மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 24 ஜூலை, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 71

(புதங்கிழமை வர வேண்டிய பகிர்வு ஒரு நாள் தாமதமாக...


முந்தைய பதிவுகளைப் படிக்க... 



71. ஒரு புள்ளியை நோக்கி பயணம் ஆரம்பம்

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். வைரவனுக்காகவும் புவனாவை அடையவும் இளங்கோ ஒரு பக்கம் ராம்கியை கொல்ல அலைகிறான். இதற்கிடையே அக்காவைப் பார்க்கப் போன ராம்கி, அண்ணியையும் அம்மாவையும் இணைக்கிறான். ராம்கியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என மல்லிக்கா வீடு செல்லும் புவனா அங்கு ராம்கியையும் பார்க்க நேரிடுகிறது.

இனி...

ராம்கியை அங்கு பார்த்ததும் ஓடிச் சென்று அழுகையோடு அவனைக் கட்டிக் கொண்டாள் புவனா. எதற்கு அழுகிறாள்... என்ன ஆச்சு.... ஏதாவது பிரச்சினையா... என்பது எதுவும் புரியாமல் தவித்த ராம்கி "ஏய் புவி... என்னடா ஆச்சு... எதுக்கு அழுகுறே.... இங்க பாரு... இது நம்ம பிரண்ட் வீடு... அவளோட அம்மா வீட்டுக்குள்ள இருக்காங்க... கட்டிப்பிடிச்சா தப்பா நினைக்க மாட்டாங்களா..."

புவனா பதில் பேசாமல் அவன் தோளில் சாய்ந்து அழ, மல்லிகாதான் பேசினாள். "எங்கம்மாவுக்குத்தான் உங்க கதை தெரியுமே... அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க... ஆனா பக்கத்து வீட்டு ஆளுங்க பாத்தா என்ன வேணுமின்னாலும் பேசுவாங்க... வாங்க உள்ள போயி பேசலாம்" என்றதும் அவனை விட்டு விலகிய புவனா, அவன் வலது பக்கத்து தோளில் சாய்ந்தே நடந்தாள். இது ராம்கிக்கு புதிதாகப்பட்டது.

"எங்கிட்ட கூட சொல்லாம வந்திருக்கீங்க?" அவனுக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாகக் கேட்டாள்.

"கண்ணம்மாவுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கலாம்ன்னுதான்...."

"எருமை... எருமை... அவ அவ அழுதுகிட்டு கிடக்கிறா... சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கிறாராம்... சர்ப்ரைஸ் விசிட்... இங்க நடக்கிறது எதுவாவது தெரியுமா? இன்னும் காலேசுல படிக்கும் போது இருந்த மாதிரியே இருக்கீங்க..."

"இப்ப என்னாச்சுன்னு இப்படி கோபப்படுறே?" என்றபடி சோபாவில் அமர, அவனருகே நெருக்கமாக புவனா அமர, "நல்லா ஒட்டிக்கடி... ஓடிப்போயிடப் போறான்..." என்று சொல்லிச் சிரித்த மல்லிகா, "சரி இனி சீரியஸ்... ஆமா இப்ப என்ன அவசரம்ன்னு சொல்லாமக் கொள்ளாம ஓடியாந்தே?" என ராம்கியைப் பார்த்துக் கேட்டாள்.

"என்ன ஆளாளுக்கு ஏ... வந்தே ஏ... வந்தேன்னு கேக்குறீங்க... எனக்கு அதுக்கு அர்த்தம் புரியலை...? நான் வந்தது உங்களுக்குப் பிடிக்கலையா? கோபமாகக் கேட்டான்.

"இரு ஏதுக்கு சூடாகுறே... உங்க காதல் விசயத்தை புவனா அவ அண்ணன்கிட்ட பேசப்போக அது உன்னோட உயிரை எடுக்கிற வரைக்கும் வந்து நிக்கிது..."

"ஏ...ஏய்... என்ன சொ...சொல்றே...?" பதட்டமாய் கேட்டான்.

"எஸ் ராம்... எங்கண்ணன் ஒத்துக்கலை.... அதோட இல்லாம இளங்கோகிட்ட என்னைக் கட்டித்தாரேன்னு சொல்லி உங்களை கொல்லச் சொல்லியிருக்கான்..."

"யாரு இளங்கோவா? அவன் எதுக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் சீன்ல வாறான்..."

"ம்... எல்லாம் இந்த சீமாட்டிக்காகத்தான்... ஆமா அப்படி என்னடி இருக்கு மத்தவங்ககிட்ட இல்லாதது உங்கிட்ட..." என் மல்லிகா குறும்பாகச் சிரிக்க "ம்... அதை அவனுக்கிட்டத்தான் கேக்கணும்... சும்மா இருக்க மாட்டே... உதை வாங்கப் போறே பாரேன்..." என புவனா சிரிப்போடு சொன்னாள்.

"அப்ப சிரிச்சிட்டாப்பா... மழை வரப்போகுது... சரி விஷயத்துக்கு வருவோம்... உன்னைய கொல்ல இளங்கோ கிளம்பியாச்சு... அவனுக்கு புவனாவ கட்டி வைக்க அண்ணன்காரன் சம்மதிச்சாச்சு... இப்ப நீயும் வந்து வலைக்குள்ள மாட்டியாச்சு.... எல்லாத்தையும் எப்படி சமாளிக்கிறது... அதுதான் இப்போதைய கேள்வி..."

"இதை யாரு சொன்னா... நம்பத்தகுந்த வட்டாரமா?"

"ஆமா பெரிய நீயுஸ் எடிட்டர்... நம்பத்தகுந்த வட்டாரமான்னு கேக்குறாரு... இதையெல்லாம் சொன்னது மணிதான்"

"யாரு... மணியா?"

"என்ன எல்லாத்துக்கும் கேள்வி கேக்குறே...? விளக்கமா சொல்லிக்கிட்டு இருக்க இது நேரமில்லை... ஆக வேண்டியதைப் பற்றி யோசிக்கணும்... நான் அண்ணாத்துரைக்கு போன் பண்ணி விசயத்தைச் சொல்லி இங்க வரச்சொல்றேன்... அவன் வந்ததும் நல்ல முடிவா எடுக்கலாம்..." என்றபடி மல்லிகா போன் பண்ண எழ, " உங்களுக்கு ஒண்ணுன்னா நான் செத்துருவேன் ராம்..." என புவனா கண்ணீரோடு அவன் தோளில் சாய "ஏய் அசடு... அப்படி சாகுறதுன்னா மூணு தடவை தப்பியிருக்கமாட்டேன்... புரிஞ்சிக்க..." என்றபடி ஆதரவாய் அவளை அணைத்துக் கொண்டான்.

"என்ன வைரவன் தம்பி சௌக்கியமா?" என்றபடி அருகே வந்தார் தமிழய்யா.

"நல்லாயிருக்கேன்... என்னய்யா விஷயம்... எங்கிட்ட..." தலையைச் சொறிந்தான்.

