மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 ஆகஸ்ட், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 79

முந்தைய பதிவுகளைப் படிக்க... 



79.  வசந்தத்தை நோக்கி

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். பிர்ச்சினைகள், சந்தோஷம், போராட்டம் என அவர்களின் காதல் எல்லாவற்றையும் சந்தித்து புவனா குடும்பத்தில் ஏற்கமாட்டார்கள் என்பதால் ஊரை விட்டு ஓட முடிவு பண்ண அம்மா ஆசிர்வாதத்தில் அண்ணன் வழியனுப்ப ராம்கியின் நண்பர்கள் உதவியுடன் வீட்டை விட்டு வெளியாகிறாள். 

இனி...

கார் வந்து நிற்கவும் காவேரியும் ராம்கியும் வாசலுக்கு ஓடி வந்தனர். காரின் பின்னிருக்கையில் இருந்து சரவணன் முதலில் இறங்க, அவனைத் தொடர்ந்து பழனி இறங்கினான், முன்பக்கமிருந்து அண்ணாத்துரையும் அறிவும் இறங்கினர். அவர்களை 'வாங்கடா' என்று சொன்ன ராம்கியின் கண்கள் புவனாவைத் தேடின.

பின்னிருக்கையில் இருந்து மெதுவாக இறங்கிய புவனாவைப் பார்த்ததும் அவளருகில் ஓடிச் சென்று கைகளைப் பிடித்துக் கொண்டு 'புவி' என்றவனுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டையை அடைத்தது. தனது துணையை அடைந்து விட்டோம் அவன் இப்போது தன்னருகில் இருக்கிறான் என்ற நினைப்பு புவனாவுக்குள் வர, 'ராம்' என்று கட்டிக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.

"டேய்... இது நம்மூரு இல்ல... டவுனு... அதுவும் கொஞ்சம் ஒதுக்குப்புறமான ஏரியா.... எல்லாரும் எட்டிப் பாக்குறானுங்க... என்ன ஏதுன்னு விசாரிப்பானுங்க... அப்புறம் சேகருக்குத்தான் பிரச்சினை எதுவா இருந்தாலும் உள்ள போயிப் பேசலாம்" என மெதுவாக அதே நேரம் சற்று கடுமையாகச் சொன்னான் அண்ணாத்துரை.

"அண்ணே... காரை அப்படிப் போட்டுட்டு வாங்க... " என டிரைவரிடம் சொன்ன சரவணன், "டேய் ராம்கி, சேவியர் எங்கடா வந்துக்கிட்டு இருக்கானாம்..."

"ஈவினிங்க்தான் கிளம்புறேன்னு சொன்னான்... காலையிலதான் வருவான்.." என்றவன் புவனாவின் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டான். எனக்கே எனக்கான என்னவள் எனக்காக எல்லாம் துறந்து... பாசமிகு அப்பாவையே விட்டுவிட்டு வந்திருக்கிறாள் என்ற நினைப்பு அவனுக்கு அவள் மீதான அன்பை இன்னும் அதிகப்படுத்தியது.

"ஆமா... சேகர் எங்கே?" பழனிதான் கேட்டான்.

"அவரா.... வேலை முடிஞ்சி டிரைன்ல வந்து அப்புறம் வண்டி எடுத்துக்கிட்டு வருவாரு... இப்ப வந்திருவாரு...." என்ற காவேரி. "சரி பின்னால கிணறு இருக்கு... பக்கத்துல பாத்ரூம் இருக்கு... எல்லாரும் ஒரு குளியலைப் போடுங்க... சூடா காபி சாப்பிடலாம்... அவரும் வந்துருவாரு..."

"கிணறா...?" அறிவு ஆச்சர்யமாகக் கேட்டான்.

"ஏங்க கிணறு நம்ம ஊர்ல மட்டும்தான் இருக்குமா என்ன? இந்த வீடு தனி வீடாவும் அதே நேரம் பின்னால கொஞ்சம் தோட்டம், கிணறுன்னு இருக்கதாலயும் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சு... அதான் டவுனுப்பக்கம் காலி பண்ணிப் போகாம இருக்கோம். அங்க போயி நெருக்கமான வீட்டுகளுக்குள்ள வாழ ரெண்டு பேருக்கும் இஷ்டமில்லை... பின்னால போயிப் பாருங்க.. எங்கூர்ல மாதிரி தோட்டம் போட்டு வச்சிருக்கோம்..." என்றாள்.

"அதுசரி... சேகர் இங்கயும் கிராமத்தானாத்தான் வாழ்றாரா?" கேட்டது பழனி.

"கிராமத்தாளைக் கட்டின எங்கண்ணன் அப்புறம் எப்படி இருப்பாரு?" சோகத்தினுடேயும் காவேரியைக் கிண்டல் செய்தாள் புவனா.

