மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 24 ஜூன், 2016

மனசின் பக்கம் : சுகந்தானுங்களே...

ல்லாரும் எப்படியிருக்கீங்க நட்புக்களே...

ரில் இருந்து வந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் ஊரின் நினைவுகளே மனசெங்கும் ஊர்ந்து கொண்டிருப்பதால் எதிலும் மனசு ஒட்டவில்லை. கடந்த முறை எல்லாம் ஒரு வாரத்தில் மீண்டும் அபுதாபி மனிதனாகி விடுவேன். ஆனால் இந்த முறை இன்னும் இன்னும் வீட்டு நினைவுகள் என்னுள்ளே துளிர் விட்டு வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த முறை அபுதாபி வரும் எண்ணமே மனதிற்குள் எழவில்லை. கடைசி நிமிடத்தில் வேகவேகமாக சாமான்கள் பேக்கில் நிரப்பினேன். முப்பது கிலோ கொண்டு வர வேண்டிய இடத்தில் பதினோரு கிலோ மட்டுமே எடுத்துக் கொண்டு பேருந்தில் திருச்சி விமான நிலையம் வரும்போதெல்லாம் திரும்பி போய்விடலாமா என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. கடன்களை முடித்து விட்டு விரைவில் ஊரில் போய் ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த முறை ரொம்ப அதிகமாயிருச்சு... போதும் குடும்பத்தை பிரிந்த வாழ்க்கை என்ற எண்ணம் ஒவ்வொரு விடுமுறைக்குப் பின்னும் ஏற்படுவதுதானே என்று கில்லர்ஜி அண்ணன் போன்றோர் நினைக்கலாம்... இந்த முறை தெளிவான எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இன்னும் இரண்டு வருடங்கள் கஷ்டப்படத்தான் வேண்டும். பார்க்கலாம்.. விரைவில் இந்த வாழ்க்கையிலிருந்து விடுபடணும்...

னசு எதிலும் ஒட்டாத நிலையில் கணிப்பொறியில் கூட எதையும் பார்க்கும் எண்ணம் வரவில்லை... கில்லர்ஜி அண்ணாவின் இரண்டு பதிவுகளுக்கு முந்தைய பகிர்வு, செல்வராஜூ ஐயாவின் பகிர்வு என இரண்டை மட்டுமே வாசித்து கருத்திட்டேன். சில நேரம் முகப்புத்தகத்தில் அலைந்து சிலருடன் அரட்டை அடித்து கொஞ்சம் என்னைப் புதுப்பித்துக் கொண்டேன். சிறுகதைப் போட்டிக்கு பரிசாக அகல் மின்னிதழ் ஆசிரியரும் நண்பருமான சத்யா ஜி அவர்கள் அனுப்பிய இரண்டு புத்தகங்களையும் எடுத்து வந்திருந்தேன்.பெரும்பாலான நேரங்களை அ. முத்துலிங்கம் எழுதிய 'கடவுள் தொடங்கிய இடம்' விழுங்கியது. வாசிக்க வாசிக்க ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் எழுத்து... இலங்கைத் தமிழில் நம்மை கட்டிப் போட்டு... நிஷாந் பின்னாலேயே இலங்கையில் இருந்து கனடாவுக்கு நாடு நாடாக கடந்து செல்ல வைக்கிறது. அருமையானதொரு நாவல்... கொடுத்த நண்பருக்கு நன்றி.

பாக்யா வார இதழில் 'திருமண ஒத்திகை' என்னும் தொடர்கதை எழுதும் ஆர்.வி.சரவணன் அண்ணன் அவர்கள் 'உறியடி' படம் குறித்து எழுதியதைப் படித்து அந்தப் படத்தைப் பார்த்தேன். படிக்கும் மாணவர்கள் சதா தண்ணி... தண்ணி... என இருப்பதையும் சாதி வெறியையும் சொல்லும் படம். கடைசியில் பாடம் சொன்னாலும் மாணவர்கள் படிப்பதையும் காட்டியிருக்கலாம். ஆனாலும் படம் நல்லாத்தான் இருக்கு. அறிமுக இயக்குநருக்கு வாழ்த்துக்கள். இப்ப சரவணன் அண்ணனைப் பற்றி, அண்ணே நான் ஊருக்கு வந்திருக்கேன் என்று சொன்னதும் 'குமார் இந்த முறை நீங்க சென்னை வாறீங்க.. நான் அரசன், ஆவிக்கிட்ட எல்லாம் சொல்லிடுறேன்... ஒருநாள் சந்திக்கிறோம்... உங்களை நான் கண்டிப்பாக பார்க்க வேண்டும்' என்றார். சரி என்று சொன்னாலும் சூழல் என்னை எங்கும் போகவிடவில்லை... மீண்டும் அபுதாபி திரும்பும் அன்று காலை போனடித்தேன்... கிடைக்கலை... பின்னர் அடித்தேன்... பேசினார் சரியாக கேட்கலை... சென்னை விமான நிலையத்தில் வந்து பேசினால் அவர் இரயிலில் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். சொல்லியிருந்தால் இருந்து சந்தித்துவிட்டு வந்திருப்பேனே என்று புலம்பினார்... எனக்கும் வேதனையாகத்தான் இருந்தது... கண்டிப்பாக சந்திப்போம் அண்ணா என்று சொல்லி வைத்தேன் எப்படியும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்...

ருக்கு வந்திருக்கீங்களா..? நீங்க இங்கு வர வேண்டும்...? எப்போ வாறீங்க...? முகநூலில் வந்து விழுந்த வாசகங்களுக்கு சொந்தக்காரர் அன்பு அண்ணன் புதுக்கோட்டைக் கவிஞர் செல்வக்குமார் அவர்கள். கொஞ்சம் வேலை அடுத்த வாரம் வருகிறேன் எனச் சொல்லி போன் நம்பர் வாங்கினேன். அதன் பின்னான நிகழ்வுகள் எங்கும் செல்ல முடியாத சூழலை எனக்கு அளித்தது. செல்வா அண்ணனுடன் போனில் கூட பேசவில்லை. அங்கிருந்து இங்கு வந்தும் கூப்பிடவில்லை... ஒரு வழியாக இன்றுதான் அவரைக் கூப்பிட்டேன்... கொஞ்ச நேரமே பேசினேன். நான் வரவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் நம் மக்களுக்கே உரிய வாஞ்சையோடு பேசினார்... அந்தப் பாசமான பேச்சைக் கேட்டதும் இவர்களை எல்லாம் சந்திக்காமல் வந்து விட்டோமே என வருத்தம் மேலிட்டது. எப்படியும் சந்திப்போம் அண்ணா.

புத்தகம் போட வேண்டும்... அது குறித்து பேச வேண்டும் என்று கிளம்பியவன் ஊரில் ஒன்று மாற்றி ஒன்றென நிகழ்வுகள் வர, பொருளாதார சிக்கல் எழுந்த நிலையில் அது குறித்தான பேச்சை எடுக்கவேயில்லை... புத்தகம் போடுவது என்பது கனவாகிப் போகும் போல.

ன்னை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காக எழுதியது இது... அப்ப அப்ப எழுதுவேன்... மாற்றங்கள் வரும்வரை மனசு மெதுவாகத்தான் பயணிக்கும். நன்றி.
-'பரிவை' சே.குமார்.