மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 30 ஜனவரி, 2013

கமலுக்கு ஆதரவாக விஜயகாந்த் அறிக்கை



-'பரிவை' சே.குமார்

பிறவிக்குணம்

ரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்யும் அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. கசாலையில் சாணியும் மூத்திரமும் கலந்து உடலெங்கும் அழுக்கேறியிருந்த மாடுகள் வைக்கோலை வேண்டா வெறுப்பாக மென்று கொண்டிருந்தன. கோழிக்குஞ்சுகள் குளிருக்கு இதமாக தாயின் இறக்கைக்குள் தஞ்சம் அடைந்திருந்தன.மழை தூற ஆரம்பித்தபோது காணாமல் போன மின்சாரம் இரண்டு நாட்களாக எட்டிப்பார்க்கவில்லை. கருவ மரங்களுக்கு இடையே வரும் மின்சாரக் கம்பியில் எங்காவது மரம் விழுந்து கிடக்கலாம். எப்பவும் போல் மழை நின்றதும் போய்ப் பார்த்து சரி செய்தால்தான் மின்சாரம் வரும்... அதுவரைக்கும் வீட்டிற்குள் மசமசவென்று எரியும் அரிக்கேன் விளக்குதான்.

'சே... இந்த மழை நசநசத்து பொழப்பைக் கெடுக்குது... வெளிய தெருவ போகமுடியுதா..?' புலம்பினாள் ராமாயி.

தொடர்ந்து மழை பெய்வதைப் பார்த்தால் இந்த வருஷம் விவசாயம் நல்லாயிருக்கும். இந்த மழைக்கே கண்மாய் நிறையக்கூடிய வாய்ப்பு இருக்கு... மழை ஆரம்பிக்கும் போதே இளந்தாரிப்பசங்க போய் பக்கத்து ஊருக்குப் போற குளக்காலை அடைத்து கண்மாய்க்கரையை வெட்டி திருப்பி விட்டாச்சு. அதனால கண்மாய்க்கு நீர் வரத்து அதிகம் இருக்கும்.

வானம் இடித்துக் கொண்டிருக்க, மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. ''ம்... அப்பவே அடிச்சிக்கிட்டேன்... வயல்ல முள்ளப் புடுங்கி கொழுஞ்சி பறிச்சிப் போடுங்கன்னு கேட்டாத்தானே... இந்த மனுசன் காதுல வாங்குனாத்தானே... வெள்ளையும் சொள்ளையுமா கிளம்பிப் போனா மட்டும் போதுமா... இந்த தண்ணியில எப்புடி சுத்தம் பண்ண முடியும். அவனவன் மழை விட்டதும் ஏரக் கட்டப் போறான்.நாம முள்ளுப் புடுங்கலாம். எல்லாம் எந்தலையெழுத்து... நாந்தான் லோலோன்னு கத்துறேன்..." கத்தலைத் தொடங்கினாள் ராமாயி.

"எதுக்கு இப்ப கத்துறே... பிடுங்கலாம்...ஈரத்துல புடுங்க நல்லா வரும் ஒருநா வேலை" என்று சொன்ன மாணிக்கம், 'எப்ப புடுங்கினாலும் நாந்தானே புடுங்கணும்... நீ வரப்போறியா..?' மனதிற்குள் கேட்டுக்கொண்டார்.

வயல் வரப்பு, ஆடு மாடு என்று ராமாயி ஒவ்வொன்றாக ஆரம்பிக்க, எதையும் கண்டு கொள்ளாமல் புகையிலையை எடுத்து கையில் தேய்த்து வாயில் அடக்கிக் கொண்டார்.

மழையோடு பால் கொண்டு போனவர்கள் திரும்பி விட்டனர் என்பது வீதியில் கேட்கும் பேச்சுக்குரலில் தெரிந்தது. "என்ன செல்லம்மா, கம்மாயில தண்ணி ஏறிடுச்சா..? வீட்டிற்குள் இருந்து புகையிலை குதப்பி வாயில் எச்சில் வழியாதவாறு கேட்டார் மாணிக்கம்.

"அந்த சனியனைத்தான் துப்பிட்டு பேசுறது" வெடித்தாள் ராமாயி.

"பெரிய முட்டு மறையிறமாதிரி இருக்கு மாமா இன்னும் சறுக்கை போகலை... கொளக்கால்ல அவ்வளவா தண்ணி இல்லை..." அவரது கேள்விக்குப் பதிலாக வெளியில் இருந்து குரல் வந்தது. பெரிய முட்டு என்பது கண்மாய்க்குள் இருக்கும் ஒரு சில மேடான பகுதிகளில் பெரியது. அந்தப் பகுதி தண்ணீருக்குள் அமுங்கினால் அந்த வருட நல்ல விளைச்சல் என்பது அவர்கள் வழிவழியாக வைத்திருக்கும் கணக்கு.

"எங்க ராசுப் பெரியப்பா வேற தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக்கிட்டு கிடக்குதாம்... இந்த அடைமழைக்கு போயிடுதோ என்னவோ..." புலம்பினாள் ராமாயி.

"அட ஏன் ரெண்டு நாளைக்கு முன்னாலதான் ராமு மச்சானைப் பார்த்தேன். அவரு நல்லாயிருக்காராம். கொஞ்ச நாள் இருந்துட்டுப் போகட்டுமே... பொயிட்டா பாக்கவா போறோம்..."

"யாரு கண்டா... இந்த மழையில போனா எப்புடி சாதி சனத்தை இழுத்துப் போறது..."

"உனக்கு நல்ல பேச்சே வராதா..?"

"மாணிக்கண்ணே..."

"என்ன ராமசாமி.. என்ன விசயம்?"

"கம்மாக்கரை உடைக்கிற மாதிரி இருக்குண்ணே... நம்ம சறுக்கைக்குப் பக்கத்துல கரை சரியில்லை... தண்ணி தளும்புது..." படபடப்பாக பேசினான் ராமசாமி.

"அடி ஆத்தி ராத்திரி உடைப்பு ஏற்பட்டா தண்ணியெல்லாம் போயி நம்ம தலையில கல்லு விழுந்துருமே...எல்லாருக்கும் குரல் கொடு நான் இந்தா வாரேன்." என்றபடி தோளில் துண்டைப் போட்டுக் கொணடு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு மழையில் இறங்கினார்.

"தலையில எதாவது எடுத்துப் போட்டுக்கிட்டு போங்க... போயி ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இளந்தாரிப்பயலுகளை வேலை ஏவிட்டு வாங்க. அதை விட்டுட்டு மழயில நனைஞ்சுக்கிட்டு மாங்கு மாங்குன்னு மண்ணை வெட்டிட்டு இங்க வந்து அது வலிக்குது இது வலிக்குதுன்னு கிடக்கப்புடாது சொல்லிப்புட்டேன்." முதுகுக்குப் பின்னால் கூவினாள் ராமாயி.

வீட்டிற்கு ஒருவர் பொதுக்காரியங்களுக்கு வரவேண்டும் என்பது ஊர்க்கட்டுப்பாடு. இருந்தவர்களெல்லாம் மண்வெட்டி, கூடை, சாக்கு சகிதமாக கிளம்பி வந்தனர்.

ராமசாமி காட்டிய இடத்தில் கரை உடைப்பதற்கான அறிகுறி தென்பட்டது. "ஏம்ப்பா... ரெண்டு இளவட்டம் போயி குளக்கால்ல போட்ட அணையை உடச்சு விட்டுட்டு கம்மாக்கரைய மண்மூடை போட்டு அடச்சுட்டு வாங்க"என்று மாணிக்கம் சொன்னதும் சில இளைஞர்கள் கிளம்பினர்.

மற்றவர்கள கரையை அடைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினர். கேலியும் கிண்டலுமாக பேச்சு மட்டும் குறையவில்லை. "பேச்சைக் குறைச்சுட்டு வேலையைப் பாருங்க... இருட்டுறதுக்குள்ள முடிக்கணும்"

"அப்பா... ரெண்டு பேரு மண்ணை வெட்டிக் கொடுங்க... ஆத்தா அதை சாக்குகள்ள நிரப்புங்க... தம்பி தூக்கி அடுக்குங்க..." ஆளாளுக்கு வேலை பார்க்க மழையிலும் வேலை வேகமாக நடந்தது.

"என்ன எழவு சனியனோ தெரியலை... வருசா வருசம் கண்மாய் வெட்டுறமுன்னு இந்தக் கடைசியில இருந்து அந்தக் கடைசி வரைக்கும் ஒரே வழியா வழிச்சு... அதை அளந்து காசு பாக்குறாங்க... நல்லா வெட்டி கரையில அள்ளிப் போட்டு கரைய உயர்த்துனாத்தானே உடைக்காது... நாமளும் இந்த மழையில நனைஞ்சுக்கிட்டு மண்ணு வெட்ட வேண்டியதில்லையில்ல..."

"ஆமா வருசா வருசம் வழிச்சே கண்மாய் தாழ்ந்து வயல் உயர்ந்து போச்சு. இதுல நல்லா வெட்டவேற வேணுமாக்கும்... எதோ இன்னும் கண்மாய்கள் இருக்கிறதால ஒரு சில பேரு வழிச்சு சம்பாதிக்கிறாங்க..."

பேச்சும் சிரிப்புமாக வேலையில் கவனம் செய்து ஒரு வழியாக அடைத்துவிட்டு வீடு திரும்பினர். அனைவரும் சொட்டச் சொட்ட நனைந்திருந்தனர்.

மாணிக்கம் மழையில் நனைந்து வந்திருந்ததால் ஆத்திரமான ராமாயி "இப்புடி நனைஞ்சுட்டு வந்தா நாளைக்கு காச்சல்ன்னு படுத்தா யார் பாக்குறது.ஆடு மாடுகதான் மனுசளை பாடாப்படுத்துதுகன்னா எல்லாந்தெரிஞ்ச இவுகளும் படுத்துறாக... போகயிலயே தலைதலையா அடிச்சுக்கிட்டேன்... ம்... கேக்கமாட்டாங்களே... எம் பேச்சைக் கேட்டிருந்த எனக்கெதுக்கு இந்த தலையெழுத்து..." என்று எதேதோ பேச, அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை.

ராமாயி வாய் முகூர்த்தமோ என்னவோ காலையில் எழ முடியவில்லை இருமல்... தும்மல்... காய்ச்சல் என்று எல்லாம் ஒன்றாய்...

அவரது நிலை கண்ட ராமாயி, "எனக்குன்னு வந்து வாய்க்கிதுக பாரு... நல்லா... வந்ததும் அப்படித்தான் இருக்கு... பெத்ததுகளும் அப்படித்தான் இருக்கு... இந்தா மழை விட்ட மாதிரி இருக்கு... மாடுகளை கொண்டு போய குளிப்பாட்டிட்டு கொள்ளைப்பக்கம் விட்டுட்டு வரலாம்... ரெண்டு நாளா கட்டுத்தொறையிலயே கிடக்குது... அதுகளும் காலாற பொயிட்டு வரும்... இவுகதான் சாஞ்சுட்டாகளே... ஊர் வேலை பாக்க ஆள் இருக்கும்... உள்ள வேலை பார்க்கத்தான் ஆள் இருக்காது... நான் என்ன சொன்னாலும் கேக்கிறதில்லைங்கிறது இன்னைக்கு நேத்தா இருக்கு,,, முப்பது வருசமா இதேதானே... யாராவது மடை எடுத்துக்கிச்சுன்னு சொல்லட்டும் காய்ச்சலாவது தலைவலியாவது மொத ஆளா நிப்பாக..."

அவள் பாட்டுக்கு கத்த, படுக்கையில் இருந்து எழாமல் கண்ணை இறுக்க மூடிக் கொண்ட மாணிக்கம், 'இது பிறவிக்குணம்... சவக்காரம் போட்டுக் கழுவினாலும் மண்டை மண்ணுக்குள்ள போற வரைக்கும் போகாது' என்று நினைத்துக் கொண்டார்.

எனது சிறுகதைகள் தளத்தில் பகிர்ந்தது மீள் பதிவாக மீண்டும் உங்கள் பார்வைக்கு....
-'பரிவை' சே.குமார்.

"தமிழகம் நான் வெளியேற வேண்டும் என விரும்புகிறது" கமல் பேட்டி



விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக சென்னையில் பேட்டியளித்த கமல் , "என்னுடைய படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை எப்படி கேலி செய்ய முடியும். என்னுடைய இந்த படத்தை எடுத்திருப்பதாக பெரும் செலவு செய்திருக்கிறேன். என்னுடைய திரையுலகை அனுபவத்தையும் எனக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டும் இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்தபடத்துக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன்.

படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இப்போது நான் உங்களுக்கு பேட்டி அளித்து கொண்டு இருக்கும் இந்த வீடு ‌எனது இல்லை. கோர்ட்டில் வழக்கு நடந்தபோது நீதிபதி கேட்டார். ஒருவரின் முதலீடுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா என்று கேட்டார். நான் இப்போதும் சொல்கிறேன். நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம். நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்க தயாராக இருக்கிறேன்.


எனக்கு மதம் கிடையாது, அரசியல் கிடையாது. எனக்கு மனிதநேயம் முக்கியம். மனதில் பட்டதை தைரியமாக எடுத்து சொல்பவன். இந்தப்படம் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் கிடையாது. எதற்காக எனது படத்தை தடை செய்கிறார்கள் என்று புரியவி‌ல்லை.

என்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். ஒருவேளை தமிழகம் மதச்சார்ப்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால் நிச்சயம் வேறு ஒரு மாநிலத்தை தேடி போவேன். அதற்காக தமிழகத்தை விட்டு வெளியேறவும் நான் தயார். வேறு மாநிலமும் கிடைக்காவிட்டால் வேறு நாட்டை தேடி போவேன்.

இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் முஸ்லிம்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள்.


கேரளாவில் மலபார், ஐதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு பேசினார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பிய நிருபர் ஒருவர், நீங்கள் தமிழகத்தை வெளியேற வேண்டும் என விரும்புகிறீர்களா என கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகம் தான் நான் வெளியேற வேண்டும் என விரும்புகிறது என கமல் வேதனையுடன் தெரிவித்தார்.


செய்தி : தினமலர்.
-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 29 ஜனவரி, 2013

ஒற்றைச் சிறகு - தமிழருவிமணியனின் முதல் சிறுகதை!

(ஓவியம் : ம.செ.,)

லகம் அழிவதற்கான பிரளயம் பெருக்கெடுத்துவிட்டதுபோல் இரவு முழுவதும் பேரிரைச்சலுடன் மழையின் ஊழிக்கூத்து. பெரியவர் குமரேசன் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டு இருந்தார். மாடி அறையின் கூரை மீது மழை விழும் ஓசை, இரவின் அமைதியை அழித்தது. வெறிகொண்ட பேயின் கொடுங்கரங்களால் அறைபடுவதுபோல் சாளரங்கள் சடசடத்தன. தொலைவில் டிரான்ஸ்ஃபார்மர் வெடிக்கும் சத்தம் இடியின் முழக்கமாக எதிரொலித்தது. அடுத்த கணம் மின் விளக்கு அணைந்து அறையில் இருளின் ஆதிக்கம் பரவியது.