"ம்.. அண்ணி வேண்டாம்.... அப்பறம் கிராமத்துக்காரியோட வேலையைக் காட்ட வேண்டி வரும்... ஆமா... சரி.. சரி... நீங்கள்லாம் பின்னாடி தோட்டத்துப்பக்கம் போயி  குளிங்க... புவனா உள்ள குளிக்கட்டும்... கார்ல வந்த அசதி குளிச்சா கொஞ்சம் குறையும்..." என்று சொல்லி விட்டு அடுப்படிக்குள் நுழைந்தாள்.

"ராம்... நாம ஒண்ணு நெனச்சா... கடவுள் ஒண்ணு நினைக்கிறானே... இப்படி ஆயிருச்சே... உங்க கூட வாழப்போறோம்ங்கிற தைரியத்துல கிளம்பி வந்துட்டேன்.. ஆனா ஊர் முன்னால பெத்தவங்க கேவலப்பட்டு நிப்பாங்களேன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்குப்பா... திரும்பப்  போயிடலாம்ன்னு தோணுது..."

"எல்லாம் சரியாகும் புவி... கொஞ்சக் காலம் பொயிட்டா எல்லாம் சரியாகும்.. இனி திரும்பிப் போன ஆரத்தி எடுத்தா வரவேற்கப் போறாங்க... கவலையை விடு... இனி ஆகுறதைப் பார்ப்போம்..." என்று ராம்கி சொல்ல இருவரும் கொஞ்ச நேரம் தனிமையில் பேசட்டும் என மற்றவர்கள் வீட்டின் பின்பக்கமாகச் சென்றனர்.

"இப்ப இதுக்கு என்ன முடிவு... ஒண்ணு அவங்களை எங்க இருந்தாலும் பிடிச்சாந்து கண்டந்துண்டமா வெட்டணும்... இல்ல அவனோட குடும்பத்தை வேரறுக்கணும்... யாருவுட்டுப் புள்ளையை யாரு இழுத்துக்கிட்டுப் போறது... நம்ம சாதிக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல..." ஒரு மீசை துடித்தது.

"இங்க பாருங்க பெரியய்யா... அவனை மட்டும் குத்தம் சொல்லி நம்மபுள்ள நல்ல புள்ளைன்னு பேச முடியுமா? இவ விருப்பப்பட்டுத்தானே போயிருக்கா... அப்புறம் அவனோட குடும்பத்தை அழிக்கணும் அது இதுன்னு எதுக்குப் பேசிக்கிட்டு... அவன் நம்மளவிட கீழ இருக்குறவங்கிறதால குடும்பத்தை வேரறுக்கணுமின்னு சொல்றீங்க... இதே அவன் நமக்கு மேல இருக்குறவனா இருந்தா நாளக்கி காலையில அம்புட்டுப் பயலும் இங்க வந்துல்ல நிப்பானுங்க... குடும்பம்... அண்ணன்... தங்கச்சி... இதெல்லாம் விட்டுடுங்க... நமக்கு அவங்க ரெண்டு பேரு பொணமும் நம்ம மண்ணுல கிடக்கனும் அம்புட்டுத்தான்... அதுக்கு ஆகுறதைப் பாருங்க..." புவனாவின் அப்பா.

"அண்ணே... அவனோட ஆத்தாளைப் பிடிச்சி நாலு தட்டுத்தட்டினா அவன் தன்னப்போல வருவான்னே..." - சித்தப்பா

"ஏய்... நீ சும்மா இருப்பா.... அவனைத் தேட ஆளை விடு போதும்... நீ பாட்டுக்கு தேவையில்லாத பிரச்சினைகளை இழுத்து விட்டு போலீசு கீலீசுன்னு அழைய விட்டுறாதே... இது யாருக்கும் தெரியாம கமுக்கமா நடக்கணும்..." 

"அப்பா... அவங்களை இங்க கொண்டாந்து வெட்டுறதால என்ன வந்துடப் போகுது... சனியன் தொலஞ்சிச்சு... நமக்கு மானக்கேடுதான்... நான் இல்லைன்னு சொல்லலை... அவளுக்குப் புடிச்சி ஓடியிருக்கா... கஷ்டமோ நஷ்டமோ அவன் காப்பாத்துவான்னு நினைச்சிப் போயிட்டா... கழுத தொலஞ்சது தொலஞ்சதாவே இருக்கட்டுமே... புடிச்சாந்து வெட்டி... கருமாதி பண்ணி என்னத்துக்கு... அவளை இனி வாழ்நாள்ல பாக்கவே கூடாதுன்னு முடிவெடுங்க நல்லது... அதைவிட்டுட்டு வெட்டுறேன்... வெட்டுறேன்னு எல்லாரும் பேசினா எப்படி?" வைரவன் கோபமாய் பேசுவது போல் தங்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தான்.

