மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

தேர்தல் களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 மே, 2016

வாக்காளர் அலப்பறை...10

"வர வர நம்மாளுங்க செய்யிறது சரியில்லைங்க... சொல்லப்போனா என்னோட சண்டைக்கு வர்றாங்க..." என்றபடி அறைக்குள் நுழைந்தார் திருஞானம்.

"ஏன்..? என்னாச்சுண்ணே...? யாராவது உங்ககிட்ட பிரச்சினை பண்ணினாங்களா?" என்றார் கணிப்பொறியில் இருந்து தொலைக்காட்சிக்கு பிரேமலதாவின் பேச்சை மாற்றிக் கொண்டிருந்த அறை நிர்வாகி ராமராஜன்.

"நேத்து நீங்களும் இல்லை... இன்னைக்கு லீவு வேறயா...? நம்மாளுங்க நைட்டு ரெண்டு மூணு மணி வரைக்கும் கம்ப்யூட்டர்ல படம் பார்த்துக்கிட்டு என்னைத் தூங்க விடலைங்க..."


"இன்னைக்கு லீவு... அப்படித்தானே இருக்கும்... இது எப்பவும் நடக்குறதுதானே... இதுக்காக சண்டையா போட முடியும்..."

"நான் உங்களைச் சண்டை போடச் சொல்லலைங்க... பாத்துட்டுப் போகட்டும்... அதுக்காக ரெண்டு பேரு மாத்தி மாத்திச் சிரிச்சா எப்படிங்க... கொஞ்சமாச்சும் அடுத்தாளு தூங்குறான்னு பாக்க வேண்டாமா.. பகலெல்லாம் வேலை பாத்துட்டு ஆத்துப் போயித்தானே வர்றோம்..." ஆதங்கத்தோடு பேசினார் திருஞானம்.

"நீங்க சொல்றது சரிதாண்ணே... பல தடவை சொல்லிட்டேன்... படம் பாருங்க... சத்தம் போட்டு சிரிக்காதீங்கன்னு... இன்னைக்கும் சொல்லிடுறேன் விடுங்க..."

"ம்.. நாம சொல்லி அவனுங்க கேப்பானுங்களாக்கும்..." என்றபடி கட்டிலில் அமர்ந்தார். அப்போது அறைக்குள் நுழைந்தான் அவன்.

"என்னங்க... நேத்து ராத்திரி போன ஆளு... ஒரே தண்ணிப் பார்ட்டிதானா...? நாளைக்கும் லீவுதானே... அதுக்குள்ளயும் வந்துட்டீங்க..."  அவனிடம் கேட்டார் ராமராஜன்.

"இல்ல நாளைக்கு காலையில அலைன் போகலாம்ன்னு முடிவு பண்ணினோம்... அதான் டிரஸ் எடுக்க வந்தேன்... பிரண்ட்ஸ் கீழ கார்ல இருக்காங்க... இங்க இருந்தாலும் எதிர் பெட்டுக்காரனுங்க ரெண்டு பேரும் படம் பார்த்து சிரிச்சே நம்மளை தூங்க விடமாட்டானுங்க" என்றான் .

"இப்பத்தான் அண்ணன் சொல்லிக்கிட்டு இருந்தாரு.... நீங்களும் சொல்றீங்க... கொஞ்சம் கண்டிச்சி விட்டிருவோம்..."

"கண்டிச்சி என்னங்க ஆகப்போகுது... அவங்களுக்கா அறிவு வேணும்... நம்ம மக்களுக்குத்தான் சுய சிந்தனை இல்லையே..." என்றான் அவன்.

"ஆமாங்க நாம இலவசங்களுக்கு மயங்குற ஆளுங்கன்னு நல்லா கணிச்சி வச்சிருக்கானுங்க... எல்லாப் பயலும் இலவசம் இலவசம்ன்னுதான் சொல்றான்... " என அரசியலுக்கு மாறினார் ராமராஜன்.

"இதுல கூத்து என்னன்னா தேர்தல் கமிஷன் இலவசங்கள் கொடுக்கக்கூடாதுன்னு சொல்லுது... நாங்க தேர்தல் அறிக்கையில அழகா இலவசங்களை அள்ளி விடுறோம்..." சிரித்தார் திருஞானம்.

"சொல்றதை எப்பவுமே சரியாச் செய்ய மாட்டாங்க... சொன்னதைச் செய்வோம்ன்னு சொல்வாங்க சொல்லாததை எல்லாம் முதல்ல செய்வாங்க... இலவசம்ன்னு சொல்லி மகுடிக்கு மயங்குன பாம்பு மாதிரி நம்மளை மயக்க நிலையில வச்சி, ஜெயிச்சி, கோடி கோடியா கொள்ளை அடிக்கப் போறாங்க... இது தெரியாம... இலவச மொபைலு... கம்ப்யூட்டரோட இணைய வசதி அப்படின்னு வாயைப் பிளந்திடுறோம்.." கடுப்பாய்ச் சொன்னான் அவன்.

"இதுல கூத்து என்னன்னா இருக்கவனுக்கே வேலையைக் காணுமாம்... வீட்டுல ஒருத்தருக்கு வேலையாம்... கேக்குறவனை கேன...." கோபமாகப் பேசிய திருஞானம் கெட்டவார்த்தையை விட்டு விடுவாரோ எனப் பயந்து "அண்ணே..." என்று கத்தினார் ராமராஜன்.


"எதுக்கு அலர்றீங்க... தேர்தல் அறிக்கைகளைப் பார்த்து மக்கள் இதுபோல அலறி இருந்தா அவனுகளுக்கு ஒரு பயம் வந்திருக்கும்... நான் மக்களை கேனையன்னு நினைச்சிட்டாங்களான்னுதானே சொல்ல வந்தேன்..." சிரித்தார்.

"எப்படி விஜயகாந்த் சொன்ன மாதிரி... நீங்க கத்திக்கிட்டே இருந்தா... நீங்க மட்டுந்தான் இங்க வந்திருகீங்களா... இந்தா உக்காந்திருக்கவனெல்லாம்... என்ன சொம்பைங்களான்னு கேட்டாரே... அது மாதிரி நீங்க நம்மளை கேனையன்கள்ன்னு சொல்றீங்களா?" சிரித்தான் அவன்.

"அந்தாளு என்ன பேசுறாரு... அவரைப் போயி பேசிக்கிட்டு..."

"இதுக்குத்தான் அவரு எனக்குப் பேச்சு வரலையாம்... எனக்கு பேச வரலையா... யாரைப் பார்த்துச் சொல்றீங்கன்னு கேட்டாருல்ல... சரி விடுங்க... இந்தத் தேர்தல் அறிக்கைகள் எல்லாமே நம்மளை ஏமாற்றும் ஒரு கருவிதான்... நிறையாச் சொல்வாங்க... நிறைவாச் சம்பாதிச்சிக்குவாங்க... இது கானல் நீர் மாதிரி... அப்படியே காணாமல் போயிடும்..." என்றான் அவன்.

"அம்மா தேர்தல் அறிக்கை எல்லாம் இலவசங்கள்... ஆனா ஒருவேளை இந்த ஆத்தா ஜெயிச்சி வந்துட்டா... பஸ், பால், மின்சாரம்ன்னு எல்லாத்தையும் தூக்கி உச்சியில வச்சி... நம்மளை கத்திரிவெயில்ல அம்மணக்கட்டையா நிப்பாட்டிரும்... அதுதான் நடக்கும் பாருங்க..." என்றார் ராமராஜன்.

"அப்ப ஐயா வந்தா மட்டும் கச்சத்தீவை மீட்டு டாஸ்மாக்கை மூடிருவாராக்கும்... அட போங்கங்க... பேண்டு போட்டவனெல்லாம் டிரண்ட் மாறி முதல்வராயிடலாம்ன்னு பாக்குறான்... அரை டவுசர்களும் அல்லக்கைகளும் பண்ணுற அலப்பறை தாங்க முடியலை..." என்றவன் "சரி வர்றேன்... கீழ பிரண்ட்ஸ் நிக்கிறாங்க... அரசியல் பேசினா இங்கயே உக்காந்திருவேன்..." என அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

"கருத்துக் கணிப்புன்னு சொல்லி மக்கள் மனசுல ரெண்டு கட்சியை மட்டுமே திணிக்கப் பாக்கிறாங்க... பொது மேடையில என்னமா அடிச்சிக்கிறாங்க... மக்கள் கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க... இதுவே இப்ப பெரிய திருப்பம்தான்..." என்றார் திருஞானம்.

"உண்மைதாண்ணே... பல ஊர்கள்ல சிட்டிங் எம்.எல்.ஏக்களை விரட்டி அடிக்கிறாங்க... இது நல்ல மாற்றம்தான்..." என்றார் ராமராஜன்.

"எம்.எல்.ஏக்களை மட்டுமில்ல... திருவாடானை தொகுதியில கருணாஸை பல ஊர்களுக்குள்ள விடவே மாட்டேங்கிறானுங்களாம்... செய்யணும்... சென்னையில இருந்து போயி சாதிப்பிரச்சினையை கிளப்பி விடுறான்... நாளைக்கு ஜெயிச்சிட்டா அங்கிட்டு போகவே மாட்டான்... விரட்டணும்... மக்கள் கொஞ்சம் விழிப்பாத்தான் இருக்காங்க..." 

"இந்த தடவை எல்லாருக்கும் வச்சிச் செய்வாங்க... இவனுக நம்மளை இளிச்சவாயனுங்கன்னு நினைச்சிட்டானுங்க... கச்சத்தீவை மீட்போம்ன்னு இவர் சொன்னா... கொடுத்தது யாருன்னு அவங்க கேக்குறாங்க.... டாஸ்மாக்கை மூடுவோம்ன்னு சொன்னா... சரக்கு யார் ஆளுங்க உற்பத்தி செய்யிறாங்கன்னு கேக்கிறானுங்க... இப்படியே மாத்தி மாத்தி பேச வேண்டியதுதான்..."


"இதுல கூத்து என்னன்னா கடந்த அம்பது வருசமா அவனுங்கதான் மாத்தி மாத்தி ஆளுறானுங்க... ஏன் ஒருத்தன் தப்புச் செஞ்சா மற்றவன் அதை மாற்றலாமே... செய்ய மாட்டானுங்களே... அப்பன் ஒரு இடத்தை அடகு வச்சா மகன் அதை திருப்பமாட்டானா என்ன... அரசியல் செய்ய அது வேணும்... இன்னைக்கு இல்ல... நம்மளோட பேரன் பேத்திகளோட காலத்துல கூட இவனுக தலைமுறை இதைச் சொல்லியே நம்மளை ஆண்டுக்கிட்டு இருக்கும்...." சிரித்தார் திருஞானம்.

"ஆமா... ஆமா... கச்சத்தீவை பேசுவானுங்க... ஈழத்தைப் பேசுவானுங்க... விட்டா அமெரிக்காவுல இருந்து அதை கொண்டாருவோம்... இதைக் கொண்டாருவோம்ன்னு சொல்வானுங்க... ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, பக்கத்து மாநிலத்தோட தண்ணிப் பிரச்சினை பற்றி எல்லாம் பேச மாட்டானுங்க... விவரமானவனுங்க..." 

அப்போது இரவில் படம் பார்த்துச் சிரிப்பதாக திருஞானம் சொன்ன இருவரும் உள்ளே நுழைய, "என்ன ரவுண்ட் அடிச்சிட்டு வந்தாச்சாக்கும்.. இனி நைட்டுப் படம்தானா...?" என்றார் ராமராஜன்.

"பின்னே... வேற வேலை..." என்றான் சுந்தரம்.

"பாருங்க... மத்தவங்களுக்கு நம்மளால டிஸ்டர்ப்பன்ஸ் இருக்கக்கூடாது..."

"ஓ... அண்ணே நைட் தூங்க விடாம சிரிச்சிட்டிட்டோமோ... நாந்தான் சிரிச்சேன்னு நினைச்சேன்... அவனுமா... சாரிண்ணே... இனி அப்படி நடக்காது..." என்றான் சுந்தரம்.

"சரிப்பா விடுங்க..."

"என்னமோ காரசாரமான விவாதம் போய்க்கிட்டு இருந்துச்சு... எங்களைப் பார்த்ததும் நின்னு போச்சு..."

"எல்லாம் அரசியல்தான்..."

"கெடுகெட்ட அரசியல்ண்ணே... அம்மாவும் ஐயாவும் நம்மளை நல்லா எடை போட்டு வச்சிருக்காங்க.." என்றான் மற்றொருவனான பிரவீண்.

"ம்... இந்த சீமான்... பாட்டன், முப்பாட்டன்னு பேசினாலும் இனம் மதம்ன்னு பேசினாலும்... சில விஷயங்கள் ரொம்பச் சரியாப் பேசுறான்... டோல்கேட் வச்சி வசூல் பண்ணுறானுங்க பாருங்க... அதப்பத்தி பேசினான்... எவ்வளவு உண்மைங்கிறீங்க... நாம ஏன் அதை யோசிக்கலை... நான் கார் வாங்கும் போதே ரோடு டாக்ஸ் கட்டுறேன்... அப்புறம் எதுக்கு அம்பது கிலோமீட்டருக்கு ஒருதடவை பணம் பிடுங்கிறே... அப்ப நான் எந்த ரோட்டுக்கு வரி கட்டினேன்னு கேட்டான்... ரொம்பச் சரிங்கிறேன்... இனம் ஈழம்ன்னு அவனோட அரசியல் வேணுமின்னா நமக்கு எரிச்சலா இருக்கலாம்... ஆனா சரியான விஷயங்களை ரொம்பத் தெளிவாச் சொல்றான்...." என்றார் திருஞானம்.


"என்னாச்சுண்ணே மாம்பழத்துல இருந்து மெழுகுவர்த்தி பத்த வைக்க வந்துட்டீங்க...." சிரித்தார் நிர்வாகி.

"அப்படியில்லை... எது சரியோ அதை நாம பேசுறதுல தப்பேயில்லை... சாராயக் கம்பெனி எந்த திமுக காரனுக்கும் இல்லைன்னு ஐயா சொன்னதும் விஜயகாந்த் ஒரு கூட்டத்துல அப்ப வச்சிருக்கவனை நான் கெட்டவார்த்தையால திட்டவான்னு கேட்டார்... வெள்ளம் வந்தப்போ வரமுடியலை.. அப்துல்கலாம் இறந்ததுக்குப் போக முடியலை... இன்னைக்கு மட்டும் தினமும் சுத்தமுடியுதோன்னு கேட்டாரா இல்லையா... இதெல்லாம் சரிதானே... ஏன் கருத்துக் கணிப்பு என்பது திராவிடக்கட்சிகளை தூக்கி நிறுத்த பத்திரிக்கைகள் செய்யும் வேலை என வைகோ சொல்லும் போது அன்புமணி மூணாவது இடத்துல வருவார்ன்னு சொல்றது நம்புறமாதிரியா இருக்குன்னு சொல்லலையா... அரசியல் வேறு... நல்ல பேச்சுக்களை கேட்டு பாராட்டுறது வேறு..." என்றார் திருஞானம்.

"ஆமாண்ணே... அரசியல்வாதிங்க மக்களோட புத்தியை மழுங்கலா வைக்கவே விரும்புறாங்க... அதை சரியாச் செய்யிறாங்க..."

"திராவிடக் கட்சிகள் இலவசங்களைக் கொடுப்போம்ன்னு சொல்லியே நம்மை ஏமாத்துறாங்க... எப்பத்தான் இவங்க திருந்துவாங்களோன்னு புலம்புறதை விட்டுட்டு நாம சிந்திக்க ஆரம்பித்தால் தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்... செய்வோமா?" என்றார் ராமராஜன்.

"செய்வோம்... அப்படின்னு நம்புவோம்" சிரித்தார் திருஞானம்.

படங்களுக்கு நன்றி : இணையத்துக்கும் இணைபிரியாத கவுண்டர் செந்திலுக்கும்..

-'பரிவை' சே,குமார்.

வியாழன், 28 ஏப்ரல், 2016

வாக்காளர் அலப்பறை...9

"என்ன வெயிலு... என்ன வெயிலு.... ஆரம்பமே அமர்களமா இருக்கு... இந்த வருசம் மழை பெய்துன்னு சந்தோஷப்பட்டா... இனி வெயில் கொன்னுடும் போலவே..." சொல்லிக் கொண்டே ஹெல்மெட்டை ஆணியில் மாட்டினான் மெஜஞ்சர் வேலை பார்க்கும் பார்த்தீபன்.

"என்னங்க இப்பத்தான் வெயில் ஆரம்பமாகுது... இப்பவே புலம்ப ஆரம்பிச்சிடீங்க..." என்றார் ஜாக்கிங் போக தயாராகிக் கொண்டிருந்த பரந்தாமன்.

"உங்களுக்கு என்னங்க... கவர்மெண்ட் ஆபீசில புராஜெக்ட்... அதுவும் அரபிப் பெண்ணுங்க அதிகம் வேலை பாக்குற இடம்ன்னு வேற சொன்னீங்க... சும்மாவே ஏசி அதிகம் வைப்பாங்க... இப்ப வெயில் ஆரம்பிக்குதுல பிரீசர்க்குள்ள உக்காந்த மாதிரி இருந்துட்டு வருவீங்க... உங்களுக்கு எங்கங்க தெரியும் வெயில்ல நாயா அலையிறவன் வாழ்க்கை..." பார்த்தீபன் அலுத்துக் கொண்டான்.