 குமரேசன் எழுந்து அமர்ந்தார். அவருடைய வாழ்வின் கடைசிப் பொழுது வாசற்படி கடந்து கண் முன் வந்து நிற்பதாக உள்ளுக்குள் உணர்ந்தார். மெள்ள எழுந்து மெழுகுத் திரியைத் தேடி எடுத்துத் தீக்குச்சியால் ஒளி வளர்த்தார். மேசையின் மீது இருந்த மகாத்மாவின் படம் அவர் கண்களில் மங்கலாகத் தெரிந்தது. மீண்டும் படுக்கையில் வந்து அமர்ந்தவர், விழிகளை மூடிக்கொண்டார். எண்பது வயது வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்வுகள் அவருடைய நினைவுத் திரையில் படம் படமாக விரிந்தன. படித்துவிட்டு வேலை தேடாமல், சமூக சேவை, சர்வோதயம் என்று சுற்றியபோது, தந்தை சொன்ன சுடுசொற்கள் அவர் நெஞ்சில் நிழலாடின. அன்று வளர்த்தெடுத்த வைராக்கியத்தை இந்த இரவு வரை காப்பாற்றிவிட்ட கம்பீரம் அவர் முகத்தில் பளிச்சிட்டது.

மரணம் நெருங்கும் நேரம் மனிதர்களுக்குத் தெரிந்துவிடும் என்று அவருடைய நண்பர் ஆனந்தமூர்த்தி அடிக்கடி சொன்னது உண்மைதான் என்று குமரேசனுக்கு, இந்த இரவில் புரிந்தது. பரந்துகிடக்கும் பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு மூலையில் ஓர் அற்ப உயிர் விடைபெற்று யாரும் அறியா சூட்சும வெளியில் கலந்துவிடும் தருணத்தை வரவேற்கத் தயாராகிவிட்டவர்போல், வாய் திறந்து 'ஈஸ்வரா’ என்று முனகியபடி கையெடுத்துக் கும்பிட்டார் குமரேசன். அவருக்காகவே வாழ்ந்த மனைவியும் அவரால் வாழ்வு பெற்ற மகனும் மகளும் நினைவில் வந்து நின்றபோது, விழிகளில் நீர் வழிந்தது.

அவருடைய உடல் முழுவதும் சொல்லில் விளங்காத சோர்வு படர்ந்து பரவியது. கால்களை நீட்டியபடி படுக்க வேண்டும்போல் தோன்றியது. அதற்கு முன்பு எதையோ எண்ணியவராக எழுந்து, முயன்று நடந்து, அறைக் கதவின் தாளைத் திறந்துவிட்டுப் படுக்கையை நெருங்கினார். பாடையில் பிணம் கிடத்தப்படுவது போன்று கால்களை நீட்டிப் படுத்தார். மார்பின் மேல் இரண்டு கைகளையும் வைத்தபடி காந்தியின் படத்தை இறுதியாகத் தரிசித்து இமைகளை மூடிக்கொண்டார். ஓங்கி வீசிய காற்றில் அறைக் கதவு படீர் என்ற சத்தத் துடன் திறந்துகொண்டது. மழையின் பலத்த சிதறல் அறை முழுவதும் தெறித்தது. மெழுகுத் திரியின் வெளிச்சம் காற்றில் கரைந்தது. வானத்தில் பெரிய பொத்தல் விழுந்துவிட்டதுபோல் மழையோ நிற்காமல் பொழிந்துகொண்டு இருந்தது.

மயிலாப்பூர், சுந்தரம் ஐயர் தெருவில் இருந்த தன் வீட்டின் கீழ்த் தளத்தை, குமரேசன் தன் நண்பரான ஆனந்தமூர்த்தியின் குடும்பத்துக்கு மிகக் குறைந்த வாடகைக்கு விட்டிருந்தார். யாரும் எதையும் இலவசமாகப் பெற்று அனுபவிப்பதும், எதன் பொருட்டும் எவர் பொருட்டும் பிறர் உதவியில் வாழ்வதும் குமரேசனுக்குப் பிடிக்காது. அவருடைய மகன் தமிழினியன், திருச்சியில் காவல் துறை அதிகாரியாகவும்... மகள் பூங்குழலி, விழுப்புரம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றுகின்றனர். மனைவி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதய நோயால் கண் மூடிய பின்பு தனி மரமாகிவிட்ட குமரேசன், அவ்வளவு பெரிய வீட்டில்இருக் கப் பிடிக்காமல் மேல் தளத்தில் ஒரு சிறிய படுக்கையறையும் குளியலறையும் கட்டி முடித்து அங்கு இடம் பெயர்ந்தார்.

தனக்கு வேண்டிய உணவைச் சமைத்துக்கொள்வதிலும், தன்னுடைய துணிகளைத் தானே துவைத்துக்கொள்வதிலும் குமரேசனுக்கு ஒரு பெருமிதம் இருந்தது. தான் பிறருக்குப் பயன்பட வேண்டுமே தவிர, தனக்குப் பிறர் பயன்படக் கூடாது என்ற கொள்கையை குமரேசன் ஒரு வைராக்கியமாகவே பின்பற்றிவந்தார். ஆனந்தமூர்த்திக்கு இது ஓர் அர்த்தமற்ற அசட்டுப் பிடிவாதமாகவேபட்டது. வாய்ப்பு நேரும்போது எல்லாம் அவர் குமரேசனிடம் வாதம் செய்து பார்த்தார்.

''குமரேசா! ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதற்குப் பெயர்தான் வாழ்க்கை. யாரும் தனியாகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவிட முடியாது. நாம் கண்ணை மூடி இந்த மண்ணைவிட்டுப் போகும்போதும் நாலு பேர் உதவி தேவைப்படும். இந்த வயதில் எதற்குத் தனியாக இருந்து சிரமப்படணும்? நான் என் பிள்ளையோடு இல்லையா? உன் மகன் அவன் குடும்பத்தோடு வந்து இருக்கும்படி வருந்தி வருந்திக் கூப்பிட றானே. உன் மகள் வீட்டில் தங்கறதுக்கு நீ யோசிக்கலாம். மகனிடம் கௌரவம் பார்ப்பது நியாயமா?’ என்று ஆனந்தமூர்த்தி கேட்கும்போது எல்லாம் குமரேசனிடம் இருந்து ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைக்கும்.

கல்லூரிக் காலம் முதல் ஆனந்தமூர்த்தியிடம்தான் குமரேசன் நெஞ்சம் கலந்து நெருங்கிப் பழகினார். இளமையில் ஒருநாள் மெரினா கடற்கரையில் மாலை நேரம் இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது 'ஆனந்தம்! நேற்று என் அப்பா என்னிடம் கோபப்பட்டார். 'எம்.ஏ., படித்து ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை தேடுவதில் நாட்டம் செலுத்தாமல், சமூக சேவை, சர்வோதயம் என்று சுற்றித் திரிவது நியாயமா? பிள்ளையை வளர்த்துப் படிக்கவைப்பது எதற்காக? வயதான காலத்தில் தாய், தந்தைக்குக் கஞ்சி ஊற்றுவான் என்பதற்குத்தானே?! இப்படிப் பொறுப்பு இல்லாமல் நீ சுற்றித் திரிவதற்கா உன்னைப் பெற்றோம்?’ என்று சத்தம் போட்டார். மனசு ரொம்ப வலிக்குது’ என்ற குமரேசனிடம், 'உன் அப்பா சொல்வதில் என்ன தவறு?’ என்றான் ஆனந்தமூர்த்தி.

குமரேசன் கடல் அலைகளைப் பார்த்தபடி சிறிது நேரம் பேசாமல் இருந்தான். 'கைம்மாறு கருதாத அன்பே, இந்த உலகத்தில் இல்லையா? வாழ்க்கை என்பது வெறும் கொடுக்கல் வாங்கல் வியாபாரமா? முதலில் கொடுத்துப் பிறகு திரும்பப் பெறுவதுதான் பெற்றோர் பாசமா? வயோதிகத்தில் வாழ்க்கை உத்தரவாதம்தான் பிள்ளை வளர்ப்பில் தாய், தந்தை எதிர்பார்ப்பா? அன்பு, பாசம் என்பவை உன்னதமான உணர்வுகள் இல்லையா? பிள்ளைகளிடம் காட்டும் அன்பிலேயே சுயநலம் இருந்தால், அடுத்தவரிடம் இவர் களால் மழையைப் போல் எதையும் எதிர் பாராமல் எப்படிப் பாசத்தைப் பகிர்ந்துகொள்ள முடியும்?’ என்று அவன் பொங்கிய போது, ஆனந்தமூர்த்தி எந்த மறுமொழியும் சொல்லாமல் மௌனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

'ஆனந்தம்! நாளை முதல் தீவிரமாக வேலை தேடப்போகிறேன். இனி, என் பெற்றோர்க்கு நான் கொடுப்பவனாக மட்டுமே இருப்பேன். நாளை நான் மணம் முடித்து பிள்ளைகள் பெற்றாலும் அவர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் நான் கொடுப்பேன். சாகும் வரை அவர்களிடம் கை நீட்டி எதையும் பெற மாட்டேன். யாரிடத்தும் எதையும் எதிர்பாராத அன்பு ஒன்றுதான் இன்று முதல் என் தவமாக இருக்கும்’ என்று தீர்க்கமான குரலில் குமரேசன் அன்று சொன்னதை ஆனந்தமூர்த்தி பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

காலம் அதன் கதியில் ஓயாமல் ஓடியது. ஒரு தனியார் பள்ளியில் குமரேசனுக்கு வேலை கிடைத்தது. கல்விப் பணியைப் பகலிலும், காந்தியக் கடமைகளை இரவிலும் பங்கிட்டுப் பணியாற்றியவன் வாழ்க்கைப் பாதையில், சுசீலா என்ற வசந்தம் வழி மறித்தது. இரண்டு பிள்ளைகள் ஒழுக்கம் தழுவிய கல்வியைக் கற்று முடித்தனர். பெற்றோர் ஒருவர் பின் ஒருவராகக் குறைவின்றிக் கண் மூடினர். இல்லற வாழ்வில் பிள்ளைகள் இடம் பெயர்ந்தனர். காரியம் யாவினும் கை கொடுத்த மனைவியைக் காலம் பறித்தது. ஆனந்தமூர்த்தி தந்த வாடகைப் பணம் அடையாறு அநாதை இல்லத்துக்குச் சென்றது. ஓய்வூதியத்தில் குறைந்த தேவையில் குமரேசன் வாழ்க்கை நிறைவாக நடந்தது.

மழை இன்னும் விட்டபாடு இல்லை. காரிருள் கலைந்து வானம் மங்கலாக வெளுத்து இருந்தது. சோடை இழந்திருந்த சூரியனை மேகங்கள் லேசாக மறைத்து இருந்தன. ஆனந்தமூர்த்தி வாசற் கதவைத் திறந்து பேப்பர் பையன் வீசி எறிந்திருந்த காலைப் பத்திரிகையைக் கையில் எடுத்தார். தாள்கள் தண்ணீரின் ஈரத்தில் நனைந்துஇருந்தன. ஒவ்வொரு நாள் காலையிலும் பத்திரிகையோடு மாடிப் படி ஏறி, ஆனந்தமூர்த்தி அறைக் கதவைத் தட்டுவார்.அற்புதமான சுவையுடன் குமரேசன் கலந்துகொடுக்கும் காபி அறை முழுவதும் மணக்கும். இருவரும் காபி குடித்தபடி பத்திரிகைச் செய்திகளைப் பரிமாறிக்கொள்வார்கள். கொஞ்ச நேரத்தில் இருவரும் சுந்தரம் ஐயர் தெருவில் தெற்கு நோக்கி நடந்து, சாய்பாபா கோயிலைக் கடந்து, தெப்பக் குளத்தைச் சுற்றிக்கொண்டு, கபாலீஸ்வரர் கோயில் கோபுரத்தைக் கையெடுத்துக் கும்பிட்டு 'ஈஸ்வரா’ என்று வாய்விட்டுக் குரல் கொடுத்து, சாந்தோம் சர்ச் வழியாகக் காலாற மெதுவாகச் சென்று, காந்தி சிலை அருகில் அரைமணி நேரம் கண்களை மூடியபடி அமர்ந்திருப் பார்கள். மாலையிலும் இதே காரியம்தான் மாறாமல் நடக்கும்.

குமரேசன்தான் மாதம்தோறும் பேப்பர் காசு கொடுப்பார். ஆனந்தமூர்த்தி வீட்டில் இருந்து எதையும் அவர் ஏற்றது இல்லை. 'குமரேசா! சுயமரியாதை இழந்தவன்தான் உன்னுடன் நண்பனாக நீடிக்க முடியும்’ என்று ஆனந்தமூர்த்தி சொல்லும்போது, 'ஆனந்தம்! சரியோ, தவறோ கொடுப்பவனாகவே இறுதி வரை இருந்துவிட்டுப் போக எனக்கு நீ உதவியாக இருக்கக் கூடாதா?’ என்று அவர் சிரிப்பார்.

நண்பனின் வறட்டுப் பிடிவாதங்களை நெஞ்சில் அசைபோட்டபடி மாடிக்குச் சென்ற ஆனந்தமூர்த்தி, அச்சத்தில்உறைந்து போனார். அறைக் கதவு திறந்துகிடந்தது. மழைச் சாரலின் தெறிப்பில் தரையில் ஈரம் படர்ந்திருந்தது. சடலம்போல் படுக்கையில் அசைவற்று நீட்டிப் படுத்து இருந்த குமரேசன் முகத்தில் ஆழ்ந்த அமைதி படிந்திருந்தது. கலவரத்துடன் 'குமரேசா’ என்று குரல் கொடுத்த படி அவருடைய கைகளை ஆனந்தமூர்த்தி பற்றியபோது அவை தொய்ந்து விழுந்தன. பதற்றத்துடன் உடலை அசைத்துப் பார்த்தார். எந்த உணர்வும் இல்லை. மூக்கில் விரல்வைத்தார். சுவாசத்துக்கான சுவடே இல்லை. அறுபது ஆண்டு ஆழமான நட்பு அறுபட்டுவிட்டது. நெஞ்சில் உறைத்ததும் ஆனந்தமூர்த்தியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 'குமரேசா’ என்ற அவருடைய அழுகுரல் வீதி எங்கும் நிறைந்தது.

இறப்புச் செய்தி சேர்ந்ததும் மாலைக்குள் உறவுகள் கூடிவிட்டன. மகனும் மகளும் தந்தையின் மார்பில் முகம் புதைத்துக் கண்ணீர் சிந்தினர். 'ஆனாலும், இந்தப் பெரியவருக்கு இவ்வளவு வைராக்கியம் இருந்திருக்கக் கூடாது’ என்று விமர்சனங்கள் எழுந்தன. 'அமர வாகனம்’ வாசலில் வந்து நின்றது. தாங்க முடியாத சோகத்துடன் ஆனந்தமூர்த்தி நெஞ்சை அழுத்திப் பிடித்தபடி ஓர் மூலையில் அமர்ந்து இருந்தார். 'ஆனந்தம்! என் தந்தை என்னிடம் பிரதிபலன் எதிர்பார்த்து அன்பு செய்தார். நான் என் பிள்ளைகளிடம் இன்று வரை எதையும் எதிர்பார்க்கவில்லை, இந்தப் பையில் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. பத்திரமாக எடுத்து வை. எப்படியும் உனக்கு முன்னால் நான்தான் போவேன். இந்தப் பணத்தில் பிணம் சுமக்கும் வாகனத்தை வரவழை. கொடுக்கும் காசுக்கு அவர்களே என் சடலம் சுமந்து மின் தகனம் செய்துவிடுவார்கள். போகும்போதும் நான் யாருக்கும் கடன்வைக்க விரும்பவில்லை’ என்று குமரேசன் சொல்லிவிட்டுப் பணம் கொடுத்த சம்பவம் அவர் நினைவில் நின்று நெஞ்சைக் கிழித்தது.