"என்னப்பு நீ... வக்கீலுக்குப் படிச்சதால பாயிண்டோட பேசுவேன்னு பார்த்தா... பதுங்குறே.... பதுங்குற சாதியில்லப்பு நம்மது... இன்னைக்கு நம்ம வீட்டுப் புள்ள ஓடியிருக்கா... இதையே முன்னுதாரணமா எடுத்துக்கிட்டு அடுத்தடுத்துக் கிளம்பாதுன்னு என்ன நிச்சயம்...?" முகத்தில் வெட்டுப்பட்ட ஒருவர் வைரவனைப் பார்த்துக் கேட்டார்.

"மாமா... வக்கீலுக்குப் படிச்சதாலதான் இப்படிப் பேசுறேன்... பதுங்கவும் இல்ல... பாய வேண்டாம்ன்னும் சொல்லல... அவ ஒண்ணும் மைனர் கிடையாது. மேஜர்... அதைத் தெரிஞ்சுக்கங்க... வீட்டை விட்டு போனவங்க பக்கவா பிளான் பண்ணாமலா போவாங்க... நாளைக்கே தாலியக் கட்டிட்டு ரிஜிஸ்தர் ஆபீஸ்ல கல்யாணத்தை பதிஞ்சிட்டாங்கன்னா... பதிஞ்சிட்டாங்கன்னா என்ன பதிஞ்சிடுவாங்க... அப்புறம் நாம அவங்களைக் கொலை பண்ண முயற்சி பண்றோம்ன்னு போலீசுக்கிட்ட போனா நாமதான் மாட்டிக்கிட்டு முழிக்கணும்... இன்னைக்கு இங்க வாய்கிழிய பேசுறவனெல்லாம் களி திங்கணும்... தெரியுமா?"

"ஏ... ஏ.... என்னப்பு இப்படி மிரட்டுறீரு...இப்ப இதை என்ன பண்ணலாம்ன்னு சொல்றீங்க...." மீண்டும் மீசை கேட்டது.

"அவளை தலை முழுகிட்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம்... சன்னமா தேடுவோம்... என்னைக்காவது ஒரு நாள் இங்க வராமலா போயிருவான்... அன்னைக்கு காதும் காதும் வச்ச மாதிரி காரியத்தை முடிப்போம்... இப்போதைக்கு கொஞ்சம் ஆறப்போடுவோம்... இதுதான் என்னோட முடிவு... நீங்க என்னப்பா சொல்றீங்க..? " என அப்பாவை நோக்கினான்.

"தம்பி சொல்றதுதான் சரியின்னு படுது... பெத்தவங்க வேண்டான்னு போன நாயி இருந்தா என்ன செத்தா என்னய்யா... செத்துட்டான்னு தல முழுக்கிட்டு என்னோட ஒத்த மவனுக்கு ஜாம் ஜாம்ன்னு கலியாணத்தை வக்கிறேன்யா... இதை விட்டுத் தள்ளுங்கய்யா..." 

"அண்ணே.... இது நம்ம வீட்டு விசயம்... இவந்தான் சின்னபுள்ளத்தனமாச் சொல்றான்னா நீங்களும்..." மெதுவாக இழுத்தார் சித்தப்பா.

"இங்க பாரு தம்பி... இப்போதைக்கு இதை விடு... பேசலாம்" என அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். வைரவனுக்கு அப்பா உண்மையாத்தான் சொல்றாரா இல்லை எல்லார் முன்னாடியும் நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழாமல் இல்லை. வீட்டுக்குள் தலைவிரி கோலமாக மகள் என்ன பண்றாளோ ஒரு போன் கூட பண்ண நம்பர் இல்லையே என நினைப்பில் கண்ணீர் ஓட அமர்ந்திருந்த அம்மாவிற்கு கணவரின் பேச்சு சற்று ஆறுதலாக இருந்தது.

நாகம்மாவுக்கு சேகர் போன் பண்ணி சொன்னதும் 'என்ன பண்ணறானோ... ஏதும் பிரச்சினை வந்தா என்ன பண்ணப்போறானோ...' எனத் தவித்தாள். அம்மா அவனுக்கு ஒண்ணும் ஆகாது என சீதா சொன்னாலும் பெத்தமனசு பதறிக் கொண்டுதான் இருந்தது. 

