஏன் சோர்வா இருக்கீங்கன்னு கேக்கிறப்போ ஒண்ணுமில்லேம்மான்னு சொன்னா, இல்லே நீங்க சரியில்லைன்னு கேக்கிறப்போ, என்னைய தெருவுல ஒருத்தன் திட்டிட்டான்னு சொன்னவுடனே... அப்படியே கையை அமுக்கி விடுங்க தெரு நாய் கத்துனதையெல்லாம் பெரிசு படுத்திக்கிட்டு என்று சொல்லி , போய் முகங்கழுவிட்டு வாங்க காப்பி தாரேன்னு சொன்னதும் வேணாம்மா என்று மறுத்தால் காபிங்க என்று அழுத்தி சொல்லும் போது அதன் அர்த்தம் புரிந்து நம் மனதின் கவலைகள் பறந்து போகுமே... என்ற நடுவர்...

திருமணத்துக்குப் பின்னான புரிந்து வாழ்தலில் கிடைக்கும் சுகம் முன்னான வாழ்வில் கிடைப்பதில்லை என்று சொல்லி அதற்கு ஆதாரங்களாக நிறைய சொன்னார். இறுதியில் மகிழ்ச்சியான வாழ்க்கை திருமணத்துக்குப் பின்பே என்று தீர்ப்பு வழங்கினார்.

பேச்சாளர்கள் பேசும் போது அவர்களுக்கு அமைப்பின் நிறுவனர் ஜெகன் மற்றும் அவரின் துணைவியார் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.

பட்டிமன்றத்தின் தீர்ப்பை சொல்லிய பிறகு நன்றி நவிலல் நடந்தால் பேசுபவர மட்டும் நாற்காலிகளுக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் தீர்ப்பு சொல்லும் முன்பாக நன்றியுரையாற்ற லியோனி வாய்ப்பு வழங்கினார். அந்த வாய்ப்பில் திருமதி. சங்கீதாரத்தினச் சுருக்கமாக நன்றி சொல்லிச் சென்றார்.

******************

** எனக்கு போட்டோக்கள் உதவி எனது பட்டிமன்றத் தொகுப்பை பாராட்டியதுடன் பாரதி நட்புக்காக நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்த திரு. சுபஹான் அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

** நான்கு பதிவாக எழுதிய போது என்னை பாராட்டிய நண்பர்களுக்கும் 'எப்பா லியோனிய ஒரு பாடுபடுத்திடுவே போல' என்று சாட்டிங்கில் வந்து திட்டிய நட்புக்களுக்கும் நன்றி.

** இங்கு நான் தொகுத்தவை எல்லாமே என் மனதில் இருந்தவைதான் ஆடியோவோ, வீடியோவோ பார்த்து எழுதவில்லை. அதனால் என் தொகுப்பில் பேச்சாளர்களின் பேச்சுக்கள் தொகுப்பாக இருக்காமல் முன்பின் மாறி வந்திருக்கலாம்.

** முதன் முதலில் நான் தொகுப்பாக... தொடரும் போட்டு எழுதிய பதிவுக்கு வரவேற்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றிங்க....

லியோனி போட்டோவுக்கு நன்றி : நிலாச்சாரல்.காம்

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-3)


பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-1) படிக்க

************

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-2) படிக்க


(அரங்கத்தில் வெள்ளமென பார்வையாளர்கள்...)

தங்களது அணிக்காக அழகான வாதங்களை முன்வைத்து மற்றவர்களின் வாதங்களை ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்த திருமதி. சித்ரா, திருமதி. பொற்செல்வி, திரு. செந்தில் வேலன் ஆகியவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்தபடி தனது வாதங்களை எடுத்து வைக்க வந்தார் திரு.சங்கர்.

திரு.சங்கர்: 'செந்தமிழே உன் பிறப்பை யார் அறிவார்' என்று தமிழ்த்தாயை வணங்கி வாதத்தைத் தொடங்கிய சங்கர் அவர்கள் எல்லாரும் பொண்டாட்டி புள்ளைங்ககூட வந்து பட்டிமன்றத்தை ரசிக்கும்போது செந்தில் மட்டும் மனைவியை துபாயிலேயே விட்டுவிட்டு வந்து திருமணத்துக்கு முன்னே பட்டாம் பூச்சி என்று பேசுகிறார் என ஆரம்பத்திலேயே செந்தில் வேலனை சிறு தாக்கு தாக்கி தன்னை தாக்கியவருக்கு நம் பாணியில் பின்னூட்டமிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

மகிழ்ச்சியான வாழ்க்கை திருமணத்துக்குப் பின்னே என்று என் கட்சிக்காரர்கள் வாதிடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதை கண்டிக்கிறேன்... என்னைக்கு ஒரு பொண்ணைப் பார்த்து நமக்கு அதைப் பிடித்து அதுக்கு நம்மளைப் பிடித்துப் போச்சின்னு வையுங்க அன்னைக்கே மகிழ்ச்சி ஆரம்பிச்சிரும். நீங்க போங்க நாங்க சொல்லி அனுப்புறோமுன்னு சொல்லி அவங்க சொல்லியனுப்புற வரைக்கும் மனசு படுற பாட்டை அனுபவிச்சிருப்பாரு போல... அவ்வளவு அழகா விளக்கினார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை திருமணமே சொர்க்கம்தானேங்க என்று சிலாகித்தார். அண்ணனுக்கு கல்யாணம் என்றால் தம்பிக்கு சந்தோஷம் ஏன்னா அண்ணிக்குதான் ரெண்டு தங்கைங்க இருக்காங்களேன்னு கொஞ்சம் 'ஜொள்'னார்.