"அது உண்மைதாங்க... சுத்தமா ஏசியை குறைச்சு வைக்கமாட்டேங்கிதுங்க... இந்தா நேத்து தலைவலி... இன்னைக்கு இருமல்... வீக்கெண்டுல நாம வீக்குத்தான் போல..." சிரித்தார் பரந்தாமன்.

"அதாவது பரந்தாமன் அண்ணன் ஜெயலலிதா மாதிரி ஏசிக்குள்ள உக்காந்திருக்காரு... நீங்க இருநூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு வெயில்ல கிடந்து செத்து மடியிற வீரத் தமிழர்கள் மாதிரி நாயா வீதியில அலைஞ்சு அல்லல்படுறீங்க அப்படித்தானே..." என்றான் அவன்.

"அவனவன் படுற கஷ்டத்தைச் சொன்னா... இவரு அதுக்குள்ள அரசியல்லை வைக்கிறார் பாருங்க... நம்ம தலையெழுத்து கஷ்டப்படுறதுதான்... ஆனாலும் நம்ம மக்கள் இன்னும் ஏமாந்து சாகுறானுங்களே... கோடிக்கோடியா பதுக்கி வச்சிக்கிட்டு சொத்து மதிப்பு எழுபது கோடிங்கிறான்... நூற்றி இருபது கோடிங்கிறான்... நாம இன்னும் தெருக்கோடியிலதான் நிக்கிறோம்..." என்றபடி வேலை முடிந்து வந்து கொஞ்ச நேரம் படுத்துறங்கும் அவர் எழுந்தார்.

"ஆமா... என்னமோ நான் மட்டுந்தான் இந்த ரூமுக்குள்ள அரசியல் பேசுற மாதிரி... சூப்பர் சிங்கரை மட்டுமே பாக்குற நீங்க... முழு நேர அரசியல் பேச்சுத்தான் கேக்குறீங்க... அதுவும் அந்தப் பழக் கட்சியோட மீட்டிங் மட்டும்தான் பாக்குறீங்க... பரந்தாமன் அண்ணன் எப்பவும் மக்கழே... மக்கழே... மட்டும்தான்... இங்க பார்த்தீபன் மட்டும்தான் அரசியல் பேசுறதுமில்லை... விழுந்து விழுந்து பேச்சைக் கேக்கிறதும் இல்லை..."

"இப்ப சொன்னே பாரு மாப்ள... இது கரெக்ட்... எவன் வந்து என்ன பண்ணப் போறான்... அடிக்கிற கொள்ளையை இன்னும் கூட அடிப்பானுங்க... இதுக்கு எதுக்கு இங்க உக்காந்துக்கிட்டு நாம கத்தணும்... " என்றான் பார்த்தீபன்.

"அதுக்காக நாட்டு நடப்பை பேசாம இருக்க முடியுமா..? நடக்குற கூத்தையெல்லாம் ரசிச்சிக்கிட்டா இருக்க முடியும்..." என்றார் அவர்.

"அது சரிதான்..." சிரித்தார் பரந்தாமன்.


"விஜயகாந்த் பழைய பன்னீர் செல்வமா மாறிட்டாராம்... ஆனா நம்ம பன்னீரு... இன்னும் பழைய கஞ்சியாத்தான் இருக்கு... துணூறு வச்சி அதுமேல பொட்டு வச்சி மங்களகரமா இருக்க மனுசன்... நடந்துக்கிறதைப் பாக்கும் போது சே... காசுக்காக இப்படிக் கேவலப்பட்டு நிக்கிறாரேன்னு தோணுது..." என்றான் அவன்.

"காமராஜர் வகித்த முதல்வர் பதவியை அன்னையின் அன்பினால் ரெண்டு முறை வகித்த ஒரு மனுசன்... தமிழ்நாட்டோட முன்னாள் முதல்வர்... கார்ல போற மக்களைக் கொன்ற மகராசியைப் பார்த்ததும் கேள்விக்குறியாய் வளைந்து... நெளிந்து... ரோட்டைத் தொட்டுக் கும்பிடுறாருய்யா... என்ன கேவலம் பாருங்க... இங்கிலீஸ் நியூஸ்க்காரன் போட்டு கிழிகிழியின்னு கிழிக்கிறான்... பதவிக்காகவும் பணத்துக்காகவும் அந்த அம்மா என்னத்தை திங்கச் சொன்னாலும் திம்பானுங்க போல... கேவலப்பட்டவனுங்க..." என்றார் அவர்.

"ஆமா... இப்படி  ஒரு இனத்தோட கவுரவத்தைக் கெடுக்கிற கருமாந்திரம் பிடிச்சவனுங்களை தூக்கி வச்சி ஆடுற நம்ம பயகதான்... மரியாதை செய்யப் போன வைகோவை விடமாட்டோம்ன்னு சாதி சண்டைக்கு வித்திடுறானுங்க... அங்க ஒரு போலீஸ்காரன் சொன்னான் பாருங்க... எத்தனை வருசம் ஆனாலும் நீங்கள்லாம் திருந்தமாட்டீங்கடான்னு... அது எவ்வளவு நிதர்சனம் தெரியுமா...? அதை மறுபடி மறுபடி கேட்டுச் சிரித்தேன்..." என்றார் பரந்தாமன்.

"நம்மளால சிரிக்க மட்டும்தானே முடியும்... சிந்திக்கச் தெரிஞ்சாத்தான் எப்பவோ ரெண்டு குடும்பத்தையும் விரட்டியிருப்போம்ல்ல..." என்றார் அவர்.

"சரியாச் சொன்னீங்க... ரெண்டாயிரத்தை வாங்கிக்கிட்டு ஓட்டைப் போட்டு கோடியில சம்பாரிக்கிறதை வேடிக்கை பார்க்கிறோம்... மறத்தமிழினத்தை இன்னைக்கு மலையாளிகளும் கன்னடக்காரனுங்களும் ஆந்திரா ஆசாமிகளும் கேவலமாப் பேசிச் சிரிக்கிறானுங்க..." என்றான் பார்த்தீபன்.

"கரூர்ல பாத்தீங்களா... கோடிக் கோடியா பிடிபட்டிருக்கு... அந்த போலீஸ் அதிகாரியை கொல்லப் பாக்கிறானுங்க... அப்புறம் எப்படி இவர்கள் மக்களாட்சி கொடுப்பார்கள்... நேர்மையான அதிகாரிகளை எல்லாம் கொன்னுட்டு இவனுங்க தனி அரசாட்சி நடத்தப் போறானுங்க... அன்னைக்கு இந்தியா ஆங்கிலேயனுக்கிட்ட அடிமைப்பட்டுக் கிடந்துச்சு... இன்னைக்கு தமிழன் வந்தேறிகள்கிட்ட அடிமைப்பட்டுக் கிடக்கான்..." என்றார் அவர்.

"தமிழன் அடிமைப்பட்டுக் கிடக்கலைங்க... தானே வழியப் போயி அடிமை ஆகிக்கிறான்... சுயமா யோசிக்கத் தெரியாதா என்ன... இதுவரைக்கும் இல்லாத மாற்றத்தை நட்சத்திரக் கிரிக்கெட்டில் நம்மால கொடுக்க முடிந்ததுதானே... அதேபோல இந்தத் தேர்தல்லயும் கொடுக்கணும்... கொடுப்போம்ன்னு ஒவ்வொரு தமிழனும் நினைச்சாலே போதும்... கூனிக்குறுகி கெடக்க எல்லாப் பயலையும் குறுக்கெலும்ப உடைச்சி நிரந்தரமாக் கூன வச்சிடலாம்..." என்றான் அவன்.


"ஆமா... செய்யணும்... செய்தால் நல்லாயிருக்கும்... நட்சத்திர கிரிக்கெட் போட்டி வெற்றி... மக்களை நாங்க வாங்கன்னு அழைக்கவில்லை... அப்படியிருந்தும் கூட்டம் வந்திருச்சு... கிடைச்ச பணத்துல கடனை எல்லாம் அடைச்சிட்டோம்...  படம் எடுத்து அதுல வர்ற லாபத்துல கட்டடம் கட்டப் போறோம்... அஜீத் கூட எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு நேத்து விஷால் பேசுறான்ய்யா..." என்றார் பரந்தாமன்.

"மக்கள் வரலை... ஆப்பு வச்சிட்டானுங்க.. நட்சத்திர கலை நிகழ்ச்சி வச்சாலும் வருவானுங்களான்னு தெரியாது... உள்ளூருலயே விலை போகல... வெளிநாட்டுல எப்படி விலை போகும்ன்னு யோசனை... அதான் படம் நடிக்கப் போறோம்ன்னு சொல்றானுங்க... அதுக்கும் ஆப்பு வச்சிட்டா... விஷால் ஓவரா ஆடுறான்..." என்றான் பார்த்தீபன்.

"அடுத்து அவனையும் முதல்வராக்குவோம்ன்னு நப்பாசைதான்..." என்றான் அவன்.

"சேரன் சொன்ன மாதிரி வந்தமா... நடிச்சமா... சம்பாரிச்சோமா... ஊரைப் பாக்க போனமான்னு இருக்கணும்... இல்லேன்னா விரட்டிறமாட்டோம்." சிரித்தார் அவர்.

"அவன் பேச்சு எதுக்கு... அவனொரு செல்லாக்காசு.... பெரியவரு எனக்கு ஓய்வு கொடுங்கன்னு சொல்றாரு... எதுக்கு அப்புறம் அலைய விடணும்... எல்லாருமாச் சேர்ந்து நீங்க ஓய்வு எடுங்கய்யான்னு சொல்லிட வேண்டியதுதானே..." என்றார் பரந்தாமன்.

"அதுவாவது ஓய்வு எடுக்கிறதாவது... அதெல்லாம் பதவி ஆசையில உயிரை வச்சிக்கிட்டு திரியுது... மக்களுக்காக உழைக்கத்தான் இப்படி அலையிறேன்னு வாய் கூசாம பொய் சொல்லுது... இதை நம்பி இந்த உபிக்கள் முகநூல்ல எல்லாம் பண்ற அட்டூழியம் இருக்கே... தாங்க முடியலை..." என்றார் அவர்.

"திராவிட ஆட்சிகள் முடியட்டும்... தமிழர்களுக்கு விடியட்டும்ன்னு முகநூல்ல போட்டு வச்சேன்... பத்து லைக்கு வராத எனக்கு ஆயிரக் கணக்குல லைக் வந்திருக்குய்யா... எப்படியும் மாற்றம் வரும்..." என்றான் அவன்.


"மாற்றம் வரணும்ன்னுதான் நாங்க வித்தியாசமா இந்தத் தேர்தலை கையாளுறோம்..." சிரித்தபடி சொன்னார் அவர்.

"ஆமா... ஆமா... மே 19-ம் தேதி ரிசல்ட் வந்ததும் உங்க சின்ன டாக்டரைத்தான் ஆளுனர்  பதவியேற்க அழைப்பாராமே... பெரிய டாக்டர் ஆரூடம் சொல்லியிருக்காரு... டிக்கெட் புக் பண்ணி வையுங்க,,, பதவி ஏற்ப்புக்கு போகணுமில்ல..." அவரைச் சீண்டினான் அவன்.

"தேர் கிளம்பின இடத்துல வந்து நிலைக்குத்துற மாதிரி எங்க சுத்தியும் அங்க வந்திருவாரு.... இனி பேசினா வீணாவுல சண்டை வரும்... " என்றபடி அவர் எழ, பரந்தாமன் ஜாக்கிங் கிளம்ப, பார்த்தீபன் குளிக்கச் செல்ல, அவன் சிரித்தபடி ஸ்கைப்பை ஆன் செய்தான்.

நன்றி : படங்கள் இணையத்திலிருந்து...
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 21 ஏப்ரல், 2016

வாக்காளர் அலப்பறை...8

ரு மாத விடுமுறையில் ஊருக்குப் போய்விட்டு திரும்பிய ராகேஷிடம் "என்னங்க தேர்தல் பிரச்சாரமெல்லாம் ஊரில் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு... இந்த முறை யாருக்கு வாய்ப்பு இருக்கு" என்றான் அவன்.

"இந்தத் தடவை கொஞ்சம் வித்தியாசமான தேர்தலா இருக்கும்ன்னு தோணுதுங்க... யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. கூட்டணி ஆட்சிதான் அமையும் போல... இந்தாங்க சுவீட் எடுத்துக்கங்க..." என்று சுவீட் பாக்ஸை நீட்டியபடி சொன்னான் கண்ணன்.

"ம்... அப்ப அம்மா வந்துருவேன்... ஐயா வந்துருவேன்... அண்ணே வந்துருவேன்... டாக்டரு வந்துருவேன்னு சொல்றதெல்லாம் பம்மாத்துத்தானா..." சிரித்தான் அவன்.

(இப்படி பேசிப் பேசியே மக்களை ஏமாத்தி வாழ்ந்து முடிச்சிட்டீங்க போங்க)
"அட ஏன் நீங்க வேற நட்சத்திர கிரிக்கெட்டுக்கு நம்மாளுங்க வச்ச ஆப்புல இப்ப அரசியல்வாதிகளுக்கு கூட உதறல் எடுத்திருக்கு... எங்க நமக்கு ஆப்பு வச்சிருவானுங்களோன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டானுங்க..."

"அட ஏம்ப்பா நீ வேற பணத்தை வாங்கிக்கிட்டு பக்காவா ஓட்டப் போட்டுடுவானுங்க நம்மாளுங்க... வேணுமின்னா பாரேன் பணம்தான் பேசப் போகுது..." என்றபடி எழுத்தார் முத்துலிங்கம்.

"இந்த தடவை அப்படி நடக்காதுண்ணே... வேணுமின்னா பாருங்க மாற்றம் வரும்... ஆமா உங்க தொகுதியில முன்னாள் எம்.எல்.ஏ. நிக்கிறாரு போல..." என்றான் ராகேஷ்.

"ஆமா திருவாடனைத் தொகுதியா இருக்கும் போது தொடர்ந்து எம்.எல்.ஏ. பல பிரச்சினைகள்ல அவர் பேர் இருந்தாலும் வெளியில ரொம்ப அடிபடாது.... தொகுதியில பல கிராமங்களுக்கு போனதே இல்லை.... எங்க ஊருப் பக்கமெல்லாம் வந்ததேயில்லை... இருந்தும் பிரச்சினையில்லாத மனுசன்னு பேரு... போன தடவை காரைக்குடி தொகுதியானதும் நிக்காமல் ஒதுங்கிட்டாரு... ஆனா இந்த முறை நிக்கிறாரு... பார்ப்போம்... தொடர் வெற்றி தொடருதா... இல்லை முற்றுப்புள்ளி ஆகுதான்னு..."

"ம்... நிறைய இடங்களில் வலுவான போட்டியிருக்கு... அதனால மாற்றம் வரும்ன்னு நினைக்கிறேன்..."

"அதான் சொல்றேன்... மாற்றம் வரணும்... நான் எதாவது சொன்னா இவரு... அதுக்கு எதிர்த்துப் பேசுவாரு... இவரு விஜயகாந்துக்கு சப்போர்ட்..." என்றபடி ஆஜரானார் அவர்.

"மாற்றம் வரணும்தாங்க... ஆனா மாற்றம் முன்னேற்றம்ன்னு சொல்லிக்கிட்டு உங்காளு சாதிக்காரன் அதிகம் இருக்க இடத்துல பாதுகாப்பா நின்னுக்கிட்டாரு... தென் மாவட்டத்துல நிக்கலாமேன்னு ஒருத்தர் கேட்டதுக்கு பதில் சொல்லாம மழுப்பலா சிரிச்சிட்டு வந்திருக்காரு... அப்புறம் எப்படி மாற்றம்... முன்னேற்றம்..." என்றான் அவன்.

"அவரு மட்டும்தான் பாதுகாப்பு பாக்குறாராக்கும்... ஏன் கலைஞர் பாக்கலையா... திருமா பாக்கலையா... விஜயகாந்த் கூட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு இடம் மாறுறாரே... அது கூட பாதுகாப்புத்தான்.... போன முறை ஜெயிச்ச தொகுதியில இந்த முறை ஓட்டுக் கிடைக்காதுன்னு அவருக்குத் தெரியும்..." நக்கலாய்ச் சொன்னார் அவர்.

"விஜயகாந்த் மட்டும் தொகுதி மாறி மாறி நிக்கலைங்க... எல்லாருந்தான் நிக்கிறாங்க... விஜயகாந்த் டெபாசிட் வாங்க முடியாதுன்னு சொல்லிக்கிட்டு நீங்க ஏன் வேட்பாளரை மாத்துறீங்க... இந்தத் தடவை மாதிரி வேட்பாளர் மாற்றம் வேறு எப்பவும் இல்லை..." 