ஈமக் கடன்கள் நியதி மாறாமல் நடந்தேறின. சேகண்டியும் சங்கும் வீதியில் விட்டுவிட்டு அலறின. மாடி அறையில் இருந்து சடலம் அப்புறப்படுத்தப்பட்டது. மேசையின் மேல், படத்தில் இருந்த மகாத்மா மட்டும் குமரேசன் வாழ்வுக்கு மௌன சாட்சியாகத் தனித்துவிடப்பட்டார். அமர வாகனம் மயிலாப்பூர் மயான பூமியை அடைந்தது. குமரேசனின் பொய்யுடல் மின் தகன மேடையில் கிடத்தப் பட்டது. பிணத்தின் முகத்திலும் மார்பிலும் ஈக்கள் மொய்த்தன. அருகில் நின்ற ஆனந்த மூர்த்தியின் விழிகளில் இருந்து நீர் அருவியாக வழிந்துகொண்டு இருந்தது.

குமரேசனின் வறட்டுத்தனமான வாழ்க்கை வைராக்கியத்தை ஆனந்தமூர்த்தி அழுதபடி நெஞ்சில் அசைபோட்டார். 'எவ்வளவு பெரிய முட்டாள்தனம்’ என்று யோசித்தார். 'பெற்றவர்கள் வெறும் பணத்தையா பிள்ளைகளிடம் எதிர்பார்க்கின்றனர்? வயோதிகத்தில் வந்து தாங்குவார்கள் என்றா பிள்ளைகளிடம் பெற்றோர் பாசத்தைப் பொழிகின்றனர்? பாசத்தின் பகிர்தல் அல்லவா அன்பின் ஆதர்சம். மடியில் தலைவைத்துப் பிள்ளை படுத்தால் போதுமே ஒரு தாய்க்கு, ஒரு வேட்டியும் சட்டையும் அன்போடு மகன் வாங்கித் தந்தால் தந்தையின் மனம் ஆனந்தக் கூத்தாடுமே. காந்தியம்கற்ற இந்த முட்டாளுக்கு ஒரு சாதாரண வாழ்க்கை உண்மை சாகும் வரை விளங்காமல் போய்விட்டதே. என்னால் முடிந்ததை எல்லாம் என் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டேன். எதையும் அவர்களிடம் இருந்து எனக்குஎன்று எடுத்துக்கொள்ளவில்லை என்று பெருமை பேசுவானே. கொடுப்பதுஇன்பம் என்றால், அன்பை இன்னொரு உயிரிடம் இருந்து பெறுவதுதானே பேரின்பம். அன்பைத் தருவதும் பெறுவதும் அல்லவா வாழ்க்கை நதியின் இரு கரைகள். பெற்றோர் குழந்தைகளைப் பேணுவதும் பிள்ளைகள் பெற்றோரைப் பராமரிப்பதும் நம் பண்பாடு செதுக்கிக்கொடுத்த பாரம் பரியச் சங்கிலி அல்லவா. ஒற்றைச் சிறகோடு ஒரு பறவை பறக்கக்கூடுமா? தவறான வாழ்க்கைப் புரிதலில் குமரேசன் ஒற்றைச் சிறகோடு ஒடுங்கிப் போய்விட்ட வனா?’ நினைக்க நினைக்க ஆனந்தமூர்த்திக்கு நெஞ்சம் அதிகமாக வலித்தது.

'எல்லோரும் கடைசியாக ஒரு முறை முகத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்’-வெட்டியானின் குரல் வேகமாக ஒலித்தது. மின் தகன மேடையில் சடலம் கிடத்தப் பட்டது. குமரேசனின் பிள்ளையும் ஆனந்த மூர்த்தியும் மின் கலத்தின் வாய்ப்புறத்தில் ஆற்ற முடியாமல் அழுதபடி சடலத்தைத் தள்ளியதும், 'அரை மணி நேரம் காத்திருந்து சாம்பலை வாங்கிச் செல்லுங்கள்’ என்ற அறிவிப்பு எழுந்தது. அவ்வளவு நேரம் அழுதுகொண்டு இருந்தவர்கள் விழிகளைத் துடைத்துக்கொண்டனர். ஆனால், வானம் மட்டும் விடாமல் இன்னும் அழுதுகொண்டு இருந்தது!

(இந்தக் கதை எந்தப் புத்தகத்தில் வந்தது என்பது தெரியவில்லை... எனக்கு நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார் - நன்றி - பிரசுரித்த பத்திரிக்கைக்கும்... அனுப்பிய நண்பருக்கும்.... எழுதிய திரு. தமிழருவி மணியனுக்கும்...)
-'பரிவை' சே.குமார்

பத்து ரூபாயில் சிறுநீரக கல்லுக்கு சிறந்த தீர்வு..!


இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இந்த உபயோகமான தகவலை முகநூல் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டார்கள்.இப்போது நம்மில் நிறைய நண்பர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது .

அதனால் இது போன்ற நல்ல தகவல்கள் நாம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று இன்று ஒரு தகவல் பக்கத்தில் பதிவு செய்கிறேன் உங்களுடைய நண்பர்களுக்கும் கட்டாயம் பகிர்வு செய்யுங்கள்

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.

வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்

நன்றி : இன்று ஒரு தகவல்

நன்றி : மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு...

-'பரிவை' சே.குமார்

திங்கள், 28 ஜனவரி, 2013

பழைமை நினைவுகள் - சுஜாதாவின் அருமையான கட்டுரை

   மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில்  நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன  வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம்  என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். "யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று  கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன். "எதுக்குப்பா?" "தொடுங்களேன்!" சற்று வியப்புடன்  தொட்டார். "மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’என்று, விரல்களைச்  சொன்னபடி அசைத்தார். "ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி  வெச்சுண்டு ஒரே ஒரு தடவை  லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..." "இது என்னப்பா ட்ரிக்கு?" என்று  அப்படியே செய்தார். "உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!"  என்றேன். அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"  "ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து  உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன்.
    
    தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச்  சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு  வருவதில்லை.  ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார... அந்த  நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி  நேரம்  யோசித்தேன், கிட்டவில்லை. மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன்.  "ரம்யா கிருஷ்ணன்" என்றாள்.
    
    இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது  தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது  மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்,  சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில்  "ஜகதலப்ரதாபன்"  சினிமா போனது, ஒண்ணாம்  கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க்  கொடுத்தது,  பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம்  தெளிவாக  ஞாபகம் உள்ளது.
    
    ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள்  ஞாபகங்களின் வடிவம்தான்! டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும்,  பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து  வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல்  பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
    
    மெரீனாவில்,  ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன்.  இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே,  பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து  வருகின்றன.
    
    ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா,  பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை...  நாம  தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து,  ‘பரவால்லை... இன்னும்  கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம்  வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன்,  உடம்பு  சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
    
     சயின்ஸ் அதிகம்  படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன.  யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர்  கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இ டையில்  எங்கோ இருக்கிறது!".
    
    ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின  வேறுபாடுகளையும்,  அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன்  உணர்வுக்கும்,  நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு  நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல்  படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித்  தெரியாதவனாக இருந்திருக்கிறேன்.
    
    மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை.  பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்.  தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும்  புதிய  பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி.  மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல்  கஷ்டப்படுவேன்.
    
    இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல  யோசிக்கும் போது, சட்டென்று  ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன்.
    
    சொர்க்கம், நரகம்  இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன்.  அப்படி  ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச்  சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.
    
    ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில்  காலை  எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன்.
    
    வாழ்க்கையே  இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
    
    இன்றைய  தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில்  உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல்  இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது,  இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது  படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது  லிஸ்ட்டை  விட்டுப் போய்விட்டது.
    
     தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும்  டாக்டருக்குப் போல,  மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச்  சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று >> நிறுத்திவிட்டாள்.  பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல்  வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு  தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட்  கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல,  கேரளா  ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.
    
    அம்பலம்  இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷமாக  உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி  என்ன நினைக்கிறீர் கள்?" என்று. நீண்ட யோசனைக்குப் பிறகு பதில்  அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க  வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!"  என்று.
    
    என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.  பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டிலிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை  யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள்  நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள்  அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள்.
    
     ‘ரோஜா’  வெளிவந்த  சமயத்தில், பெங்களூருக்குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை  ஜலஹள்ளியில்,  ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள்.  "ஆ"  கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண்டும்" என்று  திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப்  படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என்  வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில்  இருந்து  முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள்.
    
     மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால்  பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்..!

(குறிப்பு : எனக்கு நல்ல கட்டுரைகளை மின்னஞ்சலில் அனுப்பி படிக்கத் தூண்டும் அன்பு நண்பரும் அண்ணனுமாகிய் திரு. சுபஹான் அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பிய பகிர்வு இது - நன்றி அவருக்கும் அவருக்கு அனுப்பிய நண்பர்களுக்கும்)

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

வட்டியும் முதலும் - ராஜுமுருகன்

 
(ஓவியம் : ஹாசிப் கான்) 

"ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூ, உள்ள இருக்குமாம் ஈரும் பேனும்...'' - சினிமா டைரக்டராகப் போவதாக நான் அறிவித்தவுடன் என் தாத்தா சொன்ன பொன்மொழி இது. அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை ஒவ்வோர் உதவி இயக்குநரும் அனுதினமும் அறிவோம். 'கனவுத் தொழிற்சாலை’ என்ற பதத்தைக் கண்டுபிடித்தவனைக் கண்டுபிடித்து மண்டையில் பூசணி உடைக்க வேண்டும். அவ்வளவு பொருத்தம். கனவுகள் பெருகும் இந்தத் தொழிற்சாலையில், நிராசைகளும் காத்திருப்புகளும் கண்ணுக்குத் தெரியாத கழிவுப் பொருட்களாக எங்கெங்கும் குவிந்திருக்கின்றன.

 சமீபத்தில் தம்பி ராமையாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது சொன்னார், ''தம்பி... பாதி வயசுல பாஸ் ஆனவன் நான். என்னென்னவோ பண்ணிப் பாத்தும் கடவுள் என் கழுத்துல காலவெச்சு மிதிச் சுட்டே இருந்தான். அவனுக்குக் கால் வலிச்சு எடுத்தான் பாருங்க... விருட்டுனு நான் எந்திரிச்சு மேல வந்துட்டேன்...'' எனச் சொல்லிவிட்டுப் பகபகவெனச் சிரித்தார். அந்த காமெடிக்குப் பின்னால் எவ்வளவு டிராஜடி இருக்கிறது என்பதை அறிவேன். இது ஒரு விசித்திரமான வேதியியல். ஏகப்பட்ட படங்கள் வேலை பார்த்து, உலகப் படங்களில் ஊறி, இலக்கியம் படித்து, டிஸ்கஷனில் எந்தக் கதைக்கும் எகிறி சீன் பிடித்து ஆச்சர்யப்படுத்தும் எத்தனையோ உதவி இயக்குநர்கள் 40 ப்ளஸ் ஆகியும் படம் பண்ணாமலே இருப்பார்கள். ''ரெண்டு ஷார்ட் ஃபிலிம் பண்ணிருக்கேன் சார்...'' எனக் காலையில் வந்து கதவு தட்டிய பையன், அடுத்த மாசம் வடபழனி சுவர்களில் புதுப் பட போஸ்டர் ஒட்டியிருப்பான். ''அவன்ட்ட செம ஸ்க்ரிப்ட் இருக்கு பாஸ்...'' என ஒரு கதையைப் பற்றி நாலைந்து வருடங்களாகப் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்த ஸ்க்ரிப்ட்டுக்குச் சொந்தக்காரன், ''ஆபீஸ் போடப்போறேன் தலைவா... டெஸ்ட் ஷூட் போறேன் தலைவா...'' எனப் பார்க்கும்போது எல்லாம் சொல்வான். ''நைட்டு ஒரு லைன் தோணுச்சுஜி... ஓப்பன் பண்ணா...'' எனப் பாடாவதி கதை ஒன்றைச் சொன்னவனுக்குக் கொஞ்ச நாள் கழித்து போன் பண்ணினால், ''கும்பகோணம் பக்கம் ஷூட்ல இருக்கேன்ஜி... அதே கதைதான்... சந்தானம் டேட்ஸ் அஞ்சு நாள் கேட்ருக்கோம். இல்லேன்னா, சூரி போயிரலாம்ல...'' என ஆச்சர்யப்படுத்துவான். ''இவரு கூத்துப்பட்டறைங்க... ஒரு படம் ஹீரோவா பண்ணிட்டிருக்காப்ல.  மைண்ட்ல வெச்சுக்கங்க...'' என அரை தாடிப் பையனை கணேஷ் பேக்கரி வாசலில் அறிமுகப்படுத்துவார்கள். அடுத்த வருடம் அதே பையனிடம் கதை சொல்லக் காத்திருக்க வேண்டும். படம் ஹிட் அடித்து, நாலைந்து கமிட்மென்ட்களுடன், ''சார்... எனக்குக் கதைல இன்னும் புல்-அப் பண்ணிங்கன்னா நல்லாருக்கும்... ரொமான்ஸ் ஏத்துங்கஜி...'' எனச் சொல்வதைக் கேட்க வேண்டும். 30 வருடங்களாகப் பஞ்சாயத்து சீன், காமெடி சீன்களில் எக்ஸ்ட்ரா டயலாக்குகள் பேசும் முகங்களை, துணை நடிகர்கள் சங்க வாசலில் பசித்த கண்களுடனே பார்க்க வாய்க்கும். ''ஃபர்ஸ்ட் படம் பெருசாப் போகலையே தவிர, ரசனையாப் பண்ணிருந்தாரு. ஏன்னே தெரியல... அப்புறம் ஆளையே காணோம்...'' என கோடம்பாக்கத்தில் வருடத்துக்கு 50 ஒரு பட டைரக்டர்கள் முகவரி அழிக்கப்படும். ''மூணு படம் தொடர்ந்து ஃப்ளாப்பு... இப்ப இன்னொரு புரொடியூஸர மடக்கிட்டான்யா... இதுல இவனே ஹீரோ வேற... என்னா கான்ஃபிடென்ட்... என்னதான் பண்றாய்ங்கன்னு தெரியலையே...'' என தினத்தந்தி விளம்பரம் பார்த்து டென்ஷன் ஆவார்கள். ''ஒரு பாட்டுக்கு மட்டும் ஆறு கோடி செலவாம்... என்கிட்ட குடுத்தா, மூணு உலகப் படம் எடுத்துருவேன்...'' என யாராவது புலம்பிக்கொண்டே இருப்பார்கள். ''அந்தப் படத்துல வொர்க் பண்ணப்போ, டான்ஸரா வந்த புள்ளப்பா இது... இப்ப விஜய் வரைக்கும் ஹீரோயினுக்குத் தேடுறாங்க. ஆடியோ பார்ட்டியில நம்மளக் கண்டுக்கவே மாட்டேங் குது...'' எனக் குமுறுவார்கள். அருண் சாருக்கு மைசூர் காட்டில் டிஸ்கஷனில் இருந்தபோது, அவரின் அப்பா தவறிப்போனார். வந்து சேர்வதற்குள் சாம்பல்தான் கிடந்தது. மலேசியாவில் சாங் எடுக்க இணை இயக்குநராகப் போயிருந்தபோது, அம்மா இறந்துபோனார். அதற்கும் கொள்ளி போட முடியவில்லை. ''நான் எடுக்கப்போற சினிமாவப் பாக்க அவங்க இல்லங்கறத விடு... கடைசியா அவங்களப் பாக்கவே நான் இல்லையே... போடா...'' என்ற அவரது வார்த்தைகள் அழியவே அழியாத வாய்ஸ் ஓவர். திரை தொடாத எத்தனையோ கதைகள், இழந்த உறவுகள், சிதைந்த மனங்கள், மீளாத கனவுகள் என எவ்வளவோ இருக்கின்றன. ஆனாலும், ஐ லவ் சினிமா!