மேலும் சொந்த வீட்ல நாம தெண்டச்சோறா இருந்திருப்போம். சாப்பிட்டியான்னு கேக்கக்கூட நாதியிருக்காது ஆனா திருமணத்துக்குப் பின்னாடி மாமியா வீட்ல பாத்துப் பாத்து கவனிக்கும் போது மச்சினன் பக்கத்துல இருந்துக்கிட்டு மச்சான் அடிக்கடி வாங்கன்னு சொல்றப்போ எனக்கே இன்னைக்குத்தான் கிடைக்குதுன்னு சொல்ல முடியாட்டியும் அதுல இருக்கிற சந்தோஷம் கல்யாணம் பண்ணாதவங்களுக்கு கிடைக்குமான்னு கேட்டார்.  நிறைய சொன்ன அவர்

"திருமணம் செய்து பார்!
வாரத்தில் ஒரு முறையாவது பல் துலக்கத் தொடங்குவாய்!
மாதத்தில் சில முறையாவது குளிக்கத் தொடங்குவாய்!" என்று கவிதையாய் ஆரம்பித்து கடைசியில்
"திருமணம் செய்து பார்!
உன் மனைவிக்கு நீதான் உலகமே!" என்று முடித்தார்.

(திருமணத்திற்குப் பின்பே என்று வாதிட்ட திரு.சங்கர்)

திரு.ஐ.லியோனி: சங்கர் கூறிய கருத்துக்களை தன் நகைச்சுவைப் பாணியில் பாடல்களுடன் விளக்கினார். அப்போது பயக வேலையில்லாம வீட்ல இருக்கும் போது படும்பாட்டை ஒரு கதையின் மூலமாக சொன்னார். வேலையில்லாமல் வீட்டில் இருந்த ஒருத்தன் எல்லாரும் குளித்ததற்குப் பிறகு ஒரு பத்து மணி வாக்குல குளிச்சிட்டு வந்தானாம். அப்போ அவனோட அப்பத்தா பாத்துட்டு என்னமோ வேலை பாக்குற மாதிரித்தான் சீக்கிரம் எந்திரிச்சிக் குளிச்சா என்ன என்று திட்டியதாம். அதனால் அடுத்த நாள் விடியக்காலையில எந்திரிச்சுக் குளிச்சானாம். அவன் அப்பா பாத்துட்டு எந்த ஆபீசுக்குப் போகப் போறாராம் மொத ஆளா குளிக்கிறாருன்னு கேட்டாராம். என்னடா சீக்கிரம் குளிச்சாலும் திட்டுறாங்க... லேட்டா குளிச்சாலும் திட்டுறாங்கன்னு அடுத்த நாள் குளிக்காம இருந்தானாம். வீட்டுப் பக்கம் வந்த அடுத்த வீட்டுப் பாட்டி , என்னமோ தம்பி இப்பத்தான் சமஞ்ச குமரியாட்டம் குத்த வச்சிக்கிட்டு இருக்குன்னு திட்டிட்டுப் போச்சாம் என்று நகைச்சுவையுடன் பேசி திரு. தனபால் அவர்களை திருமணத்திற்கு முன்பாக என்ற அணிக்கு பேச அழைத்தார்.

திரு. தனபால்: நடுவருக்கும் அவைக்கும் வணக்கம் சொல்லி தனது உரையை ஆரம்பித்த தனபால் அவர்கள் நடுவர் அவர்களே கொங்குத் தமிழுக்கு மாறினால்தான் எனக்கு பேச வரும் என்று கோவை பேச்சுக்கு மாறினார். சங்கர் என்னவோ சொல்லிட்டுப் போனார்.இப்ப இங்க என்ன நடந்துச்சு தெரியுங்களா..? நானும் அவரும் இன்னைக்குப் பூராம் சேந்தே இருக்கோம். ரெண்டு போனுதாங்க வந்துச்சு... ஆளே மாறிட்டாரு பாருங்க... வரும் போது கோட்டுப் போட்டுக்கிட்டு வந்தாரு... அப்ப அம்மாகிட்ட இருந்து போன், அம்மாகிட்ட இவரு இன்னைக்கு பட்டிமன்றத்துல பேசுறேம்மான்னு சொல்லவும். கோட்டுச் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டுப் போப்பான்னு சொல்ல, கோட்டுத்தான் போட்டிருக்கேன்னு சொன்னாரு. அப்புறம் தங்கச்சிக்கிட்ட இருந்து போன், இவரு கோட்டுப் போட்டு பட்டிமன்றத்துல பேசப்போறேன்னு சொல்ல, முதல்ல அதைக் கழட்டி வீசுங்கன்னு கோவமா சொல்ல அந்தாப் பாருங்க கழட்டி தொங்க வச்சிட்டு வந்திருக்காருன்னு சொன்னார்.

மேலும் நான் எங்கவூட்ல எம் புள்ளைக்கிட்ட சொல்லி அம்மாகிட்ட காபிதண்ணி வாங்கிட்டு வான்னு சொன்னேன். அவளும் போட்டுக் கொடுத்து விட்டா. குடிச்சா வாயில வைக்க முடியலை, இது யாரு குடிப்பான்னு உங்கம்மாகிட்ட கேளுன்னு சொல்ல, அதுவும் கேட்டுச்சு, அப்ப உள்ள இருந்து ஏழு வருசமா எந்த நாய் குடிக்குதோ அதுதான் குடிக்குமுன்னு சொல்றாங்க. என்னைய எப்பவும் ஒரு புருஷனா நினைக்கிறதே இல்லைங்க எப்பவும் நான் கண்ணாடிதான்.