(எதைச் சொன்னாலும் கேக்குற மக்கள் இப்ப இல்லைங்கிறதை மனசுல வச்சுக்கங்க)
"அட ஏம்ப்பா நீ வேற... அம்மா மாதிரி விஜயகாந்த் நடக்குறாரு... விஜயகாந்த் மாதிரி அன்புமணி.... சீமானெல்லாம் பேசுறாங்க... அம்மாவை கேவலமாப் பேசுற ஸ்டாலின்... ஸ்டாலினைப் பேசுற அம்மா இப்படி அரசியல் சாக்கடை காமெடியாப் போய்க்கிட்டு இருக்கு... எல்லாம் பதவி படுத்தும் பாடு..."

"பதவிக்காகத்தானே துரை முருகன் கண்ணீர் சிந்துறாரு... கோடியில கார் வச்சிருக்காரு... எதுக்கு அழுகுறாருன்னு பேஸ்புக்ல போட்டு கிழிக்கிறானுங்க... வயதான காலத்துல முதுகுவலியோட உங்களை நாடி வாறேன்னு கலைஞர் பேசுறாரு... யாரு அவரை தேர்தல்ல நிக்கச் சொன்னா... மத்தவங்களுக்கு எல்லாம் வயசாயிருச்சு... ஆனா இவருக்கு ஆகலை... " சிரித்தான் ராகேஷ்.

"அட ஏன் கேக்குறே... பேஸ்புக்ல ஒருத்தர் திமுகவோட தேர்தல் அறிக்கையோட ஒவ்வொரு பாயிண்டையும் ஒவ்வொருவாரம் விளக்கமா எழுதினாலே போதுமாம்... அவ்வளவு நல்ல அறிக்கையாம்... 190 இடங்களைப் பிடிப்பாங்களாம்....  அதைவிட கொடுமை என்னன்னா ஜெயலலிதாவை எதிர்த்து அவங்க நிப்பாட்டியிருக்கிற சிம்லாவை ஆதரிக்காம திருமா வேட்பாளரை அறிவிச்சி மக்களுக்கு துரோகம் பண்ணிட்டார் துரோகியின்னு இன்னைக்கு ரெண்டு பக்கத்துக்கு கட்டுரை... அதுக்கு ஆஹா.. ஓஹோன்னு கருத்துக்கள் வேற.... ஏன் திருமா நிக்கிற இடத்துல இவங்க ஆள் நிப்பாட்டாம இருக்காங்களா... வாரிசு அரசியல்ங்கிறது எல்லாக் கட்சியிலயும் இருக்கு... ஆனா திமுக மட்டுந்தான் புதியவர்களை நிப்பாட்டுறேன்னு சொல்லி முன்னாள் எம்.எல்.ஏ. குடும்பத்துல ஒரு ஆளை நிப்பாட்டி தமிழகம் எங்கும் வாரிசு அரசியலாக்கி வைச்சிருக்கானுங்க... இவனுக ஜெயிக்கவே கூடாது... ஜெயிச்சா தமிழகத்தை கூறு போட்டு வித்துருவானுங்க..." பொரிந்து தள்ளினார் முத்துலிங்கம்.

"நீங்க சொல்றதுதான் சரிதான்... எல்லாக் கட்சிகளும் அப்படித்தான் இருக்கு... நம்ம சனம் பிரியாணிக்காவும் இருநூறு ரூபாய்க்காகவும் போயி சாவுது பாத்தீங்களா... நாம திருந்தாத வரைக்கும் எல்லாப் பயலும் நம்மளை முட்டாளாக்கியே ஜெயிக்கப் பாப்பானுங்க..." என்றான் அவன்,

"ஆமால்ல... இந்தம்மா மத்தியானம் மூணு மணிக்கு வர்றதுக்கு... பனிரெண்டு மணியில இருந்து மொட்ட வெயில்ல போட்டுக் கொல்றானுங்க... பாவம் பிரியாணிக்கு ஆசைப்பட்டு உசிரை விட்டா... தேர்தல் முடிந்ததும் நிதி உதவி செய்யப்படும்ன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கு... மொதல்ல இந்தப் பொம்பளையை மத்தியானம் கூட்டம் போடாதேன்னு சொல்லணும்... இல்லேன்னா பத்து ஏர் கூலர் வச்சி சொகுசா உக்காந்து பேசுறதை வெயில்ல இறக்கி விடணும்... அப்பத்தான் அதுக்கெல்லாம் மக்களோட வேதனை புரியும்..." என்றார் அவர்.

"ஆமா புரிஞ்சிட்டாலும்... நாம் ஏய்யா போகணும்... பணமும் வேண்டாம்.. மயிரும் வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருக்க வேண்டியதுதானே...." கோபத்தில் வார்த்தைகளை விட்டார் முத்துலிங்கம்.

(டாஸ்மாக் சரக்கு வண்டியிலதான் பணம் போகுதாமே... உண்மையா?)
"சரி... சரி... எதுக்கு கோபம்? விடுங்க...விடுங்க... இந்த சினிமாக்காரனுங்க பாருங்க... கிரிக்கெட்டுல ஏற்பட்ட நஷ்டத்துக்கு தமிழக மக்கள் பொறுப்பேற்கணுமின்னு விஷாலும்... இதுக்கு மக்கள்தான் வேதனைப்படணுமின்னு தனுஷூம் பேசியிருக்கானுங்க பாத்தீங்களா..." பேச்சை மாத்தினான் ராகேஷ்.

"இதுக்கு எதுக்குய்யா நம்ம வருத்தப்படணும்... அவனுக்கு மாமனாரு போயிருந்தும் கூட்டம் வரலைன்னு ஆதங்கம்... அவனே போகலை.... பேசுறான் பாரு பேச்சு... தென்னிந்திய நடிகர் சங்கம்ன்னு வச்சிருக்கானுங்கதானே... போயி ஆந்திரா, கேரளான்னு அங்க நடத்த வேண்டியதுதானே.... எல்லாப் பயலுக்கும் தமிழன்னா இளிச்சவாயன்னு நெனப்பு... மொத்தமா ஆப்பு வைக்கணும்... இந்த விஷால்... வெஷம்... இவந்தான் சொன்னான் மக்கள் பிரச்சினைக்கு நாங்க போறாட மாட்டோம்ன்னு... இப்ப இவனுக கட்டிடம் கட்ட நாம பணம் கொடுக்கணுமாம்... இல்லேன்னா நஷ்டத்துக்குப் பொறுப்பேற்கணுமாம்... இந்த விஷச்செடியை முதல்ல அழிக்கணும்... இல்லேன்னா இது நாளைக்கு முதல்வராகணும்ன்னு ஆசைப்படும்... நாமளும் வந்தாரை வாழ வைப்போம்... எல்லாத்துக்கும் மொத்தத்துல மாற்றம் கொண்டு வரணும்... அது இந்தத் தேர்தல்ல ஆரம்பிக்கணும்... தீச்சட்டி எடுக்கிறதையும் பாலாபிஷேகம் பண்றதையும் நிப்பாட்டிட்டு ஆக்கப் பூர்வமா இளைஞர்கள் செயல்படணும்... அப்படி செயல்பட்டா,,, நல்லதொரு தமிழகத்தை உருவாக்க முடியும்..." வேகமாகப் பேசினார் முத்துலிங்கம்.

(நடிகைகள் விளையாடுவாங்கன்னு சொல்லியும் கவுத்துட்டானுங்களே...)
"ஆமா விஜயகாந்த் என்ன செஞ்சாலும் அதை செய்தி ஆக்கிற டிவி சேனலெல்லாம் இந்த அம்மாவால சாகுறதைக் காட்டமாட்டேங்கிதே... முதல்ல அவனுக திருந்தட்டும்... அது நரகல்தான்னு தெரிஞ்சும் அதுக்கு பின்னால சந்தனத்தோட காத்திக்கிட்டு இருக்கதை விட்டுட்டு... அந்த நரகலை அள்ளி வீசுற வழி என்னங்கிறதை அவனுக சொன்னா கண்டிப்பாக மாற்றம் வரும்... பார்க்கலாம்... " என்றபடி அவன் வெளியில் கிளம்ப ஆயத்தமானான்.

படங்களுக்கு நன்றி இணையம்...
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 14 ஏப்ரல், 2016

வாக்காளர் அலப்பறை...7

றைக்குள் நுழைந்தவன் "இன்னைக்கு கொஞ்சம் வெயில் ஆரம்பிச்சிருக்கு... காத்தடிச்சாலும் மேலெல்லாம் கசகசன்னு இருக்கு..." என்றபடி சட்டையைக் கழட்டினான். "சொல்ல மறந்துட்டேன்... எல்லாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... காலையில நான் எந்திருக்குமுன்னே எல்லாரும் ஓடிட்டீங்க... அதான் சொல்ல முடியலை... " என்றான் சிரித்தபடி.

"நீங்களாச்சும் இப்ப வந்து சொல்றீங்க... முகநூல்ல ஆங்கிலப் புத்தாண்டுக்கு மாஞ்சு மாஞ்சு சொல்றவனுங்களை எல்லாம் இன்னைக்குக் காணோம்... ஏதோ கொஞ்சப் பேர் மட்டும் போட்டிருந்தானுங்க... அதிலும் சிலர் பாத்தீங்கன்னா ஆங்கிலத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லியிருக்கானுங்க..." என்றார் அவர்.

"எல்லாரும் இப்ப அரசியலுக்குள்ளயும் நடிகர்கள் கிரிக்கெட் பின்னாலயும் சுத்திக்கிட்டு இருக்கானுங்க... இங்கிலீஸோ தமிழோ வாழ்த்துச் சொன்னானுங்கதானே... அதுக்கு சந்தோஷப்பட்டுக்கலாம்... ஏன்னா நாமதான் சித்திரையா... தையான்னு குழம்பிப் போயிக் கிடக்கோமே...  ஆமா இப்ப யாரும் ஐ.பி.எல். பார்க்கிறதில்லையா?" என்றான் அவன்.


"மஞ்சச் சட்டை இல்லாம பாக்கப் பிடிக்கலை... ஐ.பி.,எல்லை விட அரசியல் கிரிக்கெட் ரொம்ப நல்லாயிருக்கு..." சிரித்தார் கனகசபை.

"மஞ்சத் துண்டுதான் கட்சிகளைப் பிரித்து அடிச்சி ஆடிக்கிட்டு இருக்கு போலவே... தொண்ணுறுக்கு மேல போயும் நாட் அவுட்டாமே..." சிரித்தபடி தண்ணீர் பாட்டிலை எடுத்தான்.

"ஆமா ஆரம்பிச்சிட்டாரு... அறைக்குள்ள அரசியல் வேணான்னு சொல்வாரு... அப்புறம் இவரே ஆரம்பிப்பாரு.... நாம எதாச்சும் சொன்னா அதுக்கு நையாண்டி பண்ணுவாரு..." என்றபடி அரசியல் விவாதம் பார்க்க ஆரம்பித்தார் அவர்.

"ஏங்க பேசுனா பம்முறது... அப்புறம்.. வேண்டாம் விடுங்க... நான் எதாவது சொல்லப்போக நீங்க எதாவது சொல்லி வருத்தம்தான் மிஞ்சும்... அம்மாவை எதிர்த்து குஷ்பு நிக்கிறேன்னு சொன்னுச்சு நிக்கலை போலவே... "

"ஆமா நின்னுட்டாலும்..." என்றார் கனகசபை.

"எதுக்கு இழுக்குறீங்க...? அதான் குஷ்புக்கு பதிலா கண்ணழகியை நிப்பாட்டியிருக்காரு போல... தலைவர் எப்படிப்பட்ட ஆளு..."

"யாரு மீனாவா... அதோட புள்ள தெறியில நடிச்சிருக்காம்... மீனா ரஜினி அங்கிள்ன்னு கூப்பிட்டுட்டு ஜோடியா நடிச்ச மாதிரி இதுவும் இன்னும் பதினைஞ்சு வருசத்துல விஜய்க்கு ஜோடியா நடிக்கும்ன்னு பேசுறானுங்க... இந்த நேரத்துல கண்ணழகிக்கு எதுக்குய்யா வேண்டாத வேலை" என்றான் நடராஜன்.

"ஏய்... இருப்பா....கண்ணழகின்னா மீனாதானா... உங்களை சினிமா ரொம்பக் கெடுத்து வச்சிருக்கப்பு... இது ஏதோ சிம்லா சோழ இளவரசியாம்... சும்மா குஷ்புவை விட சூப்பரா இருக்கு... கண்ணால கலக்கிடும்ன்னு நினைக்கிறேன்... வயசான அம்மாவுக்கு ஓட்டுப் போடுறதைவிட இந்த சோழச்சிக்குப் போடலாம்...ம்...." என்றார் சத்தியமூர்த்தி.

"ஏய் அது முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் மருமகப்பா... பாக்க நல்லாத்தான் இருக்கு... குஷ்புக்கு மாற்றுத்தான்... சரி... அது எதுக்கு... இந்தாளுக்கு இந்த வயசுல புத்தி எங்க போகுது பாரு..." என்றார் கனகசபை.

"குஷ்பு, விஜயதாரணியின்னு பேச்சு போகும் போல... இன்னைக்கு விஜயகாந்தைப் பற்றி ஒண்ணும் பேசலை... தமிழகத்தை தலை நிமிர வைக்க வந்த தலைவன்னு சொல்லுவாரே..." இடைபுகுந்தார் அவர்.


"நான் எதாச்சும் சொன்னேனா... உங்களுக்கு எங்கிட்டயிருந்து விஜயகாந்தைப் பற்றி பேச்சு வரணும்... அப்புறம் நான் அதைச் சொன்னேன்... இதைச் சொன்னேன்னு... பேசுவீங்க..." சிரித்தான் அவன்.

"எப்பவும் சப்போர்ட்தானே... அப்படி இப்படி சாஞ்சு நடந்தாக்கூட செய்தி ஆக்குவீங்களே... அதான் கேட்டேன்." அவரும் விடாமல் வம்புக்கு இழுத்தார்.

"ஆமாங்க... மக்கள் மீது அக்கறை கொண்டவர்தாங்க அவர்... இல்லைன்னு சொல்லமுடியுமா.. மாமண்டூர் கூட்டத்துல பேசும்போது அங்க வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து மணி ஆச்சி... போகும்போது ரோட்டுல பாத்துப் போகணும்... எந்தப் பிரச்சினையும் இல்லாம வீடு போய் சேருங்க... எனக்கு போன் பண்ணுங்கன்னு...  சொன்னாரா இல்லையா... எந்த அரசியல்வாதிங்க சொல்றான்... பிரியாணிக்கு கூட்டி வந்து செத்தாக்கூட கண்டுக்கமாட்டானுங்க... வெகுளி மனுசனுங்க அவரு.... அவருக்கு உடம்பு முடியலை... அதை காமெடி ஆக்குறீங்க... இந்தா இந்தம்மா போயி இறங்க நாப்பது ஏக்கரு விவசாய நிலத்தை நாஸ்தி பண்ணியிருக்கானுங்க... அன்னாடங்காச்சிகளைக் கொண்டாந்து வெயில்ல போட்டு சுட்டுப்புட்டானுங்க...எரநூறு ஓவாய்க்கு ஆசைப்பட்டு செத்துப் போயிருக்கானுங்க மானமுள்ள தமிழனுங்க... அந்தம்மா என்ன சொல்லுது... உடம்பு முடியாமத்தான் செத்தானுங்கன்னு சொல்லுது... உடம்பு முடியாதவனை ஏன்ய்யா கூட்டியாறீங்க... விஜயகாந்த் கூட்டத்துக்கு... அவருன்னு இல்லை.... மற்ற கட்சி கூட்டத்துக்கு போலீஸ் போறதே இல்லை... அம்மா கூட்டத்துல மக்களை அடைச்சி வச்சி பாதுகாப்பா நிக்குது... டாஸ்மாக்ல நின்னது மாதிரி... போலீஸை வைச்சி டாஸ்மாக் நடத்தி கோடியில லாபம் பார்த்துட்டு படிப்படியா குறைப்போம்ன்னு சொல்லுது... கேக்குறவன் கேணையனா இருந்தா கே.பி. சுந்தரம்பாள்தான் தெறி படத்து ஹீரோயின்னுன்னு சொல்லுவானுங்க...." சற்றே காட்டமாய் பேசினான் அவன்.

"நீங்க சொல்றதெல்லாம் சரிதான்... அதென்னா சுந்தராம்பாளுக்கு பொயிட்டீங்க... கேக்குறவன் கேனையனா இருந்தா கே.ஆர்.விஜயா கொண்டையில கேடிவி தெரியுதுன்னு சொல்லுவானுங்கன்னுதானே நான் கேள்விப்பட்டிருக்கேன்..." என்றார் கனகசபை.

"சும்மா தெறிக்க விடலாமேன்னுதான்...."

"ஆமா... பா,ம.கவுல அன்புமணிக்கு எந்தத் தொகுதின்னு சொல்லாம வச்சிருக்காங்களே.... எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்னு கால் நூற்றாண்டுக்கு முன்னால தலைவர் சொன்ன மாதிரி.... இவரு நிப்பாரா... மாட்டாரா...?" கேட்டு விட்டுச் சிரித்தான் நடராசன்.

"ஏங்க அவருதான் முதல்வர் வேட்பாளர்... அப்புறம் நிக்காம... கண்டிப்பா நிப்பாருங்க... இறுதிப் பட்டியல் வரும்போது பாருங்க..."


