மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 24 செப்டம்பர், 2012

தெருக்கூத்து என்ற நாடகம்.



எங்கள் பகுதியில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் கோவில் திருவிழா என்றால் எதாவது ஒரு கலை நிகழ்ச்சி இருக்கும்... அது நாடகம் அல்லது கரகாட்டம், ஒயிலாட்டம் என எதாவது ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். திருவிழாவின் நிறைவு நாளில் விருந்து உபசரிப்புடன் விழாவை சிறப்பிக்க கலை நிகழ்ச்சிகள் வைப்பது என்பது தொடரும் மரபு. இந்த மரபு காலப்போக்கில் மாறியிருக்கிறதே தவிர நிகழ்ச்சி வைக்க வேண்டும் என்பதில் மாற்றம் வரவில்லை. சில வருடங்களுக்கு முன் திருவிழா தினத்தை அலங்கரிப்பதில் எங்கள் பகுதியில் முதலிடம் பிடித்திருந்தது கூத்து எனப்படும் நாடகம்தான். வள்ளி திருமணம், பவளக்கொடி, அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, அர்ச்சுனன் தவசு, தூக்குத் தூக்கி என ஏதாவது ஒரு நாடகம் வைப்பார்கள். பெரிய கோவில் திருவிழாக்களில் மூன்று நான்கு நாடகங்கள் கூட நடத்தப்படும்.
விழாவின் முக்கிய நாளன்று இரவு பத்துமணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிங்கார கலையரங்கில் நாடகம் நடத்தப்படும். ஆர்மோனியம் பின்பாட்டுடன் விடிய விடிய நடக்கும் நாடகத்தை காண வந்திருக்கும் கூட்டம் விடியும் வரை அமர்ந்து பார்க்கும் சிலர் நாடகம் பார்த்த இடத்திலேயே கிடந்து உறங்குவார்கள். பிரார்த்தனைக்காக நாடகம் வைப்பவர்கள் பெரும்பாலும் வள்ளி திருமணம்தான் வைப்பார்கள். ஏனென்றால் மற்ற நாடகங்கள் எல்லாம் சோகமாய் இருக்குமாம். சந்தோஷமானதாகதான் வைக்க வேண்டும் என்பதால் பிரார்த்தனைக்காரர்களின் தேர்வு வள்ளி திருமணம்தான்.
நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும் போது எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வள்ளி திருமணம் நாடகம் வைப்பதற்காக கோவிலுக்கு நேராக வயலில் உயர்வான வரப்புப் பகுதியில் சமன் செய்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. திருவிழா அன்று பகலில் சரியான மழை. இரவில் தென்னங்கீற்று, பனைஓலை போன்றவற்றை போட்டு அமர்ந்து நாடகம் பார்த்ததாக ஞாபகம். அதன் பிறகு நம்ம ஊருக்கு நாடகம் ராசியில்லை என்று ஒதுக்கிவிட்டார்கள். இருப்பினும் இன்றும் அந்த நாடகமேடை அமைந்த இடம் கூத்துப் பொட்டல் என்றால்தான் தெரியும். அதன்பிறகு திருவிழா பேச்சு வந்தால் நாடகம் வைக்க வேண்டும் என்று சொல்லியே நாங்கள் கல்லூரி வரும்வரை திருவிழா நடக்காமலே இருந்ததும் அதன் பிறகு நாங்கள் களத்தில் இறங்கியதும் தனிக்கதை.