இவ்வளவு இருந்தும் சினிமா என்ற கலை வடிவத்தின் மீதான காதல் குறையவே இல்லை. நாலாவது படிக்கும்போது முதல்முறையாக கும்பகோணம் விஜயா தியேட்டருக்கு சுப்பிரமணி தாத்தா என்னைப் படம் பார்க்க அழைத்துப்போனார். சிவாஜி-அம்பிகா நடித்த 'வாழ்க்கை’ படம். ஒண்ணாம் நம்பர் சோகக் காவியம். எனக்கு மேத்ஸ் க்ளாஸில் இருக்கிற மாதிரி திகிலடித்தது. ஒரு காட்சியில், தொழிற்சாலையில் வேலை பார்க்கிற சிவாஜி மெஷினுக்குள் கையை விட, கை துண்டாகிவிடும். இதைப் பார்த்ததும் உச்சகட்டப் பயத்தில் அலறி, தியேட்டரைவிட்டு தெறித்து ஓடிவந்தேன். வீடு வரைக்கும் அழுகை. ''ந்தா... சின்னப்பயலப் போயி இந்தப் படத்துக்கெல்லாம் அழைச்சுட்டுப் போயிருக்க... நீ வாடா நாளைக்கு உன்னைய ஒளவையாருக்கு நல்ல படமா அழைச்சுட்டுப் போறேன்...'' என்ற ஆத்தா, அடுத்த வாரம் என்னை அழைத்துப்போன படம் 'துலாபாரம்’. அது இன்னும் படுபயங்கரம். படம் முழுக்கப் பல பேர் அழுதுகொண்டு இருக்க, 'இனிமே சினிமாவுக்கே வரமாட்டேன்...’ என உறுதியெடுத்தேன். ஸ்கூலுக்குக் கிளம்ப லேட்டானால், 'இப்பக் கிளம்புறியா... இல்ல சினிமாக்குக் கூட்டிப்போவா..?’ என வீட்டில் மிரட்டுகிற அளவுக்குப் பயம். கூடுதலாக தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமை மதியங்களில் போடப்படும் ப்ளாக் அண்ட் வொயிட் பெங்கால் படங்களில், வெள்ளை பைஜாமாக்களில் ஆண்களும், முக்காடுகளில் பெண்களும் காரை பெயர்ந்த வீடுகளிலும் குளக்கரைகளிலும் திரிவதை அண்ணன் ரசித்துக்கொண்டு இருந்தது பல்ஸ் கூட்டியது. ஞாயிறு சாயங்காலங்களில் பஞ்சாயத்து போர்டில் தமிழ்ப் படம் பார்க்கக் கூட்டம் கட்டி ஏறும்போதுகூட, போவது இல்லை. ஏழாவது படிக்கும்போது, ''தம்பி... உனக்கு ஒரு படம் காட்றேன். பயம்லாம் இல்ல... செம காமெடியா இருக்கும் வா...'' என அண்ணன் அழைத்துப்போய் ஒரு படம் காட்டினான். அது சார்லி சாப்ளினின் 'சிட்டி லைட்ஸ்’. அந்தப் படத்தைப் பார்க்கும்போது, பொசுக்கென்று தொண்டைக்குள் உருண்ட பரவசப் பந்து, இப்போது வரை உருண்டுகொண்டே இருக்கிறது. அது ஒரு கெமிஸ்ட்ரி. நமக்குப் பிரியமான ஓர் கனவை நாம் கண்டுபிடித்துக்கொள்கிற தருணம். அதன் பிறகு சினிமா என்ற கலை, தீராத காதலாகவும், துயரமாகவும், கருணையாகவும் துரத்திக்கொண்டே இருக்கிறது.

'அவள் அப்படித்தான்’ க்ளைமாக்ஸில் கமலின் கார் தூரத்தில் போக, பீச் ரோட்டில் நிற்கிற ஸ்ரீப்ரியாவைப் பார்த்து வழிந்த கண்ணீர் காயவே இல்லை. 'பசி’ பட க்ளைமாக்ஸில் பிளாட்ஃபார்மில் இறந்துபோயிருக்கிற ஷோபாவைப் பார்த்ததும் திடுக்கிடும் விஜயனின் கண்கள் எனக்குள் உறைந்துவிட்டன. 'உதிரிப்பூக்கள்’ இறுதியில் ஆற்றங்கரையில் ஓடும் அந்தப் பிள்ளைகளின் மேல் இழையும் 'அழகிய கண்ணே...’ ஈரம் பூத்திருக்கிறது எப்போதும். 'சந்தியாராகம்’ கிழவர் தயங்கி நின்று ரிக்ஷாவில் ஓடிப்போய் ஏறுகிற ஒரு ஷாட், 'மெட்டி’யில் வடிவுக்கரசியின் நெற்றிப் பொட்டை அழித்தபடி சரத்பாபு பேசுகிற, 'இந்தப் பொம்பளைங்களுக்கு பொட்டுதான் உலகமா... அடுத்த கல்யாணம் பண்ணிக்கும்போது வெச்சுக்கிட்டாப் போச்சு’ என்கிற வசனம், '16 வயதினிலே’ படத்திலே கோவணத்தோடு சட்டை- பேன்ட்டை சுருட்டி டாக்டரின் முகத்தில் வீசி சப்பாணி காறித் துப்புகிற ஒரு காட்சி, 'அரங்கேற்றம்’ படத்தில் 'ஆம்பளைங்கன்னாலே மரத்துப்போச்சு’ என பிரமிளா பேசுகிற தொனி, 'நாயகன்’ சரண்யாவுக்கு கமல் தாலி கட்டுகிற ஷாட், 'புவனா ஒரு கேள்விக்குறியில்’ சுமித்ராவுக்கும் தனக்கும் நடுவில் உள்ள திரைச்சீலையை இழுத்துவிட்டபடி ரஜினி தருகிற ஒரு கோணல் புன்னகை, 'மகாநதி’யில் கல்கத்தாவில் இருந்து மகளை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது 'எங்கேயோ திக்குத்தெச’ என ஒலிக்கும் கமலின் குரல், 'பிதாமகன்’ ஹோட்டலில் வைத்து 'வெட்டியான வெளியப்போகச் சொல்றா’ என்றவனை விக்ரம் அடிக்கும் ஒரு அடி, 'வழக்கு எண்’ பெண்ணின் சிதைந்த முகத்தைப் பார்த்து அவன் காதலில் கலங்கும் கணம், 'சில்ரன் ஆஃப் ஹெவன்’ பள்ளி வாசலில் மூச்சிரைக்க நிற்கிற அந்தக் குட்டிப் பெண், 'கலர் ஆஃப் பேரடைஸ்’ படத்தில் கீழே விழுந்த குருவிக் குஞ்சைத் தூக்கி கூட்டில் வைக்கிற பார்வையற்ற சிறுவன், 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’லில் சுடப்படுவதற்கு முன் மகனுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக ஜோக்கரைப் போல நடந்து போகும் அப்பா, 'தி வே ஹோம்’ பேரனின் புறக்கணிப்பைச் சலனமே இல்லாமல் வாங்கிக்கொள்ளும் அந்தக் கிழவியின் கண்கள், 'ஈ.டி’-யில் அந்தச் சிறுவனை 'எலியட்’ என விநோதப் பிராணி அழைக்கும்போது வரும் ஆச்சர்யம், 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ நாஜிக்கள் வதைக் களத்தில் அதிரவைக்கிற மனித நிர்வாணம்... என எத்தனை எத்தனை பரவசத்தையும், பயங்கரத்தையும், காதலையும், மனிதத்தையும், கோபத்தையும், அரசியலையும் எனக்குத் தந்திருக்கிறது இந்த சினிமா.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான சினிமாக்கள் நமது உணர்வுகளை, நினைவுகளைக் கிளறடிக்கின்றன. எல்லோருடைய வாழ்க்கையிலும் சில சினிமாக்கள் நினைவுகளால் முக்கியத்துவம் அடைந்து இருக்கும். லிங்குசாமி சாரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது, கும்பகோணத்தில் டிஸ்கஷனில் இருந்தோம். ஒருநாள் காலையில் பாலாஜி சக்திவேல் சார் சென்னையில் இருந்து வந்தார். ''டேய் லிங்கு... இங்க கும்பகோணம் பக்கத்துல ஒரு டாக்டர் இப்பிடி ஒரு லெட்டர் எழுதிருக்காரு... அவரைப் போய்ப் பாக்கலாம்னுதான் வந்தேன். வர்றியா..?'' என்றார். 20 பக்கத்துக்கு மேலுள்ள லெட்டர் அது. 'கல்லூரி’ படத்தைப் பார்த்துவிட்டு, ஒரு டாக்டர் தனது வாழ்க்கையையும் நினைவுகளையும் அந்தப் படம் எவ்வளவு பாதித்திருக்கிறது என எழுதியிருந்தார். அவரைப் பார்க்கக் கிளம்பிப் போனோம். பக்கத்திலேயே ஒரு கிராமத்தில் அவர் வீடு. எங்களைப் பார்த்ததும் பயங்கர சந்தோஷமானார். பெல்பாட்டம், நீளக் கிருதா, சுருட்டை முடி என அவர் ஆள் பார்க்கவே ஈஸ்ட்மென் கலரில் இருந்தார். ''சார்... இது வரைக்கும் 100 தடவைக்கு மேல உங்க படத்தைப் பார்த்துட்டேன் சார்... எனக்கு என்னென்னவோ ஞாபகத்துக்கு வருது... டெய்லி ரெண்டு தடவ பார்த்திருவேன் சார்...'' என்றார் பரவசமாக. காபி கொடுக்க வந்த அவரது மகன் எங்களிடம் மெதுவாக, ''சார்... நான் அந்தப் படத்தை இன்னும் ஒரு தடவகூடப் பார்க்கலை... இவராலேயே பார்க்கலை. டெய்லி டி.வி.டி-ல இதைப் போட்டுக்கிட்டு உக்காந்துர்றாரு... டார்ச்சர் தாங்க முடியலை'' என்றான் டென்ஷனாக. அப்போதுதான் அந்த டாக்டரை மார்க்கமாகப் பார்த்தேன். ஏதோ ஒரு பழைய படத்தைச் சொல்லி, ''அதையும் இப்பிடித்தான் சார் வருஷக்கணக்குல ரெகுலராப் பார்த்துட்டு இருந்தேன்... அப்புறம் இந்தப் படத்தைத்தான் பார்க்கிறேன்...'' என படத்தைப் பற்றி பிரித்துப் பிரித்து அலசிக் காயப்போட்டார். ஏதேதோ பேசினார். வரும்போது பாலாஜி சார் சொன்னார், ''டேய்... ஒரு மனுஷனை ஒரு படம் எவ்வளவு பாதிக்குது பாரு... இந்தப் படம் பெருசாப் போகலை. ஆனா, எவனோ ஒருத்தனை அது இவ்வளவு பாதிச்சுருக்குன் னாலே, அதுல உண்மை இருக்கு. அதான் கலையோட அற்புதம். இந்த சந்தோஷத்துக்காகத்தான் படம் எடுக்கணும்.''

உண்மைதான். இப்படி நான் 'கடலோரக் கவிதைகள்’ படத்தை 50 தடவைக்கும் மேலாகப் பார்த்திருக்கிறேன். டீச்சரைக் காதலிக்காத யாராவது இருக்கிறோமா..? திருவாரூர் நீலகண்டன் அய்யா 'பராசக்தி’ படத்தை 200 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறார். அவரது உடல் மொழியே சிவாஜி போலாகிவிட்டது. அவர் மருத்துவமனையில் இருந்தபோது, அமெரிக்காவில் இருந்து அவரது மகன் வந்துவிட்டார். ''டாக்டர் தாங்காதுன்னு சொல்லிட்டாங்க... அவரு ஆசப்படுறதக் குடுங்க...'' என்றார் மாமா. மகன், ''என்னப்பா வேணும் ஒனக்கு..?'' எனக் கேட்டபோது அவர் சொன்னார், ''தம்பிபுள்ள... ஒன் கம்ப்யூட்டர்ல 'பராசக்தி’ டி.வி.டி. போடேன்டா... பார்த்துக்கறேன்.'' கோவிந்தன் மாமா 'உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்திருப்பார். ''தலைவர் மேல வெறி மாப்ள... அதுவும் அந்தப் படத்தை அப்ப ரிலீஸ் பண்ணவுடாம ஏகப்பட்ட கரச்சலக் குடுத்தாய்ங்க. ஆனா, பேய்க் கூட்டம்ல பாத்துச்சு...'' என்பவர், இப்போதும் டி.வி-யில் அந்தப் படப் பாடல்கள் போட்டால், கண்கள் மின்னப் பார்ப்பார். மும்பையில் வேலை பார்க்கிற முரளி, 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’வை வெறித்தனமாகப் பார்த்தான். தினமும் தியேட்டருக்குப் போய் பலப் பல முறை. அவனிடம், ''லூஸுப் பயலே... ஏன்டா அந்தப் படத்தை இப்பிடிப் பாக்குற?'' எனக் கேட்டதற்குச் சொன்னான், ''மச்சான்... அந்தப் புள்ள அப்பிடியே காஜல் சாயல் மச்சான். கொஞ்சம் கலர் கம்மி... மத்தபடி பேச்சு, சிரிப்பு எல்லாம்...'' என்றான். சாவித்திரி முதல் லட்சுமி மேனன் வரைக்கும் இப்படித் தன் காதலிகளின் சாயல் களை சினிமாக்களில் தேடிக்கொண்டேதானே இருக்கிறோம்.