"பாப்போம்... நியமன எம்பியானது மாதிரி  முதல்வராகலாம்ன்னு நினைச்சிராம இருந்தாச் சரி... எங்க பக்கமெல்லாம் மாவட்டச் செயலாளர்ன்னு சொல்லி தேர்தல்ல வேட்பாளரை நிறுத்தியிருக்காங்க... ஊர்ல கேட்டா அவன் எப்ப மாவட்டச் செயலாளர் ஆனான்னு தெரியலைன்னு சொல்றானுங்க..."

"வேற பேசுங்கங்க... எப்பப் பார்த்தாலும் அவங்கதான் உங்க டார்கெட்..." கடுப்பானார் அவர்.

"சரி விடுங்க... தந்திரக்குமார் கட்சிக்கு மூணு சீட்டாம்... தாலியை வித்து கட்சி வளர்த்து நடுத்தெருவுல நிக்கிறேன்... நான் எப்ப சம்பாரிக்கிறது... சம்பாதிக்கணுமின்னா ஐயா கால்ல விழுகணும்... அதுவும் இருபத்தி நாலு மணி நேரத்துல விழுகணும்ன்னு சொன்ன ஆளு.... கட்சி ஆரம்பிக்க எங்க இருந்துய்யா பணம் வந்துச்சு..." கேட்டார் சத்யமூர்த்தி.

"எல்லாம் ஜி வழியாத்தான்.... அரசியல்ல இருக்கவனெல்லாம் கோடிக்கு ஆசைப்பட்டு நம்மள தெருக்கோடியில விடுறானுங்க... இது தெரியாம கொடிப் பிடிச்சி  உயிரை விடுறோம்... இது சாக்கடைங்க... இந்த சாக்கடை தமிழகம் எங்கும் ஓடிக் கிடக்கு... இதை சுத்தம் செய்யணும்ன்னா இப்ப ஆகுற காரியமில்லைங்க... ஆனா இப்பவே ஆரம்பிச்சா இன்னும் பத்து வருசத்துல சுத்தமான தமிழகத்தை நம்மால கொண்டு வர முடியும்... அதுக்காகவாவது மாற்று அவசியம்... இல்லேன்னா மக்களுக்காக நான்... உங்கள் அம்மான்னு சொல்லிக்கிட்டு விளை நிலமெல்லாம் ஹெலிபேடா மாத்திருவாங்க... விஜயகாந்த் சொல்ற மாதிரி இதையெல்லாம் நியூஸ்ல படிக்கும் போது இவ்வளவு கேவலப்பட்டுப் போயிட்டோமேன்னு வருத்தமா இருக்குங்க..." என்றார் கனகசபாபதி.

"இந்த நடிகர்கள் கிரிக்கெட்....?" மெல்ல இழுத்தான் அவன்.

"அடுத்து அதுக்கா...?" ,முணங்கினார் அவர்.

"ஏங்க அரசியல் பேசினா திட்டுறீங்க... கிரிக்கெட் பேசினாலுமா...?"

"கோடீஸ்வர பிச்சைக்காரங்களைப் பற்றி எதுக்குங்க பேசுறீங்க... இதுல கமல் வேற ராமர்... அணில்ன்னு பேசிக்கிட்டு இருக்காரு... அஜீத் சொன்னது தப்புன்னு பேசுறானுங்க... இவனுக பின்னாடி கொடிப் பிடிக்க நம்மள சிலதுங்க இருக்குக... அறிவுகெட்ட மூதேவிங்க... மொத்தத்துல நாம திருந்தமாட்டோம்ங்க... எத்தனை வெள்ளம் வந்தாலும் நாம அவனுக காலை நக்குறதை விட்டுட்டு வெளிய வரமாட்டோம்... இன்னைக்கு பாத்தீங்கதானே... தெறி ஆட்டத்தை... அதான் அவனுக நம்மளை சரியா கணக்குப் பண்ணி வச்சிருக்கானுங்க.... விடுங்க..." என்றான் நடராஜன்.


"எல்லாத்துக்கும் மாற்று அவரு வரணுங்க..." என்றார் அவர். அவரின் அவர் யாரென்பதை எல்லாரும் அறிவார்கள் என்பதால் ஆளாளுக்கு முகத்தை திருப்பிக் கொண்டனர்.

கடுப்பான அவன் மட்டும் யாரு விஜயகாந்தா என்று கேட்டால் பிரச்சினை வரும் என்பதால் "யாரு அஜீத்தா?" என்றதும் எல்லாரும் சிரிக்க, சத்திய மூர்த்தி மட்டும் சிரிக்காம "விஜயகாந்தும் இல்ல... அன்புமணியும் இல்ல... குஷ்பு வந்தா எல்லாம் சரியாகும்... நீங்க வேணும்னா பாருங்களேன்... குஷ்புக்கு பிரதமர் ஆகிற தகுதியே இருக்கு... ஒரு நாள் அது நடக்கும்..." என்றார்.

"அதான் தமிழகம் இன்னும் அப்படியே இருக்கு... வெளங்கிடும்..." என்றபடி சோப்பை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான் அவன்.

படங்களுக்கு நன்றி... இணையம்

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 7 ஏப்ரல், 2016

வாக்காளர் அலப்பறை...6

றைக்குள் நுழையும் போதே அவர் மிகுந்த சந்தோஷத்தோடு வந்தார். அவரின் சந்தோஷத்திற்கான காரணம் என்ன என்பதை அவன் அறிந்து வைத்திருந்ததால் ஒன்றும் பேசாமல் படுத்திருந்தான்.

"இந்தாங்க ஸ்வீட் எடுங்க... கொண்டாடுங்க..." என அறையில் இருந்த எல்லாருக்கும் கொடுத்தார். அவனிடமும் நீட்ட, 'இல்லங்க அப்புறம் எடுத்துக்கிறேன்...' என்றபடி திரும்பிப் படுத்தான்.

"என்ன ஸ்வீட்டெல்லாம்...?" கையைத் துடைத்தபடி கேட்டார் அன்வர் பாய்.

"சந்திரகுமார் தந்திரகுமாரா மாறிட்டாருல்ல... அதான்  ரொம்ப சந்தோஷமா சுவிட் வாங்கிக்கிட்டு வந்திருக்கிறார்..." சொல்லிச் சிரித்தான் காரைக்குடி கணபதி.

(போன தேர்தல் வரை காந்தி நோட்டா வாங்கிட்டு இப்ப பேச்சைப் பாரு)

"ஏங்க அது நான் சொல்லிக்கிட்டு இருந்ததுதானேங்க... இன்னும் போகப் போக பாருங்க தேமுதிகவே இல்லாமப் போயிடும்... அதுக்காக சுவிட் இல்லைங்க... அவனுக கோடிகளை வாங்கிட்டு கேடிகளாகுறானுங்க... நாம ஸ்விட் எடு கொண்டாடுன்னு கொண்டாட என்ன இருக்கு... ஆபீஸ்ல போஸ்டிங் மாத்தியிருக்கானுங்க... ஒரு ஆயிரம் திர்ஹாம் கூடக் கிடைக்கும்... அதான்..."

"ஓ... சந்தோஷங்க.... " என்றார் அன்வர் பாய்.

"பாத்தியளா... கேப்டனாம்... கிங்காம்... கிங்மேக்கராம்... இந்த வைகோ வேற இந்தாளைப் பார்த்ததும் புதுசா கல்யாணமானவன் மாதிரி என்ன பண்றோம்ன்னு தெரியாம கத்திக்கிட்டு இருந்தாரு... இப்ப என்னாச்சு கட்டுமரம் களை எடுக்க ஆரம்பிச்சிருச்சு...."

"இதுல கொடுமை என்னன்னா கட்சித் தலைமையை இந்தக் கட்சியில சேரு... அதுதான் ஜெயிக்கும் அப்படின்னு சொல்லி 24 மணி நேர கெடு விதிச்சானுங்க பாருங்க அங்கதான் நிக்கிறாரு கலைஞரு... ஹா...ஹா.... காசு எப்படியெல்லாம் பேச வைக்குது பாத்தியளா?" என்றார் அறை நிர்வாகி.

"விஜயகாந்துக்கு இது தேவைதாங்க.... இப்ப கட்சி அவன் கையில இல்லை... பொண்டாட்டியும் மச்சினனும்தான் எல்லாமே... பணம் பாக்குறதுக்காக அவனை பயன்படுத்துறாங்கன்னு தங்கர்பச்சனே சொல்லலையா...?" என்றார் அவர்.

அவன் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டான். "என்ன கேப்டனுக்கு சப்போர்ட் பண்ணுறவரு கம்முனு கெடக்காரு... முரசு தெரிச்சிப் போச்சுன்னா..." என்று சிரித்தார்.

"அட ஏங்க அவரை இழுக்கிறீங்க... அப்புறம் அவரு எதாச்சும் பேசுவாரு... தேவையா... சந்தோஷமான செய்தியோட வந்திருக்கீங்க... ஊருக்கு போன் பண்ணுங்க... அதை விட்டுட்டு வீணாப்போன அரசியல் எதுக்குங்க?" என்றார் அன்வர் பாய்.

"பாருங்களேன் இந்த வைகோவை... என்ன பேசுறோம்ன்னு இல்லாம கலைஞரை சாதியை வைச்சிப் பேசி... திருமாவெல்லாம் எதிர்க்க ஆரம்பிச்சிட்டாப்ல... தீவிர அரசியல்வாதிக்கு நாவடக்கம் இருக்கணும்... என்ன பேசுறோம்ன்னு யோசிச்சிப் பேசணும்... எதை வேணுமின்னாலும் பேசலாமா..?" என்றபடி கைலிக்கு மாறினார் அவர்.

"அதான் ரொம்ப வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுட்டாரே..." என்றான் கணபதி. இவன் மதிமுக விசுவாசி.

"மன்னிப்பு கேட்டா முடிஞ்சி போச்சா...? இப்படி பேசுறவனுக எல்லாம் சேர்ந்து ஆட்சி அமைச்சா தமிழ்நாடு விளங்குமா?"

"வேற என்னங்க பண்ணனுங்கிறீங்க... எவ்வளவு வருந்தி மன்னிப்புக் கேட்டிருக்கிறார்... இன்னைக்கு எவன் எவனைப் பேசலை சொல்லுங்க... ஏன் அதே கலைஞர் காமரைஜரை கருவாட்டிக்காரி பெத்தவர்ன்னு சொல்லி இன்னும் என்னென்னமோ பேசலையா?" என்றார் அன்வர் பாய்.

"அது ஏங்க நேத்து ஒரு வீடியோ பார்த்தேன்... அதிமுக பிரச்சார மேடையில் ஒரு பொம்பளை பேசுது... கருணாநிதையும் ஸ்டாலினையும் என்ன பேசுறதுன்னு இல்லை... அதை ரசிச்சிக்கிட்டு கழக கண்மணிகள் உக்காந்து இருக்காங்க... அழகிரிக்கும் ஸ்டாலிக்கும் எவன் குஷ்புவை வச்சிக்கிறதுன்னு சண்டையாம்... இதைவிட இன்னும் கேவலமா வளர்மதி பேசுது... அதெல்லாம் ஏன் உடன்பிறப்புக்கள் எதிர்க்கலை." சற்று காட்டமாகக் கேட்டான் கணபதி.

"அது அவங்களுக்குள்ள ஒத்துப் போயிருவாங்கங்க... அவங்க ரெண்டு பேரு டார்க்டெட்டுமே மாற்று அரசியல்ன்னு கிளம்பியிருக்கிற கட்சிகள்தான்..." என்றான் அவர்.

"அப்ப அவங்களுக்குள்ள அண்டர்ஸ்டாண்டிங் இருக்குன்னு ஒத்துக்கிறீங்கதானே... அவங்க டார்க்கெட் மற்ற கட்சிகள் இல்லைங்க... மக்கள் நலக்கூட்டணி... அவங்க பிரிக்கப் போற ஒவ்வொரு ஓட்டும் திமுகவுக்கானதுதான்... அதான் இப்படி ஒரு கேவலமான வேலையில இறங்கியிருக்காங்க.... எங்களை நீக்க உனக்கு அதிகாரம் இல்லைன்னு சொல்ல வச்சி... முரசை முடக்கணுமின்னு துடிக்கிறாங்க... இதுதான் உண்மை.... தைரியமிருந்தால் மோதிப் பாக்கணும்... அதைவிட்டுட்டு காசு கொடுத்து அடிமைகளை வாங்கி பேச வச்சி வேடிக்கை பார்க்கிறது ஒரு நல்ல அரசியல்வாதி செய்யிற வேலையா?" கணபதி கனன்றான்.

"ஆமாங்க அவனுங்க கேக்குறதுல ஞாயம் இருக்குல்ல... சொந்தக்காசைப் போட்டு கட்சி வளர்த்தோம்... திமுக பக்கம் போனா, ஒருவேளை அவங்க ஜெயிச்சா மந்திரி சபையில இடம் கொடுக்காட்டியும் காண்ட்ராக்ட் அது இதுன்னு கொடுப்பாங்கதானே.... மநகூவுல இருந்து என்னத்தை புடுங்க முடியும் சொல்லுங்க..."

"இவங்க யாருமே மக்கள் சேவைக்காக எல்லாம் அரசியல்ல இல்ல... கோடிகள் சம்பாதிக்கணும் அதுதான் குறிக்கோள்..." என்றார் அறை நிர்வாகி.

"ஏங்க இதே தேமுதிக எம்.எல்.ஏக்கள் மக்கள் பணி ஆற்றப் போறோமுன்னு நாலு வருசம் முன்னால காசு வாங்கிக்கிட்டு அம்மாக்கிட்ட போனானுங்களே... என்ன மக்கள் பணி பண்ணுனானுங்க... ஓட்டுப் போட்ட மக்களை முட்டாளாக்கலையா" என்றார் அவர்.

"அதனாலதானே அம்மா அவனுகளை அப்படியே கட்டம் கட்டி ஒதுக்கிருச்சு... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ன்னு வள்ளுவர் சும்மாவா சொன்னாரு..." என்றான் கணபதி.

"ஆமா வேட்பாளர் அறிவிச்சிட்டு தினம் நாலு பேரை தூக்கிட்டு பழைய ஆளுங்களையே போட்டுக்கிட்டு வருது பாருங்க... இந்தப் பொழப்புக்கு..." என்றார் அவர்.

"இது தெரிஞ்சதுதானே... இந்த அஞ்சு வருசத்துல எத்தனை முறை மந்திரிகளை மாத்தியிருக்கும்... அறிவிக்கப்பட்டவனெல்லாம் வேட்புமனு தாக்கல் பண்ணினாத்தான் வேட்பாளர்ன்னு முடிவாகும்... அதுவரைக்கும் இப்படித்தான்..." என்றார் அன்வர் பாய்.

"ஹா... ஹா... ஒருத்தன் நான் எம்.எல்.ஏ. வேட்பாளர்ன்னு அம்மாவே சொல்லிட்டாங்கன்னு கிடா வெட்டி விருந்து கொடுத்திருக்கான்... விருந்து முடியிறதுக்குள்ள ஆளை மாத்திருச்சாம்... இப்ப கையில வச்சிருந்த காசெல்லாம் செலவழிச்சிட்டு நிக்கிறானாம்..."

(சரியா கணிச்சி வச்சிருக்கீங்க... இந்தத் தடவை ஆப்படிப்பானுங்கன்னு நம்புறோம்...)
"எது எப்படியோங்க... இந்தக் கலவரத்துல தேமுதிக-மநகூ ஒண்ணுமில்லாமப் போகப்போகுது...சொல்ல முடியாது தேர்தலுக்குள்ள மநகூ இல்லாமலேயே போனாலும் போகும்... நாம் தமிழர்ன்னு ஒருத்தன் கத்தினான்.. கத்தினான்... கத்திக்கிட்டே இருக்கான்... அதுவும் புஸ்வானம்தான்... பாஜக சொல்லவே வேண்டாம்... ஒரு வீட்டுக்கு மருமகனாப் போனவளை தாலியை அத்தெறிஞ்சிட்டு வா... நாங்க கட்டிக்கிறோம்ன்னு இன்னும் தொங்கிக்கிட்டு நிக்கிது... இப்படி எல்லாம் ஆட்டம் கண்டதால தைரியமா முன்னுக்கு வரப்போறது பாமகதான்..." என்றார் அவர்.

"எங்கடா சொல்லலையேன்னு நினைச்சேன்.... பாமக தைரியமா தென் தமிழகம் பக்கம்... குறிப்பா மதுரை தாண்டி எங்க பக்கத்துல வேட்பாளரை நிறுத்துமா...? அப்படி நிறுத்தினால் டெபாஸிட் வாங்குமா...? அன்புமணியாகிய நான்ன்னு எங்க ஊர்ப்பக்கம் வந்து பேசுவாரா உங்க சின்னய்யா... சொல்லுங்க..." என்றான் கணபதி.

"ஏங்க... அங்க அங்க இருக்க பெரிய பெரிய சாதி அமைப்புகளோடு மறைமுகமா பேசி வச்சிருக்காங்க... பாருங்க... இந்த முறை மாற்றம் வருதா இல்லையான்னு... ஏங்க கருணாஸ் தேவரே இல்லைங்கிறானுங்க... முக்குலத்தோர் பேருல ஒரு கட்சி வச்சிருக்கான்... அவனை திருவாடனை தொகுதியில நிப்பாட்டலையா... அப்படிப் பாக்கும்போது பாமக ஒவ்வொரு ஏரியாவுலயும் எந்த சாதி முன்னணியின்னு பார்த்து ஆட்களை நிப்பாட்டும்..."