"ஒண்ணுமில்ல... புவனா படிப்பை முடிச்சிட்டாங்க... வரப்போற ரிசல்ட் பத்திக் கவலைப்பட வேண்டாம்...  தெரிஞ்சதுதானே... அப்புறம் நீங்களும் முடிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்..." 

'நக்கலைப் பாரு' என்று மனதுக்குள் நினைத்தபடி "ஆமா முடிச்சிட்டோம்... அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம்..." என்றான் படபடவென.

"நல்ல விஷயந்தான்... பாக்குற மாப்பிள்ளையை இப்ப இங்க உங்க கூட சிகரெட் குடிச்சிக்கிட்டு நின்ன இளங்கோ மாதிரி பாக்காம அவ மனசுக்குப் பிடிச்ச மாப்பிள்ளையாப் பாருங்க..." என்றார் அவனுக்குப் பதில் சொல்லும் விதமாக.

"பிடிச்ச மாப்பிள்ளையின்னா... எங்களுக்கு எவனைப் பிடிக்குதோ அவனை அவளுக்கும் பிடிக்கும்... அம்புட்டுத்தான்..."

"என்ன தம்பி இது... உங்களுக்குப் பிடிச்சா அவளுக்குப் பிடிக்கணும்ன்னு கட்டாயமா...? சரி அப்படியே வச்சிப்போம்... இப்ப அவளுக்கு இன்னாரை பிடிச்சிருக்குன்னா அவரை உங்களுப் பிடிக்குமா?"

சுற்றி வளைத்து எங்க வரப்போறாருன்னு யூகித்த வைரவன், "அவ எவனாவது ஒரு தறுதலையைக் காட்டி இவனைத்தான் கட்டிக்குவேன்னு சொன்னா பொட்டை மாதிரி தலையாட்டுற சாதியில்ல நாங்க... நீட்டுடி கழுத்தையின்னா எவனா இருந்தாலும் நீட்டணும்... இல்லேன்னா அவளை போட்டுட்டு எங்க வேலையைப் பாத்துக்கிட்டுப் போய்க்கிட்டே இருப்போம்..."

"என்ன தம்பி... படிச்சபுள்ள மாதிரியா பேசுறிக... சே... பேச்செல்லாம் சாதிவெறி... இதுல வக்கீலுக்குப் படிச்சி என்ன தம்பி புண்ணியம்...? உங்ககிட்ட பேசிப் புண்ணியம் இல்லை... அவ மனசறிஞ்சு கல்யாணம் பண்ணி வையுங்கன்னு உங்க அப்பாவைப் பார்த்துப் பேசுறேன்...."

"இங்க பாருங்க ஐயா... தேவையில்லாம இதுல தலையிடாதீங்க... அவளுக்கு எப்படி... எப்ப கல்யாணம் பண்ணனும்ன்னு எங்களுக்குத் தெரியும்... வந்துட்டாக... இப்பத்தான் நானும் பாடம் எடுக்கிறேன்னு... மரியாதை கெட்டுறாம பாத்துக்கங்க..." என்றபடி வண்டியை ஸ்டார்ட் செய்த வைரவனைப் பார்த்து 'சே... மனுசனே இல்லாத இவனுக்கிட்ட போயி பேசி... நம்ம கவுரவத்தைக் கெடுத்துக்கிட்டதுதான் மிச்சம்... அதுக சேர்றதுக்கு வேற என்ன செய்யலாம்ன்னு பார்ப்போம்...' என்று நினைத்தபடி சைக்கிளைத் திருப்பினார்.

புவனா மீது கோபமாக வீட்டுக்குள் நுழைந்த வைரவன், எதிர்ப்பட்ட அம்மாவிடம் "எங்கம்மா அந்தக் கழுதை... என்ன கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி வாத்தியை தூது விடுறாளா... எங்க அவ..." என காட்டுக் கத்தாய் கத்தினான்.

"இப்ப அவ கூட உனக்கெதுக்கு சண்டை... அவ உங்கிட்ட என்ன சொன்னா... நீ அவகிட்ட என்ன பேசினேன்னு எல்லாம் தெரியாது... ஆனா என்னோட வாழ்க்கையோட விளையாடுறான்னு எங்கிட்ட சொன்னா... "

"ஆமா அவதான் நம்ம எல்லாரோட கண்ணுலயும் மண்ணைத் தூவிட்டு விளையாடுறா... இப்ப அவ எங்க?" கர்ஜித்தான்.

"மல்லிகா வீட்டுக்குப் போயிருக்கா..."

"இந்த வெயில்ல அப்படி என்ன முக்கிய விஷயம்... அவனைப் பாக்கப் பொயிட்டாளா..?"

"எவனை... அ... அந்தப்பையன் வந்திருக்கா...?"

"ஆமா... போயி ரெண்டு போட்டுட்டு அவளை இழுத்துக்கிட்டு வாறேன்...." என்று ஆக்ரோஷமாக கிளம்பிய வைரவனை "நில்லுடா... " என்ற அம்மாவின் குரல் தடுத்தது.

"என்ன அவ பண்றது சரியின்னு சொல்லுறீங்களா?" என கோபத்தை அம்மா மீது திருப்ப, "அந்தப் பையனை யாரை வச்சி... என்ன பண்ணச் சொல்லியிருக்கே...?" என்ற அம்மாவின் கேள்வி நிலைகுலைய வைத்தது.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 22 ஜூலை, 2014

காதலும் கருவும்

'நாம் பேசாத நாட்கள் நீண்டு கொண்டே போகின்றன... பேசுவதற்கான சூழலை எப்போதும் நாம் நம்முடனே வைத்திருந்தோம்... இப்போது தொலைந்த நாட்களில் சூழலையும் தொலைத்துவிட்டோம். பேசாத இந்த நாட்களை கண்ணீர் களவாடிக் கொண்டது, தினமும் எழும்போது இன்றாவது பேச மாட்டாளா என்ற கனவோடு எழுகிறேன்... மீண்டும் படுக்கும் போது இன்றும் பேசவில்லையே என கண்ணீரோடு படுக்கிறேன்...' எழுதி முடித்து வாசித்துப் பார்த்தான் வாசன்.

"என்ன சார்... அடுத்த கதையை ஆரம்பிச்சிட்டீங்களா?" என்றபடி அவனருகில் வந்து அமர்ந்தாள் அவனின் அன்பு மனைவி வாசுகி.

"ம்... முதல் பாராவை இப்பத்தான் எழுதினேன்... இதுதான் அடுத்த தொடரோட ஆரம்பம்..." 

"எங்கே லேப்டாப்பைத் திருப்புங்க பார்ப்போம்... ஆரம்பம் அசத்தலா இருக்கா... இல்லையான்னு..."

"ஆமா... கதையே படிக்கமாட்டே... என்னோட கதையின்னா கொஞ்சம் வாசிப்பே.... அப்புறம் இதுக்கு மேல நம்மாள முடியாதுப்பா எம்புட்டுத்தான் படிக்கிறதுன்னு புத்தகத்தை தூக்கிப் போட்டுட்டு சீரியல் பாக்க உக்காந்துருவே... அதை மட்டும் ரெண்டு வருசத்துக்கு மேல தொடர்ந்து பாக்க முடியும்..."