அப்புறம் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர்ல பிரபலமான எதாவது வாங்கிட்டு வருவேன். மணப்பாறையில ஒரு பட்டிமன்றம் முடிச்சிட்டு வரும்போது முறுக்கு நல்லாயிருக்குமின்னு வாங்கிட்டு வந்து ராத்திரி வந்ததால கண்ணாடிய கழட்டி வச்சிட்டு முறுக்கு வாங்கி வந்திருக்கேன்னு சொல்ல அங்க வையி கண்ணாடின்னா வச்சிட்டு படுத்துட்டேன். கொஞ்ச நேரத்துல என்ன கண்ணாடி முறுக்கு வாங்காந்திருக்கே... கசக்குதுன்னா... நான் தூக்க கல்க்கத்துல நல்லமுறுக்குன்னுதான் வாங்கியாந்தேன்ன்னு சொல்ல, எந்திரிச்சுப் பாருன்னு சொல்ல, எந்திரிச்சு கண்ணாடிய எடுத்துப் போட்டுப் பார்த்தா வாங்கியாந்த முறுக்கு அப்படியே இருக்கு. பக்கத்துல இருந்த கொசுவர்த்தி சுருளை ஒடச்சி சாப்பிட்டுருக்கா நடுவரே என்றார்.

இப்படித்தான் பக்கத்து வீட்ல எதாவது ஒண்ணு வாங்கிட்டா அதைவிட பெரிசா வாங்கணும் எங்கவீட்டு அம்மணிக்கு... பக்கத்து வீட்ல பைக் வாங்கிட்டாங்கன்னு நச்சரிக்க, பல்சர் வண்டி வாங்கி வீதியில கூட்டிக்கிட்டுப் போனா அடுத்தவன் கார் வாங்கிட்டான்னு கார் வாங்கச் சொல்லி சண்டை, அப்புறம் காரும் வாங்கியாச்சு நடுவர் அவர்களே... ஒரு நா வெளிய பொயிட்டு வரும் போது அவங்க வீட்டு வாசல்ல நின்ன வண்டிய பாத்துட்டு கண்ணாடி இது மாதிரி நமக்கும் வாங்கணுமின்னு சொன்னா, எனக்கு தூக்கிப் போட்டுடிச்சு. அவ கேட்டது என்ன தெரியுமா? ரோடு வேலை பாத்துட்டி பொக்லைன் வண்டிய அடுத்த வீட்டு முன்னாடி நிப்பாட்டிட்டு போயிருக்காங்க...

இவர் இவ்வாறு பேசும் போது இடையில் புகுந்த லியோனி, இதைத் தாய்யா அன்னைக்கே கவிஞன் பாடி வச்சான். 'டுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா... அவ ஆத்துக்காரர் பண்ணுறதைக் கேட்டேளா'ன்னு பாட்டைப் பாடி கடைசியா அவன் அடிச்ச பின்னாலயும் அழுதுகிட்டே அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளான்னு பாடுவான்னு சொன்னார்.

தனது பேச்சைத் தொடர்ந்த தனபால், ஒரு நா இப்படித்தான் எங்கம்மாவுக்கும் வூட்டுக்காரிக்கும் சண்டை. நான் வந்தா ரெண்டு பேரும் சண்ட போட்டுக்கிட்டு நா எங்கயோ பேறேன்னு அம்மாவும் நா எங்கம்மா வூட்டுக்குப் போறேனும் பொண்டாட்டியும் கிளம்ப, சொல்லிப் பாத்து கேக்கலை அப்ப நான் சரி ரெண்டு பேரும் போங்க வேலைக்காரியிருக்கான்னு சொன்னேன் திரும்பி வந்துட்டாங்கன்னார். மேலும் நிறைய நகைச்சுவைகளை அள்ளி வீசினார். இவருடன் சேர்ந்து லியோனியும் கலக்க, அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

கடைசியாக நடுவர் அவர்களே எனக்கு எழரைச் சனியின்னா உங்களுக்கு ஜெம்மச்சனி என்று லியோனி மனைவியுடன் வந்திருப்பதை நகைச்சுவையுடன் சொல்ல, அரங்கம் மட்டுமல்ல பேச்சாளர்களும் கைதட்டி ரசித்தார்கள்.

முடிக்கும் போது மணப்பாறைக்கு முறுக்கு, தஞ்சாவூருக்கு பொம்மை, மதுரைக்கு குண்டு மல்லி, மானாமதுரைக்கு மல்லி, திருநெல்வேலிக்கு அல்வா, கும்பகோணத்து வெத்தலை என்று வரிசையாக அடுக்கி கடைசியில் பட்டிமன்றத்துக்கு லியோனி, அபுதாபிக்கு பாரதி நட்புக்காக என்று முடித்தார்.

ஆரம்பம் முதல் கடைசி வரை கொங்குத் தமிழில் நகைச்சுவையை அள்ளி வழங்கினார் திரு.தனபால். அவர் மனைவி மட்டும் கேட்டிருந்தால் அய்யாவுக்கு ஆப்புத்தான். கரண்டி வாராது என்ற நம்பிக்கையில்... கடல் கடந்து வந்த சந்தோஷத்தில் பேசினாரோ என்னவோ...

திரு.லியோனி: அப்பு இப்படி அடுக்குமொழி பேசி பெரிய ஆளா ஆயிரலாமுன்னு நினைக்கிறாரு போல... அடுக்கு மொழி பேசினவங்க எல்லாம் இப்ப இருக்க எடம் தெரியலை என்றார். இவருக்கு ஏழரைச் சனியாம் நான் என் மனைவியுடன் வந்திருப்பதால் ஜென்மச்சனியாம் என்று அவரது பேச்சை விளக்கி, நான் நல்லாயிருக்கனானு கேக்கப்படாது... எனக்குத்தானே தெரியும் என்று முடித்தார்.

திரு.தனபால் அவர்களைத் தொடர்ந்து பேச வந்த மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் பேச்சு மற்றும் திரு.லியோனி அவர்கள் உரையும் நிறைவுப் பகுதியில்...

தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 27 ஜனவரி, 2011

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-2)



பட்டிமன்றத் தலைப்பு : "மகிழச்சியான வாழ்க்கை - திருமணத்திற்கு முன்பே / திருமணத்திற்கு பின்பே"



 (விழா மேடையில் திரு.லியோனி)

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-1) வாசிக்காதவர்கள்  இங்கே கிளிக்கவும்.