சரி அந்தக் கூத்தை விட்டுட்டு இந்தக் கூத்துக்குள் வருவோம். நாடக நடிகர்களில் சிலருக்கு நல்ல பெயர் இருக்கும் 'எப்பா கண்டதேவியில அஞ்சாம் திருவிழாவுக்கு வள்ளி திருமணம் கூத்து வச்சிருக்காகளாம்... நம்ம மணி கடையில நோட்டீஸ் பாத்தேன்' என்று தேவகோட்டையில் இருந்து வரும் ஒருவர் சொன்னால் போதும் 'யாரு முருகன்?' என்று கேட்டு ஒரு கூட்டம் கூடும் இன்னார் என்றால் போதும் நாடகப் பிரியர்கள் வாயெல்லாம் பல்லாக 'அப்ப நல்லாயிருக்கும்' என்று சொல்வார்கள். முருகனுக்கு மணிமாறன், ஸ்ரீராம் என்றால் அப்ப தர்க்கம் நல்லாயிருக்கும் என்பார்கள். வள்ளியா கரூர் இந்திரா வரணும்ப்பா... மணிமாறனும் இந்திராவும் நடிச்சா அந்த நாடகம் அருமையா இருக்கும்... அதோட நாரதருக்கு இப்ப வந்திருக்கான்பாரு உருவாட்டி தமிழரசு அவனைப் போடணும்... ஆளு குட்டையா இருந்தாலும் போற இடமெல்லாம் பிச்சு உதறுரானாமே என்று பெரிசுகள் 'ஜொல்'லுவார்கள். அதேபோல் அரிச்சந்திர மயான காண்டம் என்றால் காமராஜ் நடிச்சாத்தாம்ப்பா நல்லாயிருக்கும் அப்படின்னு நடிகர்கள் பார்த்து நாடகம் பார்க்க கூட்டம் வரும்.
சரி... இந்த நாடகம் இப்போ என்னாச்சு... கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கிப் போகிறது என்றே சொல்லலாம். காரணம் என்னவென்றால் இப்ப திருவிழாக்களில் நாலு மணி நேரம் ஆர்க்கெஸ்ட்ரா வச்சி அதுல நாலு பேரை நடுவில் ஆடவிட்டு விழாவை சிறக்க வைத்துவிடுகிறார்கள். இரவு முழுவதும் விழித்து நாடகம் பார்க்க யாரும் விரும்புவதில்லை. மேலும் கரகாட்டம் என்ற ஒரு அற்புத கிராமியக் கலை நிகழ்ச்சி ஆபாசம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு இரட்டை அர்த்த வசனங்களோடு தன்னை மாற்றிக் கொண்டு வலம் வர ஆரம்பித்ததும் நாடகம் சற்றே எட்டி நின்று வேடிக்கை பார்த்தது. 
போட்டிக் களத்தில் குதிக்க நாடகமும் ஆபாசம் என்னும் ஆடையை கையில் எடுத்தது. ஆரம்பத்தில் பபூன், டான்ஸ் இருவரும் கரகாட்டத்தைவிட கேவலமாக ரெட்டை அர்த்த வசனங்களில் பேச, அதை பார்க்க ஒரு கூட்டம் கூடியது. பபூன் , டான்ஸ் முடிந்ததும் மேடைக்கு முன்பாக அமர்ந்திருக்கும் மக்கள் வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்துவிடும். நாடகக்காரர்கள் பார்த்தார்கள் முருகனையும் வள்ளியையும் அரிச்சந்திரனையும் சந்திரமதியையும் ஆபாச கூட்டுக்குள் அடைத்துவிட்டார்கள். இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நாடகம் என்ற கலை ஆபாச நிகழ்ச்சியாக மாறிப் போனது. 