"சரிப்பா... நோ டென்சன்பா... அதைத் தொடர்ந்தா பாக்குறோம்... ஒரு நாளைக்கு அரைமணி நேரம்தானே... இது ஒரு நாவல் முழுதும் தொடர்ந்து வாசித்தானே புரியும்... ஆனா சீரியல் அப்படியா இன்னைக்கு விட்டுட்டு ஒரு மாசம் கழிச்சிப் பார்த்தாலும் கதை புரியும்ப்பா... என்ன இன்னைக்கு புருஷனாவோ பொண்டாட்டியாவோ நடிக்கிறவங்க வேணா மாறியிருப்பாங்க... அதுக்காக என்னடா இவ புருஷனை மாத்திட்டான்னோ... இவன் பொண்டாட்டிய மாத்திட்டான்னோ நெனக்காம பார்க்கணும் அம்புட்டுத்தான்..."

"ம்... உங்கிட்ட பேசி ஜெயிக்கமுடியுமா?"

"எல்லாத்தையும் பேசி சமாளிச்சிடுறேன்... ஆனா ஒரு விஷயத்துல மட்டும் தோத்துடுறேனே..." என்றபடி அவனைக் குறும்பாகப் பார்த்தாள்.

"நீ தோத்தியா? எதுல...?"

"ம்... அது எதுக்கு இப்போ... புரியலையா... இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா?  பெரிய கதையாசிரியராம்... தள்ளுங்க... நான் படிச்சிப் பார்க்கிறேன்..."

"வா... வந்து மடியில உக்காந்து படி..."

"ம்... மாடியில பெத்த ரெண்டும் வெளாடுதுங்க...  மாடியில உக்காரணுமாக்கும்... ஞாபகம் இருக்கட்டும்..."

"அதுகளோட சேர்ந்து விளையாட..." என்றபடி அவளை இழுத்து அணைத்தான்.

"என்ன எழுத்தாளருக்கு மூடு எங்கிட்டோ போகுது... ஆளை விடுங்க சாமி உங்க கதை படிக்கப் போயி என்னோட கதை கந்தலாயிடும் போல..." என அவனிடம் இருந்து விலகினாள்.

"ஓகே... ஒண்ணும் பண்ணலை... இந்தா படி..." என்று சேரில் இருந்து எழுந்து கொண்டான்.

அவள் அமர்ந்து அந்த நாலு வரியைப் படிப்பதற்குள் பின்புறம் நின்றபடி அவள் கழுத்தில் கைகளால் எழுதினான்.

"படிக்கிறதுக்குள்ளே வேற பாடம் படிக்கிற மாதிரி ஆயிடும் போல... சும்மா இருங்க..." என்றபடி வாய்விட்டு வாசித்தவள் அவனை ஏறிட்டுப் பார்த்து கண் கலங்க "ஏம்ப்பா... உங்ககூட நான் எப்பவாச்சும் சண்டை போட்டிருக்கேனா..?" கேட்கும் போதே கண்ணீர் வந்தது.

"ஏய் அசடு... இது கதைடா... நீ எப்போ எங்கிட்ட சண்டை போட்டிருக்கே... நம்ம ரெண்டு பேருக்கும் நாமதானே உலகம்... இது கற்பனைதான்டா..." என்று அவளை அணைத்துக் கொண்டு கண்ணீரைத் துடைத்தான்.

"என்ன குட்டிம்மா... ஏன் இப்படி..."

"கதை எழுதுறதுன்னா அதுக்கு எதாவது ஒரு துளி காரணம் கிடைக்கனும்ன்னு சொல்வாங்க... நம்ம மனசுல ஓடுறதுதான் கதையா வரும்ன்னு எனக்குத் தெரியும்... அப்போ கொஞ்ச நாளா நான் உங்ககிட்ட இருந்து விலகிப் போறேனா...? சொல்லுப்பா..."

"ஏய் அதெல்லாம் இல்லை... இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமான யோசனையா இது வந்துச்சு... சரி இதை வச்சி அவங்களோட வாழ்க்கை, எதனால சண்டை, எப்படிச் சேர்ந்தாங்க... அந்த பழைய அன்பும் பாசமும் நீடிச்சிச்சா அப்படின்னு இருபத்தஞ்சு இருபத்தாறு பகுதியா எழுதலாம்ன்னு ஆரம்பிச்சேன். அம்புட்டுத்தான்... இங்க பாரு நீ எம்மேல ஒவ்வொரு நாளும் பாசம் அதிகமாத்தான் காட்டுறே... உனக்கு நான் எனக்கு நீயின்னு இருக்கோம்... இது கற்பனைடா... இந்தக் கதை ஆரம்பம்தான்... இப்படி ஆரம்பிக்கும் கதை.... ஒரு கணவன் மனைவியோட மிகச் சிறந்த அன்பை விவரித்து ஒரு சின்ன பிரச்சினையால அவங்களுக்குள்ள விரிசல் வந்து அப்புறம் எப்படி இணையிறாங்கன்னுதான்  கதை விரியுது... என்ன இப்ப ஓகேதானேம்மா...?"

"ம்... இது கற்பனையா இருந்தாலும் எனக்கொன்னமோ நமக்குள்ள இப்படி ஒரு பிரிவு வந்துருமோன்னு பயமா இருக்கு.... என்னோட பயமெல்லாம் ஒரு சில நேரத்துல அப்படியே நடக்கும்ன்னு சொல்லுவீங்கதானே... இது வேணாம்ப்பா... வேற கதை எழுதுங்க..."

"என்னடா இது... இதுவரை எத்தனை கதை எழுதியிருக்கோம்... அப்புறம் என்ன... ஒரு சின்னக் கருவை வச்சி விவரிக்கப் போறோம்... அம்புட்டுத்தான்... இந்தக் கரு எனக்கு நல்லாயிருப்பதாச் தோணிச்சு... அதான் ஆரம்பிச்சேன்... இது உன்னை இம்புட்டுத்தூரம் பாதிச்சிருச்சா...  நீ ரொம்ப  இன்னோசென்டா இருக்கேடா... இது ஜஸ்ட் ஒரு ஸ்டோரிடா..."

"நான் நமக்குள்ள பிரிவு வந்துருமோன்னு பயப்படுறேன்... நீங்க கதை... கரு முக்கியங்கிறே... அதையே கட்டிக்கிட்டு அழுங்க..." என்று கோபமாக எழுந்து செல்ல அவளை என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் எழுதிய வரிகளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு எங்கே இங்கே விழுந்த சின்ன விதை பெரிதாகி நாளைக் காலை எழும்போது அவள் பேசுவாளா மாட்டாளா என ஏங்க வைத்துவிடுமோ என்று நினைத்தபடி திரையில் இருந்த எழுத்துக்களை அழிக்க ஆரம்பித்தான்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 20 ஜூலை, 2014

மனசு பேசுகிறது : எப்படியெல்லாம் ஏமாத்தப் பாக்குறாங்க...