திரு.லியோனியின் முன்னுரையுடன் தொடங்கிய பட்டிமன்றத்தில் பேச்சாளர்களின் பேச்சு தொடங்கியது.

திருமதி. சித்ரா: பள்ளிக் காலம், கல்லூரிக்காலம் என நட்பின் அடையாளங்களை தனது பேச்சில் வழங்கினார். ஒரு அப்பாவும் பொண்ணும் திருவிழாவுக்கு செல்லும்போது கூட்டத்தில் வழி தவறாமல் இருக்க என் கையை பிடித்துக்கொள்ளம்மா என்று அப்பா சொன்னாராம். அதற்கு அந்தப் பெண் நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் அப்பா என்றது சொன்னதாம். அது ஏன் அப்படி சொல்கிறது என்று குழம்பிய அப்பாவிடம் நான் கூட்டத்தில் உங்கள் கையை விட்டு விடுவேன். ஆனால் நீங்கள் என் கையை பிடித்தபிடியை விடமாட்டீர்கள் என்பதால்தான் என்று அந்தப் பெண் தன் அப்பாவிடம் சொன்னாளாம்.

திருமணத்திற்கு முன் அண்ணன், தம்பி, அக்கா தங்கை என்று சந்தோஷித்த அந்த நாட்கள் எல்லாம் திருமணத்திற்குப் பின் கிடைக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் திருமணத்திற்கு முன்பான வாழ்க்கையை செடியுடன் ஒப்பிட்டுச் சொன்னார். லியோனி அவர்களைப் பார்த்து நீங்களும் நெல்லிக்காய் சாப்பிட்டிருக்கிறீர்கள் எனவே மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பே என்று தீர்ப்பு வழங்குவீர்கள் என்று நம்புகிறோம் என்று முடித்தார்.

திரு. லியோனி : திருமதி. சித்ரா அவர்கள் அருமையாக தங்கள் பக்க கருத்துக்களைச் சொல்லி அமர்ந்திருக்கிறார்கள். இப்படித்தான் ஒரு அக்கா, தன் பையனைப் படிக்க வைக்க பணம் பொரட்டி பத்தாயிரம் பத்தாமல் போகவே தம்பியிடம் வந்து தம்பி ஒரு பத்தாயிரம் கொடுடா, மூணு மாசத்துல திருப்பித் தந்துடுறேன் என்று கேட்க, எங்க வீட்டு நிதியமைச்சர் கிச்சன்ல இருக்காக்கா, என்று சொல்லி இரு அவகிட்ட கேக்கிறேன்ன்னு சொல்லி என்னடி எங்கக்கா பத்தாயிரம் கேக்குது கொடுக்கவான்னு கேக்க, இந்தப் பொம்பளங்க அதுக்குன்னு ஒரு பேச்சு வச்சிருப்பாங்க, கொடுங்ங்ங்கககன்னு சொல்ல கொடுக்கிறதா இல்லையாங்கிற குழப்பத்தோட கொடுக்கத்தான் சொல்றா நாளைக்கு வாக்கா என்று சொல்லி அனுப்ப, கொடுங்க கொடுங்க இப்படி அள்ளிக் கொடுத்துப்புட்டு எங்களை தெருவுல விடுங்கன்னு கத்திக்கிட்டு, தூங்குன பையனை தட்டி எழுப்பி நாம பிச்சைதான்டா எடுக்கனுமின்னு சொல்ல இதுக்குத்தான் இந்த ஆளை கட்டிக்காதேன்னு சொன்னேன்னு சொன்னானாம் என்று சில நகைச்சுவைகளுடன் விளக்கங்கள் கொடுத்தார்.

('நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி' - நடன மயில்)

தன் பெயரை தவறாக சொல்கிறார் என்பதால் சித்ரா அவர்கள் பேசும்போதே பொற்செல்வி கண்ணன் என்ற தன் பெயரை லியோனி அவர்களிடம் எழுதிக் கொடுத்துவிட இந்தமுறை லியோனி திருமதி பொற்செல்வி கண்ணன் என்று சரியாக அழைத்தார்.

திருமதி பொற்செல்வி: திருமதிற்குப் பின்புதான் மகிழ்ச்சி இருக்கிறது என்று அடித்துச் சொன்னதுடன் குடும்ப சகிதமாக வந்து பட்டி மன்றத்தை ரசிப்பவர்கள் மத்தியில் ஒருத்தர் மட்டும் தனியாக உக்காந்து பாவமா பாத்துக்கிட்டிருக்கிறார் என்று சித்ராவின் கணவரை காண்பித்து கைதட்டல் பெற்றார்.

உறவுகள் நட்புக்கள் என எல்லாம் இருந்தாலும் முன்பின் அறிமுகமில்லாத இருவர் வாழ்க்கையில் இணைந்து தங்கள் சுக, துக்கங்களைப் பகிர்ந்து வாழும் திருமண வாழ்க்கையின் மகோத்துவத்தை தன் வாதத்தில் வைத்தார். கணவனோ மனைவியோ அணுசரனையாய் இருப்பது போல் நட்போ உறவோ இருப்பதில்லை என்றும், தாய்மையின் சந்தோஷங்களும் தங்கள் வாரிசின் வரவின் மகிழ்ச்சியும் அளிக்கும் சந்தோஷத்தை திருமணமில்லாத வாழ்க்கை கொடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். தாய்மையின் தனித்துவம் குறித்து நல்ல எடுத்துக்காட்டுக்களுடன் சிலாகித்தார்.. கணவன் மனைவி உறவு குறித்துப் பேசியதுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கவிதையும் சொன்னார்.