இப்போதெல்லாம் இரவு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளை திருவிழா நடத்துபவர்கள் விரும்புவதில்லை. நாலைந்து நாடகங்கள் நடத்தும் கோவில் திருவிழாக்களில்கூட ஆடல் பாடலும் ஆர்க்கெஸ்ட்ராக்களும் முக்கிய இடம் பிடிக்க நாடகம் என்பதை மறக்காமல் இருக்க போனால் போகிறது என்று ஒன்று மட்டும் நடத்தப்படுகிறது. எப்படியோ ஒரு சில இடங்களில் நாடகங்கள் நடத்தப்படுவதால் இன்னும் எங்கள் பகுதியில் நாடகக் கலை அழியாமல் காப்பாற்றப்படுகிறது என்பது சற்று சந்தோஷமான விஷயமே.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊரில் நாடகம் வைக்கலாம் என்று முடிவு செய்து வள்ளி திருமணம் வைத்தோம் வடிவேலு சொல்கிற மாதிரி ஆரம்பம் நல்லாத்தான் போச்சு... நல்ல கூட்டம் கூடியிருந்தது. கரகாட்டம் வைத்தாலே கூட்டம் வராத எங்கள் ஊரில் நாடகத்துக்கு எதிர்பார்த்தைவிட அதிகமான கூட்டம் வந்தது கண்டு எங்களுக்கே ஆச்சரியம். ஆனா நேரம் ஆக ஆக எல்லாரும் போயாச்சு... நாலஞ்சு ஆளுக மட்டும்தான் இருந்தாங்க... 
விழாக் கமிட்டிங்கிற பேர்ல இருந்த பெரிசுகள்ல எங்கப்பா, மெதுவா எங்க சித்தப்பாக்கிட்ட தம்பி இருக்கான்... எனக்கு உறக்கம் வருது என்று என்னைய கோர்த்து விட்டுட்டு தூங்கப் போக...  மெதுவாக ஒவ்வொரு ஆளா கழண்டுக்கிச்சு... எங்க ஐயா ஒருத்தரு, நான் எங்க சித்தப்பா, மச்சான், மாமன் என இன்னும் சிலரும் இருக்க முருகனா வந்தவருக்கு வெற்றிடத்தைப் பார்த்து எவ்வளவு நேரம்தான் மேயாத மானைத் தேடுறதுன்னு கஷ்டமாயிருச்சு... எங்க சித்தப்பாக்கிட்ட அண்ணே இதோட முடிச்சுக்குவோம்... யாருமே இல்லாத கடையில நான் எப்படி டீ ஆத்துறதுன்னு கேட்டாரு... சித்தப்பாவும் பாத்தாரு... அவரு சொல்றதுல ஒரு நியாயம் இருக்குன்னு சரியின்னு சொல்ல... ஆறு மணி வரைக்கும் கத்த வேண்டியவரு சந்தோஷத்துல மானையும் தேடலை மத்ததையும் பாக்கலை வேகவேகமாக வள்ளியை கட்டிக்கிட்டு பொயிட்டாரு. 
இன்றைய நிலமையில் கூத்துக் கலை அழிந்து வருவதற்கு சரியான வரவேற்பு இல்லாததுதான் முக்கியக் காரணம் என்றாலும் கால ஓட்டத்தில் கதைகளை குறைத்து இரட்டை அர்த்த வசனங்களை மட்டுமே நம்பி இன்று கலை இழந்து நிற்கிறது என்பதுதான் உண்மை... மேலும் இனி வரும் காலங்களில் யாரும் இரவு முழுவதும் விழித்து நாடகங்களைப் பார்க்கப் போவதில்லை... இப்போது திருவிழாக்களில் ஆடல் பாடல், ஆர்க்கெஸ்ட்ரா போன்றவை தலையெடுக்க ஆரம்பித்ததும் நாடகம் மற்றுமின்றி ஓயிலாட்டம் கரகாட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன என்பதே யதார்த்தம்.