முன்பெல்லாம் திருவிழா, திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகளுக்கு ஒரு மாதம் முன்னதாகவே கருவை மர விறகு வெட்டி காய வைத்து, அதை உடைத்து அடுக்கி வைத்து விடுவார்கள். விஷேசத்துக்கு சில தினங்கள் முன்பு செம்மண் வெட்டிக் கொண்டு வந்து கல்லை வைத்து அடுப்புப் போட்டு அதில் தினமும் சாணியால் மெழுகி விஷேசத்தன்று சமைப்பார்கள். இப்போது விறகு, மண் அடுப்பெல்லாம் போயாச்சு... இப்போ கடையில் இருந்து வாடகைக்கு கேஸ் அடுப்பு தூக்கி வந்து சமைக்கிறார்கள். அது போக இப்போதெல்லாம் இரவு விருந்து என்பது பலகாரமாகிவிட்டது. புரோட்டா கடையில் வாங்கி வந்து விருந்தை நடத்துகிறார்கள். இந்த முறை நாங்களும் கேஸ் அடுப்பில் சமைப்பதற்காக அடுப்பு எடுத்த கதை கொஞ்சம் வித்தியாசமானது. 

நானும் தம்பியும் போய் கேஸ் அடுப்பை குட்டியானை என்று சொல்கிற சின்ன வேனில் ஏற்றிக் கொண்டு வர வீட்டில் இருந்த சிலிண்டரை வைத்து சமைக்க ஆரம்பித்தார் சமையல்கார ஐயா. திடீரென ஒரு பக்க அடுப்பின் பர்னருக்குக் கீழே கேஸ் வெளிவர ஆரம்பித்துவிட்டது. நாங்களும் என்னென்னவோ செய்து பார்த்தோம்... ம்ஹூம்... நிறுத்த முடியவில்லை... சமையல்காரர் ஒரு அடுப்பை வைத்து எப்படி சமைப்பது என்று புலம்ப, அந்த நேரம் பார்த்து கத்தி சாணை பிடிப்பவர் வந்தார். அவரும் பார்த்துவிட்டு எம்-சீல் வச்சா நிக்கும் என்று சொல்லிவிட்டுப் போனார். நானும் தம்பியும் கடைக்குப் போக வேண்டியிருந்ததால் அந்த வேலையுடன் எம்-சீலும் வாங்கி வந்தோம். அதை வைத்து அடைத்தாலும் ஓட்டை பெருசு என்பதால் நிற்கவில்லை. உடனே கடைக்காரருக்குப் போன் செய்தால் ஆளெல்லாம் அனுப்ப முடியாது என்று சொல்ல, அவருடன் கொஞ்சம் வேகமாகப் பேச சரி மற்றொரு அடுப்பு அனுப்புறேன் வண்டி அனுப்புங்க என்றார். மீண்டும் வண்டி அனுப்பி மற்றொரு அடுப்பை எடுத்து வந்தோம்.

மறுநாள் அடுப்பைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு பணம் கொடுக்கும் போது இரண்டு அடுப்புக்கு பணம் என்றார். என்னங்க ஒரு அடுப்பு வேலை செய்யலைன்னுதானே மற்றொரு அடுப்பு வாங்கினோம்... இப்ப ரெண்டடுப்புக்குப் பணம் கேக்குறீங்க... ரெண்டு தடவை வேன் வாடகை கொடுத்திருக்கோம் எங்களுக்குத்தான் நஷ்டம் என்றதும்... ஆமா என்ன பிரச்சினை அடுப்புல என்று கேட்டார். எல்லாம் விவரமாச் சொன்னதும் எம்-சீல் வச்சீங்களா... இனி அந்தப் பர்னர் வேலைக்கு ஆகாதுப்பு... உடைச்சித்தான் எடுக்கணும்... ஆயிரமோ... ரெண்டாயிரமோ செலவாகும் என்றதும்... அதுக்கு இப்ப என்ன...ஓட்டை அடுப்பைக் கொடுத்தது நீங்க... இப்ப இம்புட்டு பேசுற நீங்க சரியான அடுப்பையில்ல கொடுத்திருக்கணும்... எம்-சீலெல்லாம் எடுக்க முடியும்... சும்மா காசுக்காக சொல்லாதீங்க என்று குரலை உயர்த்தியதும் ஓனருக்கு போன் பண்ணுறேன்... அவுக சொல்லட்டும்... என்றபடி ஓனருக்கு போன் பண்ணினார். அவர் போனில் என்னிடம் அப்படி ஆகும்... இப்படி ஆகும்... நேர்ல வாறேன் என்றார். இவ்வளவுக்கு எனது நண்பனின் கடையாக இருந்து மற்றொருவரிடம் லீசுக்கு விட்டிருக்கிறார்கள். அதை தற்போது நடத்துபவரும் எனக்கு ரொம்பத் தெரிந்தவர்தான். சரி வரட்டும் என்று காத்திருந்தேன்.

அப்பு ஓனர் வந்து என்ன சொல்றாரோ அதைச் செய்யிங்க... அப்படி இப்படி என அவர் என்னிடம் சொல்லிக் கொண்டே இருக்க அவர் வரட்டுங்க பேசிக்கலாம்... என்று சொல்லிவிட்டேன்.. ஓனரின் மருமகன் வந்தார்.... என்னைப் பார்த்ததும் நீங்களா சார்? நான் யாரோன்னு நெனச்சி வந்தேன் (நல்லாப் படிங்க இந்த வார்த்தையை.... யாரோன்னு... அப்ப மாட்டுனான்டா ஒரு மன்னாருன்னு வந்திருக்கான்) ரொம்பத் தெரிஞ்சவங்களாப் பொயிட்டீங்க... உங்ககிட்ட என்ன சொல்றது... ம்... புதுசாத்தான் மாத்தணும் சார்... ஒண்ணு செய்யலாம்... சர்வீஸ் பண்ணுறவங்க வரட்டும்... அதை உடைச்சி எடுக்காம சர்வீஸ் பண்ணிட்டா ஓகே... இல்லைன்னா நீங்க பாதி... நாங்க பாதிதான் போடணும் என்று இறங்கிப் பேசுவது போல் பேசினார்.