திரு. லியோனி: பொற்செல்வி அவர்களின் பேச்சை அலசிய லியோனி அவர்கள், நம் திருமண வாழ்க்கை குறுத்த கருத்துக்களை சொன்னபோது, ஒரு கோவிலில் அறுபதாம் கல்யாணம் நடந்ததாகவும், அதை பார்த்த வெள்ளைக்காரன் வாட் இஸ் திஸ் என்று ஒருவரிடம் கேட்க, இது அறுபதாம் கல்யாணம் என்று அதற்கான விளக்கம் கொடுக்க, என்னடா இவங்க ஒரே பொம்பளைகூட அறுபது வருடம் குடும்பம் நடத்துறாங்கன்னு சொன்னானாம் என்றார்.


('போக்கிரிப் பொங்கல்' - அரும்புகள்)

திருமதி.சித்ரா பேசும் போதும், லியோனி பேசும் போதும் விடியோ எடுப்பவர் அவர்களை  முழுவதும் கவரேஜ்க்குள் கொண்டு வந்தார். அதனால் மேடைக்கு இடப்புறம் வைத்திருந்த ஸ்கீரினில் பார்க்க முடிந்தது. ஏனோ தெரியவில்லை திருமதி.பொற்செல்வி பேசும்போது சித்ரா அவர்களையும் மற்றவர்களையும் மட்டுமே காட்டிக் கொண்டிருந்தார். அவர் பேசி முடிக்கும் வரை கேமராவைத் திருப்பவில்லை. இதனால் எங்கள் பக்கம் இருந்த நண்பர்கள் மிகவும் கோபப்பட்டார்கள். எதனால் அப்படிச் செய்தார் என்பது தெரியவில்லை.

 திரு.செந்தில் வேலன்: வெகு வேகமாக சொல்லப் போனால் ரஜினி ஸ்டைலில் நடந்து வந்த செந்தில் சற்று சாய்வாக நின்றபடி அவர் உயரத்துக்கு தகுந்தாற்போல் மைக்கை சரி பண்ண முயன்று திணறி தோற்றார். மற்றொரு நண்பர் வந்து சரி பண்ணிக் கொடுத்தார். இதுவே அவருக்குப் பின் பேச வந்த மதுக்கூராருக்கு அவலானது. சாய்வாக நின்றவண்ணம் முழுமை பெற்றதற்கும் பெறாததுக்கும் நடுவரிடம் விளக்கம் கேட்டார். அவர் நீங்க முதல்ல நல்லா நில்லுங்க என்றும் நீங்க முழுமை பெற்று விட்டீர்களா என்றும் திருப்பிக் கேட்க, கடைசியில் சொல்வதாக சொன்னார்.

திருமணங்களுக்குப் பின்னர் அநாதை இல்லங்களும் முதியோர் இல்லங்களும் பெருகுவதாகவும் பேசினார். நட்பு குறித்து சித்ரா அவர்கள் பேசியதை நினைவு கூர்ந்த வேலன், முஸ்தபா... முஸ்தபா... பாடலைப்பாடி நட்பின் ஆழத்தை விளக்கினார். அப்போது லியோனி அந்தப்பாடலின் மூழ்காத ஷிப்பே பிரண்ட் ஷிப்தான் என்ற வரிகளைப்பாடி சிலாகித்தார். தாய்மை குறித்துப் பேசிய பொற்செல்வி அவர்களின் கூற்றை மறுத்து தாய்மை சிதைக்கப்படுவதாக ஆதாரங்களுடன் பேசினார். சிறைக்கு சென்று சுவீட் கொடுத்தது போன்ற விசயங்களைப் பேசும்போது திரு. சங்கர் அவர்களை வம்புக்கு இழுத்தார்.

மேலும் திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கை பட்டுப்பூச்சி வாழ்க்கை என்றும் முன்னான வாழ்க்கை பட்டாம் பூச்சி வாழ்க்கை என்றும் சொல்லி பட்டுப்பூச்சி பாருங்க ஒரு இடத்துல இருந்து அதோட வாழ்க்கையை முடிச்சுக்கிட்டு பட்டு நூலை கொடுத்துட்டுப் போகுது. ஆனா பட்டாம்பூச்சி அப்படியே பறந்து பல இடத்துக்கும் போய் சந்தோஷமா இருந்துட்டுப் போகுது என்று முடித்தார். ஆனால் கடைசி வரை முழுமை பெற்றதற்கும் பெறாததற்கும் அவர் விளக்கம் கொடுக்கவில்லை.


(திரு & திருமதி. லியோனியுடன் 'பாரதி நட்புக்காக' . திரு ராமகிருஷ்ணன், அவருக்குப் பின்னே திரு. சுபஹான் (வெள்ளைச்சட்டை))

திரு.லியோனி: செந்தில் வேலன் அவர்களின் வாதத்தில் அவர் பட்டுப்பூச்சி, பட்டாம்பூச்சி என சொன்ன கருத்தை ரசித்துப் பேசினார். மேலும் ஒரு கல் ஒரே இடத்தில் கிடக்கும் என்றும் ஆனால் சிறு இறகு காற்றில் பறந்து எல்லா இடங்களும்... ஏன் உலகையே சுற்றி வர அதனால முடியும். திருமணத்துக்கு முன்னான வாழ்க்கை இறகு போல்... பின்னான வாழ்க்கை கல் போல்... என்று சொல்லி வாங்க சங்கர், என்ன பதில் வச்சிருக்காருன்னு பாப்போம் என்றழைக்கவும் திரு.சங்கர் அவர்கள் தனது தரப்பு வாதத்தை தொடர வந்தார்.

சிறு விளக்கம்:

பட்டிமன்ற பேச்சாளர்களை அறிமுகப்படுத்தி மேடையேற்றிய பாரதி நட்புக்காக நண்பர் திரு. முனீஸ்வரன் அவர்கள் பெயர் சென்ற பதிவில் விடுபட்டு விட்டது. பதிவைப் பார்த்த திரு,முனீஸ்வரன் அவர்கள் சகோதரர் சுபஹான் அவர்களுக்கு அனுப்பிய மெயில் இது...

//அது எப்படி சார் ?????