-'பரிவை' சே.குமார்

புதன், 19 செப்டம்பர், 2012

சினிமா: சுந்தர பாண்டியன்




இயக்குநர் சசிகுமாரை அவரின் முந்தைய படங்களுக்காக ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. அதனால்தான் புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் அவரே தயாரித்து கதாநாயகனாக நடித்து  இருக்கும் சுந்தர பாண்டியன் படம் வெளிவருவதற்கு முன்னரே ரொம்ப எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் சில குறைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் செய்தது என்றே சொல்லலாம்.

படம் ஆரம்பிக்கும் போது உசிலம்பட்டி மதுரை மாவட்டத்துல புறக்கணிக்க முடியாத ஊரு என்று ஆரம்பித்து உசிலம்பட்டி பற்றி சில விசயங்களைச் சொல்லி  காதலிக்கிறேன்னு பொண்ணுங்க பின்னாடி சுத்துறவனை கள்ளிக்காட்டுக்குள்ள கொல்றதைச் சொல்லி கதைக்குள் செல்கிறார்கள்.

கண்டமனூர் பெரிய தலக்கட்டு ரகுபதியோட மகன் சுந்தரபாண்டியனாக சசிக்குமார் இதுவரை நண்பர்களின் காதலுக்காக போராடியவர் இதில் நண்பனின் காதலியை தனதாக்கி கொள்கிறார். ஆரம்பத்தில் வரும் பாட்டில் கொஞ்சம் ஓவராகத் தெரிந்தாலும் நகரும் படத்தில் அலட்டல் இல்லாத நடிப்பால் மீண்டும் ஒருமுறை சபாஷ் போட வைத்திருக்கிறார். 

சசிகுமாருக்கு குரல் மிகவும் கவர்ச்சிகரமாக கணீர் என்று இருப்பது மிகப்பெரிய பலம். வசனங்களை அலட்டலில்லாமல் பேசும் அழகுக்காகவே அவரை எல்லாருக்கும் பிடித்துவிட்டது என்பதே உண்மை. என்ன ஒரே மாதிரி கதாபாத்திரங்களாகவே அவர் நடித்து வருவதை இத்துடன் நிறுத்தி விட்டு தாடிக்கு கொஞ்சம் விடுப்பு கொடுத்து கதாபாத்திரத்தில் மாற்றம் கொண்டு வந்தால் இன்னும் நல்லாயிருக்கும்.

கல்லூரி முடித்து விட்டு வேலை வெட்டிக்குப் போகாமல் டீக்கடையில் அமர்ந்து பெண்களை கேலி பண்ணும் கதாபாத்திரத்தில் பெண்களைப் ஒரு விதமாக பார்ப்பதாகட்டும் கண்ணடிப்பதாகட்டும் நண்பனின் காதலுக்கு உதவப் போகிறேன் என்று பேருந்தில் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டியாகட்டும், சிறையில் இருந்து வரும் போது வீட்டில் என்ன நினைப்பார்களோ என்று வருந்துவதாகட்டும் லட்சுமி மேனனுடனான காதல் காட்சிகளாகட்டும்  கடைசிக் காட்சியில் நண்பர்களிடம் வசனம் பேசுவதாகட்டும் எல்லாவற்றிலும் ஜொலித்திருக்கிறார்.

அவருக்கு பக்கபலமாக வரும் நண்பர்களில் சூரி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். தேர்தல் புயலில் காணமல் போன வடிவேலுவின் இடம் எனக்குத்தான் என்று அப்பா காதாபாத்திரம் ஒன்றை வைத்து வாடா போடா என்று ஏக வசனத்தில் பேசும் சந்தானத்துக்கு இன்று ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் அவரைப் பிடிக்காதவர்கள் எல்லாருக்கும் சூரியை கண்டிப்பாக பிடிக்கும். நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்கள் பட்டியலில் தனக்கென தனி இடத்தைப் பிடிக்கும் காலம் விரைவில் வரும்.

சூரி பேசும் வசனத்தை கேட்டு சிரித்து அடங்கும் போது அடுத்த வசனம் நம்மளை மீண்டும் சிரிக்க வைக்கிறது. ஆனால் வசனங்களை அள்ளியெறியாமல் நறுக்கென்று அவரை பேச வைத்திருக்கிறார் இயக்குநர். பாம்பிஞ்சுல இருந்து பல்லுப் போனதுவரை மாப்பிள்ளையாலதான் சந்தோசப்படுத்த முடியும்... மாப்ளே இங்க ஹீரோவெல்லாம் உருவாக்க முடியாது நாமளா ஆயிக்கணும்... ரன்னிங்க்ல செவப்பா இருக்கவன் ஏறினா ஹீரோம்பாளுங்க கருப்பா இருக்கிறவன் ஏறினா காமடியன்னும்பாளுங்க... சச்சினா இருந்தாலும் அடிச்சாத்தான் ரன்னு... எங்களாலதான் மரக்கடையே வச்சிருக்கான் இல்லேன்னா மைக்ரோசாப்ட் கம்பெனிய இவந்தான் நடத்திருப்பான் என படம் முழுக்க கலகலக்க வைக்கும் வசனங்களால் கலக்கியிருக்கிறார்.