நானும் சரி உன் வழியில் வர்றேன்னு நினைச்சிக்கிட்டு சர்வீஸ் ஆள் வரும்போது போன் பண்ணுங்க... அப்ப நானும் வாறேன் பாக்கலாம் என சொல்லி அங்கிருந்து கிளம்பினேன். இதே வேற யாராவது மாட்டியிருந்தா ரெண்டாயிரம் ரூபாய் அபேஸ்தான். சரி விஷயத்துக்கு வருவோம்... ஒரு பத்து நாள் கழித்து அந்தக் கடையில் இருந்து அவர் கூப்பிட்டார். 'அப்பு நான்  பாத்திரக்கடையில் இருந்து பேசுறேன்...' என்றார். 'சொல்லுங்க என்ன வேணும்?' என்றேன். 'அந்த அடுப்பு சர்வீஸ் பண்ணுன வகையில் 350 ரூபாய் செலவுய்யா..' என்றார். 'அதுக்கு என்ன பண்ணனும்..?' என்றேன். 'இல்ல சொல்லுறேன்...' என்றார். 'சரி சொல்லீட்டிங்கதானே... பாக்கலாம்' என்று போனை கட் பண்ணினேன். அதன் பின் அவர் தொடர்பு கொள்ளவேயில்லை... வந்தவரை லாபம் என 350க்கு அடிப் போட்டிருக்கிறார். ஏமாத்த நினைப்பவருக்கு கொடுக்க என்ன காசு இங்க கொட்டியா கிடக்கு. அத்துடன் இனி தெரிஞ்ச கடை என அந்தக் கடையில் எந்தப் பொருளும் எடுக்க வேண்டாம் என அப்பாவிடமும் சொல்லிவிட்டு வந்தேன்.

மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 19 ஜூலை, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 70

முந்தைய பதிவுகளைப் படிக்க...



70.  ஆட்டத்தின் முடிவு ஆரம்பமோ..?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். வைரவனுக்காகவும் புவனாவை அடையவும் இளங்கோ ஒரு பக்கம் ராம்கியை கொல்ல அலைகிறான். மணி இந்த விவரத்தை புவனாவிடம் சொல்கிறான். இதற்கிடையே அக்காவைப் பார்க்கப் போன ராம்கி அம்மாவையும் அண்ணியையும் சேர்த்து வைக்கும் நோக்கில் அண்ணன் வீட்டுக்கு அம்மாவுடன் செல்கிறான்.

இனி...

பேரனை நோக்கி கை நீட்டிய நாகம்மாவிடம் அழுகவோ அடம்பிடிக்கவோ செய்யாமல் மூத்தவன் சிரித்தபடி அவள் கைகளுக்குள் சென்று இடுப்பில் சிக்கென்று அமர்ந்துகொள்ள, சின்னவன் தரையில் தவழ்ந்து வந்து அவளது காலைப் பிடித்தான். ராம்கிக்கு 'பசங்க அம்மா மனசை மாத்திருவாய்ங்க' என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருந்தது.

"அடி ஆத்தி... இந்தக் கூத்தைப் பாருங்க அத்தை... நாங்க அங்கிட்டு வர்றதில்ல... நீங்க இங்கிட்டு வர்றதில்லை... ஆனா உங்க பேராண்டிகளுக்கு ஆளைத் தெரிஞ்சிருக்கு பாருங்க..."

"பின்னே... என்ன இருந்தாலும் இது எங்க ரத்தம்டி..."

"சும்மாவா பெரியவங்க கதையாச் சொல்லிட்டுப் போனாங்க..."

"என்ன கதை... வயக்காட்டுல வரப்பு வழியா நடந்து போகும் போது மகவுட்டுப் புள்ளைய தூக்கி இடுப்பில வச்சிக்கிட்டு மகமுட்டுப் புள்ளய நடக்க விட்டுக் கூட்டிப் போனாளாம்... அவுக வயல்ல மாடு மேயுறதைப் பாத்துட்டு மகவுட்டுப் புள்ள சொன்னுச்சாம் ஆயா உங்க வயல்ல மாடு மேயுதுன்னு... மகமுட்டுப் புள்ள சொன்னுச்சாம் அப்பத்தா நம்ம வயல்ல மாடுன்னு அதத்தானே சொல்றே?" என்றபடி பேரன்களுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் நாகம்மா.

மருமகள் கொடுத்த காபியைக் குடித்துக் கொண்டே "இங்க பாருத்தா... நா அப்படியிப்படி எதுனாச்சும் பேசியிருப்பே... இல்லங்கள... அதெல்லாம் கோவத்துல விட்ட வார்த்தங்கதான்... அதையெல்லாம் மனசுல வச்சுக்காதே... எனக்கு மூணு பேரும் ஒண்ணுதான்... இன்னும் எம்புட்டு நாளு இருப்பேன்னு எல்லாம் தெரியாது... இதுல உங்கள ஒதுக்கி வச்சி நா என்னத்தைக் கொண்டுக்கிட்டுப் போகப்போறேன்... ராமுப்பயலும் இப்ப பெரிய மனுசனாட்டம் முடிவெடுக்கிறான்... அவன் பேசுறது அவுக அப்பனாட்டம் ரொம்பச் செரியா இருக்கு... நாளக்கி நா செத்த மூணு பேரும் நெறக்கச் செறக்க நின்னு தூக்கிப் போட்டீங்கன்னாப் போதும்... எதையும் மனசுல வச்சிக்காம நல்லது கெட்டதுக்கு வா... நாளு நாளக்கி அங்கன இரு... என்ன நா சொல்றது..."

"அத்தை என்ன மன்னிச்சிருங்க..." என்று அவளது கையைப் பிடித்துக் கொண்டு அருகில் அமர்ந்தவள், "நாந்தே... கேடு கெட்ட சிறுக்கி... கேப்பாரு பேச்சக் கேட்டுக்கிட்டு இப்பிடி பண்ணிட்டேன்... என்னதான் இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான்... பெருந்தன்மையா வந்து பேசுறீக... நானு பாத்தாலும் பாக்காத மாதிரி வரலையா... ஆனா உங்க மவனுக்கு எப்பவும் உங்க நெனப்புத்தான்... எல்லாத்துக்கும் காரணம் நாந்தே... என்ன மன்னிச்சிருங்கத்த..." என்று மருமகள் சொன்னதும் 'செரி விடு... இப்போத்தான் எனக்கு சந்தோசமா இருக்கு..." என்றாள் நாகம்மா.

"அப்புறம் ராமுக்கு கலியாணம் பண்ணிடலாம்ன்னு பாக்குறேன்... அவனுக்கும் ஒரு புள்ளயப் பிடிச்சிருக்கு... பெரியவங்க நல்ல முடிவா எடுத்து கூடிய சீக்கிரம் பண்ணி வச்சிட வேண்டியதுதான்..."

"வேற சாதிப் புள்ளயா...? நம்ம சேகரு கலியாணத்துக்கு வந்தப்போக்கூட முத்தத்த மெதுவாச் சொன்னுச்சு... அவுக அண்ணங்கிட்ட போன்ல சொன்னப்போ அந்தப்புள்ள அவனுக்குப் பொண்டாட்டியா வந்தா முதல்ல சந்தோசப்படுறவன் நாந்தேன்னு சொன்னாக... நா அப்புறம் ஆருக்கிட்டயும் இதப்பத்தி பேசலத்த... ஆமா அது ஒத்துவருமா... பெரச்சன கிரச்சன வராதுல்ல..."

"ம்... எப்புடி ஒத்துப்பானுங்க... பெரச்சனையெல்லாம் வரும்... பாக்கலாம்... மாரி என்ன நெனக்கிறாளோ... தெரியலயில்ல..."