"இங்க பாருத்தா... அந்த புள்ள மேல இருக்க பாசத்துலதான் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கான். அந்தப்புள்ளயும் எல்லாத்தையும் விட்டுட்டு நம்ம பய பின்னாடி போயிருக்குன்னா எல்லாம் ஒரு அதீத அன்புதான் காரணம்... பொம்பளப்புள்ள எல்லாத்தையும் விட்டுட்டு போயிருக்கும் போது நம்ம பயலப் பத்திக் கவலைப்பட்டுக்கிட்டு... ரெண்டு பேரும் நல்லாயிருக்கட்டும்... நீ ஒருவாட்டி அங்கன போயி அதுகளுக்கு ஆதரவா இருந்துட்டு வரலாம்... பயப்படாம இரு... மனசப் போட்டு அலட்டிக்காத..." என்று அண்ணன் முத்துவும் ஆறுதலாகப் பேசினார்.

"என்னமோண்ணே.... பெரியவனைப் பத்தி நா ரொம்பக் கவலப்பட்டது கெடயாது... இவனு படிச்சி ஒரு நல்ல நெலமக்கி வருவான்னு கனவு கண்டேண்ணே... இன்னைக்கு இப்படி வந்து நிக்கிது... சாதி சனத்துக்குத் தெரிஞ்சா எம்புட்டுக் கேவலம்... எதையுமே யோசிக்காம இப்படிப் பண்னிட்டானே... நாமளும் இது சரியில்லைன்னு எடுத்துச் சொல்லாம எடுத்தோம் கவித்தோமுன்னு அவம்போக்குல பொயிட்டோமேன்னுதான் வருத்தமா இருக்கு..."

"என்னத்தா... இப்படிப் பேசுறே... மாப்பிள்ளை பழகுதுன்னு தெரிஞ்சப்போ நாங்கூட கோபப்பட்டேன்... அப்புறம் அந்தப் புள்ளையை நேர்ல பாத்தப்போ அதுதான் நம்ம தம்பிக்கு ஏத்த புள்ளைன்னு தோணுச்சு... நாம பாத்தாக்கூட இப்படி பொருத்தம் அமையாது.... சாதிவிட்டு சாதி போறது பிரச்சினைதான்... அதுக்காக மனசு ஒத்துப் போனதுகள பிரிக்கிறது நல்லாயில்ல... எல்லாம் சரியாகும்...எது வந்தாலும் ஏத்துக்கலாம்... நம்ம புள்ள நல்லாயிருந்தாப் போதும்.. பெரியவனுக்கிட்ட நீ பேசு இல்ல அவம்பொண்டாட்டிய பேசச் சொல்லு... நாளக்கி எனக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலயின்னு சொல்லிடப்புடாது பாரு"

"என்னவோ சொல்றீக... மனசுதான் கேக்கலை... மூத்தவனுக்கு அந்தப்புள்ளய விட்டுப் பேசச் சொல்றேன்... அவ இப்ப ரொம்ப நல்லவளா இருக்கா..."

"எப்பவும் அவ நல்லவதான்... சேர்றவளுகதான் கெடுக்கிறது..."

சேகர் வந்ததும் கிளம்புறோம் என்று சொன்ன ராம்கியின் நண்பர்களை இருக்கச் சொல்லி காலையில் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம், வட பழனி கோவில்ல சாமி தரிசனம் மதியம் வெளிய சாப்பாடு என்று பேசி முடிவு செய்து சந்தோஷமாய் படுக்கச் செல்ல....

தே நேரம்...

'என்ன இவனுக எங்க போனோம்ன்னு சொல்ல வேண்டாம்... வழி அனுப்பி வச்சதுக்காகவாவது போன் பண்ண வேண்டாமா?' என வைரவனும், 'இன்னும் எனக்கு போன் பண்ண இவனுகளுக்கு முடியலையே?' என்று மல்லிகாவும் யோசிக்க...

'எம்மக என்ன பண்ணுறாளோன்னு...' புவனாவின் அம்மாவும் 'எம்மவன் என்ன பண்ணுறானோன்னு...' நாகம்மாவும் தூக்கம் வராமல் தவிக்க...

'அக்கா... அந்தச் சிறுக்கிய அப்பவே புடிச்சி எவனுக்காவது கட்டி வைக்கச் சொன்னேன்... நீயும் அத்தானுந்தான் கேக்கல... இப்ப அவள நெனச்சி நீ உடம்பக் கெடுத்துக்காதே...' என செய்தி கேள்விப்பட்டு திருப்பத்தூரில் இருந்து வந்த புவனாவின் சித்தி அக்கறையோடு சொல்ல...

'என்ன ஆனாலும் அவளப் பிடிச்சாந்து கழுத்த அருக்கணும் தம்பி...' தண்ணிப் போதையில் மகளின் பிரிவில் வலியை வார்த்தையில் தனது சகலையிடம் கொட்டினார் புவனாவின் அப்பா....

இப்படி பல்வேறு பிரச்சினைகளைச் சுமந்த இரவு விடியலை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது...


-(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

புதன், 27 ஆகஸ்ட், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 78

முந்தைய பதிவுகளைப் படிக்க... 