டி.டி-யில் இருந்து டி.வி.டி. வரை வந்து, இப்போது டி.டி.ஹெச்-ல் வீட்டுக்குள் ரிலீஸ்ஆகிறது சினிமா. முதல்வர்களை உருவாக்கிய கவர்ச்சிகர சினிமா, நாம் காணவே காணாத எளிய மனிதர்களின் கதைகளைப் பேச வந்துவிட்டது. தேனிப் பக்கம் போனால், ''நாலு பட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு பாஸ்... அந்தப் பக்கம் போகாதீங்க...'' என மக்கள் வேலையைப் பார்க்கிறார்கள். காலம் ஒவ்வொரு கலையையும் இப்படித்தான் அழைத்துச் செல்லும். காதல், அரசியல், சமூகம் என எல்லாத் திசைகளிலும் இனி புதிய புதிய சிந்தனைகள் வரும். இது மாற்றத்தின் காலம். சுவாரஸ்யமான, தீவிரமான படங்களுக்கான காலம்தான் இனி. சினிமா தரக்கூடிய உணர்வுகளும் கதைகளும் எப்போதும் தீரவே தீராது. கதைப் பஞ்சம் என்பது பெரிய உட்டாலக்கடி.

'தி பேட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸ்’ என்ற மறக்க முடியாத உன்னத சினிமாவை எடுத்தவர் கில்லோ பொன்டேகார்வோ. அவரிடம் ஒரு பேட்டியில், ''திரைக்கதையில் மொத்தம் எத்தனை வகை இருக்கிறது..?'' என்று கேட்கிறார்கள். அவர், ''இந்த உலகத்தோட மொத்த மக்கள்தொகை எவ்வளவு..?'' எனக் கேட்கிறார். ''சுமார் 700 கோடி...'' உடனே அவர் சொல்கிறார், ''அப்படின்னா 700 கோடி வகை இருக்கு!''

அப்படியென்றால், நம்மால் எடுக்கப்படாத சினிமாக்கள் இன்னும் எத்தனை எத்தனை இருக்கின்றன?

நன்றி : ஆனந்த விகடன்.

-'பரிவை' சே.குமார்

சனி, 26 ஜனவரி, 2013

குடியரசு தினம்



ஊழல்களை உறங்கப் போட
மக்கள் நலனில் அக்கறையின்றி
சுமைகளை நமக்களித்து சுகமாய்
ஆளும் மத்திய அரசும்...

ஓட்டுப் போட்டவர்கள் ஓடெடுத்தாலும்
எனக்கெனவென்று பழிவாங்கலே
தனது தலையாய கடனென
ஆளும் மாநில அரசும்...

மீன் பிடிக்க செல்பவர்களை
சுட்டு வீழ்த்தும் இராவண பூமியினருக்கு
மாலை மரியாதை தரும் அரசும்...

பொய்த்த விவசாயமும்
காணாமல் போன மின்சாரமும்
புரட்டிப் போட்ட வாழ்க்கையில்
புண்ணாகிப் போன மக்கள்
நலனில் அக்கறையில்லா அரசும்...

ஆளும் பூமியில்
காவிரியும் முல்லையும்
காலமெல்லாம் அறிக்கை...கடிதத்தில்
அரசியல் கூத்தாகிப் போக...

மக்கள் பிரச்சினைகளுக்காக
அன்றைய முதல்வர்
கடிதம் போட்டார்..
இன்றைய முதல்வர்
வழக்கு தொடுக்கிறார்...

எல்லாவற்றையும் பார்த்து
பழக்கப்பட்ட நாமும்
பாட்டில் விற்பனைகளை
கோடிகளாக்கி மகிழ்கிறோம்...

சிலிண்டர் விலை உயர்வும்
பொருட்களின் தட்டுப்பாடும்
வால் மார்ட்க்களின் வரவும்
நமக்கு பெரிதல்ல...

டாஸ்மாக்கின் மூன்று நாள்
விடுமுறையே மூச்செல்லாம்
பேச்சாகிப் போகிறது...

தன் வாரிசுகளுக்காகவே வாழும்
தமிழினத் தலைவரின் கூற்றுப் போல்
இதுவும் ஒரு விடுமுறை தினமே...!


அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்..

-'பரிவை' சே.குமார்.

புதன், 23 ஜனவரி, 2013

ஒரு முத்தமும் பல கேள்விகளும் - ஞாநி

‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க  கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி,  முதல்முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன்.

பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணி புரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்த சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை  அவர் ‘பேஸ்புக்’ சமூக இணைய தளத்தில் எழுப்பியதாகவும் யாருமே அதை கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த நண்பர் சொன்னார். அதனால் நானும் பார்த்துவிட்டு பேஸ்புக்கில் இவ்வாறு எழுதினேன்.

“நாம் எல்லாரும் சிந்திக்க சில கேள்விகள் : 15 வயது சிறுமியை லிப் கிஸ் அடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து படம் தயாரித்து வெளியிடுவது மணிரத்னத்துக்கு நல்ல வியாபாரமாக இருக்கலாம். ஆனால் அது ‘அறமா’குமா? படத்துக்கான கடல் படக் குழுவின் நிருபர் சந்திப்பை தொகுத்து வழங்கிய சுஹாசினி லட்சக்கணக்கில் பணம் திரட்டி மகளிர் நல அமைப்பு நடத்தி வருகிறாரே, அவரும் அந்த அமைப்பும் பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகுதான் உதவி செய்வது மெழுகுவத்தி கொளுத்துவதெல்லாம் செய்வார்களா? பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்களா? இன்றைய சினிமாக்களில் சிறுமியை வைத்து உருவாக்கிக் காட்டும் இத்தகைய காட்சிகள் விடலை மனங்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி யாருக்கும் கவலையில்லையா? டெல்லி, ஸ்ரீவைகுண்ட நிகழ்வுகளுக்கெல்லாம் பொங்கி எழுந்த பேஸ்புக் வீரர்களில் சிலர் சினிமா துறை என்று வரும்போது மட்டும் பம்மிப் பதுங்கிக் காணாமற் போவது ஏன் ?”

இந்தக் கருத்தை உடனடியாக 120 பேர் எடுத்து தத்தம் பேஸ்புக் சுவர்களில் பதிந்து பரப்பியிருக்கிறார்கள். இதற்கு முன் என் வேறு பதிவு எதுவும் இவ்வளவு பகிரப்பட்டதில்லை.என் இழையில் வந்து விவாதித்த பலரும் தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவற்றை மட்டும் பார்க்கலாம்.

இது காலம் காலமாக நம் சினிமாவில் நடப்பதுதானே என்பது ஒரு கருத்து. பதினைந்து வயதில் இதழ் முத்தம் இடக் கூடாதா என்பது இன்னொரு கருத்து. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

உண்மைதான். கதாநாயகியாக நடிக்க 14 வயது சிறுமிகளை அழைத்து வருவது பல வருடங்களாக நடக்கிறது. இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா திரைப்பட நடிகையாக அறிமுகம் ஆனபோது அவர் வயது 15தான். மஞ்சுளா, ரேவதி, குஷ்பு போன்றோர் கதாநாயகிகளாக அறிமுகமாகும்போது வயது 16லிருந்து 18தான். சட்டப்படி மேஜர் வயது எனப்படும் 18க்கும் முன்பாகவே இந்த மைனர்கள் நடிக்கவைக்கப்படுவது அவர்கள் சம்மதத்தின் அடிப்படையிலேயே அல்ல. பெற்றோரின் விருப்பமும் சம்மதமும் அதிகாரமும்தான் செயல்படுகின்றன. 15 வயது துளசியை முகத்தில் காதலையும் காமத்தையும் விரக உணர்ச்சியையும் காட்டி நடிக்க வைப்பதில் முதல் பொறுப்பு அவளுடைய அம்மா ராதாவுடையதுதான்.

இப்படி வளர் இளம் பருவத்தில் இருக்கும் சிறுமிகளை சினிமாவில் எப்போதுமே காதல், காமக் காட்சிகளில்தான் நடிக்கவைத்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் காசு பண்ணி வந்திருக்கிறார்கள். எனவே இது ஒன்றும் மணிரத்னம் கண்டுபிடித்த புது விஷயம் அல்ல. அவரது முன்னோடிகள் செய்ததை அவர் இன்னும் சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன் செய்யக் கற்றிருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் வேறு எந்த படைப்பாளியை விடவும் அதிகமாகக் கொண்டாடப்படுபவர் அவர். அனைத்திந்திய அளவில் ஆராதிக்கப்படுபவர். அப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். எப்படிப்பட்ட ரோல் மாடல் என்பது எனவே விமர்சிக்கப்படவேண்டும்.

அது மட்டுமல்ல, டெல்லியில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரத்துக்குப் பிறகு நாடெங்கும் நாம் நம் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்ற கேள்வி பரவலாக தீவிரமாக இன்று விவாதிக்கப்படுகிறது. பெண்களைப் பற்றிய நம் பார்வையை உருவாக்கும் எல்லா சக்திகள் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. மதம், சாதி, குடும்பம், கல்வி, மீடியா, வணிகம் ஆகியவை எப்படி ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் நம் கருத்துகளை உருவாக்கி வருகின்றன என்பதை முன்னெப்போதையும் விட டெல்லி நிகழ்வுக்குப் பிறகு அதிக கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதில் சினிமா நம் சமூகத்தின் விடலைச் சிறுவர்கள் மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் முக்கியமானவை. டெல்லி நிகழ்ச்சியில் குற்றவாளிகளில் ஒருவன் மைனர் என்பது கவனிக்கத்தக்கது. அண்மையில் தமிழ்நாட்டில் பள்ளிச் சிறுவர்கள் பள்ளி வளாகத்தில் மது குடித்ததைக் கண்டித்த ஆசிரியரை அடித்திருக்கிறார்கள். இன்னொரு நிகழ்ச்சியில் மது குடிக்க பணம் தேவை என்பதற்காக பள்ளிக்கூட மரமேசைகளை உடைத்து விறகாக்கி விற்றுக் குடித்திருக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் பொறுக்கிப் பாத்திரங்களே ஹீரோவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தின் பெரும்பகுதி ஆபாச வசனங்களும் காட்சிகளுமாக இருக்கும் நிலையில் என் நண்பர் நடிகர் சிவகுமாருக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்படி ஆயிற்று. தன் மகன்களை ஆடம்பரமில்லாமல் ஒழுக்கமாக வளர்த்த தந்தை என்ற புகழுடையவர் அவர்.  “ஒழுக்கமாக வளர்த்த பிள்ளையை ஆபாசப் படத்தில் நடிக்க விட்டுவிட்டீர்களே என்று உங்களைப் பலரும் திட்டுகிறார்கள்” என்று செய்தி அனுப்பினேன்.“எனக்கும் செய்தி வந்தது. இனி இந்த தவறு நிகழாமல் பார்த்துக் கொள் என்று சொல்லியுள்ளேன்” என்று உடனே பதில் அனுப்பியிருக்கிறார்.

சினிமா சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, குற்றம் செய்யவும், தவறு செய்யவும் தூண்டுகிறது என்ற கருத்தை ஒருபோதும் சினிமாகாரர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதன் பாதிப்பு சமூகத்தில் கடுமையாக இருக்கிறது என்பதை சமூகவியலாளர்களும் ஆசிரியர்களும் நடைமுறையில் நன்றாகவே அறிவார்கள். பெண்ணைப் பற்றி சமூகத்தில் ஏற்கனவே இருந்து வரும் மோசமான பார்வைகளை சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் கலைப்பதற்கு பதிலாக பலப்படுத்துகின்றன. ஆணுக்கு சேவை செய்ய பெண், பெண் விட்டுக் கொடுத்தால்தான் குடும்பம் உருப்படும்,ஆணின் இச்சைக்கானவள் பெண் என்ற கருத்துகளை திரும்பத் திரும்ப சொல்லிவருகிறது சினிமா. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழைய கருத்தை, பொறுக்கியானாலும் காதலன், ரவுடியானாலும், லவ்வர் என்று நவீனப்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் பெண்பிம்பங்கள்  உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் மீடியாவால் தன் மீது வீசப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழலில்  ஒரு பெண்ணைத் தொட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்புக்காக ஏங்கும் மனமாக வளர் இளம்பருவ சிறுவனின் மனம் தவிக்கிறது. ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபதுகளில்,எண்பதுகளில் இருந்ததை விட பல மடங்கு அதிகமான மீடியாவின் பெண் மோகத் தூண்டுதல் சூழல் இன்றைய சிறுவருக்கு இருக்கிறது. வழிகாட்டுவோர் இல்லை. எதிர் பாலினத்துடன் ஆரோக்கியமாக உறவாடி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும் சூழல் குடும்பத்திலும் இல்லை, கல்விக் கூடத்திலும் இல்லை. எங்கும் இல்லை. இந்த நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினரில் இன்னும் அதிகம் பேர் இன்னும் அதிக பாலியல் குற்றங்களை நோக்கித் தள்ளப்படாமல் இருப்பதே ஆச்சரியமானதுதான்.

இந்தப் பின்னணியில்தான் 15 வயது சிறுமியை இதழ் முத்தக் காட்சியில் மணிரத்னம் பயன்படுத்துவதன் தவறை, ஆபத்தைப் பார்க்க வேண்டும். அதை அலசுவதற்கு முன்பு, பதினைந்து வயதில் ஒருவர் முத்தமிடக் கூடாதா என்ற கருத்தைப் பார்ப்போம். எந்த வயதிலும் முத்தமிடலாம், யாரும் முத்தமிடலாம். ஆனால் அந்த ஒவ்வொரு முத்தமும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எது வெறும் உடல் கவர்ச்சி, எது தற்காலிக ஆசை, எது காதல், எது பரஸ்பர அன்பு, எது பரஸ்பர மதிப்பு என்பதையெல்லாம் தன் உடலை இன்னொரு உடலுடன் பகிரும்போதெல்லாம் தெரிந்தே பகிரக் கற்காமல் பகிர்ந்தால் மனநல பாதிப்புதான் ஏற்படும்.

என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பழகிய பல இளைஞர்களின் திருமணங்களுக்குச் செல்லும்போது நான் மணமகனுக்கும் மணமகளுக்கும் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துகிறேன். எல்லா முத்தமும் ஒன்றென்று வாதிட்டு, நான் அவர்களை இதழில் முத்தமிட்டு வாழ்த்த முடியாது.

குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சும்போது அதன் கன்னத்தில் முத்தமிடுவதுதான் சரி. உதட்டில் முத்தமிடுவது அல்ல. உதட்டு முத்தம் காமத்தின் வெளிப்பாடு. குழந்தைகளை ஒருவருக்கொருவர் முத்தமிடச் சொல்லி பழக்குவது சில பெற்றோரின் அசட்டுத்தனம். பாலியல் தொடுதல்களில், குட் டச், பேட் டச் என்பவை எப்படி முக்கியமோ அதே போலத்தான் முத்தங்களும்.

எனவே சினிமாவில் 15 வயது சிறுமி இதழ் முத்தத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும் 15 வயது சிறுவர்கள் மனதில் அது எப்படிப்பட்ட கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் என்பது பற்றி படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். நம் சமூகத்தில் திரைப்படங்கள், யு, ஏ, யூஏ என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டாலும் தணிக்கை முறை சீராகவோ நேர்மையாகவோ இல்லை.எல்லா படங்களும் தொலைக்காட்சியில் யாரும் பார்க்கும்விதம் கிடைக்கும் சூழலே இருக்கிறது. மேலை நாடுகளில் இருக்கும் வரையறுக்கப்பட்ட சூழல் இதில் இங்கே நம்மிடம் இல்லை.