"ம்... பெரிய பெரச்சனையின்னா ஊருச்சனம் நமக்கு சப்போட்டா நிக்குமா..."

"நிக்குமா நிக்காதா தெரியல... பெரியவுகள வச்சி பேசுவோம்... பாக்கலாம்...."

"அம்மா நீங்க அண்ணிக்கிட்ட பேசிக்கிட்டு இருங்க... நா பிரண்டப்பாத்துட்டு வந்துடுறேன்..."

"ஏய்யா... ஐயா வீடு பொயிட்டு வீடு போயிச் சேரலாமுல்ல... ஆடு மாடெல்லாம் பாக்கணும்... கோழிக்கெல்லாம் எர வக்கலை..."

"அம்மா அதெல்லாம் சுமதி அக்கா பாத்துப்பாங்க... அவுகளுக்கெல்லாம் நீங்க பாக்கலையா... அப்புறம் இந்த வெயில்ல போனா ஐயா இருக்காரோ என்னவோ... இங்கதானே சாப்பிட்டு வெயில் தாள போனமுன்னா பேசிட்டு அப்புடியே போயிடலாம்... முக்கியமான பிரண்டும்மா பாத்துட்டு உடனே வந்துடுறேன்...." என்றவன் பதிலுக்கு காத்திராமல் கிளம்பினான்.


"என்னடி ஆச்சி...  ஏ... ஒரு மாதிரி இருக்கே...?" என்று பதறிய அம்மாவிடம் "ஒண்ணுமில்லம்மா... எங்கூட படிச்ச பிரண்ட் ஒருத்திக்கு ரொம்ப முடியலையாம்... அதான்..." என்று பொய்யான பதிலைச் சொல்லிவிட்டு "அம்மா நா அவளப் போயி பாக்கணும்... மல்லிகா வீட்டுக்குப் போயிட்டு அவளோட போயி பாத்துட்டு வந்திடவா..."

"பாக்கணுந்தான்.... அதுக்காக இந்த நேரத்துலயா...?"

"என்னம்மா ராத்திரியா ஆயிப்போச்சு... மத்தியானந்தானே... பொயிட்டு வந்திடுறேன்... எங்கயும் ஓடிட மாட்டேன்... நம்புங்க..."

"இப்ப யாருடி நீ ஓடிப்போகப் போறேன்னு சொன்னா.... அப்பா சாப்புட வருவாரு... இந்தப் பயலும் சுத்திட்டு வந்தான்னா எங்க... என்னன்னு கேப்பாங்க... அதான்..."

"அம்மா சந்தேகமா இருந்தா மல்லிகா வீட்டுக்கு போன் பண்ணச் சொல்லுங்க... அங்கதான் இருப்பேன்... ஆனா உன்னோட சீமந்த புத்திரம் பேசுனான்னா நா பத்திரகாளியா மாறிடுவேன்... சொல்லிடுங்க..." என்றாள்.

"ஏண்டி அவன் மேல அம்புட்டுக் கோபம் உனக்கு..."

"என்னோட வாழ்க்கையில விளையாடுறான்..." என்றபடி சைக்கிளை எடுக்க 'வாழ்க்கையில விளையாடுறானா... என்ன சொல்லிட்டுப் போறா இவ' என நினைத்தபடி அவள் வாசலைத் தாண்டிச் செல்லும்வரை சைக்கிளின் பின்னே கண்களை பயணிக்கவிட்டாள்.

"என்ன இளங்கோ... என்னமோ கிழிச்சிருவேன்... அது இதுன்னே... பய இங்க வந்திருக்கானாமுல்ல... இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது... எப்ப போடப்போறே...?" சிகரெட்டை இழுத்தபடி வைரவன் கேட்டான்.

"இரு மச்சான்... அதுக்கு நேரம் வரணுமில்ல... திருமயத்துல ஒருத்தன் இருக்கானாம்... கமுக்கமா முடிச்சி கம்மாய்க்குள்ள தூக்கிப் போட்டுட்டு போய்கிட்டே இருப்பானாம்... பணம் அதிகமா எதிர் பார்ப்பானாம்... பேசச் சொல்லியிருக்கேன்... இன்னைக்கு நாளைக்கு பைனல் பண்ணிடலாம்..."

"என்னமோ போ... இங்க வச்சி போட்டுட்டுப் போறத விட்டுட்டு..."

"இல்லடா.... மணிப்பயலுக்கிட்ட பேசுனேன்... அவன் புத்தனாட்டம் எனக்கு அட்வைஸ் பண்ணுறான்... ரெண்டு பேரையும் வாழ விடுன்னு சொல்றான்... எனக்கென்னவோ இங்க வச்சி போடுறதைவிட திருப்பூர்ல வச்சிப் போடுறதுதான் சேப்புன்னு தோணுது... எவன் போட்டான்னு தெரியாது... சுலபமா இவங்கூட இருக்கானாமே சேவியரு... அவன மாட்டிவிட்டுட்டு தப்பிச்சிக்கலாம்..."

"என்னமோ சீக்கிரம் செய்யி... இல்லைன்னா எங்க சித்தப்பன் மாப்பிள்ளையோட வந்து நிப்பான்... புவனாவைப்பத்தி உனக்கு நல்லாத் தெரியும்... மாப்பிள்ளை பேசிட்டா அவங்கூட கிளம்பினாலும் கிளம்பிடுவா... பின்னால என்ன நடந்தாலும் அவ சைடு சேப்புன்னு நினச்சிப்பா... பாத்துக்க... அம்புட்டுத்தான் சொல்லுவேன்..."

"நீ கவலைப் படாதேடா... எல்லாம் நா பாத்துக்கிறேன்..." என்றான் இளங்கோ.

"சரி... சரி... அந்த தமிழ் வாத்தி நம்மளப் பாத்துக்கிட்டே வர்றான்... எதாவது பேசுவான்... அதுக்குள்ள கிளம்பிடலாம்..." என்று வைரவன் வண்டியை ஸ்டார்ட் பண்ண, "தம்பி வைரவா... இருங்க... உங்ககிட்ட பேசணும்" என்று சத்தமாகச் சொல்லியபடி தமிழய்யா வர, "சரி நீ கிளம்பு... என்னன்னு கேட்டுட்டு வாறேன்... எல்லாம் ஞாபகத்துல வச்சிக்க... ஓகே..." என்றபடி வண்டியில் இருந்து இறங்கி பவ்யமாக நின்றான்.

"என்னடி இந்த வெயில்ல விழுந்து வர்றே...? அப்படி என்ன தலைபோற காரியம்..." வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள் நுழைந்த புவனாவைப் பார்த்து மல்லிகா கேட்டாள்.

"தல போற காரியந்தான்... கொஞ்சம் தண்ணி கொடு..." என்றபடி அமர்ந்தாள்.

"இந்தாடி..." மல்லிகா கொடுத்த மண்பானைத் தண்ணீரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு  "எங்கண்ணன் இளங்கோ மூலமா ராம்கியை கொல்ல ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கானாம்..."