78. வலிகளும் வாழ்க்கையும் 

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். காதல் விவகாரம் பூதகரமாக ஒவ்வொரு பக்கமும் கிளம்ப, ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக சிந்தித்து அடுத்த காரியங்களில் இறங்க.... தாங்கள் போட்ட திட்டப்படி புவனாவைக் கடத்தினர்.

இனி...

வைரவன் சொன்னதைக் கேட்டதும் "என்னடா சொல்றே..?" எனக் கத்தினார்.

"அண்ணே என்னாச்சு...?" அவரின் கோபத்தைப் பார்த்து அதிர்ச்சியாய் கேட்ட புவனாவின் சித்தாப்பாவிடம் "அந்தச் சிறுக்கி நம்மளை..." என ஆரம்பிக்க என்ன நடந்திருக்கும் என யூகித்த சித்தப்பா "அண்ணே... கடைத்தெரு... உணர்ச்சிவசப்படாதீங்க... வீட்ல போயி பேசலாம்..." என்று அடக்கினார்.

"என்னால முடியலப்பா... எப்படி வளர்த்தேன்... நேத்து வந்தவன் பெரிசின்னு கிளம்பிட்டாளே... இதுக்காகவா பாத்துப் பாத்துப் படிக்க வச்சேன்..." மெதுவாகப் புலம்பியபடி போனை வைத்தார்.

அதற்குள் பக்கத்துக் கடைக்காரர் "என்ன எதாச்சும் பிரச்சினையாண்ணே" என எட்டிப் பார்த்தார். உடனே திருப்பத்தூரார் "ஒண்ணுமில்லண்ணே ஊர்ல ஒரு இடத் தகறாரு... பங்காளி பிரச்சினை... அதான்..." என அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர்களின் பேச்சை வைத்து கடைப்பையன் பொண்ணு எஸ்கேப்பாயிடுச்சு போல என யூகித்து நமக்கென்ன வந்துச்சி என அதை மறந்து அவர்களைப் பார்த்தான்.

"டேய் கடையைப் பாத்துக்க... வீட்டுக்குப் பொயிட்டு வாறோம்... லேட்டான பூட்டிட்டு சாவியை எடுத்துக்கிட்டுப் போயிடு..." எனச் சொல்லிவிட்டு புவனாவின் அப்பாவை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார் சித்தப்பா.

"என்ன புவனா... எல்லாத்துக்கும் ஓகேன்னு சொல்லிட்டுத்தானே கிளம்பினே... இப்ப இப்படி தேம்பித் தேம்பி அழுறே... யாராவது பார்த்தா பிரச்சினையாயிடும்... நாங்க இதை உங்களுக்காகத்தான் பண்றோம்..." புவனாவிடம் மெதுவாகச் சொன்னான் அண்ணாத்துரை.

"அண்ணா... எங்கப்பாவை விட்டு நான் எங்கயும் போனதில்லை... ராம் மேல உள்ள காதல்ல வீட்டை விட்டு வந்துட்டேன்... ஆனா அப்பா... நான் வீட்டை விட்டு ஓடிட்டேன்னு தெரிஞ்சா... ஐய்யோ அவரோட நிலமையை என்னால நினச்சிக்கூடப் பாக்க முடியலைப்பா..." அழுகையோடு சொன்னாள்.

"இங்க பாரு... கொஞ்ச நாள்தான் கோபம் எல்லாம் அப்புறம் எல்லாம் சரியாயிடும். உங்களை உங்கப்பாவே வீட்டுக்கு வரச்சொல்லுவார். நீ வைரவன்கூட வண்டியில வரவும் நாங்கூட ஆடிப்பொயிட்டேன். ஆனா அவரு ரொம்பச் ஜென்டிலா உன்னை வழி அனுப்பலையா... அவரு எல்லாத்தையும் பார்த்து சரி பண்ணிடுவாருன்னு நம்பிக்கை இருக்கு... " என்றான் அறிவு.

"ஆமா அறிவு... எங்கண்ணன் எப்படி இப்படி மாறினான்னு எனக்குப் புரியவே இல்லை... எனக்கு பணமெல்லாம் கொடுத்தான்... பாத்துப் போடி... பத்திரமா இருடின்னு சொல்லி என்னோட கையைப் புடிச்சிக்கிட்டு கலங்கிட்டான்... அண்ணான்னு சொல்லி அவனோட நெஞ்சுல சாஞ்சு ஓன்னு கத்தணும் போல இருந்துச்சு.... ஆனா எல்லாத்தையும் அடக்கிக்கிட்டேன்... இம்புட்டுப் பாசத்தை மனசுல தேக்கி வச்சிக்கிட்டுத்தானே எங்கிட்ட அப்படியெல்லாம் நடந்துக்கிட்டான்... எங்கப்பா அம்மாவை நெனச்சா பாவமா இருக்கு.... எனக்கு இப்போ இந்தக் காதல் கத்திரிக்காயெல்லாம் வேண்டான்னு தோணுது... திரும்பிப் போயி எங்கப்பா மடியில விழுந்து அழணும் போல இருக்கு..." கண்ணீரோடு சொன்னாள்.