பள்ளிப் பருவத்திலிருந்து உடல் நலம் மன நலம் சார்ந்த பாலியல் கல்வியையும் மீடியாவைப் புரிந்துகொள்ளும் பயிற்சியையும் அறிமுகம் செய்யவேண்டும் என்று என் போன்றோர் பல வருடங்களாக வலியுறுத்திவருகிறோம். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு காட்டுவோர் பாலியல் வக்கிரங்களை படைப்பாக்குவோரைக் கண்டு கொள்வதே இல்லை.

பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பற்றி நம் சமூகத்தில் முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் அக்கறை இப்போது ஏற்பட்டுள்ள நிலையில்,  சினிமா துறையினரும் பத்திரிகைத் துறையினரும் தம்மை கடும் சுயவிமர்சனத்துக்கு உடபடுத்திக் கொள்ளவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அற உபதேசங்கள் எல்லாம் அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் வாச்கர்களுக்கும் மட்டுமென்று தனக்கு தானே விலக்குக் கொடுத்துக் கொண்டு எழுத்தாளனும் இயக்குநரும் இனியும் இருக்க முடியாது. அக்கறை என்பது வெறுமே மெழுகுவத்தி ஏற்றுவது அல்ல. மீடியாவும் சினிமாவும் வெறுமே ‘டைம்பாஸ்’தான் என்று சொல்லி இனியும் தப்பிக்க முடியாது.

காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்கு சொல்லித் தருவதில் பெரும்பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல் ரவுடித்தனத்தையும் விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. இது மாறியாக வேண்டும். மாறவேண்டுமானால் நாம் அனைத்தையும் விமர்சித்து விவாதித்தாகவேண்டும். அதை மணிரத்னத்தின் விடலை முத்தத்திலிருந்தே தொடங்கலாம்.

நன்றி : கல்கி 19.1.2013
-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

வட்டியும் முதலும் - ராஜுமுருகன்

 (ஓவியம் : ஹாசிப் கான்)

'இவ்வளவு பேரும் எங்க போறாங்க?’
 - நகரச் சாலைகளின் டிராஃபிக்கைப் பார்க்கும்போது எல்லாம் இப்படித் தோன்றும். நாலு பேரை வளைத்துப் பிடித்து, 'எங்கடா போறீங்க இவ்வளவு வெரசா..?’ என விசாரிக்க வேண்டும். பாதிப் பேர் இயர்போனில் தனியே பேசிச் சிரித்தபடி, லூஸுப் பையன்களாகத் திரிகிறார்கள். முக்கால்வாசி யுவதி களை மொபைல் நோண்டியபடியான சித்திரங்களிலேயே பார்க்கிறேன். காதில் செல்போனை இடுக்கியபடிப் பறக்கிறார்கள். டாஸ்மாக்குகளில் லேப்டாப்பை அண்டக் குடுத்தபடியே குடிக்கிறார்கள். சிக்னல் போடுவதற்குள் குபீர் என்று குறுக்கே பாய்கிறார்கள். ஏகாதசி ராத்திரியில் சொர்க்க வாசலைப் பார்க்கப் போய், கோயில் ஏரியாக்களைக் குமுறடிக்கிறார்கள். ரயில்களில்கூட ஃபுட்போர்டு அடித்துப் போகிறார்கள். சதா இரை தேடி அலையும் மானுடம். காகம்போல் கரையும் மனம். ஜனத்திரட்சி. நெரிசல் காடு. எப்போதும் பரபரப்பு. தாளாது விம்மும் எண்ணங்கள். தலைக்குள் பிதுங்கும் கருத்துகள். தூக்கத்திலும் துரத்தும் தொலைக்காட்சிப் பிம்பங்கள்... இவற்றுக்கு நடுவே நாம் 'மற்றும் பலர்’ சந்திப்போமா..?

பாலு, 47-டி பேருந்து ஓட்டுநர். நீல கலர் சட்டையும் பேன்ட்டுமாக, தோளில் சிவப்புக் கட்டம் போட்ட குற்றாலத் துண்டில்தான் காணக் கிடைப்பார். டெப்போவில் நிற்கும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும், ஒரு ரூபாய் சுபாரி பாக்குப் பொட்டலத்தைக் கிழித்து வாயில் போட்டுக்கொள்வார். ''வண்டி ஓட்டும்போது போன் பண்ணாதேனு எத்தன தடவ சொல்றது..?'' என சிக்னலில் நிற்கும்போது மொபைலில் மனைவியைத் திட்டுவார். ''படில நிக்காத... உள்ள வா... பச்ச சட்ட... ஏறி வா. பார்றா மொறைக்கறத... அக்கா, தங்கச்சிகளுக்குக் கல்யா ணம் பண்ணிட்டியா..? போயிட்டின்னா யாரு பண்ணிவைப்பா..?'' என சைடு கண்ணாடியில் சிடுசிடுப்பார். பூக்கடையை பஸ் க்ராஸ் பண்ணும்போது, வண்டியை நிறுத்தி உட்கார்ந்தபடியே பஜாரில் வீட்டுக்கு மாம்பழங்கள் வாங்குவார். கூட்டம் இல்லாத பகல்களில் முன்சீட்டில் வரும் போக்குவரத்து ஊழியருடன், ''பையனை பாலிடெக்னிக் சேக்கறதுக்கே முப்பது ரூவா ஆச்சு... இன்ஜினீயரிங் அஞ்சு ரூவா... மெடிக்கல் இருவது ரூபாயாம்... எங்க போறது நாம? டிப்ளமோவ வாங்கிக் குடுத்துடுறேன்... அதுக்கு மேல ஒஞ் சமத்துனு சொல்லிட்டேன்'' என்றபடி பேசிவருவார். ஆள் இல்லாத இரவுகளில் சிலுசிலுவெனக் காத்தடிக்க, சட்டைக் காலரைப் பின்னால் தூக்கிவிட்டபடி வண்டி ஓட்டும்போது, 'படைத்தானே... படைத்தானே... மனிதனை ஆண்டவன் படைத்தானே’ என மெல்லிய குரலில் பாடுவார். ஐந்தாறு வருடங்களாகப் போய்வந்த பேருந்தில், இவ்வளவுதான் பாலுவை நான் பார்த்தது. நெரிசல்களுக்கும் சத்தங்களுக்கும் நடுவே இப்படிச் சில வழக்கமான சித்திரங்களையே எனக்குத் தந்திருந்தார் அந்த அரசுப் பேருந்து டிரைவர்.

சமீபத்தில், பள்ளியில் பாப்பாவை விடப் போயிருந்தபோது, ரொம்ப நாட்களுக்குப் பிறகு பாலுவைப் பார்த்தேன். ஒரு குட்டிப் பாப்பாவைத் தூக்கியபடி அந்தப் பள்ளிக்கூட வாசலில் நின்றார். பாப்பாக்களை உள்ளே அனுப்பிவிட்டு, தேர்வு விண்ணப்பங்கள் வாங்குவதற்காக எங்களை வெளியே உட்காரவைத்திருந்தார்கள். அவரைப் பார்த்ததும், ''சார்... நீங்க ஃபார்ட்டி செவன் டிரைவர்தானே?'' என்றேன்.

''ஆமா தம்பி. பரவால்லையே... கரெக்ட்டா நெனவு வெச்சிருக்கீங்களே...'' என்றார் சிரிப்புடன். ''ரிட்டையராகிட்டேன் தம்பி... காதுல இன்னமும் இன்ஜின் சத்தம்தான் கேக்குது...'' என்றவர், ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டார். நான் பத்திரிகை, சினிமாவில் வேலை பார்க்கிறவன் என்பது தெரிந்ததும் இன்னும் உற்சாகமாகிவிட்டார். பேச்சுக்கு நடுவே, ''பாப்பா... உங்க பேத்தியா சார்..?'' என்றதும், ''பேத்தி மாரிதான்... மாரி என்ன பேத்திதான்...'' என்றவர், சட்டென்று அமைதியாகிவிட்டார். ஏதோ யோசனைகளுக்குப் போனவர் மீண்டு, ''உங்கள்ட்ட சொல்லலாம் தம்பி. அது... ரிட்டையராகறதுக்கு ஒரு வருஷம் முன்னாடி சத்யா ஸ்டுடியோகிட்ட வந்துட்டு இருந்தேன். நைட்டு. ரோட்ல வண்டிகளே இல்ல. கொஞ்சம் ஸ்பீடா இழுத்துட்டேன். பெட்ரோல் பங்கு திருப்பத்துல திருப்புனேன் பாருங்க... சைடுல இருந்து வண்டில வந்த ஒரு ஆளு உள்ள வுழுந்துட்டான். சுதாரிக்கவே முடியல... டயர்ல போயிட்டான்... அங்கயே அவுட்டு. ஜி.ஹெச்சுக்குக் கொண்டுபோயாச்சு. எனக்கு மெமோ, கேஸு, சஸ்பென்ஷன்னு ஒரு மாசம் இழுத்தடிச்சு விட்டாங்க. இத்தன வருஷத்துல இப்பிடி நடந்தது இல்ல தம்பி. டயர்ல கெடந்த அந்த பாடியப் பாத்தேன் பாருங்க... தூக்கமே போச்சு. ஒண்ணும் பண்ண முடியல. அந்தாளு வூட்டுக்குப் போய் நின்னேன். அவன் பொண்டாட்டி மூஞ்சப் பாக்க முடியல... ஏழபாழைக. இப்பிடி வந்தா என் தெசைல விழணும் ஒரு உசுரு... இந்த பாப்பா அவங்க புள்ளதான். நானே படிக்கவைக்கிறேன்னு சொல்லிட்டேன். எங்கூட்லதான் வளருது. டெய்லி ஸ்கூலுக்குக் கொண்டுவந்துவிட்டுப் போயிட்டு, இதோடதான் நம்ம வாழ்க்க போவுது. என்னவோ இது மூஞ்சியப் பாக்கும்போது மனசு பூத்துப் போவுது...'' என்றவர், ''அப்ளிகேஷன் குடுத்துட் டாங்க வாங்க...'' என உள்ளே ஓடினார். திரும் பும்போது அந்தப் பாப்பாவின் ரைம்ஸ் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது... நெடுந்தூரம்!

'மற்றும் பலராக’ சிறு கணங்களில் நம் வாழ்க்கையில் வருகிறவர்கள் எவ்வளவு பேர்? டிராஃபிக் சாலை மாதிரி எத்தனை பேர் டைட்டில் கார்டே இல்லாமல் வந்து வந்து போகிறார்கள்? ஆனால், பாலு மாதிரி ஒவ்வொருவரின் பின்னாலும் எவ்வளவு கண்ணீர், புன்னகைக் கதைகள் இருக்கின்றன.

சமீபத்தில்தான் மறைமலை நகரில் ரோட்டோரம் கொசுவலை விற்றுக்கொண்டு இருந்த வையாபுரி நாயக்கர் குடும்பத்தைப் பார்த்தேன். வையாபுரி நாயக்கர் ஊரில் மார்கழி மாசத்தின் அதிகாலைகளில் பஜனை பாடியபடி சங்கு ஊதிக்கொண்டு வீடு வீடாக வருவார். எங்கிருந்து என்றே தெரியாமல் ஆற்றைக் கடந்து வந்து, கருக்கலின் வாசலில் முண்டாசோடு நிற்பார். வாசல் வாசலாக நின்று 'கோபாலகிருஷ்ணா... கோலம் என்னவோ...’ என தெலுங்கு வாசத்தோடு பாடியபடி, சங்கு ஊதுவார். வருடத்தில் மார்கழியின் அந்தக் காலைகளில் மட்டுமே அவரைப் பார்க்க முடியும். அப்புறம் பொங்கலுக்கு மறுநாள் சைக்கிளில் கூடை கட்டிக்கொண்டு வந்து கரும்பும், வாழைப் பழமும், சில்லறையும் வாங்கிப் போவதோடு சரி. இத்தனை வருடங்களுக்குப் பிறகு, புறநகரின் சாலையோரம் குடும்பத்தோடு கொசுவலை விற்றுக்கொண்டு இருக்கும்படி அவரைப் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. உத்திதான் அவரிடம் என்னை அழைத்துப் போனான்.

''நம்மூரு சங்கூதிரா... ரோட்டோரம் வித்தாங்கன்னு கொசுவலைக பூராத்தையும்போலீஸ் கொண்டுபோயிருச்சாம்... அவரு பையனை யும் புடிச்சுட்டுப் போயிருச்சாம். ஸ்டேஷன்ல போய்ப் பேசணும்... அதான் உன்னையக் கூப்பிட் டேன்...'' என்றான்.

ஸ்டேஷனுக்குப் போனால், அங்கே கோபி உட்கார்ந்திருந்தான். பஸ் ஸ்டாண்டில் நீலகிரித் தைலம் விற்பவன். போனஸாகத் திருட்டு வி.சி.டி., ரயில்வே கிராஸிங், யூரின் பாசிங், வித் அவுட் டிக்கெட் எனப் பிசாத்து கேஸ்களில், 'கேஸ் கணக்கு காட்ட’ அவ்வப்போது கோபியை ஸ்டேஷனுக்குக் கொண்டுபோய், ரவா தோசை வாங்கித் தருவார்கள். பிரதிபலனாகத் திருட்டு வி.சி.டி. பிளாக்கில் சரக்கு, பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு பிளாக் டிக்கெட்டெல்லாம் விற்றுக்கொள்வான். அவனை ஸ்டேஷனில் பார்த்ததும் வழக்கமான 'மரியாதை’ என நினைத்து, ''என்ன கோபி... என்ன கேஸு..?'' என்றேன்.

''கேஸ் எல்லாம் இல்ல சார்... அய்யாவுக்கோசரம் வந்தேன்...'' என்றான் வையாபுரி நாயக்கரைக் காட்டி. உடனே வையாபுரி சொன்னார், ''கோபி தம்பிய உங்களுக்குத் தெரியுமா..? அவர்தான் இங்க எங்களுக்குத் தங்க எடம்லாம் பாத்துவெச்சது!''

எனக்கு இயற்கையின் தீராத முடிச்சுக்களை நினைத்து ஆச்சர்யம் பொங்கியது. எஸ்.ஐ-யிடம் பேசிக் கொசுவலைகளை மீட்டு, அவரை வீட்டுக்கு அழைத்துவந்தோம். கோபி போய் எல்லோருக்கும் பரோட்டா வாங்கி வந்தான். வையாபுரி அய்யா, அந்தச் சிறு வீட்டில் சாய்ந்தபடி, ''எங்க தம்பி... ஊர்ல யார் இருக்கா? விவசாயம்லாம் இப்ப யாரு ஜீவனெடுத்துப் பாக்குறா? எதுவும் முன்ன மாரி இல்ல. பையன் திருப்பூர்ல வேல பாத்தான்ல... அவன் மூலியமா இந்தக் கொசுவல பிசினஸ் வந்து, அப்பிடியே குடும்பத்தோட வந்துட்டோம்...'' என்றார்.