கல்லூரியில் படிக்கும் அர்ச்சனாவாக லட்சுமி மேனன், இவருக்கு முதல்படம் பிரபு சாலமனின் கும்கி என்றாலும் சுந்தரபாண்டியன் முந்திக் கொண்டு விட்டது. ஆரம்பக்காட்சியில் அக்காவின் கொழுந்தனுக்கு கட்ட வேண்டும் என்று வீட்டில் பேசும் போது எதிர்த்து பேசி எவ்வளவோ பாத்துட்டோம் இன்னும் பாக்க வேண்டியது நிறைய இருக்கு என்று கண்ணாடி முன் பேசுவதில் ஆரம்பித்து பேருந்துக் காட்சிகளில் படத்தின் மொத்தக் கதையும் அவர் மேல் பயணித்தாலும் தனது தோழியிடம் பேசியபடி கண்களாலேயே நடித்து எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் போது சசிக்குமார் காதலை சொல்லும் போது மிரட்டுவதாகட்டும் அப்புறம் நண்பனின் காதலை சொல்ல வரும் சசிக்குமாரை காதலிப்பதாக சொல்லும்போது முகத்தில் காட்டும் உணர்ச்சியாகட்டும் அருமையாக செய்திருக்கிறார்.  கும்கியிலும் நல்ல கதாபாத்திரம்தான் என்பதால் தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு இடத்தைப் பிடிப்பார்.

இசைஞானியின் பொன்மானே... பாடலுடன் கண்டமனூருக்குள் வரும் தாமரை என்ற பேருந்தில் இடைவேளை வரையான படம் கலகலப்புடன் நகர ஆரம்பிக்குது. லட்சுமி மேனனை பேருந்தின் முன்பக்கம் இருந்து காதலிக்கும் நண்பன், அவருக்குப் போட்டியாக பேருந்தின் பின்னால் இருந்து லுக்கு விடும் அழகர்சாமி இவர்களுக்கு மத்தியில் நண்பனின் காதலுக்காக பேருந்தில் பயணிக்கும் சசிகுமார், சூரி , நாயகிக்கு துணையாக அவளின் தோழி, பேருந்துக்குள் சின்னச்சின்ன காதாபாத்திரங்கள் என படம் தொய்வில்லாமல் செல்கிறது.

அழகர்சாமி  பேருந்தில் பின்புறம் நின்றே நாயகி லட்சுமி மேனனை காதலிப்பதாக சசிகுமார் குழுவில் வந்து சொல்லி அவர் சொல்லும் டீலுக்கு ஒத்துக் கொண்டு  ஒரு மாதம் பேருந்துக்குள் அப்படியிப்படி முயற்சித்து முடியாமல் விலகிக் கொள்கிறார். சசிகுமார் நாயகியை காதலிப்பதை அறிந்து வில்லன் போல மாறி மீண்டும் பேருந்தில் ஏறி நாயகியை வம்புக்கு இழுக்கிறார். பேருந்துக்குள் நடக்கும் காதல் சண்டையில் பரிதாபமாக உயிரை விட்டாலும் அதன் பிறகு படத்தின் கதையை டுவண்டி 20 மேட்ச் மாதிரி வேகமெடுக்க வைத்துச் செல்கிறார்.

ஆரம்பக்காட்சிகள் லட்சுமி மேனனை காதலிக்கும் அறிவழகனாக வந்து நண்பன் காதலிப்பதை அறிந்து மனசு வருந்தி பின்பு நண்பனுடனே சுற்றி கிளைமாக்ஸ் காட்சியில் சுயரூபத்தைக் காட்டும் நண்பனாக இனிகோ பிரபாகரன் கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்.