"இப்ப நீ திரும்பிப் போனா திருப்பாச்சி அருவாளால உன்னையை வெட்டி செங்கக் காலவாயில போட்டு எரிச்சிட்டு ஊருக்குப் பொயிட்டான்னு சொல்லிடுவானுங்க... ஏன்னா உங்க ஆளுங்க இந்த மாதிரி எத்தனையோ பண்ணியிருக்கானுங்க... இப்பக்கூட பனையூர்ல வரதட்சணைக் கொடுமையில புதுப்பொண்ணை சுண்ணாம்புக் காலவாயில போட்டு எரிச்சானுங்கதானே... கொஞ்ச நாள் பொறுத்துக்க அப்புறம் எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்." என்றான் பழனி.

"டேய் அண்ணா... ராம்கிக்கு எல்லாம் சொல்லிட்டியா... சேவியர் எப்பக் கிளம்புறான்... அவன் மெட்ராசுக்கு வந்துருவானுல்ல.." என அண்ணாத்துரையிடம் கேட்டான் சரவணன். 

"எல்லாம் சொல்லியாச்சு... சேவியர் நேர சென்னை வந்துருவான்..." என்றவன் புவனாவிடம் திரும்பி "புவனா எதாவது சாப்பிடுறியா?" எனக் கேட்க, "எனக்கு ஒண்ணும் வேண்டாம்... நீங்க காபி குடிக்கிறதுன்னா குடிங்க" என்று புவனா சொல்ல கார் திருச்சி நகருக்குள் சீறிக் கொண்டிருந்தது. 

வீட்டிற்குள் நுழைத்த புருஷனைக் கட்டிக் கொண்டு அழுதாள் புவனாவின் அம்மா. "வைரவா... எடுடா அந்த அருவாளை... அந்த தே... சிறுக்கி எங்க இருந்தாலும் வெட்டி வீசிட்டு வாறேன்... படிக்கப் போறேன் படிக்கப் போறேன்னு சொல்லி எங்கழுத்தை அறுத்துட்டாளேடா..." கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கத்தினார்.

"அப்பா... உக்காருங்க... அம்மா அவருக்கு தண்ணி கொண்டாந்து கொடு... இப்ப எதுக்கு கத்துறிய... எம்மவ ஓடிப்பொயிட்டான்னு ஊருக்கு தெரியிற மாதிரி பண்ணுறதுக்கா... அவ பிளான் பண்ணிக் கிளம்பிட்டா... இதை எப்படி டீல் பண்ணனுமோ அப்படி டீல் பண்ணனும்... சும்மா கத்தி காரியத்தைக் கெடுக்கக்கூடாது..."

"என்னடா நீ என்னவோ வேற யாருவுட்டோ புள்ள ஓடிப்போன மாதிரி பேசுறே... போனது நம்ம புள்ள... தலகுனிவு யாருக்கு.... நமக்கு... கேவலப்படுத்திட்டுப் போயிருக்கா... இப்பத்தான் பொறுமையாப் பேசுறாரு... அன்னைக்கே எங்கிட்ட விட்டிருந்தா இத்தனை தூரம் வந்திருக்குமா... அன்னைக்கு நீதானே என்னைத் தடுத்தே...." சித்தப்பா முறுக்கினார்.

"யோவ்... அவரே நொந்து போயி இருக்காரு.. நீ அதுல இன்னும் கொஞ்சம் கீறி விடுறியா... அன்னைக்கு நீ அவனை அடிச்சதாலதான் அவ அந்தப் பயல தீவிரமா விரும்ப ஆரம்பிச்சிருக்கா... பேச வந்துட்டாரு... வெட்டுறேன்... குத்துறேன்னு குதிச்சியன்னு வச்சுக்கவே உன்னோட குதிகால் நரம்பை நா... வெட்டிப்புடுவேன்... நாந்தான் எப்படி செய்யணுமோ அப்படிச் செய்யணுமின்னு சொல்றேன்னுல்ல... அப்புறம் எதுக்கு குதிக்கிறே... குதிக்கிறதுக்கு இது ஒண்ணும் திருப்பத்தூர் பஞ்சாயத்து இல்ல... நம்ம குடும்பத்து மானம்... மரியாதை... குதிச்சா எல்லாம் வந்திருமா... சும்மா கத்திக்கிட்டு... எல்லாத்தையும் யோசிச்சிப் பேசணும்..." வைரவன் கோபத்தில் வார்த்தைகளை வீசினான்.