உங்கள் நண்பர் குமாருக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சசிகலா ஞாபகமிருக்கு

என் பெயர் ஞாபகமில்லாமல் போச்சு.

என் பெயர் தமிழ்ப் பெயர் இல்லையோ??


நன்றி
Muneesh //

என்ன செய்யிறது நம்ம வலைப்பூவோட பேரே 'மனசு' - மனசுக்கு என்ன பிடிக்குமுன்னு எல்லாருக்கும் தெரியுமில்ல... அதனால கூட மறந்திருக்கலாம். முனீஸ்வரன் சாரையும் பாருங்க தமிழ்த்தாய் வாழ்த்து பாடினது ரெண்டு பேரு... ஆனா அவரு சொன்னது.... சரி விடுங்க... அவருக்கும் 'மனசு' இருக்குல்ல... சார்... உங்கள் பெயர் விடுபட்டதை சரிக்கட்ட மூன்று முறை சொல்லியாச்சு. (சகோதரர் சுபஹான் மன்னித்தருள்வாராக - அனுமதி பெறாத மின்னஞ்சல் பதிவுக்காக)

தொடரும்...

-'பரிவை' சே.குமார்.

** நட்புக்காக போட்டோ உதவிய திரு.சுபஹான் அவர்களுக்கு நன்றி.

திங்கள், 24 ஜனவரி, 2011

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு பகுதி-1)



வார விடுமுறையான வெள்ளிக்கிழமை அபுதாபியில் ஒரு மழை நாள் என்று சொல்லும்படியாக காலை முதல் வானம் அவ்வப்போது விட்டுவிட்டு தூறிக் கொண்டே இருந்தது. என் மரியாதைக்குரிய சுபஹான் அவர்கள் பாரதி நட்புக்காக அமைப்பின் மிக முக்கியமான நண்பரைக் காண வருமாறு வியாழன் அன்று இரவே அழைத்திருந்தார். போகமுடியாத காரணத்தால் காலையில் போக நினைத்திருந்தேன். ஆனால் மழையும் மதிய உணவு சமைக்க வேண்டிய கட்டாயமும் என்னைச் சுற்றிக்கொண்டதால் போக முடியவில்லை.

மாலை நடக்கும் விழாவில் அவரைச் சந்தித்து நிலமையை விளக்கி கொள்ளலாம் என்று நினைத்து மதியம் சாப்பாட்டுக்குப் பின் சிறிது தூக்கம், பின் ஊருக்கு போன், நண்பர் தமிழ்க்காதலனுடன் சாட்டிங் என்று கழித்து மாலை விழாவுக்கு செல்ல நினைக்கையில் நல்ல மழை பெய்கிறது எப்படிச் செல்வது என்ற யோசனை வேறு... இருந்தும் மழையோடு எங்கள் அருள் அண்ணன் காரில் கிளம்பினோம். மாலை நேர மழையில் அபுதாபி இன்னும் அழகாகத் தெரிந்தது. மழையோடு விழா மேடையை அடைந்தோம். யாருடனோ பேசியபடி எதிர்ப்பட்ட சுபஹான் அவர்கள் கை கொடுத்து விலகிச் செல்ல, சரி அவர் கூப்பிட்டதுக்கு மதிப்பளிக்கவில்லை என்று நினைத்து கோபமாக இருக்கிறார் போலும் என்று நினைத்தபடி நாளை அண்ணனை சரி செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன். எதோ விழா என்கிறான் என்னவென்று சொல்லவில்லையே என்று யோசிக்கிறீர்கள்தானே வாங்க விழாவுக்கு சேர்ந்தே போவோம்.

சில வாரங்களுக்கு முன்னர் வார விடுமுறையை பொன்மாலைப் பொழுதாக மாற்றிய பாரதி நட்புக்காக அமைப்பினர் இந்த மழைநாளை சிரிப்பு மாலையாக ஆக்கியிருந்தார்கள். ஆம்... திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் தலைமையில் ஒரு அழகான பட்டிமன்றத்தை ஆர்ப்பாட்டமில்லாமல் நடத்தி அசத்தினார்கள்.

பட்டி மன்றத்தின் தலைப்பு "மகிழ்ச்சியான வாழ்க்கை - திருமணத்திற்கு முன்பே / திருமணத்திற்கு பின்பே".

"முன்பே" என்ற அணியில் திருமதி. சித்ரா, திரு.செந்தில் வேலன், கோவையிலிருந்து வந்திருந்த ஆசிரியர். தனபால் ஆகியோர் பேசினார்கள். "பின்பே" என்ற அணியில் திருமதி. பொற்செல்வி, திரு. சங்கர், பத்திரிக்கையாளர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பேசினார்கள்.

மழை நேரம் என்றாலும் விழா அரங்கத்தில் நம் தமிழர் வெள்ளம் நிரம்பி இருந்தது பார்க்க சந்தோஷமாக இருந்தது. திருமதி. சசிகலா, திருமதி. சங்கீதா கடவுள் வாழ்த்துப் பாட, அவர்களைத் தொடர்ந்து பேச வந்த முருகப்பன் அவர்கள் பாரதி நட்புக்காக அமைப்பின் பெருமைகளைச் சொல்லி அவர்கள் இணையதளத்தில் நிறைய பேர் உறுப்பினர்களாகி இருப்பதாக சந்தோஷத்துடன் தெரிவித்தார்.

அதற்குப் பின் திருமதி. மீரா நாயர் அவர்களின் நடனக் குழுவினரின் நடனம் நடத்தப்பட்டது.

முதலில் நம்கவி பாரதியின் 'நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி...' பாடலுக்கான நடனத்தில் ஆடிய அந்தப் பெண் பார்வையாளர்களைக் கவர்ந்தார். அதன் பின் அந்தக்காலப் பொங்கலுக்கான பாடல் தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்...' பாடலுக்கு ஆடியவர்கள் கலக்கினார்கள் என்றால் அதன்பின் இந்தக்கால பொங்கலுக்கான பாடலாக போக்கிரிப் பொங்கல் ஆடிய அனைத்தும் குட்டீஸ், அதில் விஜயாக வந்தவர் போன விழாவில் பரதம் ஆடியவர் என்று நினைக்கிறேன்.