"எப்பவும் நீங்க பண்ற ஆர்க்யூமெண்ட்படி பார்த்தா பாமக சாதிக்கட்சி இல்லைதானே... ஆனா இப்ப சாதி பாத்து நிப்பாட்டும்ன்னு சொல்றீங்க... எங்க பக்கமெல்லாம் மாம்பழம் பழுக்காதுங்க... அழுகிப்போயிடும் தெரிஞ்சிக்கங்க..." என்றான் கணபதி.

"சும்மா ஏங்க நீங்க எப்ப பார்த்தாலும் சாதிக்கட்சியின்னு சொல்லிக்கிட்டு... இன்னைக்கு அதிமுக அறிவிச்சிருக்கிற லிஸ்ட்ல சாதி இல்லாம இருக்கா... எங்க பக்கமெல்லாம் பெரும்பாலும் நிறுத்தியிருக்கிறது பெரும்பான்மை சாதியில இருந்துதான் போதுமா...? எல்லாக் கட்சியும் சாதி பாக்கத்தான் செய்யுது... பாமக, விடுதலை சிறுத்தைகள்ன்னு சில கட்சிகள் வளர ஆரம்பிச்சதும் அதை சாதிக்குள்ள கொண்டு வந்திடுறாங்க..." என்றார் அவர்.

"நடந்துக்கிறது அப்படித்தானேங்க... பின்ன சாதிக்கட்சியின்னு சொல்லாம..." என்றார் அறை நிர்வாகி.

"எங்களுக்கு ஜெயலலிதா மட்டுமே போட்டி... வேறு கட்சிகளை கணக்கில் எடுக்கலைன்னு அன்புமணி பேசியிருக்காரு பாருங்க... அதுதான் இந்த வருசத்தோட மிகச் சிறந்த காமெடி... அந்தம்மா நீயெல்லாம் எம்..... அப்படின்னு இருக்கு.... தைரியம் அதுக்கு அதிகம்... இந்தாளு தேவையில்லாம அதை சீண்டுறாரு..." என்றான் கணபதி.

"ஹா... ஹா.... வடிவேலு இல்லாத குறையைப் போக்கணுமில்ல... என்னதான் இருந்தாலும் அம்மா மாதிரி தில்லு வேற யாருக்கும் இல்லை... அதான் அன்புமணி தைரியமான பொம்பளையோட மோதுவோம்ன்னு சொல்றாப்புல..." என்றார் அறை நிர்வாகி.

"அப்ப பிரேமலதா தைரியமான ஆளில்லையா...?" சிரிக்காமல் கேட்டார் அன்வர் பாய்.

"அதெல்லாம் குழாயடி சண்டைக்குத்தான் லாயக்கு... கூட்டத்துக்குள்ள மாடு புகுந்து மூணு நாலு பேரை குத்திப்புடிச்சி... அப்ப இந்தம்மா மாடு புகுந்தா நல்லதுதான்... அது இதுன்னு பேசிக்கிட்டு இருக்கு... இதெல்லாம் விஜயகாந்த் பேரைச் சொல்லி அரசியல் பண்ணி காசு பாக்கப் பாக்குதுங்க... புருசனால பேச முடியலை... இது என்ன பேசுறதுன்னு இல்லாம பேசுது... இன்னைக்கு நிலமையில தமிழக அரசியல் காமெடியில களைகட்டிக்கிட்டு இருக்கு... ரொம்ப பொறுமையா விளக்கமா பேசுறது அன்புமணி மட்டுந்தான்..." என்றார் அவர்.

"தயவு செய்து அன்புமணி பேச்சை நிப்பாட்டுங்க... அம்மா இன்னும் களத்துல இறங்கலை... இறங்கட்டும்... அப்புறம் பாருங்க... சந்திர குமாரை தந்திரமா பணம் கொடுத்து இழுத்து பேச வச்சி வேடிக்கை பாக்குறாங்க... ஆனா அதுதான் திமுகவுக்கு பெரிய ஆப்புன்னு தெரியாம இருக்காங்க...  சுருக்கமாச் சொல்லப்போன தந்திர... இல்ல சந்திர குமாருதான் திமுகவுக்கு தரித்திரகுமாரா இருக்கப் போறாரு... தேமுதிகவுக்கு இருக்க ஓட்டு வங்கி விஜயகாந்த் என்ற தனி மனிதனுக்கானதுதான் என்பதை எல்லாரும் அறிவோம்... சந்திரகுமாரையெல்லாம் எவனுக்கும் தெரியாது... மக்கள் மனசுல கதாநாயகன்னா அது விஜயகாந்த்தான்... வெற்றி தோல்வி எல்லாம் சகஜம்... கெடு வச்சவனுங்களை தூக்கி அடிச்சாரு பாருங்க... அங்க நின்னாரு கேப்டன்..." என்றான் கணபதி.

"எங்கயும் அவரால நிக்க முடியாது... விட்டா சாஞ்சிருவாரு... பிரேமலதாவும் சுதீஷூம் ஸ்குரு போட்டு நிப்பாட்டுறாங்க... தாங்கிக்கிட்டு திரிஞ்ச சந்திரகுமாரு... ஐயா வண்டி தள்ளப் பொயிட்டாரு..." எனச் சிரித்தார் அன்வர் பாய்.

"எது எப்படியோ இந்தத் தடவை மக்கள் மனசுல புதிய சிந்தனை வந்தாச்சு... ரெண்டு பெரிய கட்சியும் ஆட்டம் காணுதா இல்லையான்னு பாருங்க..." என்றார் அவர்.

"அதெல்லாம் இல்லைங்க... பணத்தைக் கொடுத்து நம்மளோட புதிய சிந்தனையை எல்லாம் மழுங்கடிச்சிருவானுங்க... இந்தா பாருங்க... சினிமா நடிகர் நடத்துற நட்சத்திர கிரிக்கெட்டுக்கு ஆதரவு கொடுக்காதீங்கன்னு எல்லாரும் கத்துறானுங்க... தண்ணிக்குள்ள கிடந்து சென்னை தத்தளிச்சப்போ ஒரு சிலர் தவிர எந்தத் தக்காளியும் வரலை... ஆனாலும் டிக்கட் விக்க ஆரம்பிச்சதும் சென்னையில டிக்கெட் கிடைக்கலை... ரசிகர்கள் அடிதடின்னு வருதா இல்லையா பாருங்க... அப்படித்தான் அடிச்ச கொள்ளையில சில கோடியை ஒதுக்கி ஓட்டுக்கு பணம் கொடுத்து அதே அம்மா ஜம்முனு வந்து உக்காரப் போகுது.... அப்புறம் குத்துதே குடையுதேன்னு நிக்கப் போறோம்... இதுதான் உண்மை..." என்றான் கணபதி.

"காசுக்கு ஓட்டுன்னு இந்தத் தடவையும் பண்ணினா... தமிழன் செத்தொழிய வேண்டியதுதான்.... அதுக்கப்புறம் பீகார் மாதிரித்தான் தமிழகமும் இருக்கும்..." என்றார் அறை நிர்வாகி.

(அது சந்திரகுமாரு தலைவரே...!)

"இப்பவே அப்படித்தானே இருக்கு... காசுக்கு ஓட்டுப் போடாம யோசிச்சி ஓட்டுப் போட்டா நல்லது என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..." என்றான் கணபதி.

"ஏம்ப்பா... எப்பப் பாத்தாலும் இந்த கேடுகெட்ட அரசியல்தானா...? என்னமோ நீங்கதான் நாட்டை திருத்தி முன்னுக்கு கொண்டு வரப்போறது மாதிரி பேசிக்கிட்டு... ஆண்டி கூடி மடங்கட்டுன கதைதான் உங்க கதை.... ஆளாளுக்கு பேசுவீங்க... காலையில அடிச்சிப்பிடிச்சி எந்திரிச்சி வேலைக்கு ஓடுவீங்க... அதுசரி இப்ப பேசின நாலு பேருல யாரு ஓட்டுப் போட ஊருக்குப் போறீங்க..." என்றபடி கட்டிலில் இருந்து எழுந்தான் அவன்.

'ஆஹா... எழுந்திருச்சிட்டான்... வாயைக் கொடுத்தோம்... அப்புறம் பின்னாடி புண்ணாகிடும்' என்று நினைத்தபடி பாத்ரூம் சாவியை எடுத்தார் அவர். 'டீப் போட்டுக்கிட்டு வாறேன்'னு கிளம்பினார் அறை நிர்வாகி. 'அலோ அம்மாவா... நம்ம தொகுதியில கற்பகம் நிக்குதாமே... ஓட்டு விழுகுமா?' என ஆரம்பித்தான் கணபதி. 'அட ஏங்க லீவு கேட்டா கடுப்படிக்கிறானுங்க... எங்கிட்டு ஊருக்குப் போறது...' என்றபடி பேண்டை மாட்டினார் அன்வர் பாய்.

"பாத்தீங்களா... இதுதான் நடப்பு.... நாட்டை திருத்துவோம்... மாற்றம் வரும்... மண்ணாங்கட்டி வரும்ன்னு பேசுறவனெல்லாம் வெளியில இருந்துக்கிட்டு ஓட்டுப் போடக்கூட போகமாட்டானுங்க... நான் இன்னைக்கு எதுவும் பேசக்கூடாதுன்னு பேசமா இருந்தேன்... இனிமே அறைக்குள்ள அரசியல் பேசக் கூடாதுன்னு சொல்லணும்... அந்தாளு பாட்டுக்கு சுவிட்டோடதானே வந்தாரு... அவரைக் கிளப்பி விட்டு மாம்பழம் அது இதுன்னு... ஏன்டா மாப்ள இந்த வேலை.... பாய் எப்பவும் பேச மாட்டாரு... அவரும் இன்னைக்கு இடையில சரடு விடுறாரு... பாய் நமக்கெல்லாம் இது எதுக்கு... நம்ம வாழ்க்கையை ஓட்டுறதே பெரிசா இருக்கு... போங்க போயி சமைக்கிறதுக்கு வாங்கிக்கிடு சீக்கிரம் வாங்க... வேலையை ஆரம்பிப்போம். எவன் வந்தாலும் நாம இப்படித்தான் புரியுதா...? சாப்பிட்டு சீக்கிரம் படுத்தாத்தான் நாளைக்கு காலையில எந்திரிச்சி வேலைக்கு ஓடமுடியும்..." என்றான் அவன்.

படங்களுக்கு நன்றி - இணையம்...
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 31 மார்ச், 2016

வாக்காளர் அலப்பறை...5

"என்ன இந்தியா புட்டுக்கிச்சு போல..." சிரிப்போடு உள்ளே நுழைந்தான் அவன்.

"அட ஆமா மாப்ள... கொய்யால மூணு அவுட்டு மாப்ள... மூணுமா நோ பாலாப் போடுவானுங்க... முடிஞ்சது.... ஆட்டம் காலி... படுதா காலி மாப்ள..." கணிப்பொறியை ஆப் பண்ணியபடி சொன்னான் மதுரைக்காரன்.

"எனக்கு தெரியும்ல்ல... நம்மாளுக முன்னாடி ரன் அடிக்க முடியாம திணறுனாங்க... இன்னைக்கு ரன் அடிச்சானுங்க... ஆனா பவுலிங்ல திணறிட்டானுங்க..."

"ஆமா மாப்ள... இவனுக்க ஒரு சிக்ஸ் அடிக்கவே திணறுனானுங்க... அவனுக போடுற பாலை எல்லாம் சிக்ஸருக்கு அனுப்புனானுங்க... கேப்டன் கரையேத்துவாருன்னு பார்த்தா கவுத்துட்டாரு... நாளைக்கு ஆபீசு லீவாப் போச்சு... இல்லேன்னா பங்காளியும் பாகிஸ்தானியும் வச்சி வச்சி செய்வானுங்க...."

"கடைசி வரைக்கும் நம்பினேன் கேப்டன் கரை சேப்பாருன்னு..." என்றார் காரைக்குடியார்.

"நல்லா நம்புனீங்க... கேப்டனெல்லாம் கரை சேக்க முடியாதுங்க.... இன்னைக்கு அவனுக்கு விதிச்ச விதி நல்ல விதி அம்புட்டுத்தான்..." என்றார் அவர். அவர் இன்று ஏனோ சற்று சோகமாகவும் இருந்தார்.


"நம்பிக்கைத்தானேண்ணே வாழ்க்கை... சேப்பாருன்னு நம்புவோம்..." என்றபடி அவரருகில் அமர்ந்து "என்னாச்சுண்ணே... இன்னைக்கு ரொம்ப சோகமா இருக்கீங்க...?" என்றான்.

"கம்பெனியில புதிய புராஜெக்ட் இல்லை... ஒருவேளை ரெண்டு மாசத்துல வேலை இல்லைன்னு சொல்லிட்டானுங்கன்னா வாங்கி வச்சிருக்கிற கடனை எல்லாம் எப்படி அடைப்பேன்னு ரொம்ப கவலையா இருக்கு.... மத்தியானம் சாப்பிட கடைக்குப் போனா சாப்பாடே இறங்கலை... பத்தாததுக்கு மலையாளி வேற ரெண்டு மாசத்துக்குள்ள வேற எதாச்சும் நல்ல வேலையா தேடிக்க... இல்லேன்னா வீட்டுக்கு அனுப்பிடுவானுங்கன்னு சொல்லி வெறுப்பேத்துறான்... " புலம்பினார் அவர்.

"அட விடுங்க... எல்லாம் சரியாகும்... இன்னைக்கு கெயில் அவுட்டானது ஐந்து ரன்ல...எல்லாரும் என்ன நெனச்சோம் நாம வின் பண்ணி கோப்பையை வாங்கப் போவோம்ன்னு... ஆனா என்னாச்சு நம்மால முடியும்ன்னு ஆடுனானுங்க... ஜெயிச்சானுங்க... அதுதான் நம்பிக்கை... எல்லாம் நல்லா நடக்கும்... எப்பவும் போல ஜாலியா தேர்தல் விஷயம் பேசுங்க... நாளைக்கு லீவை வச்சிக்கிட்டு கிரிக்கெட் பார்த்து ஆளுக்கொரு பக்கமா சோகமா உக்காந்திருக்காம..." என்றான்.

"ஆமா... என்னத்தைப் பேசி என்ன பண்ண.... கோடிக்கோடியா பணம் பிடிக்கிறானுங்க... எப்படியிருந்தாலும் இந்த முறையும் ஜனநாயக முறையிலான தேர்தல் இல்லைங்க... காசுதான் ஜெயிக்கும்..."

"அது தெரிஞ்சதுதான்... தமிழன் காசுக்கு அடிமையின்னு மறுபடியும் புரூப் பண்ணப் போறானுங்க..."

"ஆமா... ஆமா... மாத்தி மாத்தி அவனுங்க கையில கொடுத்து வேடிக்கை பாக்குறானுங்க...."

"அதுக்குத்தான் இந்த முறை கேப்டனுக்கிட்ட கொடுங்கன்னு சொல்றோம்..." என்றார் காரைக்குடி.

"ஆமா... ஆளு எங்க இருக்காருன்னே தெரியலை... முதல்வர் கேண்டிடேட்ன்னா ஒரு கெத்து இருக்க வேண்டாமா...?" என்றான் மதுரை.

"அப்ப அன்புமணியாகிய நான்... அப்படின்னு தலையில மைக்கைக் கட்டிக்கிட்டு பேசுறாரே அவருக்குப் போடுங்க..." என்றான் அவன்.
"மாற்றம்... முன்னேற்றம்ன்னு சொல்லி ஜாதிச் சல்லிக்கட்டை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்ப்பானுங்க...அட ஏன் மாப்ள நீ..." தலையிலடித்துக் கொண்டான் மதுரை.

"அவனும் வேண்டாம்... இவனும் வேண்டான்னா அப்ப மறுபடியும் பதவி ஆசை பிடித்த ஐயாவோ... இல்லேன்னா எனக்கு உறவு இல்லை... சொத்து இல்லை... நான் அன்னக்காவடிங்கிற அம்மாவோதான் ஆளணும்..." கடுப்பாய்ச் சொன்னார் அவர்.

"விஜயகாந்த்தானுங்க சரியான ஆள்..." மீண்டும் காரைக்குடி

"அட அந்தாளை விடுங்க... இந்த சீமான்...?" மெல்ல இழுத்தான் மதுரை.

"சீமானா... அவனெல்லாம் சீன்லயே இல்லைங்க... நரம்பு வெடைக்க பேசினா மட்டும் போதாதுங்க... திறமையான பேச்சு இருக்கணும்... ஆ...ஊன்னா முப்பாட்டன் முருகன்னு சொல்றான்... பெரியாரைப் பின்பற்றி ஆரம்பகாலத்தில் பேசியபோது சிவலிங்கம் என்ன வடிவம்டா... சொல்ல முடியுமாடா... முட்டாப்பயலுகளேன்னு பேசினான்.... இதுல இன்னொரு காமெடி என்னன்னா என் இனமடா... என் தலைவன்டான்னு இலங்கையை வைத்து அரசியல் பேசுவான்... காமெடி பீசுகளெல்லாம் நாடாள முடியாது... படித்தவன் ஒருத்தன் வரணும்..." என்றார் அவர்.