"டேய்... டேய்.... இப்ப என்னடா... அவன் உன்னோட சித்தப்பன்டா... உனக்கும் அவனுக்கும் ஆயிரம் பிரச்சினை இருக்கலாம்... இது நம்ம மானப் பிரச்சினை... அவன் சொல்றதுதான் சரி... நீ எதுக்கு தேவையில்லாம பேசுறே..."

"இல்லப்பா... அப்படி பண்றேன் இப்படிப் பண்றேன்னு இப்ப இந்த நிலமையில வந்து நிக்குது... அதான் கோபமாப் பேசிட்டேன்.. சாரி சித்தப்பா...."

"சரி... விடுடா... நா ஒண்ணும் நெனச்சிக்கல... அவன் குடும்பத்தை உண்டு இல்லைன்னு பண்ணனும்டா..."

"வேண்டாம் சித்தப்பா அவன் பண்ணுனதுக்கு அந்த அம்மாவும் கூடப் பொறந்தவங்களும் என்ன செய்வாங்க... அவ போனது போனதா இருக்கட்டும்... வெளிய தெரியாம தேடுவோம்... ஊர்ல யாராச்சும் கேட்டா... திருப்பத்தூர்ல இருக்கதா சொல்லிக்குவோம்..." என்று தொடர்ந்த பேச்சில் தானே எல்லாம் செய்வதாகச் சொல்லி அப்பாவையும் சித்தப்பாவையும் முடிந்தளவுக்கு புவனாவை தேடும் முயற்சியில் இருந்து மாற்ற நினைத்தான். ஆனால் இருவருக்கும் அவனது பேச்சில் உடன்பாடு இல்லை. 

புவனாவின் அம்மாவும் அழுகையோடு "அந்தச் சிறுக்கி இனி செத்தா என்ன வாழ்ந்தா என்ன... எக்கேடோ கெட்டுப் போகட்டும்... அந்தச் சனியன் தொலஞ்சதுக்கு நாம ஏன் எழவு வீடு மாதிரி கெடக்கணும்... நாளைக்கி நல்ல ஆட்டுக்கறியா எடுத்தாந்து கொழம்பு வச்சி  எண்ணய் தேச்சி தலமுழுகிட்டு சாப்பிட்டு நம்ம வேலயைப் பாப்போம்... இனி யாரும் அவளைத் தேடுறேன்னு சொல்லிக்கிட்டு எம்முன்னாடி வராதீக" என கத்தியபடி தலையை அள்ளி முடிந்து படக்கென்று எழுந்தவள் வைரவனைப் பார்த்து கண்ணால் எப்படி எனக் கேட்க, வைரவனும் சூப்பரம்மா என கண்ணாலே சொன்னான். 

"என்னடா எங்க வராங்களாம் எதாவது சொன்னாங்களா?" கேட்டவள் காவேரி.

"ம்... திருச்சி தாண்டிட்டானுங்களாம்... இப்பத்தான் காபி குடிச்சானுங்களாம்... அங்கன இருந்த எஸ்.டி.டி பூத்துல இருந்துதான் அண்ணாத்துரை அடிச்சான். புவிதான் ஒண்ணும் சாப்பிடலையாம்... ஒரே அழுகையா அழுகிறாளாம்... இந்த முடிவுக்கு ஒத்துக்கிட்டு இருக்கக்கூடாதோன்னு இப்பத் தோணுது... பாவம் நா இருந்தாலும் ஆறுதலா இருக்கும்... அதான் மல்லிகாவைக் கூட்டிக்கங்கடான்னு சொன்னேன்... பொம்பளப்புள்ள எல்லாம் வேண்டான்னு சொல்லிட்டானுங்க..." வருத்தமாய்ச் சொன்னான் ராம்கி.

"சரி விடு... எல்லாப் பொண்ணுங்களுக்கும் இருக்கதுதான்... உங்கூட வாழ்ந்துட்டா அப்புறம் எல்லாம் மறந்துடுவா... ஆனா ஒண்ணுடா அவளை கடைசி வரைக்கும் கண்கலங்காம பாத்துக்கடா... நீதான் வேணுமின்னு எல்லாத்தையும் உதறிட்டு வர்றா..."

"என்னடி நீ... எனக்கு அவதான் உலகம்... கையில வச்சி தாங்கிற மாட்டேனா..."

"இப்ப இப்படித்தான் சொல்வே... அப்புறம் சண்டை வந்தா அவளுக்குத்தான் போக்கிடமில்லையேன்னு படக்குன்னு எதாவது சொல்லச் சொல்லும்..."