''ஐயா... ஃபீலிங்க விடு... ஒரு கட்டிங் வுட்டுக்குறியா..?'' என கோபி பரோட்டாவைப் பிச்சிப் போட்டான். வெளியே வந்தபோது குளிர் கும்மியது. இது மற்றும் பலரின் மார்கழி!

மற்றும் பலர் சுமந்து வருகிற வார்த்தைகள், நினைவுகள், கதைகளை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஒரு காலத்தில் போஸ்ட்மேன் மற்றும் பலரில் முக்கியமானவர். ஒவ்வொரு ஊருக்கும் அவர் எவ்வளவு பெரிய தேவ தூதனாக இருந்தார்? இப்போது அவரை அட்மாஸ்பியரிலேயே காணவில்லை. அப்படி ஓர் இனத்தையே கிட்டத்தட்ட மறந்துவிட்டோம். 'சார்... போஸ்ட்...’ என்ற குரலைக் கேட்டு எத்தனை நாளாச்சு? நேற்று எம்.எம்.டி.ஏ. வீட்டுக்கு ஒரு போஸ்ட்மேன் வந்து அப்படிச் சொன்னார். சட்டென்று விசித்திரமான உணர்வு நிலை ஏற்பட்டது. அப்படிச் சொல்லிவிட்டு தபாலைத் தந்தவர், சிஸ்டத்தில் இணையத்தில் நான் இருந்ததைப் பார்த்துவிட்டு, ''என்ன கனெக்ஷன் சார்... பி.எஸ்.என்.எல்லா..? பேக்கேஜ் எவ்வளவு சார் வருது?'' எனப் படபடவெனப் பேச ஆரம்பித்துவிட்டார். எனக்கு அப்போது தபால்காரத் தாத்தா ஞாபகம் வந்தது. தபால்காரத் தாத்தா எங்கள் ஊரின் போஸ்ட் மேன். அது கடிதங்களின் உலகம். ஆகவே, அப்போது ஊரில் அவருக்கு அவ்வளவு செல்வாக்கு. அவருக்கு ஒரு பழக்கம் இருந்தது. ஒரு நீண்ட அலுமினியக் கம்பியில் கடிதங்களைக் கோத்துக் கோத்து சேர்த்து, வீட்டில் மாட்டிவைத்திருப்பார். நல விசாரிப்புகள், பிரியங்கள், துக்கங்கள் என யார் யாரின் எழுத்துக்களாலோ நிறைந்திருந்தது தபால்  காரத் தாத்தாவின் உலகம். அவரும் யாருக்காவது ஏதாவது கடிதம் எழுதிக்கொண்டே இருப்பார். அவரது அறை முழுக்கக் கம்பி கோத்த கடிதங்கள் சேர்ந்துகொண்டே இருந்தன. தாத்தா இறந்த பிறகு, ஒரு போகி அன்று கொல்லையில் மூட்டை கட்டிக்கிடந்த அந்தக் கடிதங்களைப் பார்த்தேன். மற்றும் பலரின் உணர்வுகள் பலவும் இப்படித் தான் கிடக்கின்றன... நம்மால் படிக்கப் படாமல்! 
 
நன்றி : ஆனந்த விகடன்.

-'பரிவை' சே.குமார் 

தேசத் துரோகம்! (தினமணி தலையங்கம்)

திர்க்கட்சியை ஆளும் கட்சியும் ஆளும்கட்சியை எதிர்க்கட்சியும் குறைகூறுவது வழக்கமான ஒன்று. ஆனால், அத்தகைய குறைகாணும் வழக்கம் வரம்பு மீறுவதும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் தரம் தாழ்வதும் ஏற்புடையதல்ல.

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிந்தனை முகாமில் பேசிய உள்துறை அமைச்சர் ஷிண்டே, ""பாரதிய ஜனதா கட்சியும், அதன் தாய் நிறுவனமாகிய ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பும் அவற்றின் பயிற்சி முகாம்களில் ஹிந்துத்  தீவிரவாதிகளை உருவாக்கி வருகின்றன. இந்த இரு அமைப்புகளின்  தீவிரவாத நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது'' என்று கூறியிருக்கிறார்.

 அதுமட்டுமல்ல, "சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சில குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது' என்றும் அவர் கூறியிருக்கிறார். அதாவது, பாகிஸ்தான் சென்றுகொண்டிருந்த சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில், ஹைதராபாதில் மெக்கா மஸ்ஜித் மற்றும் மாலேகான் நகரில் மசூதி ஆகியவற்றில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்றும், அவர்கள் செய்த "இந்தக் குற்றத்துக்கு சிறுபான்மையினர் மீது பழி போடுகிறார்கள்' என்றும் கூறியிருக்கிறார்.

 நாட்டின் உள்துறை அமைச்சர் கூறும் இந்தக் குற்றச்சாட்டு உண்மையென்றால், இந்நேரம் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வளவு மோசமான தீவிரவாதம் இந்த தேசத்தில் வளர்க்கப்படுகிறது என்றால் செயல்பட வேண்டிய மத்திய அரசு,  ஏன் வெறுமனே சிந்தனை முகாமில் இதைப் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?

 மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் துறவி கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தீர்ப்பு வெளியாகாத நிலையில் இதுபற்றி நாம் யாராவது எழுதினாலோ, பேசினாலோகூட நீதிமன்ற அவமரியாதை எனும்போது,  ஒரு உள்துறை அமைச்சர், சாதாரண அரசியல் மேடைப் பேச்சாளர்போல, தொண்டர்களின் கரவொலிக்காக இவ்வாறெல்லாம் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கே களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

 கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்தியாவில் நிலவிய பதற்றமான நிலை ஒவ்வொரு இந்தியன் மனதிலும் அச்சத்தை விதைத்துக்கொண்டிருந்தது. இந்தியா- பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்டன. சண்டைநிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு இந்திய எல்லையில் துப்பாக்கிக் குண்டுமாரி பொழிந்தது. இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் நுழைகிறார்கள், நடமாட்டம் இருக்கிறது என்று இந்தியா சொன்னதை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துக்கொண்டிருந்தது. இன்னொரு கார்கில் போர் மூளுமோ என்ற அச்சம் நிலவியது. அந்த நிலைமை சற்று தணிந்திருக்கும் இவ்வேளையில், இந்தியாவில் ஹிந்துத்  தீவிரவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது என்றும், குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் ஹிந்துத் தீவிரவாதிகள்தான் என்றும் ஒரு உள்துறை அமைச்சரே பேசினால், பாகிஸ்தானுக்கு எத்தகைய கொண்டாட்டமான விஷயம் அது.

 பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா இந்தியாவுக்கு எதிராகத் தீவிரவாதிகளை அனுப்புகின்றது என்றுதான் இந்திய அரசு கூறி வருகிறதே தவிர, முஸ்லிம் தீவிரவாதிகளை அனுப்புகின்றது என்று தவறிக்கூடக் கூறியதில்லை. இந்தியப் பத்திரிகைகளும்கூட தீவிரவாதிகள் கைது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்றுதான் எழுதுகின்றனவே தவிர, அவர்களது பெயரைக்கொண்டு, அவர்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்று எழுதுவது இல்லை.

 தீவிரவாதிகள் மனிதகுலத்துக்குப் பேரழிவு நாடுபவர்கள் என்பதால்தான் அவர்களை நாம் எதனோடும் அடையாளப்படுத்துவதில்லை. தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை இனம், மதம், மொழி, நாடு கடந்து வெறும் தீவிரவாதிகளாக மட்டுமே பார்ப்பதுதான் வழக்கம்.

 நாட்டின் உள்துறை அமைச்சரான ஷிண்டே இவ்வாறு பேசியிருப்பது மிகப்பெரும் தவறு. பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஹிந்துத் தீவிரவாதிகளை உருவாக்கும் அமைப்புகள் என்றால், தக்க ஆதாரங்களைக் காட்டி, அதனை முறைப்படி நிரூபித்து, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுப்பதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கின்ற பேச்சாக மட்டுமே இருக்குமானால், ஷிண்டே இனியும் உள்துறை அமைச்சர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்.

 அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி என். வேலு, உயர் நீதிமன்றத்தால் பணியிடை நீக்கம் செய்யப்படக் காரணம்,  நீதியில் அரசியல் கூடாது என்பதற்காக!

 மனத்தீ வளர்க்கும் வார்த்தைகளைப் பேசிய ஆந்திர மாநில எம்எல்ஏ அக்பரூதீன் ஓவைஸியை, ஹைதராபாத் போலீஸ் கைது செய்யக் காரணம், மானுடநெறியில் அரசியல் கலக்கக்கூடாது என்பதற்காக!

 இந்தியாவின் உள்துறை அமைச்சரே ஹிந்துத் தீவிரவாதிகள் பற்றி கூறிவிட்ட பிறகு இனிமேல் நாம் பாகிஸ்தானின் துணையோடு இங்கே நடைபெறும் தீவிரவாதச் செயல்கள் பற்றிப் பேச முடியுமா? உங்கள் உள்துறை அமைச்சரே கூறுகிறார் ஹிந்துத் தீவிரவாதிகள் முகாம்களில் தயாரானதாக என்று பாகிஸ்தான் பதிலடி கொடுக்காதா? இவரெல்லாம் இந்தியாவின் உள்துறை அமைச்சர்...! இவர்களுக்கெல்லாம் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தலைவர்கள்..!

 ஓட்டுக்காக நாட்டை பலி கொடுப்பவர்களை என்னவென்று அழைப்பது?

நன்றி : தினமணி (தலையங்கம் - 22/01/2013)
                                                                                                                                                                              -'பரிவை' சே.குமார்

வெள்ளி, 18 ஜனவரி, 2013

கெடுத்துப்புட்டான்ய்யா... கெடுத்துப்புட்டான்...


நம்ம ஆளு நேற்றைக்கு நாலு வயசுல இருந்து ஐந்து வயசுக்குள்ள போயிருக்காரு... அதுக்கு முதல்ல உங்களோட ஆசிகள்தான் அவருக்கு வேணும்... எல்லாரும் கண்டிப்பா உங்களது ஆசிகளை வழங்குங்கள் அவர் வளரட்டும்... இனி வாங்க... நாம அவரு எப்படி கெடுத்தாருங்கிற கதைக்குள்ள போவோம்...

அப்பனுக்குப் பிள்ளை தப்பாம பொறந்திருக்குன்னு மூத்தவங்க சொல்லுவாங்க. இங்க நம்மாளு அப்பனை தூக்கி கக்கத்துல வச்சிக்கிட்டு போய்க்கிட்டே இருக்கான். அப்பன் ஊமக் கிசும்புக்காரனா இருந்தா பயபுள்ள ஊருக்கே கிசும்பாவுள்ள இருக்கு.

எதுக்கெடுத்தாலும் எல்லாரையும் மிரட்டல்தான்... யாருக்கும் பயப்படுவதில்லை. 'எனக்கு எல்லாரும் பயப்படுவாய்ங்க... நீ என்னடா பயப்படவே மாட்டேங்கிறே'ன்னு யாராவது கேட்டா உனக்கெதுக்கு பயப்படணுமின்னு அசால்டா கேக்கிறானாம். அவங்க அம்மா எதாவது மிரட்டல் விட்டா 'ஏய் என்ன நித்யா... வந்தேன் கொன்னேபுடுவே'ன்னு ஆடுகளம் தனுஷ் மாதிரி அதகளம் பண்ணுறார்... இதை நான் ஸ்கைப்பில் பேசும் போது பார்த்திருக்கிறேன்...

நானெல்லாம் எங்க அம்மாகிட்ட எல்லாத்தாலையும் (டீசண்டா சொல்லிக்குவோம்) அடி வாங்கித்தான் வந்திருக்கிறேன். ஆனா இவன் அடிக்கும் முன்னாடியே சிரிச்சே மயக்குற கலையை கத்து வச்சிருக்கான். அதை அப்படியே தொடரட்டும்...

நான் ஸ்கைப்பில் பேச அழைக்கும் போது அவங்க அம்மா வேலை இருக்குன்னு சொன்னா, இவரு உடனே 'என்ன குமாரு... அம்மாவுக்கு வேலை இருக்குல்ல, எதுக்கு டிஸ்டப் பண்ணுறீங்க'ன்னு கட் பண்ணி விடுவார். நம்மிடம் பேசும் போது எனக்கு அது வேணும் இது வேணும் என்று சொல்வார் ஆனால் கடைசியில் பாப்பா அப்பா பிள்ளை, நான் அம்மா பிள்ளை என்று சொல்லி வைப்பார். சரி உன்னோட பேர் என்ன என்றால் விஷால்குமார் என்று நம்மளையும் சேர்த்துக் கொள்வார்.

அவரது பேச்சும், புரிந்து செய்யும் சேட்டைகளும் எல்லாரையும் கவர, எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாகவும் பொழுதுபோக்குவதற்கு ஒரு நடமாடும் அரட்டை அரங்கமுமாகவும் மாறியிருக்கிறார். சரி இதெல்லாம் எதுக்கு நம்மாளு என்னத்தைக் கெடுத்தான் எங்க கெடுத்தான் அந்தக் கதையைச் சொல்லுப்பான்னு சொல்றீங்கதானே...  சரி... சரி... வாங்க சொல்றேன்.

ஊருக்குள்ள நமக்குன்னு ஒரு பேர் இருக்கு... பாட்ஷ படத்துல மாதிரி பிளாஸ் பேக்குக்குல்ல பிளாஸ்பேக்கெல்லாம் இல்லை... நேர சொல்லிடுறேன்... அது என்னான்னா... ரொம்ம்ம்ம்ம்ப நல்லபிள்ளை... யார்கிட்டயும் பிரச்சினை வச்சுக்க மாட்டான்... அவன் உண்டு அவன் வேலை உண்டு... அடுத்த ஆளுக்கிட்ட பேசக்கூட மாட்டான்னு அம்புட்டு நல்ல பேரு. ஆமா நம்மளோட ஆட்டம் பாட்டம் அரட்டை எல்லாம் நட்பு வட்டத்தில் மட்டுமே, படிக்கும் போது பெரும்பாலான பொழுதுகள் (விடுமுறை தினங்கள் உள்பட) எங்கள் ஐயா பேராசான் மு.பழனி இராகுலதாசன் வீட்டில் ஒரு கூட்டுக் குழுவோடு கழிந்து விடும். அப்புறம் எங்க ஊருக்குள்ள ஆட்களைப் பார்த்துப் பேசுறது... ஊருக்குள்ள பொயிட்டா தங்கமுன்னா தங்கம் சொக்கத் தங்கமுன்னு பேரை வாங்கி வச்சிருக்கோம்.

பொங்கலுக்கு போனவரு பயங்கர ஆட்டமாம், கண்மாயெல்லாம் நிறைஞ்சு கிடக்கு... வீட்டுக்குப் பக்கத்துல இருக்க ஊரணியில தண்ணி கிடக்கு...   எல்லாம் பாத்துட்டு வந்து விஷால், 'தண்ணி சூப்பரா கெடக்குப்பா... அங்கயே குளிச்சிட்டு டிரஸ் போட்டுட்டு வரலாம்... அம்புட்டுத் தண்ணி இருக்குப்பா'ன்னு கண்கள் விரிய ஸ்கைப்பில் சொன்னதை பாக்கும்போதே அவரை அவங்கம்மா எப்படி மேய்த்துக் கொண்டாந்திருப்பார்ன்னு தெரியுது. ரெண்டையும் மேய்க்கிறதுக்குள்ள ஒரு வழி ஆயிருவாங்க... தினமும் புலம்பல்தான்... பாவம் அவங்க அம்மா.