"ஏய்.. என்னடி சொல்றே...? யாருடி சொன்னா... இது உண்மையா...?"

"ஆமா... உண்மைதான்.. மணிப்பய சொன்னான்... இளங்கோ இதைச் செஞ்சா எங்கண்ணன் என்னை அவனுக்கு கட்டி வைக்கிறானாம்"

"ஆ... ஆத்தி... எதுக்குடி இவனுகளுக்கு இம்புட்டு கொலைவெறி... வேணான்டி உங்கண்ணங்கிட்ட பேசி வீட்ல பாக்குற மாப்பிள்ளையை கட்டிக்கடி... ராம்கி உயிரோட இருக்கட்டும்..."

"என்னடி நீ... இப்படி பேசுறே.... இதுக்கா இம்புட்டு நாளும் காதலிச்சோம்... ராம்கி செத்தா நா உசிரோட அடுத்தவனுக்கு பொண்டாட்டியா இருப்பேன்னு நீயும் நினைச்சிட்டியா என்ன... இதை முதல்ல தடுக்கணும்டி... எங்கண்ணனுக்கிட்ட இதைப் பத்தி பேசினா சுதாரிச்சிக்குவான்... அண்ணாத்துரைக்கிட்ட பேசணும்... இல்ல சேவியர்கிட்ட பேசணும்...."

"அவங்ககிட்ட பேசி என்னடி பண்றது... எனக்குப் பயமா இருக்கு... ராம்கி வேற வந்திருக்கிறதா இப்பத்தான் சரவணன் போன்ல சொன்னான்..."

"என்னது... ராம்கி வந்திருக்கிறாரா? எப்போ..? எனக்கு ஏன் போன் பண்ணலை..?"

"யாருக்கிட்டயும் சொல்லாம திடீர்ன்னு வந்திருக்கான்... அண்ணாத்துரைக்கு மட்டுந்தான் தெரியுமாம்... எதுக்குன்னு தெரியலை... அவன் வந்தாத்தான் தெரியும்... ஆனா இப்போ நீ சொல்றதைப் பார்த்தா அவனா சதிவலையில வந்து மாட்டிக்கிட்டானோன்னு பயமா இருக்குடி... இரு அவன் வீட்டுக்கு போன் பண்ணிப் பார்க்கலாம்..."

"உங்கிட்ட சொல்லி எனக்குச் சொல்லச் சொல்வாரே... பின்ன ஏன் எதுவும் சொல்லாம..." புலம்பினாள். "இருடி... அவனுக்கிட்ட கேக்கலாம்..." என்றபடி போனடிக்க ரிங்க் போய்க் கொண்டே இருந்தது.

"சை எங்க போனாங்கன்னு தெரியலையேடி..." என்றபடி போனை வைத்துவிட்டு இருவரும் ஒன்றும் பேசாமல் அமந்திருந்தனர். அப்போது வாசலில் வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்கவே "யாரு இப்ப?" என்றபடி மல்லிகா எழ, புவனாவும் அவளுடன் எழுந்து வாசலுக்கு வர அங்கே ராம்கி கேட்டைத் திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தான்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 17 ஜூலை, 2014

நண்பேன்டா : கரு.முருகன்

ண்பேன்டா எழுதி ரொம்ப நாளாச்சி... நான் எழுதிய வரிசையில் இன்னும் சிலர் பாக்கி இருக்கிறார்கள். அதற்குள் இன்று இவனைப் பற்றி எழுதினால் சிறப்பு என்பதால் முருகனைப் பற்றி எழுதுகிறேன். இவனைப் பற்றி நிறையப் பதிவுகளில் பேசி இருக்கிறேன்.


கரு.முருகன்... இன்று பேராசிரியர் கரு.முருகன், தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி தமிழ்த் துறையில் பணிபுரிகிறான். நாங்கள் இருவரும் பால்ய கால நண்பர்கள் அல்ல. ஒரே பள்ளியில் படித்திருந்தாலும் எங்களுக்குள் எந்த ஒரு உறவும் இல்லை. கல்லூரிக்குச் சென்றதும் எங்களுக்குள் நட்பு மலர்ந்தது.

அவன் படித்தது தமிழ், எங்கள் கல்லூரியில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களை இரண்டு அல்லது மூன்று வகுப்பு மாணவர்களை ஒன்றாக வைத்து நடத்துவார்கள். அப்படி எங்கள் வகுப்புடன் தமிழ் மாணவர்களையும் இணைக்க எங்கள் நட்பு இறுக்கமானது. இருவருக்குள்ளும் நட்பு என்பது இறுக்கமானதும் எல்லோரும் கேட்ட கேள்வி ரெண்டு பேருக்கும் எப்படிடா ஒத்துப் போகுது அப்படின்னுதான்.... காரணம் அவனுக்கு பேசிக்கிட்டே இருக்கணும்... எனக்கு பேசாமல் இருக்கணும்...

முருகன் கதை, கவிதை நல்லா எழுதுவான். நாம அப்பல்லாம் எதுவும் எழுதுவதில்லை... அவனைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கும்... எப்படிடா இதெல்லாம் எழுதுறே என கேட்டால் அப்படித்தான் எனச் சிரிப்பான். நாங்கள் இருவரும் ஒன்றாகச் சென்றாலும் நான் எனது நண்பர்களுடன் கலக்க, அவன் கொஞ்சம் நேரம் கடலை போட்டுட்டு வந்தால்தான் அன்றைய பிரிவேளைகள் அவனுக்கு சந்தோஷ வேளைகளாக அமையும்.

கல்லூரியில் முருகனும் நானும் எங்களின் நண்பர்களான சுபஸ்ரீ, அம்பேத்கார், இளையராஜா, பிரபாகர் ஆகியோருடன் இணைந்து மனசு என்ற கையெழுத்துப் பிரதி நடத்தினோம். அதற்காக நிறைய மெனக்கெடல்கள்... கல்லூரி நூலகம், துறைகள், தேவகோட்டை பொது நூலகம் என எல்லா இடத்திலும் பத்திரிக்கையை கொண்டு சென்றோம். அப்போது கவி'தா', ரோஜா மற்றும் இன்னும் சில பத்திரிக்கைகள் என போட்டி இருந்தாலும் ஆசிரியர்கள் மத்தியில் எங்கள் மனசுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தினமும் கல்லூரி முடிந்ததும்  நாங்கள் சங்கமிக்கும் இடம் எங்கள் கல்வித் தந்தை பேராசிரியர், முனைவர் மு.பழனி இராகுலதாசன் அவர்கள் இல்லத்தில்தான்... ஐயாவின் மகன், மகள், அன்பு அண்ணன், தமிழ்க்குமரன், பார்த்தீபன், கனிமொழி, சுபஸ்ரீ, முருகன், நான் என அங்கும் ஒரு கூட்டம் சேரும்.  நாங்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாலும் இவன் மட்டும் ஐயாவுடன் எதாவது விவாதத்தில் இருப்பான். கல்லூரி நாட்களில் எங்களது பெரும்பாலான பொழுதுகள் ஐயா வீட்டில் அம்மாவின் சாப்பாட்டோடு கழிந்தன.