"நான் அப்படி இல்லை... புவனாதான் நான்... நாந்தான் புவனா.... நீ பாக்கத்தானே போறே.. இப்ப எனக்கு என்னோட புவியைப் பாக்கணும் போல இருக்கு... எப்ப வருவான்னு இருக்கு... வந்தோடனே என்னைக் கட்டிப்பிடிச்சி அழுவாதானே..."

"இருடா... இருடா... எதுக்கு இப்படி.... அவ வரட்டும் கட்டிப்பிடிச்சு அழுகுறாளா... இல்ல கழுத்தை நெறிக்கிறாளான்னு பார்ப்போம்..." என்று சிரித்தாள் காவேரி.

வைரவன் சொன்ன ஐடியாவையும் மீறி எப்படியோ கசிந்து ஊருக்குள்ளும் செய்தி காட்டுத்தீயாய் பரவி புவனா வீட்டில் ஊரே கூடி சோகமாய் நிற்க... 

ளாளுக்குப் பேசினாலும் எதையும் காதில் வாங்காமல் வைரவன் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என மனசுக்குள் வியூகம் அமைக்க... 

நாகம்மாவும் சீதாவும் என்னாச்சோ ஏதாச்சோன்னு பதட்டத்தில் இருக்க... விவரம் அறிந்த முத்து மாமா வீட்டுக்குள் அங்கும் இங்கும் நடக்க...

புவனாவை எப்படியும் மனைவி ஆக்கிவிடலாம் என இளங்கோ கனவு கண்டு கொண்டிருக்க... 

ன்ன பண்ணுறானுங்களோ தெரியலையே... சரியா பண்ணியிருப்பானுங்களா... ஒரு போன் கூடவா பண்ணக்கூடாது என மல்லிகா நகம் கடிக்க... 

ந்தப்புள்ளைங்க இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கக் கூடாது என தமிழய்யா தவிக்க...

புவனாவைச் சுமந்து கொண்டு மெட்ராசுக்குள் சீறிய கார் சேகரின் வீட்டு வாசலில் வந்து நின்றது.

-(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

வீடியோ : மாங்குயிலே... பூங்குயிலே....

இன்றைய பகிர்விலும் மீண்டும் மீண்டும் கேட்கும்... கேட்க நினைக்கும்... கேட்கத் தூண்டும் பாடல்கள் சிலவற்றைப்  பகிர்ந்திருக்கிறேன்.  எல்லாப் பாடல்களுமே கேட்கும் போது நமக்குள் ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும் பாடல்கள். அதுவும் கிராமிய இசையுடன் கிராமத்து பின்னணியும் சேர்ந்து கொள்ள சொல்லவா வேண்டும். நீங்களும் கேட்டுப் பாருங்கள்... 


படம் : ஒத்தையடிப் பாதையிலே
பாடல் : செப்புக்குடம் தூக்கிப் போற....




படம் : பகவதிபுரம் ரயில்வே கேட்
பாடல் : செவ்வரளி தோட்டத்திலே...




படம் : மெல்ல பேசுங்கள்
பாடல் : செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு...




படம் : பொல்லாதவன்
பாடல் : அதோ வாராண்டி வாராண்டி...




படம் : இளமைக்கோலம்
பாடல் : வச்ச பார்வை தீராதடி...




படம் : நீயா
பாடல் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...




படம் : மௌன கீதங்கள்
பாடல் : மூக்குத்தி பூமேலே காற்று....





படம் : எட்டுப்பட்டி ராசா
பாடல் : பஞ்சு மிட்டாய் சேலை கட்டி...



எப்போது கேட்டாலும் இந்தப் பாடலின் இசையும் பாடலும் துள்ள வைக்கும்... வேலை நேரத்தில் பாடல் கேட்டுக் கொண்டே பணி செய்யும் போது இந்தப்பாடல் வந்தால் என்னையறியாமலே கை தாளம் போட ஆரம்பித்துவிடும்... \இந்தப் பாடல் கேட்டால் 'என்ன சேந்தம்பட்டியாரே சாமத்துல வாரே.. சாமந்திப்பூ தாரேன்னு சொன்னீங்க... எங்க சாமந்திப்பூவக் காணோம்' என கனகா கேட்பது ஞாபகத்தில் வரத் தவறுவதில்லை... 

என்னிடம் ராமராஜன் பாடல்கள் அதிகம் இருக்கின்றன. எல்லாப் பாடல்களையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். காரணம் இசைராஜா... மோகனுக்குப் பின் ராமராஜனுக்கு எத்தனை விதமான ராகங்களைக் கொடுத்தார். அத்தனையும் தித்திப்பு.... 

இதோ  எப்போதும் நான் விரும்பும் பாடல்களில் ஒன்றான கரகாட்டக்காரன் படப்பாடல் மாங்குயிலே பூங்குயிலே...



பாடல் பகிர்வு தொடரும்.
-'பரிவை' சே.குமார்.