பாவம் குழந்தைகள் மேடையேற்றிய பின்னர் கையை நீட்டியபடி நிற்க பாடல் போடுவதில் பிரச்சினை, பிரச்சினையை மறைக்க ஒருவர் புதுப் பொங்கலை அவ்வளவு சீக்கிரமா அனுபவிக்க விட்டுடுவோமா என்று சமயோகிதமாக திரைமறைவில் இருந்து பேசினாலும் குழந்தைகள் கை வலித்து கையை தொங்கப் போட்டபோது நம் மனது வலிக்கத்தான் செய்தது. பின்னர் பாடலுக்கான ஆட்டத்துக்கு கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து பிளாப் படங்களைக் கொடுத்தாலும் விஜய்க்கு இன்னும் மாஸ் குறையவில்லை. அரசியலுக்கு போக வேண்டாம் விஜய்... பிளாப் கொடுத்தாலும் உன்னைக் கண்டால் பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான்.

அதன்பின் இந்த விழாவுக்கு உதவி புரிந்த தொழிலதிபர் திரு. லெட்சுமணன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். ஒரு தமிழன் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை வெற்றிகரமாக அரசுடன் இணைந்து நடத்துகிறார் என்கிறபோது நமக்கெல்லாம் சந்தோஷமே. அவர் சில நொடிகள் மேடையில் பேசினார் அதுவும் அழகு தமிழில்... ஆங்கிலமே பேசி பழகும் அவரால் சரவெடியாக வெடிக்க முடியாவிட்டாலும் அவர் பேசிய தமிழில் சந்தோஷம் கொண்டிருப்பாள் நம் தமிழ்த்தாய்.

பின்னர் பட்டிமன்றம் தொடங்கியது. பேச்சாளர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட இறுதியில் நடுவர் லியோனி குறித்து சிறு விளக்கம் சொன்னதுடன் இன்னும் அதிக விவரம் தேவைப்பட்டால் 'www.dindugal.com' -ல் போய் தெரிந்து கொள்ளுங்கள் என்றதும் கூட்டத்தில் சிரிப்பலை அடங்க அதிக நேரமானது.

அழைப்பைத் தொடந்து பார்வையாளர்கள் வரிசையில் இருந்த லியோனி அவர்கள் மேடையேறினார். மேடையில் வைத்திருந்த பேனரில் சிவப்புச் சட்டை போட்டிருந்தார். நேரிலும் அதே சிவப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார். எதேச்சையாக நடந்ததா இல்லை அந்தக் கலர் அவருக்கு ராசியா என்பது தெரியவில்லை. மேடையில் இருந்து கூட்டத்தைப் பார்த்து கையசைத்தார். அவருக்கு பூச்செண்டு மற்றும் சால்வை மூலம் மரியாதை செலுத்தப்பட்டது.

லியோனி தன் பேச்சை 'மனதில் உறுதி வேண்டும்...' என்ற பாரதி பாடலுடன் ஆரம்பித்தார். நானும் உலகெங்கும் பட்டிமன்றத்துக்கு சென்றிருக்கிறேன், எல்லா இடத்திலும் தமிழ் அமைப்பு, தமிழ் சங்கம் என்ற பெயர்களில்தான் இருக்கும், இங்கு பாரதி நட்புக்காக என்று வைத்திருக்கிறார்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார். மழை பெய்யுது கூட்டம் வருமா என்று நினைத்தேன். ஆனால் இங்கு வந்திருக்கும் நம் தமிழர்களைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.

அவர் பேச்சில் சிரிப்புக்கள் சரவெடியாக வந்து கொண்டிருந்தன. என்னைய கூட்டியாந்து வச்சி எப்படி தலைப்பு கொடுத்திருக்காங்க பாருங்க... முன்னேன்னு சொன்னா கல்யாணமானவங்களும் பின்னேன்னு சொன்னா ஆகாதவங்களும் சண்டைக்கு வருவாங்க... சிக்கல்தான் என்றவர், இளமைப் பருவத்தைப் பற்றி சிலாகித்தார்.

அவர் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருபாலர் பள்ளியில் படித்தாராம். அதன் பின் கல்லூரி முடிக்கும் வரை பசங்க மட்டுதான்... நிறைய மிஸ் பண்ணியிருப்பார் போல மேடையில் சோகத்துடன் சொன்னார். அந்த அஞ்சாவதுக்குள்ள அவரு பெரிய ஆளா இருந்திருக்கிறார். அவரோட ஒரு பொண்ணு திக் பிரண்டாம். அந்தப்புள்ளை (இப்ப திருமதியா இருப்பாங்க) கையில அஞ்சு காசு வச்சிருந்தா டேய் லியோனி வாடான்னு சொல்லி பள்ளைக்கூட வாசல்ல இருக்க கடையில நெல்லிக்காய் வாங்குமாம். சரி கொடு நான் கடிச்சித்தாரேன்னு லியோனி கேட்டா ம்... ஓ எச்சிய நாந்திங்கணுமாக்கும் , சரி நீ கடிச்சிக்கொடுன்னா எ... எச்சிய திங்கணுமுன்னு உனக்கு அம்புட்டு ஆசையாக்கும்ன்னு கேட்டுட்டு இரு வாரேன்னு சொல்லிட்டு பாவடையில வச்சி கடிச்சுக் கொடுக்குமாம். அந்தப் பாடவை தொவச்சி ஒரு மாதம் இருக்குமாம். இருந்து அந்த சுவை இன்னும் இனிக்கிறதாம். எல்லா மேடையிலும் அந்தப்புள்ளையப் பத்தி சொல்லிக்கிட்டே இருக்காராம். எத்தனை புள்ளை பெத்து எங்கிட்ட கஷ்டப்படுதோ அதை எப்படியாவது பாக்கணுமின்னு நினைவுகளில் நீந்தினார்.