"படித்தவன்னா... நீங்க டாக்டரை சொல்றீங்களா...? இல்லை வக்கீல் வைகோவை சொல்றீங்களா...?" என்றான் மதுரை.

"போன தேர்தல்ல வடிவேலுவை வச்சி காமெடி பண்ணுனானுங்க... அவரு இல்லையில்ல அதான் இந்தத் தேர்தல்ல வைகோ வடிவேலு ஆயிட்டாரு... என்ன பேசுறோம்... எதுக்கு பேசுறோம்... ம்ஹூம்.... எதுவும் தெரியலை... வாய்க்கு வந்ததை பேசுறாரு... விஜயகாந்த் போனதுல அவருக்கு கைகால் புரியலை..." என்றான் அவன்.


"எல்லாக் கட்சியும் மக்கள் நலக் கூட்டணி மேலதான் கல்லெறியுது... அப்ப பயம் இருக்குன்னுதானே அர்த்தம்..." இது காரைக்குடி.

"பயமிருக்கோ... இல்லையோ... முதல்வர் வேட்பாளர் சீன்லயே இல்லையே... முதல்ல முதல்வர் வேட்பாளரை சீனுக்கு வரச் சொல்லுங்க.... அப்புறம் பேசலாம் மக்கள் நலக்கூட்டணி பயம் காட்டுதா... இல்லை படம் காட்டுதான்னு..." என்றார் அவர்.

"ஏங்க இந்த தடவை மக்கள் நலக் கூட்டணி கணிசமான ஓட்டு வாங்கும்..." என்று எடுத்துவிட்டான் மதுரை.

"ஸ்டாலின் தேமுதிகவை பிரிக்க ஆக்சன் ஸ்டாலின்னோ என்னமோ ஒரு திட்டம் போட்டு கணிசமா பிரிக்க ஆரம்பிச்சாச்சாம்... தேர்தலுக்கு முன்னாலயே தேமுதிக ஆட்டம் காணுதா இல்லையான்னு பாருங்க..." என்றார் அவர்,

"ஆட்டமெல்லாம் காணதுங்க.. கேப்டன் ரொம்ப ஸ்டெடி... கட்சியை அழகா கரையேத்துவார் பாருங்க... அடுத்த முதல்வர் அவர்தான்..." இது மதுரை.

"இன்னைக்கு நம்ம தோனியே  திணறிட்டான்... இவரு கரையேத்துறாராம்... அட எங்க சும்மா... ஜோக்கடிக்காதீங்க.... நடக்குறதைப் பேசுங்க.... இந்தா தொண்ணூறு வயசுல கட்டுமரம் பிரச்சாரத்துக்கு கிளம்ப வேன் ரெடி பண்ணிருச்சு... அம்பது வயசுல என்ன பேசுறோம்ன்னு தெரியாம... என்ன செய்யிறோமுன்னு தெரியாம காமெடி பீசா இருந்து இன்னைக்கு அண்ணி... அப்படித்தான் சொல்றானுங்க... அதான் நானும் சொல்றேன்... பேசுது... அண்ணனை ஆளைக் காணோம்... இவரெல்லாம் நாடாண்டு... நாம நடுத்தெருவுலதான் நிக்கணும்..." என்றார் அவர்.

"அப்ப நீங்க சின்ன டாக்டர் வந்தா தமிழகம் சொர்க்க பூமியா மாறிடுன்னு சொல்ல வாறீங்க... அப்படித்தானே..." என்றான் அவன்.

"மாற்றம் தேவைங்க... அதுதான் சொல்றேன்..." என்றார் அவர்.

"என்ன மாற்றம்... சொர்க்கபூமியா இருக்காது... ஜாதி... ஜாதியின்னு... ஆளாளுக்கு வெட்டிக்கிட்டு செத்துப் போயி சுடுகாடா மாறிடும்..." என்றார் காரைக்குடி.

"அட ஏங்க நான் எதாவது பேசினா எல்லாரும் ஒண்ணு சேந்துப்பீங்க... எந்த கட்சிங்க ஜாதியை வைத்து அரசியல் பண்ணலை... பேசினா எதாச்சும் சொல்லுவீங்க... அதான் நான் பேசுறதில்லை... என்னை ஆளை விடுங்க... சாப்பிட்டு வாறேன்..." என்றபடி அவர் கிளம்பினார்.

"என்ன மாப்ள... இன்னைக்கு உப்புச் சப்பில்லாம முடிஞ்சிருச்சு... " சோகமாய்க் கேட்டான் மதுரை.

"கோர்த்து விட்டு அவரை பேச விடுவீங்கன்னு பார்த்தா.... எஸ்கேப் ஆயிட்டாரே..." என்றார் காரைக்குடி.

"அட விடுங்க... எல்லா நாளும் அவரு பேசுவாரா... மனுசன் வருத்தத்துல இருந்தாரு... அதான் நானும் ரொம்ப பேசலை... இப்ப கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆயிருப்பாரு.... பாவம் கடன் அது இதுன்னு கஷ்டப்படுறாரு... புள்ளைங்க வேற காலேசு படிக்குதுங்க... மனசு வருந்தி... வருந்தி படுத்தாலும் தூக்கம் வராம ராத்திரியெல்லாம் புரண்டு புரண்டு படுக்குறாரு.... எதுக்குங்க அந்த மனுசனை ஏத்திவிட்டு... நாளைக்கு ரெண்டு திருவாலியத்தானுங்க வருவானுங்க... ஊத்திவிட்டு ஏத்திவிட்டுப் பார்ப்போம்... அப்ப பாருங்க ரகளையை..." என்றபடி எழுந்தான் அவன்.

படங்கள் : இணையத்திலிருந்து (நன்றி) 
(அட மூணு படம் மதுரைத் தமிழனோடது... இணையத்தில் சுட்டதுதான் என்பதால் திட்டமாட்டாருன்னு நம்புவோம்...)
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 24 மார்ச், 2016

வாக்காளர் அலப்பறை...4

வன் அறைக்குள் நுழையும் போது இந்தியா - பங்களாதேஷ் கிரிக்கெட் போட்டி டிவியில் ஓடிக் கொண்டிருக்க, அறை நண்பர்கள் சுவாராஸ்யமில்லாமல் ஊருக்குப் பேசிக் கொண்டும்... கணிப்பொறியில் விவாத மேடைகள் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள்.

"என்னாச்சு... இந்தியா ஜெயிக்காதுன்னு பேசிக்கிட்டானுங்க..." என்றபடி டிவிக்கு முன் போய் ஸ்கோர் பார்த்தான்... "அது சரி... பாலைவிட பத்து ரன்தான் அதிகமிருக்கு... அப்ப இன்னைக்கு இந்தியாவுக்கு சங்குதான்" என்றான்.

"அதேதான் நானும் சொல்றேன்... பவுலிங் பிட்சுன்னு நம்மாளுங்க சொல்றாங்க... அதே பவுலிங் பிட்சுலதானே அவனும் விளையாடுறான்... அவனுக்கு மட்டும் சிக்ஸர் போருன்னு போகுது... நம்மாளுக பயலுக கிட்டிப்புல்லு விளையாடுற மாதிரியில்ல ஆடுனானுங்க... தோக்கட்டும்...' என்றபடி விவாத மேடையோடு மேட்சையும் கலந்து பார்க்க ஆரம்பித்தார் அறை நிர்வாகி.

அறை நிர்வாகிக்கு பதில் சொல்லிக் கொண்டே டிரஸ் மாற்றி கை, கால் கழுவி விட்டு ஒரு கிரீன் டீயோடு வந்து அமர்ந்தான் அவன். மாட்ச் தோத்துருவானுங்கன்னு தோண, ஊருக்கு பேசலாம் என்று நினைத்தபடி கம்ப்யூட்டரை ஆன் செய்து விட்டு பக்கத்துப் பெட்டுப் பக்கமாக திரும்பினான். அங்கே அவர் எங்கிட்டு மழை பேஞ்சா எனக்கென்ன என மிகவும் சின்சியராக அவர் விரும்பும் கட்சி பரப்பிக் கொண்டிருக்கும் கொள்கையை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

அவனை பார்த்து விட்டு கவனிக்காதது போல அமர்ந்திருந்தார். அவர் கண்டிப்பாக 'இந்த ஏழரை வந்திருச்சு... இனி ஏதாவது பேசி நமக்கிட்ட ஏழரை இழுக்குமே' என மனதுக்குள் நினைத்திருப்பார் என்று நினைத்தவனுக்கு சிரிப்பு வர, அதை பெரிய செருமலாக மாற்றினான்.



"என்னங்க... அரசியல் ரொம்ப சூடு பிடிக்கிது போல..." என அவரை வம்புக்கிழுத்தான்.

'ஏய்யா... வந்ததும் ஆரம்பிக்கிறே...? கொஞ்ச நேரம் மேட்ச் பாக்க விடுய்யா...' என சைகையால் சொன்னார் அறை நிர்வாகி.

'கோர்த்து விடு மாப்ள... நம்ம பொழப்பு அதுதானே... இன்னைக்கு கிரிக்கெட்டுலதான் அடிச்சி ஆடலை... நீ அடிச்சி ஆடு... இப்பத்தான் பொண்டாட்டிக்கிட்ட சண்டை போட்டேன்... அந்த சூடு போக நீ அவருக்கு பத்த வச்சி விடு பரட்டை' என்பது போல் சிரித்தான் எதிர் பெட்டுக்காரன்.

"அட என்னங்கப்பா... ஆளாளுக்கு விடாம விவாத மேடை, நேர்படப் பேசு அது இதுன்னு பாக்குறீங்க... கருத்துச் சொல்ல மாட்டேங்கிறீங்க... பாக்யா மக்கள் மனசு மாதிரி... அறை நண்பர்கள் மனசை தெரிஞ்சிக்கலாம்ன்னு வந்தா நாத்தனாக்காரி முகத்தை திருப்பி வச்சிக்கிட்ட மாதிரி உக்காந்திருக்கீக..." என்றான் சத்தமாய்.

"அதான் சேந்துட்டானுங்களே... இனி என்ன பேச..." அவர்தான் ஆரம்பித்தார்.

'சனியன் சீட்டியடிச்சிட்டான்...' என்பது போல் நக்கலாய் சிரித்தான் எதிர் பெட்டுக்காரன்.

"என்னலே சிரிக்கிறே... பொண்டாட்டிக்கிட்ட சிரிக்க முடியலை... அங்க இருந்துக்கிட்டு உன்னைய இங்க சிரிக்க விடாமப் பண்ணுறா பாரு... அதான்யா... அம்புட்டுப் பேரும் கூட்டணி அது இதுன்னு புலம்ப... இருக்கா... இல்லையான்னே தெரியாம வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டே உள்ளடி வேலை எல்லாம் பாக்குது பாரு தமிழகத்தை காக்க வந்த கொம்மா... அது மாதிரிடா மாப்ள எந்தங்கச்சி..." எனச் சொல்லி சிரித்தான்.

"காஞ்ச ஓலையைப் பார்த்து பச்சை ஓலை சிரிக்க கூடாது மாப்ள... நாளைக்கு பச்சை ஓலையும் காயும் பாத்துக்க..."

"காயும் போது பாக்கலாம் இரு.." என்றவன், "இன்னைக்கு கேப்டன் டேயாமே... கலக்கிட்டாராமே..." என்றான். அவன் எப்பவும் விஜயகாந்துக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசுறதாலதான் அறைக்குள் சண்டை சூடு பிடிக்கும். அதனாலேயே அவன் கட்சிகள் விஜயகாந்துக்கு போட்டி போடுற மாதிரி அவரை முன்னிருத்துவான்.


"எனக்கு அப்பவே தெரியுங்க... இவன் அங்கதான் போவான்னு... அதுல வேற  முதல்வர் வேட்பாளராம்... என்ன கொடுமை பாருங்க..." என்றார் அவர்.

"இதுல என்னங்க கொடுமை இருக்கு... அவருக்கு திமுகவோட போக பிடிக்கலை... அதைத்தான் மக்களும் விரும்பினாங்க...அதான் மக்கள் நலக் கூட்டணிக்குப் பொயிட்டாரு... மக்கள் நலம் காக்க... அதுக்காக இதை சந்தர்ப்பவாத கூட்டணியின்னு மத்த கட்சிக்காரங்க சொல்ற மாதிரியில்ல நீங்களும் சொல்றீங்க?"

"தனியா நிக்கிறேன்னு சொன்னவன் நிக்க வேண்டியதுதானே... எதுக்கு அங்க போயி சேர்றான்... அப்ப அவனுக்கு பயம் வந்தாச்சுல்ல..."

"இந்த பயம் அவருக்கா... இல்லை நீங்க மாஞ்சு மாஞ்சு பாக்குறீங்களே அந்த கட்சிக்கா?"

"நான் எல்லாக் கட்சி பேச்சையும்தான் கேட்கிறேன்... நீங்க எதுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியோட ஆள்ன்னு மட்டும் என்னை பாக்குறீங்க..."

"அப்படியா... எல்லா கட்சி பேச்சையும் கேக்குறீங்களா... சரித்தான்... ஆமா எல்லாக் கட்சியிலயும் தலையில மைக்கை மாட்டிக்கிட்டு ஒரு ஆள் பேசுறாரா என்ன... நான் கவனிக்கலையே..?" 

"அது... அது எதுக்குங்க இப்ப... பேரம் பேசி படியாம இப்ப அங்கிட்டுப் போயிருக்கான்... இவனெல்லாம் தமிழகத்தை காக்கப் போற முதல்வரா..? மதுவை ஓழிப்போம்ன்னு சொல்றவனுங்களோட முதல்வர் வேட்பாளர் மப்புல இருக்கவருல்ல..." சிரித்தார்.

"இருங்க... மத்த எந்தக் கட்சி வந்தாலும் மதுவையும் சாதியையும் ஒழிச்சிருமா?"

"ஆமா கிழிப்பானுங்க.. அதை வச்சித்தானே அரசியல் பண்ண முடியும்..." இடையில் புகுந்தார் அறை நிர்வாகி.

"நல்ல செயல் திட்டங்களோட வர்றவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணுங்க... விஜயகாந்த் மாதிரி ஆளுங்களை அரசியல்ல இல்லாமப் பண்ணனும்..."

"ஒத்துக்கிறேங்க... விஜயகாந்த் நிலை இல்லாதவர்தான்... தண்ணி வண்டியாவும் இருக்கட்டும்... அந்தாளை தமிழக மக்கள் விரட்டி அடிக்கட்டும்... அப்படியே அம்மா, அய்யா... அப்புறம் சாதி அரசியல் பண்ற எல்லாரையும் விரட்டிட்டு மக்களுக்காக பாடுபடுற ஒருத்தரை தலைவராக்கட்டும்... அந்த ஒருத்தரை எங்க தேடுவீங்க... தேடித்தான் பிடிச்சிட முடியுமா... ஆ...ஊன்னா சகாயத்தை முன்னிருத்துவீங்க... அவரு மட்டும் இந்த பாழப்போன தமிழகத்தை சோலை ஆக்க முடியுமா என்ன...?"

"அதுக்குத்தாங்க இருக்கவங்கள்ல மக்கள் நலம் காக்கப்போற புதியவங்ககிட்ட ஆட்சியைக் கொடுங்கன்னு சொல்றோம்..."

"ஆமாங்க விஜயகாந்த் மட்டுமில்ல... வைகோ, திருமா, கம்யூனிஸ்ட் என யாருமே இதுவரை ஆட்சி செய்யலை... அவங்களும் புதியவங்கதானேங்க... இந்த முறை மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு கொடுப்போம்..."

"அது எப்படிங்க... வைகோ திருமா எல்லாம் அரசியல்ல பழம் தின்னு கொட்டை போட்ட பெருச்சாளிங்க... களவாணிப் பயலுக கூட்டணிங்க அது... சந்தர்ப்பவாத கூட்டணி... நாளைக்கே அம்மா புகுந்து அத்து விட்டுரும் பாத்துக்கங்க..."


"அம்மா புகுந்தா ஆமை புகுந்த மாதிரியின்னு சொல்றீங்க... சரி விடுங்க... நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே... உங்க தலைமை இருக்காரு பாருங்க... ரொம்ப சுத்தம் இல்லைங்களா... இதுவரைக்கும் கேவலமான அரசியல் பண்ணியதே இல்லை... சாதி அரசியல் பண்ணியதே இல்லை... மக்களுக்காக தன்னோட சொத்தை அழிச்சு அரசியல் பண்ணிட்டு இன்னைக்கு குடிசையில இருக்காரு இல்லீங்களா... அட ஏங்க சும்மா பேசிக்கிட்டு... எல்லாப் பயலும் ஒரே குட்டையில ஊறுன மட்டைதானேங்க ... இன்னைக்கு செண்ட் அடிச்சிக்கிட்டு லவ்பெல்லாகிய நான்னு சொன்னா...."