 முறைப்பொண்ணாக வந்து முந்திரி வாங்கும் போது யாரு பங்காளிக்கா என்று சசிகுமார் கேட்க, இல்ல பாயாசத்துக்கு என்று சொல்லும் அத்தை பொண்ணு, லட்சுமி மேனனின் அக்கா கொழுந்தனாக வந்து அவளை கட்டிக்கொள்ள நினைக்கும் விஜய் சேதுபதி, பரஞ்சோதி, சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேன், லட்சுமி மேனனின் அப்பாவாக வரும் தென்னவன், அப்பத்தா, அம்மாக்கள், அக்கா, சித்தி என அனைவரும் கொடுத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்தியிருக்கிறார்கள். எல்லாருடைய கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கியிருக்கிறார் புதிய இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இசை என்.ஆர்.ரகுநந்தன் பாடல்களைவிட பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். சி.பிரேம்குமாரின் ஒளிப்பதிவு பல இடங்களில் நம்மையும் படத்தோடு பயணிக்க வைக்கிறது. 

கடைசி காட்சியில் மண்டையில் அடிபட்டும் கத்திக் குத்துப்பட்டும் விழுந்து கிடந்தாலும் பாரம்பரிய தமிழ் கதாநாயகனாக மாறி எல்லாரையும் அடித்து துவைத்து வீர வசனம் பேசியிருக்கிறார் நாயகன் சசிகுமார்.  இது அவரது எல்லாப் படத்திலும் வரத்தான் செய்கிறது. இருந்தும் கதையை நகர்த்தியிருக்கும் விதம் அருமை. படத்தின் கதை போகும் வேகத்தில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் சசிகுமார் அன் கோவின் சுந்தர பாண்டியன் வெற்றிக் கோட்டையில் கொடியை நாட்டிவிட்டது, 


சுப்ரமணியபுரம், நாடோடிகள் வரிசையில் சசிக்குமாருக்கு மீண்டும் ஒரு வெற்றிப்படம் இந்த சுந்தர பாண்டியன்.

-'பரிவை' சே.குமார்

படங்கள் வழங்கிய  இணையத்தளங்களுக்கு நன்றி

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

மனசின் பக்கம்: 201வது பதிவை நோக்கி...



எல்லாருக்கும் வணக்கம்.
நான் வலைப்பூ ஆரம்பித்த போது ஆர்வக்கோளாறில் ஹைக்கூ, கவிதை, சிறுகதை, எல்லாம் எழுத என நான்கு வலைப்பூ அரம்பித்து எழுதி வந்தேன். ஒரு கட்டத்தில் எல்லா வலைப்பூவையும் நடத்துவது எளிதல்ல என்பதால் எல்லாத்தையும் மனசு வலைப்பூவில் மட்டும் எழுத ஆரம்பித்தேன். மனசில் இதுவரை 199 பதிவுகள் போட்டாச்சு இது 200-வது பதிவு. மொத்தத்தில் இது (நான்கிலும் சேர்த்து) 395வது பதிவு. எனது வலைப்பூவில் நான் கிறுக்குவதை படித்து கருத்துச் சொல்லும் நண்பர்களுக்கும்,  ஐயா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, தோழன், தோழி என என் மனசை பின்தொடரும் 209 பேருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லும் மனநிலையில் நான் இப்போது இல்லாத காரணத்தால் அனைவருக்கும் ஒட்டு மொத்த நன்றியை உரித்தாக்குகிறேன். உங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் எனது எழுத்தை வளப்படுத்தி வருகின்றன என்பது 100% உண்மை. இந்த வலைப்பூவின் மூலமாகவும் முகப்புத்தகத்தின் மூலமாகவும் எனக்கு கிடைத்திருக்கும் உறவுகளான உங்கள் முகம் தெரியாவிட்டாலும் அந்த பாசமிக்க மனம் எனக்கு நன்றாக தெரிகிறது. உங்கள் நட்பு என்றும் தொடர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