ஊருல எல்லாரும் மாட்டுப் பொங்கல் வைத்துட்டு வந்த பிறகு மதியம் விளையாட்டுப் போட்டி வச்சிருக்காங்க... அங்கதான்ய்யா கெடுத்துத்துப்புட்டான்.

ஊரே கூடி இருந்திருக்கு... எல்லாரும் உறவுகள்... கேலிகள் கிண்டல்கள் என சந்தோஷமாய் கழியும் தருணம் அது. இவரு ரொட்டி திங்கிற போட்டியில கலந்துக்கிட்டு வாந்தி எடுத்து வெற்றி பெறமால் போனது ஒரு புறம். நிறைய போட்டிகளுக்கு மத்தியில் உறி அடிக்கிற போட்டியும் வச்சிருக்காங்க. எல்லாப் பசங்களும் ரொம்ப அமைதியா இருந்து ரசிச்சிருக்காங்க... நம்மாளு குதிக்கிறதும் கைதட்டுறது வாய்க்குள்ள விரலை விட்டு விசிலடிக்க முயற்சி பண்ணி 'விஷ்ஷ்ஷ்....'ன்னு சத்தம் போடுறதுமா அலம்பலைக் கூட்டி அந்த இடத்தை மேலும் கலகலப்பாக்கியிருக்கிறார்.

இதுக்கெல்லாம் மேலாக கண்ணக் கட்டிப் போறவங்களைப் பார்த்து 'டேய் வேமாப் போடா... போயி ஒடடா... சும்மா இங்கயே சுத்றே... எங்கடா போறே...' என்றும் தோல்வி அடைந்து கண் கட்டை அவிழ்க்கும் போது 'அய்யோ...முடிலையா போ... போ... அடுத்த ஆளூ வா.. வா... கட்டுடா...' அப்படியிப்படின்னு வயசு வித்தியாசம் பாக்காம சகட்டு மேனிக்கு பேசியிருக்கான். எல்லாரும் பாத்துட்டு 'அடியாத்தி என்ன குமாரு மகன் இப்படி ஆட்டம் போடுறான்... இவன் அப்பன் இருக்க இடம் தெரியாதே'ன்னு நமக்காக ரொம்ப வருத்தப்பட்டிருக்காங்க. வாங்கி வச்ச பேருக்கு வாஞ்சையாப் பேசியிருக்காங்க.

'அடேய் என்னடா எம்மவன் பேசவே மாட்டான் நீ இந்தப் பேச்சு பேசுறே?'ன்னு சித்தப்பா... 

'அதுசரி குமாரு மகனா இது... ஆட்டம் பலமா இருக்கே'ன்னு ஆயா...

 'எங்க குமாரண்ணன் இருக்க இடமே தெரியாது... அது மகன் எங்க இருந்தாலும் தனியாத் தெரிவான் போலருக்கே' அப்படின்னு ஒண்ணுவிட்ட தம்பி... 

இப்படி என் உறவுகள் எல்லாரும் அவனை கேட்டாலும் அவரு போட்ட ஆட்டத்தை நிறுத்தவே இல்லையாம்... தொடர்ந்து பவர் ஸ்டார் ஹிட்டுத்தானாம்.

இப்படி நம்ம பேரை ஊருக்குள்ள நாறடிச்சிட்டு வியாழன் இரவு காரைக்குடிக்கு வந்துட்டாரு, ஸ்கைப்பில் பேசும் போது 'அப்பா அல்லாருக்கும் பிரைசு குடுத்தாய்ங்க எனக்குத் தரமாட்டேன்னுட்டாய்ங்கன்னு சொன்னாரு... வாய் மட்டும் பேசுறே... ஜெயிக்க முடியலைன்னு கேட்டதும் அய்யா வாங்கின பிரைசு எனக்குத்தான்னு வேற பெருமையா சொல்லிக்கிறாரு.

எது எப்படியோங்க... தனது பேச்சாலும் சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்து வச்சிருக்கும் எங்கள் அன்பு மகன் இன்று பிறந்தநாள் கொண்டாடியிருக்கார். திறமைசாலியான அவன் திறமைகள் மேலும் மெருகேறவும்  எப்பவும் அவனோட சந்தோஷமும் பேச்சுத் திறமையும் நெலைச்சு இருக்கணுமின்னும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.

நீங்களும் அவன் நல்லாயிருக்கணுமின்னு வேண்டிக்கங்க... அப்படியே உங்களோட ஆசிகளையும் வழங்கிட்டுப் போங்க...

                                                                                                                                  -'பரிவை' சே.குமார்

வியாழன், 17 ஜனவரி, 2013

கிராமத்து நினைவுகள்: என்னாச்சு பொங்கல் வாழ்த்து?


டிக்கும் காலத்தில் தீபாவளி, பொங்கல் என்றாலே பண்டிகைக்கான களிப்பு இருக்குமோ இல்லையோ வாழ்த்து அட்டைகள் வரும் என்ற சந்தோஷம் அடிமனதில் ஆர்ப்பரிக்கும். நண்பர்கள், உறவுகள் என எல்லாரும் எல்லாருக்கும் வாழ்த்து அட்டைகளை அனுப்பித் தங்களது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் அருமையான நிகழ்வாக இந்தப் பண்டிகைகள் இருக்கும்.

கிராமங்களில் உறவினர்கள் கொடுக்கும் திருவிழாக்காசை விட தபால்காரர் கொண்டு வந்து கொடுக்கும் வாழ்த்துக்களுக்கு வாயெல்லாம் பல்லாகத் திரிந்திருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத மறக்கமுடியாத உண்மை.பண்டிகைகள் என்றாலே எல்லாப் புத்தகக் கடைகளிலும் வாழ்த்து அட்டைகள் வகை வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தீபாவளிக்கு வெடிக்கடைகள் முளைப்பது போல் வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கென ஆங்காங்கே கடைகள் முளைக்கும். பண்டிகையோடு தொடர்புடைய வாழ்த்து அட்டைகள் இருந்தாலும் சின்ன வயதில் அதிகம் கவரும் வாழ்த்து அட்டைகளாய் ஆதர்ச நாயகன், நாயகிகள்தான் இருந்தார்கள். பல அட்டைகள் அவர்களுக்காகவே வாங்கி அனுப்பாமல் பத்திரப்படுத்தப்படும்.

தீபாவளி வாழ்த்தைவிட பொங்கல் வாழ்த்துக்குதான் அதிக மதிப்பு இருக்கும். அதுவும் பொங்கல் விடுமுறைக்கு முன்னரே நண்பர்களுடன் கடைக்கு சென்று வாழ்த்து அட்டைகள் வாங்கி இவன் இவன் நமக்கு அனுப்புவான் என்று கணக்குப் போட்டு அனுப்பி வைத்துவிட்டு அவர்களின் வாழ்த்துக்களை எதிர் நோக்கி காத்திருந்த நாட்கள் எத்தனை எத்தனையோ...

நகரங்களில் எப்படியோ கிராமங்களில் வாழ்த்து அட்டைகள் கொடுத்த சந்தோஷம் அலாதியானது... எங்கள் ஊருக்கு கண்டதேவியில்தான் தபால் அலுவலகம்,கண்டதேவி ஐயரான தபால் நிலைய அதிகாரி வீட்டில் முன்பகுதியை அலுவலகமாக மாற்றி வைத்திருந்தார்.  தபால்காரர் எங்கள் ஊருக்கு வாரத்த்தில் இரண்டு முறைதான் வருவார். எங்க ஊருக்காரர்களுக்கு உறவுக்காரர் போல ஐயர், எனவே அலுவலக நேரம் தவிர்த்து மற்ற நேரத்திலும் போய் தபால் வந்திருக்கிறதா என்று பார்த்து வாங்கி வரலாம். இதனால் யார் கண்டதேவிக்குப் போனாலும் ஐயரைப் பார்த்து தபால் வந்திருந்தால் வாங்கி வந்துவிடுவார்கள்.

மாட்டுப் பொங்கல் என்பது ஊரே ஒரு இடத்தில் கூடி வைக்கும் ஒரு இனிய பண்டிகையாகும். எங்கள் ஊர் கருப்பர் கோவிலின் எதிரில் இடம் சுத்தம் செய்து, தோரணங்கள் கட்டி எல்லாருமாய் கூடி கொண்டாடி மகிழ்வோம். கண்டதேவிக்கும் எங்கள் ஊருக்கும் இடையில்தான் இந்த இடம் இருக்கிறது. அதனால் தபால்காரர் மற்ற நாட்களில் முன்னப்பின்ன வந்தாலும் மாட்டுப் பொங்கல் அன்று கண்டிப்பாக சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்.அவர் கையில் கொண்டு வரும் வயர்க்கூடையில் நிறைய வாழ்த்து அட்டைகள் இருக்கும். பூவரச மரத்தில் ஆடியபடி அவருக்காக காத்திருக்கும் நாங்கள் அவரை சூழ்ந்து கொள்வோம். அவரும் ஒவ்வொரு பெயராகப் பார்த்து வாசித்துக் கொடுப்பார். ஆளுக்கு பத்து இருவது என வாழ்த்து அட்டைகள் வந்திருக்கும். எல்லாருடைய முகத்திலும் சந்தோஷம் சக்கரைப் பொங்கலாக பொங்கி நிற்கும்.

இதில் இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா பக்கத்து வீட்டில் இருக்கும் மச்சானுக்கும் தபால்தலை ஒட்டாமல் வாழ்த்து அனுப்பியிருப்போம்...அதுக்கு 2ரூபாய் அல்லது 3ரூபாய் அபராதம் கட்டவேண்டியிருக்கும். நமக்கிட்ட அப்போ காசு இருக்காது... உடனே சரி போடா அடுத்த தடவை வரும் போது அம்மாகிட்ட வாங்கிக்கிறேன்னு சொல்லி கொடுத்துச் செல்வார்.  

பொங்கல் முடிந்து எல்லா வீட்டுப் பொங்கல் பானையிலும் கொஞ்சம் பொங்கல் எடுத்து காய்கறிகள் வேகவைத்து எல்லாம் கலந்து மந்திரம் சொல்லி மாடுகளுக்கு தீட்டி சுற்றி வரும் போது வாழ்த்து அட்டைகள் கொடுத்த சந்தோஷத்தில் 'பொங்கலோ பொங்கப்...பொங்கப்...பொங்க... பட்டி பெருகப் பெருக பால்ப்பானை பொங்கப்... பொங்க... பொங்க...' என்ற பாடல் சப்தமாக ஒலிக்க அங்கே சந்தோஷம் நிறைந்திருக்கும்.

கல்லூரியில் படிக்கும் போது வந்த வாழ்த்து அட்டைகளில் மிகவும் நெருக்கமானவர்கள் அனுப்பும் வாழ்த்து அட்டைகள் கொண்டு வந்த சந்தோஷம் இன்னும் அதிகம். அதில் பல கார்டுகள் பழைய குப்பைகளை கிளறும் போது பத்திரமாய் இருந்திருக்கின்றன... இன்னும் இருக்கின்றன. எப்ப ஊருக்குப் போனாலும் 'அடேய்... அந்த பீரோவுல கீழே கேசட்டும் பேப்பருமா வச்சிருக்கே... யாருமே யூஸ் பண்ண முடியாம... அதை எடுத்தியன்னா நான் துணிமணி வச்சுப்பேன்'னு அப்பா சொல்லிக்கிட்டேதான் இருக்காரு... 'எடுப்போம்... எடுப்போம்...' என்று இன்னும் பல வாழ்த்து அட்டைகளும் , இளையராசாவின் பாடல்களை சுமந்த TDK ஆடியோ கேஸட்டுக்களும் எழுதுகிறேன் என்று கிறுக்கிய பேப்பர்களும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன எடுக்கப்படாமலே...

எனக்கும் ஆசைதான் நண்பர்களுக்கெல்லாம் மீண்டும் வாழ்த்து அட்டைகள் அனுப்ப வேண்டும் என்று 'டேய் உன் அட்ரஸ் சொல்றா என்றால் கூகிள், யாஹீ, ஹாட்மெயில் என இணைய முகவரிகள்தான் கிடைக்கின்றன. நானும் இணையத்தில் பொங்கல் வைக்கும் படங்களைத் தேடி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அப்படின்னு டைப்பி அனுப்பிடுறேன். அவர்களும் உனக்கும் வாழ்த்துக்கள்டா அப்படின்னு அதிலயே திருப்பி அனுப்பிச்சிடுறாங்க.

இன்னும் கொடுமை என்னன்னா இப்பல்லாம் எங்க ஊருக்கு தபால்காரரே வருவதில்லையாம்.யாருக்கும் லெட்டர் கூட வருவதில்லையாம். எதுவா இருந்தாலும் போனில்தான். முன்பு சாவுச் செய்தி சொல்ல எல்லா ஊருக்கும் சைக்கிளிலோ வண்டியிலோ ஓடினோம். இப்போ அதுவும் போனில் என்றாகிவிட்டது. முன்னேற்றங்கள் முக்கியமானவைகளை ஏப்பம் விட்டுவிட்டன... உறவுகளுக்குள் பாசத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிட்டன.

தபால்காரர் கொண்டு வந்து கொடுக்கும் வாழ்த்து அட்டைகள் கொடுத்த சந்தோஷத்தில் கடுகளவேனும் இன்றைய இணைய வாழ்த்துக்கள் கொடுக்கின்றனவா என்றால் சத்தியமாக இல்லை என்பதே உண்மை. நான்கு வரிகளையோ அல்லது இணையத்தில் எடுத்த படங்களையோ ஒட்டு மொத்தமாய் அனைவரின் முகவரிக்கும் அனுப்பவதில் அப்படி என்ன ஆனந்தம் இருந்துவிடப் போகிறது?
வாழ்த்து அட்டைகள் தொலைந்த இந்த நாட்களில்ஒப்புக்காக நாம் சொல்லும் வாழ்த்தில் ஏனோ நெருக்கமான அன்பும் 1.50பைசா அட்டை கொடுத்த சந்தோஷமும் இல்லாமல் போய்விட்டது என்பதே உண்மை. இனி வரும் தலைமுறை நாம் அனுபவித்தவற்றில் பலவற்றை இழந்து கணிப்பொறியே உலகம் என வாழப் போகிறது என்பது வேதனைக்குரியதாக இருந்தாலும் மாற்றங்கள் நிறைந்த உலகில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

ஆர்ப்பாட்டமான ஆனந்தத்தைக் கொடுத்த வாழ்த்து அட்டை கலாச்சாரம் நமது இளம் வாழ்க்கையோடு மறைந்துவிட்டதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. வளரும் கலாச்சார மாற்றத்தில் நாம் நல்லனவற்றை எல்லாம் இழந்து கொண்டேதான் போகிறோம் என்பதே எழுத்தில் சொல்வதால் மட்டும் என்ன பயன் வந்துவிடப் போகிறது?

படங்கள் வழங்கிய இணையத்துக்கு நன்றி.

                                                                                                                                      -'பரிவை' சே.குமார்