"நீங்க ரொம்ப பேசுறீங்க... உங்களுக்கு விஜயகாந்தை தூக்கிப் பேசணும்... அதுக்காகத்தானே அரசியல் பேச வாறீங்க..."

"ஆமா... அவரை நாந்தான் தூக்கணுமாக்கும்... அதான் எங்க போனாலும் அவரைத் தூக்க ஆள் போகுதுல்ல... அவரும் அடிக்கிறாரு... பக்கத்துல இருக்க ஆளுகளையும் அடிக்கிறாரு... நமக்கு எந்தக் கட்சியும் இல்லைங்க... மாட்ச் வேற சுவராஸ்யமாப் போகுது... என்ன மாப்ள லாஸ்ட் ஓவரா... எத்தனை ரன் தேவை...11 ரன்னா... பெங்காலி ஜெயிச்சிப்புட்டானுங்க போ... நாளைக்கு சைட்ல மஞ்சப்பொடிக ஆட்சியாவுல இருக்கும்... லீவைப் போட்டுற வேண்டியதுதான்.... அட என்ன இது இவனைப் போடச் சொல்றான்... அட நம்ம கேப்டன் கூட அட அண்ணன் சொல்ற மாதிரி புதிய ஆளுக்கு குடுத்துப் பாக்குறான்...  முயற்சி திருவினையாக்குமா..." எனச் சிரித்தபடி சீரியஸாக டிவியைப் பார்க்க ஆரம்பித்தான். 

அவர் மீண்டும் விவாதமேடைக்குள் நுழைந்திருந்தார்.

முதல் பந்து 1 ரன்... 

இரண்டாவது மூன்றாவது பந்தில் முறையே 4, 4...

"ம்க்கும்... புது ஆளு போடுறான் பாரு... முடிச்சிட்டானுங்க... 3 பால்ல 2 ரன்... பெங்காலிக குதிக்கப் போறானுக... வடிவேல் ஜோக்கு மாத்தி விடுங்கப்பா" என்றார் அறை நிர்வாகி.

"இருங்க... டைகர்லாம் குதிக்கிறதைப் பார்க்க வேண்டாம்..."

நாலாவது... ஐந்தாவது பாலில் விக்கெட்... 1 பால் 2 ரன்... மக்கள் நலக் கூட்டணி போல் பவுலருடன் தீவிர ஆலோசனையில்... 

கடைசிப் பந்து... 

தோனி, நேஹ்ரா ஐடியாப்படி வீசப்படுகிறது... பெங்காலி சுத்துறான்... 

'ஒண்ணு ஓடிருவானுங்க... மாட்ச் டை ஆகும்...' என பெட்டில் குத்தினான் எதிர் பெட்டுக்காரன்.

பந்து தோனி வசம்... பேட்ஸ்மேன் ஓட... எதிர் பேட்ஸ்மேன் எல்லைக்குள் வருவதற்குள் தோனி விரைந்தோடி ஸ்டம்பிங் செய்ய... 

மூன்றாவது நடுவரிடம் கேட்கப்படுகிறது...

திக்..திக்... நிமிடங்கள்....

மூன்றாவது நடுவர் அது அவுட்டுத்தாய்யா... எதுக்கு பயலுகளை படப்பட்டப்பா நிக்கச் சொல்லியிருக்கே... போகச் சொல்லுங்கிறேன்ன்னு சாலமன் பாப்பையா மாதிரிச் சொல்லிவிட....

பரபரப்பான போட்டியில் இந்தியா வெற்றி...


"அட புது ஆளு கூட ஜோரா இந்தியாவை காப்பாத்திட்டான்யா... அப்ப மக்கள் நலக் கூட்டணிக்கு ஓட்டுப் போடச் சொல்லுங்கப்பா... இந்த கேப்டன் இந்தியா மானத்தைக் காத்தது மாதிரி நம்ம கேப்டன் தமிழகத்தைக் காப்பாரு..." என்றான் சத்தமாக.

"ஆமா கிழிச்சாரு..." என்றார் அறை நிர்வாகி.

"மாப்ள மாட்ச் பாத்து படபடன்னு இருக்கு... இப்படியெல்லாம் ஜோக் அடிக்காதே படக்குன்னு போனாலும் போயிருவேன்... அப்புறம் உந்தங்கச்சிக்கு சண்டை போட ஆளில்லாமப் போயிரும்" என்றான் எதிர் பெட்... 

அவர் ஒன்றும் பேசாமல் கணிப்பொறி திரையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார். ஒருவேளை 'ஒளிமயமான தமிழகத்தை சமைப்போம்'ன்னு பேசியிருப்பானுங்களோ என்னவோ....

நன்றி இணையத்தில் இருந்து எடுத்த படங்களின் உரிமையாளர்களுக்கு...
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 17 மார்ச், 2016

வாக்காளர் அலப்பறை...3

வெள்ளிக்கிழமை மதியம் பிரியாணி செய்து சாப்பிடும் போது அவன்தான் ஆரம்பித்தான்.

"விஜயகாந்த் அவ்வளவு ஒர்த்தா என்ன... தனியா நிக்கிறேன்னு சொன்னா விடவேண்டியதுதானே... எதுக்கு கட்டுமரமும் நடைவண்டியும் மாறி மாறி கூப்பிடுதுங்க..." சிரிக்காமல் கேட்டான்.

'ஆஹா... இவன் எப்பவும் விஜயகாந்துக்கு சப்போர்ட் பண்ணுறவனுல்ல... என்ன இன்னைக்கு பிளேட்டை மாத்திப் போடுறான்... கஷ்டப்பட்டு செஞ்ச பிரியாணியை சாப்பிட விடுவானுங்களா... இல்ல ஏதாவது கலவரத்தை ஆரம்பிச்சிடுவானுங்களா... இருக்கவனுங்க கூட வந்தவனுங்களும் பாட்டிலை எல்லாம் கழுவிக் கவித்துட்டுல்ல உக்காந்திருக்கானுங்க... இவன் எதுக்கு இப்ப ஆரம்பிக்கிறான்னு தெரியலையே...' மனசுக்குள் யோசித்தபடியே தான் சமைத்த பிரியாணியையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தான் அந்த அறையின் பிரதான சமையல்.


சமையலைப் பார்த்து கண்ணடித்து விட்டு "இந்த விஜயகாந்துக்கு அறிவே இல்லைங்க... அரசியல்வாதிகளுக்கு வாக்கு சுத்தம் இல்லைங்கிறது மக்களுக்கு நல்லாவே தெரியும்... ஆனா இந்தாளுக்கு வார்த்தை சுத்தம் இல்லையே..." சத்தமாகச் சொன்னான் அவன்.

"என்ன இன்னைக்கு விஜயகாந்தைப் பற்றி பேசுறீங்க... நாங்க எதாச்சும் சொன்னாலும் எதுப்பீங்க..." சிக்கன் லெக்பீசைக் கடித்தபடியே கேட்டார் அவர்.

"அப்படியில்லைங்க... நானெல்லாம் ஒரு கட்சி சார்ந்தவன் இல்லைங்க... எல்லாரையும்தான் பேசுவேன்.." சிரித்தான் அவன்.

'இந்தாளு லெக்பீசைக் கடிச்சமா... போயி தூங்குனோமான்னு இல்லாம... தேவையில்லாம வாயை விடுறாரு... இன்னைக்கு வச்சிச் செய்யப்போறான் இவன்' என்று நினைத்தபடி தயிர் பச்சடியில் வெங்காயத்தை கிளறியபடி சிரித்தான் சமையல்.

"ஏன் சிலிக்கிழீங்க...? காலசாழ்மா  பேசினாத்டானே போழ்ட சலக்குக்கு ஊழுகாய் சாழ்ப்ட மாதிலி இழுக்கும்..." வந்திருந்தவர்களில் சுருட்டைமுடி  வாய்க்குள் சோற்றோடு சரக்கின் மகிமையால் குழறிப் பேசினார்.

"அது சரி... ஏறிடுச்சுல்ல... இனி என்ன... காவடி எடுத்துட வேண்டியதுதான்..." என்றான் சமையல்.

"இந்த விஜயகாந்த் அன்னைக்கு கூட்டணி இல்லைன்னாரு... இன்னைக்கு கூட்டணி வைப்போங்கிறாரு... அவரு நம்ம மச்சான் மாதிரி சரக்கடிச்சிட்டு உழறுவாரு போல..."


"யாழ் ஒழல்லா... நாங்கழ்லாம் எப்பயும் சடி மாப்ளே... ஆக்சுவலி ஐ... ஆம்... "

"சாமி பிரியாணியைச் சாப்பிடு..."

"அன்னைக்கு எல்லாரும் கூப்பிடும் போதாச்சும் இந்தாளுக்கு எதோ மதிப்பு இருந்துச்சு... இன்னைக்கு எல்லாரும் கதவடைச்சிட்டானுங்க... இனி இவரு ஜீரோதான்..." அவர் பேச ஆரம்பித்தார்.

'ஆடு சிக்கிருச்சு...' என்று நினைத்தவன் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

"ஆமாங்க... விவரமில்லாத ஆளு..."

"யாருக்குங்க விபரம் இல்லை... அவனுக்கா... அவன் அம்மாக்கிட்ட மொத்தமா பொட்டி வாங்கிட்டான்... இப்ப கட்சிக்காரனுங்கதான் பாவம்.." அவருக்கு விஜயகாந்தைப் பேசுவதென்றால் அல்வா சாப்பிட்டது போல.

"பொண்டாட்டி, மச்சினன்னு குடும்ப அரசியல்ங்க... அவனெல்லாம் மக்களைக் காக்க வந்த தலைவனாம்... மக்கள் தலைவன்னா அது எங்க தலைவர் கலைஞர்தாங்க... தொண்ணுறு வயசுலயும் மக்களுக்கு உழைக்க நினைக்கும் உத்தமனுங்க..." வந்தவர்களில் போலீஸ் தொந்தி பிரியாணியின் காரத்தை நெற்றியில் வியர்வையாய் சுமந்து பேசியது.

"எங்க எல்லா அரசியல் கட்சியும் குடும்ப அரசியல்தானுங்க... ஏன் கலைஞர், ராமதாஸ் இப்படி எல்லாமே குடும்ப அரசியல்தானேங்க... ஏன் ஜெயலலிதா கூட குடும்ப அரசியல்தாங்க...வைகோ மகனை சிகரெட் விக்க விட்டுட்டாரு.. திருமாவுக்கு கல்யாணம் ஆகலை... கம்யூனிஸ்ட்டுங்க குடும்பத்தை இழுக்கலை... அதனால மக்கள் நலக்கூட்டணி வேணுமின்னா குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்டு நிக்கலாம்..." என்றான் அவன்.


"அட என்னங்க நீங்க... அரசியல் தெரியாம அரசியல் பேசுறீங்க... ஜெயலலிதாவுக்கு குடும்பமே இல்லை... ஷோபன் பாபு, எம்.ஜி.ஆரெல்லாம் இந்த அம்மாவுக்கு குடும்பம் எங்கங்க அமைச்சுக் கொடுத்தாங்க... அதான் அநாதையின்னு வாட்ஸ்அப்ல அழுது புலம்புச்சே... மக்கள் நலக் கூட்டணி குடும்ப அரசியல் இல்லைங்க... குழப்ப அரசியல்..." கலைஞரின் விசுவாசி தொந்தி சொல்லிவிட்டு கையிலிருந்த டம்ளரில் ஒரு உறிஞ்சு உறிஞ்சிவிட்டு சிக்கனைக் கடித்தது.

"நல்லாக் கேளுங்க... நான் கேட்டாத்தான் சண்டைக்கு வருவாரு... இப்படித்தான் சம்பந்த சம்பந்தமில்லாம சண்டைக்கு வருவாரு..." என்றார் அவர்.

"என்ன சண்டைக்கு வந்துட்டேன்... ஜெயலலிதாவுக்கு குடும்பம் இல்லையா... அப்ப சசிகலா யாரு... தோழியின்னு சொல்லிக்கிட்டு இன்னைங்க அந்த அம்மா குடும்பம்தானே ஆளுது... அந்த அம்மா தங்கச்சி, தம்பியின்னு மன்னார்குடியே ஜெயலலிதாவை வச்சி வாழலையா... விஜயகாந்தை மட்டும் பேசுறீங்க..."

"அழுசலி மாப்ள... நீழ்ங்க... பாலிண்டப் பிழிச்சிட்டிய... ஆக்சுவலி நா சொழ்ல நிலைச்சேன்..." என்றார் சுருட்டை முடி.

"சரிங்க... தனியா நிக்கிறேன்னு இன்னைக்கு கட்சி ஆபீசில தனியா நிக்கிறானாமே... இது எவ்வளவு பெரிய கேவலம்.." சிரித்தார் அவர்.

"மக்கழேயை விட்டுட்டீங்க... இது எவ்வளவு பெரிய கேவலம் மக்கழே... அப்படின்னு சொல்லணும்... அதுலதான் கிக்கு" சிரித்த போலீஸ் தொந்திக்கு உள்ளே போன சரக்கு வேலை செய்தது.

"இதுல என்னங்க கேவலம் இருக்கு... பாமக, நாம் தமிழர் எல்லாம் தனியா நிக்கும் போது தேமுதிக தனியா நின்னா என்ன..."

"தனியா நிக்க தில் வேணும்... தள்ளாடுற ஆளெல்லாம் தனியா நிக்கவே முடியாது..." சொல்லிச் சிரித்தார்.


"என்ன நக்கலா...? மாற்றம் முன்னேற்றம்ன்னு சொல்லி வாயில மைக்கை வச்சிக்கிட்டு அந்நியன் மாதிரி பேசினா மட்டும் போதுமா...? அந்த கட்சிக்காரங்க யாரும் குடிக்கலையா என்ன...? விஜயகாந்த் தண்ணி போட்டதை நீங்க பாத்தீங்களா...?" சற்றே குரலை உயர்த்தினான் அவன்.

"ஏப்பா... சாப்பிடுங்கப்பா... அரசியல் எல்லாம் நமக்கு வேண்டாம்... பிரியாணி அரிசி நல்லா வெந்திருக்கான்னு பாருங்க..." என்றான் சமையல்.

"ஏங்க நாங்க மாற்றத்தை கொண்டு வரமாட்டோமா... ஒரு தடவை எங்களுக்கு ஓட்டுப் போட்டுத்தான் பாருங்களேன்... சும்மா எப்பப்பாரு எங்களை சாதிக்கட்சியின்னு கட்டம் கட்டுறீங்க..." எடுத்த சிக்கனை கடிக்காமல் கையில் வைத்துக் கொண்டு காரமாகப் பேசினார் அவர்.

"ஆமாமா... அதான் ஆணவக் கொலை குறித்து கேட்டதுக்கு ஆணவமாச் சிரிச்சிட்டுப் போனாரு... அட போங்கங்க... சாதிக்கட்சிகள் எல்லாம் சாதிங்கிற குறுகிய வட்டத்துக்குள்ளதான் இருக்கும்... அதைத் தாண்டி வரவும் செய்யாது... அந்த சாதிக்காரனுகளை வளரவும் விடாது... பேசாம சாப்பிட்டுப் போயி படுங்க... இல்லேன்னா கலைஞர் மாதிரி மானாட மயிலாட பாருங்க... உங்களுக்கெல்லாம் அரசியல் சரிவராது..." என்றான் அவன்.

"இப்ப என்னங்க... பெத்தவனுக்குத்தாங்க தெரியும் தன்னோட பிள்ளை ஓடிப்போன வலி... அது அவனை அருவா எடுக்க வைக்கிது.. நீ வேற சாதியில கல்யாணம் பண்ணிக்கிட்டு வா... நம்ம அமைப்பு உனக்கு எல்லாம் செய்யும்ன்னு ஏங்க ஏத்திவிடுறீங்க... படிச்சு நல்ல வேலையில இருக்கணும்... உன்னை காடு, கழனியில வேலை பாத்து... ஆடு மாடு மேய்ச்சு படிக்க வைச்ச ஆத்தா அப்பனுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும்ன்னு ஏன் சொல்லிக் கொடுக்க மறுக்குது இந்த சாதி... சும்மா அவரு சிரிச்சாரு... இவரு சிரிச்சாருன்னு... வலியை சுமந்த இதயங்களுத்தாங்க தெரியும்... அரசியல் பண்றதுக்காக கேள்வி கேக்கக் கூடாது... ஏன் இதை ஜெயலலிதாகிட்ட கேக்க வேண்டியதுதானே..."


"அது சரி... உங்க வாதம் நல்லாயிருக்கு... ஆஊன்னா அம்மாவை கேளுன்னு சொல்லிடுவீங்க... இந்த விஜயகாந்த்..." அவனை பேசவிடாமல் இடைமறித்த சமையல், "ஏய் ஆளாளுக்கு தண்ணி போட்டிருக்கானுங்க... பேச்சு வேற மாதிரி போகுது... பேசாம சாப்பிட்டு இழுத்துப் போர்த்திக்கிட்டு படு.." என்று அவனிடம் சொல்லிவிட்டு அவரைப் பார்த்து "அண்ணே அவன் எதாவது பேசுவான்... நீங்க பேசாம சாப்பிடுங்க" என்றபடி சிக்கன் பிரியாணியை தட்டில் வைத்து தயிர் பச்சடி எடுத்தான்.