**********

டந்த பதினைந்து நாட்களாக பொக்காலி அம்மா வந்து தனிமையில் கஷ்டப்பட்ட போது மனைவி குழந்தைகளின் அருகாமை எவ்வளவு முக்கியம் என்பதை உணர முடிந்தது. அடுப்புக்கிட்ட போகக்கூடாது என்று அம்மாவும் மனைவியும் ஊரில் இருந்து சொல்லிக் கொண்டே இருந்தாலும் அறை நண்பர்கள் சிறு உதவிகள் செய்தாலும் அம்மை வந்த உடம்போடு நானே கஞ்சி வைத்து குடித்த நாட்கள் மறக்கமுடியாதவை. இந்தக் கஷ்டம் என் எதிரிக்கு கூட வரக்கூடாது என்றுதான் வேண்டினேன்.  அதிகமாக அம்மை வராமல் போனதால் கொஞ்சம் கஷ்டம் குறைந்தது. இப்போ நான் எழுந்து வியாழன் அன்றுதான் வேலைக்குப் போனேன். நேற்று மனைவிக்கு டெங்கு காய்ச்சல் வந்து மதுரையில் மருத்துவமனையில் வைத்து பார்த்து வருகிறார்கள். மாமா வீடு மதுரை என்பதாலும் தற்போது வைத்திருக்கும் மருத்துவமனை மாமா கடைக்குப் பக்கத்தில் இருப்பதாலும் யார் பார்ப்பது என்ற கவலையில்லை. மாமாவின் நண்பரான மருத்துவரும் பரிசோதனைகள் செய்து இது ஆரம்பநிலைதான் பயப்பட வேண்டியதில்லை என்று சொல்லியிருக்கிறார். நேற்றுக் காலையில் அழுதபடி பேசிய மனைவியிடம் மாலையில் பேசும் போது சற்று நல்ல மனநிலையில் பேசினார். மனசுக்கு இதமாக இருந்தது.

**********

ம்மை வந்திருந்த போது எனக்காக வருந்தி அழுதது மனைவி, குழந்தைகள் மற்றும் எங்கள் ஊரில் இருக்கும் மாரி அம்மன் கோவிலில் தினமும் தண்ணீர் ஊற்றி தீபம் ஏற்றி கும்பிட்ட என் அம்மா ஆகியோர்தான். ஒரு சிலரைத் தவிர மற்ற உறவுகள் எல்லாம் இங்கிருப்பவர்களையும் சேர்த்து போன் பண்ணினால் வந்து விடும் என்று நினைத்தார்கள் போல முதல் இரண்டு மூன்று நாட்கள் போனே பண்ணவில்லை. அப்புறம்தான் போன் பண்ணினார்கள். ஆனால் முகம் தெரியாமல் பாசம் கொண்ட உறவுகள் எல்லாம் எப்படியிருக்கு என்று தினமும் மின்னஞ்சல் மற்றும் முகநூல் வழியாக கேட்டுக் கொண்டே இருந்தார்கள். உண்மையில் இந்த அன்புக்கு நிகர் ஏதும் இல்லை. உங்களது இந்த அன்புதான் எனக்கு ஆறுதலாக இருந்தது என்றால் மிகையில்லை.

**********

டந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கு காருக்குள் பார்க்காமல் விட்டுச் சென்ற குழந்தைகள் இறந்த செய்தியை பத்திரிக்கையில் பார்த்தபோது  அவர்களது பெற்றோர்களின் அலட்சியம் மிகவும் வருத்தப்பட வைத்தது. ஆம் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவர்கள் காரை பார்க் செய்துவிட்டு வீட்டுக்கு சென்று குழந்தையை காணோம் என்று தேடி கடைசியில் காரில் வந்து திறந்து பார்த்தபோது தூங்கிய குழந்தையை தூக்காமல் காருக்குள் விட்டு விட்டு கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு கதவை சாற்றியதால் மூச்சடைத்து இறந்த நிலையில் கண்டு அழுதிருக்கிறார்கள். அழுது என்ன பயன்... இளமொட்டு கருகிவிட்டதே. இதே போல் மூன்று நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்தது... என்ன கொடுமை பாருங்கள்.