அப்புறம் 14,15 வயசுதான் கவனிச்சுப் பாக்க வேண்டிய என்றவர், அப்பதான் பயலுகளுக்கு குரல் மாறும் அதுவரைக்கும் அப்பா சரிப்பான்னு கீச்சுக்குரல்ல பேசுவாங்களாம். அப்புறம் பாத்தா 'என்னன்னு...' கரகர கொரல்ல பேச ஆரம்பிச்சிட்டா அப்பங்காரன் சரியின்னு ஒதுங்கிறனுமாம். மேலும் டாய்லெட் குறித்து பேசும்போது ஒருமுறை மாமா ஒருவருடன் வெளிநாட்டுக்கு பேச சென்றிருந்தேன். அங்கு தங்கியிருந்த வீட்டில் டாய்லெட்டுக்கு போனார், போனவர் சிறிது நேரத்தில் கதவை தட்டினார். என்ன மாமா என்று கேட்க, தண்ணியில்ல மாப்ளே என்றார். பேப்பர் இருக்கும் பாருங்கன்னு சொல்ல, சரியா தொடக்க முடியலைன்னாராம். நல்லா தொடச்சுக்கங்கன்னு சொன்னதும் வச்சிருந்த பேப்பரையெல்லாம் காலி பண்ண வீட்டுக்காரன் தண்ணியும் வாளியும் கொண்டு வந்து வைத்தானாம்.

அதே நம்ம ஊரில் நடந்த கதை ஒன்று சொன்னார், வெளிநாட்டில் இருந்து மகங்களுடன் வந்த ஒருவனிடன் மகன் அப்பா டாய்லெட் போகணும் என்றதும் நம்ம டைப் டாய்லெட்டில் கொண்டு போய்விட, இதில் எப்படி என்று அவன் ஆங்கிலத்தில் கேட்க, அப்பா சொன்னாராம் ' put your left leg left side, right leg right side sit middle..........' அப்படின்னு சொல்லிக்காட்டினானாம். பையனும் போனானாம் பேண்டைக் கழட்டாமல்.... அப்புறம் எப்படி அலசினார்கள் என்பதை நகைச்சுவையுடன் கூறினார். அவரது நகைச்சுவைகளில் முகம் சுளிக்க வைத்த முதரலிரவு நகைச்சுவைகளே அதிகம் இருந்தன. மேடையில் இருந்த பேச்சாளர்களில் பெண் பேச்சாளர்கள் இருவரும் மிகவும் தர்ம சங்கடத்துடன் இருந்தார்கள் என்பது அவர்கள் அங்கும் இங்கும் பார்வையை ஓட விட்டதிலேயே தெரிந்தது. நகைச்சுவையாய் நிறைய பேசினார்.

நானே பேசிக்கொண்டிருந்தால் என்னடா இவனே பேசுறான்னு முணுமுணுக்க ஆரம்பிச்சிருவீங்க அப்படின்னு பேச்சாளர்களை அறிமுகப்படுத்தினார். 'முன்பே' அணியின் திருமதி. சித்ராவை அறிமுகப்படுத்தும் போது அவர் நெற்றி நிறைய பொட்டு வைத்துக் கொண்டு திருமணத்துக்கு முன்பு சந்தோஷமாக இருந்ததாக பேச வந்திருக்கிறார் என்றவர் உங்க வீட்டுக்காரர் வந்திருக்கிறாரா என்று கேட்க, முதல் வரிசையில் இருந்தவரை கைகாட்ட, திருமணத்துக்கு முன்னாலதான் சந்தோஷமா இருந்தேன்னு பேசுறதை கேட்க முன்வரிசையில வந்து உக்காந்திருக்கார் பாருங்க என்று நகைச்சுவையாய் கூறினார். திரு. செந்தில் வேலனை அறிமுகப்படுத்தும் போது சிறந்த பேச்சாளர் என்னுடன் சில மேடைகளில் பேசியிருக்கிறார் என்றார். திரு. கோவை தனபாலை அறிமுகம் செய்யும் போது கல்லூரியில் வேலை பார்ப்பதாகவும் கோவை தமிழில் பேசி அசத்துவார் என்றார். அப்ப எல்லா மாவட்டத்து பேச்சு வழக்கையும் ஒரு பிடி பிடித்தார் அதில் மதுரைக்காரன் பிரசன் டென்ஸ், பாஸ்டென்ஸ், பியூச்சர் டென்ஸ் எதுவுமே இல்லாம பேசுவாங்க, சாப்பிட்டியாடான்னா சாப்பிடுவோமுல்ல என்பான் சாப்பிட்டான்னா, இல்லையான்னே தெரியாது என்றார் அதேபோல் நாம சைக்கிளை ஓட்டினா திருநெல்வேலிக்காரங்க சமட்டுவாங்க என்று சொன்னது ஹைலைட்.

'பின்பே' அணியின் திருமதி.பொற்செல்வி கண்ணன் அவர்களை அறிமுகப்படுத்தும் போது பேரை மாற்றிச் சொன்னார். திரு. சங்கர் அவர்களை துபாயில் தமிழ் வளர்ப்பவர்களில் இவரும் ஒருவர் என்றார். திரு.மதுக்கூர் ராமலிங்கம் அவர்களை அறிமுகம் செய்யும்போது சிறந்த பத்திரிக்கையாளர், நல்ல பேச்சாளர், இவரது கட்டுரைகளை அரசியல் தலைவர்கள் விரும்பிப் படிப்பார்கள் என்றார்.

பேச்சாளர்கள் சரவெடியாய் களத்தில் இறங்கினர்.

தொடரும்....

-"பரிவை" சே.குமார்.