சுருட்டை முடி 'உவ்வே' என்றான். அவனது தட்டில் இருந்த பிரியாணிக்குள் கலவைச் சாதம் சிரித்தது. "போங்கடா... நீங்களும் உங்க அரசியலும்... கஷ்டப்பட்டு சமைச்சவன் நானு... சந்தோஷமா சாப்பிட விட்டிங்களா...? வாராவாரம் இதே பொழப்பாப் போச்சு... ஓவராகுதுன்னு சொன்னா கேக்கமாட்டானுங்க..." எனக் கத்தியபடி தட்டை எடுத்துக் கொண்டு கை கழுவப் போனான்.

(நன்றி : படங்கள் இணையத்திலிருந்து)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 11 மார்ச், 2016

வாக்காளர் அலப்பறை...2

வன் அறைக்குள் நுழையும் போது காரசாரமான அரசியல் அரட்டை அரங்கேறிக் கொண்டிருந்தது. அவனைப் பார்த்ததும் அவர் ஹெட்செட்டை எடுத்து மாட்டப்போனார். புதியவர் ஒருவர் காலியான கட்டிலில் அமர்ந்திருந்தார். அறை நிர்வாகி, இவருதான் நம்ம அறைக்கு புதிதாக வந்திருக்கிறார் என்று அவனுக்கு புதியவனை அறிமுகம் செய்து வைத்தார். சம்பிரதாய 'ஹாய்'க்குப் பிறகு அவன் உடை மாற்றி, பாத்ரூம் போய் கைகால் முகம் கழுவி வந்து தனது கட்டிலில் அமர்ந்தான்.

"இப்ப பாத்தீங்கன்னா.. இந்த விஜயகாந்த் பேரம் படியிறதுக்கு முன்னாலயே அம்மாக்கிட்ட பெட்டியை வாங்கிக்கிட்டு தனியா நிக்கிறேன்னு சொல்லிட்டான்..." என்று அவர் புதியவனிடம் சொன்னார்.

"இருக்காதுங்க... அவர் பெட்டி வாங்குற ஆள் மாதிரி தெரியலைங்க... சும்மா அவரு இப்படிப்போனா அப்படின்னும் அப்படிப்போனா இப்படின்னும் கிளப்பிவிடுறாங்க... என்ன இருந்தாலும் அந்தாளுக்கு பின்னால இருந்து அவரை சரியாச் செயல்பட வைக்க யாரோ ஒரு ஆள் இருக்கான்..." புதியவன், பெரிய அரசியல் விரும்பி போல, இனி தேர்தல் வரைக்கும் இவனுங்க தந்தி, புதிய தலைமுறை, சத்தியம் தொலைக்காட்சிகள் மாதிரி விவாதம் நடத்தியே கொல்லப் போறானுங்களே என்று நினைத்தபடி நீட்டி நிமிர்ந்து படுத்தான் அவன்.

"என்னத்தங்க செயல்பட்டான்...  எல்லாம் பொண்டாட்டியும் மச்சினனும்தான்... பேசி முடிச்ச்சிட்டானுங்க....ஐநூறு கோடி தர்றேன்னு கலைஞர் சொன்னாரம்... அதுவும் ஒரே பேமெண்ட்டா... அதுக்குள்ள பிரேமலதா அம்மாக்கிட்ட அதுக்கும் மேல பேசி முடிச்சிட்டாளாம்... எல்லாப் பயலும் களவாணிப் பயலுகதான்...." என்றார் அவர்.

'இந்தாளு அடங்கமாட்டான் போலவே...' என்று நினைத்து 'ஏதோ பேச வாயெடுத்தவன், வேணான்டா வீணாவுல பிரச்சினையை இழுக்காதே'ன்னு பக்கத்தில் கிடந்த புத்தகத்தை பிரித்து படிக்கலானான்.

"எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்துட்டானுங்க.. இந்த விஜயகாந்த் காசை வாங்கிக்கிட்டு தனியின்னு தொண்டர்களை ஏமாத்துறான்... இவனெல்லாம் ஒரு அரசியல்வாதி... கேவலமான அரசியல்வாதிங்க... எனக்கு முன்ன இவனை ரொம்ப பிடிக்கும்... இப்பல்லாம் சீமான்தான்..." என்றார் அறை நிர்வாகி.

"விஜயகாந்த் ஒரு கிறுக்கனுங்க... திமுக போனான்னா... அப்புறம் வைகோ நிலமைதான்... ஒண்ணுமில்லாமப் போக வேண்டியதுதான்... இப்ப தனியன்னு வேற சொல்லிட்டான்... ஆள் காணமப் போகப்போறான்... இவனுக்கு பேசவும் தெரியலை... கட்சி நடத்தவும் தெரியலை... இவனெல்லாம் ஒரு தலைவர்..." என்றார் அவர் அறை நிர்வாகி கொடுத்த லீடைப் பிடித்துக் கொண்டு சந்தோஷமாய்.

"அவனுக்கு கட்சி நடத்தத் தெரியலைன்னா விவரமாப் பேசுற நீங்க ஒரு கட்சி ஆரம்பிக்கலாமே?" புத்தகத்தை வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தான் அவன்.

"இவரு ஒருத்தரு சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டு... அரசியல் தெரிஞ்சாப் பேசணும்..." சூடானார் அவர்.

"அது சரி... அப்ப நீங்க அரசியலைக் கரைச்சிக் குடிச்சிருக்கீங்க... சரி... சரி... பொலிட்டிக்கல் சயின்ஸ் படிச்சிட்டுத்தான்... ஆபீஸ்ல கம்ப்யூட்டரையும் பிரிண்டரையும் கட்டிக்கிட்டு கெடக்கீங்களாக்கும்... பேசுங்க... நமக்கு அரசியல்ல அரிச்சுவடு தெரியாது.. நீங்க தெரிஞ்சவங்க பேசுங்க..." கடுப்பாகச் சொல்லி விட்டு மீண்டும் படுத்து புத்தகம் வாசித்தான்.

"ஏம்ப்பா... எப்பவும் அவரு கூட மோதிக்கிட்டு... நம்ம ரூமுக்குள்ள நாமெல்லாம் பேசிக்கிட்டு இருக்கதே அரிது. ஏதோ அரசியல் பேசுறதால எல்லாரும் பேசிக்கிறோம்... இல்லேன்னா ஊருக்குப் பேசவும்... கம்ப்யூட்டர்ல படம் பாக்கவுமாத்தானே நாங்க பொழுதை ஓட்டுவோம். நீ ஏதாவது புக்குப் படிச்சே ஓட்டிருவே... சத்த நேரம் சும்மா இருவே..." என்றார் அறை நிர்வாகி.

"சரிங்க... நீங்க பேசுங்க... நான் ஒண்ணும் பேசலைங்க.." என்றான் அவன்.

"இந்த விஜயகாந்த் திராவிடக் கட்சிகள் மேல மாறி மாறி சவாரி செஞ்சு வைகோ மாதிரி காணமப் போகப்போறான்னு பார்த்தேன்... ஆனா தனியா நிக்கிறேன்னு தனக்குத்தானே மண் அள்ளிப் போட்டுக்கிறான்" தனக்கு ஆதரவாக அறை நிர்வாகி பேசிய சந்தோஷத்தில் மீண்டும் விஜயகாந்தை இழுத்தார் அவர்.

"என்னங்க சொல்றீங்க... திராவிடக் கட்சிகள் மேல சவாரி செஞ்சி வைகோ மட்டும்தான் காணாமப் போனாரா?" புதியவன் கேட்டான்.

"இல்லைங்களா பின்னே... ரெண்டு பேருக்கும் இவர்தான் மாற்றுன்னு நினைக்கும் போது பெட்டிக்கு ஆசைப்பட்டு இங்கிட்டும் அங்கிட்டுமா மாறி மாறி சுத்தமா அழிஞ்சிட்டாரா இல்லையா?"

"என்னங்க சொல்றீங்க... வைகோ மட்டும்தான் மாறி மாறி அழிஞ்சாரா..? வேற யாருமே மாறி மாறி சவாரி பண்ணலையா..?" இது அறை நிர்வாகி.

"வேற யாருங்க... வைகோ மட்டுந்தான் பெட்டிக்கு மயங்கினாரு... இப்ப விஜயகாந்த்..."

"ஏங்க அப்ப பாமக, விசிக, காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட் அப்புறம் லொட்டு லொசுக்கு கட்சிங்க... என எல்லாருமே திராவிடக் கட்சிகள் மேல சவாரி பண்ணி சாஞ்சி போயித்தானே கிடக்காக... வைகோவும் விஜயகாந்தும் மட்டுமா சவாரி பண்ணினாங்க..."

"காங்கிரஸ், பிஜேபியை விடுங்க... மத்தவங்க சவாரி பண்ணினாலும் தனக்குன்னு ஓட்டு வங்கி வச்சிருக்காங்க... கட்சியை வளர்த்திருக்காங்க... ஆனா வைகோ... இப்ப ஒன் மேன் ஆர்மி மாதிரி ஆயிட்டாரு..."

புதியவன் சிரித்தான்... 

"எதுக்கு சிரிக்கிறீங்க.. உண்மையைத்தானே சொல்றேன்..."

"பின்னே என்னங்க... யாருக்குங்க ஓட்டு வங்கி இருக்கு... ஒன்றை சதவீதமெல்லாம் ஒரு ஓட்டு வங்கியா...? அட ஏங்க ஜோக் அடிச்சிக்கிட்டு... உங்களுக்கு பிடிச்ச கட்சிங்க மாறி மாறி சவாரி பண்ணினாலும் தகுதியோட இருக்காங்கன்னு சொல்றீங்க... மத்தவங்க மாறி மாறி சவாரி பண்ணி தகுதியை இழந்துட்டாங்கன்னு சொல்றீங்க... நல்லாயிருக்கு உங்க நியாயம்..?"

"அதானே... என்னங்க நீங்க.. சீமான் அடுத்த முதல்வர் நாந்தான்... இதை இதை இப்படி இப்படி பண்றோம்... சிங்கள மீனவனைப் பிடிச்சி சிறையில போடுறோம்... அப்புறம் அவன் வந்து எங்கிட்ட எங்காளுங்களை விடுங்கன்னு கைகட்டி நிப்பானுல்லன்னு ஒரு பேட்டியியல் சொல்லிட்டு, திமுக - அதிமுகவை யாராலும் ஜெயிக்க முடியாது. நான் மக்கள் நலக் கூட்டணியை விட அதிக ஓட்டு வாங்குறேன்னு தந்தி டிவி விவாதத்துல சொன்னாரே அது மாதிரி பேசுறீங்க..." என்றார் அறை நிர்வாகி.
"உண்மைதானேங்க... இன்னைக்கு மாற்றம் முன்னேற்றமுன்னு சில பேர் கிளம்பியிருக்காங்கதானே... ஏன் ஒரு தடவை ஆட்சியைக் கொடுத்துப் பார்க்கக் கூடாது... வித்தியாசமானவங்க வரட்டுமே..." என்றார் அவர்

"யாருங்க வித்தியாசம்...? எல்லாருமே ஒரே குட்டையில ஊறின மட்டைதான்... சரி மாற்றம் முன்னேற்றம்... நாங்கதான் முதல்ல சொன்னோம்ன்னு சொல்றாங்க... அதை ஓபாமாதானே முதல்ல போட்டாரு... நாம காப்பிதானே பண்ணினோம்..." என்றான் புதியவன்.

புத்தகம் படிப்பது போல் மூவரின் விவாதத்தை கேட்டுக் கொண்டிருந்தான் அவன். மனசுக்குள் '[லூசுப் பயலுக, இந்த ரங்கராஜ் பாண்டே இவனுகளை வச்சி ஒரு விவாதம் நடத்தலாம்... என்னமாப் பேசுறானுங்க... சீமான் மாதிரி...' என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.

"நீங்க வேற நம்ம சரத்குமார் 'மாற்றத்தை நோக்கி' அப்படின்னு போட்டதைப் பார்த்துத்தான் ஓபாமாவே போட்டாராம்... ஒரு பேட்டியில ஓபாமாவுக்கே நாந்தான் முன்னோடியின்னு சொன்னாரு..." என்றார் அறை நிர்வாகி.

"சரத்குமார், கார்த்திக் எல்லாம் கட்சி நடத்துறது நடிப்பு மாதிரியின்னு நினைச்சிட்டானுங்க... அப்ப அப்ப எதாவது பேசி சிரிக்க வைக்கிறதே வேலையாப் போச்சு... இப்ப இதுல வைகோவும் விஜயகாந்தும் சேர்ந்தாச்சு.." என்றார் அவர். அவரின் டார்க்கெட் விஜயகாந்தும் வைகோவும்தான் என்பது அவரின் பேச்சில் தெரிந்தது.

"உங்க எண்ணத்துல இருக்கிற கட்சி தவிர மத்தவங்க எல்லாமே சரியில்லைன்னு சொல்றீங்க.."

"பின்னே என்னங்க... உண்மையைத்தானே சொல்றேன்... மநகூ கூட அதிமுக பி அணிதான்... நீங்க வேணுன்னா பாருங்க... தேர்தலுக்குள்ள கூட்டணியைக் கழச்சிட்டு அம்மாக்கிட்ட போறாங்களா இல்லையான்னு... விஜயகாந்துக்கு பொட்டி போயாச்சு... அவன் தனியா நின்னு சரக்கடிச்சு சாவான்... இல்லாட்டி பொண்டாட்டியும் மச்சினனும் தூக்கிப் போட்டு மிதிச்சிக் கொல்லுவாங்க... சீமான் சும்மா தமிழன் தமிழன்னு கூவிட்டு குப்புறப்படுத்துருவான்... இன்னைக்கு திராவிடத்துக்கு மாற்று ஒரே கட்சிதாங்க... இந்த தேர்தல்ல இல்லாட்டியும் 2021 அவங்க ஆட்சிதாங்க.. அதுல மாற்றம் இல்லை... நீங்க எழுதி வச்சிக்கங்க...." வேகமாய்ப் பேசினார் அவர். புதியவன் இதற்கு மேல் இவரிடம் பேச முடியாது என துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கக் கிளம்பினான். 

"அட ஏங்க நீங்க வேற... சுத்தி சுத்தி அங்கதான் வாறீங்க..." என அறை நிர்வாகி அலுத்துக் கொண்டார்.

புத்தகத்தை வைத்து விட்டு எழுந்த அவன் "சோ சாகக் கிடக்கிறாராம்... அரசியல் சாணக்கியன் இடம் காலியா இருக்காம்... இவ்வளவு விவரம் தெரிஞ்ச நீங்க, சும்மா இங்க ஒரு அறைக்குள்ள கிடந்து ஒண்ணுமில்லாம காலம் தள்ளக்கூடாது. போங்க... அங்க போயி சோ இடத்தைப் பிடிங்க... தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தியாக மாறலாம்... " என அவரிடம் சொல்லிவிட்டு, "என்னங்க அறையில இருக்கணுமா... இல்ல அறை மாறணுமா... என்னால முடியலை... மாற்றம்... முன்னேற்றம் எல்லாம் தமிழகத்துல வரட்டும்... இங்க இப்ப கண்டிஷன் ரொம்ப இறக்கத்துல இருக்காம்... நமக்கு ஏற்றம் வருதான்னு பார்ப்போம்... சும்மா அரசியல் பேசுறேன்னு வெறுப்பேத்தாதீங்க... அவனவன் சைட்டுல வெயில்ல கிடந்து செத்துப் போயி வர்றான்..." என அறை நிர்வாகியிடம் சொன்னான்.

நிர்வாகி சிரித்துக் கொண்டே "இருங்க சுலைமானி போட்டுக்கிட்டு வாறேன்..." எனக் கிளம்ப, அவரோ வாய்க்குள் முணுமுணுத்தபடி 'சூப்பர் சிங்கர்' பார்க்க ஆரம்பித்தார். 

"நான் யாரு...? நான் யாரு...? கொய்யால நான் யாரு....? நான் ராஜா... " என அவனின் மொபைல் அடிக்க, எடுத்து "என்ன மாப்ள..." என்றான். எதிர்முனை ஏதோ சொல்ல, "ஏலே... அங்கயும் இதானா... சைட்ல முசிறிகூட மல்லுக்கட்டிட்டு வந்தா... அரசியல் பேசியே கொல்றானுங்கடா... இவனுக ஒரு பய ஓட்டுப் போட போகமாட்டான்... பேச்சு மட்டும் சீமானைவிட வெறியாப் பேசுறானுங்கடா... முடியல... இவனுககிட்ட இருக்கதுக்கு பெங்காலி கூட இருக்கலாம்... கிரிக்கெட்டப்போ மட்டும்தான் நம்மளை எதிரியாப் பாப்பானுங்க..." என்றபடி அவரைப் பார்த்தான். அவர் 'நேத்து ராத்திரி... யம்ம்மா...' பாடும் ஆறு வயசுக் குழந்தையின் குரலில் லயித்து சிரித்துக் கொண்டிருந்தார். இனி இடியே விழுந்தாலும் எழ மாட்டார் என்பது தெரியும் என்பதால் புத்தகத்தை எடுக்க, அறை நிர்வாகி சுலைமானியோடு வந்தார்.

-'பரிவை' சே.குமார்.