**********



சிவகாசி வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ உதவிக்கு பணம் இருந்தும் மனம் இல்லாதவர்கள் யாரும் செய்ய முன்வராததை மலையாள நடிகர் மம்முட்டி செய்திருக்கிறார். அவரின் இந்தச் செயலுக்காக அவர் நல்லாயிருக்கணும் என்று சொல்வதில் தப்பேயில்லை. இங்க கோடிகளை சம்பளமாக வாங்கும் நம்ம நடிகர்கள் முடியாமல் கிடந்தால் மொட்டை அடிக்கிறோம், வேல் போடுறோம், அவர்களின் படங்களுக்கு பால் அபிஷேகம் பண்றோம். அவர்களும் உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன் என்று அறிக்கை விடுகிறார்கள். அம்புட்டுத்தான் அதன் பிறகு அடுத்த படத்துக்கான வேலைக்குப் போய் விடுகிறார்கள். தமிழர்களே இனிமேலாவது நடிக, நடிகைகள் மேல் இருக்கும் அதீத பாசத்தைக் குறைத்துக் கொண்டு குடும்பத்தைப் பாருங்கள். உங்களுக்காக வருந்த உங்கள் குடும்பமும் நட்பும் மட்டுமே... நீங்கள் தலைவா என்று சாஷ்டாங்கமாக தொழும் நடிகர்கள் அல்ல என்பதை உணருங்கள்.

**********

மிழகத்தில் பேருந்து விபத்து என்பது வெகு சாதாரணமாகிவிட்டது. சமீபத்தில் காஞ்சிபுரத்துக்கு அருகில் நடந்த விபத்தில் 9 பேருக்கு மேல் இறந்தார்கள். அதில் எனது நண்பரின் தம்பியும் ஒருவர். திருமணமாகி 9 மாதங்கள் ஆன நிலையில் மனைவியை ஆடிக்கு அம்மா வீட்டில் விட்டிருந்தவர் கூட்டிக் கொண்டு திரும்பி வர, பேருந்தில் இடமில்லாததால் மனைவியை பின்புறம் அமர வைத்துவிட்டு அவர் முன்புறம் அமர்ந்திருக்கிறார். விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. காயங்களுடன் தப்பிய அவரின் மனைவி, கணவன் இறந்தது அறியாமல் தீவிர சிகைச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வேதனையான விஷயம்தானே... இதை எனக்கு மிக நெருக்கமான ஒருவர் சொன்னபோது துடித்துப் போனேன். விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

**********

என்னையும் வலையில் எழுத வைத்து என் எழுத்துக்களை உங்கள் பின்னூட்டம் என்னும் உந்து சக்தியால் மெருகேற்றி வரும் என் சொந்தங்களுக்கு இந்த 200வது பதிவின் மூலம் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக் கொள்கிறேன். 

நன்றி பதிவுலக சொந்தங்களே...


-'பரிவை' சே.குமார்.

புதன், 5 செப்டம்பர், 2012

பங்காளிச் சண்டை




நமக்குள் சண்டை
ஆரம்பித்தது
உனக்கு நினைவில்
இருக்கிறதா சகோதரனே...

சிறுவயதில் உன்
ரப்பரை எடுத்த
என்னை மூர்க்கமாய்
அடித்தாயே
அதுதான் முதல்விதை...

தொடர்ந்த நாட்களில்
தொட்டதெற்கெல்லாம்
நமக்குள் மல்லுக்கட்டு...

நமக்குள் சந்தோஷ
தருணங்களை விட
நாம் சண்டையிட்ட
தருணங்களே அதிகம்...

ஏனோ தெரியவில்லை
ஒரே வயிற்றில்
ஜனித்த போதும்
நமக்குள் குரோதம்...

பல நாட்கள்
பாரா முகமாகவும்
பேசா ஊமையாகவும்
கழிந்து விட்டன...

அன்று விழுந்த விதை
இன்று விருட்சமாய்...

அன்றைய சண்டையின் போது
அதட்டவும் அடக்கவும்
அருகில் அம்மா அப்பா...

இன்று நமக்குள்ளான
பூமிச் சண்டை
தீர்க்க பூமியில்
இல்லை அவர்கள்...!

-'பரிவை' சே.குமார்.

Thanks : Photo from Google.