கல்லூரியில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்றால் முதல் பெயர் இவனது பெயராகத்தான் இருக்கும்... கலந்து கொள்வான்... பரிசை வென்று வருவான்... கல்லூரியில் நண்பர் பரக்கத் அலி ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்து அதில் தேர்வு செய்யப்பட்ட கதைகளை 'பல்லக்கில் ஏறும் பட்டங்கள்' என்ற தலைப்பில் தொகுப்பாகக் கொண்டு வந்தார். அதில் இவனது கதையும் பரிசுக்குறிய கதையாக தேர்வாகி வெளியாகி இருந்தது. என்னையும் முதன் முதலில் கதை எழுத வைத்த பெருமை இவனையும் ஐயாவையுமே சேரும். ஐயா வீட்டில் இருந்து கிளம்பும் போது தினமும் எங்களுடன் ஐயாவும் கிளம்புவார். அவருடன் பேசியபடி நடந்து வருவது என்பது எங்கள் இருவருக்கும் மிகப்பிடித்தமான விஷயம். நிறைய கதைகள், செய்திகள் சொல்லுவார். இரண்டு நாட்கள் நாங்கள் போகவில்லை என்றால் என்ன ரெண்டு பேரையும் வீட்டுப் பக்கம் காணோம்? என்று கல்லூரியில் பார்த்துக் கேட்பார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்

கல்லூரி நாட்களில் தாமரை, செம்மலர், சுபமங்களா போன்ற புத்தகங்களின் ஏஜெண்டாக முருகன் இருந்தான். புத்தகம் ஐயா வீட்டுக்குத்தான் வரும். மாலை கல்லூரி முடிந்ததும் அவற்றை சைக்கிளில் எடுத்துக் கொண்டு கலை இலக்கியப் பெருமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் அனைவரின் வீட்டுக்கும் சென்று போட்டு வருவோம். தேவகோட்டையில் கடைக்கோடியில் இருக்கும் அருள்சாமி ஐயா வீடு, எப்போதும் பாசமாக இருக்கும் சவரிமுத்து ஐயா வீடு என எல்லா இடத்திலும் காபியோ பலகாரமோ கிடைக்கும்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அவன் பி.எட் பண்ணினான். பின்னர் காலத்தில் போக்கால் சில பல விஷயங்கள் அவன் வாழ்வில் நடந்தேற எல்லாம் துறந்து சிங்கப்பூர் சென்றான். அங்கு சில காலம்...  அப்போதெல்லாம் எப்பவாவது அவனது வீட்டுக்குப் போனால் அம்மா 'தம்பி உனக்கிட்ட பேசணும்ன்னு சொன்னான்ய்யா... சத்த இரு... பேசிட்டுப் போகலாம்...' என்று சொல்வார்கள். அப்போது எங்கள் இருவர் வீட்டிலும் போன் இல்லை... அருகில் இருக்கும் தீயணைப்புத் துறை அலுவலகத்துக்குத்தான் கூப்பிடுவான். கொஞ்ச நேரம் அவனுடன் பேசிவிட்டு வருவேன்.

சிங்கப்பூருக்கு குட்பை சொல்லிவிட்டு வந்தான்... ஊரில் பெண் பார்த்து குன்றக்குடி அடிகளார் தலைமையில் திருமணம்... திருமணத்தன்று மொய் எழுதியது நானும் சில நண்பர்களுமே... நண்பர்கள் பணம் கேட்ட அவனது உறவுகளுக்கு கொடுத்ததை குறித்து வைக்க மறக்க கடைசியில் எண்ணும் போது சில ஆயிரம் குறைந்தது. அதை அவனிடம் சொல்ல சரி எதாயிருந்தாலும் வீட்டில் போய் பேசிக்கலாம் என்றான். அப்படி வீட்டுக்குப் போனதும் விபரம் தெரிந்த வீட்டுப் பெருசுகள் அதெப்படி இவ்வளவு பணம் குறையும் என கேள்விகள் கேட்க, இதுல கேள்வி கேட்க என்ன இருக்கு... செலவழிச்சது நாந்தானே... உங்க காசு இல்லையே... என்று சத்தம் போட்டு விட்டு டேய் தூக்கி மேல போடு அப்புறம் பாத்துப்போம் என்றான். அப்புறம் அந்தக் கணக்கை நாங்கள் பார்க்கவேயில்லை.

இருவரும் ஒன்றாக கணிப்பொறி மையம் ஆரம்பித்தது... நாங்கள் படித்த கல்லூரியில் தற்காலிகமாக இருவரும் கணிப்பொறித்துறையில் பணியாற்றியது... என காலங்கள் ஓட, சில பல காரணங்களால் எங்கள் உறவுக்குள் விரிசல் வந்தது. எப்படிப்பட்ட நட்பா இருந்தாலும் எதோ ஒரு காரணம் பிரிவைக் கொண்டு வருங்கிறதை சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாமலையில பாக்கலை... அப்படி ஒரு பிரிவு... ரோட்டில் சந்தித்தால் சின்னச் சிரிப்பு... என்ன நல்லாயிருக்கியா? அம்புட்டுத்தான்... அது கொஞ்சக் காலம் ஓடிச்சி...

அப்புறம் எங்களுக்குள் மீண்டும் சச்சரவுகள் நீங்கிய உறவு மலர்ந்தது... அவனும் எம்.ஏ., எம்.பில் பண்ணி முனைவர் பட்டம் பெற்று இன்று கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியராக இருக்கிறான். இரண்டு மூன்று புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறான். அன்பான குடும்பம் அவனுக்குக் கிடைத்த வரம்.... இன்று வீடு, கார் என செட்டிலாகிவிட்டான்.

ஏறத்தாழ இருபது ஆண்டுகால நட்பு... கல்லூரி முதலாமாண்டில் தொடங்கி இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது... இடையில் சில பிணக்குகள்... எல்லாம் மறைந்து இப்போ சந்தோஷ நட்பாய்... என்ன ஒண்ணு எங்காவது போக வேண்டும் என்றால் சொன்ன நேரத்துக்கு வரும் கலையை அவன் இன்னும் கற்கவில்லை... எட்டு மணி என்றால் இந்தாக் கிளம்பிட்டேன் என ஒன்பது மணிதான்...

சரி... என்ன விஷேசம்ன்னு சொல்லவேயில்லையில்ல... இன்று மாலை தேவகோட்டை ரோட்டரி சங்கத்தின் 2014-2015ஆம் ஆண்டுக்கான தலைவராக பொறுப்பேற்க உள்ளான். இன்று நடக்கும் விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிலையை அடைய அவனது பேச்சுத் திறமையும்... உழைப்பும்தான் காரணம்... இந்த ஒராண்டு கால தலைவர் பணியில் அவனது முயற்சிகளும்... செயல்களும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

வாழ்த்துக்கள் நண்பா...

-நண்பேன்டா இன்னும் வரும்.
-'பரிவை' சே.குமார்.